• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - NP

நிதனிபிரபு

Administrator
Staff member
அவன் சகோதரியின் திருமணம். அவனுக்கான வேலைகளுக்குப் பஞ்சமேயில்லை. ஆனாலும் பட்டு வேட்டி சட்டையில் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தவனின் விழிகள் பெரும் எதிர்பார்ப்புடன் மண்டப வாசலையே வட்டமடித்துக்கொண்டிருந்தன.

“என்ன தோழர், பார்வை பலமா இருக்கு?” நக்கலாகக் கேட்டான் நண்பன்.

“ஒரு காதலன் தன் காதலியை அப்படித்தான் தேடுவான். அது தெரியாதா தோழர் உங்களுக்கு?” பெரும் நாடக பாணியில் கேட்டான் மற்றவன்.

“கழட்டிவிட்ட காதலியையுமா?” கண், புருவங்களை எல்லாம் அளவுக்கதிகமாக அசைத்து அவன் கேட்ட விதத்தில் அவன் முதுகிலேயே ஒன்றைப் போட்டுவிட்டுப் போனான் நம் நாயகன்.

இத்தனை நாள்களினதும் தவிப்பைத் தாண்டியதாய் இருந்தது அன்றைய நாளின் தவிப்பு.

கொஞ்ச நேரத்தில் அவளும் வந்தாள். கிட்டத்தட்ட சில மாதங்களுக்குப் பிறகு பார்க்கிறான். அவனால் சுவாசிக்கவே முடியாது போயிற்று. அவளைப் பார்த்தது பார்த்தபடி அப்படியே நின்றுவிட்டான்.

நன்றாக மெலிந்திருந்தாள். எப்போதுமே அலைபோல் சேலை முந்தானையை அது பாட்டுக்கு விட்டுத்தான் அணிவாள். இன்றும் அப்படித்தான். மஜெந்தா வண்ண பட்டுச் சேலை அவள் மேனியை மிக அழகாய் அலங்கரித்திருக்க, ஷோக்கர் ஸ்டைல் நெக்லஸில் ஶ்ரீனிவாச கலியாண பெண்டன் அணிந்து, அதே ஸ்ரீனிவாச கலியாண ஜூம்கா அணிந்திருந்தாள். கையிலும் அதே ஸ்ரீனிவாச கலியாண காப்புகள் இரண்டு சோடிகள்.

சுதந்திரமாய் விட்டிருந்த கூந்தல் கற்றைகளை பக்கத்தில் நடந்துவந்துகொண்டிருந்த தோழியுடன் பேசியபடியே அவள் காதோரம் ஒதுக்கிவிட்டபோது, அந்தப் பெரிய ஜும்க்கா ஆடிய ஆட்டத்தில் அவன் உள்ளம் ஆடிற்று. இப்படி அவள் ஜும்க்கா அணிகிற பொழுதுகளில் எல்லாம் அந்தக் காதோரமாய் அவன் பதித்த காதல் முத்தங்கள் ஓராயிரம்.

ஆனால் இன்றைக்கு… ஓடிப்போய், “வா யமி… ம்க்கும் யாமினி!” என்று வரவேற்றான்.

இப்படி ஓடிவந்து தன்னை வரவேற்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை போலும். கண நேரம் திகைத்து நின்றுவிட்டு, உதட்டளவில் மாத்திரம் புன்னகைத்து, வரவேற்பில் இருந்த திருநீறு சந்தனத்தை வைத்துக்கொண்டு உள்ளே நடந்தாள்.

போகிறவளையே திரும்பிப் பார்த்தான். அது அவனும் அவளுமாகச் சென்று எடுத்த சேலை இல்லை. வேற ஒன்று. இன்னும் சொல்லப்போனால் ஏற்கனவே அவள் அணிந்த ஒன்று. ஊசியாய் ஏதோ ஒன்று உள்ளே இறங்க அப்படியே நின்றான்.

***

எந்தக் குறையும் இல்லாமல் அந்தத் திருமணம் நடந்துகொண்டிருந்தது. சமையல் ஆட்கள், மணமேடை அலங்காரம், மேக்கப் எல்லாமே அவள் தெரிவு செய்து கொடுத்தவைகள். அவள் மட்டும் யாரோவாக அங்கே.

