காதலின் காற்றலை - நிதனிபிரபு

மக்களே, பேசாதீங்க. இப்பிடித் தலைப்பா போட்டா மட்டும் காணுமா எண்டு கேக்காதீங்க. இப்ப எல்லாம் தலைப்புப் பிடிக்கிறதுதான் பெரும்பாடா இருக்கு. ஒரு தலைப்பை யோசிச்சு நெட்ல போட்டா அதுல ஒரு கதை இருக்கும்.
அதான் தலைப்பை புக் பண்ணுறேன். ஆனா இஞ்ச போட்ட கதைகள் கட்டாயம் எழுதுவேன்.
….
ஒரு செல்லமான உரிமையோடு, "ஓய்... மீசைக்காரரே!" என்று நீட்டி அழைத்துத்தான் ஆரம்பிப்பாள். அவள் அப்படி அழைக்கும் ஒவ்வொரு முறையும் அவனது முகத்தில் இருக்கும் அந்த மீசை மாத்திரமல்ல, அவளது அந்த விளிப்பு அவனது உதடுகள் வரை ஊடுருவி, உள்ளம் வரை மெல்லிய குறுகுறுப்பை எகிறச் செய்யும்.
அவள் அருகில் வரும்போதெல்லாம், அந்த அடர்த்தியான மீசையைக் கொண்டு அவளைச் செல்லமாக உரசிச் சீண்டியோ, கன்னத்தில் மெதுவாய் வருடியோ என்னென்னவோ சாகசங்கள் செய்ய வேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான ஆசைகள் அவனுக்குள் பொங்கி வழியும்.
ஆனாலும் தன் ஆசைகள் அத்தனையையும் அடிமனத்திலேயே விழுங்கி அடக்கிக்கொள்வான். வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல், தீவிரமாக இருப்பது போல் முகத்தை வைத்துக்கொண்டாலும், அவனது கண்கள் மட்டும் அவளது சேட்டைகளைக் கண்டு பூரித்துச் சிரிக்கும்.
கோயிலின் கருவூலத்தைச் சுற்றி பக்தர்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. எல்லோருடனும் சேர்ந்து நடந்து கொண்டிருந்தவள் அவன் கையை சுரண்டவும், “என்னம்மா?” என்று அவள் புறமாய்க் குனிந்து கேட்டான் அவன்.
அவள் விழிகள் வியப்பில் விரிய அவன் முகத்தையே பார்த்தாள்.
“என்ன?” என்றான் அவன் கனிந்த சிரிப்புடன்.
“உங்கட மீ…ச…” என்றாள் அவள். அவன் மீசை துடித்தது. “தொட்டுப் பாக்கப்போறியா?” என்றான் சின்ன சிரிப்போடு.
ஆம் என்று தலையசைத்தவள் வேகமாக இல்லை என்றாள் பதறி.
அவன் உதட்டில் சிரிப்பெழுந்தது. பார்வையைச் சுழற்றித் தம்மைச் சுற்றி பார்த்துவிட்டு, யாருமறியாமல் அவளின் வெண்பஞ்சுக் கையைப் பற்றிப் புறங்கையில் தன் மீசையை இலேசாக உரசினான். அவளுக்குச் சிலிர்த்ததோ இல்லையோ அவனுக்கு என்னென்னவோ எல்லாம் மாயம் நிகழ்த்தியது அந்த குட்டி நிகழ்வு
—--------------------------
அன்று மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான். அதே நேரம் அவளும் மேலேறினாள். சின்ன புன்னகையோடு அவளுக்கு வழிவிட்டு அவன் படிகளில் ஒரு பக்கமாக இறங்க, அவளும் அதே பக்கம் வந்தாள். சரி என்று அவன் தன் பக்கத்தை மாற்றினால், அவளும் விடாமல் அதே பக்கம் வந்து வழி மறித்தாள்.
கண்ணில் சிரிப்புடன் அவன் போகும் திசை எங்கும் குறுக்கே போய், அவனை ஒரு அடியும் கீழே இறங்க விடாமல் தடுத்துச் சேட்டை செய்தாள்.
புன்னகையோடு நின்றுவிட்டவன், "ஓய் என்ன?" என்றான்.
"என்ன? ஒண்டும் இல்லையே!" என்றாள் அவள் அப்பாவியாக.
"அப்ப இறங்க விடு."
"இறங்குங்க... ஆர் வேண்டாம் எண்டு சொன்னது?"
“அதுக்கு நீ வழி விடோணும்.”
“விடாம நான் என்ன உங்கட கையை பிடிச்சு வச்சிருக்கிறேனா?" என்றாள்.
