• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நயவனின் நயவள் இவளோ - 3

Vishakini

Moderator
Staff member

நயவனின் நயவள் இவளோ!

அத்தியாயம் 3

“என்ன அண்ணி இப்படி ஃப்ரிஸ் ஆகி நிக்கிறீங்க?” ஹரிஷ்.

“ ஹாங்!..என்ன?” அனன்யா.

“சாரி டங்கு ஸ்லிப் ஆயிடுச்சுன்னு நினைக்கறேன். அனன்யா இங்கே ஏன் நின்னுட்டீங்கன்னு கேட்டேன்.”

“ராஜராஜ சோழனை பேண்ட் சர்ட்ல பார்க்குற மாதிரி இருந்தது.”

“யாரை சொல்றீங்க? அதோ அங்க நின்னுட்டிருக்காரே அவரையா சொல்றீங்க” என்று ஹரிஷ் அவனை நோக்கி கை நீட்ட.

வேகமாக அவனின் கையை தடுத்தவள், தன் உதட்டின் மீது கைவைத்து, “உஷ்… அமைதியா இரு ஹரிஷ்.” என்றாள்.

திரும்பியவன் அவர்களை நோக்கி நடந்துவந்தான். அனன்யா அதிர்ச்சியோடு அவனை பார்த்துக் கொண்டே நிற்க.

அவனோ, “ ஹாய் அனன்யா. ஐ அம் அஸ்வின்.” என்றான்.

அனன்யா அதிர்ச்சியில் அப்படியே நிற்க. அவளின் கையை சுரண்டினான் ஹரிஷ்.

“கிலாட் டு மீட் யு. நீங்க எப்படி வரீங்க ராஜ…” சட்டென வாயை மூடிக் கொண்டவள். பின் நிதனமாகி, “நீங்க எப்படி வரீங்க? கேபிள் காரா? வாக் வே?” என்றாள்.

“வாக் வே.”

“சரி. நீங்க அவங்களோடு ஜாயின் பண்ணிக்கோங்க. நாங்க டிக்கெட் வாங்கிட்டு வரோம்.”

“ஹ்ம் …” என்றவன் சென்றுவிட்டான்.

“பியூட்டி… இருந்தாலும் நீ என் முன்னாடியே இப்படி வேறு ஒருத்தரை சைட் அடிக்கக் கூடாது.” என்றான் ஹரிஷ்.

“சைட் அடிப்பது ஒவ்வொரு தனி மனிதனோட உரிமை. அடுத்தவங்களுக்கு தொல்லையா இல்லாத வரைக்கும் எதுவுமே தப்பில்லை. நீ ரோஷிணியை சைட் அடிக்கிற மாதிரி.” என்றாள்.

“நீங்க இவ்வளவு ஷார்ப்பா இருப்பீங்கன்னு நான் எதிர்ப்பார்க்கலை பியூட்டி.” என்றான் ஹரிஷ்.

“பொண்ணுங்களுக்கு சூப்பர் பவர் இருக்கு‌. ஒரு பையன் எந்த நோக்கத்தோடு பேசுறான்? என்ன மாதிரி பாதுகாப்பை அவன் கிட்ட அவள் உணருவான்னு? ஈஸியா கண்டுபிடிக்க முடியும்.

நான் உன் கிட்ட பாதுகாப்பா ஃபீல் பண்ணேன். நீ என்னை ஃப்ரண்டா நினைக்கிறேன்னு எனக்கு தெரியும்.”

“நீங்க எல்லாம் கிரேட் தான். எங்களுக்கும் இந்த பவர் இருந்திருக்கலாம்” என்றான்.

“இந்த பவர் எல்லா நேரத்திலயும் வேலை செய்வதில்லை. அதான் எங்களுக்கும் கடைசியில் ஏமாற்றம் மிஞ்சது.”

“என்ன?” என்றான்.

“வா… நமக்கு முன்னாடி நின்னவங்க டிக்கெட் வாங்கிட்டாங்க. இப்போ முதல்ல நம்ம டிக்கெட் வாங்கலாம்.” என்று அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தாள்.

“போர் பிளஸ் டூ கிட்ஸ் கேபிள் கார் டிக்கெட்ஸ். செவன் வாக் வே டிக்கெட்ஸ்” என்றாள்.

