அத்தியாயம் 39:
வளைகாப்பு முடிந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. வீடே ஒருவித எதிர்பார்ப்புடன் காத்திருந்தது. ஜெயராணிக்கு எப்போது வேண்டுமானாலும் வலி எடுக்கலாம் என்ற நிலையில், பூங்கொடி அவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டாள்.
தன் துயரத்தை மறந்து, பிறக்கப்போகும் குழந்தைக்கு தேவையான அனைத்தையும் அவளே முன்னின்று செய்தாள்.
அன்று நள்ளிரவு 2 மணி இருக்கும். பொற்செழியனின் அறையிலிருந்து சத்தம் கேட்க, இளமாறனும் பூங்கொடியும் பதறியடித்து ஓடினர். அவர்கள் சத்தம் கேட்ட அனைவரும் ஓடி வந்தனர். ஜெயராணிக்கு வலி எடுக்கத் தொடங்கியிருந்தது.
"மச்சான்... வண்டியை எடுடா! ஜெயாவுக்கு வலி வந்துடுச்சு!" எனப் பொற்செழியன் பதற்றத்தில் கத்தினான்.
இளமாறன் காரை எடுக்க, பூங்கொடி ஜெயராணியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்கள்...
வெளியே பொற்செழியன் அங்கும் இங்கும் நடந்தபடி நகம் கடித்துக் கொண்டிருந்தான். இளமாறன் அவன் தோளில் கை வைத்து, "பயப்படாதடா மச்சான்... எல்லாம் நல்லபடியா நடக்கும்," எனத் தேற்றினான்.
அதிகாலை 5 மணி இருக்கும்... லேபர் வார்டுக்குள் இருந்து ஒரு மெல்லிய அழுகுரல் கேட்டது. நர்ஸ் வெளியே வந்து சிரித்த முகத்துடன் சொன்னார், "வாழ்த்துக்கள்! அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கு!"
பொற்செழியன் ஆனந்தக் கண்ணீருடன் குதித்தான்.
"மச்சான்... நான் அப்பா ஆயிட்டேன்டா!" என இளமாறனைக் கட்டிப்பிடித்து அழுதான்.
நர்ஸ் குழந்தையை முதலில் பூங்கொடியின் கையில் கொடுத்தார். அந்தச் பிஞ்சு உயிரைத் தன் கையில் ஏந்திய அந்த நொடி, பூங்கொடிக்குத் தான் இழந்த குழந்தை மீண்டும் தன் கைக்கே வந்தது போல இருந்தது. அவள் அழுதுகொண்டே அந்தக் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டாள்.
குழந்தை பிறந்து ஒரு மாதம் கழித்து, ஜெயராணியும் குழந்தையும் வீட்டிற்கு வந்தனர். வீடு முழுவதும் குழந்தையின் சிரிப்பொலி நிறைந்திருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாகப் பூங்கொடி ஒருவிதமான சோர்வுடன் காணப்பட்டாள்.
"கொடி... என்னாச்சு? மறுபடியும் பழைய ஞாபகம் வந்துடுச்சா?" என இளமாறன் கவலையுடன் கேட்டான்.
"இல்ல அத்தான்... ஒரு வாரமா உடம்பு ரொம்ப ஒரு மாதிரியா இருக்கு. காலையில எழுந்தாலே தலை சுத்துது," என மெல்லிய குரலில் சொன்னாள்.
இளமாறனின் இதயம் ஒரு நிமிடம் படபடக்கத் தொடங்கியது. "நிஜமாவா? இரு... இப்போதே ஹாஸ்பிட்டல் போறோம்!" என அவளை அழைத்துச் சென்றான்.
மருத்துவப் பரிசோதனை முடிந்து டாக்டர் வெளியே வந்தார். அவர் முகத்தில் ஒரு பெரிய புன்னகை.
"மிஸ்டர் இளமாறன்... இது ஒரு மிராக்கிள் தான். பூங்கொடிக்கு அந்தப் பழைய காயங்கள் எல்லாம் ஆறிடுச்சு. அவங்க மறுபடியும் கர்ப்பமா இருக்காங்க! இப்போ ரெண்டு மாசம் ஆகுது. இந்த முறை ரொம்ப ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க," என்றார்.
இளமாறன் அப்படியே சிலையாக நின்றான். பூங்கொடியின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. இளமாறன் அவளை மெல்லத் தூக்கிச் சுற்றினான். "கொடி... கடவுள் நம்மைக் கைவிடலடி! நம்ம பாப்பா மறுபடியும் வந்துட்டா!"
வீட்டிற்கு வந்ததும் இந்தச் செய்தியைச் சொன்னபோது, பொற்செழியன் ஓடி வந்து இளமாறனைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். "மச்சான்... என் புள்ளைக்கு விளையாட ஒரு பார்ட்னர் வரப்போறான்! இந்த முறை நான் விடமாட்டேன்டா... நானே கராத்தே சொல்லிக் கொடுத்துப் பத்திரமாப் பார்த்துப்பேன்," எனச் சொல்ல, அந்த இடமே மீண்டும் ஒரு முறை சிரிப்பொலியால் நிறைந்தது.
இளமாறன் பூங்கொடியின் அருகில் அமர்ந்து, அவளது வயிற்றில் கை வைத்து, "இனிமே உன்னை இந்த உலகமே எதிர்த்து நின்னாலும், உன் அத்தான் ஒரு கவசமா இருப்பேன்," என உறுதி பூண, பூங்கொடி தன் அத்தானின் தோளில் சாய்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
பூங்கொடி மீண்டும் கர்ப்பமான செய்தி, அந்த வீட்டில் இருந்த கவலையை மொத்தமாகத் துடைத்தெறிந்தது. ஆனால், இளமாறன் இம்முறை அவளை ஒரு நிமிடம் கூடத் தனியாக விடுவதாக இல்லை. பூங்கொடி பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு ஓய்வில் இருந்தாள்.