அவளது இந்த விடாப்பிடியான செல்லச் சேட்டையைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, தன் கைகளைக் கட்டிக்கொண்டு அப்படியே நின்றான் அவன். அவளும் அவனைப் போலவே கைகளைக் கட்டிக்கொண்டு, அசராமல் பார்த்து நின்றாள்.
அவளது அந்தப் பிடிவாதமான அழகைப் பார்த்துச் சிரித்தவன், “அப்ப விடமாட்டாய்?” என்றான்.
“நான் உங்களப் பிடிச்சு வைக்கவே இல்லை எண்டுறன்.”
“அப்ப சரி!” என்றவன் அப்படியே அவளைத் தூக்கித் தன் பின்னால் வைத்துவிட்டுப் படிகளில் இறங்கிப் போனான்.
அவன் செய்த அந்தத் திடீர் காரியத்தில் ஒரு கணம் அதிர்ந்து, சிலிர்த்துப் போய் அப்படியே நின்ற இடத்திலேயே ஸ்தம்பித்து நின்றாள் அவள்.
படிகளை மொத்தமாக இறங்கி முடித்தவன் திரும்பிப் பார்த்துப் பற்கள் தெரிய முறுவலித்துவிட்டுப் போனான்.
--------------
அந்த மாலைப் பொழுது அமைதியாகத்தான் நகர்ந்துகொண்டிருந்தது. ஆனால், மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளின் ஓரத்தில் கேட்டுக்கொண்டிருந்த சத்தம் கொஞ்ச நேரத்தில் புயலின் மையமாக மாறக் காத்திருந்தது.
தன் தங்கையை கோபத்துடன் அதட்டிக்கொண்டிருந்தான் அவன்.
மாடிக்கு ஏறிவந்தவள் அத்தனையையும் மொத்தமாகக் கேட்டு அப்படியே உறைந்துபோனாள். அவள் வைத்த கால் அசைவின்றி ஸ்தம்பித்து நின்றது.
அதுவரை அவன் மீது அவளுக்கு ஒருவித ஈர்ப்பு இருந்தது உண்மைதான். அந்த ஈர்ப்புக்கு என்ன பெயர் என்று அவளுக்குத் தெரியாவிட்டாலும், அவனது பக்குவம், எதற்காகவும் கோபப்படாமல் எல்லாவற்றையும் பொறுமையாகச் சமாளிக்கும் குணம், அவளைப் பேணிப் பாதுகாக்கும் விதம் அனைத்தும் அவளுக்கு மிகவுமே பிடிக்கும்.
ஆனால், இப்போது அவன் பேசுவதைக் க்கேட்டதும் அவளது உலகம் தலைகீழாகப் புரண்டது.
அவளால் அந்த அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை. கால்கள் நடுங்க, நெஞ்சு அடைக்க, மூச்சுத் திணற அந்த இடத்திலேயே தளர்ந்து நின்றாள்.
பேசிக்கொண்டிருந்த கோபத்தில் இருந்தவன் சட்டென்று தன் பார்வையை மாடியின் நுழைவாயிலுக்குத் திருப்பியபோதுதான் கண் கலங்கி, உயிரற்ற சிலையைப் போல நின்றுகொண்டிருந்தவளைக் கண்டான்.
அவளது முகத் தோற்றத்தைப் பார்த்த உடனேயே அவனுக்குப் புரிந்துவிட்டது, தான் பேசிய அனைத்தையும் அவள் கேட்டுவிட்டாள் என்று. அவன் முகம் ஒரு விநாடி வெளிறிப் போயிற்று. அதுவரை அவன் முகத்தில் இருந்த கம்பீரமும் கோபமும் சுக்குநூறாய் உடைந்து நொறுங்கின.
அவன் அப்படியே அசையாமல் நின்ற இடத்திலேயே நின்றான். அவள் கண்களில் தேங்கியிருந்த கேள்விகளும், சொல்லொணா ஏமாற்றமும், தன்னைத் தின்று தீர்க்கும் வலியும் அவன் நெஞ்சில் சூடான ஈட்டியாய் வந்து பாய்ந்தன. சொல்ல வார்த்தைகள் இல்லாமல், குற்ற உணர்ச்சியின் பாரம் மொத்தமும் அவன் தோள்களில் வந்து அமர, இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி அந்த மௌனத்தில் சிலையாக நின்றிருந்தனர்.
“நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்க என்ன?” ஒற்றைக் கேள்விதான். மொத்தமாய் நொறுங்கிப்போனான்.
—--------------------
வெள்ளிக்கிழமை மாலை வேலை முடிந்து அலுவலகக் கட்டிடத்தை விட்டு அவள் வெளியே வந்தபோது, அவளது அலுவலக வாசலிலேயே நின்றுகொண்டிருந்தான் அவன்.
