• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு - 5

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-5


ரவியின் நிச்சயத்திற்கு நெருங்கிய குடும்பத்தார் மட்டுமே கலந்து கொள்வதால், கவி தன்னுடைய வீட்டிலேயே சமைத்து உணவைக் கொண்டுவருவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதனால் வீட்டிலேயே சமைத்தவள், ஸ்கூட்டியில் கொண்டு வர முடியாததால், அவளுடைய நண்பனும் நலன்விரும்பியுமான ராஜ் அண்ணாவை அழைத்தாள்.

அங்கே அழைப்பு எடுக்கப்பட்டதும், "ராஜண்ணா, நான் கவி பேசுகிறேன். எப்படி இருக்கிறீர்கள்?" என்றதும், "ஹேய் கவி..! இது என்ன அதிசயம்? இந்த அண்ணாவையும் நினைவு வைத்து அழைத்திருக்கிறாயே. இன்று மழை கொட்டோ கொட்டென்று கொட்டப்போகிறது.." என்று பாசம் பொங்கும் குரலில் கேலி பேசினான் ராஜ்.

"அண்ணா…! கேலி செய்யாதிர்கள்.." என்று சிணுங்கியவள், "சரிதாவும் குட்டியும் சுகமாக இருக்கிறார்களா அண்ணா...?" என்று விசாரித்தாள்.

"நாங்கள் எல்லோரும் நலம் கவி. உன் வீட்டு ஜான்சி ராணி எப்படி இருக்கிறாள்...? நீ எப்படி இருக்கிறாய்?"

"நாங்கள் நலம் அண்ணா. அண்ணா, அது.... எனக்கொரு உதவி வேண்டுமே உங்களிடம் இருந்து...." தயங்கியபடி கேட்டவளிடம், "எதற்கு இந்த தயக்கம் கவி? நான் உன் அண்ணா! என்னிடம் எதைக் கேட்பதற்கும் நீ யோசிக்கத்தேவை இல்லை. இப்படி நீ தயங்கித் தயங்கிக் கேட்பது எனக்கு வருத்தத்தை கொடுக்கிறது..." என்றான் ராஜ்.

"அது அண்ணா.. தயக்கம் இல்லை. என் வாழ்வில் நீங்கள் செய்த உதவிகள், இந்த ஜென்மத்தில் மட்டும் அல்ல எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் என்னால் தீர்க்க முடியாத நன்றிக்கடன் அண்ணா. அதனால்.." என்றவளின் குரல் கலங்கி நெகிழ்ந்து கரகரத்தது.

"அதனால் இன்னும் உதவிகள் கேட்கக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அவ்வளவுதான்..." என்றாள் தொடர்ந்து.

பின்னே, இன்று கவியும் பாவையும் உயிருடன் இருப்பதற்குக் காரணம் ராஜ்! அவள் தனக்கென்று ஒரு தொழிலைச் செய்கிறாள் என்றால் அதற்கு காரணம் அவன்! தைரியத்தோடும் நிமிர்வோடும் இன்றைய உலகில் கணவன் என்கிற ஆண்மகனின் துணை இல்லாமல், கலங்காது நடமாடுகிறாள் என்றால் அதற்கும் காரணம் அவனே!

"என் தங்கைக்கு நான் செய்வதில் எனக்கு யாரும் நன்றிக்கடன் செய்யத்தேவையும் இல்லை, அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை." கொஞ்சம் கோபம் கொண்ட குரலில் பதில் வந்தது ராஜிடம் இருந்து.

"அண்ணா....!?!" என்ரவளுக்குக் குரல் அடைத்தது. கவி உணர்வுகளைக் கொட்டும் இடம் அவன் மட்டுமே. எல்லோரிடமும் இரும்பாக இருக்கும் அவளால் ராஜிடம் அப்படி இருக்க முடிவதில்லை.

இன்றுவரை என்ன நடந்தாலும் எதையும் திடமாக எதிர்கொள்ளும் கவி உள்ளத்தைத் திறந்து சிரிப்பதும், உடைந்து அழுவதும், செல்லம் கொஞ்சுவதும், உரிமையாக சண்டையிடுவதும் ராஜிடம் மட்டுமே!

