தேன் நாட்டு பைங்கிளி - 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,513
113
Germany
அத்தியாயம்: 6

சகாயத்தின் வீடு...

சாப்பாட்டு மேஜையில் அனைவரும் கூடியிருக்க, குடும்பத்தாருக்கு உணவுடன் சேர்த்து சில விடயங்களும் பரிமாறப்பட்டது. அவற்றுள் முக்கியமான ஒன்று‌,

"செந்தூர் பொண்ணு ஸ்ரீஜாக்கு அடுத்து வாரம் நிச்சயதார்த்தமாம் தம்பி. பையன் ரவி அண்ணாவோட சினேகிதன் மகனாம். சாயங்காலமாப்பல வந்துசொல்லிட்டு போனாரு." என்ற ஆண்டாளுக்குச் சிறு தலையசைப்பைத் தந்துவிட்டு உணவில் கவனமானான் கரிகாலன்.

"கடைக்கும் வந்து சொல்லிட்டுத்தான் போனான். நாளைக்கி காலைலயும் வருவேன்னு சொன்னான். உன்னைப் பாத்து அழைக்கணுமாம்." என்று மகனிடம் சொன்னவர்,

"வந்தா... அவன்ட நம்ம வானதியோட ஜாதகக் குறிப்ப எடுத்துக் குடுத்து விடு ஆண்டாள். தரகர் கிட்ட காட்டணும்னு சொன்னான்." என்று சகாயம் சொல்ல, வானதிக்குத் திக் என்றது.

‘கலியாணமா?’ என்று உதறல் எடுக்க, யாருக்கும் எவ்வித பதிலும் தராது அமைதியாய்த் தட்டில் பார்வையைப் பதித்தாள்.

"தரகர்லாம் வேண்டாம்ப்பா. தெரிஞ்சவங்க கிட்ட சொல்லிருக்கேன். வானதியோட ப்ரபைல்ல மேட்ரிமேனில ரிஜிஸ்டர் பண்ணிருக்கேன்." என்றதும்,

"என்னிட்ட கேக்காம ஏன் செய்திங்க?" என்றாள் வேகமாக.

"உங்கிட்ட ஒன்னொன்னுக்கும் பர்மிஷன் வாங்கிட்டு தான் செய்யணுமா?" எனக் காட்டமாகக் கரிகாலன் கேட்க,

"ஓம்... என்ர கலியாண விஷயம் எண்டால் என்னிட்ட தானே முதல்ல கதைச்சிருக்கணும். என்ர ஃபோட்டோ இணையத்துல உலாத்துறது விருப்பம் இல்ல எனக்கு. கண்டவன் பாப்பான். கால் எடுத்து கதைப்பான். எந்த ஒரு அன்நோன் பர்ஷனிடமும் நான் கதைக்க தயாராய் இல்லை." என்று சண்டைக்கு நிற்க,

"இப்ப என்னாச்சி வானும்மா... பதிவு தான பண்ணிருக்கு. அதுவும் பாதுக்காப்பான இடத்துலதான் பதிவு பண்ணிருப்பான். உங்கிட்ட யாரும் பேசப் போறது இல்லை. நாங்க பாத்து, பேசி, ஒத்து வந்தா மட்டும் தான் உம்முன்னாடி கூட்டீட்டு வருவோம்." என்று சகாயம் சமாதானம் சொன்னாலும்,

"இப்ப கலியாணம் அவசியம் தேவையா?" என்றாள்.

"இப்ப இருந்தே தேடினாத்தான் நல்ல வரன் அமையும் ம்மா." என்றார் சகாயம்.

"முதலில் இவருட கலியாணம் எண்டு தானே பேசி இருந்தம். மச்சாளும் இவருக்காகக் காத்துக் கொண்டு இருக்கா. இப்ப எனக்குச் செய்ய வேணும் எண்டு அவசர அவசரமா எனக்குத் தெரியாமலேயே பதிவெல்லாம் செய்தால்… ஒத்துக் கொள்ள ஏலாம கிடக்கு." என்றவளுக்கு இப்போதைக்கும் திருமணத்தில் விருப்பமில்லை. அதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. அதை வெளிப்படையாகச் சொல்லாது கரிகாலனைக் கேடயமாக்க முயன்றாள். ஆனால்,

"என்ன வானும்மா இது! வீட்டுல வயசுக்கு வந்த பொம்பளப்பிள்ளைய வச்சிட்டு, அண்ணெங்காரனுக்குக் கல்யாணம் முடிப்பாங்களா! அவனுக்குப் பொண்ணு வேற ரெடியா இருக்கு. நாளைக்கே முடிக்கணும்னு சொன்னாக்கூட, அத்தன ஏற்பாட்டையும் ஒத்தை ஆளாவே செஞ்சிடலாம். ஆனா உனக்கு... நல்ல பையன தேடிப்பிடிக்கவே பல நாள் ஆகும். நம்ம வித்யா மகளுக்கு நாலு வர்ஷமா பாத்திட்டு இருக்காங்க. இன்னும் மனசுக்குப் பிடிச்ச மாதிரி அமையல. அதுனால தடுக்காத வானும்மா." என்றார் ஆண்டாள். அதுவும் சரிதான் என்பதுபோல் சகாயமும் தலையசைத்தார்.

