• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சின்னா 'தி ரோமியோ' - 20

STN - 39

New member
சின்னா - 20

“இதோ போன் பேசிட்டு வரேன்னு சொல்லிட்டு போன புள்ளைய காணோமே? மணிகண்டா உங்கண்ணனை எங்கலே?" அரை தூக்கத்திலிருந்த மணிகண்டனை உசுப்பினார் பார்வதி.

அதேநேரம் அவர்களின் தேடலுக்கு உரியவனோ மரகதத்தின் முன் நின்றான்.

"உங்க பொண்ணு எங்க இருக்காங்க?”

தன்னை நேருக்கு நேராக பார்த்து நின்றவனில் முதலில் அதிர்ந்தாலும் அசையாது நின்றார் மரகதம்.

“உங்களுக்கு தெரியாம அவங்க எங்கயும் போயிருக்க வாய்ப்பில்ல. நர்சு லட்டர்லாம் நீங்க கட்டிவிட்ட கதையா இருக்கணும். இல்ல விசாரிக்கும்போது சின்னாவ நம்ப வைக்க நீங்களும் உங்க பொண்ணும் சேர்ந்து ஜோடிச்சு உண்மையாவே நர்சு மூலம் நடத்திப் பார்த்த நாடகமா இருக்கனும்” என்றவனோ,

“உங்க கணவர் கண்களில் இருக்கிற ஏக்கம்கூட ஒரு தாயா உங்களுக்குள்ள இல்லயே" என்றான் ஏளன குரலில்.

“எப்பயோ போனவளுக்காக நித்தம் ஒப்பாரி வைக்கவா முடியும்” மரகதத்திடமிருந்து அலட்சியமாய் வந்து விழுந்தது பதில்.

"சபாஷ்! இத்தனை வருஷத்துல பேச தெரியாத மரகதத்துக்கு நல்லா பேச கத்துக்குடுத்துருக்காங்க போலவே உங்க பொண்ணு” என்றான்.

அவள் பேசினாளா? அன்னையென்று ஆசையாய் என்று பேசியிருக்கிறாள்!

அனைத்து உயிர்களும் ஒன்றே என்பதுபோல் புத்தனாய் கல்லையும் மண்ணையும் பார்ப்பது போலல்லவா பார்த்து வைத்தாள். விரக்தி சிரிப்பொன்று மரகதத்தின் உதடுகளில் நெளிந்தது.

அந்த விரக்திதானே இத்தனை வருடங்களில் அவரை கல்லாய் செதுக்கியும் இருக்கிறது.

புத்தன் கண்களிலாவது கருணை வழியும்! மகளின் உயிர்ப்பற்ற கண்களில் அவர் எதையும் கண்டதில்லையே!

அவரின் மௌனத்தில், “மூஞ்சிலடிச்சா மாதிரி பேசிப் பேசி உங்கள நெருங்க முடியாதபடி சின்னாகிட்ட நடிச்சா மாதிரி என்கிட்ட நடிக்க முடியாது. சொல்லுங்க!” என்றான் சிறு அதட்டலாய்.

“எனக்கு தெரியாது”

திண்ணக்கமாய் சொன்னவரின் பார்வை கணவர் இல்லாததையும் உறுதிப்படுத்திக்கொள்ள அதையும் கவனித்தான்.

"தெரியாமதான் எங்களை கண்காணிக்கச் சொல்லி சாத்தப்பனை அனுப்பி வச்சீங்களா?”

ஊருக்கு வந்ததிலிருந்து சாத்தப்பன் அங்கும் இங்குமாய் கண்ணில் பட்டாலும் அரவிந்தனுக்கு பெரிதாய் தோன்றியிருக்கவில்லை.

ஆனால் இன்று ஊர் எல்லைவரை தொடர்ந்து வண்டியில் வந்தவனை சந்தேகத்தோடு கவனித்துக் கொண்டேதான் வந்தான்.

அந்நேரம் பெரியாத்தா கேட்ட கேள்வியில் பொறிதட்ட வண்டியை நிறுத்திவிட்டு யாருக்கும் தெரியாமல் சாத்தப்பனை மடக்க, அவன் மரகதத்தைக் கைக்காட்டவும் அதிர்ந்தான்.

அதன் பிறகான அவனின் முடுக்கி விடப்பட்ட தேடலின் முடிவு கேள்விக் கணைகளுடன் மரகதத்தின்முன் நிற்க வைத்தது.

