• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் மன்னவன் நீதானோ - 14

Vishakini

Moderator
Staff member
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 14

வீட்டுக்கு வந்தவளுக்கு அகிலன் மீதுள்ள கோபம் சற்றும் அடங்கவில்லை. ‘என்னை வீட்டை விட்டு போகச் சொல்லி விட்டான்…, இதுக்கு அவனுக்கு நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும்…’ என எண்ணியவாறு அவனை மனதுக்குள் திட்டியவாறு இருந்தாள். நான் அவனுக்குப் பொருத்தம் இல்லை எண்டு நினைக்கிறானோ… அதனால் தான் என்னை மறுக்கிறானோ என எண்ணிக் கவலைப் பட்டாள். அவனிடம் கெஞ்சி மன்றாடி வாழ்க்கை பிச்சை கேட்க வேண்டுமோ என நினைத்து சீற்றமடைந்தாள்.

ஓர் சில நாட்கள் அவளால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவளின் பெரியம்மா கூட ‘ஏன் சௌமி ஒரு மாதிரி இருக்கிறாய்? என்ன பிரச்சனை?’ என்று கேட்டுவிட்டார். அதற்குப் பின்னர் அவள் சுதாகரித்துக் கொண்டு வேறு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் தன்னைத் தானே தேற்றியவாறு இயல்பாக நடமாட முயன்றாள்.

இவ்வாறு நாட்கள் நகர சௌமிகாவிற்கும் இறுதிப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்த படியால் அவள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில், தனது மனதை ஒருநிலைப் படுத்த கடும் முயற்சி எடுத்தாள். பெற்றோரை போய் பார்த்துவிட்டு வந்தாள், நண்பர்களுடன் வெளியில் சென்று வந்தாள், இவ்வாறாக அகிலனுடனான பிரச்சனையை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு, படிக்க முயன்றாள்.
அகிலனும் அவளைத் தவிர்ப்பதால் அவனைக் காணும், அவனுடன் பேசும் சந்தர்பங்களும் அவளுக்கு வெகுவாக குறைந்துவிட்டது. ஏதேனும் ஓரிரு சந்தர்பங்களில் இருவரும் சந்திக்க நேர்ந்த போதும் ஒரு தலையசைப்புடன் கடந்து விடுவார்கள்.

சௌமிகாவும், அகிலன் தனது காதலை மறுத்தாலும் அவனிடம் அதை வெளிப்படுத்தியதில் அவளின் மனப் பாரம் சற்றுக் குறைந்திருந்ததால் படிப்பில் மட்டும் தனது கவனத்தை செலுத்தினாள். அகிலன் தனது காதலை உடனே ஏற்றுக் கொள்ளமாட்டான் என்பது அவள் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஏதாவது ஜாதகம் பொருந்தி வந்தால் அவளுக்கு எப்படியும் பெரிய தாயார் மூலம் உடனே தெரியவரும் என்பதால் அவள் அதைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.

அகிலன் வீட்டிற்கு சென்று பத்மாவிடமும் கேட்டு விசாரித்து தெரிந்து கொள்வாள். அங்கே ஏதாவது பெண்ணைப் பற்றி பத்மா அவளிடம் கதைத்தால், இந்தப் பெண் அகிலனுக்கு சரிவராது என்று ஏதோ ஒரு குறையை கண்டு பிடித்து கூறிவிடுவாள். அவளைப் பற்றி அறியாத பத்மாவும் அவள் சொல்வது சரிதான் என எண்ணி அந்தப் பெண்ணைத் தவிர்த்துவிடுவார்.

கடந்த ஆறு மாதங்களாக முழு முயற்சியுடன் பத்மாவும் பெண்(அலையன்ஸ்) பார்கிறார், ஒன்றுமே அவர் எதிர்பார்க்கிற மாதிரி பொருத்தமாக அமையவில்லை என்பதுடன் அகிலனுக்குமே அவர் காட்டுற எந்தப் பெண்ணையும் பிடிக்கவில்லை என்பதில் அவரும் சற்று சோர்வடைந்து விட்டார்.

