• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் ராஜ வீதியில் - 1

Vishakini

Moderator
Staff member
காதல் ராஜ வீதியில் 1

‘டிங் டாங்’


காதுகளை வாசலில் வைத்துக் காத்திருந்த மணிமொழி புன்னகைத்தான். அழைப்பு மணி எதுவும் அடிக்கவில்லை, அப்படி அடிக்க அவன் தோரணையுடன் நடுநாயகமாக உட்கார்ந்திருந்த அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் தாளாளர் அறையின் வாசலில் அழைப்பு மணியும் இல்லை. போதாதிற்கு அவன் மனம் போல் அந்தக் கதவு திறந்தே இருந்தது.

நிலாக்காலம் என்னும் அந்த ஆதரவற்றோர் இல்லம் தற்போது ஐம்பது இல்ல உறுப்பினர்களை கொண்டது. ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு வகையில் தங்கள் சொந்தக் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள். அவர்களில் வயது வித்தியாசம் இல்லை. இங்கு வந்ததில் இருந்து இதுவே தங்கள் வீடு என்ற நிம்மதி அனைவருக்கும் உண்டு. அப்படித்தான் அன்பும் அக்கறையுமாய் இந்த இல்லத்தை வழிநடத்தி வருகிறான் மணிமொழி.

மணி மொழியும் இதே இல்லத்தில் சிறு வயதில் இருந்தே வளர்ந்தவன்தான். இப்போது சொந்தத் தொழில் செய்வதுடன் இங்கேயும் நிலாகாலத்தின் நிறுவனர் ஜார்ஜ் வில்லியம்ஸ் கேட்டுக் கொண்டதன் பேரில் பொறுப்பேற்றுக் கொண்டவன். இதற்கு நிர்வாகியும் உண்டு. அதனால் இவனுக்கு இங்கே பொறுப்புகளின் அழுத்தம் குறைவு.

இங்கே இப்போது…

மணிமொழி அமர்ந்த இடத்தில் இருந்தே வாசலை அதே மாறாத புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருக்க, அவள் பிரசன்னமானாள். அவள்தான் அந்த ‘டிங் டாங்’க்கு சொந்தக்காரி. மணிமொழி என்ற அவன் பேரில் உள்ள மணிக்கு மணி ஓசை கொடுத்து அவனை வம்புக்கு இழுப்பவள்.

“வா வனி” என்ற அவன் அழைப்பை சிரிப்புடன் ஏற்றுக் கொண்டவள் அதே மலர்ந்த முகத்துடன் அவன் இருந்த அறைக்குள் தன்னியல்பாய் வந்து அவன் சொல்லாமலே அவனுக்கு எதிரே இருந்த நாற்காலிகளுள் ஒன்றில் அமர்ந்தாள். அப்படியே தன் தோளில் சும்மா தொங்கிக் கொண்டு கிடந்த கைப்பையையும் அவன் மேசையில் தூக்கிப் போட்டாள்.

அதை ரசித்துச் சிரித்தவன், “ஏன் ஹாண்ட் பேக்ல பணம் இல்லியா? தூக்கிப் போடுற?” என்றான்.

“ஓ! மிஸ்டர் தமிழும் அவர் ஒயிப் மிசஸ் மலரும் எனக்கு வாரி வழங்கிட்டுத் தானே அடுத்த வேலை பார்ப்பாங்க?” சடைத்துக் கொண்டே அவனைக் கண்களால் முறைத்தாள் அவள்.

மணிமொழிக்கும் அவனால் வனி என்று அழைக்கப்பட்ட மதிவதனிக்கும் இடையே கிடந்த நடுத்தர அளவிலான மேசை சோகத்தைப் பூசிக் கொண்டது. இனி அதில் தானே வனி தட்டி தட்டிப் பேசுவாள்?

அதுதான் வனியின் பழக்கம் அங்கே. அப்படித்தான் அவள் ஒவ்வொன்றும் சொல்லிவிட்டு மேசையைத் தட்டுவாள். அதன் பிறகு மணிமொழி புன்னகைப்பான். அதுதான் அவர்களுக்குள் வழக்கம்.

