• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு காதல் கனா காண்போம் - 8

STN - 91

New member
நாட்கள் யாஸ்மினுக்கு இளங்கோவனின் நினைப்பிலேயே கழிய, உடல் மெலிந்து, அவள் முழுமதியை ஒத்த பிரகாசமான நிறம் சற்று மங்கி போய், கண்களுக்கு கீழ் உறக்கம் இல்லாததால் வந்த கருவளையத்துடன், ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போய் கிடந்தாள்.

அவள் தங்கை மரியமையும் தமக்கையுடன் சேர விடாமல் பிரித்து வைத்திருந்தார் பாத்திமா.

‘ஏன்?’ என்று கேட்டால், தங்கையையும் சேர்த்து கெடுத்து விடுவாளாம் அக்காள்.

தன் சொந்த வீட்டிலேயே ஏதோ விரோதியைப் போல் தான் வாழ்ந்து கொண்டிருந்தாள் யாஸ்மின்.

அவள் வாழ்வில் எந்த வித பிடிப்பும் கிடையாது.

‘அடுத்த நொடி என்ன நடக்கும்?’

‘அடுத்த விடியலில் என்ன நடக்கும்?’ என்று சிந்தித்து சிந்தித்தே ஒவ்வொரு நாளும் நரகமாய் கடந்து கொண்டிருக்கிறது அவளுக்கு.

காதரும் மகளுக்கு தீவிரமாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்ன அவர் நேரம் வரதட்சணை வேண்டும் என்று தான் பெண் கேட்டு வந்தனர்.

பின்னே யாஸ்மின் என்ன கடையில் விற்கும் காய்கறியா? வந்த விலைக்கு விற்றுவிட்டு போவதற்கு. உயிருள்ள ஒரு பெண்ணை பேரம் பேசுவது போல் தான் அவள் வாழ்வும் கைமாற்றி விட பேசப்பட்டு வந்தது.

அதிலும் தந்தையே தன் சொந்த மகளின் மானத்தை காற்றில் பறக்க விட்டால், அந்தப் பெண் சமுதாயத்தால் எவ்வாறு முத்திரை குத்தப்படுவாள்.

அதன் பின் யார் அவளை மணக்க முன் வருவர்? வருபவர்களும் தங்கள் ஆதாயத்தை தேடி தானே வருவார்கள்.

ஏதோ ஒரு வகையில் காதர் அன்று அன்பழகனிடம் கோபத்தில், இடம் பொருள் ஏதும் தெரியாமல் கத்தியது, இன்று வரை யாஸ்மினுக்கு திருமணம் ஆகாமல் தடுத்து வருகிறது என்று கூட கூறலாம்.

அன்று மாலையும் சோர்வாக வீடு திரும்பிய காதர், “அந்த இடத்திலும் அதிகமா நகை நட்டு கேக்குறாங்க பாத்திமா. அந்த இடமும் சரி வராது.” என்று கூறினார்.

“இந்த சனியனுக்கு இனி தங்கத்தில நகை நட்டு வேற போட்டு அனுப்பனுமா? இறைவா! எங்களுக்கு ஒரு நல்ல வழி விட மாட்டியா நீ?” என்று புலம்பியது அறைக்குள் சாய்ந்து அமர்ந்திருந்த யாஸ்மினுக்கும் தெளிவாகவே கேட்டது.

“இவள தினம் கண்காணிக்கிறதே வேலையா போச்சு. இவள தொலைச்சு விட வேற எதுவும் வழியே இல்லையாங்க?” என்று கணவரிடம் கேட்டார்.

“நகை அதிகமா கேட்காத மாப்பிள்ளை வரவரைக்கும், இவள வெச்சிருந்து தான் ஆகணும்.

ஆனா இனியும் இவள இந்த அளவு கண்காணிக்கணும்னு அவசியம் இல்ல. அந்த பையன் ஏதோ சுதந்திர இயக்கத்தில் சேரணும்னு மெட்ராசுக்கு போறானாம்.

வெள்ளிக்கிழமை காலைல போற கப்பல்ல தான் கிளம்ப போறான்னு பேசிக்கிட்டாங்க.” என்று பேச்சுவாக்கில் இளங்கோவன் சுதந்திர போராட்ட இயக்கத்தில் சேர்வதற்காக நெடுவயல் கிராமத்தை விட்டு புறப்படும் செய்தி அறிந்து வந்தவர், அதை தன் மனைவியிடம் உரைத்தார்.

