• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் மன்னவன் நீதானோ - 4

Vishakini

Moderator
Staff member
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 4

அன்று விடுமுறை நாள் என்பதால், சாந்தி உடற்பயிற்சி செய்ய விரும்பி, சௌமியையும் அழைத்துக் கொண்டு கீழ்த்தளத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்றாள். சௌமிக்கு இதில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும், சாந்தி வற்புறுத்தியதின் பேரில் அவளுடன் கூடச் சென்றாள். இதற்கு முதலும் ஒரு சில தடவைகள் சௌமி அங்கு சென்றிருக்கிறாள். வழமையாக செல்லும் போது, ஒரு பக்கமாக இருக்கும் ‘ரேட்மில்லில்’ இருவரும் நடப்பார்கள். அன்று உடற்பயிற்சி செய்பவர்கள் குறைவாக இருப்பதால் அங்கே என்னவெல்லாம் உடற்பயிற்சி உபகரணங்கள் இருக்கிறது, அவற்றை எவ்வாறு கையாளுவது, எப்படி பாவிப்பது, என்று ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவ்வாறு ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு வரும்போது, ஒரு பக்கத்தில் அகிலன் கையில்லாத பனியனும், ஷார்ட்ஸும் அணிந்து கொண்டு வியர்த்து விறுவிறுக்க ‘டம்பல் செட்’ ஐ தூக்கி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்ததைப் பார்த்த சௌமி ஓர் கணம் ஸ்தம்பித்து நின்றாள். அவனுடைய பனியன் வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டிக் கொண்டிருந்ததையும், வலிய கால்களையும் அகன்ற தோள்களையும் பார்த்த சௌமிக்கு கண்களை அவனிடமிருந்து அகற்ற முடியவில்லை. அருகில் நின்ற சாந்தி கூறிய எதையும் அவளால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. தான் இரு தடவைகள் கேட்டும் சௌமியிடம் இருந்து பதில் வராததால், “என்ன பலத்த யோசனை....?” என்றவாறு அவளை உலுக்கினாள் சாந்தி.

“ஏதோ யோசனை… நீ என்ன கேட்டாய்?” என சமாளித்தாள் சௌமி.

“இந்த ‘ரேட்மில்லில்’ நடப்பமா எண்டு எத்தின தடவை கேட்டுட்டேன்” என்றவாறு அவளை முறைத்தாள் சாந்தி.

“சரி நடப்பம்...” என்று சௌமி கூறவும், அவர்கள் இருவரும் அருகருகே இருந்த ரேட் மில்லில் ஏறி நடந்தார்கள்.

சௌமி, சாந்தியுடன் கதைத்துக் கொண்டிருந்த போதிலும் அவளுடைய கண்கள் அடிக்கடி அகிலனைத் தொட்டுச் சென்றது. அவன், இவர்கள் வந்தது தெரியாமல் தன் பாட்டுக்கு தனது வேலையை பார்த்துக் கொண்டு இருந்தான். சௌமி வழக்கத்துக்கு மாறாக ஒரு மார்க்கமாக இருப்பதை அவதானித்த சாந்தி “என்ன விஷயம் பார்வை எல்லாம் பலமாக இருக்குதே....” என ஒரு மாதிரி கேலியான குரலில் இழுத்தாள்.

அவள் தன்னைக் கண்டு கொண்டு விட்டாள் என்பதை தெரிந்த சௌமி மிகுந்த சங்கடத்துடன் “ஒன்றும் இல்லை… சும்மா பார்த்தேன்....” என்றாள் மழுப்பலாக.

“அப்படித் தெரியேல்லையே… ஏதோ இருக்கு...” என்றாள்.

“என்ன இருக்கு....?” எனக் கேட்டாள் சௌமி அவசரமாக.

“உன்ர பார்வையில் வித்தியாசம் இருக்கு...” என்றாள் சாந்தி.

“என்ன வித்தியாசம்…?” கேட்டாள்.

“எனக்குத் தெரியாமல் எத்தனை நாளா இது நடக்குது?” என நேரடியாகவே கேட்டாள் சாந்தி.

“நீ நினைக்கிற மாதிரி இஞ்ச ஒண்டும் நடக்கல” என்றாள்.

“நீ சொல்றதை நான் நம்புவேன் என்று நினைக்கிறாயா…?” எனக் கேட்டாள் சாந்தி.