மதிவதனியின் குடும்பம் தங்கள் வீட்டின் அனைத்து நல்ல நிகழ்ச்சிகளுக்கும் இதே இல்லத்துக்கு தான் ஒரு வேளை உணவு வழங்குவார்கள். இது போக அவர்களால் முடிந்த எந்த உதவியும் செய்வார்கள். அதில் அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி மதிவதனி இங்கே நல்ல அறிமுகம் ஆனவள். மணிமொழியை முதன் முதலில் பார்க்கும் போது அவளுக்கு சின்ன வயது. அவள் அப்பா அவனிடம் பேசிக்கொண்டே அவன் பெயரைச் சொல்லவும் “அப்போ உங்க பேர் டிங் டாங்கா?” என்றதுடன் அப்படியே சொல்லவும் ஆரம்பிக்க அவள் அப்பா திட்டி விட்டார். அதனால் அப்போது விட்டு விட்டவள் அவள் தனியாக அவனைப் பார்க்க கிடைக்கும் நேரம் அப்படித்தான் கூப்பிடுவாள்.

அப்படி என்றால் இப்போதும் தனியாகத்தான் அவனைப் பார்க்க வந்து இருக்கிறாள்! ‘அடங்காத வாலு’ அவளைக் குறித்து அவன் எண்ணம் அதுதான். அதையும் நினைத்தபடி,“எப்படி இருக்க வனி?” என்றான் மேசையில் இருந்த தாள்களை அடுக்கியபடி.

அவனை முறைத்துப் பார்த்தவள் “இப்படி வனி, குனி, முனி,சனின்னு என்னைக் கூப்பிடாதீங்கன்னு சொல்லி இருக்கேன்ல? வதனின்னு கூப்பிடுங்க“ என அதிகாரமாகச் சொன்னவள் அவன் ஆடாமல் அசையாமல் இருக்கவும் மேசையைத் தட்டி, “ப்ளீஸ்” என்றாள் சிறிது கெஞ்சலுடன்.

“அது வசப்படாது. எல்லோரும் சொல்றது இப்படிதானே?” என்றான் இதுவரை மாறாத புன்னகையுடன்.

“அதான் நீங்களாவது எனக்குப் பிடிச்ச மாதிரி கூப்பிடுங்களேன்” தனக்குப் பழக்கமில்லாத கெஞ்சலும் அவனிடம் தான் அவளுக்கு வருகிறது. அதையும் அவன் புன்னகையுடன் கேட்டு இருக்க அவளுக்கு கோபம் வந்து விட்டது.

“சும்மா வெள்ளையும் சொள்ளையும் போட்டா மட்டும் போதாது. வயசுக்குத் தக்கன பொறுமையும் நீக்கு போக்கும் வேணும். நான் இவ்வளவு சொல்றேன். இத்தனை நாளா சொல்றேன். ஏன் அப்படிக் கூப்பிட மாட்டிக்கிறீங்க?”

“எதுக்குக் கூப்பிடணும்? இந்த இல்லத்துக்கு நீங்களும் ஒரு வாலண்டியர். உங்களுக்கு உங்க குடும்பத்துக்கு மதிப்பு எப்போதும் உண்டு. உன் முழுப் பெயர் சொல்ல வேண்டாம்னு உங்க அப்பா தமிழ் சார் கேட்டுகிட்டார். அவருக்கு ஏதோ செண்டிமெண்ட். அதனால எல்லோரும் கூப்பிடற மாதிரி கூப்பிடுறேன். மத்தபடி எல்லோரும் இந்த இல்லத்துல சமம் தானே?” என அவளிடமே கேள்வி கேட்க இவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

அவன் பெயரை விளையாட்டாய் மாற்றிக் கூறுபவள் தன் பெயர் மட்டும் தெளிவாக அவனால் கூறப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க அதற்கும் அவனுக்குள் புன்னகைதான்.

“உங்களைப் பார்க்க வேலைக்கு மட்டம் போட்டுட்டு வந்தேன் பாருங்க? என்னைச் சொல்லணும்!” என அலுத்துக் கொண்டாள் வனி.

