கண்ணாமூச்சி 3

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 35

Member
Nov 21, 2019
34
91
18
Dindigul
கண்ணாமூச்சி 3:

“நாங்க தான் இவுங்களுக்கு கார்டியன்?” என்றபடி கையொப்பம்‌ இட்டவனை‌ கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் போனது பிரணிதாவிற்கு.

அவள் வரும் முன்னே, அவனது குடும்பம்‌ மொத்தமும் வந்துவிட்டது பி.ஜிக்கு. இதோ அட்மிசன் போடுவதற்கு தயாராக இருந்தவளை, இந்த ஊரில் யாராவது கார்டியன் வேண்டும் என வார்டன் கூறிவிட,‌‌ திகைத்து தான் போனாள்.

“மேடம், இதை முன்னமே நீங்க சொல்லலையே?” வார்டனிடம் கேட்க,

“நாங்க இன்பார்ம் பண்ணோமே, நீங்க பேசின அடுத்த நாள் உங்க நம்பருக்கு கால் பண்ணோம் ரீச் ஆகலைன்னதும், நீங்க கொடுத்த இன்னொரு நம்பருக்கு கால் பண்ணி விசயத்தை சொன்னோமே, அவுங்களும் இந்த ஊர்ல உங்க ரிலேடிவ் இருக்காங்கன்னு சொன்னாங்களே” என்றபடி அவர்‌ ஒரு நம்பரினை‌ காட்டிட, அது திலகவதியின் எண்.

‘அத்தை அப்புடி சொல்லியிருக்க வாய்ப்பில்லையே?’ என நினைத்தவளுக்கு நொடியில் விசயம் பிடிபட்டு விட்டது.

“உங்க கிட்ட பேசுனது கொஞ்சம் வயசானவங்க மாதிரி இருந்ததா மேம்?”

“ஆமாம்மா, மொத ஒரு லேடிதான் பேசுனாங்க, அடுத்த கொஞ்சம் வயசானவங்க வாய்ஸ் தான் கேட்டுச்சு.” என்றதும் கண்டுக்கொண்டாள் பவுனம்மாளை. ஆனால் என்ன பயன்? ஒன்றும் செய்ய முடியாதல்லவா?

வேறுவழியின்றி ராகவன் கையெழுத்திடுவதை அமைதியாய் வேடிக்கை பார்த்தாள்.

“ப்ரொசீஜர் எல்லாம் முடிஞ்சது, நீங்க கேட்ட மாதிரி டபுள் காட் தான் அலாட் பண்ணிருக்கோம். ரூம் நம்பர் 15 மாடில இருக்கும். லக்கேஜ் இங்க இருக்கிற அட்டன்டர் கொண்டு வருவாங்க.”

“சரசும்மா, ரூம் நம்பர் 15” என்க, பெட்டிகளை எடுத்துக் கொண்டவர்,
“வா பாப்பா!” என்றபடி அவர் முன்னே சென்றிட, அவருடன் பின்னே செல்ல முயன்றவளை, கைப்பிடித்து தடுத்திருந்தான்.

“இன்னும் என்ன?” அவனின் பிடிக்குள்‌ இருந்தவாறு வெடுக்கென அவள் கேட்டிட,

‘எங்க தன் தொடுகையை விரும்பாமல் முகம் சுழித்து விடுவாளோ?’ சிறு அச்சத்துடன் இருந்த ராகவனிற்கு அவளின் இந்த கோபம்‌ நிம்மதியை தான் தந்தது.

“போய்ட்டு‌ வரேன்னு சொல்லமாட்டியா? உனக்காக தானே இவுங்க வெயிட் பண்றாங்க.”

“நான் சொன்னேனா வெயிட் பண்ண சொல்லி? விடுங்க மொதல்ல” என்றவளின் பார்வை மறந்தும் பூர்வா மற்றும் மாணிக்கத்தின் பக்கம் திரும்பிடவில்லை.

அவளின் பேச்சு எல்லாம் ராகவனிடம் மட்டுமே? அவர்களின் மேல் கடும் கோபத்தில் இருப்பவளுக்கு ஏனோ ராகவனும் அவர்களுள் ஒருவன் தான்‌ என புரியவில்லை.

அவனிடம் இருந்து தன் கையை பறித்துக் கொண்டவள், திரும்பி பார்க்காது சென்றுவிட்டாள். அவளின் இந்த செய்கையில் பூர்வா முற்றிலும் உடைந்தும் போனார் என்றால், மாணிக்கம் உள்ளுக்குள் தவித்துப் போனார்.

அவளின் பெட்டிகளை வைத்துவிட்டு வந்த சரசு, நேராக இவர்களிடம் தான் வந்ததார்.

