கண்ணாமூச்சி 11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 35

Member
Nov 21, 2019
34
91
18
Dindigul
கண்ணாமூச்சி 11:

பூவரசனின் இழப்பில் இருந்து மெல்ல மீண்டுக் கொண்டிருந்தது அந்தக் குடும்பம். அன்றைய பிரணியின் கேள்வியில், நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்தவரை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடியிருந்தனர்.

“ஹார்ட் அட்டாக்!” என்ற வாரத்தையில் கதிகலங்கி தான் போனார்கள் தங்கைகள் இருவரும். அதன் பின் மருத்துவ உபகரணங்களுடன் மீண்டும் ஒரு போராட்டம் மாணிக்கத்திற்கு.

தங்கைகள் இருவருக்கும் மாணிக்கம் என்றால் அத்தனை இஷ்டம்! பெற்றோரை இழந்து அவர்கள் தவிக்கையில் தகப்பனாய் தாங்கி கொண்டவரை பிடிக்காமல் போகுமா என்ன? அவர்களுக்காகவே உழைத்து, அவர்களை நல்லபடியாக திருமணம் செய்து வைத்து, அவர் ஆசாவாசப்பட, அவரது வயது முப்பத்தைந்தை நெருங்கியிருந்தது.

அண்ணனை குடும்பமாக காண, தங்கைகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். எங்கே கடைசி வரை அண்ணன் இப்படி தனியாகவே இருந்து விடுவாரோ? என்ற அச்சம் பெண்களுக்கு இருக்க, விரைந்து அவருக்கு பெண் தேடினர்.

ஆனால், ஏதோ ஒன்று தட்டி கழித்துக் கொண்டே சென்றதில் வயதும் ஏற ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் தான் ஆக்ஸிடென்ட் நடந்தது. இப்போது மீண்டும் அட்டாக் என்பதில் அலமலண்டு தான் போயினர். மீண்டும் ஒரு விஷப்பரிட்சையை எடுக்க விரும்பாது, அதன் பிறகு அவரை மதுரை பக்கமே அனுமதிக்கவில்லை தங்கைகள் இருவரும்.

*********************
“பூ டிராவல்ஸை” செல்வத்திடம் ஒப்படைத்திருந்தனர். தங்கையையும், தங்கை மகளையும் தன்னுடன் முழுதாக அழைத்து வந்துவிட்டார் துரை.

அவருக்கு பார்ப்பதாக இருந்த சம்பந்தம் முறிந்துப் போயிருந்தது. இப்போதைக்கு திருமணத்தில் இஷ்டமில்லை என துரையும் கூறிவிட, அப்போது இருந்த மனநிலையில் ஒருவரும் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை.

ஆரம்பத்தில் வீட்டை விட்டே வெளியே வராத பூர்வாவை, பிரணிதாவை காட்டியே சரி செய்திருந்தனர். துரை மட்டும் உழைக்க, தான் சும்மா இருப்பது பிடிக்காது, முயன்று மனதை கடினமாக்கி கொண்டு, ட்ராவல்ஸ்ஸிற்கு சென்றாள்.

அங்கே சென்றவருக்கு அரைநாள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. பூவரசனின் அறை அவரது வாசத்தை நிறைத்திருப்பது போல் ஒரு பிரம்மை.

“பூவம்மா!” அந்த அறையில் அவரது சேரில் பூவரசன் அமர்ந்து அவரை அழைப்பது போல் காட்சி தோன்றி மறைந்ததில், உறைந்து தான் போனாள்.

அந்த அறை எங்கும், அங்கிருந்த பென்சிலில் ஆரம்பித்து நாற்காலி, டேபிள் வரை அனைத்திலும் பூவரசன் நினைவாய் நிறைந்திருக்க, கண்களில் நீர் பெருகிட, அறையில் இருக்க முடியாமல் மூச்சு முட்டிட, வெளியேறியிருந்தாள்.

அறை மட்டுமா, அவரை நினைவாய் சுமந்தது? என்றால் இல்லை தான். அந்த இடம், பூவரசன் எப்போதும் சாய்ந்து நிற்கும் அந்த சுவர், வெயில் காலத்தில் அந்த பெரிய மரத்தின் அடியில் அவர் அமரும் இடம், வண்டியை கழுவுவதற்கு அவர் திறக்கும் குழாய்! என அனைத்திலும் அவரது வாசமும், உணர்வுகளும் இருக்க, அதை தாங்க முடியாது அந்த இடத்தை விட்டு வெளியேறியிருந்தவள், மீண்டும் அங்கே செல்லவில்லை.

