கண்ணாமூச்சி 1

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 35

Member
Nov 21, 2019
34
91
18
Dindigul
என்னோடுதான் கண்ணாமூச்சி

“பிரணி இதை கொஞ்சம் பிடிச்சுக்கோ, நான் தாலி மாத்திட்டு வாங்கிக்கிறேன்.” தன் அத்தை திலகவதி கொடுத்த பூஜைக் கூடையை வாங்கி கொண்டாள் யுகபிரணிதா.

பச்சை பட்டில் மீனாட்சி தாய் ஜொலிஜொலிக்க, தன் மணாளன் சுந்தரேஸ்வரர் கையால் வாங்கப் போகும் பொன்தாலியினை எதிர்பார்த்து அம்மையாரின் முகத்தில் சிறு வெட்கப் புன்னகை தோன்றியதோ?.

சாஸ்திர, சம்பிரதாயங்கள் முடித்து வேதங்கள் ஓதி, மக்கள் வாத்தியங்கள் முழங்க, மதுரையை ஆளும் மீனாட்சியின் கழுத்தில் பொன் தாலி ஏற்றப்பட்ட நொடி, கீழே அமர்ந்திருந்த பெண்கள் அனைவரும், தங்களது தாலி கயிற்றை மாற்றிக்கொண்டனர்.

மீனாட்சி அம்மனின், ஆலயம் பக்தகோடிகளால் அலைமோதியது. பிரணிதாவின் தாய்மாமா, திலகாவின் கணவன் துரைமுருகன் தெற்கு கோபுர வீதியில் நகை கடை வைத்திருப்பதால், அவர்களுக்கான ரசீது வழங்கப்பட்டிருக்க, அவரின் குடும்பம் கூட்ட நெரிசலில் சிக்காமல் தப்பித்திருந்தனர்.

“பிரணி, அத்தைய பாத்து‌ கூட்டிட்டு வா, நான் பசங்களை பிடிச்சிக்கிறேன், இந்த வழியா போய்டலாம், லேட் பண்ணா கூட்டம் வந்திடும்.” திலகா பேசியபடி ஓரங்கட்டி நடந்து செல்ல,

“அம்மாச்சி, பாத்து கையைப் பிடிச்சுக்கோ” பவுனம்மாளை அழைத்துக் கொண்டு அத்தையை பின்பற்றினால் பிரணிதா.

‘அப்பப்பா!’ கூட்டத்தை மீறி வெளிவருவதற்குள் சோர்ந்துப் போயினர் அனைவரும்.‌ பவுனம்மாளிற்கு தலை கிறுகிறுத்து விட தடுமாறியிருந்தார்.

“ஏய், பிரணி! அப்பத்தாவ பிடி, பிடி” ஆகாஷ் சத்தமிட, அவரை தாங்கிப் பிடித்து அமர்ந்தியிருந்தாள் பிரணிதா.

“ஆகாஷ், போய் தண்ணி வாங்கிட்டு வா.” திலகவதி மகனை விரட்டிட, பத்து நிமிடங்களில் தண்ணீர் பாட்டிலுடன் வந்திருந்தான்.

“அம்மாச்சி இந்தா, கொஞ்சம் குடி.” பிரணிதா அவருக்கு நீரை புகட்ட, ஷர்மிதா கர்சீப்பில் தண்ணீரை நனைத்து அவரது முகத்தில் ஒத்தி எடுத்தாள்.

“கிழவி, தேவையா உனக்கு இது? இந்த வயசுல இப்புடி கூட்டத்துல வந்து சிக்கனுமா உனக்கு.” ஆகாஷ், அவருக்கு விசிறி விட்டவாரோ கடுப்படிக்க,

முற்றிலும் தெளிந்திருந்தவர்,
“யாராப் பாத்துடா கிழவின்ற பொடிப்பயலே!” அவர் சண்டைக்கு கிளப்ப,

“பின்னே நீ கொமரியா?” அவனும் மல்லுக்கட்ட,

“ஆகாஷ்!” ஒற்றை அழைப்பில் அவனை அடக்கிய பிரணிதா,
“அம்மாச்சி, எழுந்துக்க முடியுமா? ஆட்டோ சொல்லவா.” என,