அப்படியானவனின் சின்னக்கோபத்தை கூட தாங்கும் சக்தி இல்லாது, "அண்ணா, நான் பேசியது தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள்..." என்றாள்.

"இன்று நீ என்னிடம் நன்றாகத் திட்டு வாங்கப்போகிறாய். நன்றி என்கிறாய். தயங்கித்தயங்கி உதவி கேட்கிறாய். என்னம்மா இது? உன் அண்ணாவை வேதனைப்படுத்தாதே.. சரிதானா?" அவளின் கலங்கிய குரலில் இருந்தே கவியின் மனநிலையை உணர்ந்த ராஜ், கொஞ்சம் தன்மையாகச் சொன்னான்.

"சரியண்ணா.” என்று உடனேயே ஒத்துக்கொண்டவள், “அண்ணா, நான் வழமையாக வாடகைக்குப் பிடிக்கும் வாகன ஓட்டுனர் இன்று வரமுடியாதாம். அதனால் நீங்கள் வரமுடியுமா உங்கள் வாகனத்தோடு? இன்று ஒரு திருமண நிச்சய விழாவுக்கு உணவு கொண்டுபோய்க் கொடுக்கவேண்டும். இதைக் கேட்கத்தான் அழைத்தேன்..." என்று அவசரமாகப் பேச்சை மாற்றினாள்.

மறுபடியும் எதையாவது உளறி அவனை கோபப்படுத்துவதைத் தவிர்க்க, எதைக் கேட்க அவனைக் கூப்பிட்டாளோ அதைக் கேட்டாள்.

தனது கோபத்தை மறந்தவன், எத்தனை மணிக்கு வரவேண்டும் என்பதை கேட்டுவிட்டு, பாவையுடனும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தான்.

சொன்ன நேரத்துக்கு ராஜ் வந்துவிடவும், கவியும் பாவையும் ஸ்கூட்டியில் வர, வீடு தெரியாததால் ராஜ் தனது நான்கு சக்கர வாகனத்தில் உணவுடன் கவியின் ஸ்கூட்டியைப் பின் தொடர்ந்து வந்தான்.

நந்தனின் வீட்டில் சாந்தியும் இருப்பாள் என்பதால் பாவையும் கவியுடன் தொற்றிக்கொண்டாள்.

நந்தனின் வீட்டு வாசலில் ஸ்கூட்டியை நிறுத்திய கவி, "ராஜண்ணா, இதுதான் வீடு. நான் முன்னால் சென்று உணவை எங்கே வைப்பது என்று கேட்டு வருகிறேன். நீங்கள் எல்லாவற்றையும் கவனமாக இறக்கி வைக்கிறீர்களா...?" கொஞ்சம் தயக்கமாகக் கேட்டவளிடம், "நீ கேட்டுவா கவி. நான் இறக்கி வைக்கிறேன்..." என்றான் ராஜ்.

"சரிண்ணா..." என்றவள், பாவையுடன் வீட்டிற்குள்ளே நடந்துவந்த போதே ரவி அவளைப் பார்த்தான்.

அந்த வீட்டின் பக்கவாட்டில் உள்ள தோட்டத்தில் இருந்து, ஒருவன் தன்னை உற்றுப்பார்ப்பதையோ, அவன் கண்களில் சுழன்ற கோபத்தையோ உணராத கவி, "அம்மா, சாந்தி ஆன்ட்டி நிற்பார்கள் தானே...?" என்ற மகளின் கேள்விக்கு, "உன் ஆன்ட்டி நிச்சயம் நிற்பாள் பாவை. நந்தன் மாமாவின் நண்பரின் நிச்சயத்துக்கு ஆன்ட்டி வராமல் இருப்பாளா? ஆனால், நீ அங்கே அதிக நேரம் நிற்கக் கூடாது. சாந்தியுடன் சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்துவிட்டு அம்மாவிடம் வந்துவிட வேண்டும். அவர்கள் எல்லோருக்கும் இன்று நிறைய வேலைகள் இருக்கும். அதற்கு தொந்தரவாக நாம் இருக்ககூடாது. சரிதானா?" என்றாள்.