ஆனால், இதுதானே வாழ்க்கை. நம்பி இருக்கிறவர்கள் கை விடுவதும், யார் என்றே தெரியாதவர்கள் ஓடி வந்து கை கொடுப்பதும் தானே வாழ்வின் அனுபவப் படிமங்கள்.

திருமணம், விருந்து எல்லாம் நல்லபடியாகவே முடிந்தன. எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.

“தம்பியாலதானம்மா இவ்வளவு சந்தோசமா இருக்கிறம். இவ்வளவு நாளும் இவ்வளவு வயசாகியும் பொறுப்பில்லாம இருக்கிறானே எண்டு எனக்கும் இவருக்கும் கவலையா இருந்தது. ஆனா… விளையாட்டா இருந்தாலும் பொறுப்பாவும் இருந்திருக்கிறான்.” என்று மகனைத் தன் கைக்குள் வைத்துக்கொண்டு பெருமையாய்ச் சொல்லிக்கொண்டிருந்தார் அவன் அன்னை.

அவன் சங்கடப்பட்டுப்போனான். என்ன சொல்வாள் என்று அவளையே பார்த்தான். அவள் ஒரு புன்னகையோடு அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டதோடு நிறுத்திவிட்டாள். எதுவும் சொல்லவில்லை.

அவளின் அந்த அமைதி, ஒட்டவைத்த புன்னகை, அவன் புறமே திரும்பாத பார்வை, அப்படியே திரும்பினாலும் எந்த உணர்வுகளையும் காட்டாத அந்த விழிகள் எல்லாமே காலில் ஏறிய முள்ளாய் அவன் நெஞ்சைக் குத்திக்கொண்டேயிருந்தன.

அவள் புறப்படும்போது ஓடி வந்தான்.

“யமி!”

அவன் அழைப்பில் பெட்டி ஒன்றுக்குள் போட்டு ஆணியறைந்து, மண்ணுக்குள் புதைத்துவிட்டதாக அவள் எண்ணியிருந்த உணர்வுகள் எல்லாம் பீறிட்டுக்கொண்டு கிளம்பவா என்றன. ஒரு கணம் அப்படியே நின்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அவன் புறம் திரும்பினாள்.

“தேங்க்ஸ்!” ஓடி வந்து அவள் முன்னே நின்றவன் நன்றி சொன்னான்.

அவள் ஏன் என்று கேட்கவில்லை. இலேசாகப் புருவங்களைச் சுருக்கி விழிகளில் கேள்வியைக் குவித்தாள்.

நொடி தடுமாறிப்போனான் அவன். எப்போதுமே அவனைக் கொய்யும் பெரிய விழிகள் அவளுக்கு.

“அது… நீ சொல்லித்தான் அந்தக் காசு நான் சேர்த்ததே. லோனும்… எந்த லோனும் இல்லாம இருந்ததாலதான் லோனும் எடுக்கக் கூடிய மாதிரி இருந்தது. ஆனா பெயரும் புகழும் எனக்கு.” அவனுக்குத் தான் சொல்ல நினைப்பதைக் கோர்வையாகச் சொல்ல வரவில்லை.

கண்ணை எட்டாத சிறு முறுவலோடு, “அதெல்லாம் நிச்சயமா உங்களுக்குத்தான் சேரோனும். குதிரையைக் கொண்டுபோய்த் தண்ணி வாளிக்குப் பக்கத்தில விடத்தான் எல்லாராலயும் முடியும். குடிக்கிறது குதிரைன்ர பாடு. நான் சொன்னது மட்டும்தான். செய்தது நீங்க. சோ பெயரும் புகழும் உங்களுக்குச் சேர வேண்டியதுதான்.”

இல்லை. அது அப்படி நடக்கவில்லை. அவன் அவளோடு பெரும் சண்டை போட்டான். அவனை நெருக்குகிறாள் என்று சொன்னான். இன்னும் ஒரு படி மேலே போய், காசு காசு என்று அவள் காசிலேயே குறியாக இருக்கிறாள் என்று குற்றம் சாட்டினான்.

அதற்கெல்லாம் அசராமல் கூட வந்து அவன் பெயரில் சேமிப்புக் கணக்கை ஆரம்பித்து வைத்தது அவள்தான். அதை வைத்தே மாதக் கடைசிகளில் காசு இல்லாது நின்ற நாள்களில் உன்னால்தான் என்று அவளிடம் முகம் திருப்பியிருக்கிறான். அதையெல்லாம் இன்று வாய் திறந்து சொல்ல முடியாமல் நெஞ்சடைக்க அவளையே பார்த்து நின்றான்.