“ஜெய் கையில் கேபிள் கார் டிக்கெட்டை தந்தவள். நீங்க போய் மேல பார்த்துட்டு இருங்க. நாங்க வந்துடுறோம்.” என்றாள்.

“ஓகே.”

ரோஜா முதல் ஆளாக செல்ல, பின் தங்கிய ராஜேஷ் யாரும் அறியாமல் அனன்யா காது அருகே, “எதாவது ஒரு பையனை எப்பவும் உரசிட்டே இருக்கணுமா? நான் உன்னை விட்டு பிரிஞ்ச உடனே அடுத்த ஆள் தேவைப்படுதோ?. அதுவும் சின்ன பையனா.” என்றான் இளக்காரமாக.

ஒரு நொடி அவனை நேசித்த மனம் துடித்தாலும் மறு நொடியே, “ஆமாண்டா. எப்போ உனக்கு வேற பொண்ணு தேவைப்பட்டதுன்னு என்னை விட்டு போனியோ. இனி நான் யார வேணும்னாலும் உரசுவேன், யார வேணும்னாலும் லவ் பண்ணுவேன். நீ யாரு டா என்ன கேட்க.” என்றாள்.

ஏதோ சொல்ல வந்தவன். “ராஜ்…” என்ற ரோஜாவின் அழைப்பில் ஓடியே விட்டான்.

அவன் சொன்னது கேட்கவில்லை என்றாலும், அவள் சொல்லியது அருகில் நின்ற அஸ்வின் காதில் விழுந்தது. எவ்வளவு முயன்றும் அவனின் கடினமான முகத்தில், ஒரு ஓரத்தில் சின்ன புன்னகை வந்து மறைந்தது.

“போகலாமா…” என்றான் அஸ்வின்‌.

பயத்தில் அனன்யாவின் உடல் தூக்கி போட்டது. 'என்ன அவன் குரலும் இப்படி ஹை பிச்ல, மேன்லியா இருக்கு' என்று மனதில் நினைத்துக் கொண்டே தலையை உலுக்கிக் கொண்டாள்.

அவள் கையில் இருந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டவன், “கய்ஸ் வாங்க போகலாம்.” என்று ஹரிஷ் மற்றும் அவனின் நண்பர்களை அழைத்துக் கொண்டு படி ஏற ஆரம்பித்தான்.

“சார் உங்க நேம்?” என்று கேட்டாள் சுவாதி.

“அஸ்வின். உங்க பேர்?”

தன்னை அறிமுகம் செய்து கொண்டவள், தன் நண்பர்களையும் அறிமுகம் செய்து வைத்தாள்.

“யூ லுக் ஹேண்ட்சம். உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு.” என்றாள் ரோஷிணி.

“ஆர் யூ சிங்கிள்?” என்றாள் சுவாதி.

“ஒரு பொண்ணு ஓகே சொன்னா கமிட்டட். நோ சொன்னா சிங்கிள்.”

“சிங்கிள்னா எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்குமா?” சுவாதி.

கொஞ்சம் யோசிப்பது போல் ஆக்சன் செய்தவன், “நோ” என்றான்.

“வொய்?”

“எனக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடிக்கும். அதுவும் இல்லாமல் என்ன மாதிரி ஒரு பையனுக்கு எந்த பொண்ணும் நோ சொல்ல மாட்டாங்க. நம்ம பத்து நாள் சேர்ந்திருக்க போறோம், ஏன் தேவை இல்லாமல் காதல் அது இதுனு சொல்லி மனசை கஷ்டப்படுத்திக்கணும். ஜாலிய நண்பர்களாக இருந்துட்டு போகலாமே.”

“ஓகே.” என்றாள் சுவாதி.

“பார்த்தியா டா மச்சான். காலேஜில்ல நம்ம ‘கா’ ன்னு சொன்னாலே காதல் சொல்ல வரோம் ன்னு ஓடி போயிடுவாங்க. இப்போ இவளுங்க மட்டும் பார்த்த உடனே ஒரு பையன் கிட்ட எவ்வளவு தைரியமா
ப்ரொபோஸ் பண்ணுறாலுங்க. என்ன இருந்தாலும் நமக்கு இவளுங்க திறமை எல்லாம் வராது. எவ்வளவு அழகா கீழே விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டாத மாதிரி ப்ரொபோஸ் பண்ணுறாங்க” என்றான் ஈஸ்வர்.

