• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செதுக்கிய சிற்ப பாவையே - 30

Vishakini

Moderator
Staff member
சிற்ப பாவை - 30

அவர் சென்றதும் பரமு இன்னும் அதிகப் புத்துணர்ச்சியுடன் பேசத் தொடங்கினான்.

"நகை... உனக்கு கல்யாணச் சாரி, பிளவுஸ் எல்லாம் ரெடி ஆயிடுச்சு. உனக்கு வேற ஏதாவது நான் வாங்கணுமா?"

நகைக்கு ஒரு நிமிடம் நாக்கு தடித்தது. சில விஷயங்களை அவனிடம் வெட்கப்பட்டு எப்படிச் சொல்வது என்று தெரியாமல் அமைதியானாள்.

அவள் பேசாமல் இருக்கவும், பரமு பதற்றமடைந்தான்.

"என்னாச்சு
நகை? ஏதாவது நான் வாங்க மறந்துட்டேனா? ஏன் பேச மாட்ற?"

"அது... நான் அம்மாக்கிட்ட சொல்லியிருக்கேன். அவங்க வாங்கிட்டு வருவாங்க" என்று மழுப்பினாள்.

"அவங்க எதுக்குத் தனியா வாங்கணும்? நீ என்கிட்டயே சொல்லு, நானே போய் வாங்கிட்டு வர்றேனே!"

'மரமண்டை... சொன்னா இவருக்குப் புரியாது' என்று உள்ளுக்குள் செல்லமாகத் திட்டிக் கொண்டவள்,

"அது ஒன்னும் இல்ல... அவங்களே வாங்கிட்டு வருவாங்க" என்று திக்கித் திணறினாள்.

அவள் குரலில் இருந்த அந்த மெல்லிய நடுக்கத்தையும் மாற்றத்தையும் வைத்து அவன் மெல்ல ஊகிக்கத் தொடங்கினான்.

"ஓ... கல்யாணத்துக்கு அப்புறம் உனக்குத் தேவையான எல்லாத்தையும் நான் தான் வாங்கப் போறேன். அப்பவும் போய் உங்க அம்மா கிட்ட தான் சொல்லுவியா?" பரமு தன் உதட்டைக் கடித்தபடி குறும்பாக கேட்க, நகையின் முகம் சிவந்தது.

"அப்ப நான் என் புருஷன்கிட்ட உரிமையா கேட்பேன்!" என்றாள் சற்றே தைரியமாக.

"அப்போ... இப்பவே சொல்லேன்!"

"ஐயோ... சும்மா இருங்க!" என்று சொல்லிவிட்டு, வெட்கம் தாளாமல் போனைத் துண்டித்துவிட்டாள்.

பரமு தனியாக நின்று மனமாரச் சிரித்தான். இத்தனை காலம் அவன் தோள்கள் குடும்பத்தின் பாரத்தைத் தூக்கிச் சுமந்தன. அதற்காக இப்போது பாரம் குறைந்துவிட்டதா என்றால் இல்லை. ஆனால், அவன் உயிராக நேசிக்கும் நகை அவனுக்குக் கிடைக்கப் போகிறாள் என்ற எண்ணம், அந்த பாரத்தைக் கூடச் சுமையாகத் தெரியாமல் செய்தது. அந்தச் சுமையை அவன் காதலோடு சுமக்கத் தயாரானான்.

உடனே அவன் தன் பைக்கை எடுத்துக் கொண்டு ஒரு பெரிய துணிக்கடைக்குச் சென்றான். அங்கிருந்த பெண் ஊழியர் அவனைப் பார்த்து, "சார், உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்டார்.

பரமு தயக்கமின்றி, "பிரேசியர், இன்ஸ்கர்ட் பார்க்கணும்" என்றான்.

அந்தப் பெண் அந்தப் பகுதியைச் சுட்டிக்காட்ட, பரமு தன் மனைவியாகப் போகிறவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்தான்.

பில் போடும் இடத்தில் இருந்த பெண், ஒரு ஆண் தனியாக வந்து இவைகளை எடுப்பதைப் பார்த்து ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

அதைக் கவனித்த பரமு, "ஏம்மா... என்ன அப்படிப் பார்க்கிற? இது என் வைஃப்க்காக எடுத்தது!" என்றான் அதிகாரமான உரிமையுடன்.

