• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 8

STN - 71

New member
Staff member
அத்தியாயம் - 8

மருத்துவர் தனது மேஜையில் இருந்த கோப்புகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, பவித்ராவை நோக்கி சற்றே சாய்ந்து அமர்ந்தவர்.. "என் பெயர் காயத்ரி. நாம இப்போ ஒரு டாக்டராவும் பேஷண்ட்டாவும் பேசப்போறது இல்லை பவித்ரா. ரெண்டு பெண்கள் மனசு விட்டுப் பேசப்போறோம், அவ்வளவுதான். சரியா?" என்று அவர் புன்னகைக்க, பவித்ரா மெல்லத் தலையசைத்தாள்.

கௌதமைப் பார்த்த காயத்ரி, "கௌதம், நீங்க கொஞ்ச நேரம் வெளியில வெயிட் பண்றீங்களா? பவித்ரா என்கூட தனியா பேசினா இன்னும் கொஞ்சம் கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்," என்று சொல்ல,
கௌதம் பவித்ராவைப் பார்த்தான்.

அவளது கண்களில் 'என்னை விட்டுப் போகாதீங்க' என்பது போன்ற ஒரு மிரட்சி தெரிய, அவளது கையை லேசாக அழுத்தி, "நான் வெளியில தான் இருப்பேன் பவித்ரா. எதுக்கும் பயப்படாதே," என்று தைரியம் சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

கௌதம் வெளியேறியதும் அறைக்குள் ஒரு அமைதி நிலவியது. எழுந்து வந்து பவித்ராவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த மருத்துவர்.. "பவித்ரா, உங்க பயம் எனக்குப் புரியுது. ஆனா இங்க நீங்க பேசுறது எதுவும் வெளியில வராது. உங்களுக்குத் தூக்கத்துல என்ன மாதிரியான கனவு வருது? எப்போல இருந்து இந்த நடுக்கம் ஆரம்பிச்சது?" என்று நிதானமாகக் கேட்க, பவித்ரா தனது கைகளை இறுக்கமாகப் பிசைந்து கொண்டு.. "டாக்டர்... அது வந்து... எனக்கு முதல் திருமணம் முடிந்த அப்புறம் புகுந்த வீட்டுக்கு போனேன் அப்போ..." என்று ஆரம்பித்தவள், சொல்ல முடியாமல் விம்மி அழத் தொடங்கிட, மருத்துவர் அவளது கரத்தில் அழுத்தம் கொடுத்து ஊக்கினார்.

அதன் பிறகு அவள் மலமலவென கடந்த காலத்தின் அந்த இருண்ட பக்கங்களை ஒவ்வொன்றாகப் பகிரத் தொடங்கினாள். அவளது முதல் திருமண வாழ்க்கையில் சந்தித்த சித்திரவதைகள், ஒரு பெண்ணாக அவள் அனுபவித்த அந்த அவமானங்கள், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவள் சிதைக்கப்பட்ட தருணங்கள் என அனைத்தையும் வார்த்தைகளாகக் கொட்டினாள். "அ.. அவன் என்னை அடிக்க வரும்போது இருந்த அதே முகம் தான் டாக்டர் கனவுல வருது. யாராவது என்னைத் தொட்டாலே எனக்கு அந்தப் பழைய ஞாபகம் வந்துடுது. கௌதம் நல்லவரா இருந்தாலும், எனக்குள்ள இருக்கிற அந்தப் பயம் அவரைப் பார்த்தும் நடுங்க வச்சது," என்று அழுதுகொண்டே கூறி முடித்தாள்.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் காயத்ரி, அவளுக்கு ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து கொடுத்து.. "பவித்ரா, நீங்க இப்போ பாதுகாப்பா இருக்கீங்க. கௌதம் உங்களை எவ்வளவு மதிக்கிறார்ங்கறது அவர் உங்களை இங்க கூட்டிட்டு வந்த விதத்திலேயே எனக்கு புரியுது. உங்களுக்கு இருக்கிறது போஸ்ட் ட்ராமாட்டிக் ஸ்ட்ரஸ் டிசார்டர், அதாவது ஒரு மோசமான பாதிப்புக்குப் பிறகு மனசுல தங்கிப்போன பயம். இதுக்கு முறையான கவுன்சிலிங் மூலமும், சின்னச் சின்ன மெடிசின்ஸ் மூலமும் தீர்வு காணலாம். ஆனா, இதுல கௌதமோட பங்கு தான் ரொம்ப முக்கியம்," என்றவர், சிறிது நேரம் கழித்து கௌதமை உள்ளே வரச் சொல்லிவிட்டு பவித்ராவைச் செவிலிப்பெண்ணுடன் வெளியே அனுப்பி வைத்தார். அவனிடம் சில விஷயங்களைத் தனியாகப் பேச வேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது.