“அவங்களுக்கு எங்க டா மீசை இருக்கு?” என்றான் தீபக்.

“பழமொழி சொன்ன அனுபவிக்கணும். இப்படி திருப்பி மொக்கை ஜோக்ஸ் சொல்லக் கூடாது.” என்றான் ஈஸ்வர்.

“பியூட்டி… என்ன நீ மட்டும் இப்படி கடைசியா தனியா வர. அங்க உன்னோட ஆளை பாரு, ‘என் எதிரில் இரண்டு பாப்பா' பாட்டில் வர கார்த்தி மாதிரி இரண்டு பக்கம் இரண்டு பொண்ணுங்களோடு ஜாலியா நடந்து போயிட்டிருக்காரு. சீக்கிரமா நீயும் அவங்களோடு சேரு, இல்லை உன்னோட ஆளை அவளுங்க கொத்திட்டு போயிடுவாளுங்க.” என்றான் ஹரிஷ்.

“என்ன என் ஆளா? அது யாரு” என்றாள் அனன்யா.

“அஸ்வின்”

“சைட்டு அடிச்சது ஒரு குத்தமாடா. அதுக்கு அவரை என் ஆளுன்னே முடிவு பண்ணிட்டியா? எனக்கு காதல் மேல் துள்ளிக் கூட நம்பிக்கை இல்லை. எனக்கு யார் மேலையும் காதல் வராது. நீ தான் உன்னோட ஆள் ரோஷிணியை ஃபர்ஸ்ட் அஸ்வின் கிட்ட இருந்து பிரிக்கணும் இல்லைனா உன் பாடு தான் திண்டாட்டமாகிடும்.”

“அவ சும்மா சுவாதிக்கு கம்பெனி கொடுக்க போயிருப்பா. எந்த உலக அழகன் வந்தாலும் ரோஷிணியோட காதல் எனக்கு தான்.

சிங்கிள் தான் கெத்துன்னு சொல்லிட்டு இருக்கவங்களை கூட நம்பலாம் உன்னை மாதிரி காதலை பொய்ன்னு சொல்லுறவங்களை மட்டும் நான் நம்பவே மாட்டேன்.

நீ வேணும்னா பாரு இந்த ட்ரிப் முடியும் போது, ‘இந்த அஸ்வினை எப்படி டா கரெக்ட் பண்ணுறதுன்னு’ நீயே வந்து என் கிட்ட உதவி கேட்ப.”

பார்த்த இரண்டு மணி நேரத்தில் எப்படி நீங்க நீயாக மாறியது என்று இருவருக்குமே தெரியவில்லை.

“கண்டிப்பா நடக்காது.” என்றாள் அனன்யா.

கொஞ்சம் மூச்சு வாங்க, நண்பர்கள் கூட்டம் பேசுவதை நிறுத்திக் கொண்டது. இயற்கையின் அழகை ரசிக்க ஆரம்பித்தனர்.

*****
கொஞ்சம் கூட்டம் சென்ற பின் இவர்கள் முறை வர நால்வரும் குட்டீஸோடு ஒரு கேபிள் காரில் ஏறினர்.

பயத்தோடு இயற்கையின் அழகை ரசித்தனர். “கனி… எங்களை ஒரு பிக் எடு” என்றாள் ரோஜா.

“எங்களையும் எடுங்க” என்று தன் ஃபோனை நீட்டினாள் கனி‌. கடமைக்காக ஃபோட்டோ எடுத்துவிட்டு, திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் ரோஜா.

“அப்பா… அங்க பாருங்க ஹச் ன்னு எழுதி இருக்கி.” என்றாள் தியா.

“அது ஹெலிகாப்டர் பேட். ஹெலிகாப்டர் மூலமாகவும் இங்கு வர முடியும்” என்றான் ஜெய்.

“ஓ…” என்றார்கள் தியா, தேவ்.

*****
மற்றவர்கள் சோர்வாக மூச்சு வாங்க மேலே வந்து சேர. அஸ்வின் மட்டும் ஏதோ வீட்டு
படி ஏறியது போல் கேஷவலாக வந்துக்கொண்டிருந்தான்.

