உலா வரும் வெண்ணிலா
அத்தியாயம் 24 இறுதி அத்தியாயம்
அன்னை மடியினில் சாய்ந்து அப்படி ஒரு அழுகை அஞ்சனாவிடம். ஏனென்று பலமுறை அவர் கேட்டும் பதில்லை.
என்னவோ நினைத்து அழுகிறாளா இல்லை தலைவலியா என பயமே வந்துவிட்டது ராஜேஸ்வரிக்கு.
"அண்ணனுக்காவது கூப்பிடுறேன் அஞ்சனா. எனக்கு பயமா இருக்கு!" என அவர் சொல்லியும் அழுகை மட்டும் கட்டுப்படவே இல்லை அவளிடம்.
மூன்று நாட்களாகிரது அவளுக்கு நினைவு திரும்பி. அதன் காரணத்தால் தான் அவளுக்குண்டான தலைவலி அதிகமாகியதே.
அதை யாரிடம் என்னவென்று பகிர என்று தெரியாமல் தான் இருந்தாள். அதிரனை வேண்டாம் என்று சொல்லியது விபத்து நடந்தது இந்த ஊரில் குடிவந்தது என எல்லாமே அவளுக்கு புரிந்தது.
அடுத்து அவளுக்கு வேலை சென்றது முதல் அதிரன் அங்கே வந்ததும் தான் அவனிடம் பேசி பழகியதும் அவனுடன் அமர்ந்து உண்பதும் என ஒவ்வொன்றும் தனக்கு நினைவில் வர, எது உண்மை எது பொய் என்றே அவளுக்குள் பெரும் போராட்டம்.
எதுவுமே பொய்யில்லை. அனைத்துமே நிஜம். அவளுக்காகவே அதிரன் வந்திருக்கிறான். அவளுக்காவே அவன் இந்த நொடி வரை காத்திருக்கிறான் என மருத்துவமனையில் அவனைக் கண்டதுமே புரிந்து கொண்டாள்.
அதை ஏற்க முடியுமா? எப்படி அதிரன் இங்கே வந்தான். தான் எப்படி அவனுடன் பணிபுரிந்தேன் என்ற கேள்விகளுக்கு விடையாய் காலை ஐந்து மணிக்கு கண்ணனுக்கு வந்த அழைப்பு பதிலாகி இருந்தது.
கண்ணன் தான் அதிரன் இங்கிற தன்னை தேடி வந்து தனக்காக அவன் செய்த அனைத்திற்கும் உதவி இருக்கிறான் என புரிந்த நொடியே அப்படி அழுது கரைந்திருந்தாள் யாரும் காணாமல்.
இப்பொழுது நினைக்கவே செய்யாத எழிலரசி தனக்கு முன் வந்து நின்று அனைத்தையும் நியாபகத்திற்கு கொண்டு வந்து அவரை பேசி திட்டி என அவள் கொஞ்சம் இலகுவாக்க எடுத்துக் கொண்ட நேரத்தில் அதிரனே தன்முன் வந்து நிற்பான் என நினைக்கவே இல்லை அவள்.
அதுவும் ஒரு வார்த்தை தன்னிடம் பேசாமல் போ என்றுவிட்டானே என்று வேறு மனது குமுற, பதில் பேசவும் தேடவும் முடியாமல் அன்னையிடம் அழுது கொண்டிருக்க, அடுத்த அரை மணி நேரத்தில் எல்லாம் வந்து சேர்ந்துவிட்டான் கண்ணன்.
"கண்ணா!" என்ற ராஜேஸ்வரி அழைப்பில் தான் அவனைக் கண்ட அஞ்சனா எழ,
"அஞ்சனா!" என கண்கள் கலங்க அவன் அழைத்த விதமே அதிரன் சொல்லி தான் வந்திருக்கிறான் என புரிந்துவிட்டது அவளுக்கு.
