• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சின்னா 'தி ரோமியோ' - 18

STN - 39

Member
சின்னா - 18

“அன்னைக்கு அப்படியொரு கல்யாணத்தை ஏன்‌ மாமா பண்ணின?”

சின்னா ஊட்ட ஊட்ட சாப்பிட்டுக் கொண்டிருந்த அன்பிலரசி பொய்க்கோபம் கொண்டாள்.

“நீ எங்க இருக்க, சாப்பிட்டியா, தூங்கினியான்னு எதுவுமே தெரியாம உன் மாமன் மட்டும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழ்வேன்னு நீ எப்படி அன்பா குட்டி தப்புக் கணக்குப் போட்ட!" அடுத்த வாய் ஊட்டினான்.

"எனக்கு அந்தக் கல்யாணம் பிடிக்காம நான் சொன்னாமாதிரி மறுநாள் செத்திருந்தா என்ன பண்ணிருப்பியாம்?” விடவில்லை அவள்.

அதைக் கண்டுகொள்ளாமல் அவன் அடுத்த வாய் ஊட்டப்போக, “சொல்லு …சொன்னாதான் சாப்பிடுவேன்” அடம்பிடித்து முகத்தைத் திருப்பியவளின் மண்டையில் செல்லமாய் கொட்டினான் சின்னா.

“ஆ…‌அவுச்! இந்த பழக்கத்த இன்னும் விடலியா மாமா” வலியில் அவள் தலையைத் தடவ,

“செத்திருக்க மாட்டடி கிறுக்கச்சி! நான் கல்யாணம் பண்ணது உன்னோட தேன்மதியாச்சே!" என்று சிரித்தான்.

"கேடி மாமா நீ!”

"ஏதே.. து.. பதினைஞ்சு நாளில் கல்யாணம்னு நெருக்கடில நிறுத்தி ஓடவிட்ட நீங்க புத்திசாலி நான் கேடில்ல!”

கேட்டபடி சாப்பிட்டு முடித்தவளின் இதழ்களை ஈரக்கையால் துடைத்துவிட, முகத்தை அவன் சட்டையின் கைப்பகுதியில் தேய்த்து துடைத்தாள் அவள்.

மென்மையாய் சிரித்தான். அவனின் அன்பாகுட்டி இன்னும் மாறிவிடவில்லையே!

அவனின் கனிவான பார்வையே அதைச் சொல்லிவிட, “நீ மட்டும் கொட்டுறதை விட்டுட்டியா என்ன?" முகத்தைச் சுருக்கி பழிப்புக் காட்டினாள் அவள்.

நதி தன் பயணத்தில் தடையிட்ட பாறையால் கிளையாகப் பிரிந்தாலும் அதன் இலக்கு கடல் அல்லவா! அதுபோல் இருவரின் பயணங்கள் வெவ்வேறானாலும் இலக்கு ஒருவர்மீது மற்றொருவர் கொண்ட அன்பன்றோ! அவர்களுக்குள் எதுவும் மாறிவிடவில்லை.

“ஷ்..ஷ்"

கதவருகில் கேட்ட மெல்லிய ஒலியில் திரும்பினான் சின்னா. வாயிலில் நின்றபடி கையிலிருந்ததைக் காட்டி கண்களால் கெஞ்சியது இளஞ்சிட்டொன்று.

அவனும் கண்களால் ஜாடை காட்ட, “அப்பாவுக்கும் பொண்ணுக்கும் எனக்கு தெரியாம என்ன இரகசியம்?” என்றாள் அன்பிலரசி திரும்பிப் பாராமலே.

“ஒன்னுமில்லயே… ஒன்னுமில்லயே…” அவசரமாய் மறுத்த பாவை கையை பின்னால் மறைத்தது.

“வாடி இங்க!”

அன்பிலரசியின் மிரட்டலில் பாவை கட்டிலின் முன்னால் வந்து நிற்க, "கையைக் காட்டு” என்றாள் பெரியவள்.

தலையை ஆட்டி மறுத்த பாவை அவள் முறைக்கவும், தயங்கி கையை நீட்ட, எதிர்பாரா நொடியில் கையை கீழிருந்து மேலாக தட்டிவிட்டாள் அன்பிலரசி.