"டாக்டர் என்னாச்சு" அவன் தவிப்புடன் வினவ,.. "கௌதம், பவித்ராவுக்கு மனசுல பெரிய பாரம் இருக்கு. அதை அவங்க என்கிட்ட பகிர்ந்துக்கிட்டதே ஒரு பெரிய முன்னேற்றம் தான். அவங்களுக்கு இப்போ தேவைப்படுறது ஒரு கணவனா உங்களோட அரவணைப்பும் அன்பும் தான். நாம சில தெரப்பிகள் ஸ்டார்ட் பண்ணலாம், ஆனா அந்த தெரபிஸ்டையும் விட உங்களோட ஆதரவும் அன்பும் தான் அவங்களுக்கு வேணும். அது தான் அவங்கள முழுமையா மாற்றும்," என்று டாக்டர் காயத்ரி மிகத் தெளிவாகக் கூறினார்.

கௌதம் ஒரு கணம் மௌனமாக இருந்தான். அவன் மனதிற்குள்ளும் சில காயங்கள் ஆறாமல் அப்படியே இருக்கவே, அவன் மெல்ல.. "டாக்டர், எனக்கு புரியுது... ஆனா எங்களுக்கு நடந்தது ரீமேரேஜ். என்னோட லைஃப்லையும் நான் நிறைய வலிகளைத் தாண்டி தான் வந்திருக்கேன். என் மனசும் பழைய நினைவுகள்ல இருந்து இன்னும் முழுசா மீளல. அதனால சட்டுனு என்னால இந்த நியூ லைஃப்ல அவ கூட இயல்பா சேர்ந்து வாழ முடியல. ஒருவிதத் தயக்கம் எனக்குள்ளும் இருக்கு," என்று தன் மனபாரத்தை இறக்கி வைத்தான்.

அவனை ஆழ்ந்து நோக்கிப் புன்னகைத்த மருத்துவர். "நீங்க சொல்றது எனக்கு புரியுது கௌதம். நான் உங்களை இப்போவே அவங்க கூட ஃபிஸிகலா கணவன்-மனைவியா இருக்க சொல்லல. ஒரு நல்ல பிரண்டா அவங்களுக்கு உங்களோட ஆதரவைக் கொடுங்க. நீ எப்போவும் தனி ஆள் கிடையாது, உனக்கு நான் இருக்கேன்'ங்கிற அந்தப் பாதுகாப்பான உணர்வை அவங்க மனசுல பதிய வைங்க. அவங்களுக்குத் தேவைப்படுறது ஒரு ஆணிடமிருந்து கிடைக்கிற அதிகாரம் இல்லை, ஒரு மனிதனிடமிருந்து கிடைக்கிற ஆறுதல். இதுவே அவங்கள பாதி குணமாக்கிடும்," என்றார்.

கௌதமிற்கு அந்த வார்த்தைகள் ஒரு புதிய வெளிச்சத்தைக் கொடுத்தன. தன் காயங்களைக் காரணம் காட்டி, இன்னொரு ஜீவனின் வலியைப் புறக்கணிப்பது சரியாக இருக்காது என்று உணர்ந்தவன்.. "நிச்சயமா டாக்டர்... என்னால முடிஞ்ச அளவுக்கு அவளை இந்தத் துயரத்துல இருந்து மீட்டு எடுக்க முயற்சி செய்றேன்," என்று உறுதியாகக் கூறினான்.

அதன் பின் வெளியே வந்த கௌதம், அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்து கைகளைக் கோர்த்தபடித் தரையைப் பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவைக் கண்டான். அவள் முகம் சற்றுத் தளர்வாக இருந்தாலும், இன்னும் ஏதோ ஒரு கலக்கம் அங்கே மிச்சமிருந்தது.