சரி துரையையாவது கவனித்து கொள்ள சொல்லலாம் என்றால்,
“அங்க போனா, இன்னும் என் பூவு என்னட்ட பேசுற மாதிரியே, வாடா மச்சான்னு கூப்பிடுற மாதிரியே இருக்கு. அவனோட நினைவுகளை தாங்கிட்டு என்னால நிச்சயம் அங்க இருக்க முடியாது.” என ஆரம்பத்திலேயே அவர் மறுத்து விட்டிருக்க, பிரணிதாவையும் அங்கே விடாமல் வைத்திருந்தவர்கள், ட்ராவல்ஸ்ஸை செல்வத்திடமே கொடுத்துவிட்டு பூவரசன் பயன்படுத்திய அறையை மட்டும் தங்களுக்கென எடுத்து கொண்டனர்.

அதன்பின், இரண்டு மூன்று இடங்களில் பூர்வா வேலைக்கு முயன்றார்தான். ஆனால், கைம்பெண் என்ற நிலையில் அவருக்கு தொந்தரவுகள் வர, வெறுத்து போனார். வீட்டிலே இருப்பது மேலும்,மேலும் அவருக்கு மன அழுத்தம் தருவதை கண்ட துரை, அவரது நகை கடை அருகே, கைவினை பொருட்கள் அடங்கிய சிறு கடை ஒன்றை தொடங்கி அதில் தங்கையை அமர்த்திவிட்டார்.

பிரணிதாவை பவுனம்மாள் பார்த்துக் கொள்ள, தங்கையை அருகிலே வைத்து கொண்டு, துரையும் நிம்மதியாய் வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.

பூர்வா அவரின் கடை வாசலில் நின்றாலே, மீனாட்சி அம்மனின் தெற்கு கோபுரம் நன்றாக தெரியும். ஆனால் அதனை நிமிர்ந்துக் கூட பார்க்க மாட்டார் பூர்வா.

அன்று, இந்த மீனாட்சியை அவரது கணவரோடு தரிசித்து விட்டு தானே வந்தார், பதிலாக பூவரசனை அல்லவா மீனாட்சி பறித்து விட்டார் என்ற கோபத்தில் அவரை வணங்குவதை முற்றிலுமாக தவிர்த்து இருந்தார் பூர்வா.

*****************

நேரமும், காலமும் இவர்களுக்காக காத்திருக்காமல் ஓடியிருந்தது.

இப்போதெல்லாம் கணவனின் நினைவுகளை கடந்திடாமல், அதனுடன் வாழ பழகி கொண்டார் பூர்வா. மனது அலைபாயும் நேரம் எல்லாம், பூவரசனின் அலுவலக அறைக்கு சென்றுவிடுவார், அதனை மட்டும் தனியே விட்டுவிட்டு மற்றதை எல்லாம் சுவர் எழுப்பி ஒரே இடத்தின் கீழ் வைத்துக் கொண்டான் செல்வம்.

அந்த அறைதான் பூர்வாவின், தனிமைக்கு இனிமையாய் மாறும் இடம்.

மாணிக்கம் இப்போது அடிக்கடி மதுரை சென்று வர ஆரம்பித்திருந்தார். தங்கைகளின் வார்த்தைக்கு இணங்கி, அவர் உடல் தேறும் வரை அமைதியாயிருந்தவருக்கு, அதன்பின் முடியவில்லை. தங்கைகளிடம் சொல்லாமல் சென்று பிரணிதாவை பார்த்துவிட்டு வர, தங்கைகள் இருவரும் கோபத்தில் சண்டை போட,

“ஏதோ அந்த பிள்ளை மொகத்தை பாத்தா மட்டும் தான், எனக்குள்ள இருக்கிற குற்றவுணர்ச்சி கொறையுது, அப்புடி இல்லை காலம் முழுசுக்கும், நான் அந்த குற்றவுணர்ச்சியோடயே சாகணும்னு நினைச்சீங்கன்னா, சரி நான் இனி அங்க போகலை.” என்றிட,

அதற்கு பின் தங்கைகள் மறுப்பு சொல்லுவார்களா என்ன?

