• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பாவை 18

STN - 94

Member
Staff member
“ராஜ்ஜோட சொந்த உழைப்பால வந்த சொத்து தொழில் எல்லாத்துக்கும் நீ தான் வாரிசு, அவரோட காலத்துக்கு பிறகு ராஜ்ஜோட மகளா எல்லாத்தையும் நீதான் பாத்துக்கணும்னு நினைக்கறாரு. ஆனா அது குருவி தலைல பனங்காய வைக்கறதுக்கு சமம். ஏன்னா தொழில்ல பாதி பங்கு அவரோட பெரியப்பா மகள் மாலினியோடது. எல்லாரையும் உ்ன்னால சமாளிக்க முடியுமானு தெரியல. உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டா ரெண்டு பேருமா சொத்தையும் தொழிலையும் கவனிச்சுப்பீங்க. அவர் ரெஸ்ட் எடுத்துக்கலாம்னு நினைக்கறாரு”

“அதுக்கு கல்யாணம் பண்ணிதான் ஆகணும்னு அவசியமில்லயேம்மா. நான் வேணும்னா அவரோட கம்பெனிக்கு போய் அவருக்கு உதவியா இருக்கேன்”

“நிஜமா தான் சொல்றீயா?”

ஆமாம் என்றவள் ராஜ் இருந்த அறைக்கு சென்றாள். அவரின் அருகில் அமர்ந்து கொண்டு அவரின் கையை பற்றிக் கொண்டாள். ராஜ் ஆச்சரியத்துடன் மகளையும், பின்பு கேள்வியாய் மனைவியையும் பார்க்க, “அப்பா” என்றாள் மகள்

“நிருஷி! இப்போ என்னனு சொன்னே?” ராஜ்ஜின் குரல் தழுதழுத்தது

“அப்பானு சொன்னேன்”

“நீ என்னை நிஜமாவே ஏத்துக்கிட்டியா? இல்ல உன் அம்மா எதாச்சும் சொன்னாளா?” என்று சந்தேகமாக பார்க்க,

“அவங்க எதுவும் சொல்லலப்பா. உங்களுக்கு உடம்புக்கு முடியாம போனத பார்த்தும் எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு”

“அப்புறம் ஏன்டா நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன்னு சொன்னதுக்கு முடியாதுனு சொல்லிட்டு போயிட்டே”

“கல்யாணத்தை பத்தி பேசினதும் கோபம் வந்துடுச்சு, நான் வேணும்னா உங்களுக்கு உதவியா கம்பெனிய பாத்துக்கட்டுமா?”

“சரிடா, டாக்டர்ஸ்ம் கம்பெனி பக்கம் போகக்கூடாதுனு சொல்லியிருக்காங்க. நான் மாலினி அக்கா மகன் அஸ்வின்கிட்ட சொல்றேன், அவன் உனக்கு வேலையெல்லாம் சொல்லி கொடுப்பான்”

“சரிங்கப்பா” என்றாள் நல்லபிள்ளையாக

ராஜ்க்கு தலைகால் புரியாத சந்தோசம், உடனே அஸ்வினுக்கு அழைத்து நிருஷிகாவை அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய சொத்துக்களை கவனிக்கும் பொறுப்பை சட்டப்படி நிருஷிகாவின் பெயரில் மாற்றினார்.

நிருஷிகா தன் அன்னை அனுபவித்த கொடுமையையும் அதற்கு ராஜ் உற்ற துணையாக இருந்து அவர்களை காத்ததற்கு நன்றி கடனாக நினைத்து இருவருக்கும் நல்ல மகளாகவும் நடந்து கொண்டாள். தொழிலையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். ராஜ்ஜும் கம்பெனிக்கு வர ஆரம்பித்திருந்தார்.

