செந்தூரம் தமிழ் நாவல் போட்டி 2026 - முடிவுகள் அறிவிப்பு

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,532
113
Germany
அன்பிற்கினிய உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

நிதனிபிரபு நாவல்கள் தளத்தில் ‘செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026’ நடைபெற்றது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

முதல் போட்டி!

‘முதல்’ என்பது எப்போதுமே விசேசமானது. பரபரப்பு, எதிர்பார்ப்பு, படபடப்புகளோடு சின்ன சின்னத் தடுமாற்றங்களும், அனைத்தும் நன்றாக நடக்க வேண்டும் என்கிற பயமும் இருக்கும்.

அப்படித்தான் நாங்களும் இந்தப் போட்டியை ஆரம்பித்தோம். போட்டி எழுத்தாளர்களின் படைப்புகளை முடிந்தவரை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வும், எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமும், இந்தப் புதிய முயற்சியை எப்படியாவது சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்கிற முனைப்பும் சேர்ந்த ஒரு பயணமாகவே இருந்தது.

இன்று, இந்தப் போட்டியைத் திரும்பிப் பார்க்கும்போது, ஆரம்பத்தில் இருந்த அந்த எதிர்பார்ப்புகளையும் பயங்களையும் தடுமாற்றங்களையும் தாண்டி, நாம் வந்திருக்கும் பாதை உண்மையிலேயே மனநிறைவைத் தருகிறது.

இடையில் பல தடங்கல்களும், கவலையான விடயங்களும், எதிர்பாராத சிக்கல்களும் வந்து போயின.

ஆனால், அந்த ஒவ்வொரு தருணத்திலும் நம்முடைய எழுத்தாளர்கள் தந்த ஆதரவும் அன்பும் இந்தப் போட்டியைச் சிறப்பாக நடத்துவதற்குப் பேருதவியாக இருந்தன.

அதேபோல்தான் வாசகர்களாகிய உங்களுடைய பேராதரவும்.

ஒவ்வொரு இக்கட்டான நிலையிலும் நீங்கள் எங்களைக் கைவிட்டதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் எங்களுடைய முதுகில் தட்டிக்கொடுத்து, உங்களால் முடியும், நீங்கள் செய்வீர்கள், எல்லாமே சிறப்பாக நடக்கும் என்று சொல்லி எங்களை ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள்.

அந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் இல்லை. தடுமாறிய தருணங்களில் தொடர்ந்து பயணிப்பதற்கான நம்பிக்கையாக இருந்தன.

இன்று, போட்டி முடிவுகளை அறிவிக்கும் நாள் என்கிற இந்த நாளை வெற்றிகரமாகத் தொட்டிருக்கிறோம் என்றால், அதற்கு நீங்கள் அளித்த பேராதரவுதான் காரணம்.

அதற்கு உங்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

கூடவே, இந்தப் போட்டியினைச் செம்மையாக நடத்த எங்களுக்குத் தோள் கொடுத்த நம்முடைய மொடரேட்டர் விஷாகினி அவர்களுக்கும் பெரு நன்றியினை உரித்தாக்குகிறோம்.

இந்தப் போட்டியின் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்னதாக, சில முக்கியமான விடயங்களைப் பற்றிப் பேச நினைக்கிறோம்.

அதில் முதலாவது, இந்தப் போட்டியில் இடம்பெற்ற மூன்று நாவல்களை A, B, C என்று வைத்துக்கொள்வோம்.

A நாவலில் இடம்பெற்றிருக்கும் ஒரு பகுதியும், B நாவலில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு பகுதியும், C நாவலில் இடம்பெற்றிருக்கின்றன.

இதில் A நாவல் ஏப்ரல் மாதத்திலேயே, இன்னும் தெளிவாகச் சொல்வதானால், முற்றிலுமாக அழிந்துபோன NP Writers Corner தளத்திலேயே முழுமையாக எழுதப்பட்டு முடிக்கப்பட்ட நாவல்.

