• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 5

STN - 71

New member
Staff member
அத்தியாயம் - 5

கௌதம் பவித்ரவை திகைத்து பாரத்துக் கொண்டிருந்தான், அவளது நெற்றியில் வியர்வை அரும்பி இருக்க, "வேணாம்... விட்ருங்க... ப்ளீஸ்" என்று ஏதோ ஒரு பயங்கரக் கனவில் அவள் உளறிக் கொண்டிருந்தாள். அவளது நடுக்கம் அவனுக்கும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

"பவித்ரா... பவித்ரா..." என்று மெல்ல அவளது தோளைத் தொட்டு உலுக்கினான்.

அவளோ அந்தத் தொடுதலில் இன்னும் பயந்து, "ஐயோ... அடிக்காதீங்க..." என்று கத்தியபடி திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். அவளது கண்கள் பயத்தில் விரிந்து, இருட்டில் அவனைக் கூட அடையாளம் காண முடியாமல் மிரட்சியுடன் பார்த்தன. அவளது மூச்சுத் திணறல் அறை முழுவதும் கேட்டது.

"பவித்ரா, நான் தான்... கௌதம். பயப்படாத" என்று நிதானமாக, அதே சமயம் அழுத்தமாக சொன்னவன், சட்டென எழுந்து அருகில் இருந்த விளக்கை ஒளிரச் செய்தான்.

ஒளி பரவியதும், தன் முன்னே பதட்டத்துடன் அமர்ந்திருக்கும் கௌதமைப் பார்த்த பவித்ராவிற்கு மெல்ல நினைவு திரும்பியது. தான் புதிதாக திருமணமான வீட்டில், தன் கணவனின் அறையில் இருப்பதை உணர்ந்ததும் அவளது உடல் நடுக்கம் சற்றுத் தணிந்தது. ஆனால் கண்கள் கலங்கி, கண்ணீர் கன்னங்களில் வழியத் தொடங்கியது.

அவன் அவளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுக்க, நடுங்கும் கைகளுடன் அதனை வாங்கிப் பருகினாள். அவளது நிலையை பார்த்த கௌதமிற்குள் ஏதோ ஒரு இனம் புரியாத வலி ஏற்பட்டது. ஜீவிதா சொன்னது போல அவனுக்குள்ளும் காயம் உண்டு தான், ஆனால் இந்தப் பெண்ணின் பயத்திற்குப் பின்னால் ஏதோ ஒரு பெரிய கொடுமை ஒளிந்திருப்பதை அவனது உள்ளுணர்வு அவனுக்கு சொன்னது.

"கெட்ட கனவு எதுவும் கண்டீயா?" என்று அவன் மென்மையாகக் கேட்க, அவள் பதில் சொல்லாமல் மௌனமாக அழுது கொண்டிருந்தாள்.

"என்னாச்சு, இப்போ என்ன பண்ணலாம்" அவனுக்கு இப்போது என்ன செய்வது என்பது புரியாமல் தான் கேட்டான். சற்று நேரத்திற்கு முன் அவன் கண்ட காட்சி அவனை அந்த அளவிற்குப் பதற்றப்பட வைத்திருந்தது.

தன்னை சமன்படுத்திக் கொண்டவள், தனது கண்ணீரையும் துடைத்துக் கொண்டு, "ஸாரி.. உங்க தூக்கத்தைத் தொந்தரவு பண்ணிட்டேன்" என்று சொல்ல.. "அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்ல, இப்போ நீ ஓகே தானே?" என்று வினவ.. "ம்ம்" என்று தலையசைத்தாள்.

"சரி படுத்துக்கோ" அவன் சொல்லவும், அவளும் மௌனமாகப் படுத்துக் கொண்டாள். அவனிடம் இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் அவளுக்குள் இருந்த பதட்டம் குறையவில்லை. அவனோ, 'இந்த பொண்ணுக்கு என்னாச்சு? இன்னும் அவ பாஸ்ட் லைஃபை வெளியே வரலைன்னு நினைக்கிறேன், ஆனா தூக்கத்துல அலறுற அளவுக்கு ரொம்ப பாதிக்கபட்டிருக்காளா' என்று அவளைப் பற்றி நினைத்தபடியே தான் படுத்துக் கிடந்தான்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் இருவரும் தங்களை அறியாமல் உறங்கிப் போயினர். அடுத்த நாள் வழக்கம் போல் ஆரம்பித்தது. ஆனால் நேற்று போல் தயங்கி நிற்காமல் அன்றைய காலை உணவை அவள் தான் அவனுக்குப் பரிமாறினாள். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

