• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் ராஜ வீதியில் - 11

நிதனிபிரபு

Administrator
Staff member
11

ஆற்றங்கரை தனிலே தனி
யானதோர் மண்டப மீதினிலே தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன் - அங்குக்
கன்னி கவிதை கொணர்ந்து தந்தாள் அதை ஏற்று மனமகிழ்ந்தே “அடி
என்னோ டிணங்கி மனம்புரிவாய்” என்று போற்றிய போதினிலே இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட்டாளம்மா!

பாரதியின் சரஸ்வதி காதல்!

இப்படித்தான் தன் காதலும் இருக்குமோ என்று நெருக்கியடித்த நெஞ்சை நீவி விட்டான் மொழி.

பின்னே அவனுக்கு அத்தனை தூரம் மனதில் நம்பிக்கையை தந்ததுடன் தனக்கும் ஒரு உறவு இருக்கிறது என்ற புளகாங்கிதத்தையும் தந்தவள், இப்போது ‘நீ யார்?’ என்னும் பார்வையோடு உலா வருவது எதற்காக?

நேருக்கு நேராக பேசி விடலாம் என்று தான் வந்து இருந்தான். இப்போதும் அவள் முகத்தில் அவனுக்கான எந்த சுவடும் இல்லையே?

கொஞ்சமாவது அவள் கண்ணோரத்தில் அவனுக்கு ஆதரவான ஒரு சிறு துடிப்பை சின்னஞ்சிறு அசைவை கண்டுபிடித்து இருந்தால் இந்த வையகம் அவன் கையில் தானே? அவளானால் தனக்கும் அவனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது போல, ‘வாங்க’ என்பது என்ன? வரவேற்பது என்ன? உபசரிப்பது என்ன? யாருக்கு வேண்டும் அதெல்லாம்?

கேள்விகள். கேள்விகள். கேள்விகள். அவனைச் சுற்றிலும் கேள்விகளே சூழ்ந்து இருந்தன. அவன் கழுத்தையும் நெறிக்க தயாராகிக் கொண்டு இருந்தன. தப்பிக்க வேண்டும்! அவளிடம் ஒரு வார்த்தை பெற வேண்டும்! இன்னும் தயங்கிக் கொண்டு இருந்தால் அவன் நெஞ்சில் உயிர் இருக்கவே முடியாது.

“டீ சாப்பிட கூப்பிட்டேன். இன்னும் ஒன்னும் சொல்லலையே? என் கூட வர அவ்வளவு பயமா?” என்றான் அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டு.

“ச்சே..ச்சே.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. எனக்கு டி பிடிக்காது”என்றாள் தயக்கத்துடன்.

“எனக்கும் டீ பிடிக்காது டி”

“என்னது!”

“டீ பிடிக்காதுன்னு சொன்னேன்” என்றான் முகத்தை இருக்கைகளாலும் துடைத்துக் கொண்டு.

“அப்புறம் டி?”

“அதான் அந்த டி “

“இல்ல..”

“டீ குடிக்கணும்”

“ஓகே போலாம்“ என்று உடனே எழுந்தவள் கடையாளை கடையை கவனித்துக் கொள்ள சொல்ல கண்களால் பணித்து விட்டு கிளம்ப இவனுக்கு சுறு சுறு என்று ஏறியது. அவனை நெஞ்சார பார்க்க முடியாதாம். ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் அவள் பார்வை உண்டாம்.

“நான் ஒன்னும் நினைச்சுக்க மாட்டேன். வாயிலேயே சொல்லு. ‘நான் வர்றவரை கடையை பார்த்துக்கோன்னு’ சொல்லு”

ஒரு சின்ன விஷயத்தில் கூட அவள்மீது உரிமை பொங்கி வழிந்தது அவனுக்கு. நேற்றுதான் இப்படி இப்படி பேசிவிடுவது என்று முடிவெடுதான். அதற்குள் உள்ளே கிடைக்கும் திருவளத்தான் அவளை பார்த்ததில் இருந்து உறுமிக் கொண்டு இருக்கிறான். என்னவாம்? வேணுமாம்! என்ன வேண்டுமாம்? அவள்தான் வேண்டுமாம்!