“கொஞ்சம் பாத்துக்கோங்க சரசுக்கா, ஏதுனாலும் எனக்கு தகவல் சொல்லுங்க, என் நம்பர் உங்ககிட்ட இருக்குல.” ராகவன் கேட்டிட,

“நான் பாத்துக்கிறேன் தம்பி, நீங்க பயப்படாம இருங்க, நம்பர் இருக்கு என்கிட்ட.” என்ற சரஸ்வதியின் கணவர் மாணிக்கத்தின் மில்லில் தான் வேலைப் பார்க்கிறார்.

பிரணிதா இங்கே வரப் போகும் தகவலை பவுனம்மாளிடம் இருந்து அறிந்தவர்கள், அடுத்த நொடியே‌ சரசுவதியை அழைத்து பேசியிருந்தனர்.
அவருக்கும் மேலோட்டமாக விசயம் தெரியுமாததால் அவர்கள் கேட்ட உதவியை செய்ய முன்வந்திருந்தார்.

அவரிடம் பேசிவிட்டு விடைபெற்று சென்றிருந்தனர்.

“ராகவா பாப்பாகிட்ட இவ்வளோ மொரடா நடந்துக்காதடா, பாவமில்லையா அவ.” என்ற மாமனை முறைத்தவன்,

“உங்களுக்கு அவ நம்மகிட்ட சீக்கிரம் வரனும்னு எண்ணம் இருக்கா இல்லையா மாமா?”

“இருக்கு தான், அதுக்காக பிரணிக்கு பிடிக்காதை செஞ்சு கஷ்டப்பத்தக் கூடாதில்லையா?”

“இப்புடி நீங்க விட்டு விட்டு தான், அவ ஒரேடியா ஒட்டாம இருக்கா, கொஞ்சி பேசினா எல்லாம் வேலைக்காகாது மாமா அவகிட்ட.”

“தப்பு‌ நம்ம பக்கம் அதிகம்ன்ற கொஞ்சம் பொறுமையா போகலாம்ல ராகவா.” கவிதா கூற,

“அதனால தான் இவ்வளோ அதிகப்படியா நடந்துக்க வேண்டியிருக்கும்மா, தப்பு அவ பேர்லனா கூட கொஞ்சம் அமைதியா இருப்பா, ஆனா இங்க நம்ம பக்கம்ன்றப்போ, ரொம்ப வீம்பு புடிப்பா. நான் பாத்துக்கிறேன்.

இதை என்னைக்கோ சரி பண்ணிருக்கலாம். அவ இங்க இருந்து போன கொஞ்ச நாள்லயே இதை பண்ணிருக்கனும். அப்போ எல்லாம் பிள்ளை கஷ்டப்படுவா, அவ விருப்பம்தான் முக்கியம்னு சொல்லி சொல்லிதான் இன்னைக்கு இந்த நிலைமைல இருக்கா,

எப்படி என் வழிக்கு கொண்டு வரனும்னு எனக்கு தெரியும், என்னை என் போக்குலயே விடுங்க. நான் பாத்துக்கிறேன்.” என்றவன், இதுவரை எதுவும் பேசாத பூர்வாவை நோக்கி,

“ஏன்த்தை இவ்வளோ அமைதி?”

“நான் என்ன பேச ராகவா? எனக்கு தெரியலை.”

“இப்புடி நீங்க அமைதியா இருக்கிறது தான் எல்லா பிரச்சினைகளுக்கும் முழு காரணம். அன்னைக்கு மட்டும் நீங்க பேசியிருந்தா, இவ்வளோ நடந்திருக்குமா? இல்லை நம்மளை தான் தள்ளி வச்சிருப்பாளா?” அவரின் அமைதியில் என்றும் கோபம்தான் அவனிற்கு.

‘இவரின் அன்றைய‌ அமைதிதானே, அவளை‌ வேரறுத்துப் போட்டது’ என்ற குமுறல் அவனிடம் நிறையவே இருக்கிறது.

ராகவனின் குற்றச்சாட்டில் கண்ணீர் பெருகிற்று‌ பூர்வாவிற்கு.

“ராகவா!” மாணிக்கத்தின் அதட்டலில்,

“நான் எதுவும் பேசலை, என்னை மில்லுல விட்டுடுங்க.” என்றவன்‌ இறங்கி கொண்டான்.

உதவியாளார் சுட்டிய காட்டிய அறையில்‌ தனது பொருட்களை‌ அடுக்கி கொண்டிருந்தாள்‌ பிரணிதா. அவளுடன் தஙகியிருக்கும் பெண் சுசிலா, வயது 20 தேனி பக்கத்தில் சிறு கிராமம், இங்கு கோவையில் ஒரு டெக்ஸ்டைல்ஸில் வேலை பார்க்கிறாள்.‌இவை அனைத்தும் சரசம்மாவின் உபயம்.

