• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்ணாமூச்சி 10

STN - 35

Member
கண்ணாமூச்சி 10;

பிறந்தநாள் கொண்டாட்ட வீடு துக்க வீடாய் மாறியிருந்தது. யாரும் எதிர்பாராத ஒன்று. கொண்டாட்டத்திற்கென அலங்கரிக்கப்பட்ட வீடு, இன்று பூவப்பாவின் இறந்த நாளை கொண்டாடும் விதமாக மாறியிருப்பதை என்ன சொல்ல?

எந்த இடத்தில் நேற்று இரவு மகளை கேக்கை வெட்ட வைத்தாரோ! அந்த இடத்திலே இப்போது உயிரற்ற உடலாய் படுத்துக் கிடந்தார் பூவப்பா.

தந்தையை எதிர்பார்த்து வாசலிலே அமர்ந்திருந்தவளை ஏமாற்றாது தகப்பனும் வந்தார்தான், உயிரற்றவராய்.

அந்த சிரிப்பு! அந்த மென்மை! பூவாய் அணைப்பவரின் அணைப்பு! இனி அனைத்தும் நினைவுகளாய் மட்டுமே!

மாலையில் பிறந்தநாள் கொண்டாத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, வீட்டினர் அனைவரும் பூவரசனிற்காகதான் காத்திருக்க ஆரம்பித்திருந்தனர்.

நேரம் ஆக, ஆக அவர் போனிற்கு அழைக்க, அது அணைத்து வைக்கப்பட்டிருந்ததில் துணுக்குற்றார் பூர்வா. என்றைக்குமே போனை அணைத்திடதாவர் அவர்.

என்ன முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போகவே, அனைவருக்கும் பதற்றம் தொற்றிக் கொள்ள, துரை கிளம்பிவிட்டார் நண்பனை தேடி.

ஏர்போர்ட்டை நெருங்கும் வழியில், போலீசாரும், ஆம்புலன்ஸூம் என கூட்டம் இருக்க, வழியில் ஒருவரை பிடித்து விசாரித்ததில் “ஆக்ஸிடென்ட்” என தகவல் வந்ததில், துரையின் மனம் துணுக்குற்றது. மாற்று வழியில் செல்லுமாறு கூற, கிளம்பியவருக்கு பூவரசன் தன்னை அழைப்பது போல் குரல் கேட்டிட, அதிர்ந்து போனவர், அதற்கு மேல் முடியாது இறங்கி ஓடியிருந்தார்.

அந்த இடத்தை நெருங்க நெருங்க அவர் உடல் நடுங்கிட, வியர்த்துப் போயிருந்தார் முழுவதும். மெல்ல கூட்டத்தினை விலக்கி பார்த்தவரின் விழிகள் நிலைக்குத்தி போக, கண்கள் இருட்டிக் கொண்டு வர, கீழே விழுந்திருந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவர் மயக்கத்தை தெளிய வைத்திருக்க,
“டேய் பூவு!” என கதறியபடி காரின் அருகே அவர் செல்ல முயல, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

“சார், சார் பூவு சார், என் மச்சான் சார்” என கதறியபடி அவர் திமிற,

“ஏட்டு இவரை கொஞ்சம் பிடிங்க, கன்ட்ரோல் பண்ணுங்க மொதல்ல.” என இன்ஸ்பெக்டர் அதட்டிட, ஓடி வந்தார் ஏட்டு.

“அய்யோ, என்னை விடுங்களேன்.” என அவர் கதற,

“இங்க பாருங்க சார், உள்ளே இருக்கிற ஆளு ஸ்பாட் அவுட்டு. உடம்போட நசுங்கியிருக்கு காரு, பாடிய எடுக்க முடியாமா போராடிட்டு இருக்காங்க, நீங்களும் மேலும் தொந்தரவு படுத்தாதீங்க சார்.” என,