சில நொடிகளுக்கு அங்கு மௌனம் நிலவ, தன் எண்ணம் ஈடேராத கோபத்தில் முகத்தைச் சுருக்கிக் கொண்டாள். அவளைப் பார்த்து மென் நகை புரிந்தவர், அவளின் தலையை ஆதுரமாகத் தடவி,

"உங்கம்மா கல்யாணத்த தான் பாக்குற பாக்கியம் எனக்கு இல்லாம போயிடுச்சி. ஆனா உன்னோடத... ஆசை தீர பக்கத்துல இருந்து பாக்கணும். ஓடி, ஆடி வேலை செய்யுற வயசு முடியுறதுக்குள்ள பேரன் பேத்தி எடுத்திடணும்." என்றார் ஆண்டாள் ஆசையோடு.

"உன்னோட அம்மா அப்பா இடத்துல இருந்து உனக்கு நாங்க எல்லாத்தையும் செய்யணும்னு ஆசைப்படுறோம் ம்மா." என்று சகாயமும் சொல்ல, ஆண்டாளும் வானதியின் கன்னம் தடவி கொஞ்சலாகப் பார்த்தார். ஏதும் சொல்லாது மௌனியானாள் வானதி.

"எனக்குத் தெரியாமல் எப்ப இருந்து இந்த வேலை நடக்குது?" என்றாள் கரிகாலனைப் பார்த்து கோபமாக.

"ரெண்டு மாசமா." என்றதும்,

"ஒண்டும் செட் ஆகலயா?" என்று சந்தோஷமாகவே கேட்க, அவளை முறைத்தவன்,

"நாலஞ்சி வரன் நல்லதா வந்திருக்கு." என்று தன் அலைபேசியை எடுத்து சில புகைப்படங்களைத் தந்தைக்குக் காட்டினான்.

"ண்ணா எனக்கு... நானும் வானுக்கா கிட்ட மாட்டிக்கப் போற அப்பாவி ஜீவன பாக்கணும்." என்று கத்தியபடி பார்த்திபன் எழுந்துசென்று இருவருக்கும் மத்தியில் நின்றுகொண்டான்.

தொடு திரையை விரல்களால் தள்ளிவிட்டு, தள்ளிவிட்டு ஒவ்வொரு புகைப்படமாகக் கரிகாலன் காட்ட, பார்த்திபன் புருவம் உயர்த்தி, "எல்லாருமே சூப்பரா இருக்காங்கண்ணா... சல்லடைல சலிச்சு எடுத்த மாதிரி. உங்க செலக்சன் என்னைக்குமே பெஸ்ட்டு தான்." என்றான் சிலாகித்துபடி. இதில் இரு புகைப்படத்தை மட்டும் குறிப்பிட்டுக் காட்டியவன்,

"இந்த ரெண்டும் நல்ல இடம் ப்பா... அதுலயும் க்ரே டி சர்ட் போட்ட பையனுக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை." என்க,

"யாரும் எனக்குக் கெட்ட பழக்கம் உண்டு எண்டு பப்ளிக்கா மெட்ரிமேனில தம்பட்டம் அடிக்க மாட்டாங்க. ரகசியமாத்தான் வச்சிருப்பான்." என முணுமுணுத்தாள் வானதி.

"என்ன சொன்ன?"

"எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை எண்டால் அவன் மனித ஜீவியா? எண்ட கேள்வி முறைக்குது. அத்தோடு ஊருக்குள் நல்லவன் வேடம் போட்ட வேடதாரிகள் தான் அதிகம்"

"எந்த வேஷம் போட்டாலும் நான் கண்டுபிடிச்சிடுவேன்." என்று கரிகாலன் சொன்னதும் மூச்சை இழுத்துவிட்டு உள்ளுக்குள் பொருமியபடி தட்டை வெறித்தாள் வானதி.

