• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சில் நிறைந்தவள் - 28

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 28

தந்தையின் செயல் தேவயானிக்கு பிடிக்காமல் போகவே எதுவும் பேசாமல் அங்கிருந்து அமைதியாக கிளம்பி விட்டாள் நாகரீகம் கருதிய மௌனத்தோடு.

மகள் கிளம்பி விட்டதால் கிருஷ்ணனுக்கு அங்கு இருப்பு கொள்ளவில்லை அவள் அங்கிருந்து பாதியில் கிளம்பிவிட்டால் என்றால் நிச்சயம் அவளுக்கு பிடிக்காத செயலை தான் நாம் செய்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டவரால் அவளுக்கு எது பிடிக்கவில்லை என்பதை கண்டறிய அவருக்கு தெரியவில்லை பாவம். அந்த எண்ணம் அவருக்குள் ஒரு பூகம்பத்தை கிளப்பி விட்டிருந்தது, அதனால் அவரது மனம் ஆழி அலை போல நிலையில்லாமல் தவித்தது.

" ஒருவேளை அங்கு நடந்த வர்த்தக அணுகு முறையில் அவளை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்ற கோபம் அவளுக்கு இருக்கிறதா என்பது அவருக்கு புரியவில்லை அவளிடம் சொல்லாமல் நாம் செய்துவிட்டோமோ அதுதான் அவளது கோபத்திற்கு காரணமாக அமைந்து விட்டதோ? " அவருக்குள்ளும் பல வித எண்ணங்கள்,

அந்த நட்சத்திர விடுதியை விட்டு வெளியே வந்த தேவயானி காரை எடுக்க மனமில்லாமல் அப்படியே கால் நடையாகவே நடக்க ஆரம்பித்தாள்,

அந்த நட்சத்திர விடுதியின் வாசல் கடந்து சிறிது தூரம் நடந்த பொழுது சாலையின் மறுபுறம் இருந்த அந்த பேருந்து நிறுத்தம் அவளது கண்ணில் பட்டது அதை பார்த்தவள் சிறிதும் யோசிக்காமல் அதை நோக்கி நடந்தாள்.

பேருந்து நிறுத்தம் வரவும் அந்த திண்டின் மீது அமைதியாக தனது கையை கட்டி கொண்டு நின்றிருக்க,

அவளது காத்திருப்பை சகித்து கொள்ள முடியாமல் விரைந்து வந்தது பேருந்து. அதில் ஏறி தன்னை புகுத்தி கொண்டவளை வரவேற்றது ஜன்னலோர இருக்கை ஒன்று.

நேரம் இரவு 9 மணியை நெருங்கி இருந்ததால் பேருந்தில் அத்தனை கூட்டம் இல்லை, நகரத்தை தாண்டிய அந்த பேருந்து ஒளி விளக்குளை தொலைத்து இருளில் தொலைந்தது, சுற்றி நிறைந்த இருளில் ஜன்னல் வழியாக வெளி விழும் வெளிச்சத்தை பார்த்து கொண்டே வந்தாள்,

நகரத்தை கடந்து இருந்ததால் அதிகப்படியான வாகன இரைச்சல் கூட மறைந்து கொள்ள அந்த இடத்தை மெதுவாக அமைதி ஆக்கிரமித்துக் கொண்டது. ஆனாலும் அதை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்ய விடாமல் அந்த பேருந்து தனது கர கர சத்தத்தை மட்டும் கர கர கரக் என்று தொடர்வண்டி போல தொடர்ந்து கொண்டே வந்தது கூட அந்த இருள் நிறைந்த அமைதியில் மெல்லிய தாளம் போல இனிமையாய் தான் இருந்தது. அந்த இனிமை மெல்ல மெல்ல தேவயானியின் மன இறுக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்தது.