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு மீண்டும் பலமாக ஸ்ட்ரோக்கும் கூடவே மைல்ட் அட்டாக்கும் வந்தது. அலுவலகத்தில் நிருஷிகாவும் அவருடனே இருந்ததால் அஸ்வின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தாள். மைதிலியும் அவளும் மிகவும் கலங்கி போனார்கள். ராஜ் கண்விழிக்கும் வரை இருவருமே அழுது கொண்டிருந்தார்கள்.

அவர் கண்விழித்ததும் நிருஷிகாவும் மைதிலியும் உள்ளே சென்றனர். ராஜ் கையை நீட்ட, நிருஷிகா அவரின் கைகளில் தன் கரத்தை வைத்தாள். அதை லேசாக அழுத்தியவர் “நிருஷி இதயத்துல வேற அடைப்பு இருக்காம், ஆஞ்சியோ செய்யணும்னு சொல்றாங்க. என் கடைசி ஆசையை நிறைவேத்துவியாடா?”

“ஏன்ப்பா கடைசி ஆசைனு சொல்றீங்க, உங்களுக்கு எதுவும் ஆகாது. என்ன செய்யணும்னு சொல்லுங்க செய்யறேன்”

“நீ கல்யாணம் பண்ணிக்கணும்டா. நான் உயிரோட இருக்கும் போதே உன் கல்யாணத்தை பாத்துட்டா போதும். எனக்கு பிறகு உன்னோட புருஷன் உன்னையும் மைதிலியையும் குழந்தைகளையும் நல்லா பாத்துக்கறவனா இருக்கணும்”

அந்த நேரத்தில் அவரை எதிர்த்து பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

“என் அக்கா பையன் அஸ்வினை பத்தி நீ என்ன நினைக்கிறே?”

அதிர்ச்சியுடன் பார்த்தாள். “அஸ்வினுக்கு ஏற்கனவே நம்ம கம்பெனியோட வேலையெல்லாம் நல்லா தெரியும். அவன் கண்டிப்பா உன்னையும் நம்ம குடும்பத்தையும் நல்லா பாத்துப்பான். நம்ம வீட்டோட வந்தாலும் மாலினி அக்கா எதுவும் சொல்லமாட்டாங்க. போனமுறை நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தப்பவே அக்கா உன்னை பொண்ணு கேட்டாங்க, சொந்தம் விட்டு போகக்கூடாதுனு அவங்க கேட்டுகிட்டாங்க. நான் தான் உன்னோட விருப்பம் இல்லாம எதையும் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டேன்.

இனி உன் மனசு மாறும் வரைக்கும் எனக்கு அவகாசம் இருக்குமானு தெரியல. நான் இருக்கும் போதே உங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுத்துட்டு போகணும்னு நினைக்கறேன். என்னடா சொல்றே?”

நிருஷிகா பதில் சொல்லவில்லை. ரிஷியை நினைத்து கண்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

“சரிடா உனக்கு விருப்பமில்லனா வேணாம்” என்ற ராஜ் கண்களை மூடிக் கொண்டார்.

பின்னால் நின்றருந்த மைதிலி மகளை அழைத்து கொண்டு வெளியே சென்றார். “நிருஷி, அப்பா சொல்ற மாதிரி கேளுமா. அவரையும் இழந்துடுவேனோனு எனக்கு பயமா இருக்கு” என்று தாயும் மகளிடம் அழுது கெஞ்ச என்ன சொல்வதென்று தெரியாமல் குழம்பினாள்.

அஸ்வின் நிருஷிகாவிடம் வந்து, “நிருஷிகா உங்க நிலைமை எனக்கு புரியுது. இப்போதைக்கு மாமாவோட உயிர காப்பாத்தறதுக்காக கல்யாணத்துக்கு ஓகேனு சொல்லுங்க. அவர் பூரணமா குணமாயிட்ட பின்னாடி வேணாம்னு சொல்லிக்கலாம். இப்போதைக்கு அவர் உடம்பு தேறணும், அதுதான் நமக்கு முக்கியம்” என்று சொன்னான்.

