ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,482
113
Germany
பார்வை 6

ஸ்கூட்டியில் வந்த பெண் வண்டியை ஓரமாக நிறுத்தி, கோபமாக அவன் காரை நோக்கி வந்தாள். அவனது கார் கண்ணாடியை வேகமாகத் தட்டினாள். அவன் விசையை அழுத்தி கண்ணாடியை இறக்கினான். மாஸ்க் அணிந்து, கண்களில் கூலர்ஸ் அணிந்திருந்த அவனை பார்த்தவள்,

“என்ன மிஸ்டர், கண்ணாடி போட்டும் கண்ணு தெரியலையா?” என்று கேட்டாள். ஒரு நிமிடம் நின்றவள், நக்கலாக,
“ஸ்டைலா கண்ணாடி போட்டா மட்டும் பத்தாது. கண்ணு தெரியுதானு அப்பப்ப செக் பண்ணணும்,” என்றாள்.

அடேய்…
அவனுக்குள் சுறுசுறுவென்று கோபம் கிளம்பியது. ஆனால் வெளியே வராமல், அவன் அடக்கிக்கொண்டான். அவள் விடவில்லை.

“கார் வச்சிருக்கீங்கன்னு இந்த ஊருக்கே ராஜா மாதிரி நினைச்சுட்டீங்களா? கொஞ்சம் மிஸ் ஆனாலும் என் மேல மோதியிருப்பீங்க!”

அவன் கூலர்ஸ்க்கு பின்னாலிருந்து அவளையே பார்த்தான். கோபமா பேசினாலும், அவள் முகத்தில் இருந்த அந்த பரிச்சயமான பாவம் … அவன் மனசு சட்டென்று தடுமாறியது.

“என்னை தெரியவில்லையா இவளுக்கு?” என்று நினைத்தான். பிறகுதான் மாஸ்க் அணிந்திருப்பதை உணர்ந்தான்.

ஏதோ சொல்ல வாயெடுத்தவன், தன்னை அடக்கிக்கொண்டு, “இவளுக்கு வாய் ரொம்ப அதிகமாயிடுச்சு” என்று மனதுக்குள் எண்ணினான்.

பொறுமை இழந்து, “ஹலோ… எக்ஸ்க்யூஸ் மீ,” என்று அவளது பேச்சை நிறுத்த முயன்றான். ஆனால் அவள் நிறுத்தவே இல்லை. கூலர்ஸை கழற்றியவன்—

நீ என் கூட இருந்தாலும், இல்லை என்றாலும்
எனக்குள் எப்போதும் ஏதோ
செய்துகொண்டே இருப்பதை
நீ எப்போது உணர்வாய், பெண்ணே…

என்று தனது பார்வையால் அவளுக்கு உணர்த்த விழைந்தான்.

அவனது பார்வை அவளிடம் ஏதோ பேச முயன்றது. அவனது பார்வையில் துணுகுற்றவள் இரண்டு அடிகள் பின்னால் சென்றாள் .

“ஏன் இப்படி பார்க்கிறான்?” என்று அவள் யோசிக்கும் நேரத்தில், அவன் மாஸ்கை கழற்றினான்.

“சாரி,”
அவனின் இறுகிய குரல் கொஞ்சம் கரகத்ததோ.

எதற்காக அந்த “சாரி”? இப்போ நடந்ததற்கா, இல்லையெனில் எப்போதோ நடந்தவற்றுக்கா—அதை அவனே அறிவான்.

அவனை பார்த்ததும் அவளது நெஞ்சம் நின்று துடித்தது. சற்று முன்னர் அவன் விழிகளில் இருந்த கூர்மை, அந்த குரல்—அவளுக்கு ஏதோ நினைவூட்டியது. பதட்டத்தில் அதை உணர முயலவில்லை. அவனை பார்த்த அவள் விழிகள் சட்டென விரிந்தன. திகைப்பில் வார்த்தைகள் விடுதலை எடுக்க பேச முடியாமல் உறைந்து நின்றாள்.