"பையன் யாரா இருந்தாலும் எம்பையன் நல்லா விசாரிச்சித் தான் செய்வான். அதுவும் உங்க ரெண்டு பேர் விசயத்துலயும் ஆயிரம் முறையாவது யோசிப்பான்." என்று சகாயம் பெருமிதத்துடன் சொல்ல,

"ஆமாம் ப்பா... விசாரிச்சிட்டு தான் இருக்கேன். திருப்தியானதா இருந்தா மேப்படி பேசுவோம்."

"அப்ப காலைல நீ ஆஃபீஸ்க்கு போனதும் செந்தூரத்துக்கிட்ட கால் பண்ணி விசயத்தச் பேசிடு. நேத்துல இருந்து ஃபோன் பண்ணிட்டே இருக்கான். 'வானதி ஜாதகத்துல கல்யாண யோகம் கூடி வந்திருக்கு. ஆறு மாசத்துக்குள்ள முடிக்கணும். இதை விட்டா அடுத்து கல்யாணம் பண்றது கஷ்டம்'னு ஏதோ ஜோசியக்காரன் சொன்னதாச் சொல்லிச் சொல்லியே என் உசுரை வாங்கிட்டு இருக்கான்." என்றவர்,

"விசாரிக்க போறப்ப உன் சித்தப்பனையும் கூட வச்சுக்க தம்பி. அப்பத்தான் அவனுக்கு ஒரு திருப்தி கிடைக்கும்." என்று சொல்ல, ஆண்டாள் அதைப் பூரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். தன் தங்கை பிள்ளைகளைத் தன் பிள்ளைகளுக்கு நிகராக அவர் நினைப்பதில் அகம் மகிழ்ந்து போனது.

ஏனோ அந்தச் சூழ்நிலை வானதிக்குக் கனமாகத் தோன்றியது. என் திருமணத்தை என் விரும்பமின்றி என் கண் முன்னாலேயே என் காது பட பேசுகின்றனரே என்ற கடுப்பு உண்டாகியது. வேகமாகத் தட்டில் இருந்ததை வாயிற்குள் இறக்கி விட்டு, தட்டுடன் சமைலறைக்குள் சென்றாள்.

"போதுமா வானு.?" என்ற ஆண்டாளுக்கு, சிறு தலையசைப்பைத் தந்தவள், அறைக்குள் முடங்கினாள்.

"அவ சரியாச் சாப்பிட்ட மாதிரி தெரியலயே தம்பி." என்று கவலையுடன் பெரியவர்கள் இருவரும் அவள் சென்ற வழி பார்க்க,

"நான் பாத்துக்கிறேன் ம்மா. நீங்க மாத்திரை போட்டுட்டு தூங்குங்க. பார்த்திபா அம்மாக்கு டேப்லெட்..." என்க,

"இதோண்ணா..." என்று வெள்ளை மற்றும் காவி காகிதப் பையை உலுக்கி இரவு நேரத்திற்கான மாத்திரை அட்டைகளை நீட்டியவன், அவர்கள் அறைக்குள் படுக்க ஏதுவாய் மெத்தையை எடுத்து வைத்தான்.

கடந்த சில ஆண்டுகளாக, மாத்திரைகளின் உபாயம் இல்லாது, உயிர் வாழவே முடியாது என்ற நிலைக்கு வந்திருந்தனர் இருவரும்.

பெரிய மாடமாளிகை அல்ல அந்த வீடு. சொல்லப் போனால் கல்லடியில் யோகராசா-உமையாள் கட்டிய வீட்டில் கால் பங்கு தான்.‌

ஒற்றை படுக்கை அறை மட்டுமே இருந்ததால், படிக்கட்டின் கீழ் பகுதியை மரத்தட்டிக் கொண்டு அடைத்து, அறையாக மாற்றிக் கொண்டாள் வானதி.

சிறிய இடத்தில்
ஆறுக்கு இரண்டு என்ற கணக்கில் சிறிய கட்டில். படிக்கூண்டிற்கு அடியில் விளக்குடன் கூடிய எழுதுமேஜை. மடிக்கணினி, தூரிகை, வண்ணக் கலவைகள், பென்சில் ஸ்கெட்ச், நோட் எனத் தன் வரைகோள்களைக் கிடத்தியிருப்பாள் மேஜையில்.

மரத்தடுப்பு முழுவதும் பல ஒவியங்களைத் தன் கைப்பட வரைந்து ஒட்டிவைத்திருந்தாள்.

வரைவது மட்டுமல்ல collage art மிகவும் பிடிக்கும்.

அதாவது செய்தித்தாள் மற்றும் மாத இதழ்களில் வரும் புகைப்படங்கள் மற்றும், எழுத்துக்களை வெட்டி, ஒட்டி, புதிதாக வித்தியாசமான ஒன்றை உருவாக்குவது.