அவன் சொன்ன விதத்தைப் பார்த்து அந்தப் பெண்ணும் சிரித்துக்கொண்டே பில் போட்டு, துணிகளை அழகாக ஒரு கவரில் வைத்துக் கொடுத்தாள்.

'அவ்வளவுதான்... இனிமே வேற எதுவும் வாங்க வேண்டியதில்லை. பூ மட்டும்தான் பாக்கி, அதை கல்யாணம் அன்னைக்குக் காலையில பாத்துக்கலாம். மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வேணாம்னு அவளே சொல்லிட்டா...' என்று அவன் மனக்கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் போதே, அவன் அம்மா போன் செய்தார்.

"பரமு... சாப்பிட வரலையாடா?"

"அம்மா... கிளம்பிட்டேன், இதோ வந்துட்டு இருக்கேன்."

"டேய்... நகைக்குப் பூ சொல்லணும்டா, மறந்துடாத."

"நானும் அதைத்தாம்மா யோசிச்சேன். ஆனா நகைக்கு இப்போ முடி ரொம்பக் கம்மியா இருக்கு. அதனால பூ வச்சா நல்லா இருக்காதுன்னு தோணுது."

"அதுக்கென்னப்பா... நம்ம 'செட்டு முடி' வாங்கி வச்சுக்கலாம்."

"அதெல்லாம் வேண்டாம்மா. அவளுக்கு அதெல்லாம் பிடிக்காது. அவ நிஜத்துல எப்படி இருக்காளோ, அப்படியே நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். வெறும் போட்டோவுக்காக அவளுக்குப் பிடிக்காததைச் செய்யச் சொல்லி அவளை நான் கஷ்டப்படுத்த விரும்பல."

"உனக்குச் சரிண்ணா எனக்கும் சரிதான்டா. ஒன்னும் பிரச்சனை இல்ல. அம்மா இன்னைக்குச் சாம்பார் தான் வச்சிருக்கேன், தொட்டுக்க ஏதாவது வாங்கிட்டு வரியா?"

"சரிம்மா..." என்றவன், நேராக ஹோட்டலுக்குச் சென்றான்.

தன் அம்மாவுக்குப் பிடித்த காடை தொக்கும், கவி குட்டியின் ஃபேவரைட் சிக்கன் 65-ம் வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

முதலில் நகை வீட்டுக்குச் சென்றான். காலிங் பெல் சத்தம் கேட்டு கவிதான் ஓடி வந்து கதவைத் திறந்தாள்.

"மாமா வாங்க!" என்று உற்சாகமாகக் கூவி, அவன் கையைப் பிடித்துக் கொண்டு குதித்தாள். அதைப் பார்த்து வெண்பா புன்னகைத்தார்.

"வாங்க மாப்பிள்ளை, உட்காருங்க."

"இல்ல அத்தை... கவிக்குச் சிக்கன் வாங்கிட்டு வந்தேன். அதைக் கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன். அம்மா எனக்காகச் சாப்பாட்டோட வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. கவி குட்டி... நீ இதைச் சாப்பிடு, மாமா வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வர்றேன்" என்றான்.

"தேங்க்ஸ் மாமா!" என்று கவி அந்தப் பொட்டலத்தை ஆசையோடு வாங்கிக் கொள்ள,

"தேங்க்ஸ் எல்லாம் சொல்லக் கூடாது... சரியா?" என்று அவள் தலையை அன்போடு வருடிவிட்டு, ஒரு திருப்தியான மனதுடன் அங்கிருந்து விடைபெற்றான் .

திருமணத்திற்கு அனைத்து வேலைகளும் தயாராகிவிட்டன, ஊரே தயாராகிவிட்டது. திருமணத்திற்கு முதல் நாள்தான் அவள் வந்து இறங்கினாள்.

பரமு அவளுக்காக ஏர்போர்ட்டில் காத்திருந்தான்.

முன்னரே வந்திருக்கலாம்தான், ஆனால் 30 நாள் விடுமுறையில் திருமணம் முடிந்து கணவனுடன் இருக்க வேண்டும் என்றுதான் திருமணத்திற்கு முதல் நாள் வந்தாள்.