“ஓ. இதுல இது வேறயா? எப்படியோ அவன் இந்த ஊர்ல இருந்து போனா நம்ம பயமாவது கொஞ்சம் குறையும். போயும் போயும் ஒரு போராட்டக்காரன புடிச்சு ஆசை வச்சிருக்கா பாருங்க.” என்று அப்போதும் கருவிய படி தான் இருந்தார் பாத்திமா.

அவன் பெயரை கேட்டதும் தான், துவண்டு போய் கிடந்த அவள் நரம்புகள் யாவும் உயிர் பெற்று வந்திருக்க, வேகமாக கதவின் அருகில் நின்று வெளியில் பேசுவதை கேட்டாள் யாஸ்மின்.

தந்தை தன்னவனை பற்றி கூறிய செய்தி, அவளுக்கு அதிர்ச்சியாக இல்லை.

மாறாக அவன் தனக்காக இத்தனை நாள் அவன் லட்சியத்தை விடுத்து காத்திருந்ததே அவளுக்கு பெரிதாக தான் தோன்றியது.

ஆயினும் அவனை தவறாக நினைக்க அவளுக்கு மனம் வரவில்லை. அவ்வளவு சுயநலமான காதலும் அவளது இல்லை.

கதவின் ஓரம் பிடியற்ற மரமாய் சாய்ந்து அமர்ந்து, முகத்தை மூடி அழுதவள் மனம் இறுதியாக, ‘அவன் இந்த கிராமத்தை விட்டு செல்வதற்கு முன் இறுதியாக ஒரு முறை அவனை கண்டுவிட வேண்டும்.’ என்று மட்டும் கூச்சலிட்டு கதறியது.

‘செல்பவன் மீண்டும் வருவானா? ‘தன்னை மீட்பானா?’ என்பதெல்லாம் காலம் இருவருக்கும் வைத்திருக்கும் ரகசிய விடைகள் ஆயிற்றே.

ஆனால் எப்படி செல்வாள்? எந்நேரமும் கதவை பூட்டி வைத்து உணவை மட்டும் தந்து, தேள் கொட்டுவதைப் போல் கொட்டி செல்லும் அன்னையை மீறி அந்த அவளால் வீட்டில் இருந்து வெளி செல்ல முடியாதே.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அனைத்தையும் மறந்து, ஏன் தன்னையே மறந்து தன் நாட்டின் விடுதலைக்காக முழுமூச்சாக போராட தயாராகி விட்டான் இளங்கோவன்.

தந்தை, மகனே கிடையாது என்று கூறிவிட்டார். தாய் அழுது கொண்டே வழியனுப்பிவிட்டார்.

உணர்வுகள் யாவையும் மனதிற்குள் பத்திரமாக இறுக்கி பூட்டிக்கொண்டு, இறுக்கமான முகத்துடன் அந்த கடற்கரைக்கு தன் பெட்டியுடன் நின்றிருந்தான்.

அவனுடன் அழகுவேலும் நண்பனை வழி அனுப்ப நின்றிருந்தான்.

ஒரு பெரிய கப்பலில் இங்கிருந்து நெடுவையில் கிராமத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் ஏற்றப்பட்டு, மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள பிரதானமான கடற்கரை வழி தான் செல்லும்.

உடன் யார் வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தினால் பயணிக்கலாம். அப்படி பயணிக்கத் தான் அந்த அதிகாலை சூரியன் அஸ்தமனமாகும் வேலையே புறப்பட்டுவிட்டான் இளங்கோவன்.

அவன் கண்கள் இறுதியாக உரியவளின் விழிகளை கண்டுவிட தான் ஓயாது அலைமோதியது.

புறப்படுவதற்கு முன்பு எப்படியாவது அவளிடம் விடை பெற வேண்டும் என்று எப்படி எப்படியோ முயற்சி செய்தவன், இறுதியில் தோல்வியையே தழுவி தன் பயணத்தை தொடங்க தயாராய் இங்கு வந்து நிற்கிறான்.

இறுதி நொடி வரையிலும் அவன் கண்கள் யாஸ்மினை தான் தேடிக் கொண்டிருந்தது.

கப்பல் புறப்படுவதற்கான மணியும் எழுப்பப்பட்டது.

