• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு காதல் கனா காண்போம் - 2

STN - 91

New member
நம் நாட்டின் கனிம வளங்கள் மீது மட்டுமல்ல, நம் நாட்டு மக்களின் உழைப்பிலும் இருக்கும் அதீத சக்தியை கண்டறிந்த வெள்ளையர்கள், அனைத்தையும் தங்கள் நாட்டிற்கு சுரண்டிச் செல்ல நம் மண்ணையும் மக்களையுமே காரணியாய் பயன்படுத்துகின்றனர்.


இந்த போராட்டங்களுக்கு மத்தியில் அடிமைத்தனத்தை எதிர்க்கும் போராளியாக நானும், என்னுடன் அவளும்.


எங்களுக்கு இடையில் வேறுபாடுகள் அதிகம். ஆனால் காதல் என்ற மாயை இருவரையும் ஒன்றாக கட்டி போட்டது.


போராட்டங்களுக்கு மத்தியில் மலர்ந்த எங்கள் காதல் கனாவின் கதை இது……


தென்னிந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்படும் பருத்தி, தானிய பொருட்கள், விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட தோல் என்று அனைத்தும் தொழிற்சாலைகள் அமைத்து மக்களை வேலையில் அமர்த்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது.


அந்த காலகட்டத்தில், தற்போதைய தமிழகத்தின் நெய்தல் நிலப்பரப்பில் இருக்கும் கடலோர கிராமம் நெடுவயல் எனும் ஊர்.


காலை சூரியன் மெல்ல எட்டிப் பார்க்கும் வேலையிலேயே, தூக்குச் சட்டியில் உணவை அடைத்துக்கொண்டு, அரக்கப் பறக்க, எறும்பு கூட்டம் போல் அந்த தொழிற்சாலையை நோக்கி இளைஞர்களும் ஆண்களும் பறந்து கொண்டிருந்தனர்.


காலை 7:00 மணிக்கு ஓங்கி ஒலிக்கும் மணியோசைக்கும் முன்பு, அனைவரும் தோலை பிரித்து பதப்படுத்தும் இயந்திரத்தின் முன்பு நின்றுவிட வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத சட்டம்.


“ஏய் அழகுவேலு. எங்கடா உன் சினேகிதன்? இன்னைக்கு துரை ஐயா நேரமே வந்துடனும்னு சொல்லி இருக்காவ. அவன் தலையை இன்னும் காணல?” என்று அந்த தொழிலாளிகளின் கூட்டத்தில் இருந்த ஒரு முதிர்ந்த நபர் கேட்டார்.


“உங்களுக்கு எல்லாம் வாய் கூசலையா பெருசு? போயும் போயும் ஒரு வெள்ளைக்காரனுக்கு மரியாதை கொடுத்து ‘துரை ஐயா’னு கூப்பிடுறீங்க?” என்று அழகுவேல் கேட்டான்.


“சூதானமா பிழைக்க, உடல் உழைப்பு மட்டும் போதாது. கொஞ்சம் புத்திசாலித்தனமும் வேணும். நம்ம பாட்டன் பூட்டன் எல்லாரும் சேர்ந்து துறைங்க கையில நாட்ட கொடுத்துட்டு போயிட்டாங்க.


கைய விட்டு போனத நினைச்சு என்ன செய்யறது? கால் வயிறு கஞ்சி குடிக்க இந்த சோலியாச்சும் நமக்கு வேணும்.” என்று உரைத்தவரை கண்டு இளம் ரத்தம் கொண்ட அழகுவேல் முறுக்கி தான் கொண்டான்.


“உங்க பாட்டனும் பூட்டனும் செஞ்ச தப்புனால தான் இன்னைக்கு ஒரு வாய் சோத்துக்கு அவங்க கைய எதிர்பார்த்துட்டு இருக்கிங்க.


நீங்களும் இப்படி பணிஞ்சு போனா, நாளைக்கு உங்க மகன், பேரன்னு காலம் காலமா இவனுங்க கிட்ட அடி பணிஞ்சு தான் போகணும் அண்ணே!


ஏதாவது ஒரு தலைமுறையாவது எதிர்த்து நின்னு கேள்வி கேட்டா தான் நம்ம தலையெழுத்து மாறும்.” என்று கூட்டத்தின் பின்னால் இருந்து ஒரு கம்பீரமான குரல் கேட்டது.


அந்தக் குரலைக் கேட்டதும் அழகுவேல் பேசிய அந்தவரை கண்டு சிரிக்க, இருவரும் திரும்பி பின்னே கண்டனர்.