"அண்ணா!" என அவனையும் கட்டிக் கொண்டு அவள் அழுகையை தொடர, எதுவும் புரியாமல் ராஜேஸ்வரி நின்றவர்,
"கண்ணா! ஆபீஸ் போனியே! என்னாச்சு? எப்படி வந்த? அஞ்சனா போன் எதுவும் பண்ணினாளா? இப்படி தான் கோவில்ல இருந்து வந்ததில இருந்து வந்து அழுதுட்டே இருக்குறா டா!" என ராஜேஸ்வரி சொல்ல, கண்ணன் கண்கள் எல்லாம் கலங்கி நின்றதை அப்பொழுது அவர் கவனிக்கவில்லை.
"ஒண்ணுமில்ல டா. எல்லாம் சரியாகிடுச்சு!" என அஞ்சனா தலைகோதி கண்ணன் சொல்ல, அவள் கதறல் அடங்க ரொம்பவே நேரமெடுத்தது.
"என்ன கண்ணா?" என ராஜேஸ்வரி புரியாமல் மீண்டும் மீண்டும் கேட்க,
"ம்மா! அஞ்சனாக்கு எல்லாமே நியாபகம் வந்துடுச்சு!" என்றான் கண்ணன் சந்தோஷமும் கண்ணீரும் சேர்ந்த குரலில்.
ராஜேஸ்வரிக்கு அது புரிந்து உணர்வுக்கு வரவே நேரம் பிடித்திருக்க, "நிஜமாவா?" என மகனைப் பார்த்தவர்,
"அஞ்சனாம்மா!" என அவளை அழைக்க,
"ம்மா!" என அன்னையை கட்டிக் கொண்டாள்.
ஒரு நிலைக்கு வரவே சில நிமிடங்கள் எடுத்து சந்தோஷமும் நிம்மதியுமாய் மூவரும் அமைதியாகி இருக்க,
"ரொம்ப பயந்துட்டோம் டா. ஆனா அப்பவே நினைச்சேன் இவ்ளோ தலைவலியோடவும் நீ சட்டுனு அமைதியாகிட்ட மாதிரி இருந்துச்சு. நியாபகம் வந்துடுமோனு தான் நினைச்சேன். வந்திடுச்சோனு நினைக்கவே இல்ல!" என்று கண்ணன் புன்னகைக்க,
"நீ காலைல கூட எதுவும் சொல்லாம தானே ஆபீஸ் கிளம்பின கண்ணா? உனக்கு எப்படி தெரியும்? எப்படி திடீர்ன்னு வந்த? கோவில்ல அஞ்சனா போன் பண்ணினாளா?" என ராஜேஸ்வரி கேட்க, அஞ்சனா தயங்கி தயங்கி அண்ணனைப் பார்க்க, அவனும் அஞ்சனாவை தான் கண்டான்.
இதற்கு மேல் என்ன மறைக்க என்று நினைத்து ஒரு பெருமூச்சைக் கொடுத்தவன், "அதி கால் பண்ணினான் ம்மா!" என்று சொல்லவும் தலையை தாழ்த்தி அமர்ந்து கொண்டாள் அஞ்சனா.
அன்னை இதை எப்படி எடுத்துக் கொள்வாரோ என அவள் நினைக்க, கண்ணன் முழுதாய் அதிரன் கூறியதை கூறினான் தங்கை பேசியதை கொஞ்சமாய் மட்டும் சொல்லி.
"அதிரன் நல்ல பையன் தான். ஆனா இத்தனை வருஷமாகியும் அந்தம்மா இன்னும் அப்படியே தான் இருக்கு. இதுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும் கண்ணா?" என்றவருக்கு அதை திடமாய் சொல்ல முடியவில்லை.