இருப்பினும், அந்த மௌனத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது. கௌதம் அவளை பார்க்கும் பார்வையில் முன்பிருந்த கறார் தன்மை குறைந்து, ஒரு மெல்லிய தேடல் இருந்தது. பவித்ராவும் அவன் அருகில் வரும்போது ஏற்பட்ட அந்த இனம் புரியாத நடுக்கத்தை மெல்லக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பழகிக் கொண்டிருந்தாள்.

டைனிங் டேபிளில் அவனுக்கு தண்ணீர் எடுத்து கொடுக்கும்போது அவளது கை விரல்கள் அவனது விரல்களில் லேசாகப் பட, முன்பென்றால் இந்நேரம் பதறியிருப்பாள், ஆனால் இன்று ஒரு சிறு அதிர்வுடன் மட்டும் நின்று கொண்டாள். கௌதமும் அதனை கவனித்தும் கவனிகாதது போலவே இருந்து கொண்டான்,..

அவன் அலுவலகம் கிளம்பிச் சென்ற பின், வீடு மெல்ல மௌனத்திற்குத் திரும்பியது.
அன்று அதிதியும் பள்ளிக்குச் சென்றுவிட, பவித்ராவிற்கு தன் அத்தை ஜானகி மற்றும் நாத்தனார் சரண்யாவுடன் தான் நேரம் போனது. சமையலறையில் அவர்கள் இருவருக்கும் உதவியாக நின்றிருந்தாள். அவர்கள் இருவரும் கொஞ்ச நேரம் கூட அவளைத் தனிமையில் விடாமல், எதையாவது பேசிக் கொண்டே அவளைத் தங்கள் உரையாடலில் இணைத்துக் கொண்டனர்.

சரண்யா காய்கறிகளை நறுக்கிக் கொண்டே, "என் வீட்டுக்காரர் தான் கல்யாணத்துக்கு வர முடியாம போச்சேன்னு ஒரே புலம்பல் பவித்ரா... அவருக்கு இது மாதிரி குடும்ப விஷேஷத்துல கலந்துகிட்டு எல்லார்கூடவும் அரட்டை அடிக்கிறதுன்னா ரொம்ப இஷ்டம்" என்று ஆதங்கத்துடன் சொன்னாள்.

"ஏன் வரல அண்ணி? அவருக்கு ஆபிஸ்ல லீவ் கிடைக்கலையா?" என்று மெல்ல அவள் வினவிட
"ஆமா பவித்ரா, போன மாசம் தான் லீவ்ல வந்துட்டு போனாரு. உங்க கல்யாணம் திடீர்னு முடிவாகி உடனே நடந்துடுச்சு இல்லையா? அதனால தான் அங்க லீவ் கொடுக்கல. இங்கேயே நம்ம ஊர்லையே வந்து வேலை பாருங்கன்னு சொன்னா கேட்கவே மாட்டேங்கிறாரு. கௌதம்க்கு இந்த விஷயத்துல அவர் மேல கொஞ்சம் கோபம் கூட உண்டு. 'அக்கா இங்கே தனியா இருக்கா, நீங்க இங்கே வந்துடலாமே'ன்னு அவன் சொல்லுவான். ஆனா அவரோ, 'எனக்கு பிடிச்ச வேலையை விட்டு எப்படி வர முடியும்? என் பொண்டாட்டி பிள்ளைக்கு நான் தானே உழைச்சு கொடுக்கணும்? அங்கே வந்தா உன் தம்பி அவன் கம்பெனிக்குள்ள என்னை இழுத்துக்குவான். சொந்த கால்ல நிக்கணும், சில வருஷம் போகட்டும்'னு பிடிவாதமா சொல்றாரு" என்று சரண்யா தன் கணவனின் கொள்கைகளைப் பற்றிப் பெருமிதமாகவும், அதே சமயம் சிறு வருத்தத்தோடும் கூறினாள்.