"சரிம்மா. நான் சாந்தி ஆண்ட்டியைப் பார்த்துவிட்டு உங்களிடம் வந்துவிடுவேன்..." தாய் சொன்னதைப் புரிந்துகொண்டு பதில் சொன்னாள் பாவை.

கவியும் பாவையும் வீட்டு வாசல் அருகில் வரவே வெளியே வந்த காஞ்சனா, "வா கவி, அட இந்தப் பெரிய பெண்ணும் வந்திருக்கிறாளா?" என்றார் சிரிப்புடன்.

"அம்மம்மா.. சாந்தி ஆன்ட்டி இருக்கிறார்களா?" ஆர்வத்துடன் கேட்ட பாவையிடம், "உள்ளே இருக்கிறாள். நீயும் வந்திருப்பது தெரிந்தாள் சந்தோசப்படுவாள். உள்ளே போய்ப் பார்..." என்றார் காஞ்சனா.

"போகட்டா அம்மா..." ஆர்வத்துடன் கேட்ட மகளிடம் சம்மதமாகத் தலையை ஆட்டினாள் கவிநயா.

பாவை உள்ளே போகவும், "மிகவும் அருமையான பெண்ணைப் பெற்றிருக்கிறாய் கவி. நான் உள்ளே போ என்று சொல்லியும் உன்னிடம் அனுமதி கேட்கிறாளே குழந்தை. நீயும் உள்ளே வா." என்றார் காஞ்சனா.

"பிறகு வருகிறேன் ஆன்ட்டி. உணவைக் கொண்டுவந்துவிட்டேன். அதை விறாந்தைக்கே(ஹால்) கொண்டுவரவா அல்லது சமையலறைக்குக் கொண்டுவரவா என்று கேட்கத்தான் வந்தேன்..." என்ற கவியிடம், "சமையலறைக்கே கொண்டுவா கவி. பக்கத்திலேயே சாப்பாட்டு அறையும் இருக்கிறது. அங்கே நாங்களே பரிமாறிக்கொள்வோம். நீ சிரமப்படத்தேவை இல்லை..."

"பரிமாறுவதில் சிரமம் இல்லை ஆன்ட்டி. தேவை என்றால் சொல்லுங்கள், செய்கிறேன்."

"நீயும் மிகவும் நல்ல பெண்ணாகவே இருக்கிறாய்..." என்று அன்போடு சொன்ன காஞ்சனா, "நாங்கள் பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொள்வோம். அதனால் பரிமாறுவதற்கு என்று ஒருவர் தேவை இல்லை. சமையலறையிலேயே உணவை வைத்து விடம்மா....." என்றவர், "வா, நானே எப்படிச் சமையலறைக்குப் போவது என்று காட்டுகிறேன்..." என்றபடி கவியை அழைத்துகொண்டு வீட்டை சுற்றிக்கொண்டு பின்பக்கம் சென்றார்.

அதுவரை, அவளையே முறைத்துப்பாத்திருந்த ரவியின் முகம் பாறையாக இறுகி இருந்தது. அவ்வளவு நேரமும் தாரிகா அருகில் நிற்பதை மறந்திருந்தவன், அவள், “ரவி..?” என்று அழைத்தபடி, அவன் கையைப் பிடிக்கவே, அவளைத் திரும்பிப் பார்த்தான்.

அந்த நேரத்தில் அவளோடு சாதரணமாக அளவளாவ அவனால் முடியும்போல் தோன்றவில்லை. எனவே, "நீ வீட்டிற்குள் செல். நான் கொஞ்சத்தில்(சிறிது நேரத்தில்) வருகிறேன்..." என்றவன், அவளின் பதிலை எதிர்பாராது தோட்டத்தின் உள்ளே வேகமாக நடந்தான்.