“உங்க வயலை வாங்கினதுக்காக இலட்ச கணக்குல சின்னா குடுத்த பணம் எங்க போச்சின்னு சொல்ல முடியுமா?”

‘வயலை விக்கப்போறேன்னு மட்டும் சொல்லு மத்ததை என் மாமா பார்த்துக்கும்’ பல வருடங்களுக்கு முந்தைய மகளின் குரல் இன்றும் மரகதத்தின் காதில் பசுமையாய்.

முகத்தில் எண்ண ரேகைகள் ஓட நின்றிருந்தவரிடம், “நான் சொல்லட்டுமா?” என்றான் மார்பில் கைகளைக் கட்டி தோரணையாய்.

“உங்க பெயர்லயும் உங்க பொண்ணு பெயர்லயும் சின்னா ஆரம்பிச்சி குடுத்த ஜாய்ண்ட் அக்கவுண்ட் அதுலதான் மொத்த பணத்தையும் போட்டு இருக்கீங்க. அதுவும் அடுத்த ஒரே வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமா ட்ராப் பண்ண பட்டிருக்கு.

எந்த பேங்ல சின்னா பிறந்தநாள் அறிவிப்புக்கான செக் பாஸ் ஆச்சோ அதே பத்திரிக்கையோட முதலாளியம்மா அதாவது உங்க பொண்ணோட மோஸ்ட் டியரஸ்ட் ஃப்ரண்ட் சின்மயா! சின்மயா குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ்! அவங்க பெயர்லதான் அத்தனை செக்கும் போடப்பட்டு பணம் எடுக்க பட்டிருக்கு சரியா? மரகதம்மா”

சின்னாவால் உட்புக முடியாத இடத்திலும் சட்டம் பாய்ந்து அதன் மொத்தத் தரவுகளையும் எடுத்திருந்தது.

அரவிந்தனின் நையாண்டி குரல் சற்றும் மரகதத்தை அசைத்துப் பார்க்கவில்லை. அத்தனை நெஞ்சுரமாய் நின்றிருந்தார். மகளின் பிரிவு அவரை அப்படி மாற்றி வைத்திருந்தது.

“அது மட்டுமில்ல சின்னா ஊரை விட்டு போன கடந்த இரண்டு மூணு வருஷத்துல பெருசா எங்கேயும் வெளியவே போகாத மரகதம்மா ஆறுமாசத்துக்கு ஒருதடவையோ இல்ல வருஷத்துக்கு ஒரு தடவையோ ஊரைவிட்டு போய்ட்டு வந்திருக்கீங்க அதுவும் அந்த சின்மயாவே வந்து அவங்க வீட்டுக்குன்னு கூட்டிட்டு போயிருக்காங்க. இல்லையா சாத்தப்பா?” என்று வெளிவாசலில் நின்றிருந்தவனை உள்ளே அழைத்தான்.

அவனோ நடப்பது ஒன்றும் புரியாமல் தலையை சொறியாத குறையாய் குழம்பி நின்றிருந்தான்.

வண்டியிலிருந்து அரவிந்தன் இறங்கி வந்தபோதே ஓட பார்க்க இழுத்து இரண்டு அறை விட்டதில் மரகதம் ஊரை விட்டு சென்றுவிட்டார்களா என பார்த்து வரச் சொன்னதாய் உளறி இருந்தான். மேலும் மிரட்டியதில் ஊருக்கு வெளியே கப்பல் போன்ற காரில் சின்மயா வந்து ஓரிருமுறை அழைத்துச் சென்றதை உடனிருந்து பார்த்திருந்தவன் மனதில் அதிசயமாக தோன்ற அதையும் உளறியிருந்தான்.
மற்றபடி அவனுக்கும் எதுவும் தெரியாது.

கருணாகரன் மேல் கொண்ட எஜமான விசுவாசத்தில் மரகதத்துடன் துணைக்கு செல்ல, கடை கண்ணிக்கு செல்லவென உதவுபவன் அவனே!