“உங்க அப்பா என்கூட இருக்கிறவரை எனக்கு இதெல்லாம் தேவையே இல்ல"

தன்மேல் பொழிந்த மாத்திரை மழையில் கையை விரித்து பூரிப்புடன் நனைந்தவளை தந்தையும், மகளும் ஒருசேர முறைத்து நின்றனர்.

“எப்படிப்பா இவள வளர்த்தெடுத்தீங்க? அவ்ளோ சேட்டை” சின்னவள் கோபமாகத் திரும்பி தகப்பனுடன் சண்டைப் பிடித்தாள்.

தாய்க்கு தெரியாமல், ‘தான் பார்த்துக் கொள்வதாய்’ விழிகளால் கெஞ்சி மகளை சமாதானப் படுத்தினான் அவன்.

“என் மாமா வளர்ப்புக்கு என்னடி குறைச்சல்"

சரிக்கு சமமாய் மகளிடம் சண்டைக்கு நின்றவளிடமும் சின்னா, “அன்பா குட்டி” என செல்ல அதட்டல் போட,

“ஆமாமா‌‌.. குட்டின்னு கொஞ்சுங்க! நீங்க வந்தப்புறம் இன்னும் சேட்டை கூடிப்போச்சுப்பா" என்று அதற்கும் புகார் படித்தாள் மகள்.

"எங்க அப்பாவ பாரு! நீயும் நானும் ஆளுக்கொரு கையில ஊஞ்சலே கட்டி ஆடலாம். அவ்ளோ திடகாத்திரமா உடம்ப வச்சிருக்காங்க. நீயும் தான் இருக்கியே…” மகள் வசைபாட,

“அது ஒன்னுமில்லடா. உங்கம்மா அவளோட சின்னுவ இந்த சின்னாகிட்ட மட்டும் தேடி தேடி ஓய்ஞ்சு போய்ட்டா…

ஆனா நான்! பார்க்கிற பொண்ணுங்க கிட்ட எல்லாம் என் அன்பாவ தேடினேன்” என்று சொல்லிவிட்டு சிரித்தவனை, தாயும் மகளும் ஒன்றாய் இடுப்பில் கை வைத்து முறைத்தனர்.

இருவரின் முறைப்பில் “என் அன்பாவோட மனச சொன்னேன் பக்கீகளா" என்று அவசரம் அவசரமாய் கைத்தூக்கி சரண்டர் ஆனது அந்த கம்பீர குழந்தை.

“அந்த பயம்" என்று சின்னவள் தந்தையை விரல் நீட்டி மிரட்ட, பெரியவள் கண்கொட்டாமல் இருவரையும் இரசித்திருந்தாள்.

கம்பன் அவன் காவியங்களில் வடித்துவைத்த கற்பனைப் பெண் சித்திரம் நேரில் உருகொண்டு வந்ததோ எனும் மாயை தோன்றும் பேரழகி.

அவள் சிவமதி! சின்னாமீது அன்பிலரசி கொண்ட காதலின் சாட்சியாய் பெயரைக் கொண்டவள். கடந்தாண்டு மருத்துவம் முடித்த இளம் மருத்துவர்.

வெள்ளை மருத்துவச் சீருடையில் வானத்து நிலவொன்று மதிமயங்கி மண்ணில் இறங்கியதைப் போலிருந்த மகளைக் கண்டு பூரித்தது தாயுள்ளம்.

இருவரும் சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை அவள் அள்ளிக் கட்டிக்கொண்டு வெளியேற,

“ஷிவு, நீ இங்க வந்தத யாரும் பார்த்திடலையே?" என்றாள் அன்பிலரசி.

“பார்றா…!" என தாயிடம் திரும்பினாள் சிவமதி!

"இத்தனை வருஷம் எங்கப்பாவ அலைய விட்டப்போ எங்க போச்சி இந்த அக்கறை சர்க்கரை எல்லாம்…

அதெல்லாம் உன் புருஷன ஈ எறும்பு தூக்காம நான் பார்த்துப்பேன்” என்றவளோ,

"ரொம்பத்தான்" என்று இடுப்பையும் கையையும் ஒருசேர ஆட்டி பழிப்புக் காட்டிச் சென்றாள்.