துணிகளை அடுக்கி முடித்தவள், தன் மாமாவிற்கு அழைப்பு விடுத்தாள்.

“பிரணிம்மா, பி.ஜி போய்ட்டியாடா?”

“வந்துட்டேன் மாமா, அட்மிசன் போட்டு ரூமுக்கு வந்துட்டேன்.”

“பி.ஜி பிடிச்சிருக்கா, உனக்கு செளகரியமா இருக்கா?”

“ம்ம்ம், நல்லாதான் மாமா இருக்கு. டபுள் காட் ரூம் தான்.”

“சரிம்மா, வேலைக்கு எப்போ ஜாயின் பண்ணணும்?”

“இன்னைக்கு ஈவ்னிங் போய், அங்க பார்த்துட்டு வரனும் மாமா.‌ அநேகமா நாளையில இருந்து போற மாதிரி இருக்கும்.”

“சரி பிரணி, வேற அங்க…!” என்றவர் தயங்கி நிறுத்த, அதனை புரிந்துக் கொண்டவள், ஒரு மூச்சோடு அனைத்தையும் சொல்லி முடித்தாள். அவள் செய்தவையும் அதில் அடக்கம்.

“இந்தம்மா ஏன்தான் இப்புடி பண்றாங்களோ?”

“தெரிஞ்ச‌ விசயம் தானே மாமா.”

“பிரணி, உனக்கு கஷ்டமா இருந்தா கிளம்பி வந்திடுடா, உனக்கு விருப்பமில்லாம இருக்க வேண்டாம். பணத்தை பத்தி கவலைப்படாத மாமா ஏற்பாடு பண்ணிடுவேன்.” என்றவரின் பேச்சில் லோசாக கண்ணீர் எட்டிப் பார்க்க முயன்றது அவள் விழிகளில்.

“இல்லை மாமா, எனக்கு கஷ்டமில்லை, நான் பாத்துப்பேன். வெறும் மூணு‌ மாசம் தானே மாமா. நீங்க எதையும் நினைக்காதீங்க, நான் சமாளிச்சுப்பேன்.” என பேசி அவரை தைரியமூட்டி வைத்தவள், அடுத்து திலகாவிற்கு அழைத்து பேசியவள், கார்டியன் விசயத்தை மறைத்ததற்கு அவர்களை கடித்துக் கொள்ளவும்‌ தவறவில்லை.

அனைவரிடமும் பேசிவிட்டு வைத்தவளிற்கு சட்டென்று ஒரு வித தனிமை வந்து தாக்கியது.‌ பிடிக்கவில்லை என்றாலும் கூட, அவளை தனியே விடாது கூட இருந்து அவளது தனிமையை போக்கியவர்களும் இல்லாமல் போக, மாமனின் குடும்பத்தை முக்கியமாக ஆகாஷை அதிகம் தேடியது மனம்.

வெறுமேன கட்டிலில் படுத்து கொண்டிருந்தவளின் அலைப்பேசியில் குறுஞ்செய்தி வர, புதிய‌ எண்ணாக இருந்தாளும் அதன் டி.பியில் இருக்கும் புகைப்படத்தை வைத்து கண்டுக் கொண்டாள்‌ ராகவன் என்று.

அழகிய இரண்டு குடிமியில் மல்லிகை பூ வைத்து, குண்டு கன்னங்களுடன் இருந்த பிரணிதாவை தனது மடியில் இருத்திப் பிடித்தவாறு சிரித்துக் கொண்டிருந்தான் பதின்ம வயது ராகவன்.

‘எந்த போட்டோவ வச்சிருக்காருப் பாரு’ என்றவளுக்கு லோசாக கன்னங்கள் சூடாகின.

“குண்டுமல்லி!”
“வேலை முடிஞ்சா?”
“ரூம் ஓகேவா?”

என வரிசையாய் குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருக்க, பார்த்தவள் பதில் ஏதும் போடவில்லை.

“போட்டோ பாத்தியா?” என்றபடி வாயை மூடி வெட்கப்படும் ஸ்மைலியோட அடுத்த மெசேஜ் வர, அதனை கண்டவள் பொங்கி விட்டாள்.

“ரிமூவ் பண்ணுங்க மொதல்ல?”

“ஓ‌ சரி ரிமூவ் பண்ணிடுறேன்.” என்றுவிட்டு அடுத்த நிமிடம் படத்தை நீங்கி விட்டிருந்தான்.