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே சரண்யாவின் கைபேசி சிணுங்கிட, திரையில் மின்னிய பெயரைப் பார்த்ததும் அவளது முகம் அப்படியே பிரகாசமானது. "அவருக்கு ஆயுசு நூறு! இப்பதான் அவரைப் பத்தி பேசினோம், அதுக்குள்ள கூப்பிடுறாரு" என்று சிரித்துக் கொண்டே போனை எடுத்துப் பேச ஆரம்பித்தாள்.

சந்துரு மறுமுனையில் பேசப் பேச, சரண்யாவின் முகத்தில் வழிந்த அந்த அன்பும், அக்கறையும் பவித்ராவிற்கு ஒரு புதிய பாடத்தைச் சொல்லிக் கொடுத்தது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான அழகான உறவு எப்படி இருக்கும் என்பதை அவள் சரண்யாவின் பேச்சிலிருந்து உணர்ந்தாள். கணவன் எங்கே இருந்தாலும், அவனது நலம் விசாரிப்பில் இருக்கும் அந்த உயிர்ப்பை அவளால் உணர முடிந்தது.

திடீரென, "இருங்க கொடுக்கிறேன்" என்று சொன்ன சரண்யா, போனை பவித்ராவிடம் நீட்டி... "இந்தா பவித்ரா... உன் அண்ணன் உன்கிட்ட பேசணுமாம்" என்று சொல்ல, அவளுக்குள் ஒரு சிறிய தயக்கம் எட்டிப் பார்த்தது. புது உறவு, எப்படிப் பேசுவார் என்ற மலைப்புடன் போனை வாங்கி காதில் வைத்து,.. "ஹலோ..." என்று அவள் இழுக்க, மறுமுனையில் சந்துருவின் குரல் மிகவும் கனிவாக ஒலித்தது.

"எப்படிம்மா இருக்க பவித்ரா? உங்க கல்யாணத்துக்கு தான் வர முடியாம போயிடுச்சு, அதான் போன்லயாச்சும் விஷ் பண்ணலாம்னு கூப்பிட்டேன். எனிவே, இந்த அண்ணனோட மனமார்ந்த வாழ்த்துக்கள்மா. கௌதம் கொஞ்சம் கறாரான ஆள் மாதிரி தெரிவான், ஆனா தங்கம்டா அவன். அவனை நீதான் நல்லா பார்த்துக்கணும்" என்று அவர் மிகவும் உரிமையோடும், அன்போடும் பேசினார்.

முதன்முறை பேசுவது போலத் தெரியாமல், அவர் காட்டிய அந்த ஒரு நிமிட அக்கறை பவித்ராவின் மனதை நெகிழச் செய்தது. அவளது உதட்டில் ஒரு சிறு புன்னகை மலர்ந்தது. அவனது வாழ்த்துக்கு "ரொம்ப தேங்க்ஸ் அண்ணா" என்றாள். அந்த ஒரு வார்த்தையிலேயே அவளது மனதிலிருந்த பல தயக்கங்கள் கரைந்து போயின.

அன்றைய பொழுதும் மெல்லக் கரைந்து இரவு வந்து சேர்ந்தது. கௌதமின் அறையில் அந்த பழைய மௌனம் மீண்டும் குடியேறியிருந்தது. இருவரும் வழக்கம் போலத் தத்தம் திசையில் திரும்பிப் படுத்துக் கொண்டனர். ஆனால், இன்றும் அந்த அமைதி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

நள்ளிரவு தாண்டியும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த கௌதமிற்கு, பவித்ராவின் பக்கமிருந்து மெல்லிய விசும்பல் சத்தம் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தவனுக்கு, நேற்று போலவே அவள் இன்றும் தூக்கத்திலேயே நடுங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவளது உடல் ஒருவித அச்சத்தில் துடிக்க, "வேண்டாம்... என்னை விட்டுடுங்க... என்னைத் தொடாதீங்க..." என்று அவள் அடிக்குரலில் கதறுவது அவன் நெஞ்சைப் பிழிந்தது. ஒரு நாள் என்றால் ஏதோ தற்செயலான கனவு என்று கடந்து போகலாம், ஆனால் அடுத்தடுத்த நாட்களும் அவள் இப்படிப் பாதிக்கப்படுவது, அவள் மனதளவில் எவ்வளவு ஆழமான ரணத்தைச் சுமக்கிறாள் என்பதை அவனுக்குத் தெள்ளத்தெளிவாகப் புரிய வைத்தது.

அடுத்த நாள் காலை... கௌதமின் அலுவலக கேபின்...

