• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்களுக்குள் பள்ளி கொண்டேன் -22

skp

Member
அத்தியாயம் 22

அதிகாலை ஐந்து மணிக்கு வழக்கம்போல கண் விழித்தது ஜெகதீஸ்வரனுக்கு. உறக்கம் போதவில்லை. ஆனால் மனம் நிறைந்திருந்தது.

வழக்கமாக கண் விழித்த உடன் வேலைகள் நினைவுக்கு வரும்.

இன்று...

பழுப்பு நிற விழிகள் மட்டும் தான் நினைவுக்கு வந்தது. தலையணையில் முகம் புதைத்து சிரித்துக் கொண்டிருந்த சக்தியின் முகம்.

"எனக்கு உங்களை பிடிக்கும்..."

எளிதாக சொல்லிவிட்டாள்.

ஆனால் அந்த வார்த்தை அவனுக்குள் செய்த சேதாரத்தை சரி செய்ய ஆயுள் முழுக்க ஆகும் போல இருந்தது.

மெதுவாக எழுந்தவன் குளித்து முடித்து கீழே இறங்கியபோது, பூஜை அறையில் இருந்தது மொத்த குடும்பமும். வாசலுக்கு அருகே வரலட்சுமி நின்று இருக்க, ஒரு நொடி நின்றவன் வழக்கம்போல சென்று அவருக்கு அருகில் நின்றான்.

தன் அருகில் அசைவை உணர்ந்ததும் திரும்பி பார்த்த வரலட்சுமியின் கண்கள் ஒரு நொடி வியப்பைக் காட்டியது. மறுநொடியே எதுவும் பேசாமல் உதடுகள் உச்சரித்த மந்திரங்களை தொடர்ந்தார்.

கற்பூர ஆரத்தி காட்டிவிட்டு திரும்பிய புவனேஸ்வரியின் கண்கள் மகனை அத்தனை நாள்கள் கழித்து பார்த்ததில் சந்தோஷத்தை அப்பட்டமாக காட்டியது.

அப்பா, தங்கை என்று அனைவரின் சந்தோஷத்தையும் கண்ட ஜெகதீஸ்வரனின் மனமும் நிறைந்தது.

சந்தோசமாக பூஜையை முடித்து அறையை விட்டு வெளியே வந்த புவனேஸ்வரி மகனின் கன்னம் தடவி, எப்போ வந்த கண்ணா என்று ஆதுரமாக கேட்க,

“நேத்து நைட் மா…” என்றான் மகன் தாயின் கையை பற்றியபடி.

“நான்தான் கதவை திறந்து விட்டேன்.” வேகமாக இடைப்புகுந்தான் சர்வேஸ்வரன்.

என்கிட்ட சொல்லவே இல்ல மகாலட்சுமி இடையில் வர அவர்களது வாக்குவாதம் தொடங்கியது.

“ஜெகா…” வரலட்சுமி அழைக்க,

ஜெகதீஸ்வரன் திரும்பி பார்த்தான்.

"பதினைந்து நாள் ஆகும்னு சொன்ன..."

"முடிஞ்சிடுச்சு பாட்டி."

ஒற்றை வரியில் முடித்துவிட்டான்.

அவனை சில நொடிகள் பார்த்தவர்,

"நல்லது தான்."

என்று சொல்லிவிட்டு கையில் இருந்த ஜபமாலையை மேசையின் மீது வைத்தார்.

"அப்போ இந்த வாரம் பொண்ணு பார்க்க போகலாமா?"

கேள்வி சாதாரணமாக வந்தது.

ஆனால், ஜெகதீஸ்வரனின் பார்வை மட்டும் அமைதியாக அவரின் முகத்தில் நிலைத்தது.

"இப்ப வேணாம் பாட்டி." நிதானமான குரலில் ஜெகதீஸ்வரன் சொல்ல,வரலட்சுமியின் புருவங்கள் நெரிந்தது.

"ஏன் ஜெகா?"