“பிரணிதா, உங்க மாமா கடைக்கு போகணும், வர சொல்லியிருந்தாரு.” திலகவதி கூறிட,

“சரிங்கத்தை, ஷர்மி பிடி அம்மாச்சிய, எழுந்துக்கோ போகலாம்.” அவரை கைப்பிடித்து இருவரும் எழுப்பி விட,

“அட விடுங்கடி குமரிகளா, எனக்கு ஒண்ணும் இல்லை. வாங்க போகலாம்.” என்றபடி அவர் நடக்க ஆரம்பித்திட,

“பாத்தியா பிரணி, கிழவிக்கு குசும்ப?” அவன் கடுகடுக்க,

“ப்ச் வாடா போகலாம்.” என்றபடி அவனை இழுத்துக் கொண்டு, அந்த ஜனத்திரளில் நீந்தி சென்றாள்.

“மீனாட்சி நகை மாளிகை” சிறிய அளவிலும் இல்லாது, பெரிய அளவிலும் இல்லாது நடுத்தர கடை. துரைமுருகன் அதனை நிர்வகித்தோடு, அருகே கைவினைப் பொருட்கள்‌‌ அடங்கிய கடையையும் வைத்திருக்கிறார்.

“தரிசனம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதாம்மா?” துரைமுருகன் கேட்டிட,

“அப்பா, அப்பத்தா மயக்கம் போட்டுடுச்சிப்பா!” ஷர்மி முதல் ஆளாக போட்டுக் கொடுத்திருக்க,

“என்னம்மா, இதுக்கு தானே‌ வேண்டாம்னு சொன்னேன்.” முருகன் அவரை கடிந்துக் கொள்ள,

“ஏட்டி, சின்னக்கழுதை உங்கப்பன்கிட்ட‌ அவசரமா இதை சொல்லனுமா?” அவளின் கன்னத்தில் இடித்தவர்,
“ஒண்ணுமில்லை, துரை லேசாக கிறுகிறுத்திடுச்சு, அவ்ளோதான்.” என அவர் சமாளித்திட,

இவர்கள் வந்ததை அறிந்து, வழக்கமாக வரும் ஜிகர்தண்டா எதிர்கடையில் இருந்து வந்திருந்தது.

“பிரணி, ஜிமிக்கி செட் வந்திருக்கு. பிடிச்சதை எடுத்துக்கோங்க.” மாமனின் குரலில், ஷர்மியும் பிரணிதாவும் வேகமாய் முந்தியடித்துக் கொண்டு சென்றனர்.

சிவப்பு, பச்சை, வெள்ளை என கற்கள் பதித்து ஜொலித்த ஜிமிக்கி மனதினை கொள்ளையடித்தது. பிரணிதாவின் கைகள் தானாய் பச்சை மற்றும் வெள்ளை கற்கள் பதிந்த ஜிமிக்கியை‌தான் எடுத்தது. பச்சை கல்லின் மீது ஒருவித க்ரேஷ் அவளிற்கு.

“அப்டியே உன் அம்மாக்காரி மாதிரியே, அந்த பச்சை கல்லு ஜிமிக்கில தான் உன் கண்ணு போகுது” என்ற பவுனின் பேச்சில், பட்டென‌ கையை எடுத்துக் கொண்டவளின் முகம் இறுகிப் போயிற்று.

“அம்மா!” துரைமுருகனின் அதட்டிட,
“ஏய், கிழவி சும்மா இருக்க மாட்டா நீ” ஆகாஷ் ஒரு பக்கம் எகிறி கொண்டு வர,

“ஆகாஷ்!” என்றழைத்து, பிரணிதா வாயில் விரல் வைத்து அடக்க,

“எப்போ பார்த்தாலும், என்னையவே அதட்டு நீ” என்றவன் அவளருகே வந்து நின்றுக் கொள்ள,

“இப்போ நான் என்னடா சொல்லிட்டேன், இப்புடி குதிக்கிறீங்க? உண்மையத்தானே சொன்னேன்.” அவரும் விடாமல் பேசிட,

“என்ன? என்ன உண்மை, அதை இப்போ‌ யாராச்சும் கேட்டாங்களா இங்க? உன் பொண்ணை பத்தி அவசியம் பேசனுமா இப்போ?” ஆகாஷீம் விடுவென என மல்லுக்கு நிற்க,

“பிரணி, இந்த வீட்டுச் சாவி நீ மொத இவனை கூட்டிட்டு கிளம்பு.” திலகவதி சாவியை நீட்ட, வாங்கி கொண்டவள் ஷர்மியையும், அவனையும் அழைத்துக் கொண்டு கிளம்பியவளின் விழிகள் மறந்தும் அந்த ஜிமிக்கியின் பக்கம் திரும்பவில்லை.