குளிர்சாதனப் பெட்டியின் சீரான சத்தத்தைத் தவிர அறை அமைதியாக இருக்க, கௌதமிற்கு எதிரே பவித்ராவின் அண்ணன் தருணேஷ் தான் சற்றே பதற்றத்துடன் அமர்ந்திருந்தான். கௌதம் அலுவலகத்தில் இருந்து அவசரமாக அழைத்ததால், ஏதாவது பிஸ்னஸ் விஷயமாக இருக்குமோ என்ற யோசனையுடன்..
"சொல்லுங்க சார்... எமர்ஜென்சியா வரச் சொல்லியிருந்தீங்க?" என்று தருண் மெல்ல வினவ, கௌதம் தனது இருக்கையில் சாய்ந்து அவனை உற்றுப் பார்த்தவன்.."இப்போ உன்னை என் மச்சானா நினைச்சுத் தான் இங்கே வரச் சொன்னேன் தருணேஷ். பிஸ்னஸை எல்லாம் ஒரு நிமிடம் ஓரமா வைப்போம்," என்று கௌதம் முகவுரை கொடுத்தபோதே, ஏதோ குடும்ப விஷயம் தான் என்பதைப் புரிந்து கொண்டான் தருண்.

"என்னாச்சு மச்சான்? பவித்ரா ஏதாவது..." என்று அவன் இழுக்க, கௌதம் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

"உன் தங்கச்சி உங்க வீட்ல இருந்த போது, ராத்திரி நிம்மதியா தூங்குவாளா? அவளுக்கு ஏதாவது தூக்கத்துல பிராப்ளம் இருந்ததா?" என்ற அவனது கேள்வியைக் கேட்டதும் தருணேஷின் முகம் சட்டென வாடியது. சில நொடிகள் யோசித்தவன், ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டு.. "ஆமா மச்சான்... நீங்க கேட்குறது சரிதான். சில நேரம் அவ தூக்கத்துலேயே பயங்கரமா புலம்பி நடுங்க ஆரம்பிச்சுடுவா. ஆரம்பத்துல இந்த பிரச்சனையை நாங்க பார்த்தப்போ ரொம்பவே பயந்துட்டோம். உடனே டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனோம். அவங்க அவளை செக் பண்ணிட்டு, அவ மனசுல ஏதோ தீராத பயம் இருக்கு, அந்தத் தாக்கம் தான் அவளுக்குக் கெட்ட கனவா வந்து இப்படிப் பண்ண வைக்குதுன்னு சொன்னாங்க. போகப் போக சரியாகிடும்னு சொல்லி சில மாத்திரைகள் கொடுத்தாங்க. அந்த மெடிசின் சாப்பிட்ட கொஞ்ச நாள் நல்லா இருந்தா... அப்புறம் மறுபடியும் அதே மாதிரி பண்ண ஆரம்பிச்சுடுவா. காலப்போக்குல எங்களுக்கு அது ஒரு பழக்கமாவே போயிடுச்சு மச்சான். ஆனா, கடந்த ஒரு மாசமா அவளுக்கு அந்த பிரச்சனை எதுவும் இல்லாம தான் இருந்தது. என்னாச்சு... இப்போ மறுபடியும் அவ..." என்று தருண் நிறுத்த, கௌதம் மௌனமாகத் தலையசைத்து.. "ம்ம்... ரெண்டு நாளா அவ அப்படித்தான் பண்ணுறா தருணேஷ். தூக்கத்துல அவ படுற அவஸ்தையைப் பார்க்கவே ஒரு மாதிரியா இருக்கு," என்று கௌதம் சொல்ல, தருணேஷின் கண்களிலும் வருத்தம் தெரிந்தது.

தனது தங்கையின் கடந்த கால கசப்பான நினைவுகள் இன்னும் அவளை விடுவதாக இல்லை என்பதை நினைக்கையில் அவனுக்கு வேதனையாக இருந்தது. அதே சமயம், கௌதம் இதனை இவ்வளவு அக்கறையுடன் தன்னிடம் கேட்பது அவனுக்கு ஒரு சிறு நம்பிக்கையைத் தந்தது. தன் தங்கை ஒரு பாதுகாப்பான கரங்களில் தான் இருக்கிறாள் என்ற நிம்மதி அவனுள் மெல்ல எட்டிப் பார்த்தது.
 
Top Bottom