• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 16

STN - 71

Member
Staff member
அத்தியாயம் - 16

நன்றாக உறங்கி எழுந்து, இருவரும் இரவு உணவு சாப்பிடுவதற்காகத் தயாராகினர். பவித்ராவிற்கோ அந்த வெதுவெதுப்பான படுக்கையை விட்டு எழவே மனமில்லை. போதாக்குறைக்கு வெளியே இருக்கும் குளிரை நினைத்து அவளுக்குள் ஒரு பயமும் இருக்க,.. "நாம ஏன் கீழே போகணும்? இங்கேயே சாப்பாட்டை வரவழைச்சு சாப்பிடலாமே," என்று முகத்தைச் சுருக்கிச் சிணுங்கினாள் பவித்ரா.

"ரூம்குள்ளேயே அடைஞ்சு கிடக்கவா கொடைக்கானல் வந்தோம்? நாம கீழே போய் சாப்பிட்டுட்டு உடனே வந்துடலாம்," என்று கௌதம் அவளை வலுக்கட்டாயமாகவே அழைத்தான். அவளது சோம்பலையும் பயத்தையும் கலைத்து வெளியே கூட்டிச் செல்வதில்தான் அவனுக்கு விருப்பம் இருந்தது.

வேறு வழியின்றி, அவளும் குளிருக்கு பயந்து தான் வேண்டாம் என்று அடம் பிடித்த அந்த ஸ்வெட்டரை எடுத்து அவசர அவசரமாகத் தன் உடம்பில் மாட்டிக் கொள்ள, அவள் ஸ்வெட்டர் போடுவதைப் பார்த்த கௌதம், உதடுகளில் குறும்புப் புன்னகை எட்டிப்பார்க்க, "யாரோ ஒருத்தர் ஸ்வெட்டர் எல்லாம் போட மாட்டேன்னு சொன்னதா ஞாபகம்?" என்று அவளைக் கிண்டல் செய்தான்.

"ஆமா... சொன்னேன் தான்! இப்போ என்னவாம்? வெளில அவ்ளோ குளிருதுல, அதான் போட்டுகிட்டேன்," என்று உதட்டைப் பிதுக்கித் தற்காப்பு வாதம் செய்தவளைப் பார்த்து பெரிதாய் சிரித்துக் கொண்டான்.

அதன் பிறகு, அவன் அவளைத் தன்னோடு அழைத்துக் கொண்டு கீழே இருந்த அந்த பிரம்மாண்டமான கார்டன் ரெஸ்டாரண்டிற்குச் சென்றான்.

அந்த பனிக்கால இரவில், அந்த இடமே அவ்வளவு அழகாக, ஒரு சொப்பன லோகம் போலக் காட்சியளித்தது. வண்ண விளக்குகளின் மெல்லிய வெளிச்சத்தில் பனிமூட்டம் நளினமாக நகர்ந்து கொண்டிருக்க, ஆங்காங்கே இருந்த மேசைகளில் சில ஜோடிகள் கைகோர்த்து பேசியபடியும், சிலர் தங்கள் குடும்பத்தாரோடு சிரித்து மகிழ்ந்தபடியும் அமர்ந்திருந்தனர். அந்த இதமான சூழலும், காற்றில் மிதந்து வந்த மெல்லிய இசையும், பவித்ராவின் மனதில் ஒரு புதுவிதமான உற்சாகத்தை நிரப்பத் தொடங்கியது.

இருவரும் தங்களுக்கு வசதியான ஒரு டேபிளைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தனர். அந்த உறைபனிக் குளிருக்கு முதலில் உடலுக்கு இதமாக இருக்க வேண்டும் என்று கௌதம் இரண்டு சூடான சூப் தான் ஆர்டர் செய்தான்.

புகை கிளம்பும் அந்த சூப்பை மெல்ல பருகியபடியே, "முன்னாடி எங்க அம்மா அப்பாவோட வந்தப்போ இவ்ளோ குளிர் இல்லைங்க... இப்போ செம குளிரா இருக்கு," என்றாள் பவித்ரா.

"நான் தான் உன்கிட்ட அப்பவே சொன்னேனே... வின்டர்ல குளிர் கொஞ்சம் அதிகமா தான் தெரியும்னு. ஆனா, இதைவிட பனிப்பிரதேசங்கள்ல இன்னும் அதிகமான குளிர் இருக்கும். இதையே உன்னால தாங்க முடியலன்னா, அங்கே வர்ற குளிரை நீ எப்படி தாங்குவ?" என்று கௌதம் சிரித்தபடி கேட்க, "நாம என்ன அங்கேயும் போகப் போறோமா என்ன?" என்றாள் அவள் அப்பாவியாக.