அதற்கு மாறாக, ஆகாஷ் கைகள் அந்த ஜிமிக்கியை பத்திரப்படுத்திக் கொண்டன.

“சும்மாவே இருக்க மாட்டீங்களாம்மா நீங்க” மாமான் தாயை கடிந்துக் கொள்வது நன்றாகவே கேட்டது இவளிற்கு, ஆனால் என்ன பயன்?

உர்ரென வந்தவனை கண்ட பிரணிதா,
“ஆகாஷ், எதுக்கு இவ்வளோ கோபம் வருது உனக்கு? சின்னபையன்‌ நீ, அதை மண்டையில ஞாபகம் வச்சுக்கோ.”

“இந்த வருசம் டென்ட் நான், சின்ன பையன் ஒண்ணும் கிடையாது, கிழவி பேசுனதை கேட்டத்தானே.”

“விடு ஆகாஷ், புதுசாவ பேசுறாங்க, எல்லாம் கேட்டு பழகுனது தானே.”

“நீ இப்புடி இருக்கனாலதான், கிழவி ரொம்ப பேசுது.”

“ப்ச், டேய் போதும் விடு இந்த பேச்சை, இதை பத்தி பேசக் கூடாது நீ. எனக்கு அவுங்க பேச்சுனால ஒண்ணும் இல்லை புரியுதா?”

“கோபம் இல்லையா?”

“இல்லை!”

“அப்போ, இந்தா இதை வாங்கிக்கோ.” கையில் வைத்திருந்த ஜிமிக்கியை நீட்ட, முறைத்தாள் அவள்.

“பாத்தியா, முறைக்கிற! அவுங்க பேச்சை உன்னை ஹேர்ட் பண்ணிருக்கு அதான் உனக்கு பிடிச்சதை நீ மறுக்கிற! அந்த கிழவிக்கு இருக்கு இன்னைக்கு!”

பட்டென ஜிமிக்கியை வாங்கியவள்,
“ஹேப்பியா, எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. இந்த பேச்சை இத்தோட விட்டுடனும் நீ, இதை வச்சு அம்மாச்சிக்கிட்ட மல்லுக்கு நிக்க கூடாது ஆகாஷ்.” அவள் கண்டிக்க,

“ம்ம் சரி, சரி” என,

“சீக்கிரம் நடங்க, எனக்கு லாகின் பண்ண டைம்மாச்சு.” என்றபடி அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தவள், வேகமாய் தனது லேப்டாப்பை திறந்து லாக்கின் செய்திருந்தாள்.

அவளிற்கான வேலைகள் அணிவகுத்து காத்திருந்தது. பிரணிதா புகழ்பெற்ற ஐ.டி நிறுவனத்தில் மதுரை ப்ரான்ஞில் வேலைக்கு சேர்ந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. இன்று திருக்கல்யாணத்தை ஒட்டி ஹோர்க் ஃப்ரம் ஹோம் ஒருநாள் மட்டும் கேட்டு வாங்கியிருந்தாள்.

மதிய உணவு நேரம் வரையிலும், வேலை நெட்டி முறித்தது அவளை. இடையில் சிறிது ப்ரேக் எடுத்துகொண்டு மதிய உணவினை முடித்தவள், மீண்டும் அறையினுள் நுழைந்துக் கொண்டாள். திலகாவும், பவுனும் வந்திருந்தனர்.

“பிரணிதா மெயில் பாத்தியா?”‌ அவளது டீம் லீடர் இவளை வாட்சப்பில் கனெக்ட் செய்திருக்க, வேகமாய் இவள் மெயில் பார்க்க இவளது ஹெட் ஆபிஸில் இருந்து வந்திருந்தது.

“சாரி‌ சஞ்சய், இதோ பாத்திடுறேன்.” அவனிற்கு ஒரு மெசேஜ்ஜை தட்டிவிட்டவள், வேகமாய் மெயிலை படிக்க ஆரம்பித்தவள் அதன் ஆரம்ப வரியிலேயே அரண்டுதான் போனாள்.