போடா போடா போக்கதவனே, இத்தனை நாள் வெட்டியா இருந்தியே? இப்போ என்ன துள்ளிக்கிட்டு வர்ற? என்று அவனுக்கு அவனே கேள்வியும் கேட்டுப் பார்க்கதான் செய்கிறான். அதற்கெல்லாம் பதில் யார்
சொல்ல போகிறார்கள்? எல்லாம் தூக்கி கடாசிவிட்டு வனிமாவை பாக்கணும் என்று உருளுகிறது உள்ளம்.

சுமுகமாக தங்கள் திருமணத்தை நடத்திக் கொள்ள வேண்டும் என எப்படியோ இத்தனை ஆண்டுகள் அமைதியாக ஓட்டியவனால், என்ன ஆனாலும் சரி அவளை மணந்தே
தீருவது என்று முடிவெடுத்த பின் ஒரு நிமிடமும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

“அதான் நீங்களே சொல்லிடீங்களே? புரிஞ்சு இருக்கும். வாங்க போலாம்” அவள் கிளம்பவும் இவனுக்கு வாய், கண்ணு, காது, மூக்கு எல்லாம் ஜொல் ஒழுக்கியது.

“போலாம் போலாம்” என்று அவள் பின்னே சிரித்து கொண்டே கிளம்பினான் மொழி.

“எங்கே போகலாம்?” பின்னால் திரும்பி கேட்டாள் வனி.

“எங்கேணாலும்”

“ம்? அப்போ வாங்க எங்க வீட்டுக்கு போலாம்“

“போலாமே. இப்போ இல்ல. அப்புறம். இப்ப அவங்க அவங்க வண்டியிலே ஏறி நிலா பார்க் போவோம். ஓகே?”

எப்படியும் அவன் வண்டியில் அவனுடன் வரமாட்டேன் என்று சொல்லி உயிரை வாங்கப் போகிறாள். அதை அவள் சொல்வதற்குள் அவன் முந்திக் கொண்டால்? ஒருவேளை நல்லது நடந்து விட்டால்?

“எதுக்கு ரெண்டு வண்டி? திரும்ப வரத்தானே போறோம்? உங்க வண்டில பிடிக்க இடம் இல்ல. சோ என் வண்டில நீங்க வாங்க”

முன் ஜாக்கிரதையாம்.

அவனுக்கும் காரை எடுத்துவரத்தான் விருப்பம். அவனுக்கும் அவளுக்கும் பிடித்த நிலா பார்க்கினுள் காருக்குள் வைத்து முகத்தோடு முகம் பார்த்து காதலை சொல்லிவிடலாம் என்று ஒரு திட்டம். ஆனால் காரில் இருவருக்கும் இடையே இடைவெளி அதிகம் இருக்குமே?

மற்றபடி அவள் முடியாது என்று சொன்னாலும் அத்தோடு விடமாட்டான் என்றாலும் வீடு வரை மட்டுமாவது கொண்டு விடுகிறேன் எனச் சொல்லி அப்படியே போகும் வழியில் ஏதாவது சரிபண்ணி விடலாம். குறைந்தது ஒரு சின்ன சலனத்தையாவது ஏற்படுத்தி விடலாம் என்பது அடுத்த திட்டம்.

அசைவ பிரியை அவள். கடைசிக்கு ஒரு பிளேட் சிக்கன் சிக்ஸ்ட்டி பைவ் வாங்கி கொடுத்து பாப்போம் என்றெல்லாம் கோக்கு மாக்காக யோசித்து இருந்தான். பின்னாளில் இதற்கும் வாங்கி கட்டி கொண்டாலும் அவனுக்கு மகிழ்ச்சிதான்.

“ஓகே. வா உன் ஸ்கூட்டியிலேயே போவோம். எனக்கும் பெட்ரோல் மிச்சம் ஆகும்”

சின்ன தூண்டில்தான். சில்வண்டு சிக்குமா பார்ப்போம் என அவள் முகத்தை சிரிப்புடன் பார்த்தான்.