"கண்டிப்பா! நம்மோட அடுத்த ட்ரிப் சிம்லா தான்," என்று கௌதம் உறுதியான குரலில் கூறிட,.. "சிம்லாவா? அங்கே பனியெல்லாம் கொட்டும்னு கேள்வி பட்டிருக்கேன். நினைச்சாலும் ரொம்ப ஆசையா தான் இருக்கு... ஆனா, குளிரை நினைச்சாதான் வர பயமா இருக்கு," என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவளது பார்வை தற்செயலாகப் பக்கத்து டேபிளில் இருந்த ஒரு ஜோடியின் மீது விழ, அவர்களை சற்று நேரம் உற்றுப் பார்த்தவள் கௌதமிடம் மெல்லிய குரலில், "அந்தப் பொண்ணு எப்படி ஸ்வெட்டரே போடாம இருக்கோ தெரியல... இதுல ஸ்லீவ்லஸ் சுடிதார் வேற போட்டிருக்கு" என்றாள் ஆச்சரியத்துடன்.

"அந்தப் பொண்ணுக்கு அந்த குளிரைப் பத்தின பயமெல்லாம் இருக்காது பவித்ரா," அர்த்தமுள்ள புன்னகையுடன் அவன் கூற,.. "ஏன் அப்படி சொல்றீங்க?" என்று அவள் புரியாமல் வினவினாள்.

"ஏன்னா... பக்கத்துல தான் அந்த பொண்ணோட ஹஸ்பண்ட் இருக்காரே! நான் கவனிச்ச வரைக்கும் அந்த பொண்ணோட தோளை விட்டு அவரோட கை இறங்கவே இல்லை. அந்த அரவணைப்புல அவளுக்கு எங்கேருந்து குளிர் தெரியப்போகுது?" என்று கௌதம் தன் காந்தக் குரலில் அவளது விழிகளை நேருக்கு நேராகப் பார்த்து சொல்ல, அவன் சொல்லும் ஆழமான அர்த்தம் புரிந்த அடுத்த நொடி, பவித்ராவிற்கு இதயம் ஒரு நிமிடம் தறிகெட்டு ஓடி, அவளது முகம் வெட்கத்தில் மீண்டும் செம்பருத்தியாய் சிவந்து போனது.

அவளது அமைதியைக் கண்ட கௌதம், ஒன்றும் தெரியாதவனைப் போல, "என்னாச்சு பவித்ரா... உன் முகம் ஏன் இவ்வளவு சிவந்து போச்சு?" என்று வம்புக்கு இழுக்க,.. "அ... அதெல்லாம் ஒன்னும் இல்லை," என்று தடுமாறியவள், அதற்கு மேல் அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல், சட்டென்று தன் முகத்தைக் குனிந்து கொண்டு உணவை உண்ணத் தொடங்கிட, தன் வார்த்தைகளால் அவளுக்குள் ஏற்பட்ட அந்த அழகான அவஸ்தையை ரசித்தவனின் இதழ்களிலும் ஒரு மெல்லிய புன்னகை தவழ்ந்தது.

சாப்பிட்டு முடித்ததும், அந்த இதமான சூழலை விட்டு உடனே அறைக்குச் செல்ல இருவருக்குமே மனமில்லை. அதனால், அந்த கார்டனில் மெல்ல நடைபோடத் தொடங்கினர். கொடைக்கானலின் குளிருக்கு இதமாக, ரெஸ்டாரண்டின் ஒரு மூலையில் பெரிய மரக்கட்டைகளை அடுக்கி போன்ஃபயர் போலத் தீ மூட்டியிருந்தனர். அதிலிருந்து எழும்பிய தணலின் வெளிச்சமும் வெதுவெதுப்பும் அந்தப் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது.

பவித்ராவோ குளிரில் உறைந்து மரத்துப் போன தன் இரு கைகளையும் ஒன்றோடொன்று தேய்த்துக் கொண்டே அவனது பக்கத்தில் நடந்து வந்தாள். காற்றில் பைன் மரங்களின் இலைகள் அசையும் சத்தமும், தூரத்திலிருந்து கேட்ட மெல்லிய இசையும் மட்டுமே அங்கிருந்தன. இருவரும் கொஞ்ச நேரம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும், அவர்களுக்குள் நிலவிய அந்த மௌனம் கூட ஒரு கவிதை போல அழகாகத்தான் இருந்தது. வார்த்தைகள் தேவையின்றி மனங்கள் பேசிக்கொண்ட தருணமது.

