தீஞ்சுவை மலர் -19
அவனின் பாவமான முகத்தைப் பார்த்தவள் , அமைதியாக கம்பெனிக்காரர்களிடம் கால் செய்து பேசினாள் . தமிழுக்கு எண் மூன்றை அழுத்தவும் என்று வந்தது. ஆனால் அதில் பேசியவருக்கும் தமிழ் தெரியவில்லை. மலருக்கு அதைப் பற்றிய கவலை இல்லை. அவள் ஆங்கிலத்தில் பேசுவது அத்தனையும் அவன் ரசித்துக் கொண்டிருந்தான் . கதிருக்கு மற்றவர்கள் பேசும் ஆங்கிலம் புரியும் என்றாலும் அவனுக்கு இத்தனை சரளமாக பதில் பேச வராது .போனில் பேசும்பொழுது சரளமாக உச்சரிக்கும் அவளது நாக்கும் உதடும் அவ்வப்போது சிமிட்டிக் கொள்ளும் கண்களும் உங்களுக்கு மத்தியில் நான் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்ளும் மூக்கும், நெற்றியில் இருக்கும் குட்டி பொட்டும் என்று அளவிட்டுக் கொண்டு வந்தவனுக்கு அவள் கழுத்தில் அவன் கட்டிய தாலி இல்லை. மெட்டி இல்லை. வகுட்டில் குங்குமம் இல்லை.," அதுதான் சட்டப் படி அறுத்துவிட்டாச்சுல்ல. இப்ப எதுக்கு நான் கட்டிய தாலி "என்று நீதிமன்ற வளாகத்தில் ஏளனமாகப் பேசி அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டது இப்போது நினைவுக்கு வந்தது. அவன் தன்னைப் பார்ப்பதை அவள் கண்டுக் கொள்ளவும் ,அவன் முகத்தை அவள் பார்க்கவும் சட்டென என்று தன்னுடைய கண்களை திருப்பிக் கொண்டான். அவன் திரும்பிய இடத்தில் அவன் கண்களில் பட்டது அவள் கவர்னரிடமிருந்து வாங்கிக் கொள்ளும் அந்த தங்கப் பதக்கம் தான். இந்த போட்டோவை தன்னுடைய வீட்டில் ஹாலில் மாட்ட வேண்டும் என்று அவள் எத்தனையோ கேட்டாள் தான். ஆனால் முடியவே முடியாது வீட்டில் இடமில்லை என்று வீடு எங்கிலும் சாமி படங்களை மாட்டி இருந்தவர்கள் இவளின் ஒற்றை போட்டோவுக்கு மறுப்பு சொல்லி இருந்தார்கள்.
மலர் வீடு எங்கும் சுத்தமாக இருந்தது. ஒரு தூசி துரும்புக் கூட ஒரு மூலையில் கூட பார்க்க முடியவில்லை. தேவையில்லாத எந்த சாமான்களும் இருக்கவில்லை . இதுதான் வீடு என்று பறைசாற்றி கொண்டிருந்தது அந்த இடம் . இப்போதுதான் அவன் அந்த வீட்டை முழுமையாக அளவிட்டு பார்த்துக் கொள்கிறான். இல்லம் என்பது இனிமை தரும் இடமாக இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக அவர்கள் வீடு இருந்தது அமைதியாக நின்றுக் கொண்டு வீட்டை கண்களால் அளவிட்டுக் கொண்டவன்., மீண்டும் தன்னுடைய மனைவியின் முகத்தை பார்க்க ஆரம்பித்தான். இப்போது அவர்கள் பதில் பேசி முடிக்கும் தருவாயில் இவள் ஸ்பீக்கரை போட்டாள் அவர்கள் சொல்வது எல்லாம் அவனேக் கேட்டுக் கொள்ளட்டும் என்று தான்.
" இதற்கு பதில் வேறு ஒரு ரீபிளேஸ்மென்ட் வரும் . இதை நீங்களே வைத்துக் கொள்ளலாம்"என்று கூறி விட்டார்கள். ஆனால் அதற்கும் பத்து நாட்கள் ஆகும் . இப்போது அவன் புதிது வாங்குவதற்கு அவனிடம் கையில் காசு இல்லை. அதைப்பற்றி மலரிடம் மீண்டும் ஒருமுறை கூறுவதற்கு அவனுக்கு என்னவோ போல இருந்தது. அமைதியாக நன்றி உரைத்து விட்டுத் தன்னுடைய வீட்டிற்குச் சென்று விட்டான்.