அவளுக்கு அதிர்ச்சி. கொஞ்சமும் அவள் அதை எதிர்பார்க்கவில்லை. அதைவிட முக்கியமாக, அவனது அந்த எதிர்பாராத வருகை அவளுக்குப் பிடிக்கவில்லை.
அவன் முன்னே வந்து நின்று, பார்வையை எங்கோ திசைகாட்டி போலத் திருப்பிக்கொண்டு, பிடிவாதத்தால் அழுந்திய உதடுகளோடு, 'உன் வரவு எனக்குப் பிடிக்கவே இல்லை' என்று அப்பட்டமாகச் சொல்லும் முகபாவத்தோடு நின்றிருந்தாள்.
கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தவனின் உதட்டோரம் ஒரு மெல்லிய சிரிப்புத் துடித்து அடங்கியது.
அவளது கைகளின் இறுக்கத்திலும், உதட்டின் அழுத்தத்திலும், புருவச் சுழிப்பிலும் வெளிப்பட்ட அத்தனை கோபத்தையும் தன் கைகளுக்குள் இழுத்து அணைத்து, அந்த நொடியே இல்லாமலாக்கிவிட வேண்டும் என்று அவனது மனம் ஆசைப்பட்டது.
ஆனாலும், எதையும் பேச முற்படாமல், அமைதியாகச் சென்று காரின் கதவைத் திறந்துவிட்டான்.
அவள் அசையாமல் நின்றாள்.
“ஏறு!”
“எங்க?”
“சொன்னாத்தான் வருவியோ?”
அவன் குரலில் இருந்த உறுதியைக் கண்டவள், ஒரு கணம் தயங்கி நின்றுவிட்டு, வேறு வழியின்றி வந்து காரில் ஏறி அமர்ந்தாள். அவளது ஒவ்வொரு அசைவும், செய்கையும், 'நீ வந்திருப்பது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை' என்பதைத் திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தன.
காரில் எங்குமே எந்தப் பேச்சும் இல்லை. மௌனமாகவே வண்டியை ஓட்டிச் சென்றவன், நேராக அவளது தங்கும் விடுதியின் (Hostel) முன்னே கொண்டுபோய் நிறுத்தினான்.
"ரெண்டு நாளுக்குத் தேவையானதைத் எடுத்துக்கொண்டு வா."
மதி அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள். "இல்லை... எனக்கு வேற..." என்று மறுப்புச் சொல்ல ஆரம்பித்தவளை, தன் பார்வையாலேயே தடுத்து, "நீ வாறாய்" என்று ஒற்றை வார்த்தையில் பேச்சை முடித்து வைத்தான்.
அவளுக்கு ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வந்தது. கண்கள் பனித்து, அழுகை தொண்டையை அடைத்தது; 'வர முடியாது!' என்று கத்த வேண்டும் போல் இருந்தது. அவனையே முறைத்துப் பார்த்தாள். அவனோ தன் பார்வையைத் திருப்பவே இல்லை.
அவன் இறங்கி வரப்போவதில்லை என்பதும், தன் பிடிவாதத்திலிருந்து அவன் பின்வாங்கப் போவதில்லை என்பதும் அவளுக்குப் புரிந்தன.
அந்த நிமிடம் அவளுக்கு நெஞ்சம் வலித்தது. அவள் அறிந்த அவன் அப்படிப்பட்டவன் அல்லவே! அவளது சின்ன சின்ன விருப்பங்களைக் கூட மதிக்கிறவன். ஊருக்குள் அவன் பெரிய மனிதனாக இருக்கலாம், பலரும் அவனுக்கு அஞ்சி நடக்கலாம்; ஆனால் அவளுக்கு அவன் அப்படித் தெரிந்ததுவே இல்லை.
எப்போதுமே தன் வயதுத் தோழனைப் போலத்தான் அவளோடு பழகியிருக்கிறான். அப்படியானவன், இன்று இப்படித் தன் இஷ்டத்தை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் இந்தப்பிடிவாதம் அவளை ஆழமாகத் தாக்க, கண்கள் கலங்கின.
வேறு வழியின்றி, கோபமும் கண்ணீரும் தொண்டையை அடைக்கக் காரிலிருந்து இறங்கிப் போனாள். அதே கோபத்தோடு, ஒரே ஒரு பையில் சில துணிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு பத்தே நிமிடத்தில் திரும்பி வந்தவள், காரின் கதவை 'படார்' என்று பலமாக அறைந்து சாத்திவிட்டு உள்ளே அமர்ந்தாள்!
