• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - எபிலாக்

Vishakini

Moderator
Staff member
புனர்ஜென்மம் – எபிலாக்

மனக்கோளத்தில், மனமேடையில் அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவன் அருகில் மனையாட்டியாக அமர்ந்திருந்தாள் அனன்யா.

சற்று நேரத்திற்கு முன்புதான் அவள் கழுத்தில் இரண்டு முடிச்சுகளை இட்டான். அவனுடைய தமக்கை மூன்றாவது முடிச்சை இட்டு முடித்தாள். அவன் அருகில் மாப்பிள்ளை தோழனாக மற்றொரு அர்ஜுன் ஹரிதாஸ் அமர்ந்திருந்தான்.

எந்தக் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டானோ, அந்தக் குழந்தை அவனுக்கு மாப்பிள்ளை தோழனாக!

இரண்டு நாளுக்கு முன்புதான் அவர்களை நேரில் பார்த்தான். அவளைப் பார்த்ததும் அந்தக்குட்டி அர்ஜுன் அனன்யாவிடம் தாவிக்கொண்டான். தன் பெயர் சொல்லி அவனை அழைப்பது சங்கடமாக இருந்தது அர்ஜுனுக்கு.


“அதுதான் பேபி டால்னு பெயர் வச்சிருக்கேனே, அதை நீங்களும் சொல்லிக் கூப்பிடலாம். என் புருஷன் பேரைச் சொல்லி யாரும் கூப்பிடக் கூடாது” என்றாள்.

“அடிப்பாவி! இதுக்காகத்தான் அப்பவே மாத்தி வச்சியா? அப்ப எல்லாமே ப்ரீ பிளான்டா? இது தெரியாமல் என் குழந்தையைக் கொஞ்சத்தான் வச்சிருக்கேன்னு நினைச்சிட்டேனே?” என்று முறைத்துக் கொண்டே கேட்டு வைத்தான் நிரோஷாவின் கணவன் ஹரிதாஸ்.

“நாங்க எல்லாம் எது பண்ணினாலும் பிளானிங்கோடதான் பண்ணுவோம் மாம்ஸ். பிளானிங் இல்லாமல் எதுவுமே இல்லை. ஆனா, உங்க பையன் முகத்தைப் பாருங்க, அப்படியே டால் மாதிரி இருக்கான். அவனைப் பார்த்தவுடனே பேபி டால்னு கூப்பிடத் தோணுச்சு, கூப்பிட்டேன்” என்றாள்.

“சகலை, சரியான வாய் இவளுக்கு. எப்படித்தான் இவளை வச்சுக் காலம் தள்ளப்போறீங்களோ தெரியலை? என் பொண்டாட்டியாவது அமைதி. இவள் பேசினா காதிலிருந்து ரத்தம் வரும்” என்றான் ஹரிதாஸ்.

அவன் சிரித்துவிட்டுத் தயக்கமாக நிரோஷாவைப் பார்த்தான். அவள் முகம் மலர்ந்திருந்தது.

“எங்க அக்கா ஒன்னும் ஊமை கிடையாது. உங்களுக்காகப் பயந்து பேசாமல் இருக்காங்க. ஆனா, என் புருஷன் அப்படியெல்லாம் சொல்ல மாட்டாரு. அப்படித்தானே அர்ஜுன்?” என்று அவனைத் துணைக்கு அழைத்தாள்.

அவன் திருமணத்திற்குச் சம்மதம் சொன்ன அடுத்த நொடி, ‘சார்’ ‘மோர்’ எல்லாம் எங்கோ காணாமல் போயிருந்தது. எப்படிப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது? என்று பேசியதெல்லாம் கானல் நீராக மறைந்து போனது. மூச்சுக்கு முன்னூறு தடவை ‘அர்ஜுன் அர்ஜுன்’ என்று ஏலம் விட்டுக் கொண்டிருந்தாள்.

“என்ன முழிக்கிறீங்க? அப்படி கூப்பிடலாம் தானே? நீங்கதானே அன்னைக்கு இது சகஜமாயிடுச்சுன்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.