தன்னுடைய பையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தவள், பரமுவை ஆர்வமாகத் தேடினாள்.

"பாப்பு" அவன் குரல் கேட்டு அருகில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு உள்ளம் உருகிப் போனது.

"ரொம்ப நேரம் வெயிட் பண்றீங்களா?"

அவன் அக்கேள்வியைத் தவிர்த்தான். அவள் வருகிறாள் என்று தெரிந்ததிலிருந்து அவன் காலையிலிருந்தே ஏர்போர்ட் வாசலில்தான் படுத்திருக்கிறான். அதைச் சொன்னால் அவள் திட்டுவாள் அல்லவா? அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம், அவ்வளவு ஆசையாக அவன் வந்துவிட்டான்.

"பையெல்லாம் கொடு" அவள் கையில் இருந்த பைகள் அனைத்தையும் வாங்கி அவன் சுமந்து கொண்டான்.

"போகலாமா?" அவன் பைகளைத் தூக்கிக்கொண்டு முன்னால் நடக்க,

நகை வேகமாக நடந்து வந்து அவன் புஜத்தைப் பிடித்துக்கொண்டாள்.

பரமு நின்று அவள் பிடித்திருக்கும் கைகளைப் பார்த்தான். 'நடக்கவே நடக்காது' என்ற ஆசையும் ஏக்கமும் இன்று நிஜமாக அவனுக்கு நிறைவேறத் தொடங்கியது.

"பாப்பு" - தொண்டை அடைக்க அழைத்தவனுக்கு அழுகைதான் வந்தது.

"பரமு, என்ன ஆச்சு?"

"ஒன்னும் இல்ல... நீ என் கையப் புடிச்சிருக்கிறது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. கனவு போல இருக்கு." அதே கையில் இருந்த லக்கேஜை மற்றொரு கைக்கு மாற்றிக் கொண்டவன், அவள் விரலோடு விரல் கோர்த்து ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தான்.

"நீங்களே நேரடியாக வந்துட்டீங்க, வீட்ல எதுவும் வேலை இல்லையா?"

"எல்லா வேலையும் முடிஞ்சுச்சு பாப்பு. மத்த சின்ன சின்ன வேலைகளெல்லாம் பசங்க பாத்துக்குறாங்க, பிரண்ட்ஸ் இருக்காங்களே."

"பசிக்குது, ஏதாவது சாப்பிட்டுப் போகலாமா?"

"சாப்பிட்டுத்தான் போகப்போறோம்." அவளை அழைத்துக் கொண்டு சென்றவன் எந்த ஹோட்டலுக்கும் செல்லவில்லை; ஒரு வீட்டிற்குள் சென்றான்.

"யார் வீடு இது?"

"என்னுடைய பிரண்ட் வீடு. நீ வர்றேன்னு தெரிஞ்சுதான் அவங்க உனக்காகச் சாப்பாடு ரெடி பண்ணி நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க."

அவள் கைகோர்த்து அவன் உள்ளே செல்ல, உள்ளிருந்து ஒரு புதுமணத் தம்பதி வெளியே அவசரமாக ஓடி வந்தனர்.

"வாங்க வாங்க, உங்களைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்" என்று இருவரும் வாய்நிறைய வரவேற்றனர்.

அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த புதுத் தாலியைக் கண்டதும் அவர்கள் புதுமணத் தம்பதிகள் என்று புரிந்து கொண்டாள். அத்துடன் வீடு எளிமையாக இருப்பதை வைத்து அவர்கள் காதல் திருமணம் என்றும் புரிந்துகொண்டாள்.

நகையின் பார்வையை உணர்ந்த அந்தப் பெண், "நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்க கல்யாணத்தைப் பரமு அண்ணன்தான் பண்ணி வச்சாரு. அதுக்கு நன்றி சொல்லத்தான் இன்னைக்கு உங்களுக்கு விருந்து ஏற்பாடு பண்ணியிருக்கோம். உட்காருங்க, சாப்பிடுங்க" என்று இருவருக்கும் வாழையிலை போட்டுச் சாதம் வைத்தனர்.

