• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் ராஜ வீதியில் - 13

நிதனிபிரபு

Administrator
Staff member
13

தனக்கிருந்த குழப்பதை, தன் மனதை உறுத்தும் விஷயத்தை சொல்ல ஆரம்பித்தாள் வனி.

அதாவது…

கல்லூரி படிப்பு முடிந்தவுடன் மதிவதனியின் மனம் ஏதோ ஒரு வெறுமையை உணர்ந்தது. அது என்ன என்று தேடிய போது அவன் முகம் அவள் கண்களில் வந்தது. அதுதானா என்று ஒரு இரவு முழுவதும் யோசித்துப் பார்த்ததில் அதுதான் என்று உணர்ந்து கொண்டாள் வனி.

“வனிமா! தேங்க் யூ மா!” என்று குறுக்கிட்ட மணிமொழியை கண்களால் அமர்த்த அவன் அடங்குவானா இனி? அவள் எதிரில் இருந்தவன் அருகில் வந்து பின்,

“வா. நம்ம வீட்டுக்குப் போவோம்” என்றான் ஆசையுடன்.

“சொல்றதைக் கேளுங்க. குறுக்கே பேசக் கூடாது” என்றவள் தொடர்ந்தாள். அவனும் நினைத்தது நிறைவேறிய நிம்மதியில் அவள் பேச்சைக் கேட்க ஆரம்பித்தான்.

அவள் தொடர்ந்தாள்.

அப்படி தன் நேசத்தைத் தெரிந்து கொண்டது அவளுக்கு உவகையையும் கூச்சத்தையும் ஒரே நேரத்தில் தந்தாலும் அவள் அதற்கு தயக்கம் கொள்ளவில்லை.

அவள் நேசத்தை அவனிடம் சென்று சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்தது அவள் இளம் மனது. உடனே கிளம்பி அவனை பார்க்கச் சென்றால் அவன் கம்பெனியில் அவன் நிலாக்காலம் இல்லம் சென்று இருப்பதாக தகவல் கிடைத்தது.

மீண்டும் வண்டியை திருப்பிக் கொண்டு இல்லத்துக்குச் சென்றாள் வனி. அந்த காலங்களில் அவள் மீது அவள் அப்பாவுக்கு ஒரு பயமும் இல்லை போல. எங்கு சென்றாலும் கேள்வி கேட்பதில்லை. அவளும் சொல்லாமல் வருவது இல்லை, போவது இல்லை. அன்று மட்டும் தான் வெறுமனே, வெளியே சென்று வருவதாக மட்டும் சொல்லிவிட்டு கிளம்பி வந்திருந்தாள்.

அன்று அழகான இளஞ்சிவப்பு நிற சுடிதார் அணிந்து இடுப்பு வரை இருந்த கூந்தலை ஒற்றை ஜடையாக தளர பின்னி ஒரு முழம் ஜாதி பூ வைத்து இருந்தாள் வனி. அவளின் பிறை நெற்றியில் இருந்த சின்னதான ஒரு வட்டப் பொட்டும் சந்தனக் கீற்றும் அவள் முகத்தை இன்னும் பொலிவாக்கின.

இப்படி கிளம்பி வந்தது சாதாரணமாக அவள் வெளியே செல்வது போலத்தான் இருந்தது. அதிலும் கூட அவளை பார்ப்பவர்கள் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே செல்வதை அவள் உணரவும் இல்லை. நிலாக்காலத்துக்கு சென்று தனது ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு உள்ளே கால் எடுத்து வைத்தவளை தடுத்து நிறுத்தியது ரிசப்ஷனில் இருந்த கயலின் குரல். அங்கே இருந்த சின்ன மரத்துண்டு - கயல், கோ -ஆர்டினேட்டர் என அவளைப் பற்றி சொல்லியிருந்தது. அதை வனி கவனிக்கவில்லை என்பது முக்கியமான விஷயம்.

“ஏய்! இந்தாம்மா, வண்டியை ஓரமா நிறுத்து” என இவளை அதட்டி இருந்தாள் அவள்.

“சும்மா இல்லத்தை பற்றி பேப்பர்ல போடறேன்னு மைக்கையும் தூக்கிட்டு வந்திட வேண்டியது. இவங்களுக்கு இதே வேலையா போச்சு. இவங்களுக்கு பதில் சொல்றது மட்டும்தான் நம்ம வேலையா என்ன?” கயல் சத்தமாகவே முணுமுணுத்தாள்.