“அய்யோ! அய்யோ!” என தலையிலடித்தப்படி கதறியவர்,

“இல்லை சார், என மச்சானுக்கு ஒண்ணுமாகிருக்காது, அவன் உயிரோட தான் சார் இருப்பான், அவன் பொண்டாட்டி, பிள்ளய விட்டு போக மாட்டான் சார், பூ மனசுக்காரன் சார் அவன். டேய் மச்சான் வாடா வெளிய, அங்க உன் பொண்ணு நம்ம பூக்குட்டி உன்னை எதிர்பார்த்துட்டு உட்காந்திருக்காடா,

அவளுக்கு நான் என்னடா பதில் சொல்லுவேன்? இப்போ தான்டா சிரிச்சு பேசிட்டு வந்த, அப்பறம் எப்புடிடா நீ உயிரோட இல்லைன்னு நான் நம்புவேன். பூக்குட்டிக்கு என்னடா பதில் சொல்லுவேன் நானு.” என கூறி துடித்தவரை, கண்ட ஏட்டுவிற்கே கண்கள் கலங்கி விட்டது.

“எப்பா, அழாதய்யா. நீ தான் இப்போ தைரியமா இருக்கனும். வீட்டுக்கு தகவல் சொல்லிட்டு ஆக வேண்டியதை பாருப்பா.” என துரையை தேற்றினார் அவர்.

பூ மனம் படைத்தவனை, சிதைந்து போய்தான் எடுக்க முடிந்தது. ஜிவனில்லாமல் போலிசார் கேட்ட இடத்தில் கையொப்பமிட்டு, நண்பனுடன் சேர்ந்து நடைப்பிணமாய் தான் வீடு வந்திருந்தார் துரை.

போஸ்ட்மார்ட்டம் முடிந்து, ஒரு துணியில் தான் கட்டி கொடுத்தனர் பூவரசனை. நடுக் கூடத்தில் அவர் உடல் கிடத்தப்பட்டிருக்க, அவரருகே அமர்ந்திருந்த பூர்வாவின் விழிகள் அவர் முகத்தை விட்டு சிறிது கூட அசையவில்லை. நடுங்கிய விரலுடன் மெல்ல பூவரசனின் நெற்றியை வருடியவரின் விழிகளில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை.

நேற்றைய இரவு உணர்ந்த கணவனின் தொடுகை, இன்னும் அவரிடம் மிச்சமிருக்க எப்படி நம்புவார் அவர் இறந்துவிட்டார் என? ஒருவேளை தன்னிடம் விளையாடுகிறாரோ? என நம்பாது அவர் முகம் முழுவதும் வருடிட, எந்தவித உணர்வும் இன்றி, உடல் சில்லிட்டுப் போய் கிடந்தவரை காண காண நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது பூர்வாவிற்கு.

‘எப்படி? மதியம் சிரித்த முகத்துடன் சென்ற கணவன், எப்படி உயிரில்லாமல் திரும்புவான்? இது எப்படி சாத்தியமாகும்? இல்லை இல்லை அவர் இறக்கவில்லை, எல்லோருமாக சேர்ந்து என்னை ஏமாற்றுக்கின்றனர்.’ என மனதோடு புலம்பியவர்,

“பூ அப்பா, போதும் எழுந்திருங்க விளையாண்டது போதும். பாருங்க உங்க விளையாட்டை நம்பி எல்லாரும் அழுதுட்டு இருக்காங்க. எந்திரிங்க, எந்திரிங்க சீக்கிரம் பூக்குட்டிக்கு கேக் வெட்டனும் இல்லை, எழுந்திருங்க.

நீங்க செத்துட்டீங்களாம், எல்லாரும் பொய் சொல்றாங்க. மதியம் வரை சிரிச்சு பேசிட்டு போனவரு, சாயாங்காலத்துக்குள்ள எப்புடி சாக முடியும்? எல்லாரும் உங்க நடிப்பை நம்பி ஏமாந்துட்டாங்க, வாங்க, வாங்க நேரமாச்சு.” என பூவரசனின் முகத்தை தொட்டு வருடி, தட்டி அவரை எழுப்பிட, அவரது பேச்சில் துரை,

“அய்யோ! அய்யோ! ஏன்டா இப்புடி விட்டுட்டு போன எல்லாரையும், நீ செத்ததைக் கூட நம்ப முடியாம இருக்கடா என் தங்கச்சி.” என அவர் ஒருபுறம் அழுது புலம்ப, உறவினர்கள் தான் தாங்கிப் பிடித்தனர்.