‘கோவையில் இருக்கும் அவள் கம்பெனி ப்ராஞ்சில், ஆள் பற்றாக்குறை காரணமாக சென்னை ப்ராஞ்சில் இருந்து சில ஜீனியர்களை அங்க அனுப்புவதற்காக நிர்வாகம் முடிவெடுத்துள்ளது, அதில் அவளும் ஒருத்தி’ என்பது தான் அதன் சாரம்சாரம்.


தான் சரியாக படித்தோமா என மூன்று முறைக்கு மேல் திரும்ப திரும்ப அவள் படிக்க, அதன் பொருள் மாறவில்லை. அவளிற்கு இந்த டிரான்ஸ்பர் பிரச்சனையே இல்லை, ஏனெனில் அவள்‌ வேலைக்கு‌ சேரும்போதே இதை‌ கன்டிசனாக வைத்திருந்தனர்.
ஆனால் கோயம்புத்தூர் என்ற பெயரிலேயே அவளது மூளை அதிர்ந்து நின்றுவிட்டது.

வேகமாய் சஞ்சய்க்கு அழைத்தாள்.

“பிரணிதா மெயில் பாத்தீங்களா?” அவனின் கேள்வி இதுவாக தான் இருந்தது.

தன்னை ஒரு நொடி நிலைப்படுத்திக் கொண்டவள்,
“ம்ம் இப்போதான் பாத்தேன் சஞ்சய்.‌‌ என்ன இது தீடீர்னு”

“கோவை ப்ரான்ஜ்ல ஆள் பத்தலையாம், ப்ரஸ்ஸர்ஸ் எடுத்திருக்காங்க, இங்க நம்ம ப்ரான்ஞ்ல உன்னோட சேர்த்து மூணு பேர் செலக்ட் பண்ணிருக்காங்க, அநேகமாக இன்னும் மூணு நாள்ல அங்கே ஜாயின் பண்ற மாதிரி இருக்கும்.‌ நாளைக்கு நீ வந்ததும் அதுக்கான ப்ராசஸ் ஆரம்பிக்கனும்.”

“ஏன் சஞ்சய், இதுல எனக்கு விருப்பமில்லைன்ன என்ன பண்றது?’

“என்ன விளையாடுறியா பிரணிதா, ஆரம்பத்துலயே எப்ப வேணும்னாலும் ட்ரான்ஸ்பர் பண்ணுவோம்னு சொல்லி, ஒத்துக்கிட்டு தானே ஒரு வருச பாண்ட்ல சைன் பண்ண. அதை மீறுனா என்ன நடக்கும்னு தெரியும்தானே உனக்கு. என்ன பிரச்சினை உனக்கு?”

“இல்லை, இல்லை நான் சும்மா தெரிஞ்சுக்கதான் கேட்டேன்.‌வேற ஒன்னுமில்லை.”

“சரி, அந்த ஜி.வி ப்ராஜெக்ட் கோடிங் பாத்து சீக்கிரம் சரி பண்ணிவிடு, க்ளைட்டுக்கு பதில் சொல்ல முடியலை.” என‌ ஒரு கணம் நிறுத்தியவன்,

“பிரணிதா, ப்ரஸ்ஸர்ஸ்க்கு அவ்ளோ‌ சீக்கிரம் நம்ம கம்பெனில வேலை கிடைச்சிறாது, இங்கே ரெக்கமேன்டேசன் எல்லாம் வேலைக்காகாது, ஆனா கோடிங்ல உனக்கிருக்கிற க்ளாரட்டி, எக்ஸெல் டேட்டால உனக்கு இருக்கிற நாலேஜ் அதை நீ ஹேண்டில் பண்ற விதமும், உன்னோட ப்ராஜெக்ட்டும் தான் உன்னை செலக்ட் பண்ண காரணம். அக்ரீமென்ட்ட உடைக்கனும்னு, ஏதோ லூசு மாதிரி பண்ணாத, லட்சத்துல பைன் அமெளண்ட் கட்டனும், அதோடு கேஸ் போடவும் வாய்ப்பிருக்கு.‌ இதெல்லாம் தெரியும்தானே உனக்கு.”

“ம்ம் தெரியும்.”