"வேலை இருக்கு பாட்டி…"

"வேலை எப்பவும் இருக்கும்."

"ம்ம்..."

"ம்ம் ன்னா?" வரலட்சுமி தீவிரமான குரலில் கேட்க அவர் முகத்தை பார்த்தவன்,

"வேலை முடிஞ்சதும் பார்க்கலாம்." என்றான் அழுத்தமான குரலில்.

"அலை நின்னதுக்கு அப்புறம் தான் குளிப்பேன்னு நின்னா கடல்ல குளிக்க முடியாது கண்ணா… வேலை முடிஞ்சதுக்கு அப்புறம் தான் தனிப்பட்ட வாழ்க்கையை பார்ப்பேன்னு சொல்றது நான் முன்ன சொன்னதை விட முடியாத காரியம்" உனக்கு பாட்டி நான் என்பதை நிரூபித்து இருந்தார் வரலட்சுமி.

"புரியுது பாட்டி. ஆனா இது முக்கியமான வேலை."

"கல்யாணம் முக்கியம் இல்லையா?"

"இல்லைன்னு நான் சொல்லல."

"அப்போ?"

"இப்ப வேண்டாம்னு மட்டும் தான் சொல்றேன்."

அவ்வளவுதான். அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட வரவில்லை அவனிடம்.

பேரன் முடிவு எடுத்து விட்டான் என்றால் அதை கேள்வி கேட்கவோ மாற்றி அமைக்கவோ தன்னால் கூட முடியாது என்பதை உணர்ந்த வரலட்சுமிக்கு என்னவோ சரியில்லை என்பது மட்டும் மிக தெளிவாக தெரிந்தது.

எப்பொழுதும் நிதானமாகவும் அழுத்தமாகவும் காணப்படும் பெரிய பேரனின் முகம் அளவுக்கு அதிகமாய் மலர்ந்து இருந்தது. கண்கள் சோர்வை காட்டினாலும் முன் எப்பொழுதும் காணாத உற்சாகத்தை காட்டின அவனது விழிகள்.

அவரும் இந்த வயதை எல்லாம் கடந்து வந்தவர் தானே பேரனின் முக மலர்ச்சியை நொடிகளில் அளவிட்டு விட்டது அந்த பாட்டியின் கண்கள்.

எதுவாக இருந்தாலும் அவன் வாயிலிருந்து வரட்டும் என்று எண்ணியவராக அமைதியாகி போக, மொத்த குடும்பமும் இருவரின் முகத்தையே மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது.

சர்வேஸ்வரன் தன் தொண்டையை செறும,

"உனக்கு என்னடா..." என்று வரலட்சுமி அவனை பார்க்க,

"என்னை ஏன் இழுக்குறீங்க பாட்டி? எனக்கு எதுவும் வேணாம். நான் இன்னும் வாழ ஆசைப்படுறேன்."

என்று சொல்லிவிட்டு நாற்காலியை இழுத்து அமர்ந்தவன்,

"காபி குடிக்கறேன். குடும்ப அரசியல்லாம் பெரியவங்க நீங்களே பேசிக்கோங்க." என்று அமைதியாக நழுவிக் கொண்டான்.

“குடும்ப அரசியலா என்னடா பேசுற?”வரலட்சுமி முறைக்க,

“எல்லாமே அரசியல் தான் பாட்டி… அரசியல் இல்லாத இடமே இல்லை.. இப்ப கூட பாருங்க வேணாம்னு சொல்ற அண்ணனை இழுத்து வச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்றீங்க. ஆனா என்னை கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க…” என்று சொல்லி கண்சிமிட்ட,

“பாட்டி அவன் என்ன சொல்றான்னு தெரியுதா? அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணுமாம்…” மகாலட்சுமி இருவருக்கும் இடையே வர,