இந்த களோபரத்தில் பிரணிதாவை கவனிக்க மறந்துவிட்டனர் அனைவரும்.
தன்னை அள்ளி அணைத்து முத்தமிட்டு சென்ற தந்தையை இன்று துணியில் கட்டிய பொட்டலமாய் கொண்டு வந்ததில் அதிர்ந்துப் போனவள், அங்கிருந்த மூலையில் சரிந்திருந்தாள்.

இறப்பை பற்றிய தெரியாத வயதும் இல்லை, அதை பக்குவமாய் கையாளுக் கூடிய வயது இல்லாமல், பதின் பருவத்தை நோக்கி அடி எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளின் மனநிலையை அங்கே கவனிக்க தவறியிருந்தனர்.

“பூ அப்பா! பூ அப்பா!” விடாது அவளது உதடுகள் உச்சரிக்க, கண்களில் துடைக்க துடைக்க கண்ணீர் பெருகியது அவளிற்கு.

‘நான் ப்பாஸ்ட்டா வர சொன்னனாலதான், சாமி அப்பாவ இவ்வளோ சீக்கிரம் அனுப்பிட்டாங்களா?’ தனக்குத்தானே கேட்டு மறுகியவள்,

‘சாமி, சாமி இனி நான் எப்பவும் பூ அப்பாவ ப்பாஸ்ட்டா வர சொல்ல மாட்டேன், நான் தப்பு செஞ்சிட்டேன், சாரி. ப்ளீஸ் நீ பூ அப்பாவ பழையபடி கொண்டு வந்து விட்டுடு. ப்ராமிஸா இனி நான் ப்பாஸ்ட்டா வர சொல்ல மாட்டேன், நீ இந்த பூ அப்பாவ போக சொல்லிடு, இவரு வேணடாம்.

என் பழைய பூ அப்பாவ வர சொல்லுங்க சாமி. நான் கண்ணை மூடி டென் வரை எண்ணுனா, பூ அப்பா வந்திடுவாருல,
இல்லை இல்லை வேண்டாம் நான் பிஃப்டி வரை எண்ணுறேன்.’ என மனதோடு புலம்பியவள், வேகவேகமாய் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு எண்ணி முடித்தவள் கண்களை திறக்க, எதுவும் மாறவில்லை.

‘ஏன் சாமி? பூ அப்பா திரும்ப வரலை. நான் வேணும்னா நூறு வரை எண்ணட்டா, அப்போ பூ அப்பா திரும்பி வந்திடுவாரு தானே.’ மீண்டும் அவள் எண்ணிக்கையை தொடங்கிட,

“நான் சொல்றதை, ஏன் யாருமே கேட்க மாட்டுறீங்க, அவரு விளையாடுறாரு அதை போய் நம்பிட்டு, அவரை தூக்கிட்டு போக வர்றீங்க. தள்ளுங்க விடுங்க விடுங்க நான் எழுப்புனா எழுந்திடுவாரு. என்னை விடுங்க, விடுங்கன்னு சொல்றேன்ல,

ஏங்க! ஏங்க! எந்திரிங்க, நீங்க இப்புடி பண்றது எனக்கு வலிக்குது. எனக்கு வலிக்க விட மாட்டேன்னு சொன்னீங்கதானே, எந்திரிங்க எனக்கு ரொம்ப வலிக்குது. வந்திடுங்க என்னையும், பூக்குட்டியையும் விட்டுட்டு உங்களால இருக்க முடியாதுங்களே, எங்ககிட்டயே வந்திருங்க.!” என்ற பூர்வாவின் கதறலை கேட்டு வேகமாய் கண் திறந்தவள் கண்டது, பூவரசனின் உடலை தூக்கி செல்வதை தான்.