இருவரும் ஒன்றாக, ஜோடியாக அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர். அவளுக்கு மிகவும் பிடித்த மீன் குழம்புதான். புடவை மீன் வறுவல், இறால் தொக்கு வைத்தார்கள்.

"நீங்கதான் சொன்னீங்களா?" நகை தன்னவனிடம் கேட்க,

"ஆமா, ஊருக்கு வர்ற நீ வாய்க்கு ருசியா உனக்கு பிடிச்ச மாதிரிதானே சாப்பிடணும்? அதான் காரமா மீன் குழம்பு வைக்கச் சொன்னேன். இவன் என்னுடைய ரொம்ப குளோஸ் பிரண்ட். இத்தனை நாள் கல்யாணத்துக்காக என்கூடத்தான் அலைஞ்சுட்டு இருந்தான். இன்னைக்கு நீ வர்றதும், உனக்காகச் சமைக்கணும்னு வீட்டிலேயே இருந்துட்டான்."

"ரொம்ப தேங்க்ஸ்ங்க" இருவரையும் பார்த்து மனப்பூர்வமாகக் கூறினாள். குழம்பும் சாப்பாடும் ருசியாக இருந்தது. இருவரும் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

"எதுக்கு அவங்களுக்குத் தேவையற்ற சிரமம்? ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கலாமே?"

"பாப்பு, நீ ஹோட்டலில் சாப்பிட மாட்டேன்னு எனக்குத் தெரியும். வீட்டிலேயே அம்மா சாப்பாடு கட்டிக் கொடுத்தாங்க, நான்தான் சாப்பாடு கெட்டுப்போயிடும்னு இவங்ககிட்டச் சொன்னேன்."

தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்பவன் மீது காதல் கூடாமல் இருக்குமா அவளுக்கு?

அவன் பைக்கில் தான் வந்திருந்தான். பொருட்களை எப்படி எடுத்துச் செல்வது என்று யோசிக்க,

அவன் நண்பன் முன்வந்து, "மச்சி, தங்கச்சியோட பொருள் எல்லாத்தையும் வீட்ல வச்சிருங்க. எது முக்கியமா தேவையோ அதை மட்டும் எடுத்துக்கோங்க. நான் சாயந்திரம் பொருள் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடுறேன். நீ தங்கச்சியைக் கூட்டிட்டு கிளம்பு" என்றான்.

அதேபோல் அவள் தன்னுடைய 'சைடு பேக்'கை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் அங்கே வைத்திருந்தாள்.

பரமு தன்னுடைய பைக்கை ஸ்டார்ட் பண்ண, நகை அவன் பின்னால் இரு பக்கமும் கால் போட்டு அமர்ந்து கொண்டாள்.

ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்திருந்ததால் வசதியாக இருந்தது.

கண்ணாடியில் தன்னவள் முகம் பார்த்துப் பெருமையோடு பைக்கை ஸ்டார்ட் செய்தவன், "போயிட்டு வர்றேன் மச்சான்" என்று நண்பனிடம் கூறிவிட்டுக் கிளம்பினான்.

அவன் தன்னைப் பார்க்கிறான் என்பதைக் கண்ணாடி வழியாக அவளும் கண்டாள். மெல்லிய புன்னகையோடு அவனுடன் தொடரும் முதல் வாழ்க்கைப் பயணத்தைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாள்.

பைக் சிக்னலைத் தாண்டியதும் அவள் கைகள் அவன் இடுப்பில் படர்ந்தன.

அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக அவள் கையைப் பார்த்தவன், ஒரு கையால் தன் இடுப்பில் இருந்த அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.

"நாளைக்கு நமக்குக் கல்யாணம் ஆகணும், பைக்கை பார்த்து ஓட்டுங்க."

"அதெல்லாம் ஸ்லிப் ஆகாது பாப்பு, நீ பயப்படாதே."

அவள் அவன் தோளில் முகத்தைச் சாய்த்துக்கொண்டு அவனுடன் பேசத் தொடங்கினாள். அந்தப் பயணம் இனிமையாக இருந்தது. இருவருக்குமான நெருக்கமான முதல் பயணம், அன்பின் முதல் பயணம். ஏதேதோ பேசினர், சந்தோஷமாக இருந்தனர்.
 
Top Bottom