• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்களுக்குள் பள்ளி கொண்டேன் - 11

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 11

“அப்போ சரிபா சொன்னாரு உண்மை தான் போல?” என்ற தனக்குள் சொல்லிக் கொள்வது போல சற்று சத்தமாகவே ஆண்ட்ரூ சொல்லிய போதும் சட்டை செய்யாமல் அமைதியாக நின்று இருந்தான் ஜெகதீஸ்வரன்.

அவன் கவனம் முழுவதும் இறங்கிக் கொண்டிருந்த மின்தூக்கியின் மீது இருந்தது.

அடித்தளத்தை அடைந்த மின் தூக்கி கதவு திறக்கப்பட மடிக்கணினியின் பையை சரி செய்தபடி வெளியே வந்தாள் சக்தி.

அவள் கண்களுக்கு முதலில் தென்பட்டது ஆண்ட்ரூதான். இந்த நேரத்தில் இவன் இங்கு என்ன செய்கிறான் என்ற குழப்பத்தோடு புருவங்கள் நெரிய பார்த்தவள் கண்களுக்கு அடுத்ததாக தென்பட்டான் ஜெகதீஸ்வரன்.

அவன் கண்ணில் பட்ட அடுத்த நொடியே மற்றவை அனைத்தும் கருத்தில் இருந்து மறைந்து போக வேகமாக நடையை எட்டிப் போட்டவள் அவன் அருகே வந்தாள்.

தன் அருகில் வரும் வரை அவளையை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த ஜெகதீஸ்வரன், “கேப் வெயிட்டிங் சக்தி.” என்று சொல்ல,

“ஓகே சார். கிளம்புறேன்…” என்றவள் சற்று தயங்கி, “தேங்க்ஸ் சார் தேங்க்யூ சோ மச் ஃபார் எவ்ரிதிங்.” என்றாள் மலர்ந்த முகத்தோடு.

இரவில் மலரும் அல்லியைப் போல இருந்த அவளது முகம் அவனுக்குள் ஒரு நிறைவை தந்தது. அவனையும் அறியாமல் மலர்ந்தது ஜெகதீஸ்வரனின் முகமும் அவளுக்கு இணையாக.

மெதுவாக தலையசைத்து அவனும் விடை கொடுக்க, அவனிடமிருந்து விடை பெற்றுக் கொண்டவள், அவனுக்கு சற்று தள்ளி தனது கார் மீது சாய்ந்து நின்று இருந்த ஆண்ட்ரூவை கடக்கும் பொழுது “குட் நைட் சார்…” என்று வாழ்த்த அவனும் முகம் முழுவதும் புன்னகையை தத்தெடுத்தவனாக குட் நைட் சக்தி என்று வாழ்த்த, அதை கவனித்தாலும் கருத்தில் கொள்ளாமல் மென்புன்னகையோடு ஏற்றுக்கொண்டு எப்பொழுதும் போல தன் வேக நடையோடு அவர்களை விட்டு விலகிச் சென்றாள்.

அலுவலக நுழைவாயில் அடைந்தவள் கண்முன்னே கண்ட வாகனத்தைக் கண்டு மீண்டும் திகைத்தாள்.

அங்கே நின்று கொண்டிருந்தது வாடகைக்கு வரும் வாகனம் அல்ல. அலுவலகப் பணியாளர்களுக்கு என்று செயல்பட்டுக் கொண்டிருந்த வாகனமும் அல்ல. அங்கே நின்று கொண்டிருந்தது ஜெகதீஸ்வரனின் ஆவ்டி கார்.

கண்கள் ஆழியாக விரிய, மீண்டும் திரும்பி ஜெகதீஸ்வரனை அவள் பார்க்க தலையசைத்து செல்லுமாறு கூறினான் அவன்.

அப்பொழுதுதான் அதை கவனித்த ஆண்ட்ரூ, “இது எப்படா? என்னங்கடா நடக்குது இங்க?!” என்று மார்பில் கையை வைத்துக்கொண்டு அதிர்ந்தது போல அவன் கேட்க, எப்பொழுதும் போல பதில் தான் கிடைக்கவில்லை அவனுக்கு.