நிருஷிக்கும் அதுவே சரியென்று தோன்ற ராஜ்ஜிடம் சென்று, “நீங்க பூரணமா குணமாகி வந்த பின்னாடி கல்யாணம் பண்ணிக்கறேன்” என்று சொன்னாள்.

இந்த முறை மருத்துவமனையில் ஒரு மாதம் தங்க வேண்டியிருந்தது. மகளின் சம்மதத்தினாலோ என்னவோ ராஜ் சீக்கிரமாகவே உடல்நலம் தேறிவந்தார். வீட்டிற்கு வந்ததும் மளமளவென்று திருமண வேலைகளை தொடங்கி விட்டார். நிருஷிகா அஸ்வினிடம் இதுபற்றி பேச, “சாரி நிருஷிகா, என் அம்மா உங்கள தான் கல்யாணம் பண்ணிக்கணும், இல்லனா மாமா மனசு கஷ்டப்படும்னு சொல்லிட்டாங்க, அவங்கள மீறி என்னால எதுவும் செய்யமுடியாது. நீங்க எதாச்சும் பண்ண முடியுமானு பாருங்க”

“என்ன அஸ்வின் இப்படி சொல்றீங்க? உங்கள நம்பி தானே அப்பாகிட்ட சம்மதம்னு சொன்னேன்”

“நான் கல்யாணத்தை நிறுத்த சொல்லி அதனால மாமா உயிர் போனா என்னால தாங்க முடியாது நிருஷிகா. அந்த ரிஸ்க்கை நான் எடுக்க விரும்பல. நீங்க சொல்றதா இருந்தா சொல்லுங்க”

“நீங்க இந்த கல்யாணம் நடக்கணும்னு நினைக்கறீங்களா?”

“மாமா உயிர் இதனால போகக்கூடாதுனு நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

ராஜ் மற்றும் மைதிலி இருவரும் திருமண வேலைகளை விமரிசையாக நடத்துவதும், ஒவ்வொன்றிற்கும் அவளிம் அபிப்ராயம் கேட்பதுவுமாக இருந்தார்கள். அஸ்வின் சொன்னது போல திருமணம் வேண்டாம் என்று சொல்ல போய் மீண்டும் ராஜ்ஜூக்கு எதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்று பயந்த நிருஷிகாவும் மெளனமாகவே இருந்துவிட்டாள்.

“கல்யாணம் நடக்கறதுக்குள்ள எதாவது மேஜிக் நடந்து சினிமாவுல வர்றது போல நீங்க வந்து இந்த கல்யாணத்த நிறுத்திடமாட்டிங்களானு கடைசி நிமிஷம் வரைக்கும் உங்களுக்காக காத்திட்டு இருந்தேன் ரிஷி.

நான் எதிர்பார்த்த மாதிரி கல்யாணம் நின்னுடுச்சு, ஆனா நீங்க வரல. யாருக்காக கல்யாணத்தை ஒத்துக்கிட்டேனோ அவர் உயிருக்கு ஆபத்து வந்து அதனால கல்யாணம் நின்னுடுச்சு. இப்போ கல்யாணம் நின்னுடுச்சுனு சந்தோஷப்படறதா? அப்பாவுக்கு முடியாம போச்சேனு கவலைப்படறதா? இந்த ரெண்டையும் தாண்டி அப்பாவோட சொத்தை அடையறதுக்காக அம்மாவும் நானும் தான் ஸ்லோ பாய்ஸ்ன் கொடுத்ததா சொல்லி எங்க ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணிட்டு போனததான் கல்யாணத்துக்கு வந்தவங்க பாத்தாங்க

அப்பாவுக்கு யார் ஸ்லோ பாய்ஸன் கொடுத்தாங்கனு தெரியணும், அம்மாவ ஜெயில்ல இருந்து வெளிய கொண்டு வரணும், புவன்புவனிகாவை ஹாஸ்டல்ல இருந்து கூட்டிட்டு வந்து என்கூடவே வச்சுக்கணும். இந்த பிரச்சனையெல்லாம் முடிஞ்சு என் குடும்பம் பழைய மாதிரி ஆகணும். இதுக்கு நான் பணம் சம்பாரிக்கணும்னு தான் வேலைக்கு சேர்ந்தேன். டபுள்மடங்கா சம்பளம் கிடைக்கும்னு மூணுவருஷ கான்ட்ராக்ட்ல கையெழுத்தும் போட்டேன்.