அத்துடன், இவ்வளவு நாட்களும் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது ஆருயிர்த் தோழி ஊருக்கு செல்வதும் அவரின் மனதை வாட்டமடையச் செய்தது. சகுந்தலாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அகிலனுக்கு விரைவாகத் திருமணத்தை நடத்தி விட்டு தானும் ஊருக்குச் சென்று அங்கே தங்க வேண்டும் என அவர் முடிவு செய்திருந்தார்.

சௌமிகா வந்திருப்பது தெரிந்தால் அகிலன் தனது அறைக்குள்ளேயே இருந்து விடுவான், அவள் கிளம்பும் வரை வெளியே வர மாட்டான். மற்றும்படி அவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தானும் தன் வேலையுமாக இருந்தான்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரவீந்திரனும் அறுபது வயதை பூர்த்தி செய்ததால் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதனால், அவர்கள் தங்களின் வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு, ஊருக்கு சென்று, அங்கே வாழ்வது என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அதற்கு சௌமியின் பரீட்சை முடியட்டும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சௌமியின் பெற்றவர்களும் அவளின் படிப்பு முடிந்து, அவள் ஊருக்கு வந்ததன் பின்னர், சௌமி விரும்பினால், அவளுக்கு திருமணம் செய்து விடுவது என்ற முடிவில் இருப்பதால், அதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

..............

சௌமியும் முதலாம் வகுப்பில் தேர்ச்சி அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அல்லும் பகலும் படித்து பரீட்சையை மிகவும் திறம்பட செய்தாள்.

அவளின் பரீட்சைகள் எல்லாம் முடிவடைந்ததால், அவளின் பெரிய தாய் “சௌமி… வாற சனிக்கிழமை ஊருக்குப் போகலாம் என்று பெரியப்பா சொல்லுறார்…அதற்கிடையில் எல்லாவற்றையும் ஃபக் பண்ண வேணும்… ” என்றார்.



“சரி பெரியம்மா...” என அவரிடம் கூறியவள் ‘ஊருக்குப் புறப்பட இன்னும் ஒரு கிழமை இருக்கு அதற்கு முன்னர் அகிலனுடன் கதைக்க வேண்டும்’ என எண்ணிக் கொண்டவள் தனது பொருட்களை ஒழுங்கு படுத்துவதுடன், பெரிய தாயாருக்கும் உதவி செய்தாள்.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அவள், அகிலனை சந்திக்கவும் இல்லை. அவனுடன் பேசவும் இல்லை. அதற்கு அவளுக்கு நேரமும் இருக்கவில்லை. அவள் தனது படிப்பில் முழு நேரத்தையும் செலவிட்டிருந்தாள். அவனுடைய நினைவு வரும்போதும் மனம் சோர்வடையும் போதும், தனது கைபேசியில் உள்ள அவனின் படத்தை சற்று நேரம் பார்த்து, அவளை வசீகரிக்கும் அவனின் முகத்தையும், கம்பீரமான அவனின் தோற்றத்தையும் இரசிப்பதுடன், அவனுடன் கதைப்பது போல் எண்ணிக்கொண்டு அந்த புகைப்படத்துடன் கதைப்பாள். அது அவளுக்கு மிகுந்த உற்சாகத்தையும் குதூகலத்தையும் வழங்கியது. அந்த உற்சாகத்துடன் படிப்பை தொடருவாள்.

அன்று மாலை அகிலன் மட்டும் வீட்டில் இருக்கிறான் என்பதை அறிந்து கொண்டு, அங்கே சென்று அவன் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள். கதவைத் திறந்த அகிலன், அவளைக் கண்டதும் மலர்ந்த முகத்துடன் “உள்ள வாரும்… எப்பிடி எக்ஸாம் செய்தீர்…? கன நாளா உம்மைக் காண முடியேல்ல...” என வரவேற்றான்.