நண்பனின் நிலையைக் கண்ட அழகுவேல் தான் மனம் பொறுக்காமல், “நீ போ மாப்ள. அந்த பொண்ணை எப்பவாவது பார்க்க வாய்ப்பு கிடைச்சா, நீ கிளம்பிட்டேன்னு நான் சொல்லிடுறேன்.” என்று சமாதானம் கூறினான்.

அவன் கூறியதற்கு தலையசைத்துக் கொண்டு அவனிடம் விடை பெற்று கால்களை முன்னோக்கி எட்டு வைத்தான் இளங்கோவன்.

திரும்பித் திரும்பி கடற்கரையையே பார்த்துக் கொண்டிருந்தவன் ‘இதற்கு மேல் அவள் வரமாட்டாள்.’ என்பதை புரிந்து கொண்டு கப்பல் ஏற எத்தனித்தான்.

ஒருவர் பின் ஒருவராக வரிசையாக ஏறிக் கொண்டிருந்த அந்தக் கப்பலில் வரிசையில் இறுதியாக நின்றிருந்த இளங்கோவனின் முறையும் வந்தது.

அவன் கப்பலில் ஏற சென்ற இறுதி வினாடியில், அவன் செவிகளில் வந்து விழுந்தது, வழமையான அவள் சலங்கை ஓசை.

‘தன் செவிகளால் கேட்பது நிஜம் தானா? அது தன்னவளா?’ என்ற பிரம்மை இளங்கோவனுக்கே வந்துவிட, வேகமாய் துடிக்கும் இதயத்தோடு திரும்பி பின்னால் பார்த்தான்.

தூரத்தில் யாஸ்மின் வேகமாக கப்பலை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள். ‘எங்கு கப்பல் புறப்பட்டு விடுமோ?’ என்று அவள் காலில் குத்தும் முட்களை கூட பொருட்படுத்தாமல் வேகமாக வந்து கொண்டிருந்தாள்.

அவளைக் கண்டதும், பெட்டியை அப்படியே போட்டு விட்டு அவளை நோக்கி வேகமாக தானும் ஓடினான் இளங்கோவன்.

எதிரில் இருக்கும் எதுவும் இருவரின் கண்களில் தெரியவில்லை. ‘கண்களை நிறைத்திருக்கும் தன்னவர்களின் பிம்பங்கள் எங்கு மறைந்து விடுமோ?’ என்றே இமைகளை கூட சுருக்காது ஓடினர்.

வெவ்வேறு திசையில் பிரிந்து கிடந்த இருவரும் காதல் எனும் காந்த சக்தியால் ஈர்க்கப்படுவதை போல் ஓடி வந்து வந்த வேகத்தில் கட்டிக் கொண்டனர்.

இருவருக்குள்ளும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள ஏராளமான விடயங்கள் உள்ளது. வலியையும், பயத்தையும், ஏக்கத்தையும், பதட்டத்தையும் பரிமறிக் கொள்ள வேண்டும் என்று உடலின் ஒவ்வொரு நரம்பும் துடித்தது.

ஆயினும் மனம் தங்கள் இணைகளின் இருப்பையே உணர்ந்து கொண்டு நிற்கும்படி கட்டளையிட்டது.

தன் நெஞ்சாங்குட்டிற்குள் அடைந்து கிடக்கும் அவள் முகத்தை, தாடை பற்றி நிமிர்த்தியவன், அவள் இருக்கும் நிலை கண்டு துடியாய் துடித்தான்.

அவன் விழிகள் அவளிடம் எப்படி விடை பெறுவது என்று புரியாமல் தவிப்பதை அவள் அறிந்து விடமாட்டாளா என்ன?

அவனை கண்டதும் பொங்கி வரும் தன் காதல் உணர்வுகளை அடக்கிக் கொண்ட யாஸ்மினோ, “போயிட்டு வாங்க. உங்க லட்சியத்தை நல்லபடியா நிறைவேத்துங்க.

இந்த மக்கள் சுதந்திரமா வாழனும்னு ஆசைப்படுறிங்க தான? அதுக்காக உங்க மனச சிதற விடாம போராடுங்க.

சுதந்திரத்துக்காக காத்திருக்க மக்களோட நானும் இன்னைல இருந்து உங்களுக்காக காத்திருப்பேன்.