புதுஇடம் தொடர்ந்து வேலை, ஹாஸ்டல் சாப்பாடு, பஸ் டிராவல்லனு அலைச்சல்ல இருந்த நான் உங்கள ரெக்கார்டிங் ரூம்ல பாப்பேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல. உங்கள பாத்ததும் ரொம்ப சந்தோஷம், உங்களுக்கு எப்படி கண்பார்வை வந்ததுனு ஆச்சர்யம், அந்த கண் ஏன் கதிரை ஞாபகப்படுத்துதுனு குழப்பம், இதெல்லாத்தையும் விட நீங்க ஏன் என்னை விட்டுட்டு போனீங்க? இப்போ ஏன் திரும்பி வந்திருக்கீங்கனு எனக்குள்ள நிறைய கேள்விகள் வேற.

என்னை பத்தி இங்கே யாருக்கும் தெரியாது, நான் உணர்ச்சிவசப்பட்டு என்னை வெளிப்படுத்திக்கிட்டா நான் இங்கே சொன்னது எல்லாம் பொய்னு தெரியவரும். அவங்க என்னை தப்பா நினைக்கறது ஒருபக்கம் இருந்தாலும், நீங்க என்னை எப்படி நினைப்பிங்களோனு கலக்கமா இருந்துச்சு, இதெல்லாம் சேர்ந்து என்னை மயங்க வச்சிடுச்சு” என்றாள்

“நான் உன்னை தப்பா நினைக்கறதா? உன்கூட இருந்த அந்த ஒருவாரம் தான் என் வாழ்க்கையில வசந்தகாலம் நிரு. அந்த நினைவுகளோடவே வாழ்ந்துட்டு இருந்த என்முன்னாடி உன்னோட உண்மையான உருவத்தை பார்த்தும் எப்படியிருந்துச்சு தெரியுமா? இழந்த என்னோட அம்மா அப்பா, கதிர் இவங்க எல்லாம் எனக்கு திரும்ப கிடைச்ச மாதிரி இருந்துச்சு

நீ நினைச்சமாதிரி உன் அப்பாவ யாரு கொல்ல பாத்தாங்கனு கண்டுபிடிச்சு அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்துட்டு, உன் அப்பாவ குணமாக்கி அவர் முன்னாடி நம்ம கல்யாணத்தை நடத்தி காட்றேன் நிரு”

“முடியுமா ரிஷி?”

“நீ என் பக்கத்துல மட்டும் இரு, எல்லாத்தையும் முடிச்சு காட்றேன்” என்றபடி காரை நிறுத்தியிருந்தான். அது அவன் தங்கியிருந்த அபார்ட்மென்ட்.

“ரிஷி, நீங்க இருந்த ரூம்லயா தங்க போறாம்? வேணாம் ரிஷி. நம்ம காதல் நினைவுகளோட கதிரோட நட்பும் அங்கே நீங்காத நினைவுகளா இருக்கு. கதிர் இல்லாம அங்கே என்னால இருக்க முடியாது” என்றாள் கலங்கிய கண்களுடன்

“என்னால மட்டும் கதிர் இல்லாத வீட்ல இருக்க முடியும்னு நினைக்கிறியா நிரு?”

“பின்ன ஏன் இங்கே வந்தீங்க?”