கொஞ்சம் பின் வாங்கினாலும் வனி ஸ்திரமாக முடிவெடுத்து,

“ஏதோ உங்க கம்பெனிக்கு என்னால் ஆன உதவி“ என்றபடி தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டாள் வனி.

விவரம்தான் என நினைத்தாலும் அது சரிதான் என்று அவனே சொல்வான். இவனுக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயம் இப்போது இல்லைதானே? அப்படி என்றால் அவள் இத்தனை எச்சரிக்கையாக இருப்பது சரிதான்.

இவன் என்பதால் தான் கடைக்கு வருவதற்கு சம்மதித்து இருக்கிறாள். இவன் என்பதால் தான் இந்த தேநீர் உபசாரம். இவன் என்பதால்தான் உடன் வர சம்மதித்து இருக்கிறாள்.

இவளது இந்த நம்பிக்கையும் காப்பாற்ற வேண்டும். உள்ளதையும் சொல்ல வேண்டும். என்ன ஆனாலும் சரி இன்றைக்கு சொல்லிவிடுவான்.

இப்படியே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டதில் அவள் ரோஜா நிற ஸ்கூட்டி வந்திருந்தது.

“ஏறுங்க” என சொன்னபடி வனி அதில் ஏறி தலைக்கவசத்தையும் அணிந்தாள்.

அவன் உயரத்திற்கு இந்த வண்டி கொஞ்சம் குறைவாக இருக்கவும் என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்சம் முன்னே தள்ளி அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

“பயப்படாதீங்க. நல்லா வண்டி ஓட்டுவேன்” அவனை சமாதானப்படுத்திக் கொண்டே வண்டிக்கு சாவி கொடுத்து ஆரம்பித்தாள்.

“சே சே. நான் அப்படி ஒன்னும் நினைக்கலை. ஆனா பொதுவா பொண்ணுங்களுக்கு ட்ராபிக் ரூல்ஸ் தெரியாதுன்னு…”

“என்ன!”

“இல்ல. நான் சொல்லலை. பொதுவா பேசிக்கிறாங்க”

சொல்லிவிட்டு ‘வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா?’என்று அவனை அவனே கேட்டாலும் ஆரம்பித்து வைத்ததை அவன் முடித்து வைக்காமல் அவள் விடமாட்டாள் என்றுதான் அவனுக்கே தெரியுமே?

“அப்படி எத்தனை பொண்ணுங்க ரூல்ஸ் தெரியாம ஆக்சிடென்ட் பண்ணிட்டாங்க. இல்ல தெரியாமதான் கேக்குறேன், சில ஆம்பளைங்க தண்ணிடிச்சிட்டு பன்ற ஆக்சிடெண்டை விட ஒருசில பொண்ணுங்க பன்ற ஆக்சிடென்ட் கம்மிதான். நான் ஒன்னும் உங்களை மாதிரி பொத்தாம் பொதுவா சொல்லலை. ஒருசிலரைதான் சொல்றேன்”

வண்டி வேகம் எடுத்து இருந்தது.

‘உனக்கு இது தேவையா? நீ வந்த வேலை என்ன? செய்றது என்ன?’

காறி துப்பிய மனதிடம் ‘சாரி சாரி இனிமே சரியா பேசிடுவேன்’ என்று வாய்தா வாங்கினான் மொழி.

“நீ சொன்னா சரியாதான் இருக்கும் வனிமா” என்றும் சரண் அடைந்தான்.

“நீங்க ஒன்னும் எனக்காக சொல்ல வேண்டாம்” என்றவளின் பேச்சு எதற்காற்று சரியாக காதில் விழாததால் என்ன என்று அவள் காதோரம் குனிந்தான்

“இல்ல இல்ல எனக்காக சொல்ல வேண்டாம் அப்படின்னு சொன்னேன்” என மீண்டும் அவள் அழுத்தி சொல்ல அதுவும் கிரகம் அவனுக்கு கேட்கவில்லை.