“நான் அப்படியா சொன்னேன்?” என்று தாடையை நீவியபடி சர்வேஸ்வரன் கேட்க,

“நீங்க கேட்டதுக்கு அதுதான் அர்த்தம் பாஸ்…” என்று அவனிடம் பதிலைச் சொல்லியவள்,

“அம்மா இவன கொஞ்சம் கவனிங்க. சரியில்ல…” என்று சத்தமாக சொல்லியவள் தாயின் காதருகே குனிந்து, “எனக்கு என்னமோ டவுட்டா இருக்குமா. பொண்ணு பார்த்து வச்சுட்டு தான் இப்படி எல்லாம் பிட்டு போடுறானோ என்னவோ… எனக்கு மூத்த அண்ணி வரதுக்கு முன்னாடி இரண்டாவது அண்ணி வந்துடுவாங்க போல இருக்கு… உஷாரம்மா உஷாரு…” என்று சொல்ல கண்கள் வட்டமாய் விரிய இளைய மகனை சிறு பயத்தோடு பார்த்தார் புவனேஸ்வரி.

“சுடிதார் போட்ட சகுனி… காலங்காத்தால எங்க அம்மாகிட்ட என்ன சொல்லி வச்ச? பாரு மூச்சு பேச்சு இல்லாம நிக்கிறாங்க. பக்கி பக்கி…” தங்கையின் தலையில் தட்டியவன்,

“இந்த உலகம் எப்பயுமே இப்படித்தான் போல இருக்கு. செய்றவன விட்டுட்டு செவனேன்னு வேடிக்கை பார்க்கிறவன தான் இழுத்து போட்டு குத்தும் போல இருக்கு… மலைய முழுங்கிட்டு எதுவுமே நடக்காதது மாதிரி நிக்கிறது ஒருத்தன். பேச்சு வாங்குறது இன்னொருத்தன்… விஷாலா அக்கா சொல்ற மாதிரி இதுக்கு பெயர்தான் தென்ன மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல என்னவோ… ஆங் நெறி கட்டுதுன்னு சொல்லுவாங்களாம்…” என்று ஜெகதீஸ்வரனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லிவிட்டு தாயை நோக்கி நகர, ஜெகதீஸ்வரனின் இதழ்களில் சிறு புன்னகை.

அதை பார்த்ததும் வரலட்சுமிக்கு இன்னும் சந்தேகம். ஏதோ ஒன்று மாறி இருக்கிறது. ஆனால் என்ன என்று மட்டும் பிடிபடவில்லை. பெரிய பேரணி பார்த்தவரின் கண்கள் மீண்டும் பூஜை அறையை நோக்கி செல்ல மனமோ, “எதுவா இருந்தாலும் இந்த குடும்பத்திற்கும் என் பேரனுக்கும் நல்லதா அமையட்டும் ஈஸ்வரா…” என்று வேண்டிக்கொண்டது.

---

அதே நேரம்...

விடுதியின் அறைக்குள் நுழைந்த தாரணியின் கால்கள் அப்படியே நின்று விட்டது.

தனது படுக்கை முழுவதும் ஆடைகளை பரப்பி வைத்துக் கொண்டு எதை எடுத்துச் செல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த சக்தி அவளை கவனிக்கவில்லை.

ஆனால்...

தாரணியின் பார்வை முழுவதும் அவள் மீது தான் இருந்தது.

ஐந்து வருடங்களாக தெரியும்.

சிரித்திருக்கிறாள். அழுதிருக்கிறாள். கோபப்பட்டிருக்கிறாள். சண்டை போட்டிருக்கிறாள்.

ஆனால், இப்படி இருந்ததில்லை. முகமே மலர்ந்து கிடந்தது. கண்களில் இருந்த ஒளியே வேறாக இருந்தது.

"என்னடி?" என்று கேட்டாள் சக்தி.

பதில் சொல்லவில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் தாரணி.

"தரு..."

"ம்ம்..."

"என்ன?"

"நீ யாரு?"

என்று தீவிரமாக கேட்டவள் அருகே வந்து நின்றாள்.

"என்ன பக்கி?"

"நிஜமாவே கேக்குறேன். நீ சக்திதானா?"

"லூசு..."