“வேறேதும் கதைக்கோணுமா?” அவன் கதைப்பதே இல்லை, அவள் மெசேஜுகளுக்கு பதில் போடுவதே இல்லை என்று சண்டை பிடித்தவள் இன்று இப்படிக் கேட்கிறாள்.

உள்ளே எழும் வலியை அடக்கியபடி இல்லை என்று குறுக்காகத் தலையை அசைத்தான் அவன்.

“ஓகே பாய்!” என்று உதட்டளவில் மாத்திரம் முறுவலித்துவிட்டுப் புறப்பட்டாள்.

போகிற அவளையே பார்த்து நின்றான். அவளுக்கு எப்போதுமே தோள் வரை முடி வைத்திருக்கத்தான் விருப்பம். அவனுக்கு நீள முடி பிடிக்கும். அதனாலேயே வளர்த்து இடைக்குக் கீழே வைத்திருந்தாள்.

ஆனால் இன்று திரும்பவும் அவள் முடி தோள் வரைக்கும் வந்திருந்தது. நமக்காக வாழ்ந்தேன். அங்கே உன் விருப்பங்களுக்கு முதலுரிமை கொடுத்தேன். இன்று நான் எனக்காக வாழ்கிறேன் என்று சொல்கிறாளா…

----------------

அன்று நல்ல வெய்யில். ஊரில் வெய்யிலைக் கண்டால் வீட்டுக்குள் ஓடுவோம். இங்கே வெய்யிலைக் கண்டால் வீட்டுக்குள் இருக்கிறவர்கள் எல்லோரும் வெளியில் வந்துவிடுவார்கள். எதுவுமே அளவோடு கிடைத்தால்தான் அதற்கு மரியாதை போலும்.

அப்படி அருமை பெருமையாய்க் கிடைத்த ஒரு வெய்யில் நாளில் வந்து பூங்கா ஒன்றில் பேசாமல் அமர்ந்திருந்தாள். அவளுக்குத் துணையாய் அவளைச் சுற்றியிருந்த இரைச்சல் மட்டுமே. அவள் உள்ளத்திலும் பழைய காலத்தின் இரைச்சல்.

பாறையை மோதும் அலைகளை விட மூர்க்கமாய் அவளுள் பழைய நினைவுகள் வந்து வந்து மோதின.

அவள் இப்போதெல்லாம் யாருடனும் அதிகமாகப் பேசுவதிலை. யாரையும் எதற்கும் வற்புறுத்துவதில்லை. அவர்களுக்கு அது நன்மை பயக்குமென்றாலும் தெண்டித்து எதையும் செய்ய வைக்க நினைப்பதில்லை. அதற்கெல்லாம் அவளுக்குத் தைரியமில்லை.

யார் மீதும் ஏக்கங்கள் இல்லை, எதிர்பார்ப்புகள் இல்லை, சிறு புகார்கள் கூட இல்லை. வெற்றுத்தாளில் விழுந்த ஒரு துளி மை மெல்ல மெல்லப் பரவுவதுபோல் அவளுள் அவளறியாமலேயே பரவ ஆரம்பித்திருந்த வெறுமை ஒரு கட்டத்தில் முழுமையாக அவளை ஆட்படுத்தியிருந்தது.

அவள் கேட்பது உறக்கத்தை. அவள் வெறுப்பது இறந்தகால நினைவுகளை. விசித்திரம் என்னவென்றால் அவள் விரும்பும் தூக்கம் எங்கோ சென்றுவிட மறக்க நினைக்கும் நினைவுகள் மொத்தமாய் அவள் இரவுகளை நரகமாக்கிவிடுகிறது.

இப்போதெல்லாம் இரவுகளைக் கண்டாலே அவளுள் பயம் வர ஆரம்பித்துவிட்டது.

திடீரென்று அவள் மீது நிழல் படிந்தது. திடுக்குற்று நிமிர்ந்து பார்த்தவள் மூச்சே நின்றுபோயிற்று. எதிரே அவன்.





660501226_4414159582152012_10724331955581760_n.jpg
 
Last edited:
Top Bottom