அவனைப் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது. அவன் வீட்டினர் யாருமே அவனுக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என்று நினைக்கவே இல்லை. பெற்றவள் உட்பட. அத்தனைப் பேருக்கும் மூத்தவன், மூத்த மருமகள் என்றால் வீட்டிற்கு வேலை செய்யும் வேலைக்காரர்கள் தான் போலும். பெரு மூச்சு விட்டுக் கொண்டு கதவை சாத்தினாள் .
மறுநாள் காலையில் ஆரிவ் வந்ததும் அவனிடம் சொல்லி தனக்கு சில இன்னர்ஸ் வாங்க வேண்டும் என்று அவனுடன் கடைக்குச் சென்றாள் மலர். அப்போது எதிர்பாராமல் அங்கே யமுனாவின் போட்டோவை பார்க்கவும் அதைப்பற்றி மலரிடம் சொன்னான் . வீட்டிற்கு வந்ததும் அதைப்பற்றிய பேச்சு வந்த போது மலர் சொன்னது "இந்த மாதிரி ஒரு வேலை செய்யறதுனால தான் அவங்க தன்னுடைய விஷயங்களை ஓபன் பண்ணி உன்கிட்ட சொல்லலைன்னு நினைக்கிறேன். அவர்களுக்கு ஏதாவது ஒரு தயக்கம் இருந்திருக்கலாம். இது எல்லாராலும் சாதாரணமா எடுத்துக்க கூடிய தொழில் இல்லை இல்லையா?"
" அது சரிதான் ஆனால் அதெல்லாம் முன்னாடி காலத்துல ஓகே. இப்ப எல்லாருமே இது ரொம்ப சர்வசாதாரணமா பாக்குற விஷயம் தானே! என்று ஆரிவ் கேட்கவும்,
"நீ சொல்ற மாதிரி எல்லா வேலையும் எல்லா விஷயங்களையும் அவ்ளோ ஈசியா எல்லாராலும் எடுத்துக்க முடியாது ஆரிவ் .நீ எனக்கு தெரிஞ்சு அவங்க கிட்ட மனசு விட்டு பேசுவது நல்லதுன்னு தோணுது. அவங்களுக்கு பைனான்சியலாவும் ப்ராப்ளம் இருக்கும் போல . நீ உன்னோட மனசை தெளிவா அவங்ககிட்ட சொல்லிடு. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு டவுட் டா "
"என்ன?"
"இல்ல பொதுவா எல்லா ஆண்களுமே தன் மனைவியின் உடல், தான் மட்டுமே பாக்கற விஷயமா இருக்கனுன்னு நினைப்பாங்க. பட் யமுனா.."
"நீ இன்னும் எந்த காலத்துல இருக்க? இப்ப எல்லாம் ரோட்டுலையே குட்டி ட்ரெஸ் போடறது ரொம்ப சர்வ சாதாரணமா போச்சு. ஏன் நம்ம டான்ஸ் க்ளாஸுல அநேகமா வர பொண்ணுங்க வல்கராதான் டிரஸ் பண்ணறாங்க. அதுக்குன்னு.. அதெல்லாம் பத்தி எனக்கு கவலை இல்லை. பட் கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு. "
"பார்றா பொண்டாட்டின்னதும் கண்டிஷன்ஸ் எல்லாம் தூள் பறக்குது "
"அதெல்லாம் அப்படித்தான் " சின்ன வெட்கப் புன்னகையுடன் சொன்னவனை ரசித்தவள்,
" உன்னோட வார்த்தைகள் எப்பவும் எந்த காலத்துலையும் அவங்களை ஹர்ட் பண்ணாம பார்த்துக்கோ ஆரிவ் ."
" ம்! நீ சொல்றதும் சரி தான்" என்று கூறியவன் அமைதியாக தன்னுடைய அறைக்குச் சென்று விட்டான்.
இவளோ அவசரமாக அவனுக்குத் தேவையான இரவு உணவை செய்து விட்டு ஜிம்முக்கு கிளம்பினாள் .
செல்வதற்கு முன் கதிருக்காக வாங்கியதை எப்படி அவனிடம் கொடுப்பது? என்ற யோசனை வந்தது .