ஷார்ட்ஸும் ரீசேர்ட்டும் அணிந்திருந்தவன் ஒற்றைக் கையால் அவனது அடர்ந்த முடியை கோதியவாறு நிற்க, அவனையே பார்த்து ரசித்தவாறு “நான் இங்க வாற நேரங்களில நீங்கள் வெளியில வராமல் ரூமுக்குள்ள இருந்தால், என்னைக் காண முடியாமல் தான் இருக்கும்” என்றாள் குற்றம் சாட்டும் விதமாக.

“நீர் வந்த நேரத்தில், நான் ஏதும் அலுவலா இருந்திருப்பன்…” என்றவன் தொடர்ந்து, “ அம்மா கூட சௌமியைக் கன நாளாக காணேல்ல எண்டு சொல்லிக் கொண்டு இருந்தவா…, என்ன…? முழு நேரமும் படிப்புப் போல” என்றான் அவளைப் பார்த்தவாறே.

“ம்… நல்ல ரிசல்ட் கிடைக்காவிட்டால் காதல் எண்டு எனக்கு பின்னால சுத்திக் கொண்டு திரிஞ்சதால தான் எண்டு நீங்களே சொல்லுவீங்க அது தான் வேற விசயங்களில கவனத்தை சிதறவிடாமல், ஒரு நிமிசத்தையும் வீணாக்காமல் படிச்சனான் ” என அவனைப் பார்த்து சிரித்தாள்.

அவனும் அவளை ஆழ்ந்து பார்த்தவாறு “நல்ல விசயம்..., எப்பிடி எக்ஸாம்…? எல்லாம் நல்லா செய்தீரா…?” என அவளுடைய பரீட்சையை பற்றி விசாரித்தவாறு சோபாவில் அமர்ந்து, அவளையும் “உட்காரும்” என்றான்.

அவனுக்கு முன்னால் இருந்த போபாவில் அமர்ந்தவளும் “ம்… அதெல்லாம் நன்றாக எழுதினனான்...” என்றாள் அவள் உற்சாகமாக.

“அடுத்ததாக என்ன செய்வதாக உத்தேசம்…?” எனக் கேட்டான்.

“படிச்சு முடிஞ்சுது… அடுத்து கலியாணம் தான்...” என அவனைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின் செய்கையில் சற்று திடுக்கிட்டு, நிதானித்து “இப்ப கலியாணத்துக்கு என்ன அவசரம்…? மேல படிக்கலாம் அல்லது வேலைக்குப் போகலாம் தானே...” என்றான் அக்கறையுடன்.

“வேலைக்குப் போகலாம் தான்.... ஆனால் அது கல்யாணத்துக்குப் பிறகு தான்...” என்றாள் அவள்.

“ம்…, சரி உம்மட விருப்பம்” திறமையான பிள்ளை, தன்னை மேலும் முன்னேற்றாமல் இருக்கின்றதே என்ற ஆதங்கம் அவனுக்கு.

“நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீங்க?” எனக் கேட்டாள்.

“ஃபுக் வாசித்துக் கொண்டிருந்தனான்” என்றான்.

“எந்த நேரமும் புக் வாசிக்கிறது தான் உங்களுக்கு வேலை போல” என்றவள் தொடர்ந்து, “சரி… நாம எப்ப எங்கட கல்யாணத்தை வைக்கலாம்…?” என்றாள் அவள் நேரடியாகவே.

அவள் இவ்வாறு திடீரென கேட்பாள் என எதிர்பார்க்காதவன் சற்று ஆடித் தான் போனான்.

அகிலனுக்கு அவள் தன் மீது வைத்திருக்கும் , நேசம் புரிந்தாலும் அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது. அவளின் தன்மீதான நேசத்தைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும் அதே நேரத்தில் அவனின் மனதுக்கும் இதமாக இருந்தது. ஏனைய பெண்கள் அவனைச் சுற்றி வந்த போது அவனுக்கு ஓர் விதமான சங்கடத்தையும் சினத்தையும் தான் ஏற்படுத்தியது, ஆனால் இது சுகமான அனுபவமாக இருந்தது, அதை அனுபவிக்க மனம் விரும்பியது. ஆனால் அவனின் அறிவுக்கு அது சரியாகப் படவில்லை.