மற்றவை இரண்டும் அடுத்தடுத்த மாதங்களில் நிதனிபிரபு நாவல்கள் தளத்தில் எழுதி முடிக்கப்பட்டவை.

எனவே, நாவல் A அந்த எழுத்தாளரின் சொந்தக் கற்பனையில் உருவான படைப்பு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், B மற்றும் C நாவல்களைப் பொறுத்தவரை, என்ன நடந்தது, எது முதலில் எழுதப்பட்டது, யார் எதைப் பார்த்து எழுதினார்கள் என்பதனைத் தெளிவாகக் கண்டறிய முடியவில்லை.

இதற்குக் காரணம் NP Writers Corner தளம், போட்டி நடந்துகொண்டிருந்தபோது முற்றிலுமாக அழிந்துபோனதே.

அழிந்துபோன NP Writers Corner தளத்தில் தொடராக எழுதப்பட்டிருந்த நாவல்கள், பின்னர் நிதனிபிரபு நாவல்கள் தளத்தில் ஒரே நேரத்தில் பதிவிடப்பட்டிருந்தன. அதனால், எந்தப் பகுதி முதலில் எழுதப்பட்டது என்பதனைத் துல்லியமாக நிரூபிக்கும் வகையில் எங்களிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை.

எனவே, இந்தச் சம்பவத்தைப் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்ட ஒரு எழுத்தாளர் செய்த தவறு என்று தீர்மானிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

இந்தக் குழப்பத்திற்கான பொறுப்பை நிதனிபிரபு நாவல்கள் தளமே ஏற்றுக்கொள்கிறது. அதனால், இந்தப் போட்டியிலிருந்து எந்த நாவலையும் நாங்கள் விலக்கவில்லை.

அதேபோல், B மற்றும் C ஆகிய இரண்டு நாவல்களும் இந்தப் போட்டியின் முதல் மூன்று இடங்களுக்குள் வராததால், இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறோம்.

ஆனால், அடுத்தமுறை போட்டியிடும் எழுத்தாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், அனைத்து நாவல்களும் வாசிக்கப்பட்டு, ஒவ்வொரு நாவலிலும் இடம்பெறும் சின்ன சின்ன விசயங்களைக்கூட உன்னிப்பாகக் கவனிக்கிறோம் என்பதைத் தெரியப்படுத்தவே இந்த விடயத்தை இங்கே வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்கிறோம்.


இதே போன்ற சம்பவம் அடுத்தடுத்த போட்டிகளில் நடைபெறுமானால், நிச்சயமாக அந்த நாவல் போட்டியிலிருந்து விலக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல், ஆதாரங்கள் தெளிவாகக் கிடைத்து, ஒருவர் இன்னொருவருடைய உழைப்பையும், கற்பனையையும் தன்னுடையதாக எடுத்துக்கொண்டது நிரூபணமானால், சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிடுவது உட்பட எப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தீவிரமாகப் பரிசீலிப்போம்.

ஒருவருடைய உழைப்பையும் கற்பனையையும் இன்னொருவர் எடுத்துக்கொள்வதை நிதனிபிரபு நாவல்கள் தளம் ஒருபோதும் அனுமதிக்காது.

எனவே, அடுத்த போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைத்து எழுத்தாளர்களும் இந்த விடயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் கற்பனை உங்களுடையது. 
உங்கள் உழைப்பு உங்களுடையது. அதற்கான மதிப்பும் அங்கீகாரமும் உங்களுக்கே கிடைக்க வேண்டும். அதை இன்னொருவர் தட்டிப் பறிப்பதை அனுமதிக்க முடியாது. அதே நேரத்தில் இன்னொருவரின் உழைப்பை நீங்கள் எடுத்துக்கொள்வதையும் அனுமதிக்க முடியாது.