ஒளிரும் சூரியனின் ஒளிக்கதிர்கள் முகத்தில் பட்டு தெறிக்க, சற்றே நீளமாக வளர்க்கப்பட்ட முடியை கோதியபடி நின்றிருந்தான் இளங்கோவன்.


“அப்படி சொல்லு மாப்ள.” என்று அவன் தோளில் கையை போட்ட அழகுவேலை கண்டு, “நீங்க ரெண்டு பேரும் திருந்த மாட்டீங்க. சூதானமா பொழைக்க தெரியாத பயலுக.” என்று திட்டியபடி அந்தவர் சென்று விட்டார்.


“அவர் கிடக்கிறாரு. நீ ஏன் மாப்பிள இன்னைக்கு நேரம் கழிச்சு வர?” என்று கேட்டான் அழகுவேல்.


“நேரமாயிருச்சு மாப்ள” என்று இளங்கோவன் பதில் மட்டும் தான் நண்பனுக்காக வந்தது, அவன் பார்வை என்னவோ வேறெங்கோ தான் நிலைத்திருந்தது.


அவன் பார்வை பதித்த இடத்தை கண்ட அழகுவேல் தான், “ஏலேய். இது நமக்கு தேவையில்லாத சோலி. உங்க ஐயனுக்கும் ஆத்தாவுக்கும் தெரிஞ்சது, அன்னைக்கு ஒரு கலவரமே வெடிக்கும் பாத்துக்க.” என்று நண்பனை எச்சரித்தான்.


அவன் கூறியதற்கு பெரிதாக அலட்டி கொள்ளாமல் இளங்கோவனின் பார்வை என்னவோ, அந்த கிராமத்தில் இருக்கும் ஒற்றை பழைய பள்ளிக்கூட கட்டிடத்தின் மேலேயே நிலைத்திருந்தது.


நிலதாரர்களின் பிள்ளைகளும், ஜமீன்தார்களின் பிள்ளைகளும் மட்டுமே அதிகம் படிக்கும் அந்த பள்ளிக்கூடம், தொழிற்சாலை செல்லும் வழியில் தான் அமைந்திருக்கும்.


இளங்கோவனின் இமைகள் இரண்டும் அந்த கட்டிடத்தினுள் அங்கும் இங்கும் உருண்டு எதையோ தேடியது.


தன் கண்கள் தேடும் தரிசனம் அன்று கிட்டாமல் போகவும், நடந்து கொண்டிருந்த இளங்கோவன், அப்படியே பள்ளிக்கூடத்தின் முன்பு நின்று விட்டான். அவன் கால்கள் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தது.


“டேய் நேரமாகுது. வாடா” என்று அழகுவேல் அழைக்க “நீ முன்ன போ. நான் பின்னாடியே வந்துடுறேன்.” என்று உரைத்து விட்டு நின்றவனை முறைத்துப் பார்த்தான் அழகுவேல்.


இவர்கள் இருவரும் இப்படி நின்றிருக்கும் நேரத்திலேயே, தொழிற்சாலையில் அனைவரும் கூடும் மணியானது, ‘டங்…டங்…டங்’ என்று மூன்று முறை ஒலித்தது.


“போச்சு. இன்னைக்கு மாட்டுத் தோலுக்கு பதிலா நம்ம தோல தான் உரிக்க போறானுங்க. வேகமா வாடா.” என்று புலம்பிய அழகுவேல் இளங்கோவனின் கைகளை பற்றிய படி அவனை இழுத்துச் சென்றான்.


கால்கள் தான் நண்பனுடன் முன்னே சென்றதே தவிர்த்து, இளங்கோவனின் மனம் என்னவோ அந்தப் பள்ளிக்கூடத்தில் தான் எதையோ தேடி பின்னே சென்றது.


காலை சூரியன் உதிக்கும் பொழுதிலேயே வேலைக்கு வந்து சேர்ந்து விட வேண்டும்.


சற்று தாமதமாக வந்தாலும் அன்றைய பொழுது, கடுமையான தண்டனைகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். உணவுக்கான இடைவேளை மறுக்கப்படும்.


தொழிற்சாலை முன்பு கூட்டமாக நின்றிருந்த மக்களுடன், எப்படியோ வேகமாக ஓடி வந்து இளங்கோவனும் அழகுவேலும் சேர்ந்து கொண்டனர்.


முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உம்மென வரும் நண்பனைக் கண்டு “ஏலைய். இன்னைக்கு கொஞ்சம் தாமதமாகியிருந்தாலும், ரெண்டு பேர் முதுகும் பழுத்திருக்கும்.” என்று திட்டினான்.