‘ஓஹ் இந்த பூ அப்பா கிளம்பிட்டாரா? சரி, சரி அப்போ சாமி என் பழைய பூ அப்பாவ அனுப்பி வச்சிடுவாரு. நான் இன்னும் நூறு தடவை எண்ணுறேன்.’ என மகிழ்ச்சியில் மீண்டும் பிரணிதா எண்ண தொடங்கிட,

அழுது கரைந்த பூர்வாவை, உறவினர்கள் தாங்கி கொள்ள பவுனு வேகமாய் பிரணிதாவை தேடி வந்தவர், அவள் முணுமுணுப்பதை கண்டு அவளருகே சென்றமர்ந்து, அவளை எழுப்பி,

“என்ன பிரணிம்மா பண்றீங்க?” என்றவரின் கேள்விக்கு, அவள் தனது வேண்டுதலை சொல்ல, அய்யோ! என நெஞ்சில் கைவைத்தவர், அடுத்தடுத்து அவள் கூறியதை கேட்டு, நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினார் பவுனம்மாள்.

*****************

கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு மேல் ஆனது மாணிக்கம் கண் திறக்க, ஆக்ஸிடென்ட் நடந்த அன்று, தூக்கியெறியப்பட்டவரை சில மணி நேரங்களில் கண்டெடுத்து விட்டனர் போலிசார். அடுத்தடுத்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தரப்பட,

ஏற்கனவே, தனது அண்ணன் அடிபட்டு கிடந்ததில் அரண்டு போயிருந்த தங்கவேல், தற்போது மச்சானும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என்பதை கேட்டு இடிந்து தான் போனார். அண்ணனை பார்ப்பதா? இல்லை மச்சானை பார்ப்பதா? என சுழலில் மாட்டியது போல் முழித்தவர், பெண்களிடம் விபரத்தை கூற, கூறி துடித்தனர் இருவரும்.

பெண்கள் உடனே, அண்ணனை காண கிளம்பிட, அவர்களை அதட்டி அங்கேயே இருக்க செய்த தங்கவேல் நம்பிக்கையான ஒருவரை அங்கே பாதுகாப்பிற்கு வைத்து விட்டு மாணிக்கத்தை காண சென்றவர், அவரின் உடல்நிலை மோசமாகி இருப்பதை கண்டு, கோயம்புத்தூருக்கு மாற்றிவிட்டிருந்தார்.

உள்காயம், வெளிக்காயம் என எக்கச்சக்க அடிகள் மாணிக்கத்தின் உடம்பில். இரண்டு நாட்கள் அனைவரையும் கலங்க வைத்து விட்டு இன்றுதான் கண் திறந்தார்.

ஒரு நொடி நடந்த நினைவுகள் அனைத்தையும் மீட்பதற்குள் தவித்துதான் போனார் மாணிக்கம்.

“மதுரை…பிரணிதா…பூவரசன்…அவரது குடும்பம்….ஏர்போர்ட்….கார்….ஆக்ஸிடென்ட்.” மெல்ல மெல்ல அவரது மூளை ஒவ்வொரு நிகழ்வுகளையும் வரிசைப்படுத்திக் கொண்டு வந்ததில், இறுதியில் பெரும் சத்தத்துடன் கார் லாரியுடன் இடிக்கும் காட்சி வர, தூக்கி வாரிப் போட, நடுங்கிய உடலுடன் எழுந்தமர்ந்துவிட்டார் மாணிக்கம்.

அவரது வேகத்தில் அருகிலிருந்த நர்ஸ் பயந்து போனவர்,
“சார், சார் என்ன செய்யுது?” என,

உடல் முழுவதும் வேர்த்துப் போய், திடீரென மூச்செடுக்க முடியாமல் அவர் திணறிட, பயந்து போய் டாக்டரை வரவழைத்துவிட்டார்.

“மாணிக்கம், மிஸ்டர்.மாணிக்கம் ஒண்ணுமில்லை, நீங்க நல்லா இருக்கீங்க. மூச்சை மெல்ல இழுத்து விட்டுட்டு கண்ணை திறங்க.” மருத்துவர் மெல்ல மெல்ல மாணிக்கத்தை இயல்பாக்க போராட, அவரது போராட்டத்திற்கு முடிவு கிடைத்தது போல் சமநிலை அடைந்திருந்தார் மாணிக்கம்.