பிரணிதாவை காண வீட்டிற்கெல்லாம் செல்ல மாட்டார் அவர், துரையிடம் பேசி அவளை கடைக்கு அழைத்து வர சொல்லி பார்த்துக் கொள்ளுவார். ஆரம்பத்தில் மாணிக்கத்தை கண்டாலே, அவளது முகம் ஒளிரும், தந்தையை அழைத்து வந்து விட்டாரோ என? அது இல்லாத போகவே, மாணிக்கத்திடம் முகம் கொடுத்து பேச மாட்டாள்.

அடுத்தடுத்த சந்திப்பில், தந்தை இனி வரமாட்டார் என்பதை உணர்த்துக் கொண்டாளோ என்னவோ? இல்லை பூவரசனை போல் தன்னை செல்லம் கொஞ்சி, அவள் ஒற்றை வார்த்தைக்கு காத்து கிடந்த மாணிக்கம் அவள் மனதை அசைந்தாரோ? எதுவோ ஒன்று மாணிக்கத்திடம் பேசலானாள்.

இடைப்பட்ட காலத்தில், துரையும் மாணிக்கமும் ஓரளவு நெருக்கமாகி இருந்தனர். துரைக்கு, நண்பன் இல்லாத சோகத்தை அவரை பற்றி மாணிக்கத்திடம் பேசி தனது துயரத்தை போக்கி கொள்ள ஆரம்பித்திருந்தார்.

மாணிக்கம், பிரணிதாவின் சந்திப்பு பூர்வாவை உறுத்தாமல் இல்லை, மறைமுகமாக கூட அதை அண்ணனிடம் தெரிவித்திருந்தாள்.

“பூவு இல்லாம போனதுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆனாலும் பூக்குட்டிக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தை காப்பாத்த முடியலையேன்னு, நெதம் உள்ளுக்குள்ள செத்துட்டு இருக்காரு அவரு. அந்த மனுசன் உசுரு இன்னவரை போகாம இருக்க காரணம் நம்ம பிரணிதான். அவரை இங்க வராதீங்கன்னு சொல்லுற தைரியம் எனக்கு இல்லை,

அதோட பிரணிக்குட்டி, கொஞ்சமாச்சும் இயல்பா இருக்கான்னா அதுக்கு அவரோட வருகையும் ஒரு காரணம்.” என்றிட, மறுத்து பேச முடியவில்லை அவளால்.

அவர் சொல்வது போல் பிரணிதாவின் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் தெரிகிறதே, பூவரசன் இறந்த நாளிலிருந்து “பூக்குட்டி!” என்ற வார்த்தையை கேட்டாலே அத்தனை ஆக்ரோஷம் ஆக ஆரம்பித்திருந்தாள்.

ஒருத்தரும் அந்த பேரை சொல்லி அழைத்து விடக் கூடாது! இரண்டு நாட்களானாலும் உணவின்றி இருக்க ஆரம்பித்திருந்தாள், அதனை கொண்டே வீட்டினர் யாரும் அந்த வார்த்தையை கொண்டு அழைத்திடவில்லை அவளை.

அடுத்தடுத்து அவளது நடவடிக்கைகள் அனைத்தும், ஒரு வித ஆக்ரோஷமாகவே மாற ஆரம்பித்திருக்க, பயந்து போனவர்கள் மருத்துவரிடம் கூட அழைத்து சென்று வந்துவிட்டனர்.

அதிகளவு மன அழுத்தமே அவளின் இப்போதைய நிலைக்கு காரணம் என மருத்துவரின் பேச்சில் அதிர்ந்துதான் போயினர் அனைவரும். அப்படி இருந்த மன அழுத்தம் மாணிக்கத்தின் வருகையில் வெகுவாக குறைந்து இருந்தது. அதற்காகவேணும் மாணிக்கம் மற்றும் பிரணிதாவின் சந்திப்பை மறுக்க முடியவில்லை அவளால்.

***********************
இன்று பூவரசனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.காலையிலே வீட்டை சுத்தம் செய்து, படையலுக்கு தேவையானதை தயார் செய்திருந்தனர்.