“கண்டதையும் யோசிக்காம நாளைக்கு வேலைக்கு வர வழிய பாரு, இப்ப நீ ஹேண்டில் பண்ணிட்டு இருக்க இந்த ப்ராஜெக்ட் டீடெய்ல்ஸ் முழுசும் நாளைக்கு சஃமிட் பண்ணிருக்கனும்.” என அவன் வைத்து விட,செய்வதறியாது திகைத்து தான் போனாள்.

ஆனால், அவளை‌ யோசிக்க விடாமல் அடுத்தடுத்த வேலைகள் வரிசைக்‌கட்டி‌ கொண்டன.

பிரணிதாவின் வேலை இரவு வரை‌ நீண்டது.

“பிரணி இன்னும் முடியலையா?” துரைமுருகன் கடையை அடைத்து விட்டு வந்திருந்தார்.‌

“முடிஞ்சது மாமா.” என்றபடி எழுந்தவளுக்கு, இதை சீக்கிரமே வீட்டினரிடம் தெரிவிக்கும் எண்ணம். ஷர்மியை தவிர மற்றவர்கள் உண்ண ஆரம்பித்திருந்தனர்.‌ விசயத்தை எப்படி சொல்வது என தடுமாறி கொண்டிருக்க,

“என்னத்துக்குடி‌ தட்டுல கோலம் போட்டுட்டு இருக்கிறவ?” பவுனம்மாள் கேட்டிட, துரையும் அவளை பார்க்க,

“ஒரு முக்கியமான விசயம் பேசனும் மாமா!” என்ற‌ பிரணிதாவை பார்த்தவர்,

“சாப்பிட்டு முடிம்மா!” என்றவர் உணவில் கவனமாக, அதற்கு‌மேல் பேசாது உண்ண ஆரம்பித்திருந்தாள்.

“ஆகாஷ், சாப்பிட்டு சீக்கிரம்‌ தூங்க போ.” தந்தையின் சொல்லை‌ மீற‌ முடியாது, உண்டு முடித்தவன்‌ பிரணிதாவை பார்த்த வண்ணமே செல்ல, சிரிப்புதான் வந்தது அவளிற்கு.

“பிரணி, வெளியே போகலாம். காத்து நல்லா வருது.” என்றபடி துரை அவளை‌ வெளியே வராண்டாவிற்கு அழைத்து செல்ல, உடன் திலகவதியும், பவுனம்மாளும்.

“சொல்லு பிரணி.” மாமானின்‌ கேள்விக்கு, தலையசைத்தவள்.

“எனக்கு டிரான்ஸ்பர் கொடுத்திருக்காங்க மாமா.”

“ஓஹோ, நீ ஏற்கனவே செல்லியிருந்த தானேம்மா”

“ஆமா மாமா, டிரான்ஸ்பர் எப்போ வேணும்னாலும் பண்ணுவோம்னு சொல்லித்தான், இங்கே மதுரை ப்ரான்ஞ்சுல அப்பாய்ண்ட் பண்ணாங்க.”

“ எந்த ஊருக்கு?”

“அது வந்து‌ மாமா கோ..கோயம்புத்தூர்ல!” என்றவளின்‌ குரல்‌ உள்ளடங்கிப் போயிற்று. சில நிமிடங்கள் நிசப்தம் சூழ்ந்தது அவ்விடத்தை.

“போகலைன்னா?”

“வேலை போய்டும் மாமா”

“அதுமட்டும் தானா?”

“பாண்ட் சைன் பண்ணிருக்கேன், பைஃன் அமெண்ட் கட்ட சொல்லுவாங்க.‌ அதோட ஒரிஜினல் சர்ட்டிபிகேட் அவுங்க கிட்ட இருக்கு.”

“வேலை வேண்டாம்னு சொல்லிடு‌ பிரணி, பணத்தை கட்டிடலாம்.” என்ற மாமானின் பேச்சில் வாயடைத்து தான் போனாள்.

“லட்சத்துல கேட்பாங்க மாமா.”

“அது பிரச்சனை இல்லைடா, சமாளிச்சுக்கலாம்.‌ உன்னோட விருப்பம் தான் இங்கே முக்கியம்.” என்றவரின் பேச்சில், எப்போதும் போல் இப்போதும்‌ கலங்கி தான் போனாள் பிரணிதா.

