• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பாவை 14

STN - 94

Member
Staff member

“அன்னைக்கு ராத்திரியே நாங்க ரெண்டு பேரும் வீட்டை காலி செஞ்சுட்டு பெங்களூர் போனாம். அங்கே என் அப்பாவோட பிரெண்ட் வீட்டில தங்கியிருந்தோம். அவர் ஏற்கனவே யுஎஸ்ல இருக்கற தமிழர்களுக்கு நடத்தற கலைநிகழ்ச்சியில பேச ஆள் வேணும்னு சொல்லிட்டே இருந்தாரு. எனக்கு இந்தியாவ விட்டு போக விருப்பமில்லாம இருந்தேன். இந்த முறை நானே அந்த வாய்ப்பு கிடைக்குமானு கேட்டேன், அவரும் ஏற்பாடு செஞ்சாரு, நானும் கதிரும் யுஎஸ் போயிட்டோம். குயிலோசை எப்எம்க்கு வருத்தம் தெரிவிச்சு மெயில் அனுப்பினோம். நீ வந்து கேட்டா தெரியாதுனு சொல்ல சொன்னோம்

நீ எப்படியிருக்கே என்ன பண்றேனு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கும், ஆனாலும் அந்த முயற்சியில மறுபடியும் உன்னை குழப்ப வேணாம்னு மனச தேத்திட்டு கலைநிகழ்ச்சிங்கள்ல பேசுறது, பாடுறதுனு காலத்தை கழிச்சேன். அப்போ தான் ஒரு டாக்டர் என்னை சந்திச்சு பேசினாரு”

“மிஸ்டர் ரிஷி, உங்களோட ஸ்டேன்ட்அப் காமெடி எல்லாம் அருமையா இருக்கு, எங்கள போல டாக்டர்ஸ்க்கு எல்லாம் எவ்வளவு ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருக்கு தெரியுமா? உங்களுக்கு பார்வையில்லங்கிற விஷயமே எனக்கு தெரியாது, இப்போ தான் என் பிரெண்ட் சொன்னாரு, அதான் நேர்ல பேசலாம்னு வந்தேன். உங்களுக்கு எப்போ இருந்து பார்வையில்ல?”

ரிஷி தன் கதையை சுருக்கமாக சொன்னான். அதை அமைதியாக கேட்ட அந்த மருத்துவர், “நாளைக்கு என்னோட கிளினிக்குக்கு வாங்க, எதாச்சும் பண்ண முடியுமானு பாக்கலாம்” என்றார்.

மறுநாள் ரிஷியும் கதிரும் அவர் சொன்ன மருத்துவமனைக்கு சென்றனர். ரிஷியின் கண்களை பரிசோதித்த மருத்துவர், “ரிஷி உங்களோட ஒரு கண்ணுல ரெட்டினா பாதிப்படைஞ்சிருக்கு. இன்னொரு கண்ணுல கார்னியா டெமேஜ் ஆகியிருக்கு. கண் கருவிழி மேல இருக்கற நிறமில்லாத கண்ணாடி போல இருக்கற முதல் லேயர் தான் கார்னியா. இது மூலமா தான் ஒளி கண்ணுக்குள்ள விழுந்து லென்ஸ் வழியா பிரதிபலிச்சு, கண்ணோட கடைசி திரையான ரெட்டினா மேல விழுது. அங்கே இருக்கற ஒளி நரம்புகள் மூளைக்கு அந்த செய்தியை கொடுத்து நாம பாத்த காட்சிய நமக்கு புரிய வைக்குது

உங்களோட ஒரு கண்ணுல இறந்தவங்க யாராச்சும் கண்தானம் பண்ணியிருந்தா அவங்களோட கார்னியாவ பொறுத்தணும். இப்பவே ஐபேங்க்ல உங்களுக்காக சொல்லி வைக்கிறேன். இன்னொரு கண்ணுல பாதிப்படைஞ்ச ரெட்டினா செல்களை எடுத்துட்டு புதிய செல்களை அங்கே பொறுத்தறது.