‘இல்லை. நான் பிரஸ் இல்லை’ என்று சொல்ல வாய் எடுத்த வனி, கயலின் முகத்தில் தெரிந்த வெறுப்பில் அமைதி ஆனாள்.

இவள் யாராக இருந்தால் என்ன? அவளிடம் மல்லுகட்ட வேண்டிய தேவை என்ன? இப்போது இருக்கும் நல்ல மனநிலையை கெடுத்துக் கொள்ளக் கூடாது என தனக்குள் சொல்லிக் கொண்ட வனி அமைதியாக கயல் சொன்னபடி வண்டியை தள்ளி நிறுத்தினாள். இப்போதுதான் காம்பவுண்ட் போட்டு அதற்கு வெளியே வண்டியை எப்படியும் நிறுத்திக் கொள்ளுங்கள் என்றுவிட்டார்கள். அப்போது வண்டி நிறுத்தத்தையும் மேற்பார்வை செய்வார்கள் அங்கே.

வண்டியை நிறுத்திவிட்டு, வேறு யாரும் அங்கே இல்லாததால் வேறு வழி இன்றி கயலிடம் வந்து, “நான் மணிமொழி சாரை பார்க்கணும். கொஞ்சம் பேசணும்” என்று தயக்கத்துடன் கேட்டாள் வனி.

“என்ன பேசணும்?” என்று முறைப்பது தெரியாமல் முறைத்துக் கொண்டே கேட்டாலும், “நீங்க யாரு?” என்றும் தவறாமல் கேட்டாள் கயல்.

கேட்டவள் பெயர் கயல் என்று அறிய அவள் டேபிள் மீது இருந்த பெயர் பலகையைப் பார்க்கும் சின்ன வித்தை தேவைப்படவில்லை வனிக்கு. அவள் கழுத்தில் கிடந்த நூல் போன்ற வெள்ளி செயினில் கயல் என்று குட்டியாக எழுதி இருந்ததைப் பார்த்து அறிந்து கொண்டாள் அம்மணி.

அத்தோடு அவள் கேள்விக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறி, “நான்..நான் மதிவதனி. சாரை பாக்கணும்“ எனச் சொல்லிவிட்டு கயலை ஏறிட்டாள் அவள்.

“நீங்க யாராணாலும் இருங்க” என்று சொல்ல வந்த வாயை அடக்கி, “ சார்னா மணிமொழி சாரா? ஜார்ஜ் சாரா?” என இவள் குமட்டில் குத்தினாள் முன்னவள்.

“ஜார்ஜா? அவர் யார்?” திடீரென்று கேட்ட அந்தப் பெயரில் குழம்பி நின்றாள் இவள்.

“அவர்தான் இல்லத்தை ஆரம்பிச்சவர். சேர்மன். எங்க ஐயா” என்று பெருமையாக சொன்ன கயல், ‘இதுகூட தெரியாதா உனக்கு?’ எனக் கேவலமாக இவளைப் பார்க்கவும் தவறவில்லை.

அவர் ஆரம்பித்து நடத்தியதால், நடத்துவதால் தானே அவள் மணிமொழி அவளுக்குக் கிடைத்து இருக்கிறான் என்பதில் அந்த ஜார்ஜ் மீது மரியாதை பொங்கினாலும் அப்போதைக்கு அதை ஒத்திவைத்துவிட்டாலும் இவள் ஏன் தன்னை மட்டம் தட்டுகிறாள் என்று யோசித்தாள் வனி.

அந்த சமயம் ஏதோ பேசிக்கொண்டு மணிமொழியும் மதிவாணனும் அதே இல்லத்தினுள் தூரமாக இவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

இருவருமே வனியைப் பார்த்து புன்னகைத்தார்கள்.

அதில், தான் அங்கே அறிந்த முகம்தான் என்று அந்த கயலுக்கு உணர்த்தி விட நினைத்து,

“அதோ வர்றார் பாருங்க உங்க அண்ணன். அவர்கிட்ட கேட்டா என்னைப் பத்தி சொல்லுவார்” என்று மணிமொழியை காட்ட, கயல் யாரைப் பார்த்தாளோ தெரியவில்லை - “அவர் ஒன்னும் என் அண்ணன் இல்ல” என்றாள் வெடுக்கென்று.

வனி திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

“நீங்க யாரை சொல்றீங்க?” தயங்கியபடி
கேட்டாள் வனி.

“எல்லாம் அந்த நெடுமரத்தைத்தான்” என்றவள் அதற்கு மேல் ஆள் மாறி இருந்தாள்.