ஆனால் இளங்கோவன் முகம் ஆழ்ந்த சிந்தனையிலும், அவன் கண்கள் தேடிய கேள்விக்கு பதில் கிடைக்காமல் போனதில் சோகத்திலும் தான் இருந்தது.


“இவன் திருந்த மாட்டான்.” என்று அழகுவேல் தான் அழுத்துக் கொண்டான்.


அவரவர் கடமையே என வேலைகளை தொடங்கிய தருணம், அந்த இடத்தில் வரிசையாக வெள்ளையர்களின் மகிழுந்துகள் வந்து நிற்கும் ஓசை கேட்டது.


பாலிஷ் செய்த ஷூ காலை வெளியில் எடுத்து வைத்து, முகத்தில் பெயருக்கு கூட கருனை இல்லாது, இறங்கினான் அந்த நெடுவயல் கிராமத்தின் பொறுப்பு ஆங்கிலேய அதிகாரி டேவிட் விக்டர்.

மனித உருவில் இருக்கும் வெள்ளை அரக்கன்.


மனிதனை மனிதனாக நடத்த வேண்டும் என்பது அனைத்து சமயங்களிலும் பல்வேறு தெய்வங்களாலும் கற்றுக் கொடுக்கப்பட்ட போதனை.


ஆனால் நிறத்தையும் அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு தன்னைத் தானே உயர்த்தி காட்டிக் கொள்ளும் கயவர்களும் இங்கு தானே வசிக்கின்றனர்.


டேவிட் விக்டரை கண்டதும் அனைத்து தொழிலாளர்களும் அவசரமாக ஓடி வந்து, அச்சத்துடன் குனிந்து நின்று அவனுக்கு வணக்கம் வைத்தனர்.


தனக்கு இருபுறமும் வரிசையாக குனிந்து நிற்பவர்களை ஒரு வித ரசனையுடன் ரசித்தபடியே கையில் ஒரு குச்சியை ஆட்டி கொண்டு நடந்து வந்தான் டேவிட்.


அதுவரை ஏதோ சிந்தனையில் இருந்த இளங்கோவன், டேவிட்டின் தோரணையையும் அவன் முகபாவனையையும் கண்டு ஆத்திரம் பொங்க கை முஷ்டியை இறுக்கிக் கொண்டு நின்றான்.


டேவிட் கண்களில் தெரிந்தது அதிகார தோரணை. தனக்கு கீழ் இருக்கும் அடிமைகளை நோக்கும் அற்பமான பார்வை. வியர்வை வடிய உழைத்து கொட்டும் தொழிலாளர்களை, ஏதோ விலங்குகளை பார்ப்பது போன்ற ஒரு உதாசீன பார்வை.


அவனுக்கு குனிந்து வணக்கம் வைக்கும் தொழிலாளர்கள், நிமிர்ந்து பார்த்தால் தானே அவன் பார்வையின் அர்த்தம் புரியும்.


அங்கு வரிசையாக அத்தனை பேரும் குனிந்திருக்க, ஒருவனின் தலை மட்டும் நிமிர்ந்து இருந்தது. அது இளங்கோவன்.


இளங்கோவனின் தலை நிமிர்ந்திருப்பதிலும், அவன் தன்னைக் கண்டு முறைத்துக் கொண்டு நிற்பதிலுமே டேவிட்டின் பார்வை ஒரு நொடி அவன் மேல் பதிந்தது.


தமிழர்களால் வகுக்கப்பட்ட ஆண் இலக்கணம் பொருந்திய ஆண் மகனாக நின்றிருந்தான் இளங்கோவன்.


அவன் பரந்து விரிந்த அகல புஜங்கள், ஆறடியை தொட்டுவிடும் உயரம், உயரத்திற்கு ஏற்ற எடை, நிறத்தில் ‘நான் ஒரு தமிழன்’ என்பதை பச்சை குத்தும் திராவிட நிறம் என்று இளங்கோவனின் தோற்றத்திற்கு முன்பு, டேவிட்டின் அதிகார தோற்றம் அடி வாங்கியதை போன்று தான் இருந்தது.


அதைவிட மேலாக நேருக்கு நேராக இளங்கோவன் பார்த்த பார்வை தான், அந்த அதிகாரியான டேவிட்டிற்கு சினத்தை கொடுத்திருந்தது.


“யூ ப்ளடி பிளாக் டாக். போவ் டௌன்.” என ‘கருப்பு நாயே! குனிந்து எனக்கு வணக்கம் வை.’ என்று ஆங்கிலத்தில் கூறினான்.