நடந்தவைகளை மறந்து, ஒரு குழந்தையையும் பெற்று, இன்று நிமிர்வோடு நடந்து செல்பவளைப் பார்க்கையில் தான் எதிலேயோ தோற்றுவிட்டதாக, ஒதுக்கப்பட்டதாக அல்லது தவிர்க்கப்பட்டதாக உணர்ந்தான் ரவி. அதைவிட அளவற்ற வெறுப்பு அவள் மீது தோன்றியது. அவனின் மனநிலையை அவனாலேயே உணர முடியவில்லை.

அவள் எங்கேயோ வாழ்ந்துகொண்டு இருப்பாள் என்பது அவன் யோசித்ததுதான். ஆனாலும், இன்று ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக அவளைப் பார்க்கையில் அவன் மனது கொதித்தது. எப்படி முடிந்தது அவளால்?

மறந்துவிட்டதாக நினைத்திருந்த சம்பவங்கள் மீண்டும் நினைவலையில் மிதந்து, அவனை வதைத்தது போதாது என்று ஏதோ ஒரு வித தோல்வி உணர்வும் அவனை வாட்டியது.

மனதின் புழுக்கத்தை போக்க, முகத்தில் காற்று மோத வேகமாக தோட்டத்தை சுற்றி நடந்தான் ரவிவர்மன்.


வீட்டின் பின் பக்கம் இருந்த சமையலறையை காட்டிவிட்டு காஞ்சனா அப்படியே உள்ளே சென்றுவிடவும், கவி திரும்பவும் வாசலுக்கு சென்று, "ராஜண்ணா, உணவை சமையலறையில் வைக்கச் சொன்னார்கள். அங்கே கொண்டு போவோமா...." என்றாள்.

“சரிம்மா. நீ முன்னால் நட. நாங்கள் பின்னால் வருகிறோம்..” என்றவன், அவர்களோடு உதவிக்கு வந்தவனின் துணையோடு உணவு வகைகளை தூக்கிக்கொண்டு நடந்தான்.

சமையல் அறைக்குள் சென்ற பின்னரே பலகார பாத்திரத்தை வாகனத்தில் விட்டுவிட்டது தெரிந்தது கவிக்கு.

அங்கிருந்த மேசையை காட்டி, "அண்ணா, இதை எல்லாம் அந்த மேசையில் வையுங்கள். நான் பலகாரப் பாத்திரத்தை எடுத்து வருகிறேன்..." என்றவள், மறுபடியும் சென்று அந்த பாத்திரத்தை எடுத்து வந்தாள்.
 

Vishakini

Moderator
Staff member

'பாவையை இன்னும் காணவில்லையே. சாந்தியைக் கண்டால் உலகத்தையே மறந்துவிடுவாள்....' என்று மகளை மனதுக்குள் செல்லமாக வைதபடி வந்தவளின் முன்னே யாரோ மறித்தது போல் நிற்கவும், 'யாரது..' என்று நினைத்தபடி நிமிர்ந்து பார்த்தவளுக்கு, முன்னே நின்றவனை உடனே இனம் காணமுடியவில்லை.

அவன் முகம் வேறு கோபத்தில் இறுகி, கண்கள் சிவந்து பார்க்கவே பயமாக இருந்தது. 'யாரிவன்...?' என்று யோசித்தவளின் கண்கள் வியப்பால் விரிந்து, அவன்தானா என்று உறுதிப்படுத்த அவனை உற்றுப்பார்த்தது.

குறும்புச் சிரிப்பு மின்னும் அரும்பு மீசை கொண்ட இளைஞனாக பார்த்த ஒருவனை, இன்று முழு மனிதனாக, அன்றைய அவனின் இயல்புகள் எதுவும் இன்றி, முற்றிலும் புதியவனாகப் பார்த்ததில் அவளுக்கு அவனை இனம் காணவே சில நொடிகள் எடுத்தது.

அவளின் கண்கள் உறுதி செய்ததை, அவன்தான் என்று கவியின் மூளை முடிவு எடுக்க முதலே, "என்னடி....? ஒருவனை விட்டால் இன்னொருவன் என்று எவனையாவது பிடித்துக்கொண்டே தான் இருப்பாயா?" வார்த்தைகளை நெருப்பாய்க் கக்கினான் ரவி.