“நீங்க இப்போ நல்லா இருக்கீங்க, உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எதையும் நினைச்சு பயப்பாடாதீங்க. உங்க ரிலேவ்டிஸ் எல்லாம் வெளிய தான் இருக்காங்க. பயப்படாதீங்க, இயல்பா இருங்க.” என்றவர்,

“இவர் பேமிலி ஆட்களை வந்து பாக்க சொல்லுங்க.” என செவிலியரிடம் சொல்லிவிட்டு அவர் வெளியேறிவிட, அடுத்த நொடி மாணிக்கத்தின் தங்கைகள் குடும்பம் உள்வந்திருந்தது.

“அண்ணே!” என அழுதபடி இரு பொண்களும் ஓடிவர,
“மாமா!” என அழுகையுடன் பதின்வயது ராகவனும் பின்னோடு ஓடிவந்தான்.

“என்ன அண்ணே, இப்புடி பயமுறுத்திட்ட, நீ கண் முழிக்கிற வரை உசுரே இல்லை எங்களுக்கு.” கவிதா சொல்லிக் கொண்டு அழ, மச்சான்களும் மாணிக்கத்தை கண்டு கலங்க,

அனைவருக்கும் சிறு புன்னகையை தந்து ஆறுதல் அளித்தவருக்கு, பூவரசின் நினைவு வர,

“சின்ன மாப்பிள்ளை, அந்த காரை ஓட்டிட்டு வந்தவருக்கு என்ன ஆச்சு? நல்லாருக்காரு தானே?” பிரணியின் பூ முகம் மின்னி மறைய, பூவரசிற்கு ஒன்றும் ஆகியிருக்க கூடாதேன படபடப்புடன் அவர் கேட்க,

“அந்த டிரைவர் ஸ்பாட் அவுட் மச்சான்.” என்ற தங்கவேலின் பதிலில்,

“என்ன?” என அதிர்ந்துப் போனவரின் இதயம் ஒரு நொடி நின்றுதான் போனது. மூச்செடுக்காமல் அசையாத பார்வையுடன் இருந்தவரை கண்டு பயந்து போனவர்கள் மருத்துவரை அழைத்திட, மீண்டும் ஒரு போராட்டம்!

மீண்டும் அடுத்த நாள் காலையில் கண்விழித்தவர், யாரின் பேச்சையும் காதில் வாங்காது, மருத்துவரின் சொல்லையும் கேளாது, மதுரை நோக்கி கிளம்பியிருந்தார். அவரை தனியே விட மறுத்து, குடும்பமும் உடன் வந்தது.

செல்லும் வழி எங்கும் பிரணிதாவின் எண்ணம் தான் மாணிக்கத்திற்கு.

‘பிறந்தநாள் அதுவுமாக அழ வைக்க வேண்டாம் என நினைத்து வாழ்க்கை முழுவதும் அழ வைத்துவிட்டேனே!’ தன்னை தானே நிந்தித்து கொண்டவர்,

‘சாரி பாப்பா, அங்கிள் உனக்கு பண்ண ப்ராமிஸை காப்பாத்த முடியலையே?’ என உள்ளே கதறி துடித்தவர்,

‘அய்யோ! பிள்ளை எப்படி இதனை தாங்கி கொண்டாள்.’ என நினைத்தே அவரது உள்ளம் பலவீனமானது.

நேராய் ட்ராவல்ஸ்க்கு சென்றவர்கள், செல்வத்திடம் வீட்டு முகவரியை பெற்றுக் கொண்டு அங்கே சென்றனர்.

மாணிக்கம் விடாது, நடந்த அனைத்தையும் கூற, கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நெஞ்சம் கனத்து தான் போனது பிரணிதாவை நினைத்து.

*************

இப்போதெல்லாம் பிரணிதா மிகவும் அமைதியாகிப் போனாள். ஓரளவு சொந்தபந்தத்தின் மூலம் அவளது அப்பாவின் இறப்பு புரிய வைக்கப்பட்டிருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்திருக்கவில்லை அவளிற்கு.