அவனுடைய சம்பளத்தையும் இன்றுவரை பார்த்துகொள்வது சின்னாதான். கூடவே அன்பிலரசியின் நிலத்தை வாங்கிவிட்டாலும் ஊமையாகிவிட்ட கருணாகரனும் மரகதமும் வாடிவிடக் கூடாதென்பதற்காக குத்தகைப் பணமாக ஒரு தொகையை சண்முகவேல் மூலம் சாத்தப்பனிடம் தவறாமல் சேர்த்து விடுவதும் சின்னாதான்.

மரகதத்தின் முகச்சுளிப்பில் அத்தோடு கடமை முடிந்ததென சின்னா ஒதுங்கிக் கொள்ள மரகதம் பெரிதாய் கவனிக்கப் படாமல் போயிருந்தார்.

உண்மையில் வெறுப்பையும் கோபமுகத்தையும் காட்டி காட்டியே சின்னாவை தன்னை நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டார் மரகதம்.

துரோகிக்கு கூட தீங்கு நினைக்காத மருமகனின் அன்பில் என்றேனும் தான் உடைந்தால் அத்தனையும் மருமகனிடம் உளறிவிடுவாறே! மகள் தலைமீது செய்த சத்தியம் என்னாவது?

இத்தனை சொல்லியும் மரகதத்தின் கண்களில் சிறு அதிர்வு தோன்றியதே தவிர பதில் பேசவில்லை அவர்.

“சரி, அதையெல்லாம்கூட விடுங்க! யாரு சிவமதி?” என்றான் நேரடியாய்.

அந்த பெயரைக் கேட்டதும் மரதகத்தின் முகம் கனிந்தது.

அவர் பெற்ற மகளுக்கும் சேர்த்து அவரிடம் பேசும் ஒரே ஜீவன். இந்த உயிர் இன்னும் ஒட்டிக்கொண்டிருப்பது அந்த குரலால்தானே! அதுவுமே சில வருடங்களாய்தான். அதற்குமுன் அவர் மகள் அதற்கும் அனுமதியளித்ததில்லையே!

“மரகதம்மா போன் யூஸ் பண்றதே யாருக்கும் தெரியாம இருக்க, உங்க நம்பர்லருந்து இத்தனை நாளில் ஒரே ஒரு நம்பருக்கு மட்டும்தான் போன் போயிருக்கு வந்திருக்கு, அது சிவமதி. யார் அந்த சிவமதி?” என்றான் அழுத்தமாய்.

அதைவிட அழுத்தமாய் நின்றிருந்தவர் சாத்தப்பனை முறைத்தார். அவர் அலைபேசியில் பேசுவதை ஒருமுறை எதைச்சையாய் அவன்தானே பார்த்திருந்தான்.

சிறிய கிராமம் என்பதால் அரவிந்தனிருந்த இடத்தின் செல் டவரில் கனெக்ட்டான மரகதத்தின் எண்ணை எடுப்பது அவ்வளவு சிரமமாயிருக்கவில்லை அவனுக்கு.

சின்மயா மேல் சந்தேக விதை விழுந்ததுமே நவீன யுக அதிரடி நாயகன் அலைபேசி மூலம் விசாரணையை நாலா பக்கமும் முடுக்கி விட்டிருந்தான் அரவிந்தன்.

அதில் கொசுறாய் சாத்தப்பன் தந்த தகவலில் பாலில் பலாச்சுளை போல் வந்து சிக்கியிருந்தாள் சிவமதி.

“சின்னா ஊரை விட்டு போனதுக்கு அப்புறம்தான் இது எல்லாம் நடந்திருக்கில்லையா” என்று சரியாய் யூகித்தவன், சாத்தப்பனை கண்களால் வெளியேறச் சொன்னான்.

அவன் வெளியேற, “நீங்களும் உங்க பொண்ணும் நினைச்சபடி சின்னா ஒன்னும் சந்தோஷமா வாழலியே, அதுக்கு அப்புறமாவது உங்க மக இருக்க இடத்த அவர்கிட்ட சொல்லிருக்கலாமே!" என்றான் ஆதங்கமாய்.

சின்னாவின் காதல் காக்கிச் சட்டைக்குள்ளிருந்த இரும்பு இதயத்தையும் அசைத்துப் பார்த்திருக்க,

வாழ்ந்தால் சின்னாபோல் ஊன் உருகக் காதலித்து ஒருத்தியை மணந்துகொள்ள வேண்டும் என்றதொரு ஆசையே அரவிந்தனுக்குள் இரகசியமாய் உருவாகியிருந்தது.