“நீ நம்பித்தான் ஆக வேணும்” என்றாள் சௌமி.

“சரி… என்னதான் நடக்குது என்று பார்ப்பம்”

“உண்மையா ஒன்றும் இல்லை.... நல்ல ஸ்மார்டாக இருக்கிறான், நல்லா எக்சர்சைஸ் செய்யுறான் என்று தான் பாத்தனான்” என்றவள் இனி மேல் இவளிடம் கவனமாக இருக்க வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டாள்.

இவ்வாறு அவர்கள் இருவரும் கதைத்தவாறு நடக்க அவனோ தனது உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு அவர்களைத் திரும்பியும் பாராமல் சென்று விட்டான்.

அன்றிரவு உணவின் பின்னர் தொலைக்காட்சியில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த பத்மாவின் அருகில் அமர்ந்த அகிலன் “அம்மா நான் வாற வெள்ளிக்கிழமை பின்னேரம் திருகோணமலைக்கு போக வேணும், சனிக்கிழமை ஒரு சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்திருக்கினம், அதுக்கு என்னையும் வரச்சொல்லி கூப்புடினம்” என்றான்.

“சரி போட்டு வா தம்பி” என்றார் அவர்.

“சனி பின்னேரம் அது முடிஞ்ச உடன கிளம்பி இரவுக்கு இஞ்ச வந்திடுவனம்மா” அவனுடைய தாய் ஒரு நாள் இரவு தனியாக தங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு கூறினான்.

அவனின் மன எண்ணத்தைப் புரிந்த அவர் “நான் தனிய இருப்பன், நீ அவசரப்படாமல் ஆறுதலாக வா அப்பு” என்றார்.

பத்மா கணவர் இறந்த பின்னர் அதிகம் வெளியே எங்கும் போவதில்லை, அண்மைக் காலமாகத் தான் அகிலனின் வற்புறுத்தலின் பேரில் அவனுடன் ஒரு சில இடங்களுக்கு சென்று இருக்கிறார். கடந்த ஓரிரு வருடமாக அவர் எங்கும் சென்றதில்லை. அதற்கு அவர், நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் கால் வீங்குவதும், இடுப்பு வலி இருப்பதுமாகும். இந்த தடவை அவரையும் அங்கே அழைத்துச் செல்ல விரும்பிய அவன் “நீங்களும் வாங்கம்மா… திருக்கோணேச்சரத்துக்கும் போகலாம்” என்றான் அவன்.

அவர் அங்கே சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. அவருக்கும் கோனேஸ்வரரை தரிசிக்க விருப்பம் இருந்தாலும் அவன் தனது வேலை விஷயமாக செல்லும் போது அவனைக் குழப்ப அவர் விரும்பவில்லை. எனவே “எனக்கு கோணேஸ்வரரிடம் வர விருப்பம் தான் தம்பி…, நான் அங்க வந்தால் உனக்கு இடைஞ்சலாக இருக்கும். இன்னொரு சந்தர்ப்பத்தில் போகலாம்” என்றார் அவர்.

“எனக்கு ஒரு இடைஞ்சலும் இல்லையம்மா, எனக்கு அங்க அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்வினம் என்னோட நீங்கள் தங்கலாம். என்ர அலுவலை முடித்துக் கொண்டு கோவிலுக்குப் போகலாம். இடையில இரண்டு மூண்டு தரம் இறங்கி, கொஞ்சம் நடந்து, போனால் கால் வீக்கம் , இடுப்பு வலி வராது” என்றான்.

அவருக்கு நீரிழிவு மற்றும் உயர் குருதி அமுக்க நோய்கள் இருப்பதால் அவரால் விரைவாக எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. ஓய்வு எடுத்து எடுத்து தான் வீட்டு வேலைகளை கவனிப்பார். இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது பயணம் வெளிக்கிட. அதற்குள் எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்தி கிளம்புவது சற்று சிரமம் என உணர்ந்தவர் “திடீரென்று கிளம்புவது என்றால் கஷ்டம் தம்பி… ஆறுதலாக இன்னொரு நாள் பாப்பம் தம்பி” என்றார்.

“நீங்கள் ஒன்றும் ஆயத்தப்படுத்த தேவையில்லை, உங்களுக்குத் தேவையான உடுப்புகளை எடுத்து வைத்தால் சரி. இன்னும் இரண்டு நாள் இருக்குத் தானே அம்மா… அதுக்குள்ள எடுத்து வையுங்க...” என்று விட்டு உள்ளே சென்றான் அவன்.