நீங்க எப்பவும் சொல்லுவிங்களே, நம்ம காதலுக்கு அதிக சக்தி இருக்கு. நம்ம கனவுகளுக்கும் அதிக சக்தி இருக்குன்னு. நம்ம ஒரு விஷயத்த ஆழமா நமக்கு வேணும்னு ஆசைப்படும் போது இந்த பிரபஞ்சமே நமக்கான வழியே உருவாக்கி தரும்னு சொன்னிங்க தான?

நீங்க சொன்னதை நான் இப்ப நம்புறேன். விதி நம்ம ரெண்டு பேரையும் சேர்க்கணும்னு எழுதி வச்சிருந்தா, நம்ம சேருவோம்.

என்னால என் அப்பா அம்மாவ விட்டு நீங்க மட்டும் தான் முக்கியம்னு வர முடியாது. அதேபோல அவங்களுக்காக உங்களை விட்டுக் கொடுத்து வேற ஒரு வாழ்க்கைய ஏத்துக்கவும் முடியாது.

ஆனா ஒன்னு மட்டும் உறுதி. இந்த ஜென்மத்துல எனக்கு புருஷன்னு ஒருத்தர் இருந்தா, அது நீங்க மட்டும் தான்.

வேற யாரையும் என் உடம்ப தொட விட மாட்டேன். ஒருவேளை அப்படி நடந்தாலும் உங்கள மட்டும் சுமந்துட்டு இருக்க இந்த மனசோட நான் நிம்மதியா செத்துப் போயிருவேன்….” என்று கூறியவளின் வாயை தன் கரம் கொண்டு பொத்தினான் இளங்கோவன்.

அவள் நெற்றியோடு நெற்றி முட்டி நின்றவன், “எனக்கு இப்ப நேரம் இல்ல யாஸ்மின். இன்னும் கொஞ்ச நேரம் உன் பக்கத்தில் இப்படி நின்னாலும், என்னோட லட்சியத்தை விட்டுட்டு உன் காதலுக்காக இங்கேயே இப்படியே இருந்திருவேன்.

எனக்கு எந்த பாதைய தேர்ந்தெடுக்கிறதுன்னு சத்தியமா புரியல. ஒரு பக்கம் நான் ஆசை ஆசையா கனவு கண்ட நம்ம வாழ்க்கை.

இன்னொரு பக்கம் சின்ன வயசுல இருந்து காத்திருக்க என்னோட லட்சியம். ரெண்டுல எந்த வழில போறதுனு தெரியாம குழம்பி நிக்கிறேன்.

நீயே சொல்லு, நான் எதை தேர்ந்தெடுக்கட்டும்?” என்று அவன் மனதில் இருப்பதை தெள்ளத் தெளிவாக கூறியவனின் கண்களும் நீரை சுரந்தது.

அவன் பலவீனத்தை முதல் முறை காண்பவள், கண்களை மூடி ஒரு ஆழ்ந்த முடிவை எடுத்தாள்.

“எனக்கு நல்லா தெரியும். என்னால எப்படி உங்களையும் என் அப்பா அம்மாவையும் விட்டுக் கொடுக்க முடியாதோ, அதேபோல உங்களுக்கு நானும் உங்கள் லட்சியமும்.

முதல்ல போங்க உங்களுடைய லட்சியத்தை நிறைவேத்துங்க. இங்க உங்களோட காதல் பத்திரமா உங்களுக்காக காத்திருக்கும்னு நம்புங்க.

உங்களோட லட்சியத்துக்காக உங்களோடு சேர்ந்து நானும் போராடுறேன்.” என்று கூறியவளை ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியாய் ஏறிட்டான் இளங்கோவன்.

“என்ன பாக்குறீங்க இவ பொண்ணு தானே எப்படி முடியும்னு பார்க்கிறீங்களா?” என்று கேட்டு மெல்லிய புன்னகையை சிந்தியவள், “எதிர்த்து குரல் கொடுக்கிறதுக்கு ஆண் பெண் பேதம் கிடையாது. நம்ம குடுக்குற குரல் எந்த அளவு மக்களை போய் சேருதுங்கிறது தான் முக்கியம்.

உயிரை பணயம் வைச்சு நீங்க இவங்களுக்கு எதிரான போராடினிங்கன்னா, நான் என்னோட எழுத்த வச்சு போராடுறேன்.