மீண்டும் மீண்டும் தன்னிடம் வந்து அவளின் நேசத்தைக் கூறுபவளிடம் அவளின் மனம் நோகாதாவாறு என்ன சொல்வது என்பதும் அவனுக்கு விளங்கவில்லை. என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அவன் தன்னையே பார்ப்பதில் மனம் களிப்படைய, உடல் சிலிர்க்க முகம் சிவந்தாள். அவனுடைய அந்தப் பார்வையில் இதுவரைக்கும் அவள் காணாத ஓர் வித்தியாசத்தை கவனித்தாள். அவனின் அந்த ஆழமான பார்வையை தாங்க முடியாமல் தலை குனிந்தாள்.

சற்று நேரம் அங்கே இனிமையான உணர்வுடன் கூடிய ஓர் மௌனம் நிலவியது.

நேரம் சென்றுகொண்டிருந்தது, வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை எண்ணியவள், சிறு தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் அப்படியே அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அதில் அவளின் வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்க மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள். அவன் இப்படி பார்த்தால் தன்னால் எதுவுமே கதைக்க முடியாது என நினைத்தாள்.

அவள் நிமிர்ந்து தன்னைப் பார்த்ததில் தன்னிலை உணர்ந்தவன் குரலை செருமிக் கொண்டு, “சௌமி...” என்றான் மென்மையாக.

அவனின் குரலில் இருந்த கனிவை உணர்ந்தவள் தலை நிமிராமல் “ம்...” என்றாள் மிக மிக மெதுவாக.

“எப்ப ஊருக்கு புறப்படுறீங்க?” விடை தெரிந்திருந்தாலும் ஏதாவது கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டான்.

“இந்த சனிக்கிழமை” என்றாள் அவள்.

“எல்லாம் அடுக்கியாச்சா…?” என விசாரித்தான்.

“ம்… அடுக்கிக் கொண்டிருக்கிறம்…” என்றான்.

“கன்வகேஷனுக்கு வருவீர் தானே…?” ஒரு வித ஆர்வத்துடன் கேட்டான்.

“அதுக்கு எவ்வளவு நாள் இருக்கு… அதுக்கு முதலே நான் வந்திடுவன், அவ்வளவு நாளெல்லாம் உங்களைப் பாரமல் என்னால இருக்க முடியாது…” என்றாள் அவனைப் பார்த்து.

“சௌமி…” என்ற அகிலன் தனது கண்களை மூடித் திறந்து சற்றுத் தாமதித்து, “இப்பிடி எல்லாம் கதைக்காதேயும்… இது சரி வராது எண்டு நான் ஏற்கனவே சொல்லிட்டேன் தானே…, நீர் சின்னப் பிள்ளை இல்லைத் தானே…, நீரும் அதை புரிந்து நடக்க வேணும்..., நீர் மேல படிச்சால் நான் சந்தோசப்படுவேன்” என தன் விருப்பத்தை தெரிவித்தான்.

“நீங்கள் தானே நான் குழந்தை எண்டு சென்னீங்க… மறந்துட்டீங்களா…?” என தலை சரித்துக் கேட்டவள் “உங்களுக்கு நான் படிக்கிறது விருப்பம் எண்டால் நான் கட்டாயம் படிப்பன். ஆனால் இனி என்ன செய்யுறது எண்டாலும் உங்கட வைஃபா, உங்களோட கூட இருந்து சௌமிகா அகிலன் என்ற பெயரில் தான் செய்வன்” என்றாள் உறுதியாக.