அவர் திருகோணமலைக்கு செல்வதற்கு எந்த சேலையை கொண்டு போவது, வேறு என்ன தனக்குத் தேவைப்படும் என சிந்தித்தவாறு, தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு படுப்பதற்கு எழுந்து அறைக்குச் சென்றார்.

அடுத்த நாள் மாலை, திருகோணமலைக்கு செல்கின்ற விஷயத்தை சகுந்தலாவுக்கு சொல்வதற்காக அவர் வீட்டுக்குச் சென்ற பத்மா “நாளையிண்டைக்கு அகில் திருகோணமலைக்குப் போறானாம் என்னையும் வரச் சொல்லிக் கூப்புடுறான் சகுந்தலா” என்றார்.

“போட்டு வா பத்மா… கோணேஸ்வரரிட்டையும் போயிட்டு வா” என்றார் சகுந்தலா உற்சாகமாக.

“ம்...”

“எத்தனை நாள் அங்க நிற்பாய்?”

“ஞாயிற்றுக்கிழமை வந்திடுவோம், திங்கள் அகில் கம்பஸுக்கு போக வேணும் தானே...” எனும் போது கம்பஸ் முடித்து வீட்டுக்கு வந்த சௌமி “எங்க ஆண்டி போகப் போறீங்க?” என்றாள். இந்த ஒரு வருட காலத்தில் பத்மாவும் சௌமியும் நன்றாக பழகி நெருக்கமாகி விட்டார்கள்.

“திருகோணமலைக்கு சௌமி” என்றார் அவர்.

“ஓ…, எனக்கும் அங்க போய் கன்னியா வெந்நீரூற்று பார்க்க விருப்பம் ” என்றாள் அவள். அவளுக்கு சிறு வயதில் கன்னியா வெந்நீரூற்றைப் பற்றி படித்ததில் இருந்து அங்கே செல்ல விருப்பம் .ஆனால் இதுவரை அதற்கு சந்தர்ப்பம் அமையவில்லை.

அவளின்ர முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்த அவர் “ஓ… அப்ப எங்களோடு வாவன் சௌமி, போட்டு வரலாம்” என்றார்.

அவளுக்கு அங்கே போக விருப்பம் இருந்தாலும் அவர்களுடன் போவதற்கு தயக்கமாக இருந்தது. அத்துடன் அகிலன், தானும் வருவதை விரும்புவானோ என்ற யோசனையும் இருந்தது. எனவே “இல்லை ஆண்டி எனக்கு இப்ப சரி வராது, எக்ஸாம் வருகுது… அதுக்குப் படிக்கோணும்...” என்றாள்.

“வெள்ளி பின்னேரம் வெளிக்கிட்டு ஞாயிறு வந்திடுவோம், இரண்டு நாள் தானே, வந்து படிக்கலாம்” என அவளை பத்மா ஊக்குவித்தார்.

பெரியம்மா என்ன சொல்லுவாரோ என நினைத்து அவள், அவர் முகத்தைப் பார்க்க “போட்டு வா சௌமி, நான் அம்மாட்டை சொல்லுறன்” என சகுந்தலாவும் அவரின் சம்மதத்தைத் தெரிவித்தார்.

அதற்கு அவள் சரி என்பது போல் தலையாட்டினாள்.

அன்று வெள்ளிக்கிழமை. கொழும்பிலிருந்து திருகோணமலைக்குச் செல்ல ஐந்து தொடக்கம் ஆறு மணித்தியாலங்கள் பிடிக்கும் என்பதால், கம்பஸில் இருந்து வந்த உடனேயே மாலை ஐந்து மணியளவில் திருகோணமலைக்குப் புறப்படுவதாக அகிலன் திட்டமிட்டிருந்தான்.

மாலை ஐந்து மணிக்குப் புறப்படுவதாக பத்மா கூறி இருந்ததால், கம்பஸிலிருந்து வேகமாக வந்த சௌமி அவசர அவசரமாக குளித்து உடை மாற்றி தயாராகி, ஏற்கனவே அடுக்கி வைத்த பிரயாண பையை எடுத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தவள் “பெரியம்மா நான் வெளிக்கிட்டுட்டேன். போகலாம் வாங்க...” என்றாள்.