பூவரசனின் படத்தை துடைத்து, பொட்டு வைத்த பிரணியின் முகம் வெறுமையை மட்டுமே சுமந்திருந்தது. ஓரளவு பூவரசனின் இறப்பை ஜீரணித்துக் கொள்ள முயன்றுதான் கொண்டிருக்கிறாள்.

‘இந்த வருசமும் நீங்க வரலையே பூப்பா!’ என நினைத்தவளின் மனம் மட்டும் எண்ணிக்கையில் லட்சத்தை தாண்டியிருந்தது.

படத்திற்கு பொட்டு வைத்து முடித்து, அதற்கு பூமாலை சாற்றி, படத்தின் முன் ஊதுபற்றி, விளக்கு எல்லாம் ஏற்றியிருந்தாள் பிரணிதா.

இவையனைத்தையும் செய்தவளின் விழிகள் மட்டும் வெளிப்புறத்தை தொட்டு வந்துக் கொண்டிருந்தது. பூவரசனின் முதல் நினைவு நாளிற்கும் இப்படிதான், வெளியே சென்று அமர்ந்து விட்டிருந்தாள், எதையோ ஒன்றை அவள் மனம் தேட, அமைதியாய் வெளிவாசலில் அமர்ந்திருந்தவளின் மனம் மீண்டும் எண்ணிக்கையை தொடங்கியிருந்தது. எண்ணி முடித்து மீண்டும் அவள் கண்களை திறந்த போது பூவரசனை காணாது ஏமாற்றமே மிஞ்சியது.

அவளின் செயல்களை கவனித்துக் கொண்டிருந்த பவுனம்மாள், அதன் பின் அவளை வெளியே அமர விடாது அதட்டி தன்னுடன் அழைத்துக் கொண்டிருந்தார். இந்த வருடமும் அதே போல் அவளது மனம் எண்ணிக்கையை துவங்கியது. அவள் எண்ணி முடித்து கண்களை திறந்த நொடி, மாணிக்கம் உள்ளே வந்து கொண்டிருந்தார். அதனைக் கண்டவளின் முகத்தில் அத்தனை பிரகாசம்! ஏதோ பூவரசனே நேரில் வந்தது போல் இருந்தது அவளது மகிழ்ச்சி நிறைந்த முகம்.

மாணிக்கத்தை கண்டதும் துரையின் முகம் கூட மலர்ந்து விகாசித்தது. வருடங்கள் கடந்து இருந்தாலும் இழப்பின் வலி நெஞ்சில் ஓரத்தில் இருக்கும் அல்லவா? துரையின் மனமும் வலியில் துடித்துக் கொண்டிருக்க, அதனைப் போக்கும் விதமாய் அமைந்தது மாணிக்கத்தின் வருகை.

சாமி கும்பிட்டு விட்டு, காக்கைக்கு சாதம் வைத்து படைத்துவிட்டு, வீட்டினரும் உண்ண ஆரம்பித்திருந்தனர். நெருங்கிய உறவுகளை தவிர்த்து மற்ற யாரையும் அழைத்து இருக்கவில்லை.

உணவினை முடித்த உறவினர்களுக்கு அடுத்து பேசுவதற்கு வாகாய் அமைந்தது துரையின் திருமண பேச்சு.

“ஏ மதினி இன்னும் எத்தனை நாளைக்கு பையனுக்கு கல்யாணம் பண்ணாம இருக்க போறீங்க?”

“துக்கம் நடந்து ரெண்டு வருஷத்துக்கு மேலாச்சு, சீக்கிரம் ஒரு நல்ல காரியத்தை பண்ற வழிய பாருங்க.”

“என் சொந்தத்தில் கூட ஒரு பொண்ணு இருக்குது, நம்ம துரைக்கு கேட்டுப் பார்த்தேன். ஆனா, நம்ம பொண்ணு வீட்டோட புருசனை இழந்துட்டு இருக்கும் போது, அந்த பொண்ணு வர தயங்குது. என்ன செய்ய? அதுக்காக நம்ம பொண்ணை வீட்டை விட்டு அனுப்பவா முடியும்?” ஆளாளுக்கு ஒன்றை பேச ஆரம்பித்து விட்டனர் அவர்களை அங்கு அடக்குவதற்கு ஒருவரும் இல்லை.