அவள் கூறியதைக் கேட்டதும் அவனுக்கு சலிப்பு ஏற்பட “நல்லதுக்கு காலம் இல்லை...” என்றான்.

“ஏன் அப்பிடி சொல்றீங்க… ” என அப்பாவியாக முகத்தை வைத்து கேட்டவள், “நான் மிக மிக நேசிக்கும் ஒருத்தரை..., உடலின் ஒவ்வொரு அசைவுகளையும் அணு அணுவாக ரசிக்கும் ஒருத்தரை..., எந்த நேரமும் பார்த்துக் கொண்டே அவருடனே கூட இருக்க விரும்பும் ஒருத்தரை கணவனாக அடைவது நல்ல காலம் தானே....” என கண்களை அகல விரித்து, இதழ்களில் முறுவல் அரும்ப கேட்டாள்.

அவளின் விளக்கத்தை கேட்டவனுக்கு சினம் ஏற்பட “சௌமி…, நான் சரியான கோபக்காரன்… நீர் என்ர கோபத்தைப் பார்த்ததில்லை…, எனக்கு கோபம் வரக்கூடிய மாதிரி கதைக்காதையும்...” என்றான்.

அவனின் கோபத்தைப் பற்றி அவனின் தாய் சொல்லக் கேட்டு இருந்தாலும், இப்போது அவனுக்கு சினம் ஏற்பட்டது புரிந்தாலும், இது கதைக்க வேண்டிய விஷயம் என்பதால் “ஃப்ளீஸ் அகி…, என்னை கொஞ்சம் புரிஞ்சு கொள்ளுங்களன்...” என கிட்டத்தட்ட கெஞ்சினாள்.

அவள் எல்லா விடயத்திலும் சுயமரியாதை, தன்மானம் என்பதை மிகவும் எதிர்பார்ப்பாள். தனது தராதரம், கௌரவம் போன்றவற்றை இழக்க விரும்ப மாட்டாள். யாரிட்டையும் இலகுவில் எதையும் எதிர்பார்க்க மாட்டாள். தான் எல்லாவற்றையும் சரியாகச் செய்தால், மற்ற எல்லாம் சரியாக நடக்கும் என நினைப்பவள். அது மட்டுமல்லாமல் தான் மனதார நேசிக்கும் ஒருவரால் தான் உருகி, உருகி காதலிக்கப்பட வேண்டும் என மிகவும் எதிர்பார்த்தாள். இப்படி வெட்கத்தை விட்டு, ஒருவரிடமும் எதற்காகவும் இறைஞ்சிப் பழக்கம் இல்லாதவள். அப்படியானவள் இன்று தன் உயிரிலும் மேலாக நேசம் வைத்திருக்கும் ஒரே காரணத்தால் அகிலனிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறாள்.

அவள் பெயர் சொல்லிக் கூப்பிட்டதால் சற்றுக் கடுப்பானவன் “என்னது...அகியா…?” எனக் கேட்டான்.

இவ்வளவு நாளும் சௌமி உறவுமுறை எதுவும் சொல்லிக் கூப்பிட்டதில்லை. அவள் மனதளவில் அவனை அகி என அழைத்து பழகி இருந்தாள், மறந்து போய் இப்போது அவனை அழைத்ததும் காணாது என்றால் அவனும் அதை விசாரிப்பதில் அவள் சற்று தடுமாறிப் போனாள். “ம்…, ஏதோ மறந்து போய் வாயில வந்திட்டுது...” என்றவள் தனது வாயில் தன் வலது கரத்தால் அடித்தாள். அதைப் பார்த்தவனின் இதழ்களுக்கிடையில் ஓர் அழகான புன்னகை ஒன்று மலர்ந்து மறைந்தது.

அவனின் புன்னகையைப் பார்த்தவளுக்கு சற்றுத் துணிவு ஏற்பட “உப்புச் சப்பு இல்லாத காரணங்களை சொல்லி கொண்டிராமல், என்ர மனத்தையும் நான் உங்களில வைச்சிருக்கிற நேசத்தையும் நீங்கள் மதிக்கணும்”என்றாள்.