“காய்ஸ் இங்கு கஃபே இருக்கு, உங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கோங்க. டோண்டி மினிட்ஸ் பிரேக்.”என்றாள் அனன்யா‌.

அவர்களோடு ராஜ், ஜெய் ஃபேமிலியும் இணைந்துக் கொண்டனர்.

நண்பர்கள் ஐவரும் கல்லூரி கேன்டீனில் சாப்பிடுவது போல் ஒன்றாக அமர்ந்து தங்களுக்குள் கிண்டல் செய்து, பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

'வாழ்க்கையில் கடைசியாக கவலைனா என்னன்னு தெரியாமல் அனுபவிக்கும் பருவம் தான் இந்த கல்லூரி பருவம். அதன்பின் இவர்களும் வாழ்க்கையில் ஏதோ ஒன்றின் பின் ஒன்றாகரஓடிக் கொண்டிருப்பார்கள். நானும் என்னோட கல்லூரி நாட்களை மிஸ் பண்றேன்’ என்று மனதில் நினைத்துக் கொண்டே, ஆடர் செய்த காஃபி. வந்துவிட அதை வாங்கிக் கொண்டு திரும்ப.

அஸ்வின் உட்கார்ந்திருந்த டேபிளில் ஒரு சேர் இருக்க. ராஜேஷ், ரோஜா அருகில் ஒரு சேர் இருந்தது. வேறு வழி இல்லாமல் அஸ்வின் அருகில் இருந்த சேரில் உட்கார்ந்தாள் அனன்யா.

எந்த பேச்சும் இல்லை. அவன் அருகில் இருக்கவே படப்படப்பாக இருந்தாலும் அவள் மனதின் ஒரு ஓரத்தில் அமைதி நிலவியது.

பொதுவாக காஃபி குடிக்கும் நேரங்களை அதிகம் விரும்புவாள் அனன்யா. காஃபி உடல் நலத்துக்கு கேடாக இருந்தாலும், சூடாக, ஒவ்வொரு மிடராக குடுக்கும் போது கவலை மறைந்து அமைதி கிடைக்கும். இன்று அது கொஞ்சம் அதிகமாக கிடைத்தது போல் உணர்ந்தாள் அனன்யா.

“போகலாமா?” என்றான் அஸ்வின்.

அவன் கேட்டதும் தலையை வேகமாக சரி என்பது போல் ஆட்டியவள் திரு திருவென்று விழித்தாள்.

“இவ்வளவு தூரம் படி ஏறி வந்தது ஏதோ காஃபி குடிக்க தான் என்பது போலே ரியாக்ஷன் கொடுத்துட்டு இருக்கீங்க. சுத்தி பார்க்க வேண்டாமா?” என்றான் அஸ்வின்.

இதுவரை அவன் மேல் இருந்த பயம் மறைந்து போக, அவனை கோபமாக முறைத்துக் கொண்டே, எழுந்தவள், “காய்ஸ் எல்லோரும் ரெஃப்ரெஷ் ஆகிட்டீங்களா? இப்போ போகலாமா?” என்று கேட்டாள்.

“எஸ்” என்றனர்.

“வாங்க போகலாம்” என்றவள் எழுந்து முன்னே செல்ல, மற்றவர்கள் அவனை பின் தொடர்ந்தனர்.

“இப்போ நாம வந்திருக்கும் இடம் தான் உலகத்திலே மிக பெரிய பறவை சிற்பம் (world’s largest bird sculpture) - ஜடாயு.

நம்ம எல்லோருக்குமே இராமாயண கதை தெரியும். அதில் வருவது தான் ஜடாயு என்கிற கழுகு.

சீதையை ராவணன் கடத்திட்டு போகும் போது, இந்த ஜடாயு சீதையை காப்பாற்ற முயற்சி செய்தது. அப்போ ராவணன் இந்த ஜடாயு ஓட ஒரு பக்க சிறகை வெட்டிட்டி, சீதையை கடத்திட்டு போயிருப்பாரு.

உயிர் போற நிலையிலும் ஜடாயு ராமருக்காக காத்திருந்து, ராவணன் சீதையை கடத்திட்டு போன திசையை காட்டியது.