‘இவ்ளோ‌ நல்லவன் இல்லையே இவன்?’ அவன் டிபியை பாரத்த வண்ணம் இருக்க, அடுத்து சில நிமிடங்களில் அங்கே தோன்றிய புகைப்படத்தை கண்டு அதிர்ந்துப் போனவள்,

“லூசா நீங்க?”

“என்ன இது?”

“படத்தை எடுக்க மொதல்ல” என‌ வரிசையாய் இவள்‌ அனுப்பிய‌ செய்திகள்‌ அனைத்தையும்‌ பார்த்து பதில் அளிக்காமல் இருப்பது அவனது முறையாகிப் போனது.

இவள் அனுப்பிய எந்த செய்திக்கும்‌ பதில் இல்லை அவனிடம். பொறுத்து பார்த்தவள், அடுத்த நிமிடம்‌ அவனிற்கு அழைத்திருந்தாள்.

இதற்காகவே காத்திருந்தவன் அவளது பெயர் திரையில் தெரிந்ததும் சில நொடிகள் அவளை தவிக்க விட்டே கடைசி நிமிடத்தில் எடுத்தான்.

“அறிவு இருக்கா உங்களுக்கு? என்னத்தை வச்சி தொலைச்சிருக்கீங்க?” என கத்திட,

“ஏன், அந்த படத்துக்கு என்ன‌ கொறைச்சல், அழகான ஒரு‌ வயசு குழந்தையா குப்புற படுத்திருக்க, நல்லாத்தானே இருக்க, நல்லா குண்டூஸ் கணக்கா.” என அவன்‌ சிரிக்க,

“மண்ணாங்கட்டி, மொதல்ல படத்தை‌ எடுங்க, என்ன விளையாட்டு இது?”

“முடியாது! முடியாது!”

“ராகவா.…!” அவன் செய்யும் சேட்டையில் கத்தியிருந்தாள்.

“அவ்ளோதான் லிமிட் உங்களுக்கு, போட்டோவ எடுத்திருக்கனும் இப்போ.”

“சரி, எடுத்திடுறேன். ஆனா முன்ன வச்ச போட்டோ வைப்பேன்.”

“என்னத்தையோ பண்ணி தொலைங்க.” கடுப்பில் அவள் கத்தும்போது போட்டோ மாற்றப்பட்டிருந்தது.

“வைங்க போனை!” அவள் கட் செய்ய போக,

“ஏய்! ஏய்! குண்டுமல்லி இருடி. போனை கட் பண்ண திரும்ப போட்டோ‌ வைப்பேன்.” என்றவன் மறுபுறம்‌‌ கத்த,

“என்னதான் வேணும் உங்களுக்கு? ஏன் என்னை போட்டு இப்புடி தொல்லை பண்றீங்க? நிம்மதியாவே இருக்கக்கூடாது உங்களுக்கு?”

“கத்தி முடிச்சிட்டீயா? ஈவ்னிங் ஆபிஸ்க்கு போறப்போ‌ ரெடியா இரு.‌நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.”

“எதுக்கு? இல்லை எதுக்குன்றேன்? எனக்கு போய்க்க வழி தெரியும், நீங்க ஒண்ணும் வரத் தேவையில்லை. தேவையில்லாம வந்து அசிங்க படாதீங்க.”

“அதையும் பார்க்கலாம், போனை வைடி.‌வேலைய பாக்க வேண்டாமா நானு?” என்றவன் போனை அணைத்திட, அவனின்‌ மேல் எழுந்த கோபத்தை காட்ட இயலாது, போனை தூக்கி எறிந்தவள்,

“ஆ..ஆனா” என‌ தலையை பிடித்து கத்திட,

“டக்..டக்” கதவு தட்டப்படும் ஒலியில் தன்னை சமாளித்துக் கொண்டு சென்றாள்.

“லன்ச் வந்திடுச்சு பாப்பா. எடுத்துட்டு வரவா? இல்லை அங்க வந்து சாப்பிடுறியா?” சரஸ்வதியின் நிற்க,

இருக்கும்‌ மனநிலையில் வெளியே செல்ல விரும்பாதவள்,
“இன்னைக்கு ஒருநாள்‌ மட்டும் கொண்டு வாங்க ஆன்ட்டி, நாளையில இருந்து நானே வந்து எடுத்துக்கிறேன்.”

“சரி கண்ணு, என்னத்துக்கு சொணங்கி கிடக்கிற? வீட்டு ஞாபகம் வந்திடுச்சா?”
என்றவரின் கேள்விக்கு வெறும் புன்னகையை மட்டும் கொடுக்க,

“அதெல்லாம் சரியாப் போய்டும்.‌ நான் சாப்பாடு கொண்டாரேன்.”

“இந்த பொண்ணு சுசிலா எப்போ வரும்?”

