• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 10

STN - 71

New member
Staff member
அத்தியாயம் - 10

நாட்கள் மெல்ல எந்தவித பிரட்சனையுமின்றி சுமூகமாகவே கடந்து கொண்டிருந்தன. இப்போதெல்லாம் பவித்ராவிற்கு இரவில் அந்த பயங்கரக் கனவுகளோ உடல் நடுக்கமோ வருவதில்லை. கௌதமிற்கு அதுவே மிகப்பெரிய நிம்மதியைத் தந்தது. தன் முயற்சி வீண் போகவில்லை என்ற திருப்தி அவன் மனதில் நிறைந்திருந்தது. இடையில் மருத்துவர் வரச் சொல்லியிருந்த காரணத்தினால், மீண்டுமொரு முறை அவளை அழைத்துச் சென்று வந்தான் கௌதம். பவித்ராவின் முன்னேற்றத்தைக் கண்ட மருத்துவர் காயத்ரி, மிகவும் சந்தோஷப்பட்டதோடு, "கௌதம், உங்களோட அன்பும் கவனிப்பும் தான் அவங்களை இவ்வளவு சீக்கிரம் மாத்தியிருக்கு" என்று பாராட்டினார்.

கௌதம் தான் முன்னரே கூறியிருந்தது போலவே, அவளுக்கு ஒரு நவீன தையல் மெஷினும், எம்பிராய்டரி செய்யத் தேவையான வண்ண நூல்கள் மற்றும் உபகரணங்களையும் வாங்கித் தந்திருந்தான். தனக்குப் பிடித்தமான விஷயத்தைச் செய்ய ஒரு வாய்ப்புக் கிடைத்ததில் பவித்ரா மிகவும் உற்சாகமாக இருந்தாள். அவளது பொழுதுகள் இப்போது ஆக்கப்பூர்வமாக மாறின.

ஒருநாள் மாலை, சரண்யாவின் மகள் அதிதி மெல்ல பவித்ராவினருகே வந்து, "அத்தை... எனக்கு ஒரு புது டிரஸ் தச்சுத் தருவீங்களா?" என்று ஆசையாகக் கேட்டிட,.. அதிதியின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளிய பவித்ரா, "உனக்கு நான் தச்சுத் தராம இருப்பேனாடா செல்லம்? நாளைக்கே பாரு, என் பட்டுக்குட்டிக்கு ஒரு அழகான டிரஸ் ரெடி ஆயிடும்," என்றாள்.

சொன்னது போலவே அடுத்த நாளே, அழகான வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பட்டுப் பாவாடை சட்டையைத் தைத்து அவளுக்குப் பரிசளித்தாள்.

அதனைத் தொட்டுப் பார்த்த சிறுமி குதூகலத்துடன் துள்ளிக் குதித்தாள். உடனே அதனை அணிந்து கொண்டு வந்து அனைவரிடமும் காட்டினாள். அந்த உடை அவளுக்கு மிகவும் கச்சிதமாகவும், ஒரு தேர்ந்த வடிவமைப்பாளர் தைத்தது போலவும் அழகாக இருந்தது. வீட்டிலுள்ள பெரியவர்கள் கூட அதன் நேர்த்தியைக் கண்டு வியந்து போனார்கள்.

சரண்யா வியப்புடன், "பவி... நிஜமாவே சூப்பரா இருக்கு! அப்படியே எனக்கும் ஒரு பிளவுஸ் தச்சுக் கொடுத்துடேன்" என்று கண் சிமிட்டிக் கேட்க, "அப்படியே எனக்கும் சேர்த்துத் தச்சிடுமா. வெளியில டைலர்கிட்ட கொடுத்தா என் சைஸை விட ஒன்னு லூஸா, இல்ல ரொம்ப டைட்டா கொடுத்துடுறாங்க," என்று ஜானகியும் தன் பங்கிற்குச் சேர்ந்து கொண்டார்.

அவளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களுக்குத் தேவையான உடைகளைத் தைத்துக் கொடுத்தாள். அதனை அணிந்து பார்த்த சரண்யாவிற்கும் ஜானகிக்கும் மிகுந்த சந்தோஷம். "நிஜமாவே பக்கா ஃபிட்டிங் பவி! இவ்வளவு டேலன்ட்டை உள்ளயே வச்சிருக்கியே," என்று அவர்கள் பாராட்ட, பவித்ராவின் முகம் பெருமையில் ஜொலித்தது.