இதுல ரெண்டு விதமிருக்கு ஒன்னு இறந்தவங்களோட ரெட்டினா செல்களை எடுத்து உங்க கண்ணுல பொறுத்தறது இல்லனா யாராச்சும் டோனர் கிட்ட இருந்து ஸ்டெம் செல், எலும்பு மஜ்ஜையில இருக்கற செல்களை எடுத்து அதை ரெட்டினா செல்களா உருவாக்கி உங்க கண்ணுல பொருத்தறது. நாம செய்ய போறது ரெண்டாவது டைப். இந்த முறை இன்னும் ஆராய்ச்சியில தான் இருக்கு. பட் பார்வை கிடைக்க வாய்ப்பிருக்கு”

“அப்போ உடனே என்னோட செல்களையே எடுத்து வேலைய ஆரம்பிங்க டாக்டர்”

“Auto Immune system ல body தன்னுடைய புதிய retinal cells-ஐயே attack பண்ணும். சோ உங்களோட செல்களை பயன்படுத்த முடியாது” என்றார்

கதிர் இடையிட்டான், “டாக்டர் என்னோட செல்களை எடுத்துக்கோங்க” என்றான்

மருத்துவரும் உடனடியாக அதற்காக பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டார். கதிருடைய செல்களை எடுத்த ரெட்டினா செல்களாக மாற்றும் பணியில் அவர் தீவிரமாக இருந்தார். ரிஷிக்கு பார்வை திரும்பி விடும் என்ற நம்பிக்கை துளிர்த்திருந்தது.

“கதிர், எனக்கு ஆப்ரேஷன் சக்ஸஸ்புல்லா நடந்ததும் நிருவுக்கு போன் பண்ணி சொல்லிடுடா. பார்வை வந்துடும் இல்ல?” என்றான் ரிஷி ஆர்வத்துடன்

“கண்டிப்பா வந்துடும் ரிஷி. இப்பவே நான் நிருஷிகாவுக்கு போன் பண்றேன்”

“வேணாம்டா, ஆப்ரேஷன் நல்லபடியா முடியட்டும், அப்புறமா அவளோட அப்பாவுக்கு முதல்ல போன் பண்ணி விஷயத்த சொல்லு. இந்தா அவரோட கார்டு. ஒரு கண்ணுல பார்வை வந்தாலும் பரவாயில்ல, நான் என் நிருஷிய கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பேன். தைரியமா அவர்கிட்ட பொண்ணு கேப்பேன். நான் சொல்லாம கொள்ளாம ஓடி வந்ததால நிரு ரொம்பவே உடைஞ்சு போயிருப்பா இல்ல? என்மேல ரொம்ப கோவமா இருப்பாளா? உண்மைய சொன்னா புரிஞ்சுப்பா தானே?” ரிஷி சின்ன குழந்தை போல நண்பனிடம் கேட்டு கொண்டிருக்க கதிர்மாறனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“நிரு மேல இவ்வளவு காதல வச்சுட்டு தான் அவள விட்டு ஓடி வந்தியாடா?”

“ஆமாடா, நிரு என்கிட்ட முதன்முதலா எப்எம்ல போன் கால்ல பேசி தன் காதலை தைரியமா சொன்னப்பவே எனக்கு அவள ரொம்ப பிடிச்சிருந்தது. அதுவும் நான் எவ்வளவு துரத்தியும் விடாம என்னை தேடி வந்தா பாரு, நான் அப்பவே அவளை நேசிக்க தொடங்கிட்டேன். எனக்கு பார்வையில்லங்கிறதுக்காக தான் அவளை விட்டு விலகியிருந்தேன். அப்பவும் அவ என்னை விடாம என் மனச ஆட்டிபடைச்சிட்டா. இப்போ பார்வை வந்துட்டா எங்க காதலுக்கு எந்த தடையும் இல்லடா. நான் தேவ்ராஜ்கிட்ட தைரியமா உங்க பொண்ணை எனக்கு கட்டி வையுங்கனு கேப்பேன்

உனக்கொரு உண்மைய சொல்லட்டுமா கதிர். எனக்கு பார்வை போனப்போ வருத்தம் இருந்தாலும் நான் அதை கடந்து வந்துட்டேன். இந்த உலகத்துல இருக்கற இயற்கையோட அழகையும், பல வண்ணங்களையும் நான் பார்த்துட்டேன். பார்வை போனப்பின்னாடி நீ ஒவ்வொரு விஷயத்தையும் விவரமா சொல்லும் போது அது எப்படியிருக்கும்னு என்னால கணிக்க முடியும். அதனால திரும்ப பார்வை கிடைக்கணும்னு நான் பெரிசா மெனக்கெடல.