அவள் அருகில் சென்றவன், "போலாமா பவித்ரா?" என்று மென்மையாகக் கேட்க, அவள் நிமிர்ந்து அவனது கண்களைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் இருந்த கேள்விகளுக்கு அவனது சிறு புன்னகையே பதிலாக அமைந்தது. இருவரும் மருந்துகளை வாங்கிவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது, மாலை நேரத்து மெல்லிய காற்று அவர்கள் இருவரையும் வருடிச் சென்றது. அது வெறும் காற்று மட்டுமல்ல, அவர்களது வாழ்க்கையில் வீசப்போகும் ஒரு புதிய வசந்தத்திற்கான அறிகுறியாகவும் இருந்தது.

"எதாவது சாப்பிடலாமா?" காரில் ஏறிக்கொண்ட கௌதம் மெல்லக் கேட்க, பவித்ரா "ம்ம்..." என்று மட்டும் தலையசைத்தாள்.

அடுத்த ஓரிரு நிமிடங்களில் நகரின் ஒரு பெரிய ஹோட்டலின் முன்பு அவன் காரை நிறுத்தினான். உள்ளே சென்றவர்கள், சற்று அமைதியான ஒரு மூலையில் இருந்த இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தனர். அந்த ஹோட்டலின் மிதமான வெளிச்சமும், பின்னணியில் ஒலித்த மெல்லிசையும் பவித்ராவின் படபடப்பைக் கொஞ்சம் குறைத்தது.

இருவரும் அமர்ந்ததும், பவித்ரா மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவளுக்குள் நெடுநேரமாகக் குடைந்து கொண்டிருந்த கேள்வியை கேட்காமல் இருக்க முடியாமல்.. "டாக்டர் உங்களைத் தனியா கூப்பிட்டு என்ன சொன்னாங்க?" என்று மெல்லிய குரலில் வினவினாள்.

அவளைத் தீர்க்கமாகப் பார்த்தவன், "உனக்கு இருக்கிறது வியாதி இல்ல பவித்ரா, இது ஒரு சின்ன மன அழுத்தம் தான். காயம்பட்ட மனசு ஆற கொஞ்சம் காலம் எடுக்கும்னு சொன்னாங்க," என்று கௌதம் அவளது கண்களை நேராகப் பார்த்து நிதானமாகக் கூறியவன்.. "அது மட்டும் இல்ல நீ ரொம்ப தைரியமான பொண்ணுன்னும் சொன்னாங்க, இவ்வளவு கஷ்டங்களையும் தாண்டி நீ இப்போ இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறதே பெரிய விஷயம்னு சொன்னாங்க, இனிமே அந்தப் பழைய நினைவுகளை நினைச்சு நீ உன்னை வருத்திக்க வேண்டாம். நான் உன்கூடவே இருப்பேன்," என்றான்.

அந்த ஹோட்டலின் சலசலப்பிற்கு நடுவே, கௌதமின் இந்த வார்த்தைகள் பவித்ராவின் காதுகளில் தேன் போலப் பாய்ந்தன. மேலும் அவன்.. "என்கிட்ட நீ எதையும் மறைக்க வேண்டாம் பவித்ரா. உனக்கு எதை நினைச்சாவது பயமா இருந்தா என் கிட்ட மறைக்காம சொல்லு, அழுகை வந்தா அழு... ஆனா எதையும் உள்ளேயே வச்சு பூட்டி வைக்காதே. நாம முதல்ல ஒரு நல்ல நண்பர்களா இருப்போம். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முயற்சி செய்வோம். மத்ததெல்லாம் தானா நடக்கும்," என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சர்வர் வந்து மெனு கார்டை நீட்டினார்.

"உனக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியாது... இன்னைக்கு நீயே ஆர்டர் பண்ணு," என்று அவன் மெனு கார்டை அவளிடம் நகர்த்திட, அவளும் மெனு கார்டைத் திருப்பிப் பார்த்தாள். இதுவரை யாரோ ஒருவரின் விருப்பத்திற்காகவே வாழ்ந்து பழகியவளுக்கு, 'உனக்கு என்ன பிடிக்கும்?' என்று ஒருவன் அக்கறையாகக் கேட்டது அவளுக்குள் ஒரு சிறிய மலர்ச்சியை ஏற்படுத்தியது.