அவளையே சிரிப்புடன் பார்த்திருந்த அன்பிலரசி,

“ஏன் சின்னு, இவ உன்னை மாதிரியா என்னை மாதிரியா?" என்று நாடியில் கைக்குற்றி அப்பாவியாய் வினவ,

“அடிங் கழுத…” என்று சிரித்து கை ஓங்கியவனிடம்,

"ரொம்பத்தான்" என்று மகளைப்போலவே இடுப்பையும் கையையும் ஆட்டி பழிப்புக் காட்டியவளில் கண்ணில் நீர்வரச் சிரித்தான் சின்னா.

கூடவே அவனுக்கு தான் வார்த்தெடுத்த இன்னுமொரு மகளின் நினைவில் கண்கள் கசிந்தது.

சின்னாவினுடன் தன் வாழ்வை பிணைத்துக்கொண்ட தேன்மதி எஞ்சிய வாழ்வில் புது உலகத்தைக் கண்டாள்.

சின்னாவின் பெற்றோரான திலகவதியும் சிவச்சாமியும் தன்னைப் பார்த்தே மகனை நினைத்து நெக்குறுகிப் போவார்கள் என்று கருதியவள், தான் தாய் வீட்டிலேயே இருந்து கொள்வதாக சின்னாவிடம் கூற,

அவளின் எண்ணம் புரிந்தாற்போன்று மெல்ல அவள் தலையைக் கலைத்தவன் மென்சிரிப்புடன் சம்மதித்தான். சற்றும் சங்கோஜமின்றி வீட்டோடு மாப்பிள்ளையாக வந்தவனைக் கண்டு அவள்தான் கண்கள் கலங்கிப் போனாள்.

பெயருக்கு கல்யாணம் என்ற அவளின் உள் எண்ணத்தை தவிடுபொடியாக்கி உள்ளன்போடு வந்து நின்றவனை காலத்திற்கும் கலங்க வைக்கக் கூடாதென அக்கணமே உறுதி பூண்டவள், அன்பிலரசிக்கான அவனின் உள்ளத் தேடலில் இடையிடாமல் உறுதுணையாய் நின்றாள்.

வீட்டையே உலகமாகக் கொண்டவளை அவளுக்கென வடிவைத்த சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு ஊரையே வலம்வர வைத்தான் சின்னா.

காடு, மலை, ஊரணி, வாய்க்காலென அனைத்தையும் அவள் விழிகளுக்கு விருந்தாக்கினான். முடிந்த இடங்களில் சக்கர நாற்காலியும், சக்கர நாற்காலி நுழையாத இடங்களில் கைகளில் அள்ளிக் கொண்டான்.

இதுவரை அன்பிலரசி மட்டுமே அவளுக்கான உலகத்தை வீட்டுக்குள் கொண்டு வந்திருக்க, திடிரென அவள் காணாமல் போனதில் உடைந்தது சின்னா மட்டுமல்ல. அவளும்தானே!

அன்பிலரசி மணம்புரிந்து போனபோதே தன்னைப்போலவே உருக்குலைந்த தேன்மதியின் தவிப்பை அறிந்திருந்தவன் திருமணம் என்று வந்தபோது தயங்காமல் தேன்மதியை தாங்கிக்கொண்டான்.

தாயை தொலைத்த கன்றுகள் போல் தங்கள் அன்பின் இளவரசியை தொலைத்த இரு உள்ளங்கள் உடலால் அல்லாது அன்பால் தங்களுக்கான வேறு உலகை சமைத்துக் கொண்டன.

வயலில் வேலை செய்யும் நேரங்களில்கூட மரநிழலில் சக்கரநாற்காலியில் தேன்மதியை உட்காரவைத்தான்.

சில நேரங்களில் “போரடிக்குது” என்றவளை வயலில் களை எடுப்பவர்களை மேற்பார்வையிடச் சொன்னான்.

மற்றுமொரு நேரம் தேங்காய் பறிப்பவர்கள் மூட்டையை எண்ணச் சொல்லி வேலை வாங்கினான். வேலை செய்யாதவர்களை சத்தம்போடச் சொல்லி அவளின் உயரத்தை உணரவைத்தான்.