திகைத்த முகத்தில் இருந்த கண்கள், அவன் பேசுவது புரியாமல் விரிய அவனைப் பார்த்தவளுக்கோ பேச்சு வர மறுத்தது. 'என்ன சொல்கிறான் இவன்? யாரை நான் பிடித்தேன்? யாரை நான் விட்டேன்?' எதுவும் புரிய மறுத்தது அவளுக்கு.

அவளின் பேச்சற்ற, திகைத்த அந்த நிலைகூட அவனுக்கு கோபத்தை உண்டுபண்ணியது போலும், "விட்டால் ஒன்றுமே தெரியாத பாப்பா போல் நடிப்பாய் போலவே. பார்வையைப் பார் பார்வையை!அப்பாவி மாதிரி நடிக்கிறாள். நீயெல்லாம்......"

"கவி, இங்கே என்ன செய்கிறாய்....? அந்தப் பாத்திரத்தை என்னிடம் கொடுத்துவிட்டுப் பேசு..." ரவியின் பின்பக்கமாக சமையல் அறையில் இருந்து வந்த ராஜ், யாரிடமோ பேசிக்கொண்டிக்கிறாள் என்று நினைத்து, அவளைக் கூப்பிடாது பாத்திரத்தை வாங்கிக்கொண்டு நடந்தான்.

அதை அங்கே அவசரமாக கொடுக்கவேண்டும் என்பதால், கவியுடன் பேசுபவனை கவனிக்கவில்லை ராஜ்.

ஆனால் வந்தவனை இனம் கண்டுகொண்டான் ரவி. "இவனை நீ இன்னும் விடவில்லையா? உன் மகள் தானே பாவை? அவளின் அப்பா இறந்துவிட்டதாக அல்லவா கேள்விப்பட்டேன். அப்படியானால் பாவையின் அப்பா இவன் இல்லையா? அல்லது ஊரை மேய்க்க கணவன் இறந்துவிட்டதாக சொல்லி வைத்திருக்கிறாயா?" தலைக்கேறிய கோபத்துடன் வார்த்தைகளைக் கொதிகலனாய்க் கொட்டியவனை வெறித்தவளின் வாய்ப்பூட்டு, ராஜை குறை சொல்லவும் மிக வேகமாக திறந்தது.

"மூடுடா வாயை! நீயெல்லாம் ஒரு மனிதன்? ராஜண்ணாவை பற்றிப் பேசுவதற்கு உனக்குத் தகுதி கிடையாது! மிருகத்தை விடக் கேவலமான உனக்கு எங்கள் உறவு புரியாது. அது புரிவதற்கு கொஞ்சமாவது மனிதாபிமானம் இருக்கவேண்டும். அதனால் தேவை இல்லாமல் உளறுவதை விட்டுவிட்டு வழியை விட்டு நகர்ந்து நில்!" என்று, மிகக் கேவலமான ஒரு பார்வையுடன் கோபமாகப் பேசியவள், தன் முன்னே நின்றவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாக நடந்தாள்.

ரவிக்கோ கண்மண் தெரியாத கோபம் வந்தது. எப்படியெல்லாம் பேசுகிறாள். இவளெல்லாம் ஒரு பெண். இவளைப் போலத்தானே இவள் மகளும். அதனால்தான் கண்ணில் மாட்டும் எல்லா ஆண்களிடமும் சண்டை போடுகிறாள் அவளும்.

என்னால் திருமணத்திற்கே இப்போதுதான் சம்மதிக்க முடிந்தது. இவளானால் ஒரு குழந்தைக்கே அம்மாவாக இருக்கிறாளே. அதுவும் பன்னிரண்டு வயதுப் பெண்ணுக்கு. அவள் போவதையே பாத்திருந்தவனின் கண்கள் வெறுப்பை உமிழ்ந்தது.