இதோ மகள் எண்ணம் இப்பொழுதும் புரிகிறதே! அன்றைய போல இன்றும் எதிர்த்து நின்றுவிடலாம். ஆனால் இத்தனை வருடம் அதிரன் காத்திருந்த செயல் கூடவே மகளின் மனது என புரிந்த பின் முழுதாய் எற்கவும் மறுக்கவும் முடியாத நிலை தான் அவருக்கு.
"இல்லம்மா!" என வெகுவாய் தயங்கிய கண்ணன்,
"நான் அதிகிட்ட பேசினேன். அதி இப்ப வீட்டுக்கு வர்றதா சொன்னான்!" என்றதும் கண்டிப்புடனான பார்வை அவர் பார்க்க,
"ப்ளீஸ் ம்மா. அவனும் அஞ்சனா மாதிரி ரொம்பவே கஷ்டப்பட்டுட்டான்!" என்றான் கண்ணன்.
அடுத்து என்ன என இவர்களுக்குள் பேசிக்கொள்ளும் முன் அதிரனின் வரவு.
அவனைக் கண்டதும் கண்கள் வலியையும் மகிழ்ச்சியையும் சேர்த்தே காண்பிக்க, அன்னை அருகே சென்று நின்றாள் அஞ்சனா.
"ம்மா!" என அதிரன் ராஜேஸ்வரியை அழைக்க, அவருக்குமே இப்படி கெஞ்சலாய் தன் முன் வந்து நின்றவனைக் கண்டு கண்கள் கலங்கியது.
"அன்னைக்கு உங்களை அந்த நிலைமைல தள்ளினது நான் தான் என் மேல உங்களுக்கு கோபம் இருக்கும் தான். ஆனா அது எனக்கே தெரியாம நடந்ததும்மா. ப்ளீஸ்!" என்றவன் கெஞ்சலில்,
"உன்னை யாரு டா இப்ப தப்பு சொன்னாங்க?" என்றார் ராஜேஸ்வரி. முகத்தில் அத்தனை முறைப்பு. ஆனால் கேள்வியில் அதில்லை என்றதும் அதிரன் பார்த்தது பார்த்தபடி இருக்க,
"நான் என்ன என் பொண்ணும் உன்னை உன் அம்மா அப்பாகிட்ட வேண்டாம்னு ற் சொல்லிட்டு வந்தா. ஆனா இங்க என்ன நடக்குது? இத்தனை வருஷம் போயும் இப்படி நிக்கிறீங்க என் முன்னாடி ரெண்டு பேரும்! இப்ப நான் என்ன பண்ணனும்?" என்றவர் கண்களில் கண்ணீர் வடிந்தது.
"நான் உங்ககிட்ட பொய் சொல்லி இருக்க கூடாது. என் அம்மா அப்பா சம்மதம் சொன்னதா நான் சொன்னது தப்பு தானே? ஆனா அதை நான் வேணும்னு சொல்லல. எப்படியும் சம்மதம் வாங்கிடுவேன்னு அத்தனை நம்பினேன். என் நம்பிக்கைக்கு எல்லாம் அப்பாற்பட்டு தான் அவங்க இருப்பாங்கனு எனக்கு தெரியாம போச்சு ம்மா!" என்றவன் இப்பொழுது அஞ்சனாவையும் யாசிக்கும் பார்வை பார்க்க, கண்ணீருடன் தலையசைத்தாள் அவள்.
"அதி! இப்படியெல்லாம் நடக்கும்னு நீ மட்டும் நினைச்சியா என்ன? விடு!" கண்ணன் சொல்ல,
"உள்ள கூப்பிடுங்க ம்மா!" என்றான் கண்ணன். அனைவருமே வெளியில் முற்றத்தின் முன்பக்கத்தில் இருக்க, கண்ணன் சொல்லவும் தான் ராஜேஸ்வரியும்,
"உள்ள வா!" என்று அழைத்து சென்றார்.