எப்போதும், வெளிவாசலில் அமர்ந்தப்படி அமைதியான பார்வையுடன் பார்த்தப்படி இருப்பவளின் மனம் மட்டும் எண்ணிக்கையை நிறுத்தவில்லை.

ஒவ்வொரு காரின் சத்தத்திற்கு அவளது ஐம்புலன்களும் பரவசமடைந்து வீதியை தான் பார்க்கும்.

அன்றும் அதேபோல் அமர்ந்திருந்தவளை, அதட்டி உணவை ஊட்டியபடி அருகே அமரந்திருந்தார் பவுனம்மாள்.

வீட்டு வாசல் முன்னாள் நின்ற காரினை கண்டு பட்டென எழுந்தவள், வேகவேகமாய் ஓட, அவளை பிடித்து நிறுத்த முடியாமல் தள்ளாடிப் போனார் பவுனு.

“பூ அப்பா, பூ அப்பா!” என கத்தியபடி காரின் அருகே சென்றவள், இறங்கிய மாணிக்கத்தை கண்டு அப்படியே நின்று விட்டவள், அடுத்த நொடி முகம் மலர அவரின் பின்னே யாரையோ தேடியவள்,

“பூ அப்பா, பூ அப்பா!” என கார் முழுவதையும் சுற்றி சுற்றி வர, அதற்குள் துரை வந்திருந்தவர், பிரணியின் செயலில் உடைந்துப் போனார் மனிதர்.

“பிரணிக்குட்டி, பிரணிம்மா அப்பா இல்லைடா சாமி.” என்றபடி அவளை தூக்க, திமிறி இறங்கியவள் மாணிக்கத்தின் முன் நின்று,

“அங்கிள், அங்கிள் பூ அப்பாவ சீக்கிரம் அனுப்பி வைக்கிறேன் சொன்னீங்கள்ள, எங்க பூ அப்பா?

எனக்கு ப்ராமிஸ் பண்ணீங்கள்ள, பூ அப்பாவ கூட்டிட்டு வரலையா நீங்க? பூக்குட்டி ரொம்ப தேடுறான்னு சொல்லுங்க அப்பாட்டா, ப்பாஸ்ட்டா வந்திடுவாரு.” என்றவள், சட்டென

“அச்சே! நான் ப்பாஸ்ட்டா வர சொல்ல மாட்டேன்னு சாமி கிட்ட சொல்லிருக்கேன், அப்போதான் பூ அப்பாவ சாமி திரும்ப அனுப்புவாரு. நீங்க போய் கூட்டிட்டு வாங்க அங்கிள்.” மருண்ட பார்வையுடன் கூறியவளை கண்டு, அணைத்து கொண்ட மாணிக்கம்,

“என்னை மன்னிச்சிடுடா பாப்பா, இப்புடி உன் ப்ராமிஸ்ஸ காப்பாத்த முடியாத பாவியாகிட்டேனே நானு.” என்றவர் அழுதிட, நிலைமை அறிந்து சுதாரித்து துரை அவர்களை வீட்டினுள் அழைத்து சென்றார்.

சிரித்த முகத்துடன் போட்டோவில் இருந்த பூவரசனை கண்டவருக்கு கண்ணீர் பெருகியது.

“என்னாலதானே? எல்லாமே என்னாலதானே, நான் மட்டும் அன்னைக்கு அவரை ஏர்போர்ட் கூப்பிடாமா இருந்திருந்தா, இப்புடி எல்லாம் நடந்திருக்காது தானே.

நான் பண்ண தப்புக்கு ப்ராயிசித்தமே இல்லீங்களே சார், அநியாயம இப்புடி அந்த மனுசனை சாக குடுத்துட்டேன.’ தலையிலடித்துக் கொண்டு அவர் அழுக, கொஞ்சமாய் தேறியிருந்த பூர்வாவிற்கு மாணிக்கத்தின் வருகை, மேலும் மனதை ரணமாக்கிட மெளனமாய் கண்ணீர் வடித்தப்படி இருக்க, சட்டென அவரது காலில் விழுந்து விட்டார் மாணிக்கம்.