டேவிட் கத்தியதில் அனைவரும் பயத்துடன் நிமிர்ந்து பார்க்க, அப்போதும் சற்றும் அசராமல் தான் நின்றிருந்தான் இளங்கோவன்.


டேவிட் உடன் வந்திருந்த ஏனைய அதிகாரிகள், வேலை செய்யும் தொழிலாளர்கள் என்று அத்தனை பேரும் ‘அடுத்து என்ன நடக்குமோ?’ என்று பார்த்திருக்க, அழகுவேலிற்கே சற்று அச்சம் வந்து விட்டது.


தனக்கு கீழ் அடிப்படையாதவர்களை டேவிட் தன் வெறி நாய்களை வைத்து கடித்து குதற விட்டதை எல்லாம் கண்ணால் கண்டால் யாருக்கேனும் அச்சம் வரத்தானே செய்யும்.


தான் ஆணையிட்டும் தனக்கு குனிந்து வணங்காத இளங்கோவனை கண்டு டேவிட்டின் அந்த வெளிறிய முகத்தில் இருந்த சிறிய கண்கள் சிவப்பாக மாறியது.


அவன் கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்த குச்சியை வைத்து, சுளிர் என்று இளங்கோவனின் புஜத்தில் அடித்தான் டேவிட்.


காட்டில் விளைந்த உறுதியான மரத்தில் செய்த குச்சி ‘சுள்’ என்று தான் இளங்கோவனின் உடலில் பதிந்திருந்தது.


இருப்பினும் சிறு அதிர்வை கூட டேவிட்டின் முன் வெளிப்படுத்தாமல், இறுக்கமாக நின்றிருந்த இளங்கோவனின் செயல் மீண்டும் அந்த வெள்ளையவனுக்கு ஆத்திரத்தை தான் கொடுத்தது.


தனக்கு கீழிருக்கும் ஒருவன், தன்னையே எதிர்த்து நிற்பதை எப்படி அந்த அதிகார மிருகம் விரும்பும்?


மீண்டும் மீண்டும் இளங்கோவனை தனக்கு வணக்கம் வைக்க சொல்லி, குச்சியால் தாக்கினான் டேவிட்.


எதிர்த்து நிற்க ஒரு வினாடி போதும் இளங்கோவனுக்கு. ஆனால் அவன் மட்டும் அப்படி செய்து விட்டால், பிறகு இங்கிருக்கும் ‘தொழிலாளர்களின் நிலையை நினைத்தும் பார்க்க முடியாத அளவு மோசமாக்கி விடுவார்கள்’ என்ற ஒரே காரணத்தினால் அத்தனை அடியையும் வாங்கிக்கொண்டு பாறையை முழுங்கியவனை போல் கல்லாய் நின்றிருந்தான்.


அவன் அப்படி இருக்க இருக்கத்தான் டேவிட்டிற்கு மண்டையில் மேலும் வெறி ஏறியது.


அவன் வைத்திருந்த குச்சி பிய்ந்து நாராய் தொங்கும் வரை அடி வெளுத்து விட்டான்‌.


அப்போதும் உறுதியாக நிற்கும் இளங்கோவின் மேல் பொல்லாத கோபம் கொண்டான்.


அந்நேரம் இளங்கோவனை காப்பதற்காகவே, டேவிட்டின் இந்திய உதவியாளன் வந்து இருவரையும் பிரித்து விட்டான்.


டேவிட்டை சமாதானம் செய்து உள்ளே அழைத்துக் கொண்டு அவன் சென்றதும், வேகமாக வந்த அழகுவேல் இளங்கோவனின் சட்டையை விலக்கிப் பார்க்க, அடித்த தடம் நீட்டமாக பதிந்து போய் சிவந்து கன்றி இருந்தது.


“ஏலேய்! உனக்கு என்ன புத்தி கெட்டு போயிருக்கா? அவன் கிட்ட போய் திமிரிட்டு நின்னா நம்மள சும்மா விடுவான்னு நினைச்சியா?” என்று திட்டினான்.


ஆனால் அத்தனை அடியையும் வாங்கியவனோ, சற்றும் அதை நினைத்து அழுத்திக் கொள்ளாமல் தன் வேலையை பார்க்க சென்று விட்டான்.


அங்கிருந்த சிலருக்கு தான் இந்த அதிகார அக்கிரமங்கள் என்று தான் தங்கள் தலையெழுத்தில் இருந்து அகற்றப்படுமோ என்ற ஏக்க பெருமூச்சு.


-கனா 🤎
 
Top Bottom