ஆனால் அவர்கள் கூறியதில் ஒன்று மட்டும் உண்மை, துரைக்கு வருகின்ற வரன் எல்லாம் பூர்வாவையும், அவளது பெண்ணையும் வைத்தே தட்டிப் போகின்றனர். பூர்வாவிற்கு அதில் மிகுந்த மனவருத்தம். தனியாக சென்று விடுவதாக அவள் கூறியும், துரை அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

‘தன்னால்தானே அண்ணனின் திருமணம் தடைப்பட்டு போகிறது, என்ற குற்றவுணர்வு அவள் மனதில் தோன்ற ஆரம்பித்திருந்தது.’

“நம்ம வீட்டுல பொண்ணு இருக்கும்போதே, அடுத்த வீட்டு பொண்ணு எப்புடி சந்தோசமா வரும் இங்க?”

“அதானே, ஏன் துரை நம்ம பொண்ணுக்கு ஒண்ணும் அவ்ளோ வயசாகிடலையே, மறுகல்யாணத்துக்கு பாத்தா என்ன?”

“அதெல்லாம் இரண்டாம் தாரமா கேட்டு, நிறைய மாப்பிள்ளைங்க நம்ம கைவசம் இருக்குது. என்ன? பிரணிதாவ ஏத்துக்கிறது தான் சிரமம்.”

“அதுக்கென்ன, பிள்ளைய ஹாஸ்டல்லயோ, இல்லை பவுனு மதினிகிட்டயோ விட்டுட்டாப் போச்சு.”

“இந்த வயசான காலத்துல மதினியால முடியுமா என்ன? ஹாஸ்டல்ல சேர்க்கிறது தான் நல்லது.” திடீரென அனைவரும் அங்கே நாட்டாமையாகியிருந்தனர்.

பிரணிதாவை வைத்துக் கொண்டே அத்தனை பேச்சும். அதில் கடுப்படைந்த மாணிக்கம் பிரணிதாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார்.

“என்னை ஹாஸ்ட்டல்ல சேர்ந்துடுவாங்களா அங்கிள்?” பிரணியின் கேள்வியில் திகைத்துப் போனவர்,

“அப்புடி எல்லாம் இல்லைடா பாப்பா!”

“சேர்ந்தாலும் பரவாயில்லை அங்கிள், பூ அப்பா இல்லாத இடத்துலே எனக்கு இருக்க பிடிக்கலை.”

“அப்போ என்னோட வர்றியாடா பாப்பா?” ஒரு வேகத்தில் கேட்டவருக்கு, பிறகே அதன் அர்த்தம் உணர்ந்து அவர் திகைக்க,

“வர்றேன் அங்கிள். உங்க கூட இருந்த பூ அப்பா கூட இருக்கிற மாதிரி இருக்கு. பூ அப்பா மாரியே நீங்களும் என்னை பாத்துக்குறீங்க.” என சொல்லி மேலும் திகைக்க வைக்க, ஒரு நொடி தான் யோசித்தார் மாணிக்கம்.

அடுத்த நொடி, பிரணிதாவை அழைத்துக் கொண்டு வேகமாய் துரையின் முன் சென்று நின்றவர்,

“உங்க தங்கச்சிக்கி மறுக்கல்யாணம் பண்ணுறதுன்னா, எனக்கே கட்டிகொடுத்துடுங்க துரை.” என்றவரின் பேச்சில் தீச்சுட்டார் போல விதிர்த்துப் போனாள் பூர்வா.

அத்தனை அமைதி அவ்விடத்தில்! ஒருவரும் இதனை எதிர்பார்த்திடவில்லை.

“இந்தா பூனைக்குட்டி வெளிய வந்திடுச்சு இல்லை, ஏங்க நான் அன்னைக்கே சொன்னேன்ல, இந்த ஆளு அடிக்கடி பிரணிதாவ கடையில வச்சி பாக்குறாருன்னு. இந்த இதுக்குத்தான் போல.”

“ஏய், யாருப்பா நீ? விருந்தாளியா வந்தவன், வீட்டாளா மாறா பாக்குறியா?”

“நல்ல அமுக்குனியாட்டம் இருந்து, என்ன வேலை பார்த்து வச்சிருக்காங்க?”