ஆனால் அவன் எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டவில்லை. “சாரி” என்றவன், தனது காரை கிளப்பிச் சென்றான்.

உலகமே திடீரென ஸ்தம்பித்ததுபோல் நின்றாள் அவள்.
அவன் பார்வை அவளை சாதாரணமாகப் பார்த்துக்கொண்டே நகர, அவள்தான் தடுமாறிப் போனாள். அவள் கண்களில், அவளையும் அறியாமல் நீர் கசிந்தது. கன்னங்களில் ஈரத்தை உணர்ந்தவள், யாரும் பார்க்கும் முன்னர் அதைத் துடைத்துக்கொண்டாள். தன்னை கொண்டாடிய கண்களில் எந்த உணர்வும் இல்லாமல் அவன் தன்னைப் பார்ப்பது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது.

எப்போதும் அவன் கண்கள் அவளுக்கான காதலைச் சுமந்து கொண்டிருக்கும். அவனது இதழ்கள் அவளுக்கான சிறு புன்னகையால் மலர்ந்திருக்கும். அவன் கோபம் கொள்ளும் சமயங்களைத் தவிர, மற்ற நேரங்களில் அவனின் இயல்பு இதுதான். அவன் இறுதியாக பார்த்த நாளில் கொண்ட கோபம்கூட அவள் மீதான அவனின் அன்பின் தீவிரமே. தனக்குச் சொந்தமான பொம்மையை யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று சொல்லும் குழந்தையின் தீவிரம் அது.

அந்த அன்பின் உரிமை.
அந்த உரிமையின் காதல்.

ஆனால் இப்போது…

அந்த எல்லாமே இல்லை.
மீதி இருந்தது—வெறுமை.


நினைவுகளின் பாரம் மனத்தை நசுக்க, வண்டியை உணர்வே இல்லாமல் தன்போக்கில் செலுத்தினாள். எப்படி வீடு வந்தாள் என்பதே அவளுக்குத் தெரியவில்லை.

முகம் வாடி வந்த மகளைப் பார்த்த பரிமளத்திற்கு, முன்னொருமுறை மதுமதியை இதேபோல் பார்த்த நினைவு வந்து போனது. என்னவாக இருக்கும் என்ற பதற்றம் மனதுக்குள் எழுந்தது; வெளிக்காட்டவில்லை. அன்று கண்ட அதே வலியுடன் கூடிய முகம்…

அன்னை தனது முகத்தை கூர்ந்து நோக்குவதைப் பார்த்த மதுமதி முகத்தை இயல்பாக்கினாள்.
“என்னம்மா, அப்படிப் பார்க்குறீங்க? அதுக்குள்ள என் முகம் மறந்துடுச்சா?” என்றாள், வெளியில் சொல்ல முடியாத, உள்ளே மட்டும் கொந்தளிக்கும் வேதனை மறைத்துச் சிரித்துக்கொண்டு.

“ம்கூம்… உனக்கு வர வர வாய் கூடிப் போச்சு. முகம் வாடியிருக்கேன்னு பார்த்தேன். ஏன் டா, என்னவோ போல இருக்க? வேலைல ஏதாவது பிரச்சனையா?” என்றார் பரிவுடன்.

சுதாரித்தவள்,
“வேலைல பிரச்சனையா… அம்மா, இவ்வளவு தூரம் அதுவும் இங்க இருக்குற டிராபிக்குல வண்டி ஓட்டிட்டு வந்திருக்கேன். டையர்டா இருக்காதா?” என்றாள், புன்னகை மாறாமல்.

தாய் அறியாத சூலாக, மகள் ஏதோ மறைக்கிறாள் என்பதை உணர்ந்தாலும், அவர் அதைத் தூண்டித் துருவவில்லை.
“சரி மது, அப்பா கோவிலுக்குப் போகணும்னு சொன்னார். ரெடியா ஆகி வா. நான் உனக்கு காப்பி கலக்குறேன்,” என்றார்.