அவளை அழுத்தமாகப் பார்த்தவன் “இதென்ன பிடிவாதம்…? உமக்கு எத்தனை முறை சொல்லுறது…?” எனக் கேட்டான்.

‘என்னை கொஞ்சமும் விளங்கிக் கொள்ளுறான் இல்லை’ என்பதில் அவள் கொதித்துப் போனாள். என்ன செய்வது என அவளுக்கு விளங்கவில்லை.

“என்னை ஏன் இப்படிக் கஷ்டப் படுத்துறீங்க...? நான் இவ்வளவு தூரம் இறங்கி வந்து உங்களை கேக்கிறதால என்னை பார்த்தால் உங்களுக்கு இளக்காரமா இருக்குதா…? உங்களுக்கும் என்னில ஈடுபாடு இருக்கும் எண்டு நினைச்சு நான் ஆசையை வளர்த்திட்டான்…, என்னால உங்களை மறக்க முடியாமல் இருக்கே… ஏன் என்ர மனதை நோகடிக்கிறீங்க…? என்ர மனம் படுற பாட்டை நான் எப்படி உங்களுக்கு புரிய வைக்கிறது எண்டு எனக்குத் தெரியேல்லையை… ” கண்ணீருடன் கேட்டாள்.

“ஸ்… அழாதையும்… யாருக்கும் கேட்கப் போகுது... ” என்றான் அவசரமாக.

அவள் கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. அவனுக்கு அதைப் பார்க்க முடியாமல் இருந்தது.



“அழாதையும் எண்டு சொல்லுறன் ” அதட்டினான்.

“உங்களை விட்டுட்டு என்னால இருக்க முடியாது… நீங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியாது…” என்றாள் கண்ணீருடன்.

அவள் விரும்பிக் கேட்கின்ற ஒன்றை தன்னால் மறுக்க வேண்டியிருக்கிறதே என்பதில் அவனுக்குமே மிகுந்த வருத்தமாக இருந்தது. எப்போதுமே தனக்குப் பிடிக்குதோ இல்லையோ அவளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என நினைப்பவன். கன்னத்தில் வலது கையை வைத்தவாறு அவளைப் பார்த்தபடி அமைதியாக இருந்தான்.

அவனுக்கு, அவளை மிகவும் பிடிக்கும். அவள் மீது ஓர் விதமான அதீத அன்பு இருக்கிறது, அதற்காக அவளை திருமணம் செய்யும் எண்ணம் அவனுக்கு அறவே இல்லை.

தான் கண்ணீர் வடித்தும் கல் நெஞ்சன் மாதிரி அமைதியாக அவன் இருப்பதை பார்த்தவளுக்கு கடும் சீற்றம் ஏற்பட்டது.

இவனுடன் கதைத்துப் பிரயோசனம் இல்லை என அறிந்தவள் கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து “சரி… இனி நான் இதைப்பற்றி உங்களோட கதைக்க மாட்டன்…, என்ர தொந்தரவு இல்லாமல் ஒரு கொஞ்ச நாளைக்கு நீங்கள் நிம்மதியாக இருங்க…, எப்பிடியும் மூண்டு மாதத்துக்குள்ள நீங்கள் என்ர கழுத்துல தாலி கட்டுவீங்க... ” எனக் கோபத்துடன் கூறியவள் அங்கிருந்து விரைந்து சென்றாள்.

‘ஊப்ஸ்’ என இதழ்களைக் குவித்து காற்றை வெளியிட்டவாறு கதிரையில் இருந்த அகிலன் ‘இவள் என்ன செய்யப் போறாளோ…’ என எண்ணினான். ‘எப்படியோ நான் தப்பினேன்’ என யோசித்தவனுக்கு அவளை நினைக்கையில் பாவமாகவும் இருந்தது. அவனுக்குமே தர்ம சங்கடமாகத்தான் இருந்தது.
 
Top Bottom