“ஆஹாங்? உங்க அப்பாவோட பாத்திரக் கடையில செய்யிற செல்போன் பாக்குற வேலையையா மட்டம் போட்டுட்டு வந்து இருக்க?” முகத்தில் புன்சிரிப்புடன் அவன் கேட்டதும் முகம் கோபத்திலும் வெட்கத்திலும் சிவந்து விட்டது அவளுக்கு.

“சிரி நிறுத்தணும். புஞ்சிரி நிறுத்தணும் கேட்டோ?” என அவள் மலையாளத்தில் படபடக்க அவன் இன்னும் சிரித்தான்.

“மணி சார்!”

அவள் மேசையில் தட்ட இன்னும் சிரித்தான். அவன் சுபாவமே அதுதான். அதுதான் அவளுக்குத் தொக்காக போய் அவனிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருக்கிறாள்.

“ஓகே. சொல்லு. என்ன விஷயம். அடுத்து நான் என் கம்பனி போகணும். நீ வர்றதால என்னை இங்கே வர சொன்னாங்க மானேஜர். அவங்ககிட்ட உனக்கு டெர்ம்ஸ் சரியில்ல போல? அவங்க உன்னை என்ன பண்ணாங்க? அதான் நான் வந்தேன். சீக்கிரம் சொல்லு வனி “

“அடேயப்பா. பெரிய மன்னார் அண்ட் கம்பெனி. இவர் போய் தூக்கி நிறுத்த? அதுதான் அது பாட்டுக்கு ஓடுதே? நீங்க போய் என்ன செய்யப் போறீங்க?”

“நான் என்னவோ செய்யறேன். இப்போ நீ சீக்கிரம் பேச வந்த விஷயத்தைப் பேசு”

“உங்களுக்குத் தெரியாதா மணி சார்? அடுத்த வாரம் அண்ணாவோட பிறந்தநாள். அதுதான் அன்னிக்கு மதிய சாப்பாடு நாங்க குடுக்கத்துக்கு டீடெயில்ஸ் உங்ககிட்ட கேட்டு வாங்கிட்டு போக வந்தேன் “

“இதை போனிலேயே கேக்கலாமே?” என்றவனை பார்த்து முறைத்துவிட்டு,

“நானும் அதான் சொன்னேன். அண்ணாதான் அது மரியாதையா இருக்காது. போய் கேட்டுட்டு வான்னு சொன்னான். அப்பா கேம்ப்ல இருக்கார்.அம்மாவுக்கு மூட்டி வலி. படி ஏற முடியாது. அண்ணன் என்னை நீயே போயிட்டு வான்னு சொல்லிட்டான். ஏதோ ஆபரேசன் இருக்காம். அதான் நான் வந்தேன். சரி சொல்லுங்க” என்றவளிடம் தீவிமாக ஆசிரமத்தில் தனியர் உணவு வழங்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை மீண்டும் எடுத்துக் கூறிவிட்டு அவர்கள் வர வேண்டிய நேரம், உணவு தேவைப்படும் நபர்கள், உணவின் தன்மை, தரம் குறித்து விளக்கமாகப் பேசிவிட்டு புன்னகைத்தான் மணிமொழி.

“இதுக்கு என்ன அர்த்தம்? அவ்ளோதான் விஷயம், போய் சேருன்னு தானே?” கேட்டுக் கொண்டே கொண்டு வந்திருந்து மேசையில் வீசியிருந்த கைப்பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள் வனி. அதற்கும் சிரித்தவன்,

“அப்புறம்..நான் வெஜ் இன்னும் சாப்பிடுறியா?” என்றான் அமைதியான முகத்துடன்.

“ஏன்? நீங்க சாப்பிடலைனா ஊர் உலகமே சாப்பிடக் கூடாதா? நான்லாம் நல்லா நான் வெஜ் சாப்பிடுவேன். சாகும்வரை நான்வெஜ் சாப்பிடுவேன். எந்த வியாதி வந்தாலும் நான்வெஜ்..”

“போதும் விடு. நான் கிளம்பனும். வீட்டுக்குப் போயிட்டு போன் பண்ணு” என பேச்சை முறித்தான்.