“சரிம்மா,” என்றவாறு அவள் தனது அறைக்குள் நுழைந்தாள்.

வசீகரன் காரை போர்டிக்கோவில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தபோது, அவன் தம்பி வருணிடமிருந்து அழைப்பு வந்தது.
“அண்ணா, நான் ரயில்வே ஸ்டேஷன் வந்துட்டேன். என்ன பிக்-அப் பண்ணிக்க ப்ளீஸ்,” என்றான்.

“டேய், இப்போதான் வீட்டுக்கு வந்தேன்,” என்றவனை குறுக்கிட்டு,
“பரவாயில்லை வாடா, டைம் பாஸ்க்கு ஒரு ரவுண்ட் போறதா நினைச்சுக்க. ப்ளீஸ்… ப்ளீஸ்,” என கெஞ்சினான்.

அவன் கெஞ்சலில் இளகிய வசீகரன், அவனை அழைத்து வரச் சென்றான்.

“பரி… மது வந்திட்டாளாமா?” என்றவாறு அவள் அப்பா கணேசமூர்த்தி, முகுந்தனுடன் வீட்டுக்குள் நுழைந்தார்.

நால்வருமாக கோணியம்மன் கோவிலுக்கு சென்றனர். அன்று ஆடி வெள்ளி ஆதலால் சந்நிதியில் மிகவும் கூட்டமாக இருந்தது. அம்மனை தரிசனம் செய்துவிட்டு வெளிப் பிரகாரத்தில் சுற்றி வந்தவர்கள், அங்கிருந்த முருகன் சந்நிதி அருகே அமர்ந்தனர்.

அப்போது “மது” என்று அழைத்தவாறு அங்கே வந்தவர் வேறு யாருமல்ல — மீனாட்சி தான்.

மது புன்னகைத்தவாறு எழுந்து நிற்க, அருகே வந்தவர்,
“அம்மனை தரிசிச்சுட்டீங்களா டா?” என்றார்.
“ஆமாம், ஆண்டி,” என்றாள் மது.

அருகில் நின்றிருந்த பரிமளத்தை பார்த்த அவர், கண்களைச் சுருக்கி கூர்ந்து பார்த்தார். மது அறிமுகப்படுத்தும் முன்பே,
“மீனு, நீ எப்படி இருக்க? நான் பரிமளா,” என்றார்.

மிகுந்த புன்னகையுடன் பரிமளத்தை பார்த்ததும்,
“பரி, எப்படி இருக்க? எவ்வளவு நாள் ஆச்சு உன்னைப் பார்த்து,” என்றபடி மீனாட்சியும் கட்டிக்கொண்டார்.

பரிமளாவும்,
“மீனு, நீ இன்னும் மாறவே இல்லை,” என்றவாறு அணைத்துக் கொண்டார்.

பல காலம் கழித்து சந்தித்த மகிழ்ச்சியில் இருவரும் சுற்றுப்புறம் மறந்து அளவளாவிக் கொண்டிருந்தனர். மதுமதியோ வியப்பில், அவர்களையே விழியசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மட்டுமல்ல, மற்றவர்களும் அவர்களைச் சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கணேசமூர்த்தி மட்டும் ஒரு ஆராயும் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

நிதானத்திற்கு வந்த தோழிகள் இருவரும், அப்போது தான் சுற்றி இருந்தவர்கள் தங்களை விழி விரித்து பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து அசடு வழிந்தனர்.

உடனே மீனாட்சி,
“என்னுங்க, இவதான் என் உயிர் தோழி பரிமளா. நான் சொல்லி இருக்கேன்ல,” என்றார்.

பின்னர் அவர் காதருகில் சென்று,
“என் ஃப்ரெண்ட் காதல் கல்யாணம் பண்ணி ஊரை விட்டு போயிட்டா. எங்க மேல்தெரு பெரியம்மா பையன் — அதான் மூர்த்தி அண்ணன் — இவளைத் தான் லவ் பண்ணி கல்யாணம் செஞ்சார்,” என்றார்.