“அது நைட்டாயிடும்” என்றுவிட்டு சென்ற அவர், உணவை கொண்டு வர வாங்கி வைத்துக் கொண்டாள்.

பின், சஞ்சயிடம் அழைத்து வந்துவிட்ட விவரங்களை கூறி, மேலும்‌ வேலை சம்பந்தமாக சிலவற்றை தெளிவுப்படுத்திக் கொண்டாள்.

மதிய‌ உணவினை உண்டுவிட்டு, நேரம் போகாமல் படுத்துக் கிடந்தவள், லேசாய் கண்ணயரந்துவிட்டாள்.

மாலை போல் எழுந்தவள், அலுவலகம் செல்ல வேண்டி வேகமாய்‌ ரெடியாகி வந்தவள், கீழே ஸ்நாக்ஸ் கொடுக்கப்பட உண்டு முடித்தவள்‌ வெளிவர, மூக்கு வேர்த்தார் போல் வந்து நின்றிருந்தான் ராகவன்.

மில்லில் இருந்து அப்படியே வந்திருப்பான்‌ போலும். சோர்வு அப்பிக்‌கிடந்தது முகத்தில்.

அவள் வேலைக்கு சேர்ந்தப் பின், ஆபிஸ்‌ கேஃப்பே வந்து அழைத்து சென்றுவிடும்.‌ ஆனால் இன்று‌ அவள் போய்‌ ஜாயினிங் லெட்டரை கொடுக்க வேண்டும் என்பதால், அவளாக தான்‌ செல்ல வேண்டியிருந்தது. ஆட்டோ, டேக்ஷி என அவள் யோசிக்கையிலேயே, அங்கிருந்து பஸ் ஸ்டாப் அருகில்தான் என‌ தெரியவர, சரி என பேருந்தில் சொல்ல முடிவெடுத்திருந்தாள்.‌ அவசரத்திற்கு உதவியாக இருக்கும் என.

வெளியே நின்றவனை இம்மியளவும் மதிக்காது அவள் நடையை கட்ட, இது தான் நடக்கும் என‌ அறிந்திருந்தவன், வண்டியில் ஏறியிருந்தான்.

‘வண்டி சத்தத்தை காணோம். பின்னாடி வராரோ? ஆனா எப்புடி பைக் சத்தம் இல்லாம‌‌ போச்சு’ வேடிக்கை‌ பார்ப்பது போல் பின்னால் திரும்பி பார்க்க, ஆளையும் காணவில்லை, வண்டியையும் காணவில்லை.

‘எங்கப் போனாரு?’ நினைத்தப்படி லேசாய் கண்களை சுழற்றி தேட, எங்கும் இல்லை.

‘போய்ட்டாருப் போல’ மனதின் ஓரத்தில் சிறு ஏமாற்றம் வருவதை தவிர்க்க முடியவில்லை அவளால்.

அவள்‌ செல்ல வேண்டிய பேருந்து வந்துவிட ஏறிக் கொண்டாள். ஒரு மணி நேரத்திற்கும் மேல் பிடித்தது அவள் செல்வதற்கு.

ஒருவழியாக அட்ரஸை தேடி கண்டுபிடித்து அவள் அலுவலகத்திற்கு சென்று நேரம், இவளை‌‌ வரவேற்பதற்கு ரெடியாய் நின்றிருந்தான் ராகவன்.

‘அதானே பாத்தேன்’ அவனை லேசாய் முறைத்த வண்ணம் வர,

“ப்பா, எப்புடி இவ்ளோ மதுரை மல்லி மாதிரியே ஃப்ரஸ்ஸா வந்து நிக்கிற?” என்றவனின் குரலில் இருந்த நக்கலில், கொதி நிலைக்கு சென்றாள்.

பின் அவளே இடிபாடுகளில் சிக்கி வாடி வதங்கி‌ அல்லவா வந்திருக்கிறாள்.

“போ, போ சீக்கிரம் போய் ஜாயிண்ட் பண்ணிட்டு வா, இந்த மொகத்த கழுவிட்டு போ” தண்ணீரை பாட்டிலை அவன் நீட்டிட, மெளனமாய் வாங்கி கொண்டாள்.

அவளிற்கே தெரிந்திருந்தது அவளது கசங்கிய தோற்றம்! நெரிசலில் சிக்கிய பின்பு தான், டேக்ஷியே எடுத்திருக்கலாம் என‌ நொந்துக் கொண்டிருந்தாள்.

அவள் உள்ளே சென்று, தனக்கான ஜாயினிங் லெட்டரை அங்கிருந்த ஹெச்சாரிடம் கொடுத்திட, அவள்‌ அங்கே சேருவதற்கான ஆயுத்தங்களை மேற்கொண்டனர். ஒரு மணி நேரம் பிடித்தது அவள் திரும்புவதற்கு. நாளையில் இருந்து வர‌ சொல்லியிருந்தனர்.