“அண்ணா! மச்சான்! அய்யோ சார்!” பலவிதமான குரல்கள் அங்கே!

“என்னை மன்னிச்சிடுங்கன்னு கேட்க கூட தகுதியில்லாதவனா உங்க முன்னாடி நிக்கிறேன். சத்தியமா இப்புடி ஆகும்னு கனவுல கூட நான் நினைக்கலைங்க.உங்க முன்னாடி குற்றவாளிய நிக்கிறேன். உங்க குடும்பத்தோட சந்தோசம் மொத்த்தையும் பறிச்சி பாவியாகிட்டேனே.” என அவர் கதற,

“எழுந்திருங்க சார் ப்ளிஸ், ஏற்கனவே நொந்து போய் இருக்கிற என்னை,மேலும் கஷ்டப்படுத்தாதீங்க.” அழுகை குரலில் அவள் கூற,

“சார் எந்திரிங்க மொதல்ல, இதுல உங்க தப்பு எதுவும் இல்லை. எங்களை சஙகடப்படுத்தாதீங்க!” துரை அவரை இழுத்து பிடித்து எழ வைத்திருந்தார்.

மாணிக்கத்திற்கு கண்ணீர் நிற்போனா என்றது? பிரிணியை பார்க்கும் நேரம் எல்லாம் அவர் செய்த சத்தியம் கொல்லாமல் கொன்றது. பூர்வாவிற்கு அதற்கு மேல் நிற்க முடியாது, உள்ளே சென்றுவிட்டிருந்தார்.

அங்கிருந்து அனைவரும் மாணிக்கத்திற்கு ஆறுதல் சொல்லும்படி ஆகிப்போனது அவரது நிலைமை. வெகுநேரம் அவரை தேற்றி எடுத்திருந்தனர்.

அவரின் உணர்ச்சிவசப்பட்ட நிலை கண்டு பயந்து போன தங்கைகள், உடனே அங்கிருந்த புறப்பட எத்தனித்து கணவர்களை காண, அதனை புரிந்துக் கொண்டவர்கள்,

“மச்சான் போதும், வாங்க கிளம்பலாம். இன்னும் உங்க உடம்பு புண்ணாகிதான் கிட்க்கு, இவ்வளோ எமோஷ்னல் ஆக கூடாது.” முத்துவேல் கூற,

“நிஜமா தாங்க முடியாத இழப்புதாங்க, ஆனா சீக்கிரம் இதிலிருந்து மீளுற வழிய கடவுள் நிச்சயம் உங்க குடும்பத்துக்கு கொடுப்பார், நாங்க கிளம்புறோம்ங்க, இதுக்குமேல மச்சான் இங்கருந்தாருன்னா சிக்கலாகி போகும். தப்பா எடுத்துக்காதீங்க நாங்க புறப்படுறோம்.” தங்கவேல் கூற சரியென தலையசைத்தார் துரை.

வம்படியாய் மாணிக்கத்தை அவர்களது குடும்பம் கிளம்பி கொண்டு செல்ல, அதுவரை பாட்டியின் கைவளைவில் அமைதியாக இருந்த பிரணி, வேகமாய் அவரிடம் இருந்து விலகி உள்ளே ஓடியவள், அடுத்த நிமிடம் மாணிக்கத்தின் முன் நின்றவள்,

“அங்கிள், இந்தாங்க நீங்க கொடுத்த பொம்மை. எனக்கு வேண்டாம்.” என அதனை அவர் கையில் திணித்தவள்,

“நீங்க எனக்கு கொடுத்த உங்க பொம்மைய, உங்ககிட்டயே திரும்பி கொடுத்துட்டேன். இதோ மாதிரி நான் உ
ங்ககிட்ட கொடுத்த என் அப்பாவை திரும்ப தாங்க.” கண்ணீர் பெருக, கையேந்தி அவரிடம் நின்றவளை கண்ட மாணிக்கத்தின் நெஞ்சம் அடைத்திட,

“அய்யோ!” என கதறியவாறே நெஞ்சை பிடித்தப்படி சரிந்திருந்தார்.
 
Top Bottom