தியாகம், தைரியம், பெண்களின் பாதுகாப்பு பறைசாற்றும் விதமாக தான் இங்கு ஜடாயு சிற்பம் உருவாக்கப்பட்டது.

இங்கு ராமர் பாதமும், ராமர் கோவிலும் இருக்கு.

கிட்ஸ் ப்ளே ஏரியா, 6D தியேட்டர் இருக்கு. நீங்க போய் பார்த்துட்டு வாங்க” என்றாள் அனன்யா.

அப்போது எல்லோரும் நகர, சின்ன சரிவில் நின்றிருந்த ரோஜா தடுமாறி விழ போக, அவள் அருகில் நின்றிருந்த ஹரிஷ், முதலில் கவனித்து, அவள் விழாமல் இருக்க ஒருகையை அவளின் முதுகு புறம் வைத்தவன், மற்றொரு கையால் அவளின் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.

சரியாக நின்றவளோ, ”யூ இடியட். ஹொவ் தேர் யு டச் மீ?” என்றாள் கோபமாக.

“ஹலோ ஆன்ட்டி எனக்கு உங்களை தொடணும்னு எந்த ஆசையும் இல்லை. ஏதோ மனிதாபிமானத்தோடு உதவி செய்ய வந்தா, ரொம்ப சீன் போடுறீங்க. சுவாதி… ஹேண்ட் வாஷ் வெச்சு இருப்பல அதை ஃபர்ஸ்ட் கொடு, நான் போய் என் கையை கழுவிட்டு வரேன்.” என்று ரோஜாவிடம் தொடங்கி சுவாதியிடம் பேசி முடித்தவன் கழிவறை நோக்கிச் சென்றுவிட்டான்.

கோபமாக நின்ற ரோஜாவை ராஜேஷ் வேறு பக்கம் அழைத்துச் சென்றான்.

ஒவ்வொருவராக சென்று விட. வழக்கம் போல் அந்த பெரிய சிற்பத்தை ரசித்தவள் பின் மலையின் மேல் நின்று கீழே தெரியும் கேரளத்தின் அழகை கண்களால் பருகினாள். தியானம் செய்யும் இடத்திற்கு சென்று அமர்ந்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து திரும்பியவளின் பார்வையில் விழுந்தான் அஸ்வின். அவளுக்கு நேர் எதிரில், காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கைகளை பின் பக்க மேல் படியின் மேல் வைத்து ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தான். கண்களில் கூலர்ஸ் போட்டிருந்தான், மற்றவர்களுக்கு அவன் கண் மூடி பாடல் கேட்பது போல் இருக்க, அனன்யாவிற்கு அவன் அவளை கண் சிமிட்டால் பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது.

மீண்டும் அவளுள் படபடப்பு, அவனை தவறாக நினைக்க முடியவில்லை. வேறு எங்கும் செல்லாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.

ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். ஹரிஷ் வந்ததும், படபடப்பு கொஞ்சம் குறைந்தது. “அடுத்து இங்கிருக்க அட்வென்ச்சர் ராக் ஹில் போகலாம். அங்கு நிறைய அட்வென்ச்சர் ஆக்டிவிட்டீஸ் இருக்கு.” என்றாள் அனன்யா.

“இது மாதிரி தான் நான் எதிர்பார்த்தேன் பியூட்டி. வாங்க சீக்கிரமா அங்கு போகலாம்” என்று அனைவரையும் கிளப்பினான் ஹரிஷ்.

இங்கு ஜிப் லைன், ராக் கிளைம்பிங், ராப்பில்லிங், பெயிண்ட் பால், ஆர்ச்சுரி, பர்மா பிரிட்ஜ், கமாண்டோ நெட் போன்று பல ஆக்டிவிட்டீஸ் இருந்தது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக டிக்கெட் வாங்குவது போல் இருந்தது.

“நீங்க போய் விளையாடுங்க, நான் குட்டீஸ் ஐ பார்த்துக்கிறேன்” என்றாள் அனன்யா‌.

“நீங்க விளையாடலையா?” என்றாள் கனி.

“நான் இங்க அடிக்கடி வந்திருக்கேன். இப்போ நான் எதுவும் விளையாடலை‌.”