ஆபிஸ் கேஃப் அவளது பி.ஜிக்கே வந்துவிடும் என்றதால் பிரச்சினை இல்லாமல் போயிற்று. அனைத்தும் முடித்துக் கொண்ட வர, ராகவன் அங்கே செக்யூரிடம் பேசிய வண்ணம் சில தகவல்களை பெற்றுக் கொண்டான்.

“போலாமா? ப்ரொசீஜர் எல்லாம் முடிஞ்சதா?”

“ம்ம்ம் முடிஞ்சது.”

“அடுத்து”

“நாளையில இருந்து வர சொல்லிருக்காங்க. ஆபிஸ்‌ கேஃப் பி.ஜிக்கே வந்திடுமாம். மார்னிங் சிப்ட், தேவைப்பட்டா நைட் சிப்ட் பாக்கணும்.” அவன் எதுவும் கேட்காமலே அனைத்து தகவல்களையும் அவளை சொல்ல வைத்துக் கொண்டிருந்தான்.

“சரி வா போகலாம்.” வண்டியை ஸ்டார்ட் செய்ய, அவனை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தாள்.

“ப்ச் யுகா! இப்பவே லேட் ஆச்சு, பஸ் பிடிச்சுப் போக இன்னும் இருட்டிடும். பேசாம வந்து வண்டியில ஏறு” வண்டியை அவள் பின் உருண்டியபடி வர,

அதற்குள் துரை அழைத்து விட்டிருந்தார். அவரிடம் அனைத்தையும் சொல்லியவள், கிளம்பி விட்டதையும் சேர்த்து செல்ல, வேகமாய் அவள் போனை பிடுங்கியவன்,

“நான் ராகவன் பேசுறேன்.‌ ஏற்கனவே இருட்டிடுச்சு, உங்க மருமக வண்டியில ஏறச் சொன்ன பகுமானம் காட்டிட்டு இருக்கா, ஒழுங்கா அவளை வண்டியில ஏறச் சொல்லுங்க. பஸ் பிடிச்சுப் போக இன்னும் லேட்டாகிடும் பி.ஜிக்கு.” துரை அவன் பேச்சை கிரகிக்க கூட நேரம் தாரமால் பேசி முடித்திருந்தான்.

“பிரணிதா உன் கூட வந்தளா?”

“ப்ச் வந்துட்டாலும்! பஸ்ல தான் வந்தா, நான் இங்கே ஆபிஸ்க்கு வந்துட்டேன். இப்போ‌ அவளை தனியா அனுப்ப முடியாது?”

“சரி, பிரணிட்ட கொடு நான் பேசுறேன்.”

“இந்தா பிடி, உன் மாமா பேசணுமாம்?”

“கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா உங்களுக்கு? இப்புடி தான் பிடுங்குவீங்களா?”

“ஆமா, இல்லை. அதுக்கென்னான்ற இப்போ.” வர மறுக்கிறாளே‌ என்ற கோபத்தில் அவனும் பேச, அவனை முறைத்தவள், போனை காதில் வைத்திட, அந்த பக்கம் என்ன கூறப்பட்டதோ, அமைதியாக “ம்ம்” கூட்டினாள்.

அவன் வண்டியில் ஏறி அமர்ந்தவள்,
“எடுங்க வண்டியை?”

“இன்னவரைக்கும் பிகு பண்ண, இப்போ என்ன?”

“மாமா போக சொன்னாங்க. இருட்டிடுச்சு பஸ்ல வேண்டாம்னு.”

“இவ்ளோ நேரமும் நானும் அதைதானேடி சொன்னேன்.”

“இப்போ‌ என்ன? இறங்கிப் போகவா?”

“போறதுன்னா போடி, ஆகதான் ரொம்ப பண்ற?” என்றதும், வேகமாய் அவள் இறங்க முயல, அதற்கு இடமளிக்காமல் வண்டியை கிளப்பியிருந்தான்.

அதிர்ந்து, அவன் தோள்களை அழுந்தப் பற்றி தன்னை நிலைநிறுத்திக் கொண்டவள்,

“எதையாவது சொல்லிடப் போறேன்? இப்புடிதான் பண்ணுவீங்களா? யோசிக்கிறதே இல்லை.” என இவள் சீற‌, சீற அவனின் வேகம் அதிகரித்தது.

“இப்போ‌, ஸ்பீடை கம்மி பண்ணுறீங்களா இல்லையா?” அவள்‌ அதட்டல் எதுவும் வேலை செய்யவில்லை அவனிடம்.