மனதின் சுமையைத் தாங்கமுடியாமல், இரண்டு கைகளாலும் தலைமுடியை கோதிக்கொண்டவனின் உதடுகள் நெஞ்சுக்குழியில் அடைத்திருந்த காற்றை ஊதித்தள்ளியது.

உடலும் மனதும் இறுக, கோபத்தைக் குறைக்கும் வழி தெரியாது மறுபடியும் தோட்டத்தின் உள்ளே சென்றான் ரவி.


நடந்தவைகளை ஒதுக்கி, வாழ்வின் நிதர்சனத்தை ஒருவழியாகப் புரிந்து, கடுமையாக உழைத்து,வாழ்வில் ஒரு நிலைமைக்கு வந்துவிட்டேன் என்று நிம்மதியாக வாழ்ந்தவளின் மனதின் அமைதியை, அடியோடு அழித்திருந்தது ரவியின் பேச்சுக்கள்.

மனதில் எரிமலையின் சீற்றம் இருந்தபோதும், அதை வெளியே காட்டாமல் மறைக்க, இத்தனை வருட வாழ்க்கை கற்றுக்கொடுத்திருந்தது.

அதன்படி அமைதியாக சமையலறை சென்றவள், அனைத்தையும் ஒழுங்கு படுத்திவிட்டு, காஞ்சனாவிடமும் கூறிவிட்டு வீட்டுக்கு கிளம்பினாள்.

"நாங்கள் கிளம்புகிறோம் ஆன்ட்டி. பாவையை வரச் சொல்கிறீர்களா?" என்று கவி கேட்கவும், "உன் மகள் அப்போதே சாந்தியிடம் சொல்லிவிட்டு வெளியே முற்றத்தில் உனக்காகக் காத்திருக்கிறாள். பெண் வீட்டாருடன் சாந்தி பேசிக்கொண்டிருக்கிறாள். அதனால்தான் அவளால் வெளியே வரமுடியவில்லை. நீயாவது உள்ளே வாயேன் கவி. கொஞ்ச நேரம் எங்களுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு போகலாமே...." என்றார் காஞ்சனா.

அன்போடு கேட்டவரிடம் நயமாகவே மறுத்தவள், "இன்னொரு நாள் கண்டிப்பாக வருகிறேன் ஆன்ட்டி. நீங்கள் விருந்தினர்களைக் கவனியுங்கள். சாந்தியிடமும் சொல்லிவிடுங்கள்.." என்றவள், அவரிடம் விடைபெற்று ராஜுடன் வாசலுக்கு நடந்தாள்.

"நன்றி அண்ணா. நான் கேட்டதும் வந்ததற்கு...." என்றவளை ராஜ் முறைக்கவும், "நன்றி சொல்வது நம் பழக்கம். அதைச் சொல்வதாலேயே நீங்கள் என் அண்ணா இல்லை என்று ஆகிடாது...." என்றாள் மனதை மறைத்த சிரிப்புடன்.

"அம்மாவும் மகளும் நன்றாகக் கதைக்கக் கற்றுக்கொண்டீர்கள்." என்றான் ராஜ் சிரிப்புடன்.

அவ்வளவு நேரமும் தாய்க்காக காத்திருந்த பாவை, ராஜுடன் வந்துகொண்டிருந்த தாயைக் கண்டதும், "எவ்வளவு நேரம் உங்களுக்காக நான் காத்திருப்பது. நின்று நின்று என் கால் வலிக்கிறது..." என்றாள் செல்லக்கோபத்துடன்.

"அட! பெரிய பெண்ணுக்கு கால் வலிக்குமா? அல்லது நீ சின்னப் பெண்ணா?" என்று பாவையை ராஜ் வம்பிழுத்தான்.

"உங்கள் மகள் ரதீசா தான் சின்னப்பெண். நான் பெரிய பெண்ணாக்கும்..." ரோசத்துடன் பாவை சொல்லவும், "உண்மையாகவா?" என்ற ராஜின் கேலிக்க்குரலை கேட்டபடி வந்தான் நந்தன்.