அவன் வீட்டுக்கு நான் செல்ல மாட்டேன். அவனே வரும்போது கொடுத்துவிடலாம் என்று அமைதியாக இருந்து விட்டாள். கதிருக்கு இவள் வாங்கிய போது ஆரிவ் ஏதாவது சொல்வான் என்று எதிர் பார்த்தவள் அவன் அமைதியாக இருந்ததற்கு யமுனாவின் பிரச்சனை தான் காரணம் என்று புரிந்துக் கொண்டாள்.
இவள் கிளம்பும் நேரம் கதிரும் கிளம்பி வந்தான்.
"மலர் வாயேன் நானும் ஜிம்முக்கு தான் போறேன். சேர்ந்தே போகலாம்" என்றவனைக் கண்டுக் கொள்ளாமல் தன்னுடைய பைக்கை நோக்கி சென்றாள்.
'ஓ நீயே ட்ரைவ் பண்ணுவியா?" என்றவன் தன்னுடைய வண்டியில் ஏறி சென்று விட்டான். இவளும் தன்னுடைய ராயல் என்பீல்டு வண்டியில் ஏறி சென்று விட்டாள் . அவள் முன்னே செல்லவும் இவன் பின்னால் தான் வந்தான்.
தன்னுடன் இருந்த மலர் வேறு இப்போது வேறு பரிணாமத்தில் பார்க்கும் மலர் வேறு என்பதை அவன் ஒவ்வொரு நிலையிலும் அறிந்துக் கொண்டான்.
அவனும் தான் நிறையவே மாறி இருக்கிறான். எல்லாவற்றுக்கும் அட்ஜஸ்ட் செய்துக் கொள்கிறான். ஷால் போடாமல் இருந்தால் கூட தவறு என்று நினைப்பவன் , டான்ஸ் வகுப்பில் இருப்பவர்களை பார்த்து எல்லாம் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது என்பதைப் புரிந்துக் கொண்டான். ஆடல், பாடல், ஜாலி எல்லாம் எல்லாருக்கும் பொதுவானது என்பதை புரிந்துக் கொண்டான். காதல் பாடல்கள் கேட்க ஆரம்பித்திருந்தான். மலர் தொடும் எல்லா விஷயங்களும் திறமையாக செய்து முடிப்பாள் என்ற விஷயம் தெரிந்தது. சாமிக்கு சின்ன இடமாக இருந்தாலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது எல்லாம் தெரிந்தது. அவன் அன்னை தந்தைக்கு இருந்த ஹோல்ட்டிங் பிஹேவியர் அவனுக்கும் முன்பு இருந்தது. வீடு எரிந்து சாம்பல் ஆனதில் அவனுடைய அந்த பழக்கமும் எரிந்து சம்மபலாகி விட்டது. எந்த பழைய துணிகளையும் அவன் வைத்துக் கொள்வது இல்லை. கிழிந்த உள்ளாடைகள் போடுவதில்லை. கொஞ்சமாக இருந்தாலும் நல்ல உடைகள் மட்டும் வைத்துக் கொண்டான். வாழும் இடம் வாழும் மனிதர்களுக்கு மட்டும் தான் என்பது புரிந்தது. கண் கெட்டப் பின் சூர்ய நமஸ்கரம் செய்து தான் என்ன பலன்?
இங்கே தன்னுடைய அறையில் அமைதியாக வந்து அமர்ந்த ஆரிவ் அவளுக்கு கால் செய்தான்.
"ஹெலோ" என்ற இனிமையான வார்த்தை அவன் காதில் கேட்டது.
பிறகு ஹெலோ என்றும் இவனும் ஆரம்பிக்க, "அம்மா எப்படி இருக்காங்கன்னு கேக்கத்தான்" என்று ஆரம்பித்து அடுத்த சில நிமிடங்கள் அவர்களின் உரையாடல் நீண்டது.
"டாக்டர். சாரி நான் இன்னும் பணம் அரேஞ்ச் பண்ண முடியல " என்று அவள் இழுக்கவும்..
அதற்கு பதில் கூறாதவன், "யமுனா எனக்கு உங்களை பார்க்கணும் மாலை கிளினிக் வந்துடுங்க" என்று பட்டென்று கூறி விட்டான்.
"எதுக்கு .. எதுக்கு நான் அங்க வரணும்?"
"அங்க வாங்க சொல்லறேன் "
அவளின் தொண்டைக்குள் பயப் பந்து உருண்டது...
தொடரும்...