கோபமாகக் கதவை அடைத்தவள், தலையைப் பிடித்துக்கொண்டு சில கணங்கள் கட்டில் அமர்ந்தாள். பின் இழுவிசை மேசையைத் திறந்து தன் ஸ்கெட்ச் புக்கை எடுத்தாள். கூடவே கத்தரிக்கோலையும்.

கடையிலிருந்து சில ஆங்கில மாதாந்திர இதழ்களை எடுத்துவந்திருக்க, அதில் சில எழுத்துக்களை வெட்டி எடுத்தாள்.

எழுத்துக்களை வார்த்தைகளாக, அர்த்தம் தரும் வாக்கியமாக அடுக்கி, பசையிட்டு ஒட்ட எதானிக்கும்போது கதவு தட்டப்பட்டது.

"புதுசா தட்ட வேண்டாம். எப்பொழுதும் வாரது கணக்கா வாங்க..." என்றாள் தட்டுவது கரிகாலன் என்று தெரிந்து.

உள்ளே வந்தவனை உக்கிரமான முறைத்தபடி அவள் இருக்க, புன்னகையுடன் கட்டில் அமர்ந்தவன்,

"இப்ப என்ன ஆச்சின்னு காளி மாதிரி முறைக்கிற. கல்யாணம் தான..." என்றவனைப் பேசவிடாது,

"கலியாணம் ஒண்டு தான் இப்ப கேடா கிடக்கு. கவனிக்க வேண்டிய பிரச்சனைகள் வரிசையா காத்துக்கொண்டு இருக்கும்போது, இது அவசியமா?" என்க,

"இதுவும் அவசியம் தான்." என்று சொல்லி‌ அவளின் கொதிப்பைக் கூட்டினான்.

"வீட்டுட பேர்ல வாங்கி வச்சிருக்கிற லோன கட்டணும். பெரியம்மா நகைய மீட்கணும். பார்த்திபனட படிப்புக்கு எடுக்கணும். பெரியப்பாட கிட்னில கல். பெரிம்மாட கர்ப்பப்பை ஆப்பரேஷன் முடிஞ்சி நாள் போகல்ல. அவங்கள தேமே எண்டு குந்த விடாம என்ர கலியாணம் எண்டு வதக்கி எடுக்கப்பாக்குறிங்க."

"நீ இப்ப பழைய காலத்து ஹீரோயின் கணக்கா, உன் வீட்டுல மட்டும்தான் கஷ்டம் இருக்குறமாதிரி அடுக்குற." என்றவனை முறைத்தவள்,

"எல்லாம் வந்து போறதுதான் வானதி. நடக்குறது அதுபாட்டுக்கு நடந்திட்டே இருக்கணும். அதுக்காகவெல்லாம் கல்யாணம் வேணாம்னு யாரும் சொல்லமாட்டாங்க. உன் மனசுல வேற எதாவது..." என்று அவன் இழுக்க,

"கற்பனைக்குக் கடிவாளம் போடுங்க. எனக்கு இப்ப கலியாணம் வேணாம். அவ்வளவு தான். கலியாணம் கட்டிவச்சி பாக்கணும் எண்ட ஆசை இருந்தா மாமா, மாமிட்ட கதையிங்க. மந்தாங்கினிய இந்த வீட்டுக்குக் கூட்டி வாங்க. குறைஞ்சது ரெண்டு வருஷம், அவகூட இருந்து அவளக் கொடுமப் படுத்தாம நான் கலியாணம் கட்டமாட்டன். உங்கட பிள்ளை குட்டிகளப் பாக்காம இந்த வீட்டைவிட்டு நான் போகமாட்டன்." எனப் படபடவென பொரிந்தாள்.

மந்தாங்கினி‍, ஆண்டாள் உமையாளின் அண்ணன் நாராயணனின் மகள். அவளைக் கரிகாலனுக்காகப் பேசியிருக்கின்றனர்.

"உனக்கு எங்க எல்லாரையும் விட்டுப்போறது கஷ்டமா இருக்குங்கிறதுனாலயும், மந்தாங்கினிய நாத்தனார் கொடும படுத்தணுங்றதுனாலயும் தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற! வேற காரணம் இல்லை." என்றவன், அடுக்கி வைத்திருந்த காகித எழுத்துக்களுக்கு விழிகளை உருட்ட, வேகமாக அதைக் கலைத்துவிட்டு, நோட்டை மூடி வைத்தாள்.