என்ன சொல்லிவிட முடியும் அவனால்? ஆமாம் என்று தலையாட்ட மட்டும்தான் முடிந்தது அந்த அர்ஜுனால்.

ஹரிதாஸ் அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட, “சாரிங்க, அன்னைக்கு நான் அப்படியெல்லாம் பேசி இருக்கக் கூடாது, அடிச்சிருக்கவும் கூடாது. உங்க ஹஸ்பண்டுக்குத் தெரியாமல் பார்த்துக்கோங்க” என்று தயக்கத்தோடு கூறினான்.

“அதெல்லாம் மறந்துட்டேங்க. ஆனா, உண்மையிலேயே அதுக்கப்புறம்தான் உங்கமேல மதிப்பு கூடுச்சு. யாரா இருந்தாலும் இதையெல்லாம் ஹஸ்பண்ட்கிட்ட சொல்ல முடியாதுங்க. நானும் சொல்ல மாட்டேன்” என்றாள் நிரோஷா.

“உங்களுக்கு ஏதும் பிரச்சனையில்லையே?” என்று தயக்கத்தோடு கேட்டான்.

அவர்கள் இருவரின் திருமணத்தைப் பற்றித்தான் கேட்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.

“நீங்க மட்டும்தான் கல்யாணமானா மச்சினிச்சியைச் சைட் அடிப்பீங்களா? நாங்களும் தங்கச்சி புருஷனைச் சைட் அடிப்போமில்ல?” என்று சிரித்தாள்.

அவன் அதிர்ந்து போய் எழுந்துவிட்டான்.

“சும்மா உழலாயிக்குங்க. நமக்குள்ள நடந்தது எப்பயோ நடந்தது, பாஸ்ட். நானும் என் ஹஸ்பண்டை ரொம்ப விரும்புறேன். அவரும் என்னை அதைவிட விரும்புறார். தங்களை ரொம்ப நேசிக்கிற கணவன் வேணும்னுதான் பெண்கள் எதிர்பார்ப்பாங்க. அப்படித் கிடைக்கும் போது, நாங்க அவங்களை பொக்கிஷமா பார்த்துப்போங்க. எனக்குமே அப்போ உண்மையான காதல் எதுன்னு புரியலை. என் ஹஸ்பண்ட் எனக்குப் புரிய வச்சிட்டாரு. கல்யாணமாகி ஹஸ்பண்டுக்கும் எனக்கும் புரிதலோட தொடங்கின இந்தக் காதல் தான் உண்மையானது, நிலையானது. அதெல்லாம் இல்லைன்னு எனக்கும் அப்புறமாப் புரிஞ்சுருச்சு. இவள் வந்து சொல்லும்போது எனக்கு ஷாக்தான். ஆனா, என்னமோ உங்க ரெண்டு பேருக்கும் சரியான பொருத்தம்னு தோணுச்சு” என்று பெருந்தன்மையோடு கூறினாள் நிரோஷா.

அவள் பேச்சில் விகல்பமில்லை. உண்மையாகத்தான் கூறுகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. அந்தத் திருமணத்தை ஒத்துக்கொள்ளத் தயங்கியதற்கு அவளும் ஒரு காரணம். இப்பொழுது அவளிடம் பேசிவிட்ட பிறகு மனது இலகுமாகியிருந்தது.


அவன் சம்மதம் சொன்ன அடுத்த நொடி, அவர்கள் திருமண ஏற்பாட்டை ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த இரண்டு வாரத்தில் திருமணம். மூச்சுவிட்டு நிமிர்வதற்குள், படபடவென்று எல்லாம் நடந்து கொண்டிருந்தது. புடவை எடுப்பது, நகைகள் எடுப்பது, பத்திரிக்கை என்று வேலை தலைக்கு மேலே இருந்தது.

எல்லாம் முடிந்து ஓயும்போது, அனன்யா அவனை அழைத்தாள், தமக்கையின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று.

திருமணத்திற்குப் பின் அவர்களை எதிர்கொள்வதை விட, முன் பார்ப்பது மேல் என்று தோன்றியது அவனுக்கு.