அடுத்ததாக நாம் பேச வேண்டிய விடயம், கொடுக்கப்பட்ட சொற்களின் அளவை எப்படியாவது எட்டிவிட வேண்டும் என்பதற்காக, பிரேக் இல்லாத பேருந்து போன்று, கதை செல்ல வேண்டிய திசையைக் கூடப் பொருட்படுத்தாமல், கண்டபாட்டுக்குக் கதை நகர்த்தப்பட்டிருப்பதை வாசிக்கும்போது உண்மையிலேயே மிகுந்த மனவருத்தமடைந்தோம்.

ஒரு நாவலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு காரணமும், ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு தேவையும், ஒவ்வொரு நிகழ்வுக்கும் கதையோடு ஒரு தொடர்பும் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு.

அதேபோன்று, AI-யின் உதவியுடன் நாவலின் பெரும்பகுதி எழுதப்பட்டிருப்பது போன்ற சில அம்சங்களையும் கவனிக்க முடிந்தது.

இது எங்களுக்குமே முதல் போட்டி என்பதால், இவ்வாறான விடயங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதோடு மட்டும் இதனை விட்டுவிடுகிறோம். ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் இதுபோன்ற விடயங்கள் நிச்சயமாகக் கவனத்தில் கொள்ளப்படும்.

அத்தகைய நாவல்களைப் போட்டியிலிருந்து விலக்குவதிலும் எந்தத் தயக்கமும் இருக்காது.

எங்களுடைய நோக்கம் நல்ல கதையை, நல்ல எழுத்தை, எழுத்தாளரின் சொந்தக் கற்பனையையும் உழைப்பையும் அங்கீகரிப்பது மட்டுமே!

இனி போட்டியின் முடிவுகளுக்குள் வருவோம்!

வாசகர்கள் இல்லாமல் எழுத்தாளர்கள் இல்லை என்பதால் முதலில் பரிசுபெறும் வாசகர்கள் விபரங்கள் இதோ:

அதிகமாகவும் ஆக்கபூர்வமாகவும் கருத்திட்டுப் பரிசு பெறும் வாசகர்கள் ஐவர்:

1 . Gowri Karthikeyan
2 . Magizh Kutty
3 . ஷமீம்
4 . Chanmaa
5 . Eswari Sasikumar

அடுத்ததாக எழுத்தாளர்களைக் கண்டுபிடிக்கும் போட்டியில் வெற்றிபெற்றவர்கள்:

1.ShaSri
2.Chitra ganesan
3.Akalya
4.Gowri Karthikeyan

சிறந்த விமர்சனங்களை எழுதியவர்கள்:

1.Gowri Karthikeyan
2.Thanga Thenmozhi
3.Zeenath Sabeeha
4.Shasri
5.Kala Karthi

இவர்கள் அனைவருக்கும் ரூபாய் 500 பெறுமதியான நிதனிபிரபு பதிப்பகத்தில் வெளியான புத்தகங்களும், மின் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இதில் முக்கியமாகக் கௌரி கார்த்திகேயனைப் பிரத்தியேகமாகப் பாராட்டியே ஆகவேண்டும.

முடிவுற்ற 51 நாவல்களையும் வாசித்து, விமர்சனம் எழுதியது மாத்திரமல்லாமல், அத்தனை கதைகளினதும் பெரும்பான்மையான அத்தியாயங்களுக்கும் தன் கருத்துகளையும் பதிவிட்டிருக்கிறார்.

போட்டியிட்ட எழுத்தாளர்களுக்கு அவராற்றிய இந்தப் பெரும் உதவியைப் பாராட்டி, அவர் பெறும் பரிசுகளோடு சேர்த்து, 1000 ரூபாய் பரிசும் வழங்கப்படுகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

இதோ இத்தனை மாதங்களாக நாம் காத்திருந்த நேரம் வந்துவிட்டது.