“இப்ப நாலே முக்கால் தானே… ஐந்து மணிக்கு தானே புறப்படுவதாக பத்மா சொன்னவள்…, இந்த வடையை சாப்பிட்டு டீயையும் குடி” என்றார்.

அவர்கள் தனக்காக காத்து நிற்பதை அவள் விரும்பாததால் “ஐஞ்சுக்கு முதலே நான் அங்க போய் நிக்கணும் பெரியம்மா, பிந்தினால் சரி இல்லை” என்றவாறு ஒரு வடையை அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு தேநீரையும் குடித்தாள்.

“போகலாம் ஆறுதலாக சாப்பிடு” என்றவர் அவர்களின் இரவு உணவுக்காக பிட்டும் அவித்து, உருளைக்கிழங்கு பிரட்டல் கறியும் தக்காளிச் சொதியும் செய்திருந்தார். அவற்றையும் எடுத்துக் கொண்டு, அவர்கள் கீழே போய் அகிலனின் கார் அருகே நின்றனர். சற்று நேரத்தில் அகிலனும் பத்மாவும் தங்களின் பிரயாணப் பையோடு வந்தனர்.

அவர்களைப் பார்த்த பத்மா “வந்து கன நேரமா...?” என வினாவினார்.

“இல்லை இப்பத் தான் வந்தனாங்கள்” என்றார் சகுந்தலா.

சகுந்தலாவை பார்த்து “சுகமாக இருக்கிறீங்களா ஆண்டி” என வினவிய அகிலன், அவர்களின் பிரயாணப் பைகளை காரில் வைத்துவிட்டு, சௌமிகாவின் பையையும் வாங்கி வைத்தான்.

“இதில இரவுச் சாப்பாடு இருக்கு, இதையும் வை அகில்” என்று சாப்பாட்டு பையை அவனிடம் கொடுத்தார் சகுந்தலா.

“தாங்ஸ் ஆண்டி” என்றவாறு அதை வாங்கி உள்ளே வைத்துவிட்டு, காரில் ஏறி அதை இயக்கினான்.

“கவனமாகப் போட்டு வாங்க...” என சகுந்தலா கூறவும் பத்மாவும் சௌமியும் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறினார்கள்.

அகிலனிடம் சௌமியும் திருகோணமலைக்கு எங்களுடன் வர ஆசைப்படுகிறாள் என அவனின் தாய் கூறிய போது ‘சரி வரட்டும்’ என்றவன், கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களிடம் தனது தாயும் தெரிந்த பெண் ஒருத்தியும் தன்னுடன் கூட வருவதாக கூறி அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தான்.

புறப்பட்டு சற்று நேரத்திலேயே அகிலன் “ஏதாவது தேவை என்றாலோ காரை நிப்பாட்ட வேண்டும் என்றாலோ சொல்லுங்க” என இருவருக்கும் பொதுவாக கூறினான் அவன்.

அகிலனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த பத்மாவும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சௌமியும் கதைத்துக் கொண்டு வர, அகிலன் கார் ஓட்டுவதில் கவனத்தைச் செலுத்தினான்.

பத்மா மருந்து சாப்பிடுவதால் இரவு உணவை நேரத்துடன் சாப்பிடுவார் என்பதால் எட்டு மணி அளவில் ஓர் ஹோட்டல் அருகே காரை நிறுத்தி, அங்கே இரவு உணவை உண்டார்கள். உணவின் பின் மருந்தையும் சாப்பிட்ட பத்மா “தம்பி எனக்கு இனி நித்திரை வரும், நான் பின்னால இருக்கிறன்” என்று அகிலனிடம் கூறியவர், சௌமியிடம் “நான் பின்னால இருக்கிறன், நீ முன்னுக்கு ஏறு” என்றார். பயணம் வெளிக்கிடுவது என்று தீர்மானித்ததில் இருந்து, அவளுக்கு அவர்களுடன் செல்வதற்கு, விருப்பம் இருந்தாலும் ‘நானும் அவர்களுடன் செல்வது அவர்களுக்கு சிரமமாக இருக்குமோ...., அகிலன் விரும்புவானோ....’ என பலவிதமாக யோசித்து குழப்பத்தில் இருந்த அவள் காரில் ஏறியதிலிருந்து, அவனுடைய முகத்தில் ஏதாவது விருப்பமின்மை, அசௌகரியம் தெரிகிறதா என அவனை பல தடவைகள் பார்த்துவிட்டாள். ஆனால் அவளால் எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை. திடீரென பத்மா அவளை முன்னால் ஏறும் படி கூறவும் அவள் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க, அகிலன் “சரியம்மா” எனத் தாயிடம் கேட்டவன் அவளைப் பார்த்தான். அவள் பத்மாவிடம் “நான் உங்களுக்கு பக்கத்தில இருக்கிறன் ஆண்டி” எனவும் “நீ அகிலுடன் கதைத்துக் கொண்டு வந்தால் அவனுக்கும் நித்திரை வராது, நீயும் இடங்களை வடிவாகப் பார்த்துக் கொண்டு வரலாம்” என்று அவர் கூறவும் அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவன் முன்னால் ஏறும்படி கண்களை காட்டவும் அதற்கு கட்டுப்பட்டு முன்னுக்கு ஏறவும் அவனும் ஏறி கதவைச் சாத்திவிட்டு “சீட் பெல்டைப் போடும்” என்றான்.