"ஹேய், வசந்த்! நீயாடா? என்னடா அதிசயம்? எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறாய். இதுவரை வீட்டுக்கு வா என்று எத்தனை தடவைகள் அழைத்திருப்பேன். அப்போதெல்லாம் வர மறுத்தவன், இன்று வந்திருக்கிறாயே.. கவிக்கு நீ உறவா?" கவி ராஜின் அருகில் நிற்பதைப் பார்த்துவிட்டுக் கேட்டான் நந்தன்.

"ஆமாம், எனக்கொரு தங்கை இருக்கிறாள் என்று உன்னிடம் முன்பே சொல்லியிருகிறேனே. அவள்தான் இவள்.” என்றவன், “உணவை கொண்டுவருவதற்கு உதவியாக வந்தேன்..." என்றான், ராஜ் என்று கவியாலும் வசந்த் என்று நந்தனாலும் அழைக்கப்படும் வசந்தராஜ்.

"நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று பழக்கமில்லை என்பாயே வசந்த், பார்த்தாயா இன்று என் வீட்டுக்கு, என் வீடு என்று தெரியாமலேயே வந்திருக்கிறாய்.." என்றான் நந்தன் மகிழ்ச்சியோடு.

அவனுக்கு பதில் சொல்ல வாயை திறந்த ராஜின் கண்கள், தோட்டத்தில் இருந்து வெளியே வந்த ரவியை கண்டுகொண்டதும், அதுவரை அவன் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்தது.

சட்டென்று கவியின் புறம் திரும்பிப் பார்த்தான். அவள் முகத்தைச் சாதரணமாக வைத்துக்கொள்ள சிரமப்படுவது தெரிந்தது. பாவையின் புறம் திரும்பியவனுக்கு, அவள் ரவியைக் கோபமாக முறைப்பது தெரிந்தது.

கவியின் மனநிலையை உணர்ந்துகொண்டவனுக்கு பாவையின் கோபத்தின் காரணம் புரியமறுத்தது. ஆனாலும், நந்தனின் புறம் திரும்பி, "நண்பர்களை உயிருக்கும் மேலாக மதிப்பவன் நான் நந்தன். ஆனால், நண்பன் என்று பழகிய ஒருவனின் நயவஞ்சக குணத்தை அறியவேண்டிய நிலை எனக்கு ஒரு காலத்தில் வந்தது. அன்றிலிருந்து நான் யார் வீட்டிற்கும் நட்பு என்று சொல்லிக்கொண்டு சென்றதில்லை." என்றவனின் பார்வையோ ரவியை எரித்தது.

வசந்தனின் பேச்சுப் புரியாமல் திகைத்த நந்தன், அவன் ரவியை முறைப்பதை பார்த்து, ரவியைப் பார்த்தால் அவனும் வசந்தனை முறைத்துக்கொண்டிருந்தான்.

ரவியின் முறைப்பை அலட்சியம் செய்து, "நாங்கள் வருகிறோம் நந்தா. பிறகு சந்திக்கலாம்..." என்ற ராஜ், ஒரு கையில் கவியையும் இன்னொரு கையில் பாவையையும் பிடித்துக்கொண்டு தன் வாகனத்தை நோக்கி நடந்தான்.

ரவியோ போகும் மூவரையும் முறைத்துப்பார்த்தான்.

கவியையும் பாவையையும் ஸ்கூட்டியில் அனுப்பிய வசந்த் தன்னுடைய வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றான்.

அவர்கள் போவதையே பாத்திருந்த நந்தன், ரவியின் புறம் கண்களில் கேள்வியுடன் திரும்ப, நந்தனின் கண்கள் கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாது, வீட்டிற்குள் சென்றான் ரவி.

நந்தனுக்கோ நடந்தது எதுவும் புரியாமல் மண்டை வெடித்துவிடும் போல் இருந்தது.

வசந்த், கவி, பாவை இவர்கள் மூவரும் ரவியை முறைக்க அவனோ இவர்கள் மூவரையும் முறைத்தான். இந்த நால்வருக்கும் நடந்தது என்ன என்று தெரியாமல் குழம்பி நின்றான் நந்தன்.....
 
Top Bottom