சொக்கலிங்கம் அவர் வேலை காரணமாக அப்போதெல்லாம் அங்கே அடிக்கடி செல்ல மாட்டார். மேலும் கணேசமூர்த்தியும் திருமணம் முடித்து வெளியூரிலேயே இருந்ததால் அவ்வளவு பழக்கம் இல்லை.

“அட, சின்னவன் வயித்துல இருக்கும் போது நான் ஊர்ல இருந்தேன்ல. நான் கூட அதுக்கு உதவி செஞ்சேனு சொன்னேன்ல,” என்றதும்,

“போதும் மா, பார்… அவங்க நம்மளையே பார்க்குறாங்க,” என்று சொக்கலிங்கம் சுதாரித்தார்.

அவர்களைப் பார்த்து புன்னகைத்தவாறு,
“மது, உன் பொண்ணா?” என்றார்.மீனாட்சி

“ஆமாம்,” என்று பரிமளம் தலையசைத்தார்.

அருகில் நின்ற முகுந்தன்,
“நான் பையன்,” என்றான்.

“சும்மா இருடா, முந்திரி கொட்டை,” என்றார் பரிமளா.

“நான் சொல்ல மாட்டேனா?” என்றார்.

“இல்லம்மா, நீங்க மறந்துட்டீங்கன்னு நினைச்சு, நானே என்னை அறிமுகம் செஞ்சிட்டேன்,” என்றான் முகுந்தன்.

“வாலு பையனா இருப்பான் போல,” என்றார் மீனாட்சி.

“ஆமாம் மீனு, ரொம்ப வாலு. இவனை அடக்க அவன் அக்காவால்தான் முடியும்,” என்றார் பரிமளா.

“இங்கையும் அப்படித்தான். என் ரெண்டாவது பையன்,” என்றார் அருகில் இருந்த வரூணை பார்த்தவாறு.

“அம்மா…” என்றான் பல்லைக் கடித்தவாறு.

“என்னடா? அம்மா சொன்னா கோவம் வருதா? நீயும் உன் அண்ணனுக்குத்தானே அடங்குவ. வாலுனு சொன்னா கோவம் வருதுன்னா, வாலுதனம் பண்ணாத,” என்றார் செல்லமாக.

“குழந்தை… பரவாயில்லாத அளவுக்கு குறும்பு பண்ணுவான். எது பேசினாலும் நக்கல் கிண்டல். அவன் அப்பாவோட சேர்ந்து ரெண்டு பேரும் வீட்டையே ரெண்டாக்கிடுவாங்க,” என்றார்.

என்று சொல்ல, சொக்கலிங்கமும் வரூணும் ஒருவரை ஒருவர் பார்த்து,
“ஒய் பிளட்… சேம் பிளட்,” என்றவாறு பார்த்துக் கொண்டனர். ஒரு தொலைபேசி அழைப்பு வர சொக்கலிங்கம் பேசிவிட்டு வருவதாக சொல்லி சென்றார் .

வருண் எல்லோரையும் ஒருமுறை பார்த்து மரியாதைக்காக சிரித்தான்.
“என் மானத்தை வாங்குறாயங்க,” என்று சலிப்புடன் நினைத்தவன், தன் செல்போனை நோண்டத் தொடங்கினான்.

உடனே பரிமளா,
“இங்கேயும் அப்படித்தான். ஆனா அவங்க அப்பா பார்த்தா கொஞ்சம் பயம்,” என்றார்.

“மூர்த்தி அண்ணா, எப்படி இருக்கீங்க? பரிமளாவை இப்படி எங்க கண்ணுல காட்டாம இத்தனை வருஷமா வெளியூர்லயே இருந்துட்டீங்களே,” என்றார் உள்ளார்ந்த வருத்தத்துடன்.