“கொஞ்சம் கொஞ்சமா ஷாக் குடுடா. மொத்தமா கொடுத்தீங்கன்னா போய் சேர்ந்துடுவேன்…” என்று புலம்பியபடி அவன் நிற்க, துளியும் அவனை கவனிக்கவில்லை ஜெகதீஸ்வரன்.

காரில் ஏறி அமர்ந்தவள் மீண்டும் திரும்பி அவனை பார்த்து தலையசைத்து விடை பெற்று கிளம்பிச் சென்றாள். அவளைத் தாங்கிய கார் அவன் கண்ணை விட்டு மறையும் வரை கைகட்டி பார்த்துக்கொண்டு நின்று இருந்தான் ஜெகதீஸ்வரன்.

“கார் போய் 15 மினிட்ஸ் ஆயிடுச்சு டா. கிளம்பு. நானும் கிளம்பனும்.” என்று பொறுக்க மாட்டாமல் ஆண்ட்ரூ அவன் தோளில் வந்து அடித்த பிறகு அவனை நோக்கி திரும்பியவனின் பார்வை கூர்மையாய் அவன் மீது படிந்தது.

“என்ன வேணும் உனக்கு?” என்று காதை தேய்த்தபடி ஜெகதீஸ்வரன் நண்பனை பார்த்து கேட்க,

“பரவாயில்லையே இப்பயாவது பக்கத்துல ஒரு ஜீவன் இருக்குன்னு உன் கண்ணுக்கு தெரிஞ்சிச்சு அந்த மட்டில சந்தோஷம்.” அவன் குத்தலாக சொல்ல,

“ஓகே பாய்…” என்று இரண்டே வார்த்தைகளில் முடித்துக் கொண்டு ஜெகதீஸ்வரன் கிளம்ப,

“இன்னைக்கு காலையில பார்க்கும்போது கொஞ்சமா டவுட்டு இருந்துச்சு. சர்வா கூட சொன்னான். நான் நம்பல. ஆனாலும் மனசு கேட்கல என்னவா தான் இருக்கும்னு கன்ஃபார்ம் பண்ணிக்க தான் வெயிட் பண்ணுனேன். மணிரத்தினம் பட ஹீரோ ஹீரோயின் போல பார்வையாலே பேசுக்கிறது என்ன? ஒரு வார்த்தைல பதில் சொல்லிக்கிறது என்ன… சொல்லாத வார்த்தைக்கு அர்த்தம் புரிஞ்சிக்கிறது என்ன? சம்பந்தமே இல்லாம கரண்ட் கட் ஆகி அதுவும் அஞ்சு நிமிஷம் ஹோல்டாகி… அந்த நிமிஷத்துல காதல் பயிர வளக்குறது என்னன்னு எனக்கு நெஞ்சு வலியே வர வெச்சதும் இல்லாம… இப்போ அதெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு சொல்றது போல ஆவ்டி காரை கொண்டு வந்து வாசல்ல நிறுத்திட்டு வெயிட் பண்ணிட்டு இருக்கது என்ன… என்ன என்ன… இத்தனை என்ன இருக்கு. இதுல நான் என்னன்னு சொல்ல?” என்று பாட்டாக பாடியவன்,

“ஆனாலும் சொல்லுவேன் மச்சி உனக்கு அந்த பொண்ண புடிச்சிருக்கு டா.” என்று இறுதியாக சொல்லியும் இருந்தான் ஆண்ட்ரூ.

காரின் கதவை பிடித்தவனின் கைகளில் இறுக்கம் அதிகரிக்க “அந்த பொண்ணுக்கும் உன்ன பிடிச்சிருக்கு.” என்றும் சொல்ல திரும்பி நண்பனை பார்த்தான் ஜெகதீஸ்வரன்.

“எல்லாம் ஓகே… ஆனா உங்க பேமிலி நெனச்சா…” என்று நிறுத்தியவன்,

“அதெல்லாம் நீ பாத்துக்குவேன்னு எனக்கு தெரியும். மிடில் கிளாஸ் பையனான எனக்கும் என்னோட கனவுல கூட நினைச்சே பார்க்க முடியாத உயரத்தில் இருந்த யாழினிக்கும் எத்தனையோ தடைகளை தாண்டி எல்லாத்தையும் சமூகமா முடிச்சு கல்யாணம் பண்ணி வச்ச உன்னால உன்னோட ஃபேமிலிய மேனேஜ் பண்ண முடியும் எனக்கு தெரியும். சோ…சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கோ மச்சி.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவனது அலைபேசி இசைத்தது.