“ஓகே அனன்யா. கொஞ்சம் கவனமா இருங்க, இரண்டு சரியான அராத்துங்க.” என்றாள் கனி‌.

“அங்க பாருங்க தேவ், தியா…
வானத்தில் பறப்பது போல் அம்மாவும் அப்பாவும் போறாங்கல்ல அது தான் ஜிப் லைன்” என்றாள் அனன்யா.

“வாவ் சூப்பரா இருக்கு அக்கா.” தியா.

“அக்கா… நம்மளும் போகலாம் கா.” தேவ்.

“சில விளையாட்டுக்கு குட்டீஸ் விளையாட முடியாது. இப்போ விளையாட்ட பத்தி தெரிஞ்சுக்கோங்க. அப்புறம் பிக் பாய், பிக் கேர்ள் ஆனதும் விளையாடுவீங்களாம். ஓகே தான” என்றாள் அனன்யா‌.

இருவரும், ’’ஓகே” என்று சொல்ல.

அஸ்வின் அனைத்து பாதுகாப்போடு ராக் கிளைம்பிங் செய்துக் கொண்டிருந்தான். அங்கு வந்த அனன்யா, “ இது தான் ராக் கிளைம்பிங், நமக்கு ஹெல்மெட், பெல்ட்டோடு கயிறு எல்லாம் தருவாங்க. நாம கை, கால்களையும் இந்த பாறைகளோட இடைவெளியில் வைத்து மேல ஏறி போகணும்.” என்றாள் அனன்யா.

மூவருமே அஸ்வின் அசால்டாக ஏறி இறங்குவதை வாயை பிளந்து பார்த்துக் கொண்டு நின்றனர்.

அஸ்வினின் கண்களுக்கு மூன்று குட்டீஸ் போல் தெரிந்தது. கஷ்டப்பட்டு சிரிப்பை அடிக்கிக் கொண்டு செல்ல. அவனிடம், “அண்ணா… சூப்பரா ஏறினீங்க.” என்றான் தேவ்.

“தேங்க்ஸ் டா கண்ணா” என்றவன் அவர்களை கடந்த செல்ல. ஹரிஷின் குரல் சத்தமாக கேட்க. நால்வரும் அந்த பக்கம் சென்றனர்.

“இது போங்காட்டம். அது எப்படி நீங்க மூன்று பேரும் ஒரு டீம். நானும் ரோஷிணியும் மட்டும் ஒரு டீமா?” என்றான் ஹரிஷ்.

“நீ வேணும்னா உங்க டீமிக்கு ஒரு ஆளை கூட்டிட்டு வா. நாங்களா வேண்டாம்னு சொன்னோம்.” என்றான் ஈஸ்வர்.

வேகமாக அனன்யா அருகில் வந்தவன், “பியூட்டி பெயிண்ட் பால் கேம் விளையாட என்னோட டீமுக்கு வா ப்ளீஸ்.” என்றான் ஹரிஷ்.

“சாரி ஹரிஷ். நான் குட்டீஸை பார்த்துக்குறேன் சொல்லி இருக்கேன். என்னால விளையாட முடியாது.”

அவளை பாவமாக பார்த்துக் கொண்டே அவன் நிற்க. ரோஷிணி அஸ்வினிடம், “சார் நீங்க எங்க டீமில் விளையாட வரீங்களா?” என்று கேட்டாள்.

“ஓகே” என்றான் அஸ்வின். அவனும் கமாண்டோ டிரஸ் போல் போட்டுக் கொண்டு, முகத்திலும் கண்கள் மட்டும் தெரியும் படியான முகக்கவசம் அணிந்துக் கொண்டு வந்தான்.

“அக்கா… இது என்ன கேம்?” தியா.

“இது பெயிண்ட் பால் விளையாட்டு. இரண்டு டீமா விளையாடுவாங்க. ஒவ்வொருத்தர் கையிலையும் கன் இருக்கும், அதில் பெயிண்ட் பால் இருக்கும்.

அதை சூட் பண்ணா ஆப்போசிட்ல இருக்கவங்க டிரஸ்ல அந்த பெயிண்ட் பட்டுடும் அப்போ அவங்க அவுட்.

டயர், மூட்டை, மரம்னு நிறைய இருக்கும். அதுக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டு எதிரிகளை அட்டாக் பண்ணனும்.