சிரித்தாள் சக்தி.

"இல்ல. ஏதோ தப்பா இருக்கு."

என்று சொல்லியவள் அவள் முகத்தை இரண்டு கைகளாலும் பிடித்து ஆராய்ந்தாள்.

"நேத்து நைட் என்ன ஆச்சு?"

"ஒன்னும் ஆகல."

"பொய்."

"தரு..."

"பொய்."

மீண்டும் உறுதியாக சொன்னவள்,

"உன் முகமே காட்டிக் குடுக்குது." என்றாள்.

சக்தியின் இதழ்களில் மெதுவாக புன்னகை மலர்ந்தது.

அதை பார்த்த தாரணி கண்களை விரித்தாள்.

"அடிப்பாவி..."

என்று தலையில் கை வைத்தவள், "உன்னையும் வெட்கப்பட வச்ச ஆள் யாருடி?" என்று கேட்டாள்.

சிவந்த முகத்தோடு கீழே பார்த்தவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

"சக்தி..."

"ம்ம்..."

"யாரு?"

இந்த முறை மென்மையாக கேட்டாள் தாரணி.

மெல்ல நிமிர்ந்து பார்த்தவள், "ஜெகன்..." என்றாள்.

"ஜெகனா?" புரியாமல் விழித்தாள் தாரணி.

"ஜெகதீஸ்வரன்..." அந்த பெயரை சொன்ன நொடி சக்தியின் முகம் இன்னும் பிரகாசித்தது.

தாரணியின் முகத்தில் இருந்த விளையாட்டு மொத்தமாக காணாமல் போனது.

"என்ன சொல்ற?" தீவிரமாக கேட்டாள்.

"நிஜம்தான் தரு."

"அவர் சொல்லிட்டாரா?"

"ம்ம்..."

"நீ?"

"சம்மதம் சொல்லிட்டேன்."

அவ்வளவுதான். அடுத்த நொடி சக்தியை கட்டிப்பிடித்து இருந்தாள் தாரணி.

"தேங்க் காட்..." என்று முணுமுணுத்தவளின் குரல் உடைந்து போனது.

புரியாமல் தோழியை பார்த்தாள் சக்தி.

"இப்போ தான்டி நிம்மதியா இருக்கு… மனசு போட்டு அழுத்திக்கிட்டே இருந்தது… இந்த நிமிஷம் ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ரியலி ஹேப்பி ஃபார் யூ சக்தி… நீ ரொம்ப ஸ்ட்ராங்கான பொண்ணு தான். என்னால தான் உன்னை தனியா விட்டுட்டு போக முடியாம கஷ்டமா இருந்துச்சு. இப்போ ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…

எனக்கு நீ கொடுத்த ரொம்ப பெரிய கல்யாண கிப்ட் இதுவாத்தான் இருக்கும் சக்தி.‌ என்னோட சக்திக்கு சாஞ்சிக்க தோள் கிடைச்சிடுச்சு. இனி அவ தனி இல்ல… அம்மாடியோ இந்த ஃபீல்… தேங்க் காட்…”

என்று அவள் சொல்லிக் கொண்டு செல்ல, சக்தியின் கண்கள் கலங்கியது.

"தரு..."

"நான் பேசிட்டு இருக்கேன். நடுவுல வராத." என்று மிரட்டியவள்,

"முதல் தடவை ஜெகதீஸ்வரன் சார் விஷயம் வந்தப்போ கூட நான் யோசிச்சேன்.

ஆனா நீ எப்படி ரியாக்ட் பண்ணுன்னு எனக்கு தெரியும்.

அதுக்கப்புறம் அந்த பேச்சையே எடுக்கல.

இப்ப நீயே இப்படி நின்னு சொல்லுறன்னா..."

என்று சொல்லிக் கொண்டே வந்தவள்,

"ரொம்ப சந்தோஷமா இருக்கு டி."

என்றாள்.

சக்தியின் இதழ்களிலும் மென் புன்னகை.

"எனக்கும்..."