மாறாக மரகதத்தின் முகத்தில் பல வண்ணங்களாய் எண்ணக் கலவைகள்.

‘உன் அண்ணன் பையனுக்குன்னு இதுவரை என்ன செஞ்சிருக்க நீ!

நீயும் உன் புருஷனும் சேர்ந்து என் மாமா வாழ்க்கைய அழிச்சது பத்தாதா? நான் இருக்கவரை அது யாரையும் கல்யாணம் கட்டாது.

குழந்தையிலயே என்னைய தூக்கிக்குடுத்து ஆயா வேல பார்க்க வச்சது வரைக்கும் போதும். என் மாமாக்கு வாழ்நாள் பாரமா நான் இருக்க மாட்டேன்! அதையும் மீறி நீ என்னை கூட்டிட்டுப் போக நினைச்சா என் பொணத்தை தூக்கிட்டு போ!

அது வாழனும்.‌ என் மாமா வாழனும்! எனக்குன்னு எதுவுமே உன்கிட்ட இதுவரை கேட்டதில்ல. கேட்கிறமாதிரி என் மாமாவும் வச்சதில்ல.

இன்னிக்கு என்‌ மாமாக்காக மடிப்பிச்சை கேட்கிறேன் அதை வாழவிடும்ம..!

அம்மா என்று கடைசி நொடியில்கூட சொல்ல திணறிய மகள் மருத்துவமனை என்றும் பாராது தன்னிடம் மண்டியிட்டு மடிப்பிச்சைக் கேட்டதை எப்படி மறப்பார்?

அதுவரை திண்ணமாய் நின்றிருந்தவரின் உடல் தளர கண்களில் நீர்மணிகள் உருண்டன.

“அதுசரி! இத்தனை வருஷமா சின்னாகிட்டருந்தே மறைச்ச மரகதம்மா என்கிட்ட மட்டும் சொல்லிடுவாங்கன்ற எதிர்பார்ப்புல நான் இங்க வரல. நீங்க சொல்லாததை உங்க கண்ணே காட்டி குடுத்துடுச்சி” என்றவனோ,

"அந்த ஊர் எல்லையில கட்டி போட்டு வச்சிருக்கவன்தான் உங்க பொண்ணோட புருஷனா?" என்றதும் உடைந்து தலையில் அடித்துக் கொண்டு கதறினார் மரகதம்.

சாத்தப்பனிடம் உறுதிப்படுத்தியிருந்தாலும் மரகதத்தின் உடல்மொழியை கணிக்கவே அந்தக் கேள்வியைக் கேட்டான்.

“என் கணிப்பு உண்மையா இருந்தா நீங்களும் உங்க பொண்ணும் நடத்திய நாடகம் சின்னாவுக்கும் சில வருஷங்களா தெரிஞ்சிருக்கனும். உங்க நாடகத்துக்கு உறுதுணையா நின்னு அந்த துரோகிக்கும் சோறு போட்டுட்டு இருக்கார் அந்த மனுஷன்” என்றதும் கண்களில் நீர்வர கையெடுத்து கும்பிட்டார் மரகதம்.

அதற்குமேல் அந்த வயதான தாயை வறுத்த விரும்பாத அரவிந்தன் அங்கிருந்து வெளியேறினான்.

“என்னப்பு இந்தா போன் பேசிட்டு வரேன்னவன் ஆளையே காங்கல. இந்தா உன் சோக்காளி தூங்கியே எந்திரிச்சிட்டான்” என்று மணிகண்டனைக் காட்டிய பெரியாத்தா, “என்னய்யா உன் முகம் வாடிக்கிடக்கு" என்றார் அனுசரணையாய்.

"சின்னாவ நினைச்சேன் பாட்டி” என்றான் மனதிலிருந்து உண்மையாய். அந்த மனிதர் நிமிடத்துக்கு நிமிடம் அவனுக்கு அதிர்ச்சியையும் பிரமிப்பையும் அல்லவா கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இன்னமும் முற்றிய பைத்தியம்போல் தூரத்தில் வார்த்தை தெளிவில்லாமல் கத்திக்கொண்டே இருந்தான் அவன். அரவிந்தனுக்கு மட்டும் புரிந்ததோ!