போட்டியை அறிவித்தபோது சொன்னது போன்று நாவல்களை வாசித்து வந்த வியூஸ், கருத்துகள், விமர்சனங்கள், வாசகர்களின் வாக்குகள் மாத்திரமல்லாமல், வாசித்த நடுவர்களின் முடிவுகளையும் கொண்டுதான் முடிவு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. கூடவே, தளத்தின் முடிவே இறுதியானதும்.

முதலில், இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அத்தனை எழுத்தாளர்களுக்கும் எங்களுடைய மனம் நிறைந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒரு நாவலை ஆரம்பித்து, அதைத் தொடர்ந்து எழுதி, நாம் கொடுத்திருந்த வரையறைகளுக்குள் முழுமையாக எழுதி முடிப்பது என்பதே பெரிய விடயம். அதுவே மிகப்பெரிய வெற்றிதான்.

அதனால், இன்று நாம் அறிவிக்கப்போகும் முடிவுகளில் முதல் மூன்று இடங்களுக்கான வெற்றியாளர்களோடு, இந்தப் போட்டியில் தங்களுடைய படைப்பை முழுமையாக நிறைவு செய்த எழுத்தாளர்களின் உழைப்பும் மதிக்கப்படும்.

நாம் கொடுத்திருந்த வரையறைகளுக்குள் வராமல் இருந்தாலும், தங்களுடைய நாவலை முழுமையாக எழுதி முடித்து, மூன்று மாதங்கள் நமது தளத்தில் வைத்திருந்த எழுத்தாளர்களுக்கு இந்திய ரூபாய் 1000/- பரிசாக வழங்கப்படுகிறது.

அதேபோன்று, நாம் அறிவித்திருந்த அனைத்து வரையறைகளுக்கும் உட்பட்டு, கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் நாவலை எழுதி முடித்து, முதல் மூன்று இடங்களுக்குள் வராத எழுத்தாளர்களுக்கு இந்திய ரூபாய் 2000/- பரிசாக வழங்கப்படுகிறது.

இனி,
🥉 மூன்றாம் இடம்
🥈 இரண்டாம் இடம்
🥇 முதல் இடம் என்கிற வரிசையில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.

அந்த மூன்று வெற்றியாளர்கள் யார்?
அந்த மூன்று நாவல்கள் எவை?
இத்தனை நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்தத் தருணம் இதோ வந்துவிட்டது!

நாவல்கள் நகர்த்தப்பட்ட விதம், அதன் போக்குகள், அவை சொல்ல வரும் நெறிகள் போன்றவற்றையும் முன்னிறுத்தி முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில்,

🥉 மூன்றாம் இடம் பெறும் நாவல் மற்றும் எழுத்தாளர்:

STN - 03 உந்தன் நெஞ்சில் உயிராக - Priyadharshini S
பரிசு 5000 இந்திய ரூபாய்


🥈 இரண்டாம் இடம் பெறும் நாவல் மற்றும் எழுத்தாளர்:

STN - 85 நான் அறிய நீ - ஆதுரியாழ்
பரிசு 6000 இந்திய ரூபாய்


🥇 முதல் இடம் பெறும் நாவல் மற்றும் எழுத்தாளர்:

STN - 40 நிலவின் அக ஒலி - ப்ரியா பாண்டீஸ்
பரிசு 7000 இந்திய ரூபாய்


வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் மூவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

போட்டியின்போது சொன்னது போன்று வெற்றியாளர்கள் விரும்பினால் அவர்களின் நாவல்கள் 2027 ஆம் ஆண்டுப் புத்தகத் திருவிழாவிற்குப் புத்தகமாகப் பதிப்பித்துக் கொடுக்கப்படும். ஆம் எனில் அந்த நாவல்கள் புத்தகமாக வரும்வரை வேறு எங்கும் பதிவிட அனுமதி இல்லை.