மெதுவாக சொன்னாள்.

"சரி." என்று திடீரென தாரணி குரலை மாற்ற, "இப்ப முக்கியமான விஷயத்துக்கு வரலாம்."

"என்ன?"

"என்னோட கல்யாணம்." என்று சொல்லி பத்திரிகையை அவள் கையில் திணித்தாள்.

புரியாமல் வாங்கி பார்த்த சக்தியின் முகம் மலர்ந்தது,

"தரு… இது ஆகாஷ் ப்ரோ பிரிண்ட் பண்ணதா?"

"ம்ம்..."

"ரொம்ப அழகா இருக்கு."

"பத்திரிகையா?"

"இல்ல. உன் முகம்."

என்று சக்தி சொல்ல,

"போடி."

என்று சிரித்தாள் தாரணி.

அடுத்த நொடி அவள் முகம் மீண்டும் சீரியஸானது.

"மூணு நாள் முன்னாடியே வந்துடணும்."

"மூணு நாளா?"

"ஆமா."

"எதுக்கு?"

"என்ன எதுக்கு? கல்யாணத்துக்கு."

"கல்யாணம் ஒரு நாள் தானே?"

"அது ஊருக்கு. எனக்கு நிச்சயதார்த்தம், மெஹந்தி, வரவேற்பு, போட்டோஸ், சண்டை, சமாதானம், அழுகை, சிரிப்பு எல்லாத்துக்கும் நீ வேணும். முன்னாடியே சொன்னதுதானே புதுசா கேக்குற… ஃபிகரை பார்த்தது பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிடாத மச்சி. ஆகாஷ் ஓட்டி தள்ளிடுவாரு ‌.." என்றாள், தாரணி படபடவென்று.

அவளது வார்த்தைகளில் சிரித்து விட்டாள் சக்தி.

"நீ சொல்லனுமா பக்கி இதெல்லாம். கண்டிப்பா வரேன்..." சக்தி சொல்ல,

"வரேன்னு மட்டும் சொல்லாத. மூணு நாள் முன்னாடியே வரணும். முன்ன ஓகே இப்போ கொஞ்சம் டவுட்டா இருக்கு கவுத்து விட்டுடாத மச்சி.." என்றவள்,

"இது ரெக்வெஸ்ட் இல்ல. ஆர்டர்." என்றாள் கட்டளையாக.

சிரித்துக் கொண்டே சக்தி தலையசைத்தாள்.

ஆனால், அடுத்த நொடி அவள் முகத்தில் தோன்றிய தயக்கத்தை கவனித்த தாரணி,

"என்ன?" என்று கேட்டாள்.

"லீவ்..." என்று இழுத்தாள் சக்தி.

"அதான் கேட்கணும்."

"ம்ம்..."

"அப்போ?"

"ஒன்னும் இல்ல."

என்று சொல்லி சமாளிக்க முயன்றாள்.

தாரணி ஒற்றை புருவத்தை உயர்த்தினாள்.

"சக்தி..."

"ம்ம்..."

"நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு புரியாதுன்னு நினைக்கிறியா?"

சக்தி அமைதியாக இருந்தாள்.

"நேத்து லவ் சொல்லிட்டாரு."

"தரு..."

"இன்னைக்கு மூணு நாள் லீவ் கேட்கணும்."

"தரு..."

"அதனால எப்படி லீவு கேட்கிறதுன்னு யோசிக்கிற?"‌ என்றவள்,

"அடிப்பாவி அதுக்காக என்னோட கல்யாணத்தை டீல்ல விட்றாதடி… மணப்பெண் தோழியா வரேன்னு சொன்ன நிறைய பேர‌, எனக்கு என் பிரண்டு இருக்கான்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணி வச்சிருக்கேன். மானத்தை வாங்கிடாத…” என்று புலம்ப ஆரம்பிக்க,

சக்தியின் முகம் சிவக்க, "எருமை..." என்று மெதுவாக திட்டினாள்.