“இந்தாளு அடிக்கடி கடைக்கு வரும்போதே எனக்கு சந்தேகம் தான்.”

“யாருக் கண்டா, பூர்வாவுக்கே இஷ்டம் இருக்குமோ என்னவோ?” ஆளாளுக்கு விஷத்தை கக்க ஆரம்பிக்க, அதில் ஆத்திரமடைந்த பூர்வா,

“போதுமா? ரொம்ப நல்ல பேரை வாங்கி கொடுத்துட்டீங்க எனக்கு. தயவு செஞ்சு இங்கிருந்த கிளம்புங்க, இத்தனை நாளு இந்த எண்ணத்தோட தான் என் பிள்ளைக்கிட்ட பழகியிருக்கீங்க? வெட்கமா இல்லை உங்களுக்கு?

இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன், என் பேச்சை கேட்டீங்களா அண்ணா? இப்போ பாருங்க எப்புடி ஒரு பேரை வாங்கிட்டு நிக்குறேன்னு. இப்போ சந்தோசமா உங்களுக்கு?

கடைசியில நீங்களும் எல்லா ஆம்பிளைக்கள போலத்தான் நிருபிச்சுட்டீங்களே? ரொம்ப மரியாதை வச்சிருந்தேன் உங்க மேல.”

“இப்போ, அந்த மரியாதை கெடும் அளவுக்கு நான் என்னங்க பண்ணேன்?”

“ஏன்? இப்போ என்ன கேட்டீங்கன்னா மறந்தாச்சு போலயே.” வந்திருந்த உறவுகளில் ஒன்று நக்கலடிக்க, அவரை பார்த்த மாணிக்கம்,

“உங்களுக்கு பதில் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை, நான் பதிவு சொல்ல வேண்டிய ஒரே ஆளு இவுங்க தான்.” என பூர்வாவை சுட்டி காட்டியவர்,

“நீங்க கேளுங்க!” என்க,

“என்ன கேக்கணும்?”

“நான் கேட்டதை பத்தி!”

“அதுக்கான பதில் நான் குடுத்துட்டேன்.”

“ஆனா, என் பக்கத்தை நான் சொல்லனும்ல, எதுக்காக அப்புடி கேட்டேன்னு.

நான் ஒண்ணும் உங்க மேல ஆசைப்பட்டு இந்த கல்யாணத்துக்கு கேக்கலை, எல்லாம் பிரணிக்குட்டிக்காக மட்டும் தான்.

எப்புடியும் உங்க சொந்தங்கள் எல்லாம், உங்களுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்காம விட மாட்டாங்க, அதை நான் பண்ணிக்கிறேன்னு தான் கேட்கிறேன்.” என்றவரை இடைமறைத்து பூர்வா வர,

“இருங்க, மொதல்ல நான் முடிச்சிக்கிறேன். அப்புடி எல்லாம் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நீங்க சொல்லலாம், அதுக்காக எல்லாம் உங்களை விட்டுட மாட்டாங்க, உங்க அண்ணாவோட வாழ்க்கையே உங்க மறுக்கல்யாணத்துல தான் இருக்குன்னு சொல்லுவாங்க, இப்போ சொன்னாங்களே!

சொல்லப்போன அதுதான் உண்மை! இந்த கல்யாணத்துக்கு கேட்டது, உங்க கூட ஆசைப்பட்டு வாழுறதுக்காக இல்லை, என்னால அப்பா இல்லாம தவிக்குற பிரணிக்கு அப்பாவ மட்டும் தான் இருக்க ஆசைப்படுறேன்.

பரிதாபமான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவேன், அதை நீங்க நம்பலனாலும் எனக்கு பிரச்சனை இல்லை, என் மனசாட்சிக்கு தெரியும் என்னை பத்தி.

ஒவ்வொரு நாளும் பிரணிதவோட நடவடிக்கை எல்லாம் பாத்துட்டு தானே இருக்கீங்க, என்கூட இருந்தா கண்டிப்பா பிரணியோட செயல்கள்ல மாற்றம் வரும்.

அதுக்காக அவளோட அப்பாவோட இடத்தை என்னால நிரப்ப முடியாது? அதே சமயம் அவளுக்கு ஒரு துணையா பக்கபலமா என்னால் இருக்க முடியும்.