அவள் குளிரைத் தாங்க முடியாமல் கையைத் தேய்த்துக் கொண்டே வருவதை கௌதமின் கூர்மையான கண்கள் கவனித்துக் கொண்டுதான் இருந்தன. "கை ரொம்ப ஃப்ரீஸ் ஆகுதா?" என்று அக்கறையோடு கேட்டுக் கொண்டே, சட்டென்று அவளது குளிர்ந்த கரங்களை தன் அகன்ற கைகளுக்குள் சிறைபிடித்துக் கொண்டான்.

அவனது கரத்தில் இருந்த அந்த ஆண்மைக்கே உரிய மிதமான சூடு, உறைந்து போயிருந்த அவளது விரல்களுக்குள் பாய்ந்து ஒரு புதிய இதத்தைத் தர, அவனது கைகளின் வெதுவெதுப்பில் அவளது நடுக்கமும் மெல்ல அடங்கியது.

அவனோடு அப்படியே கைகோர்த்து நடந்தபடியே,.. "ரொம்பக் குளிரா இருந்தாலும்... இப்படியே உங்ககூட கைகோர்த்து நடந்துட்டே இருக்கிறது கூட நல்லாத் தான் இருக்குல்ல?" என்று தன் மனதில் மௌனமாகப் பூத்த ஆசையை வார்த்தைகளாக்கி அவனிடம் வினவிட, அவளது கேள்வியில் இருந்த அந்த பிரியத்தையும், தன்னிடம் அவள் காட்டும் நெருக்கத்தையும் உணர்ந்த கௌதமின் நெஞ்சம் நெகிழ்ந்தது. அவளது கையை இன்னும் கொஞ்சம் இறுக்கமாகப் பற்றிக் கொண்டவன், "ம்ம்..." என்றான் ஆழமான குரலில்...

"எனக்கு இப்படியொரு அழகான லைஃப் கிடைக்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கல. இந்த கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா? நல்லவேளை... அன்னைக்கு நான் பிடிவாதமா இந்த வரனை மறுக்காம இருந்தேன்," என்று பவித்ரா தன் கடந்த கால பயங்களையும், இன்று அவனிடம் காணும் பேரன்பையும் நினைத்து நெகிழ்ச்சியோடு கூறிட, அவள் சொன்னதைக் கேட்ட கௌதம், அவளது முகத்தைப் பார்ப்பதற்காகத் தன் நடையைச் சற்றே நிறுத்தினான். அவளது கண்கள் அந்த விளக்கொளியில் லேசான எமோஷனலில் கலங்கியிருப்பது போல அவனுக்குத் தோன்றியது. அவளது கையை தன் கைகளுக்குள் இன்னும் பத்திரமாகப் பொதிந்து கொண்டவன், அவளது பயத்தின் ஆழத்தைப் புரிந்தவனாக மென்மையாகப் புன்னகைத்து,...
"அப்போ... நான் அவ்வளவு மோசமானவனா இருப்பேன்னு நினைச்சியா பவித்ரா" என்று சற்றே குறும்பும் கனிவும் கலந்த குரலில் கேட்க, அவளோ பதறிப்போய் தன் தலையை இருபுறமும் பலமாக ஆட்டி.. "ஐயோ... அப்படியெல்லாம் இல்லைங்க! உங்களைப் பத்தி எனக்கு எந்தத் தப்பான எண்ணமும் இல்லை. ஆனா, ஒரு புது வாழ்க்கை, புது மனிதர், ஏற்கனவே ஒரு வாழ்க்கை பல கஷ்டங்களை கொடுத்திருக்க, மறுபடியும் ஒருத்தரோட என்னால வாழ முடியுமாங்கிற பயம் தான் எனக்குள்ள இருந்தது. ஆனா, இன்னைக்கு உங்ககூட இருக்கும்போது கிடைக்கிற இந்த நிம்மதியும் பாதுகாப்பும்... நான் செஞ்ச ஏதோ ஒரு புண்ணியம்னு தான் தோணுது," என்று தன் மனதைத் திறந்து கொட்டினாள் பவித்ரா.

அவளது அந்த உண்மையான வார்த்தைகள் கௌதமின் நெஞ்சில் அத்தனை வருடங்களாக இருந்த ஏதோ ஒரு பாரத்தைக் குறைப்பது போல இருந்தது. அவளது உடைந்த மனதிற்குத் தான் ஒரு நல்ல துணையாக மாறிவிட்டோம் என்ற திருப்தி அவனுக்குள் ஏற்பட்டது.