‘என்னவோ செய்துக்கொள்’ என்ற‌ மனநிலையில் அவன்‌‌ தோள்களை அழுந்தப் பற்றி அமர்ந்துக் கொள்ள, சிறிது நேரத்திலே வண்டியின் வேகம் குறைந்து மித வேகத்தில் வந்திருந்தது.

அவள் பி‌.ஜியை சென்றடையும் வரையிலும், ஒரு வார்த்தை அவன் பேசவில்லை.

பி.ஜியின் முன் வண்டியை‌‌ நிறுத்திவிட்டு அவன் அமைதிக்காக்க, அவனின் அமைதி அவள் மனதை பிசைந்தது உண்மை.

இறங்கியும் அவள் அங்கேயே நிற்க, அவனும் நின்றான். அவன் பேசாமல் அவளிற்கு அங்கிருந்த செல்ல விருப்பமில்லை. பத்து, பதினைந்து நிமிடங்கள்‌‌ கடந்திருக்கும்,

“போடி உள்ள!” அவன்‌ தான் இறங்கி வர வேண்டியதாகியது.

“ப்ச்!” என்ற சத்தத்துடன் அவள் அங்கேயே நிற்க,

“‌ஈஈஈஈஈ!” அனைத்து பற்களையும் காட்டியவன்,
“போதும்மா, உள்ள போ எனக்கு மில்லுக்கு போகணும்.‌ வேலை இருக்கு யுகா.”

“ம்ம்ம்” என்றவள், இன்னமும் தயங்கி நிற்க,

“போடம்மா, நான் கிளம்புறேன்.” மென்மையாய் உரைத்தவன், கிளம்பிட.
தலையசைத்து உள்ளே சென்றாள்.

அவள் சென்ற நேரம், சுசிலா வந்திருந்தாள். இவள் அவளை கண்டு புன்னகைக்க, தயங்கி தயங்கி லேசாய் புன்னகைத்தாள் சுசிலா.

“ஹாய் நீ சுசி தானே!” மெல்லமாய் இவள் பேச்சை வளர்க்க, சுசிலாவும் மெல்ல மெல்ல பேசினாளும் வெகுவாய் தயங்கியே இருந்தாள்.

இரவு உணவினை சுசியுடன்‌ முடித்துக்கொண்டு வந்தவள், வீட்டினரிடம் பேசிவிட்டு உறங்க முயல, ராகவன் அழைத்து விட்டான்.‌ அவள் எடுக்காது போக, செய்தியில் வந்து விட்டான்.

“தூங்கிட்டியா யுகா, டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”

பதில் போடாதே! போடதே! என‌ மூளை‌ எச்சரிக்க, அதையும் மீறி விரல்கள் பதில் அளித்திருந்தன “ம்ம்” என.

“சரி, நீ‌ தூங்கு பாய்!” என்றுவிட்டு ஆப்லைன் சென்றுவிட, அவளின்‌ விழிகள் அலைப்பேசியையே வெறித்தன.

‘இங்கு அவள் வந்த நோக்கம் என்ன? இப்போது அவள் செய்து கொண்டிருப்பது என்ன?’ மனசாட்சி எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல பயந்தவள், கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

அடுத்தநாள் சீக்கிரம் எழுந்தவள், அலுவலகம் செல்ல தயாரானாள். அருகிலிருப்பவள் இன்னும் உறங்கி கொண்டிருக்க, ‘சிறுபெண்’ தானே‌ நினைத்து விட்டுவிட்டவள், கீழே காலை உணவிற்கு சென்றுவிட்டாள்.

அவள் உண்டு முடித்து வரும் வரையிலும்‌‌ சுசி எழாமல் இருக்க,
“சுசி! சுசி எழுந்திரு டிபன் முடியப் போகுது.” என‌ எழுப்ப முயல,

“நான் பாத்துக்கிறேன், விடுங்க என்னை தூங்கணும்” என்றவளிடம், வேறு‌ என்ன செய்திட முடியும்? அவளிற்கு நேரமாக கிளம்பிவிட்டாள்.

“ஆன்ட்டி, சுசி இன்னும்‌ எழுந்துக்கலை, டிபன் மட்டும் அவளுக்கு எடுத்து வச்சிடுறீங்களா” மனம்‌‌ கேளாமல் சரசம்மாவிடம் கூற,

“அட, இது வழக்கம்தான் கண்ணு.‌‌சுசி பிள்ளை‌‌ அதிகமா காலையில சாப்பிடாதே, தூங்கிட்டே தான் இருக்கும். அப்பறம் அரக்க பறக்க எழுந்து வேலைக்கு ஓடிடும். வந்த புதுசுல இருந்தே இப்புடிதான், வார்டனம்மாவும் சொல்லிப் பார்த்தாச்சு, அந்த பிள்ளை காதிலே வாங்கலை. டிபன்‌ எடுத்து வச்சாலும் சாப்பிடுறதில்லை. அதான் விட்டுடோம்.” என்றிட, அதற்கு மேல்‌ இவளும் விட்டு விட்டாள்.