“சொல்லுங்க மேடம். என்ன விஷயமா வந்து இருக்கீங்க?” என்று இனிய குரலில் வினவினாள்.

‘அப்போ இவ்ளோ நேரம் பேசுனது?’

அவள் எப்படியோ போய் தொலையட்டும். வந்து கொண்டிருந்த இரண்டு பேரும் நெடுமரம் போல் தான் இருக்கிறார்கள். இவள் யாரை சொல்கிறாள்?

ஒருவேளை வனியின் அண்ணனை அவள் அண்ணன் இல்லை என்கிறாளா? இல்லை மணிமொழியை தன் அண்ணன் இல்லை என்கிறாளா இந்த கயல்?

இவள் அண்ணன் மதிவாணன் பல மாதங்களுக்குப் பின் இப்போதுதான் இங்கு வந்து இருக்கிறான். கயல் கேள்வி லட்சணத்தைப் பார்த்தால் இப்போதுதான் இங்கே வேலைக்கு சேர்ந்திருப்பாள் போல. ஆக மதிவாணனை நெடுமரம் அது இதென்று எடுத்த உடனே சொல்ல மாட்டாள் தானே? என்னதான் எடுத்தெறிந்து பேசினாலும் அவளுக்கும் ஒரு டீசன்சி இருக்கும் தானே? போதாதற்கு மதிவாணன் வனியைப் பார்த்து சிரிக்க வேறு செய்து இருக்கிறான். அப்படி என்றால் அவன் அதாவது இவள் அண்ணனை அண்ணன் என்று இல்லாவிட்டாலும் இவளுக்கு தெரிந்தவன் என்று தெரிந்து இருக்கும். அப்படி இருக்கும்போது அவனைப் பற்றி பேசி இருக்க மாட்டாள்.

இல்லத்தில் வைத்து யாரைப் பார்த்தாலும் சிரித்து வைப்பது இந்த மணிமொழிதான். அதனால் அவனை மதிக்காமல் இப்படி பேசுகிறாளோ? இல்லத்தில் வளர்ந்த அவனை அண்ணன் என்று சொல்ல அவள் விரும்பவில்லையோ?

அப்படி என்றால் அவள் - அந்தப் பெண் செல்லமாக கடிந்து கொண்டது மணிமொழியைத் தானா? ஏன்? மணிமொழி அண்ணன் இல்லை என்றால் வேறு யாராம்?

இதை அறிந்து கொள்ளாமல் தான் சொல்ல வந்ததை எப்படி சொல்லுவது? வனி அப்போதைக்கு அந்த நேசப் பேச்சை ஒத்தி வைத்தாள். அப்புறம் அதை பேச முடியாமலே போய்விட்டது.

இவள் யோசனையில் இருக்க, கயல் இவளிடம் அந்த இல்லத்தின் பணியாளாக சில கேள்விகள் இவளிடம் கேட்டு வைத்தாள்.

“என்ன விஷயமா வந்து இருக்கீங்க மேடம்? ஏதாவது டொனேஷனா? இல்லை இன்டர்வியூவா? இல்ல வேற ஏதாவது ஃபங்ஷன் இருக்கா? சார் வந்துகிட்டு இருக்காங்க. நீங்க நேர்லயே பேசிக்கலாம் மேடம்” என தத்து பித்தென்று உளறி வைத்தாள் கயல். கூடவே மெல்லிய எரிச்சல் வேறு அவள் பேச்சல் கலந்திருந்ததை வனி உணர்ந்தாள்.

‘இந்த லட்சணத்துல ரிசப்ஷன் இருந்தா இந்த இல்லம் எங்கே போய் நிக்குமோ தெரியலை’

வனி யோசித்து கொண்டு இருக்கும் போதே அவர்கள் அருகில் வந்து நின்று இருந்தனர் அந்த நெடுமரங்கள்.
புன்னகை மாறாமல் இவர்கள் அருகே வரவேற்பு பகுதிக்கு வந்த ஆண்கள் இருவரும் மீண்டும் மதிவதனியைப் பார்த்து நன்றாக புன்னகைத்தனர். வேறு வழி இன்றி அவளும் சிரித்து வைத்தாள்.

‘ரெண்டு பேரும் நெட்டையா தான் இருக்கிறாங்க. இவள் யாரை சொன்னா? இருக்கற குழப்பத்துல இது வேற எனக்கு. பேசாம நம்ம நொண்ணனை கேட்டுறலாமா?’

வனி ஒத்தையா ரெட்டையா என்று யோசிக்க, அதற்குள் ஒருவழியாக மணிமொழி, “கயல், இவங்க மதிவதனி. நம்ம வாலண்டியர். இவங்க பேமிலி அடிக்கடி இங்கே வந்து அவங்களால் முடிஞ்ச உதவி செய்வாங்க. நிறைய டொனேசன் குடுத்து இருக்காங்க.

நிறையன்னா அவங்க மனசு நிறைய. அவங்களால் முடிஞ்ச அளவு. இதுக்கு அவங்க அம்மாதான் காரணம்னாலும் இதை ஆரம்பிச்சது அவங்க அப்பா தமிழ் சார் தான்.

அவங்க பெர்த் டே கொண்டாடுறதே இங்கே பிள்ளைகளுக்கு புட் குடுக்கதான். இங்கே இவங்க எல்லோர் பிறந்த நாளும் ரெஜிஸ்டர்ல நோட் பண்ணியே வச்சு இருக்கேன். நீயும் பாலோ பண்ணிக்கோ. அப்புறம் அண்ணன்”

என்று முன்னுரை முகவுரை எல்லாம் கொடுத்தவன் போகிற போக்கில் கடைசியாக மதிவாணனை கண் காட்டி கயலிடம் சொல்ல மதிவாணனை தனக்கு அண்ணன் என்கிறானோ மணி மொழி என்று கயல் அச்சதோடு குழம்ப, தன்னை அவளுடைய அண்ணன் மாதிரி என்று கயலுக்கு சொல்கிறானோ அதே மணிமொழி என்று வனி கோபமடைய, குழப்பிவிட்ட புண்ணியவான்,

“அப்புறம் நீ என்ன இந்த பக்கம்?” என்று வனியிடம் கேட்டுக் கொண்டே, “எதுனாலும் கயல் கிட்ட கேளு. எங்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு“ என்றபடி மதிவாணனுடன் நடையைக் கட்டினான்.

அவளுடன் பிறந்த அந்தப் பாவி “அம்மாகிட்ட சொல்லிட்டு வந்தியா? சீக்கிரம் வீட்டுக்கு போ” என்ற தத்துவ
முத்தை உதிர்த்துவிட்டு அப்படியே கிளம்பி விட்டான். இருவரும் தத்தமது வாகனங்களில் ஏறி அங்கிருந்து கிளம்பினர்.

“என்ன பேசிக்கிட்டாங்க?” என்று அப்போதும் மதிவதனி கயலிடம் கேட்க, “நானும் உங்க கூட தானே இருந்தேன்” என்று வெடுக்கென மொழிந்தாள் கயல்.

சட்டென அவள் புறம் திரும்பி,

“உங்களுக்கு ரிசப்ஷன்ல என்ன டியூட்டி?” என விசாரித்தாள் வனி.

“ம்? உங்களுக்கு பதில் சொல்றது தான்” என்ற கயல், “எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு. இப்ப வந்திடறேன். டீ சொல்றேன். சாப்பிட்டுட்டு இருங்க. வந்துருவேன்”

கொஞ்சம் தன்மையாவே கயல் சொல்ல,

“அவர் என்னவோ எதுனாலும் உங்ககிட்ட கேக்க சொன்னார்? நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க?” என எரிச்சலுடன் கேட்டாள் வனி.

“வந்துருவேங்க!” என அதை விட எரிச்சல் இருந்தாலும் அமைதியாக சொல்லி விட்டு அடுத்து வனி பேசுவதற்குள் அங்கிருந்து ஓடி இருந்தாள் கயல்.

கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வனி அங்கிருந்து கிளம்பி விட்டாள். அப்போது அவளுக்கும் கயலுக்கும் ஆரம்பித்த பிரச்சனை இப்போது வரை தொடர்கிறது. அவ்வப்போது மணிமொழியை பார்க்கும் போது கயல் பற்றி மேலோட்டமா சொல்லிப் பார்த்தாள் வனி. அவன் புரிந்து கொள்ளவில்லை. அதில் எரிச்சலில் இருந்தாள் அவள்.

இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு கட்டிக்கோ ஒட்டிக்கோ என்கிறான்? முதலில் யாருக்கு யார் அண்ணன் என்பதை அந்த கயலுக்கு சொல்லி விட்டனா? எப்போது வந்து பேசினாலும் ‘பே’ என்று பார்த்துக் கொண்டு இருப்பான்! மேசையை தட்டினால் தான் அவனுக்கு உணர்வு வரும். முதலில் அவள் சொன்னதைக் கேட்டானா?

இப்போதுதான் பாய்ண்டைப் பிடித்தாள் வனி.
 
Top Bottom