"சரி சரி..." என்று சிரித்த தாரணி, "போய் கேளு. ஒன்னும் சொல்ல மாட்டாரு." என்றாள்.

அவளுக்கும் அது தெரியும்.


---

அலுவலகத்திற்கு வந்த பிறகு தான் சக்திக்கு தன் பிரச்சினை எவ்வளவு பெரியது என்று புரிந்தது.

நொடி நேரத்தில் கடந்து செல்லும் பொழுது தீண்டி சென்ற அவன் பார்வையிலேயே தேகம் சிலிர்த்து இருந்தவளுக்கு, மூன்று நாள் விடுப்பு கேட்க வேண்டும் என்பதிலோ அவன் கொடுத்து விடுவான் என்பதிலோ பிரச்சனை இல்லை இப்பொழுது. அவனை விட்டு எப்படி செல்வது என்பதுதான் பெரிய பிரச்சினையாக இருந்தது அவளுக்கு.

தான் கேட்டால் கொடுத்து விடுவான் என்பது அவளுக்கு தெரிந்தே இருந்தாலும் கேட்க முடியாமல் தவிக்கும் தான் தான் பெரிய பிரச்சினை ஆகி இருப்பது அவளுக்கே வியப்பாக இருந்தது.

காலையில் தாரணி சொன்னபோது சாதாரணமாக தோன்றியது.

"லீவ் கேட்கணும்.” இரண்டே வார்த்தைகள் தான்.

ஆனால், அலுவலகத்தில் வந்து தன் இருக்கையில் அமர்ந்து அவனைப் பார்த்த பிறகு தான் அந்த இரண்டு வார்த்தைகளின் பாரம் புரிந்தது.

கணினியை உயிர்ப்பித்தவள் வேலைகளை திறந்து வைத்திருந்தாலும் கவனம் முழுவதும் அங்கே இல்லை.

அவளது விழிகள் அவளையும் அறியாமல் ஜெகதீஸ்வரனின் அறை கதவை தீண்டிக் கொண்டே இருந்தது.

நேற்று வரை அந்த அறைக்குள் எத்தனையோ முறை சென்று இருக்கிறாள்.

ப்ராஜெக்ட்.

டிசைன்.

ட்ராயிங்.

க்ளையன்ட்.

வேலை தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் தயக்கமே இல்லாமல் சென்று நின்று விடுவாள்.

ஆனால்...

இன்று?

எழுந்தாள்.

மீண்டும் அமர்ந்தாள்.

மீண்டும் எழுந்தாள்.

மீண்டும் அமர்ந்தாள்.

மூன்றாவது முறையாக இதையே செய்த போது,

"சக்தி..."

என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

எதிரே சர்வேஸ்வரன் நின்று கொண்டிருந்தான்.

"என்னாச்சு?"

"ஒன்னும் இல்லையே."

"ஒன்னும் இல்லாததுக்கா சிட் அப்ஸ் இத்தனை எடுத்துக்கிட்டு இருக்க?"

என்று கேட்டவன், “எடுத்துக்கிட்டு இருக்கீங்க?” என்று திருத்த கேள்வியை உயர்ந்தது சக்தியின் புருவங்கள்.

"அண்ணா எதுவும் சொல்லிட்டாங்களா?" என்றான் சந்தேகமாக.

"இல்ல."

"அப்போ?"

"ஒன்னும் இல்ல."

என்று சொல்லியவள் வேலையில் கவனத்தை திருப்ப முயல,

"ஒன்னும் இல்லயா? இந்த வார்த்தைக்கு பின்னாடி தான் ஓராயிரம் இருக்குன்னு சொல்லுவாங்க… அப்போ என்னவோ இருக்கு… என்கிட்ட சொல்ல வேணாம். யார்கிட்ட சொல்லனுமா அவங்ககிட்ட கரெக்டா சொல்லுங்க… எல்லா வேலையும் நல்லபடியா முடியும். " என்று சொல்லிவிட்டு அவன் சிரித்தபடி சென்று விட்டான்.