மாலை அலுவலகத்திலிருந்து வந்த கௌதமிடம் சரண்யா .., "கௌதம்... உன் பொண்டாட்டி கைராசி என்னன்னு தெரியுமா? இதோ பாரு, நாங்க எல்லாரும் இன்னைக்குப் பவி டிசைன் பண்ண டிரஸ் தான் போட்டிருக்கோம்," என்று பெருமையாக சொல்ல, அதிதியும் தன் சின்னஞ்சிறு பாவாடையைத் தூக்கிக் காட்டி, "மாமா... அத்தை தச்சது பாருங்க," என்று சொல்ல, கௌதம் பவித்ராவைத் திரும்பிப் பார்க்க, அவள் அங்கே தான் தயக்கமும் மகிழ்ச்சியும் கலந்த புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள்.

"உன்கிட்ட இவ்வளவு திறமை இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை பவித்ரா. பார்க்கவே ரொம்ப புரொஃபஷனலா இருக்கு," என்று மனதாரப் பாராட்டிட, கௌதமின் அந்தப் பாராட்டே அவளுக்குக் கிடைத்த மிகப்பெரிய விருதாகத் தெரிந்தது. தன் திறமை அங்கீகரிக்கப்படுவதும், தான் அந்த வீட்டின் ஒரு அங்கமாக மாறிவிட்டதும் அவளுக்குள் ஒரு புதுத் தெம்பைக் கொடுத்தது. ஒரு பெண்ணாக அவள் இழந்த சுயமரியாதை இப்போது இந்தத் தையல் கலையின் மூலமும், கௌதமின் ஆதரவின் மூலமும் மீண்டும் துளிர்விடத் தொடங்கியது.

வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் எதையாவது தைத்துக் கொடுத்தவளுக்கு, தன் கணவனுக்கும் ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை ஆழமாக முளைத்தது. ஆனால், அவளுக்கு ஆண்கள் அணியும் சட்டை தைக்கத் தெரியாது. என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு, ஒரு யோசனையும் தோன்றவே ஒரு வெள்ளை நிறக் கைக்குட்டையை எடுத்துக்கொண்டு அதில் அவனது ரசனைக்கு ஏற்றார் போல, தன் கைவண்ணத்தால் மிக நுணுக்கமான எம்பிராய்டரி டிசைன் ஒன்றை இரவு பகலாக அமர்ந்து தைத்து முடித்தாள்.

அன்று மாலை அவன் அலுவலகத்திலிருந்து வந்ததும், ஒருவித தயக்கத்துடனும் ஆசையுடனும் அவனிடம் சென்றவள் "இது உங்களுக்கு..." என்று நீட்டிட, 'இது என்ன?' என்பது போல ஒரு சிறு புன்னகையுடன் அதனை வாங்கிப் பிரித்துப் பார்த்த கௌதம், அதில் தைக்கப்பட்டிருந்த டிசைனைப் பார்த்ததும் இதழ்கள் தானாக விரிந்தன.

இரண்டு கிளிகள் ஒன்றோடு ஒன்று கொஞ்சிப் பேசுவது போன்ற அந்த எம்பிராய்டரி வேலைப்பாடு அவ்வளவு தத்ரூபமாகவும் அழகாகவும் இருந்தது. அவளது உழைப்பும் அன்பும் அந்த சிறு கைக்குட்டையில் அப்பட்டமாகத் தெரிந்தது.

"ரொம்ப அழகா இருக்கு பவித்ரா! எனக்காக இவ்வளவு மெனக்கெட்டு செஞ்சிருக்க... நிஜமாவே தேங்க்ஸ்," என்றான் கௌதம். அவனது கண்களில் தெரிந்த அந்த மெச்சும் பார்வை, அவள் எதிர்பார்த்ததை விடப் பெரிய அங்கீகாரமாகத் தெரிந்தது. அவனுக்கு அது பிடித்துவிட்டது என்பதே அவளுக்குப் பேரானந்தத்தைக் கொடுத்தது.