"எங்களை இங்கக் கூட்டிட்டு வார நேரம் என்ன சொன்னிங்க எண்டு நினைவு இருக்கா?" என்ற வானதிக்கு, தலையை இடம் வலமாக அசைத்து இல்லை என்றான், உதடுகளை மடித்து புன்னகையை அடக்கியபடி.

"சுகமோ கஷ்டமோ எதையும் ஒண்டா சேந்து விரட்டி அடிப்போம் எண்டவர், கஷ்டப் படுற காலங்கள்ள வீட்ட விட்டு விரட்டி விடுறதுல கண்ணா இருப்பார் எண்டு நான் நினைக்கல்லை." என்ற போது அவளின் இமைகள் தடித்து, கண்ணீர் தேங்கி நின்றது.

"கல்யாணம் பண்றதும்... வீட்ட விட்டு விரட்டி அடிக்கிறதும் ஒன்னா?" என்று சந்தேகமாகக்கேட்க,

"ஓம்... ஒண்டு தான். உங்கட நாட்டுல பெண் பிள்ளைங்களுட கலியாணம் பிறந்த வீட்டோட செலவு கணக்கு. கலியாணம், பெத்தவங்களுட கடமையாய் பாவித்து விரட்டி விடுற சடங்கு. ஆனா எங்கட நாட்டுல அப்படி இல்லை. அங்க பெண் ஆட்சி. பொத்தவங்களுக்குச் செய்றது பெண் பிள்ளைகளுட கடமை. ஆரும் கேட்ட மாட்டாங்க." என்று முகம் திருப்பியவள், உன் நாடு, என் நாடு என்றதிலேயே புரிந்துகொண்டான் வானதி இன்றுவரை இந்தியப் பிரஜையாகத் தன்னை உணரவில்லை என்பதை.

உணர்ந்திருந்தால் தன் பேச்சு வழக்கை இங்குள்ளதுபோல் மாற்றியிருப்பாள். முயற்சியாவது செய்திருப்பாள். நாடு மாறினாலும் சிலவற்றை மாற்றிக் கொள்ளமாட்டேன் என்ற பிடிவாதத்தின் உச்சம் அவள் பேசும் இந்தத் தமிழ்மொழி.

அவள் தந்தை வழி தமிழ். அவள் ஊனோடு கலந்த உறவு. உமையாளுக்கு யோகராசவிடம் மிகவும் பிடித்தது என்னவென்னு கேட்டால் உடனே பதில் சொல்வார் தன் கணவன் கதைக்கும் மட்டக்களப்பு தமிழ் என்று. காதலோடு கணவனுடன் கலக்க வைத்தது என்று பிள்ளைகளிடம் அடிக்கடிச் சொல்வார்‌.

வானதி, தான் பேசும் தமிழில் தன் தாயும் தந்தையும் ஜீவித்திருப்பதாக நினைப்பவள். பிறகு எப்படி மாற்றிக்கொள்வாள்?

இதுவரை மாற்றாதவள் இனியும் மாறுவாளா என்பது சந்தேகம்போல் இருந்தது வானதியிடமிருந்து வந்த திருமண நிபந்தனை.

“எங்கட நாட்டு வழக்கப்படி என்ர மாப்பிள்ள என்னோட என்ர வீட்டுலதான் வந்து இருக்கணும். பெரியம்மா பெரியப்பாட கடைசி காலம்வரை நான் அவங்களோட இருப்பன். பொம்பிள பிள்ளைகள் நாங்க மாமியார் வீட்டுக்குக் கொத்தடிமயா போக மாட்டம்.
இதுக்குச் சரி எண்டா நீங்க கொண்டு வார பெடியனோட நான் கதைக்குறன்.” என்றவளை ஒரு கணம் உற்றுகவனிக்க,

“கண்டிசனுக்குச் சரி எண்டா நான் கலியாணம் கட்ட ரெடி. வேற ஒண்டும், வேற யாரும் என்ர மனசுல இல்ல.” என்றாள் உறுதியாக.

நிஜமா? என்பது போல் பார்த்தவன் நக்கலான சிரிப்பில் இதழ்களை வளைத்துக்கொண்டு சென்றான்.
 
Last edited:

Author: நிதனிபிரபு
Article Title: தேன் நாட்டு பைங்கிளி - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
கரிகாலன் ஏதோ யோசிச்சி இருக்கான்..... வானு மறைக்குது.....
ஶ்ரீஜா தான் வர்மாவின் காதலியா
 
  • Love
Reactions: STN - 48

sathiyags

Well-known member
Apr 18, 2026
321
288
63
India
கரிகாலன் வானதியை ஸ்மெல் பண்ணிட்டான் போலவே!
 
  • Love
Reactions: STN - 48

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.