புரியாமல் பார்த்தவளுக்கு அவன் என்ன சொல்கிறான் என்பதை யோசிக்க நேரமில்லை. திரும்பி அந்த அறையை நோக்கினாள்.

கதவு மூடியிருந்தது.

ஆனால், உள்ளே இருப்பவனுக்கு உண்மையிலேயே தன் மனநிலை தெரிந்து விடுமோ என்ற எண்ணம் வந்தது.

"லூசு..." என்று தன்னையே திட்டிக் கொண்டவள் இறுதியாக எழுந்தாள்.

“இப்போ போகலனா இனிமே போக முடியாது.” மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் ஜெகதீஸ்வரனின் அறை கதவை தட்ட,

"கம் இன்..."‌ என்ற குரல் உள்ளிருந்து வந்தது. கதவை திறந்து உள்ளே சென்றவள் அமைதியாக நின்றாள்.

மடிக்கணினியில் இருந்த பார்வையை உயர்த்தியவன் அவளை பார்த்தான்.

ஒன்று… இரண்டு… மூன்று… என்று நொடிகள் நீண்டு நிமிடங்களை விழுங்கிக் கொண்டிருந்தது.

அவன் பார்வை அப்படியே அவள் முகத்தில் நிலைத்து நின்றது. சக்திக்கு என்னவோ செய்தது.

நேற்று இரவு முதல், அவன் பார்வை கூட புதிதாக தோன்ற ஆரம்பித்திருந்தது.

"சொல்லுங்க மேடம்..." சிறு சிரிப்போடு அவள் முகத்தை பார்த்து இயல்பான குரலில் அவன் கேட்க, அவளது இதயம் இயல்பாக இல்லை.

அவளது இதயத்தை இயல்பாக இருக்க விடவில்லை அவனது பார்வை.

தனக்கு எதிரே நின்றவளை உச்சி முதல் பாதம் வரை சொந்தமாக பார்த்து வைத்தது அவன் பார்வை. ‘நீ பேசும் வரை நானும் பேசப்போவதில்லை. பேச வேண்டிய தேவையும் எனக்கு இல்லை.’ என்பது போல அவன் பார்த்துக் கொண்டே இருக்க, தடுமாறியவள் முயன்று தன்னை சரி செய்து கொண்டு,

"ஒரு விஷயம் சொல்லணும்." என்றாள் மெல்லிய குரலில்.

"ம்ம்..." சிறு ஒலி மட்டுமே கிடைத்தது பதிலாக அவளுக்கு.

"எனக்கு..."‌ என்று ஆரம்பித்தவள் மீண்டும் நிறுத்த, புருவத்தை உயர்த்தினான் அவன்.

"எனக்கு லீவ் வேணும்." அவள் சொல்லிவிட, சில நொடிகள் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்,

"எத்தனை நாள்?" என்று கேட்டான் இருக்கையில் சாய்ந்து இருந்தவன் முன்னே நகர்ந்து வந்து மேஜை மீது இருக்கைகளைக் குற்றி அவளை பார்த்தபடி.

"மூணு நாள்." அவள் சொல்ல, மீண்டும் அமைதி.

அவன் எதுவும் பேசவில்லை. சக்தியின் இதயம் மட்டும் வேகமாக துடித்தது.

"தாரணி கல்யாணம்..."‌என்று அவளே காரணம் சொல்ல,

"ம்ம்..." என்றான்.

"மூணு நாள் முன்னாடியே வர சொல்லிருக்கா."

"ம்ம்..."

"போகணும்."

“போயிட்டு வா…” நிதானமாக அவன் சொல்ல அவனைப் பார்த்தாள் சக்தி.

ஏதோ எதிர்பார்த்து இருந்த மனது சட்டென்று வாடிப்போனது.

என்ன சக்தி அழுத்தமான குரலில் ஜெகதீஸ்வரன் கேட்க,

“ஒன்னும் இல்ல. தேங்க்ஸ்.” என்றவள் திரும்பிச் செல்ல போக,

“ரொம்ப பிசியா இருப்பியா?” இடையிட்டது அவனது வார்த்தை.