அன்று மாலை, இளமாறன் வேலை முடிந்து வரும்போது கையில் ஒரு பெரிய பார்சலுடன் வந்தான். பூங்கொடி கட்டிலில் அமர்ந்து ஏதோ படித்துக்கொண்டிருக்க, அவன் மெல்லப் பின்னால் வந்து அவளது கண்களைப் பொத்தினான்.
"யாருன்னு சொல்லு பார்க்கலாம்?" என அவன் குரலை மாற்றிப் பேச,
"என் அத்தான்... என் செல்ல அத்தான்!" எனப் பூங்கொடி சிரித்துக்கொண்டே அவன் கையைப் பற்றினாள்.
இளமாறன் அந்தப் பார்சலைத் திறந்தான். அதில் ஒரு அழகான கூர்க் காபி எஸ்டேட் போன்ற ஒரு சிறிய மாதிரி பொம்மை (Miniature) இருந்தது.
"பூங்கொடி... நம்ம ஹனிமூன் போனப்போ அங்க ஒரு ஆசைப்பட்டியே, ஞாபகம் இருக்கா? அதே மாதிரி ஒரு காபி தோட்டத்தை இப்போ நான் உனக்காக வாங்கிட்டேன். இனிமே நாம எப்ப வேணா அங்க போகலாம்," எனச் சொல்ல, பூங்கொடியின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
"அத்தான்... நிஜமாவா சொல்றீங்க? எனக்காக அவ்வளவு பெரிய தோட்டத்தையா வாங்கினீங்க?" என அவள் எழுந்து அவனை அணைத்துக் கொள்ள,
"உனக்காக இந்த உலகத்தையே வாங்குவேன் கொடி. அன்னைக்கு உன்னை நான் சரியா பார்த்துக்கலன்னு ஒரு குற்ற உணர்ச்சி எனக்குள்ள இருந்துச்சு. ஆனா இனிமே அந்த விஷ்வா மாதிரி ஆயிரம் பேர் வந்தாலும் உன் மேல ஒரு தூசி கூட விழ விடமாட்டேன்," என அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
அவளது வயிற்றின் மீது மெல்லக் கை வைத்தவன், "செல்லம்... உள்ளே சௌக்கியமா இருக்கியா? உங்க அம்மா இப்போ ரொம்ப ஹேப்பி!" என வயிற்றோடு பேசத் தொடங்கினான். பூங்கொடி வெட்கத்தில் அவனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
அப்போது கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தான் பொற்செழியன். "டேய் மச்சான்! ரூமுக்குள்ளயே எவ்வளவு நேரம் தான் இருப்பீங்க? வெளிய வாடா... ஜெயா பையனைத் தூக்கிட்டு அங்க மல்லுக்கட்டிட்டு இருக்கா!"
"ஏன்டா பொற்செழியா... உனக்கு ஒரு நிமிஷம் கூடப் பொறுமை கிடையாதா? நாங்க ஏதோ ஒரு முக்கியமான 'மீட்டிங்'ல இருக்கோம்," என இளமாறன் கிண்டலாகச் சொல்ல,
"தெரியும்டா... உங்க 'மீட்டிங்' எப்போ முடியும்னு எனக்குத் தெரியும்! ஆனா இப்போ பூங்கொடிக்கு நல்லா பசி எடுக்கும். அத்தை சூடா பஜ்ஜி செஞ்சு வச்சிருக்காங்க, சீக்கிரம் வாங்க!" எனச் சொல்லிவிட்டு அவன் ஓடினான்.
இரவு உணவு முடிந்ததும், அனைவரும் தூங்கச் செல்ல, இளமாறனும் பூங்கொடியும் மொட்டை மாடியில் நிலவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
"அத்தான்... எனக்கு ஒரு ஆசை," என பூங்கொடி மெல்லிய குரலில் கேட்டாள்.
"சொல்லு கொடி... எதுவா இருந்தாலும் இப்போவே செஞ்சிடுறேன்."
"நமக்கு ஒரு பொண்ணு பிறந்தா, அவளுக்கு 'நிலா'ன்னு பேர் வைக்கலாமா? அந்த நிலா பொண்ணோட நினைவா... அவளுக்கு நடந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக் கூடாதுன்னு ஒரு ஞாபகமா இருக்கட்டும்," என பூங்கொடி சொல்ல, இளமாறன் நெகிழ்ந்து போனான்.
"கண்டிப்பா பூங்கொடி... நம்ம நிலா பாப்பா இந்த உலகத்துல ரொம்ப தைரியமான பொண்ணா வளருவா. அவளுக்கு உன் அத்தானே கராத்தே, சிலம்பம் எல்லாம் சொல்லிக் கொடுப்பேன்!" என இளமாறன் அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டான்.
அப்போது இளமாறனை பார்த்துக் கொண்டே பாடினாள் பூங்கொடி...
"மழை நின்ற பின்னாலும்
இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும்
கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள்
இரவோடு தான் அழகு
இமை கொட்டும் விண்மீன்கள்
இரவோடு தான் அழகு
இளமாறன் கண்ணுக்கு
எப்போதும் நான் அழகு
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு
ஆனந்த மஞ்சத்தில்
அவிழ்ந்தாலும் குழலழகு
அடையாள முத்தத்தில்
அழிந்தாலும் பொட்டழகு
பெண்ணோடு காதல் வந்தால்
பிறை கூட பேரழகு
பெண்ணோடு காதல் வந்தால்
பிறை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால்
இருள் கூட ஓர் அழகு
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு...!"