இருப்பினும், "உங்களுக்கு நிஜமா பிடிச்சிருக்கா?" என்று அவள் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளக் கேட்க, "ரொம்பப் பிடிச்சிருக்கு. இதை இனிமே நான் எப்போவும் என் கூடவே வச்சிருப்பேன்," என்று அவன் தன் பாக்கெட்டில் பத்திரமாக எடுத்து வைத்தபோது, பவித்ராவின் முகம் நிலவாக ஒளிர்ந்தது.

அந்த சிறிய கைக்குட்டை அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியை இன்னும் கொஞ்சம் குறைத்தது. ஒரு மனைவியாக அவள் கொடுத்த அந்த முதல் பரிசு, கௌதமின் மனதிற்குள்ளும் அவளைப் பற்றிய ஒரு பெரிய மரியாதையை உருவாக்கியிருந்தது.

இரவு உணவின் போது, ஜானகியும் சரண்யா.. "பார்த்தியா கௌதம், உன் பொண்டாட்டி உனக்கு எவ்வளவு ஸ்பெஷலா செஞ்சிருக்கான்னு?" என்று அந்த கைக்குட்டையை பற்றி சரண்யா கேலி செய்ய, கௌதம் சிரித்துக் கொண்டே பவித்ராவைப் பார்த்தான்.

இப்போது பவித்ரா பயத்தில் நடுங்கும் பழைய பெண்ணாக இல்லை. தன் கணவனுக்காகவும் குடும்பத்திற்காகவும் எதையாவது செய்யத் துடிக்கும் ஒரு துடிப்பான பெண்ணாக மாறிக் கொண்டிருந்தாள். அவளது இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணம், கௌதம் அவள் மீது காட்டிய அந்த நிபந்தனையற்ற அன்பும் பாதுகாப்பும் தான். காயம்பட்ட இதயங்களும் இந்த சின்ன சின்ன நிகழ்வுகள் மூலம் மெல்ல மெல்ல இணையத் தொடங்கியிருந்தன.

அன்று விடுமுறை நாள் என்பதால் வாசுகியின் குடும்பம் அங்கு வந்துவிட்டனர். கடந்த வாரம் கௌதமும் பவித்ராவும் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருக்க, இந்த வாரம் அவர்கள் இங்கு வந்திருந்தனர். வீடே உறவினர்களின் வருகையால் களைகட்டியிருந்தது.

ஜீவிதா பவித்ராவின் அருகில் அமர்ந்து கொண்டு... "அக்கா... நீங்க போன வாரம் என் குர்தால பண்ணிக் கொடுத்த அந்த எம்பிராய்டரி டிசைனைப் பார்த்து என் பிரண்ட்ஸ் எல்லாம் சொக்கிப் போயிட்டாங்க! 'எங்கே பண்ணின?', 'யார்கிட்ட கொடுத்தே?'னு எல்லாரும் கேட்டு நச்சரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் 'இது என் அக்கா பண்ணிக் கொடுத்தது'னு ரொம்பப் பெருமையா சொன்னேன்!" என்றாள் அவள் கண்களை விரித்து.

பவித்ரா ஒரு மெல்லிய புன்னகையுடன் அவளைப் பார்க்க, ஜீவிதா விடாமல் மேலும்.. "உடனே அவங்க விடவே இல்லை அக்கா... 'உன் அக்காகிட்ட சொல்லி எனக்கும் ஒரு டிசைன் பண்ணித் தரச் சொல்லுடி'னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க. எங்க கிளாஸ்ல இப்போ நான் தான் ஒரு ஹீரோயின் மாதிரி பில்டப் ஆகிருக்கேன். அந்தத் தையல் அவ்வளவு நேர்த்தியா இருக்குன்னு எல்லாரும் பாராட்டுனாங்க அக்கா," என்று அவள் சொல்ல சொல்ல, பவித்ராவிற்குள் ஒரு சிலிர்ப்பு உண்டானது.