“நம்ம சித்ரா அக்கா எப்படி இருக்காங்க, அண்ணா? அவங்களுக்கு ஒரு பையன் தானா? நீங்க எப்போ கோவை வந்தீங்க? என்கிட்ட ஏன் சொல்லல?” என்று விடாமல் கேள்விகளால் அவரை நிறைத்தார்.

அதற்கு அவர்,
“அக்கா நல்லா இருக்காங்க. அவங்க பையனும் ஐடில்தான் வேலை பார்க்கிறான். நாங்க கோவை வந்து ஆறு வருஷம் ஆகுது மா,” என்றார் நிதானமாக.

“என்ன… ஆறு வருஷம் ஆச்சா? எனக்கு தெரியவே இல்ல பாருங்க,” என்று அங்கலாய்ப்புடன் சொல்ல,

“அது மீனு, நாங்க ஊர்பக்கமே போகலை. அதுதான் யாருக்கும் தெரியலை… உனக்கும்,” என்றார் சங்கடமாக.

“சரி, நீ சொல்லு. வள்ளி அக்கா எங்க இருக்காங்க? எப்படி இருக்காங்க? அவங்களுக்கு எவ்வளவு குழந்தைகள்?” என்று தொடர்ந்து கேள்விகளால் தாக்கினார்.

பரிமளத்துக்கு முகம் கன்றியது.

“அக்கா நல்லா இருக்கா. அவளுக்கு கல்யாணம் ஆகல… வேண்டாம்னு சொல்லிட்டா,”
என்று சொல்லி முடிப்பதற்குள் பரிமளா சற்று திணறி விட்டார்.

அதை எல்லாம் மீனாட்சி கவனிக்கவில்லை. நீண்ட நாள் கழித்து தோழியை கண்ட மகிழ்ச்சியில் அவருடைய உள்ளம் துள்ளிக் கொண்டிருந்தது.

இப்போது வரூண் தான்,
“அம்மா, நீங்க எங்ககிட்ட தான் இப்படின்னு நினைச்சேன். பார்க்கிற எல்லார்கிட்டயும் இப்படித்தான் கேள்வி கேப்பீங்களா? ஆண்டி, உங்க ஃப்ரெண்ட் எப்பவுமே இப்படித்தானா?” என்றான் கிண்டலாக.

பரிமளா பதில் சொல்லும் முன்பே,
“நீயும் உன் அப்பாவும் என்னை ஏதாவது சொல்லணும்னா உடனே வந்திடுவீங்களே,” என்று மீனாட்சி முறைத்தார்.

அப்போது பரிமளா,
“விடு மீனு… சின்ன பசங்க அப்படித்தான்,” என்றார் புன்னகையுடன்.

வரூணும் புன்னகைத்தான்.

இவை அத்தனையும் மதுவும் முகுந்தனும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இரு குடும்பங்களும் இவ்வாறு பரஸ்பரம் விசாரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் அன்று கோயிலில் இருந்து விடைபெற்றனர். மீனாட்சிக்கும் பரிமளத்திற்கும் மனது மிகவும் நிறைவாக இருந்தது. நெடுநாள் கழித்து தோழியை சந்தித்ததில் மனம் நெகிழ்வாக இருந்தது.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Magizh kutty

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
380
83
Chennai
அட பரி - மீனு பிரெண்ட்ஸ் 🤩🤩🤩🤩🤩
மீனு ஓட பெரியம்மா பையன் தான் மது அப்பாவா?????
அப்பறம் ஏன் சரியா பேச.மாட்டேங்கரா?????
வள்ளி யாரு? மது பெரியம்மாவா?????
இவங்க லவ் மேரேஜ் பண்ணினதில் அவங்களுக்கு கல்யாணம் ஆகலையோ 😔😔😔😔
இல்ல அவங்க கல்யாணம் மறுக்க காரணம் மது அப்பாவா😳😳😳😳😳