ஆனா நிருஷிய காதலிக்க ஆரம்பிச்சதும் அவள பாக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சு. பார்வையில்லயேனு அப்போ தான்டா வருத்தப்பட்டேன். அவளோட அப்பாவும் பார்வையில்லாதவருக்கு தன் பொண்ண கட்டி கொடுக்க விருப்பமில்லனு பேசினப்போ, எப்படியாச்சும் எனக்கு பார்வை கிடைச்சிடணும்னு நினைச்சேன். அது எந்தளவுக்கு வெற்றியடையும்னு தெரியாது. அதனால தான் இதப்பத்தி நான் எதையும் உன்கிட்ட கூட பேசல. ஆனா யுஎஸ் போனா எதோ ஒரு அதிசயம் நடக்கும்னு நம்பனேன். அதுக்காக தான் நாம யுஎஸ் போகாலம்னு சொல்லி உன்னையும் அழைச்சிட்டு வந்தேன். நான் எதுக்கு வந்தேனோ அது வீண் போகல. ரெண்டு கண்ணுல ஒரு கண்ணாவது கிடைக்க போகுதே, அதுவரைக்கும் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா. ஆப்ரேஷன் சக்ஸஸ்புல்லா முடிஞ்சதும் நீ நிருஷிக்கு தகவல் சொல்லிடு, நான் கண்திறக்கும் போது அவ என் கண் முன்னாடி இருக்கணும்” என்றான் ரிஷி ஆழ்ந்த குரலில்

“என்னால தான்டா உனக்கு இந்த நிலைமை” என்றான் கதிர் தழுதழுத்த குரலில்

“சேச்சே அப்படி சொல்லாதடா. எனக்கு கண்பார்வை போனதால தான் எப்எம்ல சேர்ந்தேன், நிருஷியோட அப்பழுக்கில்லாத காதல் கிடைச்சது. பார்வையில்லாதது தான் அவ கிடைக்க காரணமா இருந்தது. அவளோட சேர்ந்து வாழவும் அதே பார்வை தேவைப்படுது. பாவையின்றி பார்வையில்லைடா” என்றான் சிறு வெட்கத்தோடு

“ரிஷி இத்தனைவருஷத்துல நீ என்கிட்ட கூட இந்தளவுக்கு மனசுவிட்டு பேசினதில்ல. என்னதான் மோடிவேஷனலா பேசிட்டு இருந்தாலும் உயிர்ப்பே இல்லாத ஜடம் மாதிரி தான் வாழ்ந்துட்டு இருந்தே. நிருஷியோட காதல் தான் உன்னை உணர்ச்சியிருக்கற மனுஷனா மாத்தியிருக்கு. உன்னோட காதலும், கண்களும் உனக்கு திரும்ப கிடைக்கணும்னா நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்டா” என்று நண்பனை ஆரத்தழுவிக் கொண்டான்.

ரிஷி ஒரு பெருமூச்சுடன் நடந்ததை தொடர்ந்தான். “ஆப்ரேஷன் முடிஞ்சதும், ஆர்வமா நிருஷி வந்துட்டாளாடானு கேட்டேன். அதுக்கு கதிர் இரண்டு வாரத்துல இன்னொரு ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்லியிருக்காங்க. நீ ஆஸ்பிட்டல்ல தைரியமா இரு, நான் நேர்ல போய் நிருஷிகாவையும் அவளோட அப்பா அம்மாவையும் கூட்டிட்டு வரேன்னு சொன்னான். நீ எதுக்குடா போறே, அவங்களுக்கு போன் பண்ணு வருவாங்கனு சொன்னேன். இல்லடா சொல்லாம ஓடி வந்துட்டோம். அவ தப்பா புரிஞ்சிருப்பா, நேர்ல போய் விவரமா சொன்னா தான் சரியா இருக்கும்னு சொன்னான். நானும் அவன் சொன்னத நம்பி சரினு சொன்னேன்” என்றவன் குரல் தழுதழுத்தது

அதுவரை திரும்பி நின்று அவன் சொல்வதை மட்டும் காதில் வாங்கி கொண்டு நின்றவள் ரிஷியின் குரல் மாற்றத்தில் அவனருகே வந்தாள். அவளை இழுத்து அணைத்து அவளின் தோளில் முகம் புதைத்து கொண்டான்.

தோள்களில் ஈரத்தை உணர்ந்தவள் “என்னாச்சு ரிஷி?” என்றாள் பதட்டத்துடன். வெகுநேரம் சத்தமில்லாமல் ரிஷி குலுங்கி அழவும் ஏதோ பெரியதாக நடந்திருக்கிறது என்று பயந்தாள்.