யாரோடு டீம் மெம்பர்ஸ் கடைசிவரைக்கும் பெயிண்ட் படமா இருக்காங்களோ. அவங்க டீம் தான் வின்னர்ஸ்.” என்றாள் அனன்யா.

இவர்களின் விளையாட்டும் ஆரம்பமாக. ஹரிஷ் தான் பெரிய கமாண்டோ என்ற நினைப்பில் எதிரிகளை கவனிக்காமல், முன் சென்று நிற்க. அவனை அவுட் ஆக்கினான் தீபக்.

அதன் பின் அனைவரும் கவனமாக விளையாட, ஆட்டம் சூடு பிடித்தது. பத்து நிமிடங்கள் சென்றிருக்க கடைசியாக ஈஸ்வர் மற்றும் அஸ்வின் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இருவரும் நேருக்கு நேர் சந்திக்க, விரைவாக அவனை சூட் செய்து டயர் பின் ஒளிந்து கொண்டான் அஸ்வின்.
அதில் ஈஸ்வர் அவுட்டாகிவிட. ஹரிஷ் டீம் தான் அஸ்வினால் ஜெயித்தது.

“வாவ்… சூப்பர்…” என்று குட்டீஸ் குதித்தனர்.

ராஜேஷுக்கு உயரம் என்றால் பயம், அவன் எதிலும் கலந்துக் கொள்ளவில்லை. ரோஜாவிற்கு விளையாட ஆசை இருந்தாலும், தனியாக போக விரும்பவில்லை யாராவது கூட வந்தால் விளையாடலாம் என்ற நிலை தான்.

கடைசியாக கொஞ்சம் ஈசியாக இருந்த கமாண்டோ நெட் விளையாட சென்றாள் ரோஜா. பெரிய விலை கொஞ்ச உயரத்தில் கட்டப்பட்டிருக்கும். ஒரு பக்கமாக அந்த வலையில் ஏறி மறுபக்கம் இருக்கும் வலையின் வழியாக கீழே இறங்கணும்.

இதில் உயரம் கொஞ்சம் குறைவாக தான் இருந்தது. இந்த விளையாட்டிற்கு கயிறு கிடையாது, தங்கள் கைகள், கால்களோட உதவியோடு மட்டுமே செல்ல முடியும்.

ரோஜா அதில் ஏறிக் கொண்டிருந்தால், அவள் அருகில் இடைவெளி விட்டு ஏறிக் கொண்டிருந்தான் அஸ்வின்.

ஒரு இடத்தில் ரோஜா தடுமாறி, அஸ்வினிடம், “என் கைய பிடி நான் விழ போறேன்.” என்று சொல்ல.

அவன் அவளை கண்டுக்கொள்ளாமல் மேலே ஏறி சென்றுவிட்டான்.

கீழே விழுந்தாள் ரோஜா. உயரம் குறைவாக இருந்ததால் பெரிய பிரச்சினை இல்லை, ஆனால் கண்டிப்பாக அவளுக்கு வலி இருக்கும்.

வேகமாக அவள் அருகில் ஓடி வந்த ராஜேஷ், “ இதுக்கு தான் இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேன் கேட்குறீயா.” என்று அவளை கைத் தாங்களாக தூக்கி நிறுத்தினான்.

மறுபக்கம் வலையின் வழியாக இறங்கி வந்த அஸ்வினை பார்த்த ரோஜா கோபமாக, “ஹலோ மிஸ்டர் என் கைய பிடிக்க சொல்லி கேட்டேனே. ஏன் செய்யலை?” என்றாள்.

“உங்களுக்கு தான் உங்களை தொட்டா பிடிக்காதே. உங்களுக்கு உதவி செய்து நான் ஏன் கெட்ட பெயர் வாங்கணும் சொல்லுங்க” என்றான்.

அப்போது தான் அவளுக்கு முன்பு ஹரிஷி டம் அவள் நடந்துக் கொண்டது அதிகப்படி என்பது புரிந்தது.

“மிஸ்டர் ராஜேஷ் உங்க வைஃபை கூட்டிட்டு முதல்ல போய் வண்டியில் ஏறி, அவங்களுக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணுங்க.” என்றாள் அனன்யா.
 
Top Bottom