"பயம் இருக்குறது சகஜம் தான் பவித்ரா. ஆனா, அந்த பயத்தை உடைச்சு நீ என்மேல வச்சிருக்கிற இந்த நம்பிக்கை தான் எனக்கு ரொம்ப பெரிய கிஃப்ட், உன்னை எப்போவும் இதே சந்தோஷத்தோட வச்சுக்கணும்கிறது தான் இனி என்னோட ஒரே ஆசை," என்றான் மிகவும் ஆழமான, காதலும் பொறுப்பும் நிறைந்த குரலில்.

அவனது அந்தப் பேச்சில் பவித்ராவின் இதயம் குளிர்ந்து போனது. கொடைக்கானலின் பனிக் காற்று அவர்களைச் சுற்றிச் சுழன்றடித்தாலும், அந்த நொடியில் ஒருவரையொருவர் ஆழமாக புரிந்து கொண்ட இரு மனங்களுக்குள்ளும் ஒரு அழகான வெதுவெதுப்பு பரவத் தொடங்கியிருந்தது.

வெகு நேரத்திற்குப் பிறகுதான் இருவரும் தங்கள் அறைக்குத் திரும்பினர். அறைக்குள் நுழைந்ததுமே பவித்ராவிற்கு மீண்டும் குளிர் சுளீரென்று உறைக்க, வேகவேகமாக சென்று படுக்கையில் அமர்ந்து, அந்த தடிமனான போர்வையை முழுவதுமாகப் போர்த்திக் கொண்டாள்.

அவளது அந்த அவசரத்தைக் கண்டு சிரிப்பு பொங்கிட.. "வெளியே அவ்வளவு நேரம் குளிராம நல்லாத்தானே நடந்துட்டு இருந்த? இங்கே ரூமுக்குள்ள வந்ததும் திடீர்னு இப்படி குளிருதா உனக்கு?" என்று குறும்போடு கேட்டான்.

போர்வைக்குள்ளிருந்து தன் முகத்தை மட்டும் லேசாகக் காட்டியவள், "வெளியேயும் குளிராதான் இருந்ததுங்க... ஆனா அந்த அழகான நேரத்தை கெடுக்க விரும்பாமத்தான் கஷ்டப்பட்டு தாங்கிட்டு இருந்துட்டேன்," என்று சொன்னவள்.. "உங்களுக்கெல்லாம் குளிரலையா?" என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.

"எனக்கு பெருசா ஒன்னும் தெரியல" என்றவனும் அவளோடு படுக்கையில் அமர்ந்து கொள்ள,
அப்போதுதான் கட்டிலின் நடுவே கலைந்து கிடந்த ரோஜா இதழ்களையும், துண்டுகளையும் கவனித்தவள்.. "அழகா டெக்கரேட் பண்ணி வச்சிருந்தாங்க பெட்ல... நான்தான் தூக்கக் கலக்கத்துல அப்படியே படுத்து எல்லாத்தையும் கலைச்சு விட்டுட்டேன் போல," என்று லேசான வருத்தத்துடன் கூறினாள்.

"அதை கலைக்காம நாம எப்படி படுக்க முடியும்?" என்றவன், அவள் இன்னும் படுக்காமல் போர்வைக்குள் முடங்கி அமர்ந்திருப்பதைப் பார்த்து, "இன்னும் படுக்கலையா நீ?" என்று கேட்டான்.

"நல்லா தூங்கிட்டேன்ல... இப்போதைக்கு எனக்குத் தூக்கம் வராது," அவள் கூற,.. "தூக்கம் வரலன்னா, விடிய விடிய என்ன பண்ணலாம்னு இருக்க?" என்று அவன் சற்றே சாய்ந்து அமர்ந்து கேட்க,. "என்ன பண்ணுறது... போர் அடிக்காம இருக்க ஏதாவது கேம் விளையாடலாமா?" என்று ஆசையோடு வினவினாள்.

"கேமா? என்ன கேம்?" என்று அவன் கேட்க, "பாட்டுக்குப் போட்டி விளையாடலாம்," என்றாள் பவித்ரா உற்சாகமாக.

அவள் பாடும் அழகைக் காணவும், அவளது இனிமையான குரலை கேட்கவும் அவனுக்குள் ஆசை எழ.. "ம்ம்... ஓகே, விளையாடலாம். ஆனா நீயே ஃபர்ஸ்ட் பாடு," என்றான் கௌதம் அவளது பாடும் குரலை கேட்கும் ஆவலோடு அவளையே உற்றுப் பார்த்தபடி...
 
Top Bottom