ரிஷியின் கண்கள் பச்சை நிறத்தில் இருக்கிறதே! கதிர்மாறனின் கண்களும் பச்சை நிறத்தில் தானே இருக்கும்! ரிஷியின் கண்களில் கதிர்மாறனை கண்டதால் தானே அவள் மயக்கமடைந்தாள்! நிருஷியின் வயிற்றில் கலவரம் தோன்றியது.

“ரிஷி, கதிர் எங்கே?” என்றாள் சந்தேகத்துடன்

அவள் சந்தேகம் சரிதான் என்பது போல, ரிஷியின் அணைப்பு மேலும் இறுகியது. அவளின் கழுத்து வளைவில் அவன் கண்ணீர் வழிந்து அவளின் ஆடையை நனைத்தது.

“ராஸ்கல், he cheated me நிருஷி” என்றான் கரகரத்த குரலில்

“என்னாச்சு” இதயம் வேகமாக துடித்தது

“எனக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தை மீறிட்டான். எனக்கு முதல்ல செஞ்ச ஆப்ரேஷன் பெயிலியர் ஆகி இருக்கு, அத யாருமே என்கிட்ட சொல்லல. அவன் தான் சொல்ல வேணாம், தெரிஞ்சவங்க சீரியசா இருக்காங்க, அவங்க கண்தானம் பண்ணியிருக்காங்க. மறுபடியும் ஆபரேஷன் பண்ணுங்கனு சொல்லியிருக்கான்.

டாக்டரும் அத நம்பியிருக்காரு, இவன் கண்தானம் உடல் தானம்னு எல்லாத்தையும் எழுதி வச்சுட்டு யாருக்கும் தெரியாம ஆஸ்பிட்டல்லயே த****லை பண்ணியிருக்கான். அவனோட கண்களை எனக்கு தான் வைக்கணும், அப்போ தான் தன்னோட ஆத்மா சாந்தியடையும் சொல்லி எழுதியிருக்கான். டாக்டர்ஸ்ம் என்கிட்ட உண்மைய சொல்லாம அவனோட கார்னியாவையும், ரெட்டினா செல்களையும் எனக்கு எடுத்து வச்சிருக்காங்க.

நான் கண்விழிக்கும் போது நிருஷிகா இருக்கணும்னு அவன்கிட்ட கேக்காம நீதான்டா இருக்கணும்னு சொல்லியிருந்தா இருந்திருப்பானோ என்னவோ? இந்த மாதிரி அவன் பைத்தியக்காரத்தனம் எதுவும் செய்யக்கூடாதுனு தான் கண் இல்லாததால எனக்கு எந்த பிரச்சனையுமில்லங்கிற மாதிரி நான் நடந்துக்கிட்டேன். டாக்டர் கொடுத்த நம்பிக்கையினால உன்னை அடையறதுக்கு வழி கிடைக்க போகுதுங்கிற சந்தோஷத்துல நான் என் மனசுல இருந்ததெல்லாம் அவன்கிட்ட கொட்டிட்டேன். அவனுக்குள்ள மறுபடியும் குற்றஉணர்ச்சி ஏற்பட்டு என் வாழ்க்கைய சரி செய்யறதா நினைச்சு தன் வாழ்க்கைய பலியாக்கிட்டான்.

இந்த நிலைமையில நான் என் காதல் தான் பெரிசுனு எப்படி உன்னை தேடி வரமுடியும் சொல்லு? உணர்ச்சிகளை வெளிகாட்டாம இருந்தப்போ என் கதிர் என்கூடவே இருந்தான். ஒரே முறை என்னோட உணர்ச்சிகளை அவன் கிட்ட சொல்லி அவனோட உயிர் போக நானே காரணமாயிட்டேன். அவன் உயிர பறிச்சு தான் எனக்கு பார்வை வரணுமா? அப்படிப்பட்ட பார்வையே எனக்கு வேணாம்னு கத்தினேன். டாக்டர்ஸ்னால என்னை கன்ட்ரோல் பண்ணவே முடியல. அவங்களும் என்கிட்ட உண்மைய சொல்லாததால அவங்க மேல கேஸ் போட போறேன்னு மிரட்டினேன்.

என்னை கன்ட்ரோல் பண்ண முடியாம திணறின டாக்டர், “உங்க பிரெண்ட் கதிர் உங்களோட தான் இருக்காரு. உங்க கண்கள்ல தான் அவர் வாழறாரு. அவரை நீங்க பாக்கணும்னா கண்ணாடியில உங்களோட கண்ணை பாருங்க. அவர் தெரிவாருனு சொல்லி என் கண்கட்டை கழட்டினாரு.