“வந்தாச்சு… கடைசி எச்சரிக்கை வந்துருச்சு. இதுக்கு மேல லேட் பண்ணினா வீட்டுக்குள்ள கால் எடுத்து வைக்க முடியாது. கேரேஜ்ல (carriage) தான் படுக்கணும். வெல்கம் டு ஃபேமிலி மேன் வேர்ல்ட் மச்சி…” என்று படபடத்தவன், நொடியும் தாமதிக்காமல் பதிலைக் கூட எதிர்பார்க்காமல், “எஸ் ஹனி… ஆன் த வே.” என்று அலைபேசியைக் காதுக்கு கொடுத்து பேசியபடி நண்பனுக்கு கை அசைத்து காரைக் கிளப்பிக் கொண்டு சென்று இருந்தான் ஆண்ட்ரூ.

அவன் செய்கையில் உண்டான புன்னகையோ அல்லது அவன் கூறிய வார்த்தைகளால் உண்டான நிறைவோ ஜெகதீஸ்வரனின் முகத்தில் தனி பொலிவைக் கொடுத்திருந்தது.

காரில் ஏறி அமர்ந்தவன், பாடல்களை ஒலிக்க விட,

நெஞ்சத்தில் பேர் எழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர் எழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்
கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான்
மயக்கம் என்ன
ஒரே நாள் உனை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான்
ஊஞ்சலாடுது

எஸ் பி பாலசுப்ரமணியமும் வாணி ஜெயராம் அவர்களும் குரலால் கட்டி இழுக்க அவனது இரவுப் பயணம் இனிதே ஆரம்பித்தது, அவள் நினைவுகளோடு.

சக்தி பார்த்த முதல் பார்வையிலே அவனை ஈர்த்திருந்தாள் தன் விழிகளினால். பார்க்கும் முன்பாகவே அவனை அசைத்துப் பார்த்திருந்தது அவளது தொழில் நேர்த்தி.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய் தெரிந்தவள், தனக்கே தனக்கானவளாய்… தன்னவளாய் தெரிந்த நிமிடம் பரத்தோடு அவளை சேர்த்து பார்த்த அந்த நிமிடம்.‌

உரிமையாய் அவளைத் தீண்டிச் சென்ற பரத்தின் பார்வைகள் தான் தனக்குள்ளே அவள் எத்தனை ஆத்மார்த்தமாய் இணைந்திருக்கிறாள் என்பதை அவனுக்கு விளக்கியது.

தன் ஆன்மத்தின் பெண் வடிவமாய்… ஈஸ்வரனை ஆளும் சக்தியாய் உணரத் தொடங்கி இருந்தான் அந்த நொடியில் இருந்து.

ஆனால் இன்று அவன் கண்ட சக்தி வித்தியாசமாக தெரிந்தாள். ஆண்ட்ரூ சொன்னது போல் தடைபட்ட மின்சாரத்திற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனுக்கே தெரியாது. ஜெனரேட்டர் பாதுகாவலனிடம் கேட்ட பொழுது தான் திடீரென்று அதில் ஏதோ பழுது ஏற்பட்டு விட்டது எனவும் இரண்டு நிமிடங்களில் சரி செய்து விட முடியும் என்று சொல்லி இருந்தான்.‌

முழு அலுவலகமும் காலியாக இருந்ததில் அவனும் தனது கோபத்தைக் குறைத்திருந்த வேலையில் தான் சக்தியின் அறையில் சத்தம் கேட்டது.

அவள் அறையைப் பார்க்க வெளிச்சம் என்பது சிறிதும் இல்லாமல் இருக்கவே என்ன ஆனதோ என்று பற்றி கொண்ட பதற்றத்தோடு அவளைக் காணச் சென்ற நேரம் வாழ்நாள் முழுவதும் மறக்காது அவனுக்கு.