“ஒன்னும் புரியல வனிமா” என இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டான். அப்போது எதிரே வேகமாக இன்னொரு இருசக்கர வாகனம் வரவும், வனி வண்டியை சடன் பிரேக் போடடாள். மொழி சரேலென்று அவள் மேல் சென்று மோதினான்.

எப்போதடா அவளைத் தொடுவோம் என்று ஏங்கி இருந்த அவன் இளமை அவன் கைகளையும் விட்டு வைக்கவில்லை. இரு கைகளாலும் அவள் இடுப்பை சுற்றி அணைத்துக்கொண்டான்.

அவனைத் திட்ட வழி இன்றி போக்குவரத்து நெரிசல் இருந்ததால் அதில் கவனம் செலுத்த வேண்டியதாகிப் போனது அவளுக்கு.

அவள் உடல் எரிச்சலைக் காட்டினாலும் அதை உணராதபடி இன்னும் அவளை அணைத்துக் கொண்டவன் அதன்பிறகு கைகளை எடுக்கவே இல்லை.

கொஞ்சம் தூரம் தள்ளி வந்தபின் போக்குவரத்தும் குறைந்து இருக்க வண்டியை மெதுவே நிறுத்திய வனி,

“சார் கையை எடுங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டே.

சொர்க்கத்தில் மிதந்து கொண்டு இருந்தவனுக்கு நிஜ உலகம் உறைக்க வெகுநேரம் ஆனது.

“என்னமா ? என்ன வனிமா? என்னடி செல்லம்” என குழைந்து குழறினான் அவன்.

“வண்டியை விட்டு இறங்குங்க சார்!”

முடிந்த அளவு அவனைத் தள்ளி விட்டு தலைக்கவசத்தையும் கழற்றிவிட்டு முறைத்தாள் அவனுடைய வனிதை.

மெதுவாக சூழ்நிலை தலையில் அடித்து உணர்த்தியதில் தன்னைப்போல் அவன் கால்கள் வண்டியில் இருந்து இறங்கி நின்றன. அவன் அவளைப் பார்க்க தடுமாறவெல்லாம் இல்லை.

எப்படியோ இப்படிப்பட்ட பேச்சை ஆரம்பிக்க அவன் இனி பயப்பட வேண்டாம். அதுதான் ஆரம்பித்துவிட்டதே? இனி சுபம் போடுவது வரை இவனுக்கு வேலை சுலபம்தான்.

“வனிமா கோபப்படாதே. நான் சொல்றதை கேளு. நீ என்னவோ இன்னைக்கு தான் நமக்குள்ள இந்த பந்தம் ஆரம்பித்ததா நினைச்சு துடிக்கிற. அதுக்கு அவசியமே கிடையாது.

இந்த நடு ரோட்டில் வச்சு சொல்றேன். உன்னை சும்மாதான் நீ படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு வந்து பார்த்தேன். ஆனால் அதே பழக்கம் தொடர்ந்து உன் காலேஜூக்கும் வந்தப்போ..என்னை விடு. என் மனசு இருக்கட்டும். அது எப்படி நாசமா போனா என்ன?

அப்போ நீ என்னை பார்த்த. கண்ணால் சிரிச்சே. அந்த சிரிப்பு.. அந்த பார்வை என்னை சுழட்டிருச்சு. என்னால் தப்பிக்க முடியல. நான் தப்பிக்க நினைக்கல. ஏன்னா என் மனசும் அதுதானே?

அதுக்கு அப்புறம் நான் நானா இல்லை. உன் அடிமையா மாறி ரொம்ப வருஷம் ஆவுது. எனக்கு விடுதலை வேண்டாம். உன் கொத்தடிமையா இருக்கதான் ஏங்கறேன். எனக்கு உன் ஒரு வார்த்தை, ஒரு பார்வை என் இந்த வேதனையை தீர்க்க போதும்.

அதை தருவியா? என்னை ஏத்துக்குவியா?”

கன்னியிடம் கையேந்தி நின்றான் காளை.

அவளுடன் அவள் வண்டியில் பயணித்த முன் நிமிடங்களுக்கு மனம் ஓடிப்போய் நின்று மீண்டும் அவை வாராதா என்று ஏங்கியது.
 
Top Bottom