அவள் ஆபிஸ் வண்டி வர நேரமிருந்தது. வெளிய கேட் அருகே வந்து நின்றவளின் மனம் ராகவனை தேடியது உண்மை.‌இங்கு முதல் நாள் வேலைக்கு செல்கிறாள், அவனை எதிர்பார்த்தது மனம்.

யோசனையில் இருந்தவளை கலைத்தது காரின் ஒலி. யாரென பார்க்க ராகவன் தான். அவனை கண்டதும் அவள் முகம் பளிச்சிட, முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவள், மறுபுறம் கார் திறப்பதை கண்டு அங்கே பார்க்க மாணிக்கம் இறங்கினர்.

நெற்றி முழுவதும் பட்டையுடன், கையில் கோவில் பிரசாதத்துடன்‌ இவளை நோக்கி வந்தவரை‌ கண்டு இவள்‌ மனம் கலங்கி விம்ம, சட்டென‌ தலையை‌ குனிந்துக் கொண்டாள்.

“பிரணிக்குட்டி, இன்னைக்கு உனக்கு முதல்நாள்ல அதான் காலையிலயே மருதமலைக்க போயிட்டு வந்துட்டேன். இந்தாடா பிரசாதம்.” என நீட்டியவரை நிமிர்ந்துப் பார்க்காது, கலங்கிய விழிகளை‌ கட்டுப்படுத்திக்‌ கொண்டு அவள் நிற்க,

மாணிக்கத்தின் நீட்டிய கை மெல்ல மெல்ல இறங்க, இவள் உள்ளம்‌ இங்கே அலறியது.

“சரிடா, உன் இஷ்டம் தான்‌.‌நான் கொடுக்கலை” எப்போதும் போல் அவள் விருப்பத்திற்கே வளைய,

“இந்த மாமாவை!” என்றபடி அவர்களுருகே வந்தவன்,

“அவ வேணாம்னா அப்புடியே விட்டுருவீங்களா மாமா, இப்படி இருக்காதீங்கன்னு தானே சொல்றேன்.‌ஏற்கனவே, இப்புடி விட்டு‌தான் இந்த நிலைமை” என‌ அவன் கடிந்துக் கொள்ள, அவரின் முகம் கசங்கிற்று.

அடிக்கண்ணில் மாணிக்கத்தினை பார்த்தவள்,மெல்லிய முறைப்புடன் ராகவனை பார்க்க,

“சாமி பிரசாதம் வாங்கிக்க மாட்டியா?” என்றபடி அவளது நெற்றியில் விபூதியை பூசிட, முறைத்தாலும் அவனை‌ தடுக்கவில்லை! தடுக்கத்‌ தோன்றவில்லை! அவளிற்கு.

“வண்டி டைமிங் என்ன?”

“ஒன்பதேகால்!”

“ஈவ்னிங்?”

“ஆறு”

மாணிக்கத்திற்கு பிரணியின் முகம் பார்ப்பது ஒன்றே குறிக்கோளாக இருந்தது.

அவளிற்கான வண்டி வந்துவிட, மெல்லிய தலையசைப்புடன் ராகவனிடம் விடைப் பெற்றவள், மாணிக்கத்தின் பக்கம் திரும்பாது சென்றிட, முகம் வாடி விட்டது அவருக்கு.
ராகவனிற்கும்
ஒரு மாதிரி ஆகிவிட்டது அவளது செயலில்.

‘முகத்தை கூட பாக்க மாட்டாளா’ நினைத்தவனிற்கு மாமனின் முகம் காண கஷ்டமாய் போயிற்று.

வண்டியில் ஏறியவள், கதவினை மூடும்‌ முன் நொடிக்கும் குறைவாய் அவளது விழிகள் மாணிக்கத்தினை‌ தொட்டு மீண்டிருக்க‌, அதற்கே பூரித்துப் போனார் மனிதர். அவள் வண்டி நகர்ந்ததும், மாணிக்கத்தை அழைத்துக் கொண்டு சென்றிருந்தான்.





 

Author: STN - 35
Article Title: கண்ணாமூச்சி 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
மே பீ கவிதா பேசும் போது பூர்வா அமைதியா இருந்து இருக்கணும்.....அதே தான் மாணிகமும் பண்ணி இருக்கணும்.....
சோ அந்த ஏமாற்றம் தான் இப்ப வரை அவளுக்கு இருக்குனு நினைக்கறேன்