"அது மட்டும் இல்லக்கா என் காலேஜ் பிரண்ட்ஸ் ரெண்டு பேர் அவங்க டிரஸ்ஸை உங்ககிட்ட கொடுத்து எம்பிராய்டரி பண்ணி வாங்கிட்டு வரச் சொல்லி என்கிட்ட இன்னைக்குக் காலையில கூட போன் பண்ணிச் சொன்னாங்க. உங்களுக்கு ஓகேன்னா நான் நாளைக்கே அந்தத் துணிகளை வாங்கிட்டு வரவா?" என்று ஆவலாகக் கேட்க, பவித்ரா தயக்கத்துடன் கௌதமைப் பார்க்க, அவன் அவளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் புன்னகைத்து... "உனக்கு இதுல விருப்பம் இருந்தா தாராளமா பண்ணு பவித்ரா. உன்னோட திறமை நாலு பேருக்குத் தெரியறதுல எனக்கும் சந்தோஷம்தான்," என்றான்

"ஆமா பவி, வீட்ல சும்மா இருக்குற நேரத்துல இதை செஞ்சா உனக்கும் மனசுக்கு ஒரு மாற்றமா இருக்கும்," என்று வாசுகியும் உற்சாகப்படுத்திட, ஜீவிதா துள்ளிக் குதித்தபடி, "அப்போ ஓகே அக்கா! நான் நாளைக்கே அந்த டிரஸ்ஸை வாங்கிட்டு வந்துடுறேன். என் பிரண்ட்ஸ்கிட்டயும் சொல்லிடறேன்," என்று கூற, அந்த இடமே மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.

பவித்ராவிற்குள் ஒரு புதிய நம்பிக்கை பிறந்திருந்தது உண்மைதான். தான் தைக்கும் உடைகள் மற்றவர்களையும் கவர்கிறது என்பது அவளுக்குப் பெரும் வியப்பைக் கொடுத்தது.

அன்றைய இரவு "பவித்ரா, உன்கிட்ட நல்ல திறமை இருக்கு. இதை ஏன் நீ ஒரு பிஸ்னஸா செய்யக்கூடாது? ஒரு சின்ன பொட்டிக் மாதிரி உனக்கு ஆரம்பிச்சு கொடுக்கட்டுமா?" என்று ஆர்வமாகக் கேட்க, ஆனால் பவித்ராவிற்கோ அதிலெல்லாம் விருப்பம் இல்லை என்பதனால் மெல்லத் தலையசைத்து, "வேண்டாம்..." என்று மறுத்துவிட்டாள்.

"ஏன் பவித்ரா? உனக்கு இதுல நல்ல வருமானமும் கிடைக்கும், ஒரு அடையாளமும் கிடைக்குமே?" என்று அவன் புரிய வைக்க முயல,..
"எனக்கு இப்போ இது ஒரு அடையாளத்துக்காகவோ இல்ல பணத்துக்காகவோ தேவைப்படல. என் மனசுல இருந்த பாரத்தையும் பயத்தையும் மறக்க இது ஒரு நல்ல மருந்தா இருக்கு. ஒரு வேலையில மூழ்கி இருக்கும்போது பழைய நினைவுகள் வர்றது இல்ல. ஆனா இதை ஒரு பிஸ்னஸா மாத்தும்போது, அதுல வர்ற டென்ஷன், கமிட்மெண்ட் எல்லாம் என்னால இப்போ தாங்கிக்க முடியுமான்னு தெரியல. எனக்கு இந்த நிம்மதியே போதும்," என்று தன் மனதிற்குள் இருப்பதை வெளிப்படையாகச் சொன்னாள்.

அவள் தன் மனமாற்றத்திற்காக மட்டுமே இதனைச் செய்ய நினைத்தாளே தவிர, ஒரு புரொபஷனல் நிலைக்குச் சென்று மீண்டும் ஒரு அழுத்தத்திற்கு ஆளாக அவளுக்கு விருப்பம் இல்லை. அவளது பேச்சில் இருந்த தெளிவு கௌதமிற்கும் புரிய.. "சரி நான் உன்னை வற்புறுத்த மாட்டேன். உனக்கு என்ன பண்ண தோணுதோ அதையே பண்ணு," என்று கூறி அவளது விருப்பத்திற்கே விட்டுவிட்டான்.

கௌதமின் இந்த விட்டுக்கொடுக்கும் குணம் தான் பவித்ராவிற்கு அவன் மீது இருந்த மரியாதையை இன்னும் ஒரு படி உயர்த்தியது. எதையும் தன் மீது திணிக்காத, தன் மனநிலையைப் புரிந்து கொள்கிற ஒரு கணவன் கிடைத்ததற்கு அவள் மீண்டும் ஒருமுறை மனதிற்குள் இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டாள்.
 
Top Bottom