முகம் வெளிறி உடல் வியர்வையால் நனைந்திருக்க கண்களில் ஜீவன் இல்லாமல் அச்சத்தோடு மருண்டு பார்த்தபடி நின்றிருந்தவளை மார்புக்குள் ஒளித்துக் கொள்ள துடித்த மனதை கட்டுப்படுத்த அவன் பட்ட பாடு அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

தெளிவும் தீட்சண்யமாய் பார்த்த விழிகள் அச்சத்தை சுமந்திருந்த நொடி, மன்னவனின் மனமானது மங்கையை பற்றி அறியாத விஷயங்களும் இருக்கின்றன என்று அடித்து சொல்லியது.

தொழில்முறை அல்லாது அவளைப் பற்றி பேசியது இதுவே முதல் முறை.

“ஐ வில் மேரேஜ்” என்ற வார்த்தைக்கு பின்னே அவள் கூறிய வலி மிகுந்த பக்கங்கள் அவனையும் அசைத்துப் பார்த்தது.

இலகுவாய் இல்லாமல் பழக்கமாய் பல அடிகளுக்குப் பிறகு பயிற்சி பெற்றிருந்தவளின் வாழ்க்கையை தன்னால் கூட வாழ முடியாது என்றும் தோன்றியது.

பெற்றோர் உடன் பிறந்தவர்கள் பாரம்பரியமிக்க குடும்ப அமைப்பு பிரம்மாண்டமான தொழில் பின்னணி இன்னும் மூன்று தலைமுறைகளுக்கு தேவையான அளவு பொருளாதார வசதி என்று அனைத்தும் வாய்க்கப் பெற்றவன், அவள் கடந்து வந்த பாதையில் கால் வைத்து உணர முயன்றான்.

ஆனால், அவை அத்தனையையும் இடக்கையால் தள்ளிவிட்டு, மலர்ந்த முகத்தோடு எதுவுமே இல்லாமல் எப்படி இத்தனை உயரத்தை இவ்வளவு சிறிய வயது அவளால் எட்ட முடிந்தது அவளது மனதின்மையால் மட்டுமே அன்று வேறு எதனாலும் முடிந்திருக்க முடியாது என்பதை அந்த தொழில் அதிபனின் புத்தி எடுத்துக் கூறியது.

“இங்கயும் ஆராய்ச்சி தன ஜகா உனக்கு?” என்று தனக்குள் கேட்ட கேள்வியில், சிறுசிரிப்பு அவனுக்குள்.

மனதுக்குள் முகிழ்த்த சிரிப்பு முகத்தில் பரவ ரிவெர் வியூ கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை சில நொடி கூர்ந்து கவனித்தான்.

“சாதாரணமா தான சிரிக்கிறேன்? பின்ன ஏன அவ்வளவு ஆச்சரியமா என்னை பாத்தா?” என்று யோசித்தவனுக்கு எப்படி தெரியும் அந்த மந்தகாச புன்னகை அவளை பார்த்த நொடியில் மட்டும் தானே உண்டானது என்பதை அவள் உணர்ந்து விட்டாள் என்று.

எப்படியோ தொழில் கடந்து அவளோடு பேசி அவள் உள்ளத்தின் பிற பக்கங்களை அறிந்ததில் உல்லாசம் ஒட்டிக்கொள்ள, அந்த சந்தோஷம் அவன் கைகளிலும் பதிய இரவு நேர சென்னையின் சாலைகளில் அவனது வாகனம் பறந்தது.

அவள் விடுதி சென்று சேரும் நேரத்தை கணக்கிட்டு இருந்தவன், “ரீச் ஹாஸ்டல்?” என்ற குறுஞ்செய்தி ஒன்றை சக்தியின் எண்ணுக்கு ஜெகதீஸ்வரன் அனுப்பி வைக்க, இன்னுமாய் மலர்ந்தாள் விடுதியின் வாசலில் இறங்கிய சக்தி.

அவன் நினைத்திருந்தால் அழைப்பை எடுத்து பேசியிருக்கலாம். ஆனால் ஏனோ குறுஞ்செய்தி வாயிலாக அவளோடு பேச வேண்டும் போல தோன்றியது அவனுக்கு.