‘இவளால் என்ன பிரையோஜனம்’ என்ற சின்ன வயதிலிருந்து மற்றவர்கள் கேலி பேச ஒடுங்கியிருந்தவள், முதல்முறையாய் தன் பிறப்பை எண்ணி கர்வம் கொண்டாள்.

அவளால் என்ன முடியுமென வார்த்தையால் அல்லாது செயலால் செய்து காட்டினான் சின்னா.

ஒருமுறை தன்னை மீறி ‘சின்னா மாமா’ என்றழைக்க வந்த தேன்மதி, அவன் உடல் இறுகுவதைக் கண்டு ‘சின்னா மா’ என்றதோடு நிறுத்திக் கொள்ள…

சில நிமிடங்கள் பின் “உனக்கு எப்படி கூப்பிடனுமோ கூப்பிடு" என கனிவாய் சொன்னான்.

"அந்த மாமா எனக்கு வேணாம். அதை அந்த கிறுக்கச்சியே வச்சிக்கட்டும். எனக்கு என்னோட இன்னொரு அம்மா போதும்” உதட்டை வளைத்தவளின் தலையைக் கலைத்து சிரித்தான்.

அன்றிலிருந்து அவளுக்கு மட்டும் சின்னாப்பா. .

தாய்க்கு தாயாய் நின்று அவளை பராமரித்தவன், அவனைக் கவனித்துக் கொண்டானா?
தன் அன்பா குட்டி சாப்பிட்டிருக்குமா? பணத்திற்கு என்ன செய்வாள்? துரத்திய கேள்விகள் ஒருநாளும் அவனைத் தூங்கவிட்டதில்லை.

திருமணம் முடித்தால் தன் அன்பா திரும்பி வந்துவிடுவாளென அவன் எதிர்பார்ப்பை கடந்த அடத்தடுத்த நாட்களும், மாதங்களும் பொய்யாக்கியிருக்க, உள்ளுக்குள் உடைந்து வெளியில் இரும்பாய் தன்னைச் செதுக்கிக் கொண்டான்.

ஒருவேளை தான் மணமுடித்து நன்றாக வாழ்ந்தால் திரும்பி வரலாமென நினைத்திருப்பாளோ! என்றும்கூட நினைத்திருக்கிறான்.

ஆனால் அவனால் இன்னொரு வாழ்க்கையில் பொருந்த முடியுமா? விரக்தியாய் சிரித்தான். அவள் மணமுடித்து போனபோதுகூட அப்படியொரு வாழ்வை அவனால் நினைத்துப் பார்க்க முடிந்ததில்லையே!

தன் அன்பாகுட்டியின் உலகம் தான்தான் என முட்டாள்தனமாய் நம்பியிருந்தவன் அவள் திரும்பியே வராததில், அவன்தான் அவளே உலகம் என வாழ்ந்திருக்கிறான் என்று புரிந்தபோது அடங்கா கோபம் கொண்டான்.

தேன்மதியை கவனித்த நேரம்போக முழுநேரமும் தன் பயிர் ஆராய்ச்சியில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.

உடல் தன்னை மீறி பசிக்கு கெஞ்சியபோது உண்டான், அதுவே அலைந்து களைத்தபோது உறங்கினான்.

உண்மையில் அவன் சுய உணர்வோடு இருப்பது தன் அருகாமையில் மட்டுமே என்பதை புரிந்து வைத்திருந்தாள் தேன்மதி.

தன்னைக் கவனித்துக் கொள்ளும் செயல்களே அவனை உயிர்ப்புடன் நடமாட வைக்கின்றன என்பதையும் அறிந்து கொண்டாள்.

தான் இல்லையெனில் நடைபிணமாய் செல்லரித்துப் போவானோ? என்று எண்ணியவளும், ‘இப்படி ஒரு அன்பை தொலைத்துவிட்டு எங்கடி தொலைந்து போனாய்’ என அனுதினமும் அன்பிலரசியை திட்டித் தீர்த்தாள்.

அவனின் உயிர்பில்லா தேடல் தொடர, அதற்கும் ஒருநாள் உயிர் கொடுத்திருந்தாள் அவனின் இராட்சசி.

அதே பத்திரிக்கையில் அவனின் பிறந்தநாள் வாழ்த்து. அவனின் அன்பிலரசி பெயரில்.