அவனருகில் சிறு படபடப்புடன் அமர்ந்திருந்தாலும் அந்த இருளினூடே தெரியும் மரங்களையும் அவர்களை முந்திச் செல்லும் வாகனங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவள் தொடர்ச்சியாக வாகனத்தை செலுத்துவது அவனுக்கு கடினமாக இராதா என்ற எண்ணம் வந்த உடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்ப்பதை உணர்ந்த அவன் “என்ன… எதுவும் தேவையா?” என்று அவன் கேட்டதும் என்ன சொல்வது என ஒரு கணம் சிந்தித்தவள் “இப்ப நாங்கள் எந்த இடத்தில நிக்கிறம்?” எனக் கேட்டாள்.

அவளைத் திரும்பிப் பார்த்தவன் “இன்னும் டென் மினிற்சில ஹபரண வரும்” என்றான்.

“ஓ...” என்றாள் அவள்.

“நித்திரை வருதா?” எனக் கேட்டான்.

“இல்லை… உங்களுக்கு…?” எனக் கேட்டாள் அவள்.

“இல்லை...” என்றவன் தொடர்ந்து “திருகோணமலைக்கு போறது இது தான் முதல் தடவையா…?” எனக் கேட்டான்.

“ஓம்… சின்ன வயதில் படிக்கேக்க கன்னியா வெந்நீரூற்றைப் பற்றிக் கேள்விப் பட்டனான். அப்ப இருந்தே எனக்கு அதைப் பாக்க வேணும் எண்டு விருப்பம்” என அவளுடைய சிறு விருப்பத்தைக் கூறினாள்.

“ஓ…, வேற என்னவெல்லாம் அங்க பாக்க விருப்பம்?” எனக்கேட்டான் அவளைப் பற்றி அறியும் ஆவலுடன்.

“நேச்சுரல் கார்பரையும் பாக்கணும்” என்றாள் மெதுவாக.

“சரி… உம்மட விருப்பப்படி எல்லாத்தையும் பாக்கலாம்” என்றான் அவன்.

“ம்…, எல்லா இடமும் பார்க்க உங்களுக்கு நேரம் இருக்குமா?” என வினவினாள் அவள்.

“செமினார் நாளைக்கு மட்டும் தான், நான் காலமை செமினாருக்கு போக முதல் கோணேஸ்வரத்தில கொண்டு போய் விடுறன், இரண்டு பேரும் ஆறுதலாக சாமியக் கும்பிடுங்கோ, பிறகு பின்னேரம் மற்ற இடங்களுக்கு கூட்டிக் கொண்டு போறன்...நாளையிண்டைக்கு காலமையும் ஓரிரு இடத்தை பார்க்கலாம் தானே.... ஞாயிறு மத்தியானத்துக்குப் பிறகு அங்க இருந்து வெளிக்கிட்டால் காணும் இரவு கொழும்புக்கு வந்திடலாம்” என்றான் அவன்.

“என்னையும் உங்களோட கூட்டிக் கொண்டு வந்ததுக்கு தாங்ஸ்” என்றாள் அவள் முன்னே செல்லும் வாகனத்தைப் பார்த்தவாறு.