காதல் வந்தால் கள்ளத்தனங்கள் மட்டுமல்ல கிறுக்குத்தனங்களும் கூட வந்து சேரும் போல! விடலைப் பையன் போல செயல்பட்டுக் கொண்டிருக்கும் தன்னையே வித்தியாசமாக உணர்ந்தான் ஜெகதீஸ்வரன். ஆனாலும் இந்த உணர்வு அவனுக்கு பிடித்திருந்தது.

“Yeah, I reached the hostel safely… and honestly, thank you for everything you did for me today. I felt really safe and comfortable with you. (ஆமா, ஹாஸ்டல் சேஃபா வந்துட்டேன்… இன்னைக்கு நீங்க எனக்காக பண்ண எல்லா உதவிக்கும் ரொம்ப நன்றி. உங்க கூட இருந்தப்போ ரொம்ப சேஃபாவும் கம்ஃபர்டபிளாவும் ஃபீல் பண்ணேன்.)” அலைபேசியில் ஒளிர்ந்து எழுத்துக்களையே தன்னையும் மறந்து சில நிமிடங்கள் பார்த்தவன் முகத்தில் மந்தகாச புன்னகை ஒன்று வந்து அமர்ந்தது.

அறையின் உள்ளே நுழைந்தவள், தாரணியின் பார்வையை கண்டு கொள்ளாமல் முகம் முழுவதும் விகசிக்க மாற்று உடை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கி செல்ல, அவளைத் தடுத்தது எப்பொழுதும் போல அலைபேசி.

“இந்த நேரத்துல யாரு?_ சத்தமாக தாரணி கேட்க, அதையே மனதோடு கேட்டுக் கொண்டவளுக்கு ஒரு வேளை ஜெகதீஸ்வரனாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றிய நொடியே முகம் பளிச்சிட்டு விட இரண்டு எட்டுகளில் கைபேசியை எட்டி எடுத்திருந்தாள்.

அழைப்பில் ஒளிர்ந்த எழுத்துக்களை பார்த்ததும் அவள் முகம் சற்றே ஒளி குறைய ஆரம்பித்து பின் மீண்டும் சகஜ நிலைக்கு வந்தது.

அத்தனையும் கண்ணிமைக்கும் நொடியில் நடந்திருந்தாலும் கழுகாக பார்த்துக் கொண்டிருந்த தாரணியின் கண்களுக்கு எதுவும் தப்பவில்லை.

“சொல்லுங்கம்மா…” என்று அவள் ஆரம்பித்ததிலேயே பேசிக் கொண்டிருப்பது யார் என்று விளங்கி விட்டது தாரணிக்கு.

எதிர்ப்புறத்தில் இரண்டு நிமிடங்கள் முழுவதுமாக அவர் பேச அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சக்தியின் முகத்தில் எண்ணங்களின் வண்ணக் கோலங்கள்.

“எம்மாடி எத்தன எக்ஸ்பிரஷன் அந்த கண்ணுல?” என்று தாரணி வியந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே,

“அதுதான் பரத் சொன்னாங்களே மா… எனக்கும் அவங்களுக்கும் நடுவுல பிரண்ட்ஷிப் தவிர்த்து வேறு எந்த உணர்வும் வரல. நாங்க என்ன பண்ண முடியும்? நான் என்ன பண்ண முடியும்?” என்று தணிந்த குரலில் அவள் சொல்ல, ஆச்சரியங்கள் எல்லாம் அறைக்கு மூலையில் சென்று விட வேகமாக எழுந்து நின்று விட்டாள் தாரணி.

“என்னது ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் தான் இருந்துச்சா? அடியே…” அவள் கத்த ஆரம்பிக்க, திரும்பி அவளைப் பார்த்து கண்களால் அடக்கி அமர வைத்துவிட்டு,

“ஹஸ்பண்ட் மட்டும் தான் உறவாம்மா? பிரண்ட்ஷிப் கூட வர மாட்டாங்களா கடைசி வரைக்கும்… நல்ல ஃபிரண்ட் மா அவங்க… தாரணி போல.” என்று அவள் விளக்கம் சொல்ல, அந்த விளக்கம் வெண்ணிலாவுக்கு மட்டும் அல்ல என்பது தெளிவாக புரிந்தது தாரணிக்கு.