“சொன்னாமாதிரி அரளிவிதையை அரைச்சி அவன் வாயில ஊத்தியிருக்கனும் ரவுடி பேபி நீ! எப்படி கத்துறான் பாரு” என்ற மணிகண்டன் எழுந்து அமர, தன் முழு கோபத்தையும் வண்டியிடம் காட்டிய அரவிந்தனின் கைகளில் நரம்புகள் புடைத்துக் கிளம்பியது.

அந்நேரம்தான் அவனது தாய் அழைத்திருந்தார். வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவனின் கண்காட்டலில் அகரன் எடுத்து ஒலிவாங்கியில் போட,

எடுத்ததுமே, “அர்வி உன் வாட்சப்ல ஒரு போட்டோ அனுப்பியிருக்கேன் பாருடா” என்றார் கமலா.

அவர் குரலிலிருந்த உற்சாகமே விவரத்தை சொல்லிவிட “ப்ளீஸ் கமலிம்மா ஐயம் நாட் இன் த மூட்" என்றான் சலிப்பாய்.

“என்னைக்குடா உனக்கு மூட் இருந்திருக்கு. அனுப்பற போட்டோஸ்ல்லாம் திறந்து பார்க்கிறதுகூட இல்ல. பொண்ணு பார்த்தாலே எரிஞ்சிதான் விழற. யாரையும் லவ் பண்றியா டா” என்றார் ஆர்வமாய்.

"ம்க்கூம்” என்ற ஒலி பின்னாலிருந்த ரவுடி பேபிகளிடமிருந்து கோரசாய் வர,

"உங்க புள்ளை தானம்மா பண்ணிட்டுதான் மறுவேலை பார்ப்பாரு. அத்தைக்கு மீசை முளைச்சாதான் அது நடக்கும்” என்றான்‌ மணிகண்டன்.

திரும்பி மணிகண்டனை முறைக்க முடியாதவன் அதன் தாக்கத்தை வேகத்தில் காட்டினான்.

“பேசாம எனக்கு பதிலா நீ காவிக்கட்டி காசி இராமேஸ்வரம்னு போய்டேன் அர்வி… ” என்று கோபித்தவரோ,

“இந்த டைம் நான் விடறதா இல்ல. ஐயம் ஃபிக்ஸ்ட். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா அர்வி. என் இன்ஸ்டா ஃப்ரண்ட் இல்ல அவங்…”

அவர் பேசிக்கொண்டிருக்கவே, “நான் அப்புறம் பேசுறேன்" என்றவன் இணைப்பை துண்டிக்கச் சொல்ல, பெரியாத்தா இருந்த துளையின் வழி அகரனிடமிருந்து அலைபேசியை எட்டிப் பறித்திருந்தார்.

மணிகண்டன் மூலம் புலனத்தை திறந்து புகைப்படத்தை பார்த்தவர்கள், சிலாகித்து ஒருவர் மாற்றி ஒருவர் கமலம்மாவுடன் பேச அரவிந்தனின் சிந்தனை சுத்தமாக அவர்களிடத்தில் இல்லை.

அடுத்து செய்ய வேண்டியனவற்றை அவன் மூளை அசைபோட்டுக் கொண்டிருந்தது.

கடைசியாக அலைபேசி அவன் கையில் வரும்போது வேண்டுமென்றே புலனத்தை திறந்தே தந்திருந்தான் மணிகண்டன். எங்கே அவன் கவனம் அதிலிருந்தால் அல்லவோ! சட்டை செய்யாமல் அணைத்து வைத்தவனை கூட்டமாய் சேர்ந்து முறைத்து வைத்தனர்.

வண்டி ஓரக்காடு கிராமத்தை நெருங்கியிருக்க, “என்ன சார் இவ்ளோ தூரம் தேடிப்போயும் சின்னா எங்கிருக்கார்னு சின்ன துப்பு கூட கிடைக்கலையே. ஆரம்பிச்ச இடத்துலயே வந்து நிக்கிறோம்” என்றான் மணிகண்டன்.

மூத்த தேனிக்களின் எண்ணமும் அதுவாகவே இருக்க கவலையில் தோய்ந்திருந்தவர்களின் உடலும் அலைச்சலின் காரணமாக சோர்ந்திருந்தது.

மாறாக, "ஆரம்பிச்ச இடத்திலதான் முடிக்கணும்" என்ற அரவிந்தனின் முகம் அதி தீவிரமாய்.

 
Top Bottom