"எனக்கு அஞ்சனாவை தருவீங்களா ம்மா?" அழைத்துவிட்டு உள்ளே செல்லும் ராஜேஸ்வரியை கண்டு அதிரன் கேட்டுவிட, கண்கள் அகல அசையாமல் நின்றாள் அஞ்சனா.
ராஜேஸ்வரி திரும்பிப் பார்த்தவர் பதில் கூறாமல் நிற்க,
"நான் நல்லா பார்த்துப்பேன். இனி தனியா விட மாட்டேன். உங்களையும் தான். என் கண்ணுக்குள்ள வச்சுக்குறேன்!" என அதிரன் சொல்ல, கண்ணனும் அன்னையை தான் பார்த்தான்.
இத்தனை சிரமங்களுக்கு பிறகு அன்னையின் எண்ணம் என்னவாய் இருக்கும் என அவன் நினைக்க,
"அஞ்சனாகிட்ட நான் உன்னை வேண்டாம்னு சொன்னா அஞ்சனா சரினு சொல்லுவாளா அதி?" என எதிர்கேள்வி கேட்டார் அவர்.
நிச்சயம் மாட்டாள் என தெரியுமே அவனுக்கு. மறுப்பாய் அவன் தலை அசைய, "என்னை வேண்டாம்னு சொன்னா ஏத்துக்க மாட்டா. ஆனா உங்க விருப்பத்தை மீறி என்னை ஏத்துக்கவும் மாட்டா!" என்றான் சிறுபுன்னகை கொண்டு.
கண்ணனுக்கும் அதில் மெல்ல இதழ்கள் வளைய,
"எனக்கும் அது தெரியும். அவ இஷ்டம் என்னனு தெரிஞ்ச பின்னாடி நான் என்ன பண்ண முடியும்? ஆனா உடனே அஞ்சனாவை கேட்டா? எப்படி தர? உன் அம்மா அப்பா?" என்று சொல்லும் பொழுதே அவர் முகத்தில் ஒரு
இறுக்கம்.
"அவங்க பையனா போய்ட்டேன். அதுக்காக உங்க கால்ல விழுந்து கேட்குறேன்!" என விழுந்துவிட்டவன்,
"அவங்க பேசின ஒவ்வொரு வார்த்தைக்கும் என்னை மன்னிச்சிடுங்க ம்மா!" என்று சொல்ல, அஞ்சனா வெடித்து அழுதுவிட்டாள்.
"போடா நீ!" என தூக்கி நிறுத்தி தோளில் ஒரு அடியும் அவர் வைக்க,
"அஞ்சனா தான் எனக்கு எல்லாம். அவ கண் பார்வைல வாழ்ந்தா போதும்னு தான் இவ்வளவும்..." என்ற அதிரன்,
"இன்னைக்கு அம்மாகிட்ட அவ பேசும் போது...." என கூற வந்தவன்,
"ம்மா!" என்று சட்டென அழைக்கவும் அவர் என்னவென்று பார்க்க,
"கண்ணா!" என கண்ணனையும் அழைத்து,
"நான் அஞ்சனாவை கம்பெனிக்கு கூட்டிட்டு போகவா?" என்றான் உடனே.
"இப்பவா?" கண்ணன் கேட்க,
"இன்னைக்கு வேண்டாமே அதி!" என்றார் ராஜேஸ்வரியும்.
"அஞ்சனாவை கல்யாணம் பண்ணிக்க போறவன் கேட்குறேன். தருவிங்க தானே?" என்று கேட்டவன் தோரணையில் மனம் நெகிழ,
"அதென்ன டா கம்பெனிக்கு?" என்றான் கண்ணன்.
"அதை போய்ட்டு வந்து சொல்றோம். நீ போய் கல்யாணத்துக்கு நாள் பாரு!" என்ற அதிரன்,
"நிச்சயமா என் அம்மா அப்பா கல்யாணத்துக்கு வருவாங்க. ஆசீர்வாதம் பன்றாங்களோ இல்லையோ! ஆனா அவங்களுக்கு தெரியணும் என் வாழ்க்கை என்னனு. பார்க்கட்டுமே!" என்று சொல்லியவன்,
"சனா!" என்று அழைக்க, இதோ வருடங்கள் கடந்து அவன் அழைப்பு அவளுக்கு.