முகம்மலர விழுந்தடித்து பத்திரிக்கை அலுவலகம் ஓடினான்.

கையெழுத்திட்ட காசோலையுடன் போஸ்ட் வந்ததாகவும், உங்களது பிறந்தநாள் வாழ்த்து பிரசுரிக்க வந்தால் தவறாது பிரசுரிக்க வேண்டுமென்பது தங்கள் முதலாளியம்மாவின்/ அன்பிலரசியின் தோழியின் உத்தரவு என்றும் கூற, அந்த போஸ்ட்டில் குறிப்பிட்ட முகவரிக்கு ஓடினான்.

பலகாலமாக பூட்டப்பட்டிருந்த வீடே அவனை வரவேற்றது. போலி முகவரியில், ‘தன் அன்பாவுக்கு இவ்வளவு தெரியுமா’ என்றிருந்தது.

‘எங்கோ உயிருடன்தான் இருக்கிறாள்’ கோபத்தில் விழிநீர் கசிய ஊர் திரும்பினான்.

அவள் இருக்கிறாள் என்ற நினைவே அவனை அப்போதைக்கு சமாதானப்படுத்தியது.

அதைத்தான் அவளும் விரும்பினாளோ? வருடம் தவறாமல் வாழ்த்துச் செய்தியில் அவனை உயிர்ப்புடன் வைத்தாள்.

ஒருநாள் கண்ணாடியில் தன்னை கவனித்துக்கொள்ளும் சின்னாவையும் தன்னையும் ஒன்றாகக் கண்ட தேன்மதி, “சின்னாப்பா நமக்கொரு குழந்தை இருந்தா நல்லாருக்கும்ல… குடும்பமா" என்றாள்.

அவளின் ஈர தலையை துவட்டிக் கொண்டிருந்தவனின் கைகள் ஒருநிமிடம் அசைவற்று நிற்க, “நீங்க, நான் நம்ம பாப்பா ஒரு போட்டோ வேணும்" சின்னாப்பா என்றவளோ,

"நாம தத்தெடுக்கலாமா சின்னாப்பா” என்றாள் கெஞ்சலாக.

பதிலின்றி அவள் தலையைக் கோதிவிட்டுவிட்டுச் சென்றவன் அடுத்த மாதத்தில் ஒருநாள் அவள் அமர்வதற்கு ஏற்றார்போல் காருடன் வந்து நின்றான்.

சட்ட சிக்கல்களை சமாளித்து பெங்களூருக்குஅழைத்துச் சென்றவன் ஒரு ஆசிரமத்தில் இறக்கிவிட்டு, “நீயே தேர்ந்தெடு மதிம்மா" என்று விலகி நிற்க, மைதானத்தில் துள்ளித்திரிந்த வெள்ளை உள்ளங்களில் அவளிதயம் கொள்ளை போனது.

அதில் ஒரு பட்டுப் பூவை அவள் கைக்காட்ட, மார்பில் கைக்கட்டி வேடிக்கை பார்த்திருந்தவன் மென்னகை புரிந்தான்.

அந்தச் சிட்டுவைத்தான் அவள் தேர்ந்தெடுப்பாள் என்ற அவனின் கணிப்பை பொய்யாக்கவில்லையே அவள்.

‘ஏன்’ என்ற கேள்வியுடன் தோன்றிய இளநகையில் புருவத்தை உயர்த்தியவனிடம்,

“மத்த குழந்தைகளுக்கு நல்ல பேரண்ட்ஸ் கிடைப்பாங்க சின்னாப்பா. ஆனா இவளுக்கு, என் சின்னாப்பா மாதிரி அப்பா கிடைச்சா இவளும் என்னைப்போல மகிழ்ச்சியா இருப்பா” என்றாள்.

அவன் அந்தக் குழந்தையை அழைக்க, சற்றே கால் தாங்கி தாங்கி அவர்களை நோக்கி நடந்து வந்தது அந்தச் சிட்டு.

தன் முப்பது வயதில் 12 வயது குழந்தைக்கு தந்தையானான் சின்னா. இளவரசி என புதுப் பெயரிட்டு இளவரிசியாகவே வளர்த்தான்.