அவளைத் திரும்பிப் பார்த்தவன் “நான் காலையில செமினாருக்கு போயிடுவேன், வர மத்தியானத்துக்கு மேல் செல்லும். அதுவரையும் அம்மா தனியாகத் தான் இருக்க வேணும், அவாவுக்குத் துணையாக நீர் வந்ததுக்கு நான் தான் உமக்கு தாங்ஸ் சொல்லணும்” என்று கூறி அவளை இயல்பாக இருக்க செய்தான்.

“உங்கட செமினார் எப்பிடி, எதைப்பற்றி இருக்கும்?” எனக் கேட்டாள் சௌமி அதைப் பற்றி அறியும் ஆர்வத்துடன்.

“இப்ப நாங்கள் நாளைக்கு ஏற்பாடு செய்திருப்பது- சட்டத்தைப் பற்றி எந்தவித அறிவு இல்லாமல் இருக்கிறவைக்கு அதைப் பற்றி விளங்கப் படுத்துற சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு. உதாரணத்துக்கு சிலருக்கு தங்களுக்கு நடக்கிற அநீதிக்கு எதிராக சட்டத்தை நாடலாம் எண்டு தெரியாது, அப்பிடியான ஆக்களுக்கு இப்பிடியான கருத்தரங்கு உதவியா இருக்கும்” என்றான் அவளுக்கு விளங்கும் படியாக.

“ஓ… எப்பிடியான அநீதி?”

“நிறைய இருக்கு உதாரணத்துக்கு தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள், வாடகை குடியிருப்பாளர் தொடர்பான சட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள், மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள்… இப்பிடியான சட்டங்களைப் பற்றி அவையளுக்கு போதியளவு அறிவு இல்லாமல் இருக்கும். அதால பாதிக்கப்பட்ட ஆக்களுக்கு தாங்கள் பாதிக்கப் பட்டிருக்கிறம் எண்டது தெரியாமலே இருக்கும், நாங்கள் இவைகளைப் பற்றி விளங்கப்படுத்தினால் அவையளுக்கு உதவியாக இருக்கும்” என்றவன் தொடர்ந்து, “அப்பிடியான ஆக்கள் தாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறம் எண்டதை உணர்ந்து, கோர்ட்டுக்கு போக விரும்பினால், அவைக்கு அது தொடர்பான ஆலோசனைகள் வழங்குவோம். அதுக்கு அவைக்கு பண வசதி இல்லாட்டி, நாங்கள் இலவசமாக அந்த உதவியும் செய்து கொடுப்பம்” என்றான்.

“ஓ… அப்ப நீங்கள் ஒரு சோஷல் வேக்கர் எண்டு சொல்லுங்க” என்றாள் அவள் சிரித்தபடி. அன்றைக்கு நான் கேட்டதுக்கு கூட பதில் சொல்ல விரும்பாமல் முகத்தை ‘உம்’ என்று வைத்துக் கொண்டு வந்தான், இன்றைக்கு இவ்வளவு இலகுவாக கதைக்கிறானே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளால். அவ்வாறு அவன் கதைப்பது அவளின் மனதிற்கு மிகுந்த உற்சாகத்தை தர “இப்பிடி அடிக்கடி செமினார் இருக்குமோ...” என்றாள் அவள் அவனைப் பற்றி அறியும் விதமாக.

“அநேகமாக ஒவ்வொரு மாதத்திலும் ஒன்று இருக்கும்” என்றான் அவன்.

“எனக்கும் அதைப் பார்க்க விருப்பம், ஒரு நாளைக்கு என்னையும் அங்க கூட்டிக் கொண்டு போறீங்களா?” என சிறு பிள்ளை போல தலையை சரித்து கேட்டாள் அவள்.

அவளைத் திரும்பிப் பார்த்த அவன் சிறு சிரிப்புடன் “சரி” என்றான்.

“அப்ப நீங்கள் நிறைய இடங்களுக்கு போயிருப்பீங்கள் என்ன...?” எனக் கேட்டாள் அவள்.

“ம்...”

“எனக்கும் எல்லா இடங்களும் பாக்க வேணும் எண்டு ஆசை” என்றாள் அவள். இவ்வாறு அவர்கள் இருவரும் இலகுவாக கதைத்துக் கொண்டு வர பத்மா உறக்கத்தில் இருந்தார்.

திருகோணமலையை சென்றடைந்ததும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஹோட்டலில் தங்கினார்கள்.அவர்களுக்காக இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒன்றில் அகிலனும் மற்றையதில் பெண்கள் இருவரும் தங்கினார்கள்.
 
Top Bottom