“என்ன?” என்று நின்று திரும்பி பார்த்தவள்,

“ஒரே பிரண்டு கல்யாணம் போகணும். த்ரீ டேஸ் முன்னாடி வர சொல்லி இருக்காங்க எல்லாம் ஓகே… ரொம்ப பிசியா இருப்பியா?” ஜெகதீஸ்வரன் தெளிவாக கேட்க,

“ம்ம்…” என்றாள் அப்பொழுதும் குழப்பமாக.

“எவ்வளவு பிசியா இருந்தாலும் என்னோட கால்ஸ் அட்டென்ட் பண்ணனும்…” என்று அவன் நிறுத்த சொல்ல வருவது புரிந்தது போல பெண்ணுக்கு முகம் மலர, அவனைப் பார்த்தபடி அவள் நிற்க,

“புரிஞ்சுதா?” என்று அவன் கேட்க,

“இல்ல புரியல…” என்று சொல்லியவளின் இதழ்கள் மலர்ந்தன.

“உனக்கு புரிஞ்சுச்சுன்னு எனக்கும் புரிஞ்சிடுச்சு… ஒரு கால் மிஸ் ஆனாலும் வந்து தூக்கிடுவேன்…” என்று அவன் சொல்ல கண்கள் ஆழியாய் விரிந்தது அவளுக்கு.

“இன்னும் ஒரு நிமிஷம் இங்க நின்னு இப்படி என்னை பார்த்தேன்னா லீவ் கேன்சல் பண்ணிடுவேன்.” என்றவன் அவள் கண்களை ஆழ்ந்து பார்க்க, அந்தப் பார்வையை தாண்டி அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

“போ…” என்று கண்களை காட்டி அவன் சொல்ல,

“போக முடியலையே…” தன்னையும் மீறி சொல்லிவிட்டாள் சக்தி.

அந்த பதிலில் ஒரு நொடி அசையாமல் நின்றவன் அவளை பார்த்தான்.

அவன் பார்வை அழுத்தமாய் அவள் மீது படர,

"அதான் பிரச்சினை..."

மெதுவாக வந்தது அவன் குரல்.

"என்ன?"

"நீ போகணும்னு தெரியும்."

"..."

"ஆனா... எனக்கு அனுப்பணும்னு தோணல.” என்றவன் சிறு இடைவெளி விட்டு,

“போய்ட்டு வா சக்தி..." என்றான்.

அவள் அசையாமல் நின்று இருந்தாள். இந்த சில நொடிகளில் அவன் முகம் காட்டிய பாவனைகளில் அவள் கண்கள் பெரிதாய் விரிய, நாற்காலியில் இருந்து எழுந்தவன் இரண்டு எட்டு முன்னே வந்தான்.

"சக்தி..."

"ம்ம்..."

"இப்போவே இப்
படி பார்க்காத."

"ஏன்?"

"உன்னை அனுப்புறது கஷ்டமா இருக்கு.” என்றவன் அவளை ஆழ்ந்து பார்க்க சிலையாகி போனாள் சக்தி அவன் பார்வையில்.

அவளை கலைத்து நிகழ் உலகுக்கு அழைத்து வந்தது அறைக் கதவு தட்டும் சத்தம்.

சட்டென ஒரு அடி அவனை விட்டு விலகி நின்றவள், மலங்க மலங்க விழிக்க அவள் நிலையை கண்டு சிரிப்பு வந்தது அவனுக்கு.

“ஃப்ரண்ட் கல்யாணத்துக்கு போயி நல்லா என்ஜாய் பண்ணிட்டு சீக்கிரம் வந்து சேரு சக்தி…” என்று அவளுக்குச் சொல்லியவன் இரண்டு எட்டுகளில் தன் இடத்தை அடைந்து “கம் இன்” என்று குரல் கொடுக்க, உள்ளே நுழைந்தார் பலராமன்.
 
Top Bottom