நிமிர்ந்து பார்த்தவள் முகத்தில் அத்தனை வெளிச்சம் அவன் அழைப்பில்.
அன்னையை திரும்பி அவள் பார்க்க, "பத்திரமா போய்ட்டு வா!" என்றார் அவரும்.
"ம்மா!" என கண்ணன் கேட்டும்,
"கொஞ்ச நேரம் முன்னாடி என்ன அழுகை அழுதா? இப்ப பார்த்தியா? இந்த முகத்துக்காக என்ன வேனா பண்ணலாமே கார்த்தி. அவ சந்தோஷம் போதுமே எனக்கு!" என்ற ராஜேஸ்வரி அன்பில் அவரை அணைத்துவிட்டு அதிரன் காரில் ஏறிக் கொண்டாள் அஞ்சனா.
காரில் அமைதியாய் வந்தவனை பார்த்துக் கொண்டே அஞ்சனா வர, அவள் கைப்பிடித்து கம்பெனியுள்ளே அழைத்து வந்தான் அதிரன்.
"பார்றா!" என்ற தாமஸ் கண்கள் ஆச்சர்யம் காண்பிக்க,
"இவனை தெரியும் தானே உனக்கு?" என்றான் அதிரன் அஞ்சனாவிடம்.
"ஹெலோ! என்ன நடக்குது இங்க? என்னை தெரியும் நீங்க தான் யாரோ அவளுக்கு!" என தாமஸ் குறுகுறுவென அஞ்சனாவைப் பார்க்க,
"யாரு நான் யாரோவா?" என்ற அதிரன்,
"கல்யாணம் பண்ணிக்கலாம் சனா?" என்று அவன் முன்னேயே கேட்க, அவள் அதிர்ந்து விழிக்க,
"புரிஞ்சு போச்சு! அப்போ இது அஞ்சனா இல்லையா சனாவா?" என தாமஸ்ஸும் கிண்டல் செய்ய,
"போ டா டேய்!" என்று அவனை தள்ளிவிட்டு தன் தனிப்பட்ட அறைக்குள் அவளை அழைத்து வந்தான் அதிரன்.
"என்ன சாப்பிடுற சனா? காபி டீ?" என கேட்க, தலையசைத்தவள்,
"எதுக்காக? எனக்காகவா?" என அந்த இடத்தை சுற்றிலும் பார்க்க,
"ம்ம்ஹும்! எனக்காக. எனக்கு வேணும்ன்றதுக்காக!" என அவளருகில் நெருங்கினான் அதிரன்.
"எவ்வளவு கஷ்டப்பட்டிருப்ப? என் பேரெண்ட்ஸ் வார்த்தை ஒரு பக்கம். உலகமே தெரியாம புதுசா ஒரு உயிரா இத்தனை நாளும்? என்னனு டி தாங்கின?" என அவள் கன்னம் தாங்கினான்.
"என் அம்மா அப்பா எவ்வளவு முக்கியமோ அவ்வளவு நானும் முக்கியம்னு சொன்னியே அஞ்சனா? அப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா எனக்கு? உனக்கு எல்லாம் நியாபகம் வந்துடுச்சுன்னு புரிஞ்ச நொடி எல்லாம் நான் ஃப்ரீஸ் ஆகிட்டேன் டா!" என சொல்ல, அவன் கைகளில் நடுக்கமும் குரலில் மகிழ்ச்சியும் என உணர முடிந்தது அஞ்சனாவிற்கு.