அவள் தனக்கும் அவனுக்கும் பிடித்தமான உணவை ஆர்டர் செய்துவிட்டு
ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையுடன் கௌதமை நிமிர்ந்து பார்த்து... "என்னால உங்களுக்குத் தேவையில்லாத தொந்தரவு இல்லையா?" என்று மெல்லிய குரலில் கேட்க, கௌதம் ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு அவளது கண்களை ஆழமாக நோக்கி.. "எதுக்கு அப்படி நினைக்கிற பவித்ரா? உண்மையை சொல்லப்போனா, நீ என் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் என் வீட்ல உள்ளவங்களோட முகத்துல அந்தப் பழைய சிரிப்பையும் சந்தோஷத்தையும் பார்க்கிறேன். என் வாழ்க்கையில நடந்த கசப்பான விஷயங்களால அவங்க நிறைய கஷ்டங்களை அனுபவிச்சிட்டாங்க. என் மௌனம் அவங்களையும் ரொம்பப் பாதிச்சிருந்தது.

முதல்ல எனக்கு இன்னொரு கல்யாணமே வேண்டாம்னுதான் தோணுச்சு. அந்த அளவுக்குக் கடந்த காலம் என்னை சிதைச்சிருந்தது. ஆனா, இப்போ நான் ஒரு சரியான முடிவைத்தான் எடுத்திருக்கேன்னு தோணுது. நீ வந்த பிறகுதான் எங்க வீடே ஒரு உயிர்ப்போட இருக்கு. அதனால தயவுசெஞ்சு உன்னை தொந்தரவுன்னு மட்டும் இனிமே சொல்லாத," என்று அவன் அழுத்தமாகத் தெரிவித்தான்.

கௌதமின் அந்தப் பேச்சு பவித்ராவின் மனதிற்குள் இருந்த ஒரு பெரும் பாரத்தை இறக்கி வைத்தது போல இருந்தது. தான் ஒரு சுமை இல்லை, ஒரு மகிழ்ச்சியின் ஊற்று என்ற எண்ணம் அவளுக்குள் முதல்முறையாகத் தோன்றியது.

"உங்ககிட்ட நான் ஒன்னு கேட்கலாமா?" என்று பவித்ரா தயக்கத்துடன் கேட்க, "ம்ம்... கேளு," என்றான் அவன்.

"உங்க கடந்த காலத்தைப் பத்தி என்கிட்ட சொல்லவே இல்லையே" அவன் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி மேலோட்டமாக தெரிந்தாலும், அவன் எதுவும் சொல்லவில்லையே என்ற எண்ணத்தில் வினவ, கௌதம் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு, "நிச்சயம் சொல்றேன் பவித்ரா. ஆனா அதுக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேணும். இப்போதைக்கு நாம இந்த நேரத்தை என்ஜாய் பண்ணுவோமே," என்று சொல்லிவிட்டு, பரிமாறப்பட்ட உணவை அவளுக்குப் பரிந்துரைத்தான்.

அன்று அந்த ஹோட்டலில் அவர்கள் பகிர்ந்து கொண்ட உணவு, வெறும் பசியை மட்டும் தீர்க்கவில்லை மாறாக இரு காயம்பட்ட இதயங்களுக்கு இடையேயான நம்பிக்கைப் பாலத்தை பலப்படுத்தியது. இருவரும் அங்கிருந்து கிளம்பும்போது, இருவருக்குள்ளும் இருந்த அந்த அன்னியத்தன்மை கொஞ்சம் மறைந்து, ஒரு மெல்லிய இணக்கம் குடியேறியிருந்தது.

வீட்டிற்குச் செல்லும் வழியில் கௌதம் மெல்லிய பாடலை ஒலிக்கச் செய்ய, பவித்ரா அமைதியாக நிலவைப் பார்த்தபடி வந்தாள். இன்று அவளுக்குப் பிடித்தமான ஒரு பாடல் காற்றில் கரைந்து வர, அவளது உதடுகள் மெல்ல முணுமுணுத்தன. அவளது அந்த சிறிய மாற்றத்தை கவனித்த கௌதமிற்கு, 'பவித்ராவைக் குணப்படுத்தி விடலாம்' என்ற நம்பிக்கை இன்னும் அதிகமானது.

இருவரும் வீட்டினுள் நுழைய ஜானகியும் சரண்யாவும் ஹாலில் தான் இருந்தனர். பவித்ராவின் முகம் முன்பை விட இன்று தெளிவாக இருப்பதைக் கண்ட அவர்களுக்குள் ஒரு பெரிய நிம்மதி ஏற்பட்டது. இருவரும் சிரித்துக் கொண்டே உள்ளே செல்வதைப் பார்த்த ஜானகி, மனதாரக் கடவுளுக்கு நன்றியும் சொல்லிக் கொண்டார்.

 
Top Bottom