அவள் மாமானிற்கு‌ இன்று என்றில்லை, அவள் சிறுவயது தொட்டே, அவளது விருப்பம் தான் முதன்மை. அவளிற்காக எந்த எல்லைக்கும் போவார், யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார். இதோ இப்போது அவளது நிலையை சொன்ன‌ அடுத்தநிமிடம் அவளின் விருப்பத்திற்கு தானே முக்கியத்துவம் கொடுக்கிறார்.

இப்படிப்பட்டவரை‌‌ மேலும் மேலுமல்லவா, கஷ்டத்தை அளிக்கிறாள்.

“பணம் கட்டுனாலும், கேஸ் போட வாய்ப்பிருக்கு மாமா.” என திணறியவளை பார்த்தவர்,

“அதெல்லாம், உன் மாமான் நான் பாத்துப்பேன்டா.‌ உன் விருப்பத்தை மட்டும் சொல்லு, உனக்கு இஷ்டமில்லைன்னா நீ அங்க போக வேண்டாம், என்னனாலும் பாத்துக்கலாம்.” என அவர் தைரியமளிக்க,


“எலேய், கிறுக்கா என்ன‌ பேசிட்டு இருக்க நீ? அவ்வளவு பணத்துக்கு எங்க போவ நீ. அவதான் அறிவில்லாம பேசுறானா நீயும் ஒத்து ஊதுற அதுக்கு. இப்புடி அவ இஷ்டத்துக்கு விட்டு விட்டுத்தான் கொழுப்பு ஏறிப் போயிருக்கா கழுதை.”பவுனம்மாள் எகிறிட,

அம்மா!” என அவரை அதட்டியவர்.

“இதுல யாரும் தலையிடக் கூடாது, அவளுக்கு என்ன விருப்பமோ, அது மட்டும் தான்‌ நடக்கும் இங்க. இதுல‌ அநாவசியமா யாரும் கருத்துச் சொல்ல வேண்டும்.”

“ஓஹோ, அந்தளவுக்கு ஆகிப்போச்சா, நான் ஒண்ணும் இவளை மாதிரி சுயநலவாதி இல்லடா, மாமான்காரன் என்ன வேணும்னாலும் கஷ்டப்படடும், எவ்ளோ வேணும்னாலும் கடன்படட்டும்னு விடுறதுக்கு.”

“அம்முச்சி தேவையில்லாம பேசாதீங்க?”

“ஏதுடி தேவையில்லாதது, இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் டி உன் மாமாங்காரனுக்கு நீ சொமையா இருக்கப் போற, உன் மாமான் நகை கடை தான் வச்சிருக்கான்.‌ சுரங்கம் இல்லை.”

“அம்மா! அத்தை!” துரையும், திலகாவும் ஒருசேர அதட்டியவர்கள்.

“என்னத்தை பேசுறீங்க? நாங்க என்னைக்காச்சும் பிரணிய அப்புடி நினைச்சு சொல்லிருக்கோமா?”

“அந்த தைரியம்தானாடி இவளுக்கு. எல்லாரும் அவ இஷ்டத்துக்கு விட
போய்தானே, இன்னைக்கு லட்சத்துல பணம் கட்டுங்கன்னு அசால்டா சொல்லுறா.” என்றவரை முறைத்தாள் பிரணிதா.

“நான் இப்ப சொன்னேனா மாமாவை பணம் கட்ட சொல்லி.”

“அங்க வேலைக்கு போகலைன்னா, அடுத்து அதுதானே செய்யனும்.”
கடைசி வரை என் பையன‌ கடங்காரனாவே இருக்கனும் உனக்கு அப்புடித்தானே.”

“அம்மா, கோயம்புத்தூருக்குன்னு சொன்னது உங்களுக்கு கேட்டுச்சா? இல்லையா?”

“அதெல்லாம் நல்லா கேட்டுச்சு.ஏன், அந்த ஊருக்கு போனா என்னவாம்.‌ மகாராணி போக மாட்டாளா? வேலைன்னா போய்தான் ஆகணும்.”

“அப்புடி என்னடி உனக்கு பிடிவாதம்? அன்னிக்கு உன் பேச்சை கேட்டு, உன்னை அவன் இங்க கூட்டி வந்த உன்னை பாத்துக்கிட்டதுக்கு, பதிலா நீ அவனுக்கு என்ன செஞ்ச, உன்னால அவன் கஷ்டப்பட்டது தான் மிச்சம்.”