ரசிக்க தெரிந்த அந்த ரசனைக்காரியின் மனம் மெல்லமாய் அச்சூழலை உள்வாங்கி மெதுவாய் தலையை திருப்பி வேடிக்கை பார்க்க வைத்தது, தனது வாழ்நாளில் இப்படி ஒரு அனுபவம் அவளுக்கு அமைந்தது இல்லை ஆதலால் இந்த பயணம் அவளுக்கு புதுமையாய் இருந்தது, மனம் மெது மெதுவாய் அதில் லயித்து விட சற்று முன்பு நடந்த நிகழ்வுகள் யாவும் அவளது நினைவில் இருந்து தற்க்காலிக ஓய்வை பெற்றிருந்தது. இப்போது அந்த பேருந்து இருளை கடந்து வெளிச்சத்தை அடைந்தது, அந்த வெளிச்சம் வந்த சில நொடிகளில் ஒரு பேருந்து நிறுத்தமும் வந்தது, பேருந்தின் வேகத்தை தடை செய்து அந்த நிறுத்தத்தில் ஓட்டுநர் நிறுத்திய போது அந்த பேருந்திலிருந்து நான்கைந்து பேர் இறங்க, அப்போது தலையை நீட்டி வேடிக்கை பார்த்து கொண்டே வந்த தேவயானியின் கண்களில்,

பேருந்து நிறுத்தத்தில் இருந்த இரும்பு இருக்கையில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்த குமரன் தெரிந்தான்.

குமரனை கண்டதும் அவளது மனதில் சட்டென ஒரு ஆனந்த அலை,

" அட நம்ம குமரன் " என்று நினைத்த போதே அவள் அண்ணிச்சையாக அமர்ந்து இருந்த இருக்கையிலிருந்து எழுந்து விட்டாள்,
அதை கண்ட நடத்துனர்,

" என்ன ம்மா இறங்க போறியா? இறங்கணும்ன்னா சீக்கிரம் வெளிய வாம்மா " என்று குரல் கொடுக்க,

சட்டென என்ன சொல்வது என்று தெரியாமல் இறங்க வேண்டும் என்று தலையை ஆட்டி விட்டு கீழே இறங்கிவிட்டாள்.

இறங்கியவளின் பார்வை குமரன் மீது நிலைத்து இருக்க,

அவனோ தனது மனதில் எழுந்த புதிய உணர்வை கடக்கும் வழி அறியாது விழி மூடிய நிலையில் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து தலையை வான் நோக்கி வைத்து அமர்ந்து இருந்தான்.

அவன் இருக்கும் நிலையை கண்டவள் யோசனையோடு அவனை அழைத்தால்,

" குமரா "

அவளைத் தேடி நாடிக் கொண்டிருந்த குமரனின் காதில் அவளது அழைப்பு குரல் கேட்கவும்,

ஆளை கண்ட சாரை பாம்பு எப்படி வேகமெடுக்குமோ அதே அளவிலான வேகத்தோடு அழைப்பு வந்த திசையை நோக்கி திரும்பினான்.

அங்கு பேருந்து நிறுத்தத்தில் அமைந்திருந்த உயர் கோபுர மின் விளக்கு வெளிச்சத்தில் மலர்ந்த முகத்தோடு நின்ற தேவயானியை பார்க்கவும் சுழன்று கொண்டிருந்த புவி தனது இயக்கத்தை நிறுத்தியது போல உணர்ந்தவன் மனம் அவளது கை சைகையை கண்டு மெல்ல உயிர் பெற்று அகம் மலர்ந்து அவளை " தேவா " என்று அழைத்து கொண்டே கால்களை எட்டி வைத்து அருகில் வந்து நின்றான்.

குமரனின் வேகமும், மகிழ்ச்சியும் தேவயானிக்கு நம்ப முடியாத ஒன்றாக தெரிந்தது,

" என்ன ஆச்சு குமரன், இத்தன மகிழ்ச்சி உங்க முகத்தில " என்று அவள் கேட்ட நேரம் அவளை இறுக்கி அணைத்து கொண்டான் குமரன்.....


நெஞ்சில் நிறைவாள்......
 
Top Bottom