“தாரணி மட்டும் பையன பொறந்திருந்தா இந்நேரம் கண்டிப்பா உன்னை உஷார் பண்ணி கல்யாணம் பண்ணி இருப்பேன் டி. என் கிரகம் பொண்ணா பொறந்துட்டேன். அதுக்காக தாரணி மாதிரி பிரண்டுன்னு சொல்லி எஸ்கேப்பாக பாக்கறியா கேடி… பிச்சுப்புடுவேன் பிச்சு…”

பல்லைக் கடித்துக் கொண்டு கண்களில் ஜ்வாலையை விட்டபடி தாரணி முறைக்க கண்சிமிட்டி சிரித்தவள், “அம்மா சத்தியமா முடியாது. உடனே வேண்டாம். கொஞ்சம் டைம் கொடுங்கம்மா… கண்டிப்பா சொல்றேன். உடனே உடனே எல்லாத்தையும் ஃபர்ஸ்ட்ல இருந்து தொடங்க முடியாது. ஐ நீட் சம் பிரேக்.” என்று அவள் சொல்ல, மீண்டும் இரண்டு நிமிடங்கள் எதிர்ப்புறம் பேசியதை அமைதியாக கேட்டவள், “சரி மா…” என்ற ஒற்றை வார்த்தையோடு அழைப்பை துண்டித்திருந்தாள்.

இடுப்பில் கையை வைத்துக்கொண்டு முறைத்தபடி தன் முன்னே வந்து நின்ற தாரணியிடம், “நீயும் ஆரம்பிக்காத தரு. கொஞ்சம் டைம் கொடு. போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன். பசிக்குது.” என்று அலுத்துப்போன குரலில் அவள் சொன்னாலும் முகம் புத்துணர்ச்சியை வாரி வழங்கி கொட்டிக் கொண்டிருந்தது.

“போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா. டின்னர் எடுத்து வச்சிருக்கேன். சாப்டுட்டு வச்சிக்கிறேன் உனக்கு கச்சேரி…” பல்லைக் கடித்துக் கொண்டு தாரணி சொல்ல,

“அழகான பல்வரிசை அதை ஏன் கடிச்சு கடிச்சு பாதியாக்குற… விட்டிடு தரு…” என்று பாசமான குரலில் சொல்லியவள் குளியலறை அருகே சென்று,

“உன்கிட்ட இருக்கிறதிலேயே அது ஒன்னு தான் கொஞ்சம் பாக்குறது போல இருக்கு. அதையும் கோபப்படுறேன்னு சொல்லி கடிச்சு கடிச்சு உடைச்சு வைக்காத… பாவம் ப்ரோ…” என்று உற்சாகமே உருவாக சொல்லியவள் வேகமாக குளியல் அறைக்குள்ளே சென்று கதவை மூடிக்கொள்ள, “அடியே…” என்று கத்தினாலும் தோழியின் முகத்தில் இருந்த பூரிப்பில் அவள் முகமும் தன்னாலே மலர்ந்து போனது.

“என்ன நடந்திருந்தாலும் அவளுக்கு நல்லதா இருக்கட்டும். முகம் முழுக்க பரவி இருக்கிற இந்த சந்தோஷமும் சிரிப்பும் என்னைக்கும் அவ கூடவே இருக்கட்டும் முருகா…” என்று மனதோடு வேண்டிக் கொண்டாள் அந்த நல்ல தோழி.

நல்ல உள்ளங்களின் தன்னலம் இல்லாத வேண்டுதல்களும் ஆசீர்வாதங்களும் இறைவனின் அருள் தான் அல்லவா? அப்படி ஒரு நட்பு வாய்க்கப் பெற்ற சக்தி பெரும்பாக்கியம் செய்தவள் தான்.

மன்னவனின் அகச்சூழல் காதல் என்று கனிந்திருக்க புறச்சூழல் புரட்டிப்போட காத்திருக்கிறது என்பதை நாளைய விடியல் அவன் வீட்டில் கட்டியம் கூறியது.
































 
Top Bottom