“அம்மா, போய் படுங்க. போங்க”

“அத்தை, போதும் வாங்க.”
அழைத்து திலகாவை கண்டு கடுப்புற்றவர்,

“அன்னைக்கு, இவ பேச்சை கேட்டு உன்‌ புருசன்காரன்‌ இவளை இங்கு இழுத்துட்டு வரும்போது, நீ சுதாரிச்சிருந்தா இப்ப இந்த நிலைமை வந்திருக்குமா? பெத்த பிள்ளைங்களுக்கு மேலா இவளை சீராட்டி வளந்தீங்களே, பாரு அவ வாழ்க்கை தான் முக்கியம்னு எவ்வளவு சுயநலவாதியா நிக்கிறா”

அம்முச்சி போதும், ரொம்ப பேசுறீங்க! நான்‌ சுயநலவாதியா?”

“பின்ன நீ பொதுநலவாதியா?”

அமைதியாய் பிரணிதா அவரை முறைத்திட,

“என்னை இங்க கூட்டிட்டு வந்ததுல ரொம்ப வருத்தம் போலயே உனக்கு?”

“வாயை மூடுடி கோட்டிக்கழுதை, அர்த்தமில்லாம பேசுனேனா, இழுத்து வச்சு தச்சிடுவேன் பாத்துக்க.”

“என்னதான் அம்முச்சி வேணும் உனக்கு? ஏன்? என்னைப் போட்டு அப்புடி படுத்துற?”

“நீதான் டி என் மவனை போட்டு படுத்துற?”

“உனக்கு எப்பவும், மாமாவ பத்தியும், உன் பொண்ணை பத்தியும்தானே கவலை, என்னை பத்தி, என மனசை பத்தி கவலைப்பட்டு இருக்கியா நீ.”

“சரி, இப்போ கவலைப்பட்டு என்ன பண்ணலாம், உன் மாமானை போய் பணத்தை ரெடி பண்ண சொல்லலாமா?”

“நான் அப்புடி சொன்னேனா?”

“அடுத்து அதுதானே சொல்லுவா, இந்த கிறுக்குப்பயலும் உன் விருப்பத்துக்கு மாறா செஞ்சிருக்கானா?”

“இப்போ என்னத்தான் பண்ணனும்ங்கிற?”

“போதும், இந்த பேச்சை விடுங்க. காலையில பேசிக்கலாம். பிரணி போய் தூங்கு.” துரை முடிவாய் கூறிட, பவுனை முறைத்த வண்ணம் சென்றாள் பிரணிதா.

அவ்வளவு சீக்கிரம் உறக்கம் வந்துவிடுமா என்ன? ‘சுயநலவாதி’ அவளது அம்மாச்சி சொன்ன வார்த்தைகள் போதுமே அவள் உறக்கம் கெடுவதற்கு.

‘நான் சுயநலவாதியா?’ கடுப்பாகியது அவளிற்கு. இந்த மாறுதல் அவளுக்கு ஒரு பிரச்சனையே இல்லையே, சம்பளம் கணிசமாக வர, அதனை உதறி தள்ளுவதற்கு அவள் ஒன்றும் முட்டாள் இல்லையே.‌ ஆனால், அந்த ஊர் அதுதானே அவளது பிரச்சனை. நடந்த அத்தனையும் தெரிந்தும், பவுனம்மாள் பேசியதை தான் அவளால் தாங்கி கொள்ள இயலவில்லை.

அந்த ஊரும், அங்கிருப்பவர்களும் வேண்டாம் என்று தானே இங்கே வந்து இருக்கிறாள். வேண்டாத நினைவுகள் அவள் மனதினில் எழ, உறங்காமல் கண்களை வெறுமேன மூடியிருந்தாள்.

அப்போது அவளது அறை கதவு திறக்கப்பட, வருவது யாரென அறிந்தவள் வீம்பாக கண்களை திறக்காமல் இருந்தவள்,
‘இதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லை.’ என நினைக்க,

“கழுதை, காலுக்கு மருதாணி வைக்காம வந்துட்டா, என் மேல இருக்கிற கோபத்துல. அப்பறம் நாளைக்கு வயித்த வலின்னு அலற வேண்டியது.” என்றவாறு பவுனம்மாள் அவளது கால் விரல்களில் மருதாணியை பூசினார்.