“அட! நான் என்ன சின்னப் பிள்ளையா? தொலைஞ்சு போக? அதெல்லாம் கரெக்டா போயிருவேன். தவிர, எனக்கு வேற ஒரு வேலை இருக்கு. அதனால வீட்டுக்கு லேட்டாத்தான் போவேன். பை” என்றபடி கிளம்பிவிட்டாள் வனி.

போகும் அவளை ஒரு வினாடி நிமிர்ந்து பார்த்தவன், “கயல்” என்று இல்லத்தின் மானேஜரை அழைத்தான்.

அவன் இருந்த அறையை ஒட்டிய வராந்தாவில் திறந்து இருந்த கதவு வழி இவர்கள் பேசிய பேச்சுக்களை கேட்டவண்ணம் நடைபயின்று கொண்டிருந்த கயல்விழி, “எஸ் சார்” என்று உடனே அறைக்குள் வர, அவள் வந்த வேகத்தில் புருவத்தை உயர்த்தினான் மணிமொழி.

“அது.. இங்கே பக்கத்துல தான் இருந்தேன் சார்… வராண்டாவுக்கு அந்தப்பக்கம் இருக்கற செடிகளுக்குத் தண்ணீர் ஊத்துறதை வாச் பண்ணிட்டு இருந்தேன் சார்”

அவள் சொல்வதை நம்பாமல் போனாலும் அதுப்பற்றி அவளிடம் கேட்க விருப்பமின்றி, அதன் தேவையும் இன்றி, தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டான் மணிமொழி.

“அப்புறம் தமிழ் சார் வீட்டுல அவங்க மகனுக்குப் பிறந்தநாள் வருது..”

“ஆமா சார். அடுத்த வாரம் புதன் கிழமை”

மணிமொழி ஒரு கணம் அமைதியாக அசையாமல் இருக்கவும் பதறிப் போய், “ இல்ல அவங்க ரெகுலரா நமக்கு செய்றவங்க. அதான் டீடெயில்ஸ் நோட் பண்ணி வச்சு இருக்கேன்” என்றாள் பதட்டத்துடன்.

“ஓகே. இங்கே இப்போ இருக்கறவங்க எல்லாம் மக்சிமம் வயசானவங்க. முன்னே சின்னப் பிள்ளைங்க இருப்பாங்க. இப்போ அப்படி இல்லை. பதினெட்டு வயசானதும் நல்ல வேலை ஒன்னை கத்துக்கிட்டு இங்கிருந்து போய்டுவாங்க. அவங்களுக்கும் தொடர்ந்து ஹெல்ப் வேணும்னா நாம பண்ணிட்டு இருக்கோம். அது வேற விஷயம். ஆனா இப்போ இருக்கற எல்டெர்ஸ்க்கு ஏத்த மாதிரி புட் ஏற்பாடு பண்ணச் சொல்லி இருக்கேன். நம்ம டயட் சாட் குடுத்து விட்டு இருக்கேன். இது விஷயமா நீங்க வனியை பாலோ.. வேணும்னா அவ அண்ணனை பாலோ பண்ணிக்கோங்க” என்றுவிட்டு அவன் கிளம்பவும் கயல் சிரித்துக் கொண்டாள்.

‘அவ அண்ணனை பாலோவ் பண்ணிட்டுத் தானே இருக்கேன். அவன்தான் சிக்க மாட்டேன்கிறான்!’

வனியின் அண்ணன் மதிவாணன். மருத்துவன். ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் பணி புரிகிறான். அங்கே வைத்துதான் அவனை முதன் முதலில் பார்த்தாள் கயல். அவள் விழிகள் அப்போதே விரிந்தன.

நிலாக்காலம் இல்லத்தின் மிக வயதான உறுப்பினர் ஒருவருக்கு மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அந்தத் தனியார் மருத்துவமனை வழங்கும் சலுகையின் பேரில் அங்கே அவரை அழைத்துச் சென்றது கயல்தான். அங்கே தான் அவனைப் பார்த்தாள். ஆழமான பெண் மனங்களில் அவளுடையதும் ஒன்று என்று அவளுக்கேப் புரிந்த நொடிகள் அவை.
-------------------------------------------------------------------------
 
Top Bottom