தேன்மதியோடு சேர்த்து தத்தெடுத்த மகளையும் கண்ணுக்கு கண்ணாய் கவனித்துக் கொண்டான். பள்ளிக்கு அழைத்துச் செல்வது, அவளின் காலுக்கு சிறப்புச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது மீதி நேரங்களில் அவனின் ஆராய்ச்சியில் விளைந்த பயிர் குழந்தைகளென நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான்.

“இவளை கவனிச்சிக்கவே ஒன்பது பேர் வேணும், இதுல இன்னொன்னையும் அவன் தலையில கட்டுறா” மண்ணுக்குட்டி என்ற மனோரஞ்சிதத்தின் தாய் நேரடியாகவே அவள் காதுபட பேச, கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை தேன்மதி.

தன் அண்ணன் பாண்டிக்கு அத்தனை தகுதியிருந்தும் தன்னைக் கவனிக்க வேண்டி வருமோ என்றே பெண்ணைத் தர மறுப்பவரை ஒரு புழுவாகக் கூட மதிக்கவில்லை அவள்.

மற்றும்கூட தன்னை சுமக்கும் பாரம் மட்டுமே சின்னாவை அன்பிலரசியின் நினைவிலிருந்து மீட்டெடுக்கிறது எனும்போது அப்படியொரு கூடுதல் பாரத்தை விரும்பியே அவன் முதுகில் ஏற்றினாள்.

தான் இல்லையென்றாலும் தன்னவன் வாழ பிடி வேண்டுமே!

ஆனால் சின்னா மறுவாரமே மனோரஞ்சிதத்தை தூக்கிவந்து பாண்டியின் மனைவியாக்கினான். முறைப்படி பெண் கேட்க, “இப்போ இன்னொரு நொண்டியும் கூட சேர்ந்துக்கிச்சி" என்றவர் ஏளனம் பேச, கோவிலில் திருமணத்தை முடித்துவிட்டான்.

எகிறிக்கொண்டு வந்தவரிடம், ‘நான் இருக்கிறவரை இளவரசியையும், தேன்மதியையும் கவனிக்கிற பொறுப்பு உங்க மகளுக்கு வராதென’ மூஞ்சிலடித்தாற்போல் சொல்லி அனுப்பினான்.

தேன்மதியின் கணிப்பு பொய்யாகவில்லை. அதிக மகிழ்ச்சியோ என்னவோ விரைவிலேயே ஆண்டவன் அவளை அழைத்துக் கொண்டான்.

கூடவே சின்னாவின் தாயும் தந்தையும் ஒருவர் பின் ஒருவராக இறைவனடிச் சேர, சின்னாவை இழுத்துப் பிடித்தது இளவரசியும் வருடம் தவறாத வாழ்த்துச் செய்தியுமே!

தகப்பனின் காதலையே கதையாகச் சொல்லி நித்தமும் தேன்மதி மகளை உறங்க வைத்திருக்க, தகப்பனின் செல்லப் பிள்ளையானாள் இளவரசி. அன்பிலரசியையும் இன்னொரு அன்னையாக புகைப்படத்தில் அறிமுகப்படுத்தவும் தவறவில்லை அவள்.

தகப்பனின் வாழ்வையே பாடமாகக் கேட்டு வளர்ந்தவள், வளர்ந்ததும் தகப்பனின் பயிர் வளர்ப்பையே விருப்ப பாடமாகக் கொண்டாள்.

ஆராய்சி படிப்பிற்காக வெளிநாடு சென்றவள், காதல் வயப்பட, மண்ணையும் தன் பெண்ணையும் உயிராகக் கொண்ட தந்தை அயல்நாட்டில் வாக்கப்பட மறுப்பானோ என்று அஞ்ச, காதலன் அறிவுரைப்படி மணம்முடித்து பலமாதங்கள் கடந்தே தந்தையிடம் சொன்னாள்.

கோபப்படவில்லை சின்னா, நேரில் சென்று பார்த்து வந்தவன் கர்ப்பமாக இருந்தவளை அந்த வருட திருவிழாவிற்கு அழைத்தான். மாமனார் கணவருடன் வந்தாள் ஏழு மாத நிறை வயிறுடன்.

ஊரைக்கூட்டி சீமந்தம் செய்து விருந்து வைத்தான்.
“சீர் செலவு இல்லாம பொண்ணு கல்யாணத்த முடிச்சிப்புட்ட” பெருசு ஒன்று வம்பு பேசியது.