சிறுவயது முதலே, பிரணிதாவிற்கு சூட்டு உடம்புதான். அதனாலே அவளிற்கு சூட்டில் அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும். அவள் உடம்பை குளிர்ச்சியாக்க, கால் விரல்களில் மருதாணியை பூசிக் கொள்பவள், இன்று அதனை கோபத்தில் செய்யாமல் வந்திருந்தாள்.

“ஜில்” என்ற உணர்வு கால் முழுவதும் பரவ, அதனை அனுபவித்தவளின் மனதில், இதை அவளிற்கு முதன்‌முதலில் வைத்து விட்டவனின் முகமும் அவளுள் பரவ ஆரம்பித்த வேளை,

“கண்ணைத் தொறடி களவாணி, இன்னும் தூங்காம இருக்குன்னு தெரியும்.” என்று அவர் கூறியும் அவள் வீம்பில் திறக்காமல் இருக்க,

“நீ இன்னும் சின்ன பிள்ளை இல்லை பிரணி, உனக்கப்பறம் இரண்டு பிள்ளைங்க இருக்குங்க. அவுங்களையும் உன் மாமான் தான் வளந்தாகனும். உன்னோட மனசை பத்தி மட்டும் நினைக்காம, கொஞ்சம் கண்ணை தொறந்து, வீட்டுல என்ன நடக்குதுன்னு பாரு. சும்மா வீம்பு பிடிச்சிட்டு, கிடைச்ச நல்ல வேலையை எட்டி உதைக்காதே.” என்றுவிட்டு அவர் சென்றுவிட, ஒரு முடிவு எடுக்க முடியாமல் திணறினாள் அவள்.

‘அங்கு செல்லவும் விருப்பமில்லை, அதேசமயம் மாமாவை மேலும் கஷ்டப்படுத்துவும் அவளிற்கு மனமில்லை. அவளது அம்மாச்சி சொன்னது போல், எவ்வளவு தான் அவள் மாமான் அளவிற்கான செய்துக் கொண்டே இருப்பார். அவருக்கென்று குடும்பம் இருக்கிறதில்லையா. இந்த வேலையை விட்டால், அவள் மேல் கரும்புள்ளி வந்துவிடும் அல்லவா, இனி அடுத்த நிறுவனத்தில் எப்படி வேலை கொடுப்பர், ஒரு வருடமாவது எக்ஸ்பீரியன்ஸ் வேண்டும் என்பார்களே, அதோடு கேஸ் ஆகிவிட்டால், மொத்தமாக இவள் வீட்டில் இருந்துவிட வோண்டியது தான்.’
அனைத்தையும் நினைத்துப் படி எப்போது உறங்கினாளோ?

அடுத்த நாள் தாமதமாக எழுந்தவள், அரக்க பறக்க வேலைக்கு சென்றிருந்தாள். இரவு வேலையை விட்டு வந்தவள்,

“கோயம்புத்தூருக்கு போறேன் மாமா, மூணு மாசம் மட்டும் சொல்லிருக்காங்க. வேற வழி இல்லை போய்தான் ஆகணும். பிஜிக்கு பாக்கனும்.” என, பவுனம்மாளை தவிர மற்ற அனைவரும் அதி
ர்ந்து தான் போயினர், அவளின் முடிவில்.

இங்கே, பவுனம்மாளோ அலைப்பேசியில்,
“அவ அங்க வர்றதுக்கு ஒத்துக்கிட்டா, இந்த தடவையாச்சும் அவளை அங்க பிடிச்சு வச்சிக்க பாருங்க. இந்த தடவையும் விட்டீங்கன்னா, இனி ஜென்மத்துக்கும் அவளோட உறவு உங்களுக்கு கிடைக்காது. பாத்துக்கோங்க.” என்றிருந்தார்.
 
Last edited:

Author: STN - 35
Article Title: கண்ணாமூச்சி 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
Nice start 🤩 🤩 🤩 🤩
பவுன் பாட்டி ஏதோ பிளான் பண்ணி தான் செய்யறாங்க போல.....
சின்ன வயசுல ஏதோ misunderstand பண்ணிக்கிட்டு மாமா கூட வந்துட்டா போல......
பாட்டி அவங்க பெண்ணுக்கு சப்போர்ட் பண்றாங்கனா இவ தான் சரியா புரிஞ்சிக்கலைனு தோணுது.....
யார் அவன்???? ஹீரோ வா