உங்களுக்காக உங்களோடு சேர்ந்து போராட பல்லாயிரம் மக்களை ஒன்று திரட்ட, என்னோட எழுத்து மூலமா நானும் இங்கிருந்து போராடுறேன்.

உங்களோட இந்த கனவுக்காக நானும் என்னோட பங்கு கொடுக்கிறேன்.” என்று கூறியவளைக் கண்டு கர்பமாக புன்னகைத்தான் இளங்கோவன்.

மனம் இணைந்து சேரும் காதலில் ஒருவர் கனவை மற்றொருவர் தன் கடமையை ஏற்று தோள் கொடுக்கும் காதல் எல்லாம் எத்தனை பேருக்கு கிடைத்துவிடும்? இதோ இளங்கோவனுக்கு கிடைத்திருக்கிறது.

“இனி என் வாழ்க்கையில இருக்க ஒரே பிடிப்பு நீங்க மட்டும் தான். நீங்க இந்த நாட்டுல எந்த மூலையில இருந்தாலும் சரி என்னோட காதல் என் எழுத்துக்கள் மூலமா உங்ககிட்ட வந்து சேரும்.” என்று அவன் இருக்கிறத்தையும் தன் கைக்குள் அடக்கி கூறினாள் யாஸ்மின்.

அவள் கன்னத்தை ஏந்தி முன் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்த இளங்கோவன், “நிச்சயமா உனக்காக திரும்பி வருவேன் யாஸ்மின்.

சமயங்கள் வேறயா இருந்தாலும், நம்ம ரெண்டு பேரும் நம்புற கடவுள்னு ஒருத்தன் உண்மையாவே இருந்தா நம்ம ரெண்டு பேரும் நிச்சயம் சேர்த்து வைப்பான்.

உன்னோட சுண்டு விரலை கூட என்னை தவிர வேற யாரையும் தீண்ட நீ அனுமதிக்க மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும்.

என்ன லட்சியத்துகாகவும் காதலுக்காகவும் ஒரே நேரத்தில் போராடுற எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல் நீ என் கூட இருக்கிறது தான். நான் போயிட்டு வரேன்.” என்று கூறியவன் அவளின் நெருக்கத்தில் இருந்து மெல்ல மெல்லமாக விலகி அவளைப் பார்த்தபடியே கப்பலை நோக்கி நடந்தான்.

அவள் பின்னை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும், ஒரு அடி முன்னே எடுத்து வைத்து வந்த யாஸ்மின் அவள் கீழே போட்ட பெட்டியை எடுத்துக்கொண்டு, கையை அசைத்தவாறே கப்பலில் ஏறுவதை கண்ணீர் நிறைந்த கண்களுடன் கண்டவள், உதடுகளில் ஒரு உறுதியான புன்னகை பூத்தது.

இளங்கோவன் ஏறியதும் பெரும் சத்தத்துடன் அந்த சரக்கு கப்பல், நெடுவயல் கிராமத்தின் கரையில் இருந்து பிரிந்து கடலில் பயணத்தை தொடங்கியது.

இளங்கோவனின் உடல் மட்டும் தான் கப்பலுடன் முன்னோக்கி சென்றது. அவன் மனம் உரியவளிடமே சரணடைந்து கிடந்தது.

பொங்கும் விழி நீர் அவள் பார்வையை மறைத்ததா இல்லை, வானில் ஏறும் சூரியனின் கதிர்களால் பார்வை தடைப்பட்டதா என்று தெரியவில்லை, தன்னவனின் பிம்பம் சிறிது சிறிதாக தன் கண்ணை விட்டு மறைவதைக் கண்டு அந்த மணலில் விழுந்தவள் வாய் பொத்தி கண்ணீர் சிந்தினாள்.

பல தலைவன் தலைவியின் பிரிவிற்கு சான்றாக இருந்த அந்த கடலும் அலைகளும் நெய்தல் நில மணலும் இன்று இந்த போராட்ட காதலர்களின் பிரிவிற்கும் மௌன சாட்சியாய் அமைந்தது.

இனி இருவரும் ஒருவருக்கொருவர் சந்திப்பார்களா? வாழ்வில் கரை சேருவார்களா? என்று தெரியாத போதிலும் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள காதலை மட்டும் முழுமையாக நம்பி தத்தமது வழிகளில் போராட்டத்தை மேற்கொள்ள பயணமானார்கள்.

-கனா 🤎
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom