• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் ராஜ வீதியில் - 6

நிதனிபிரபு

Administrator
Staff member
6

செல்வாவின் கேள்வியில் தமிழ் அதிர்ந்துவிட்டார். “ஏன் அப்படிக் கேக்கறீங்க?” என தயக்கத்துடன் கேட்டார் அவனிடம்.

செல்வா அவனது இருக்கையில் இவரைப் பார்த்து அலட்சியமாக அமர்ந்து இருந்தான். அவன் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை நெளிந்தோடியது. அது பளபளப்பான விஷப்பாம்பின் ‘வெறுட்’டென்ற ஓட்டத்தைப் போல கணத்தில் ஓடி மறைந்தது. தமிழுக்கு மொழியின் மீதான வெறுப்பு மிகுந்து இருந்ததில் அதைக் கண்டு கொள்ளத் தவறினார்.

“தெரியாதாக்கும் உங்களுக்கு? அவனுக்கு அல்பாயுசுன்னு தெரிஞ்சாதானே இந்த பரிகாரம் பலகாரம்லாம் பண்ண ஆரம்பிப்பாரு?” எள்ளலாகக் கேட்டான் செல்வா.

“ஆமா” என்று குழப்பத்துடன் பதில் சொன்ன தமிழ், “ஜார்ஜ் வில்லியம்ஸ் சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவர கன்வின்ஸ் பண்ண டொனேசன் அதிகமா குடுக்கப் போய் இன்னிக்கும் அந்த ஆசிரமத்துக்கு வாலண்டியரா காசு பணம் இன்னும் இறச்சுக்கிட்டே இருக்கேன். ஆரம்பத்துல ஓவரா ஈடுபாடு இருக்கிற மாதிரி காட்டிட்டேன். அப்புறம் இந்த வேலை எல்லாம் முடிஞ்சதும் அந்த ஆசிரம திசைக்கே ஒரு கும்பிடு போட்டு அதுங்க சங்காத்தத்தை விட்ரலாம்னு நினைச்சப்போ என் வீட்டுக்காரிக்கும் பிள்ளைகளுக்கும் இந்த சேவை கீவை எல்லாம் புடிச்சு போய் இப்போ இதே பொழப்பா போச்சு” என்று சொல்லி வந்த தமிழ், இறப்பு நடந்த வீட்டில் மாயான காரியங்கள் முடிந்த பின் வீடு மிகவும் அமைதியாக இருப்பதை வித்தியாசமாக உணர்ந்தார்.

துக்கம் விசாரிக்க, அந்த வீட்டினருக்கு உதவியாக, அடுத்தடுத்த நாள் காரியங்கள் குறித்து பேச என்று அங்கேயும் நிறைய வேலைகளை நிறைய மனிதர்கள் - அவர்கள் சுற்றமோ, நட்போ சுற்றி வந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் இங்கே அப்படி எதுவும் இல்லை. ஜம்புவின் இறுதி ஊர்வலத்தில் ஓரளவு ஜனங்கள் கலந்து கொண்ட போதிலும் அவரைப் பற்றியும் செல்வாவைப் பற்றியும் நல்லதாகவே பேசிக் கொண்டபோதும் விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடியது போல் தோன்றியது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க அது என்னவோ அந்தப் பையன் இன்னுமா இருக்கான்? என்ற செல்வாவின் கேள்வியில் குழம்பி அதிர்ந்தார் தமிழ்.

“ஆமா. அது ஒரு பெரிய கதை. அந்த பரிகாரத்துக்கு ஜம்பு சாமி தேர்ந்தெடுத்த பையன் இன்னொருத்தன். அவனைத் தான் அந்த ஆசிரமத்துக்கு கூட்டிட்டு போய் காட்டி இருந்தேன் ஜம்பு சாமிக்கு. அவனைப் பார்த்ததும் சரின்னு தோணி அந்தப் பையனை பரிகாரத்துக்கு கூட்டிட்டு வர சொன்னார் சாமி. ஆனா அவர் சொன்ன பையனுக்கு அந்த நேரம் நாங்க பூசை செய்ய இருந்த இடத்துக்கு வர முடியல. அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போயிருச்சு அப்போ. அதனால நான் சட்டுன்னு முடிவு பண்ணி அந்த மொழி பயலை இந்த பூசைக்கு கூட்டிட்டு போனேன். இதை பார்த்து ஜம்பு சாமியே என்னை திட்டினார். ஆனால் அவருக்கு வேற வழியும் இல்லை. அதனால அவனை வச்சு அந்த பரிகாரத்தை பண்ணிட்டோம். அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. அது ஒரு கல்யாணமும் இல்லை. நடந்த விஷயம் அவங்க ரெண்டு பேருக்குமே புரியாது. ஆனால் ரெண்டு வருஷமா இந்த மணிமொழி எப்படித் தான் தெரிஞ்சுக்கிட்டானோ இல்ல புரிஞ்சிகிட்டானோ என்னை போட்டு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கிறான். என் மகளை அவனுக்கு சட்டப்படி கல்யாணம் பண்ணி வைக்க சொல்றான். அது எப்படி முடியும் அவனே ஒரு அனாதைப் பயல். இப்போ இவன் பிரச்சனைல இருந்து நானும் என் பொண்ணும் வெளியே வர என்ன செய்யறது? உண்மையை மதிவதனிக்கிட்ட சொல்ல முடியாது. அது தேவையும் இல்லை. அதே நேரத்தில் அவளுக்கு ஒரு கல்யாணம் நடத்துற நேரத்துல இந்த பையன் வந்து இல்லாததும் பொல்லாததும் சொல்லி அதை நிறுத்தி பிரச்சனை பண்ணுவானோ அப்படின்னும் பயமா இருக்கு. இப்போ நான் என்ன செய்ய? அதை கேட்கத்தான் இங்கே வந்தேன். வந்த இடத்துல இப்படி ஆயிப்போச்சு. அதான் நான் அப்படியே திரும்பி போலாம்னு நினைச்சேன். மறுபடியும் நீங்க தான் ஆரம்பிச்சு வச்சு இருக்கீங்க. இப்போ நீங்க சொல்லுங்க, நான் என் பொண்ணை எப்படி அவன் கிட்ட இருந்து காப்பாத்துறது. சொல்லுங்க” என்றார் தமிழ்.

செல்வா மெல்ல சிரித்தான். பின்னர் “இப்பவும் நீங்க உங்க பொண்ணு கிட்ட இந்த விஷயத்தை சொல்ல மாட்டீங்க. அப்படித்தானே?” என்றான்.

“ஆமாம்” என்றார் தமிழ் தயக்கத்துடன்.

“ஏன்?” என்றான் செல்வா.

“ சொல்லி அவளுக்கு நிஜமாவே அவன் மேல ஏதாவது அபிப்பிராயம் வந்துட்டா?”

“ இப்ப மட்டும் வரலைன்னு நினைக்கிறீங்களா?”

“என்ன சொல்றீங்க?”

“ எதுவும் இப்ப சொல்ல முடியாது. ஆனால் உங்க வீட்ல உங்களுக்கு பிடிக்காத சம்பந்தம் கண்டிப்பா நடக்கும். அதனால ஏற்கனவே உங்க மகளுக்கு அவனை பிடிச்சிருக்கான்னு பாத்துக்கோங்க. அப்படி இல்லைன்னா உங்க மகனை கவனிச்சுக்கோங்க. ஏன்னா உங்க ரெண்டு பிள்ளைகள்ல ஒருத்தர் உங்களுக்கு பிடிக்காத கல்யாணம் பண்ணுவாங்க. இது நீங்க இங்க வந்த நேரத்தோட பலன். இதெல்லாம் சரியா தப்பா,உண்மையா பொய்யா, அப்படிங்கிறது காலத்தோட கையில இருக்கு. நான் சொன்னது நடந்தா இதை உண்மைன்னு சொல்லுவீங்க. இல்லன்னா நான் கதை விடறதா சொல்லுவீங்க. நீங்க சொல்ற எதுவும் என்னை பாதிக்காது” என்று சொன்னவன்,

“அப்ப நீங்க கிளம்புங்க. இந்த பிரச்சனையை நீங்களே பாத்துக்கோங்க. ஏன்னா இது நீங்க உருவாக்கிணது. எது எப்படி இருந்தாலும் இன்னாருக்கு இன்னாரென்று ஏற்கனவே ஆண்டவன் எழுதிட்டான். அதனால நீங்க என்ன நினைச்சாலும் செஞ்சாலும் நடக்கிறது தான் நடக்கும்” என்றவன் வாசலை நோக்கி கையை காட்டினான்.

தமிழ் தன் நிலையை நாங்கள் கொண்டு வாசலை நோக்கி திரும்பினார். அப்போது அவரது செல்ஃபோன் இசைக்கவே வலது கையால் இடது பக்க சட்டைப் பையில் இருந்த தனது அலைபேசியை எடுத்தார். அத்துடன் இன்னொரு விஷயமும் கூடவே வந்தது. அது அவர் மகளின் புகைப்படம். புகைப்படத்தில் அழகான சுடிதாரில் தலை நிறைய பூ வைத்துக் கொண்டு நெற்றியில் சந்தனமும், சிறிய சாந்து பொட்டுமாக சிரித்து இப்போதைய சூழ்நிலையை மாற்றிக் கொண்டிருந்தாள் மதிவதனி.

எங்கேயோ பார்த்துக் கொண்டு இருந்த செல்வா தற்செயலாக அந்த புகைப்படத்தை பார்த்தான். அவன் கண்கள் மெல்ல விரிந்தன. பின்னர் மெல்ல சிரித்தன. அவனால் இனி விடவே முடியாத அளவுக்கு அந்த புகைப்படப் பெண் அவனை ஈர்த்து இருந்தாள்.

அவன் உதடுகள் தானாக உச்சரித்தன. “கொஞ்சம் இருங்க. நான் உங்ககிட்ட பேசணும்” என்றன.

அலைபேசியில் கவனம் வைத்த தமிழ் “என்ன பேசணும்” என்று கேட்டுக்கொண்டே, “ஹலோ”என்று மறுமுனைக்கு குரல் கொடுத்தார். அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ, “சீக்கிரம் வரேன்” என்று சொல்லி செல்போனை அணைத்தார்.

பின்னர் செல்வா பக்கம் திரும்பி, “நீங்க சொல்லுங்க தம்பி.என்ன பேசணும்?” என்றார். செல்வா ஆழ்ந்த மூச்சு எடுத்துக் கொண்டு “உங்க பொண்ணை அந்த பையன் தொந்தரவு பண்ணாம இருக்க இன்னும் ஒரு வழி இருக்கு”என்றான்.

“என்ன வழி?” என்றார் ஆசையுடன் தமிழ்.

“அது வேற ஒன்னும் இல்லை. உங்க பொண்ணுக்கு வேற நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறது தான்” என்றான் செல்வா.

“அதுதான் எனக்கு பயமா இருக்குன்னு சொல்றேனே? அந்த சமயத்துல இந்தப் பையன் வந்து ஏதாவது உளறிட்டா? அப்போ அவங்கல்லாம் அதை நம்பலைன்னாலும் பின்னாடி என்னோட பொண்ணுக்கு பிரச்சனை வந்துட்டா நான் என்ன செய்ய?”

“இப்படி, அப்படி ஆயிட்டா? இப்படி ஆயிட்டா? அப்படின்னு குழம்பிட்டே இருந்தா எதுவும் செய்ய முடியாது. நீங்க ஒரே மனசா உங்க மகளுக்கு ஒரு கல்யாணத்தை ஏற்பாடு பண்ணுங்க. அதுக்கு முன்னே அந்த மணிமொழி - அந்தப் பையன் உங்களுக்கு வேணுமா வேண்டாமா அப்படிங்கிறதை முடிவு பண்ணிடுங்க” என்றான் செல்வா.

“இனிமேல் முடிவு பண்ண என்ன இருக்கு. எனக்கு அவனை பிடிக்கலை. அதனால கண்டிப்பா வேற பையனை தான் என் பொண்ணுக்கு பார்ப்பேன். அவளோட கல்யாண சமயம் இந்த கிறுக்கனால எந்த குளறுபடியும் வரக்கூடாது. அது ஒன்னுதான் என்னோட பிரச்சனை. அதை உங்களால தீர்க்க முடியுமா? எத்தனை தடவை சொன்னாலும் கேட்டாலும் அவன் எனக்கு வேண்டாம். இப்போ சொல்லுங்க நான் என்ன செய்யணும்?” என்றார் தமிழ்.

“ஒன்னு. அவன் வர முடியாத இடத்துல கல்யாணத்தை வைக்கணும். ரெண்டு, அவன் என்ன சொன்னாலும் நம்பாத பையனை கட்டி வைக்கணும்!”

“இந்த ரெண்டு விசயத்துக்கும் நான் எங்கே போறது?”என்றார் தமிழ் ஆயாசமாக.

“நீங்க எங்கேயும் போக வேண்டாம். அவன் வர முடியாத இடம் என் இடம் தான். அவன் என்ன சொன்னாலும் நம்பாத ஒருத்தனை நான் பாக்குறேன். பயப்படாதீங்க. அவன் நல்ல படிச்ச வேலையில் இருக்கிற, அப்புறம் உங்களுக்கு பிடிச்ச மாதிரி பையனாத்தான் இருப்பான். அப்படிப்பட்ட பையனை தேர்வு பண்ணிட்டு நான் சொல்றேன். நீங்க உங்க பொண்ணை கூட்டிட்டு வாங்க. என்றான் செல்வா.

தன் மகளின் திருமணம் தன் கையை மீறி செல்வதை உணர்ந்தார் தமிழ். அதை தடுத்து நிறுத்தும் சக்தி தனக்கு இருந்தும் அதை அவர் பயன்படுத்த விரும்பாதது அவரது துரதிருஷ்டம்.

மகளின் திருமணம் குடும்பத்தின் ஒட்டு மொத்த கொண்டாட்டம் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு சிக்கலாக மாற்ற தானாக முன்வந்து தலையை கொடுத்தார் வறட்டு சுய கவுரவமும், அறிவீனமும் இன்னும் ஏதோ ஒன்றும் நிறைந்த தமிழ்.

“இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது.நான் இதை என்
வீட்டுல சொல்லி அவங்களையும் கூட்டிட்டு வரலாமா?” என்றார் தமிழ்.

“இல்லை. அதுவும் சரி பட்டு வராது. உங்க பொண்ணு கல்யாணத்தை உங்க விருப்பப்படி முடிச்சுட்டு அப்புறமா நீங்க வேற ரிசப்ஷனோ ஏதோ ஒன்னு வச்சுக்கோங்க. ஆனா மூணாவது மனுஷங்க இங்க வரக்கூடாது” என்றான் செல்வா.

பெற்ற தாயையும், உடன் பிறந்த சகோதரனையும் மூன்றாவது மனிதன் என்றவன் தன்னை மட்டும் எப்படி விட்டு வைத்தான் என்று யோசிக்காமல் போனார் தமிழ்.

மீனுக்கு போட்ட தூண்டிலை போல தான் தான் அவனுக்கு என்ற கணக்கு தெரியாத கணக்குப்பிள்ளை ஆனார் தமிழ்.

rஇந்த பரிகாரம், பூசைகள், புண்ணாக்குகள் அனைத்தையும் விட்டுவிட்டு காட்டு நாயின் துணையுடன் காட்டு வயல்களை பராமரித்துக் கொண்டு மிச்ச காலத்தை அமைதியாக ஓட்ட நினைத்த செல்வாவின் மனதை பழையபடிக்கு மாற்றி இருந்தாள் மதிவதனி தனது புகைப்படத்தின் மூலம்.
 
Top Bottom