"ஒரே பொண்ணுதான செய்யாம எங்க போறான்" மற்றொருவர் பேச,

“என் பேரக்குழந்தைக்கு என் நாட்டிலேயே எக்கச் சக்க சொத்திருக்கு" என்று பெருமை பேசிய இளவரசியின் மாமனார்,

“ஆனா தாய் மண்ணுன்னு வேணுமில்ல!” என்று பூடகமாய் சிரித்தார். அவர் புலம்பெயர்ந்த இந்திய குடிமகன். புருவம் சுருக்கினான் சின்னா.

“நீங்க இங்க வந்து செட்டிலாகப்போறதில்ல. என் மண்ணு உங்களுக்கு அவசியமற்றது. என் பெண்ணுக்கு சேர வேண்டியது பணமாய் சேரும்"

திண்ணமாய் தன் எண்ணத்தை சொல்லிவிட்டவனுக்கு மனதில் சிறு உறுத்தல்.

கொஞ்ச நாட்களாகவே தன்னையும் தன் வயல்களையும் யாரோ கண்காணிப்பதுபோல் அவ்வப்போது உணர்ந்திருக்கிறான்.

மறுநாள் அவன் உறுத்தல் பொய்யில்லை என்பது போல் அவன் பார்த்து பார்த்து வளர்தெடுத்த கருடன் சம்பா முழுவதும் இரவோடு இரவாக தீக்கிரையாகியிருக்க அதிர்ந்து நின்றான்.

வளர்த்த மகளே கொள்ளிக் கட்டையுடன் பகையாளியாய் நின்றாள். “என் பிள்ளைக்கு இல்லாத சொத்து இருந்தெதுக்கு"
அறுவடைக்கு நின்ற வயலை தீயிட்டு எரித்த கையோடு தந்தையிடம் நெருப்பாகக் நின்றவள், “இனி ஒருநிமிடம்கூட இங்கிருக்கமாட்டேன்" என கணவனையும் மாமனாரையும் அழைத்துக் கொண்டு கிளம்பியவளை ஊரே அதிர்ந்துதான் பார்த்திருந்தது.

கிளம்பும் முன் சின்னாவிடம், "அதான் அம்மா இறந்ததும் பொண்ணுங்களா பார்த்து பார்த்து சுத்தறீங்களாமே.. வாரிசுக்கு வேற ஏற்பாடு பண்ணிட்டீங்களோ! நான் வளர்ப்பு பெண்தானே” இகழ்ச்சியாக பேசியவள்,

“எங்க அம்மா படத்தைக்கூட உங்களுக்கு தொடைச்சி சாமி கும்பிட முடியலல்ல” என்று தேன்மதியின் புகைப்படத்தை கோபமாய் சுட்டிக் காட்டியவள் அன்றோடு தகப்பனுடனான உறவை முறித்துக் கொண்டாள்.

“சண்டை போட்டு போனவங்க அதுக்கப்புறம் சின்னாவ தொடர்பு கொள்ளவேயில்லையா?" மூதாட்டி சொன்னதை சண்முகவேல் பாண்டியிடம் உறுதிப்படுத்தக் கேட்டான் அரவிந்தன்.

“குழந்தை பிறந்ததைக்கூட அவனுக்கு சொல்லல" நண்பனை நினைத்து கலங்கினார் சண்முகவேல்.

“நீங்களும் போன் பண்ணலையா” மணிகண்டன் கேட்க,

“சொத்துக்காக வளர்த்தவனையே தூக்கிப் போட்டவளுக்கு நாங்க எம்மாத்திரம்" என்றார் அவர்.

இளவரசியின் எண்ணைக் கேட்டு வாங்கிய அரவிந்தனின் புருவம் சுருங்கியது.

சின்னா வருவான்...
 

Gowri Karthikeyan

Well-known member
ச்சீ.....இப்படி எல்லாரும் அவனுக்கு துரோகம் செய்யறவங்களாவே இருக்காங்க🤦🤦🤦🤦🤦
அவனும் தான் இவளோ தாக்குவான்?????
இந்த பிள்ளை இப்படி இருக்கும்னு நினைக்கவே இல்லை
 
Top Bottom