இன்னும் எவ்ளோ விசயங்கள் அவளுக்கு நடக்கலாம், அந்த நேரத்துல எல்லாம், அவளுக்கு நல்ல சப்போர்ட்டரா இருப்பேன். என்னால அழிஞ்சிப் போன அவளோட சிரிப்பை, சந்தோசத்தை நிச்சயம் என்னால திரும்ப குடுக்க முடியும்.

அதே சமயம் உங்களுக்கு ஒரு பாதுகவாலனாவும் இருக்க முடியும். நிச்சயம் துரையோட கல்யாணத்தை காட்டி இவுங்களோ? இல்லை நீங்களோ கூட மறுக்கல்யாணத்துக்கு சம்மதிக்கலாம் இல்லைன்னா சம்மதிக்க வைக்கப்படலாம்.

அப்போ வர்றவன் பிரணிதாவை பாத்துப்பான்னு உறுதியா உங்களால சொல்ல முடியுமா? இல்லை உங்க மனசை புரிஞ்சு நடப்பானு உறுதி குடுக்க முடியுமா? ஆனா இது ரெண்டையும் நான் குடுப்பேன். இத்தனை நாள் உங்க கண்ணு முன்னாடியே தான் இருந்திருக்கேன்.

ஒண்ணு மட்டும் நல்லா தெளிவுப்படுத்திக்கோங்க, உங்களை பிடிச்சுப் போயி அதனால பிரணியை பிடிச்சது இல்லை என்னோட பிடித்தமும், இந்த கல்யாணமும்.

பிரணியை பிடிச்சதால அவளுக்காக மட்டுமே இந்த கல்யாணம். கல்யாணத்துக்கு அப்பறம் ப்ரேண்ட்டா இருப்பேன்ல எல்லாம் சொல்ல மாட்டேன், அதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணனும். எனக்கு தேவை பிரணியோட உரிமை, அவளுக்கு பூவப்பாவ தவிர்த்து இன்னொரு ஆளா அவ மனசுல எனக்கொரு இடம் அவ்ளோதான்.

கண்டிப்பா கல்யாணத்துக்கு அப்பறம் உங்களுக்கு புருசனா, பாதுகாவலனா என்னோட கடமையை செய்வேன். கடமைன்னா உடனே உடல் சார்ந்தது இல்லை, மனசு சார்ந்தது. நிச்சயம் உங்களுக்கு பக்கபலமா நான் இருப்பேன் எல்லா விசயத்துலயும். யோசிச்சு நல்லா முடிவா சொல்லுங்க.” என பேசி முடித்தவர் கிளம்பும் வேளை,

“பிரணிக்குட்டி, இன்னைக்கு உங்களோட பர்த்டே தானே. அங்கிளோட குட்டி கிப்ட்.” என சிறு பெட்டியை தர,

“தாங்கஸ் அங்கிள்.” என மகிழ்ச்சியாய் வாங்கி கொண்டவளை கண்டு மற்ற அனைவரும் அதிர்ந்து தான் போயினர்.

போன வருடம் முதலாமாண்டு நினைவிற்கு வந்திருந்த உறவினர்கள் ஒருவர் பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட, அத்தனை ஆக்ரோஷம் ஆகியிருந்தாள்.

ஆனால், இன்று அமைதியாய் அதுவும் மகிழ்ச்சியுடன் மாணிக்கம் கொடுத்த பரிசை வாங்கி கொள்பவளை கண்டு அதிர்ச்சியாகாமல் இருப்பார்களா என்ன?
பேசி முடித்து மாணிக்கம் கிளம்பிவிட,

அடுத்தடுத்து பவுனம்மாளின் பேச்சுக்கள், பிரணிதாவின் செயல்கள், துரையின் திருமணம், உறவினர்களின் அணுகுமுறை, என அனைத்தும் சேர்ந்து அவளை அழைக்கழித்து படுத்தி எடுத்ததில், ஆறு மாதங்கள் கழித்து திருமணத்திற்கு ஒத்துக் கொண்டு, முறைப்படி பூர்வா திருமதி பூர்வாவாக மாறியிருந்தாள்.
 
Last edited:

Author: STN - 35
Article Title: கண்ணாமூச்சி 11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.