"அதுவும் அவங்ககிட்ட நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும்.... ஓஹ் மை காட்! அவ்வளவு பிடிக்குமா சனா உனக்கு என்னை? அப்படி நான் என்ன பண்ணிட்டேன்? எந்தெந்த நேரத்துல எல்லாம் உன் கூட இருக்கனுமோ அப்ப எல்லாம் நான் உன்னை தனியா தவிக்க விட்டேனே தவிர்த்து அப்படி என்ன செஞ்சிட்டேன் நான் உனக்கு?" என அவள் கண்ணம் தாங்கி தன் முகம் பார்க்க வைத்து கேட்டவன் செயலில்,
"என்னை எனக்காக விரும்பின அதியை எப்படி நான் விட்டு குடுப்பேன் நினைச்சீங்க?" என்றாள் ஒரே வார்த்தையாய்.
நெக்குருகிப் போனான் அதிரன் அதில். எனக்கு எல்லாமா அதி தான்னு நீங்க தான் அடிக்கடி முன்ன சொல்லுவீங்க. இத்தனை வருஷத்துல நான் தான் எல்லாத்தையும் மறந்தேன். ஆனா நீங்க? என்னை மறக்கலையே? வேற என்ன வேணும் எனக்கு? " என்றவள் தன் கன்னம் தாங்கி இருந்த அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
"எனக்கு கொஞ்சம் கொஞ்சமா நியாபகம் வந்தப்ப நான் என்ன நினைச்சேன் தெரியுமா? எல்லாமே கனவுன்னு தான் நினச்சேன். ஏன் அதிரன் சாரை இப்படியெல்லாம் நினைக்குறோம் நாமனு ரொம்ப பயந்துட்டேன். என் நினைப்பு தப்புன்னு என்னை நானே அடிச்சுகிட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சது. அதெல்லாம் உண்மையா நடந்ததுன்னு. அதி யார்னு தெரிஞ்சதும் என்னால அந்த அதிரனையும் இந்த அதிரனையும் நினைச்சு அதிர்ச்சில பேச்சே வரல. எனக்காக நீங்க என்னவெல்லாம்? இதுக்கு நான் என்ன கைமாறு செய்ய போறேன்? எதுக்காக இப்படி எல்லாத்தையும் விட்டு வரணும்?" என்று அவன் முகம் பார்த்து கலங்கி நின்றவள்,
"இப்படி எனக்குள்ள ஆயிரம் கேள்வியோட இருந்த என்னை தேடி வந்து உங்க அம்மா உங்களை விட்டுட சொல்றாங்க. எப்படி விடுவேன்? விட தான் முடியுமா? உங்க கூடவே இருந்து உங்களை எப்படி பார்த்துக்கணும் நான்?" என்றாள் அவன் கைகளால் தன்னை இறுகப் பற்றி.
"அப்போ நான் என்ன பண்ணினாலும் சரி? இல்ல?" என அவள் எண்ணத்தை மாற்ற என குறும்பாய் புன்னகைத்து அதிரன் கேட்க,
"என்ன பண்ணினாலும் அதிரன் சரியா தான் பண்ணுவாங்க!" என்றாள் புரிந்தவளும்.
"செக் பண்ணி பார்க்கணுமே!" என்றவன் கைகள் கன்னம் தாண்டி நழுவ, அவன் உணர்வுகளை சுமந்து பார்த்த நேரம் அவனிடம் இருந்து நழுவி இருந்தாள் அஞ்சனா.
"கல்யாணத்துக்கு நாள் குறிக்கட்டும்!" என்று புன்னகைத்து கண் சிமிட்டி.
இதோ அவர்களின் வாழ்க்கை அவர்களின் கண்முன் பிரகாசமாய்.
சுபம்.
Author: Vishakini
Article Title: உலா வரும் வெண்ணிலா - 24 ( இறுதி அத்தியாயம் )
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உலா வரும் வெண்ணிலா - 24 ( இறுதி அத்தியாயம் )
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.