“முடிக்க வேண்டிய கணக்க முடிச்சு வைக்க”

“புரியல”

“முடிச்சுட்டு வந்து சொல்றேன், நான் வர வரைக்கும் நீ கார்லயே இரு” என்றவன் கண்களில் கூலிங்கிளாஸ் தொப்பி அணிந்து கொண்டு வேகமாக உள்ளே சென்றான். அரைமணிநேரம் கழித்து வந்தவன் காரில் அமர, “ரிஷி எங்கே போனீங்க?”

“செக்கரட்டரிய மீட் பண்றதுக்கு”

“எதுக்கு?”

“நான்தான் கணக்க முடிக்கணும்னு சொன்னேனே”

“வீட்டை விக்க சொன்னீங்களா?” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களை கடந்து ஆம்புலன்ஸ் பறந்தது.

“ஐயோ யாருக்கு என்ன ஆச்சுனு தெரியலயே” என்றாள் பதட்டத்துடன்

“செக்கரட்டரிக்கு தான் நாலு பல்லு உடைஞ்சு, தாடை கிழிஞ்சு தொங்குது, இடது கை உடைஞ்சிருச்சு, இனி அதுக்கு கூட வலதுகையை தான் யூஸ் பண்ணனும். அப்புறம் வலது கால்ல எலும்பு முறிஞ்சிருச்சு, ரெண்டு கண்ணுகிட்ட நல்லா வீக்கம். உயிருக்கு ஆபத்தில்ல”

“நேர்ல பாத்துட்டு நீங்க தான் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணீங்களா?”

“அடிச்சுட்டு வந்ததே நான் தான்”

“ஐயோ, அதுக்கு தான் அரைமணிநேரம் கழிச்சு வந்தீங்களா?” பதட்டத்துடன் கேட்டவளிடம் ஆமாம் என்று தலையாட்டினாள்.

“ஏன் ரிஷி? இருக்கற பிரச்சனை போதாதுனு உங்கள வேற அரெஸ்ட் பண்ணிட்டா நான் என்ன பண்ணுவேன்”

“போலீஸ்ல சொன்னா, உயிரை எடுத்துட்டு எல்லாத்துக்கும் சேர்த்து தண்டனைய அனுபவிப்பேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். சொல்ல மாட்டான்னு தான் நினைக்கிறேன், சொன்னா பாத்துக்கலாம்”

“நான் லவ் பண்ண ரிஷி இப்படி வக்கிரமா யோசிக்க மாட்டாரு. நீங்க மாறிட்டீங்க” என்றாள் அதிருப்தியோடு

“ஆமா மாறிட்டேன், உன்னை தப்பா பேசின அன்னைக்கே அவன என்கையால அடிச்சிருக்கனும், கதிர்கிட்ட அடிவாங்கிட்டு அமைதியா இருப்பான்னு பார்த்தா, நீ வீட்ல நம்ம காதல சொல்றதுக்கு முன்னாடியே இந்த செக்கரட்டரி சொன்னதால தான் உன் அப்பா என்னை தேடி வந்தாரு. நானும் குழப்பத்துல முடிவெடுத்து ஊர விட்டு போயி, என் கதிரை தொலைச்சுட்டு வந்திருக்கேன். இதுக்கெல்லாம் ஆரம்ப புள்ளி இவன் தான். என்னை தேடி வந்த உன்னையும் அசிங்கமா பேசியிருக்கான். நியாயமா பாத்தா இவனை கொன்னிருக்கணும். நீ சொன்னமாதிரி நானும் ஜெயிலுக்கு போயிட்டா உன் நிலைமை என்னாகுமோனு நினைச்சு தான் கைகாலை முறிச்சதோட நிறுத்திக்கிட்டேன்”

“சரி இத்தோட உங்க அடிதடிய நிறுத்திக்கோங்க, இனி இது தொடரக்கூடாது”

“இனிமேதான் அடிதடியே தொடரப்போகுது நிரு” என்றான் தீவிரமான குரலில்

(தொடரும்)
 
Top Bottom