கண்ணாடியில தெரிஞ்ச என் கண்ணை பாக்கும் போது அதிர்ச்சியாயிட்டேன். அவர் சொன்னதுபோலவே கதிர்மாறனோட பச்சை நிற கண்கள பாத்து திகைச்சுட்டேன். இதெப்படி சாத்தியம்? கார்னியா ஒரு நிறமில்லாத லேயர் தானே, அதை எடுத்து என் கண்ணுல வச்சா எப்படி என் கண்ணு பச்சை நிறமா மாறும்?

கதிரோட ரெட்டினா செல்களையும், கார்னியாவையும் உங்களுக்கு பொறுத்தியிருந்தாலும் பொதுவா அவர் கண்களோட நிறம் உங்க கண்களுக்கு வராது. ஆனாலும் உங்க கண்கள் இப்போ பச்சை நிறமா தெரியுதுனா, கதிர் உங்களோட இருக்கறதா தானே அர்த்தம்னு டாக்டர் கேட்டாரு.

கண்ணாடியில கதிரோட கண்களை பார்த்து ஏன்டா இப்படி பண்ணேனு கேட்டு அழுவேன். ஒரு நாள் கதிர் கடைசியா சாகறதுக்கு முன்னாடி எனக்கு அனுப்பியிருந்த மெயிலை பாத்தேன். அதுல, “ரிஷி, என் முடிவை உன்னால ஏத்துக்க முடியாதுனு எனக்கு தெரியும். தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுடா. நான் உயிரோட இருந்திருந்தாலும் கடைசி வரைக்கும் உன் நிழல் போல உன்கூடவே தான் இருந்திருப்பேன். இப்போ உன்னோட கண்களுக்குள்ள உயிர்ப்போட இருக்க போறேன். நீயிருக்கற வரைக்கும் நானும் உன்கூடவே தான் இருப்பேன். என்னால போன பார்வை என்னாலயே கிடைச்சதா இருக்கட்டும். நீ நிருஷிகாவோட சந்தோஷமா வாழணும், அதுதான் என்னோட கடைசி ஆசை. தயவு செஞ்சு அவளை போய் பார்த்து பேசு. என்றும் உன்னுடன் கதிர்மாறன்” அப்படினு எழுதியிருந்தான்.

கதிரோட இழப்புல இருந்து மீண்டு வர எனக்கு ரொம்ப நாளாச்சு. அவன் ரெட்டை கதிர் போல என்கூடவே ஒட்டிட்டு இருந்தான் நிருஷி. அவன் என்கூட இல்லங்கிறதயே என்னால ஜீரணிக்க முடியல. கண்ணு நல்லா தெரிஞ்சும் எந்த இடத்துக்கும் போகறதுக்கு பயமா இருந்துச்சு. அவன் ஒவ்வொரு முறையும் எங்கே நிக்கணும், எத்தனை அடி நடக்கணும்னு எனக்கு சொல்லி சொல்லி அதுவே பழக்கமாயிடுச்சு. பார்வையிருந்தும் அவன் இல்லாம ரொம்பவே தடுமாறிட்டேன் நிரு”

“நாம சேர்ந்து வாழறதுக்கு காதல் போதும் பார்வை தேவையில்லனு நான் பலமுறை சொல்லியும் உனக்கு கேக்கவே இல்லல்ல? நான் சொல்றத விட உனக்கு மத்தவங்க சொல்றது தான் முக்கியமா போச்சா? கதிரை கூட்டிட்டு போய் அவன் உயிரை காவு வாங்கிட்டு பார்வையோட வந்தா நான் உன்னை ஏத்துக்கணுமா?” என்று அவனின் சட்டையை பிடித்து ஆவேசமாக உலுக்கினாள்.

“இப்படி நடக்கும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல நிரு, ப்ளீஸ் என்னை வெறுத்துடாதே” என்று கண்களால் கெஞ்சினான்

அவன் கண்களை உற்று பார்த்தவள் தலையை பிடித்து கொண்டாள்,

“ஐயோ இந்த கண்ணுல எனக்கு கதிர் தானே தெரியறான், நான் எப்படி உன்கூட?” என்று விலக முயன்றவளை அதற்குமேல் பேச விடாமல் அவள் இதழ்களை வன்மையாக கொய்திருந்தான். எங்கே இவளையும் இழந்து விடுவோமோ என்ற தவிப்பு அவனின் இறுகிய அணைப்பில் தெரிந்தது.

(தொடரும்)
 
Last edited:
Top Bottom