அடுத்ததாக வாசகர்களின் சிறப்புக் கவனத்தைப் பெறும் மூன்று நாவல்கள்:

STN - 116 மேகத்தில் தொலைந்த நிலவு - சத்யகாருண்யா(ஹன்சா)


STN - 28 பனி இரவும் கனல் மழையும் - Junaitha Begam (RJ Novels)

STN - 29 குழலில் காற்றாகினாள் - மகாமணி

மூவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
எழுதாளர்கள் விரும்பினால் நிதனிபிரபு பதிப்பகத்தின் மூலம் உங்கள் நாவல்கள் புத்தகமாகப் பதிப்பித்துத் தரப்படும்.

பணப் பரிசுகள் அடுத்துவரும் நாள்களில் நீங்கள் தந்த gpay நம்பருக்கு அனுப்பிவைக்கப்படும். இலங்கை வாழ் எழுத்தாளர்களாயின் எழுத்தாளர் பிரஷா மூலம் உங்கள் பணம் அனுப்பிவைக்கப்படும். இலங்கை இந்தியா தவிர்த்து வேறு நாடுகளில் வசிப்பவர்களாயின் இலங்கை அல்லது இந்தியா வங்கி இலக்கங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இன்னும் நாம் கேட்டவற்றைத் தராத எழுத்தாளர்கள் தயவுசெய்து மெயிலில் அனுப்பிவைக்கவும்.

வெற்றிபெற்ற வாசகர்கள் உங்கள் gpay இலக்கத்தை sendhuram26@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்.

மேலும், இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மின்சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அவை மெயில் மூலம் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

சான்றிதழில் உங்கள் பெயரில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் தாராளமாகத் தெரிவியுங்கள். தேவையான திருத்தங்களைச் செய்து, சான்றிதழ்களை முறையாக வழங்கி வைப்போம்.

இனி எழுத்தாளர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.
போட்டியில் எழுதிய நாவல்களை வேறு எங்கும் பதிவிடலாம்(இது நம் பதிப்பகத்தால் வெளியாகவிருக்கும் நாவல்களுக்குச் செல்லாது.)

ஆனால், அனைத்து நாவல்கள்களும் வாசகர்கள் வாசிப்பதற்காக ஒக்டோபர் 15 வரை தளத்தில் இருக்கும். அதன் பிறகு நிச்சயமாகத் தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிடும். எழுத்தாளர்கள் விரும்பினால் மட்டும் தளத்தில் தொடர்ந்து இருக்கும்.


எழுத்தாளர்களைக் கண்டுபிடிக்கும் போட்டி லிங்கினைப் பார்க்க: (தவறான பதில்கள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டிருக்கின்றன)


வாசகர்களின் வாக்குப் பதிவினைப் பார்க்க: (307 வாக்குகள் பதிவிடப்பட்டிருக்கின்றன.)


att.T1Y9c8cxiibqrM5TQYTA1MFROLhopQ0jXwbv6RCNnbg.jpg


இது முதல் மூன்று வெற்றியாளர்களுக்கான மின்சான்றிதழ்கள்: தங்கம், வெள்ளி, வெண்கல நிறங்களில் வரிசைப்படி இருக்கின்றன:

முதல் இடம் :


ce6d2722-cfe9-4e64-80bf-def747ff26f4.jpeg

இரண்டாம் இடம் :

e014b5b0-4fa8-4e47-82ea-79d6d38c538d.jpeg

மூன்றாம் இடம் :

152c4c78-d1df-46ec-b17c-60e0cee3cb53.jpeg



இந்தப் போட்டியில் எங்களுடன் பயணித்த ஒவ்வொரு எழுத்தாளருக்கும், ஒவ்வொரு வாசகருக்கும் மீண்டும் ஒருமுறை எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்!

நட்புடன்
நிதனிபிரபு நாவல்கள் தளக் குழு
 
Last edited:

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
171
160
43
France
ஹன்சா சகோதரிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
மற்றும் பரிசுபெற்ற, பெறாத எழுத்தாளர்கள் அனைவருக்கும் மனம்நிறைந்த பாராட்டுகள்.
நான் வாக்களித்த கதைகளில் இரண்டுக்கு பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி.நன்றி.