அதைத்தான் அவளுமே நினைத்தாள்போல, சரியாக இரண்டு நாளுக்கு முன்பாக அவனை அழைத்து வந்திருந்தாள்.

எதையும் எதிர்கொள்வதற்குப் பயப்படுவோம், எதிர்கொண்டுவிட்டால் சாதாரணமாகிவிடும். அவளையும் பார்ப்பதற்கு முன்னால் அவனுக்குத் தயக்கங்கள் இருந்தது, பார்த்துப் பேசிவிட்ட பிறகு மனது நிம்மதியாக உணர்ந்தது.

“இப்பதான் என் புருஷன் நிம்மதியா கல்யாணம் பண்ணிப்பாரு, இல்லைன்னா குற்ற உணர்ச்சியோட இருப்பார்” என்றாள். அவன் தன் மனைவியை முறைத்தான்.

அதற்குள் ஹரிதாஸ் வந்துவிட, பொதுப்படையான பேச்சுக்களுக்குப் பிறகு சுமுகமாக அங்கிருந்து விலகினார்கள். அதையெல்லாம் நினைத்துப் பார்த்தவனுக்கு, இப்பொழுது சிரிப்புகூட வந்தது.

“ஸ்ஸஆ...” தன் தொடையில் கிள்ளிய தன் மனைவியைப் பார்த்தான்.

“கனவுல போறதா இருந்தாக்கூட, கல்யாணமான பொண்டாட்டிகூடத்தான் போகணும், சிங்கிளா போகக்கூடாது” என்றாள்.

“ஓ! அப்படியா? சரிங்க இனிமே அப்படியே பண்றேன்” என்று கட்டை விரலை உயர்த்தி காட்டினான்.

“ஆனா, கல்யாண ப்ரொசீஜர்ஸ் எல்லாம் முடிச்சுட்டு அப்புறமாப் போகலாமா? ஐயர் ரொம்ப நேரமா எந்திரிச்சு இந்த இடத்தை வட்டமடிக்கச் சொல்லிட்டிருக்காரு” என்று அவள் சிரிக்காமல் கூற, அவனுக்குத்தான் சிரிப்பு எட்டிப்பார்த்தது.

ஐயரைத் திரும்பிப் பார்த்தான். அவர் அக்கினியை வலம் வரச் சொல்லிக் கொண்டிருந்தார்.

எழுந்து நின்றான்.

அவளுக்கு முன்னால் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் நிரோஷா. அவனாலும் இப்பொழுது அவளைப் பார்த்து இலகுவாகப் புன்னகைக்க முடிந்தது.

முன்னால் ஆராதனா போக, அவளுக்குப் பின்னால் தானியந்தாவும் குட்டி அர்ஜுனும் நடந்து போக, அவர்கள் கையைப் பிடித்தபடி இவன் நடக்க, இவன் கையைப் பிடித்தபடி பின்னால் நடந்து வந்தாள் அனன்யா.

அதற்கும் பின்னால் நின்று கொண்டிருந்தாள் நிரோஷா.

‘இன்னாருக்கு இன்னார் என்று கடவுள் போட்ட முடிச்சு கடைசியாக முடிந்துவிடும். அதற்கு நடுவில் யார் விளையாடினாலும் அது நிற்காது’ மனதில் நினைத்துக்கொண்டு நின்றிருந்தாள் நிரோஷா. தன் தங்கை வந்து காதலைச் சொல்லும்போது, அவளுக்கு அர்ஜுன் ஏற்ற துணை என்று சந்தோஷமாகச் சம்மதித்தாள்.

நிரோஷாவுடைய தங்கை அனன்யாவைப் பார்த்ததும் ஆராதனாவிற்குமே அடிவயிற்றில் பிரளயம் ஏற்பட்டது. ஆனால், அதைப் புரிந்துகொண்டு அவள் கலக்கத்தைப் போக்கியது அனன்யாதான்.

அவளுடைய இலகுவான பேச்சு தன் சகோதரனையும் சந்தோஷமாக வைத்திருப்பாள் என்று அந்த நொடி உணர வைத்திருந்தாள் அனன்யா.

புடவை எடுக்கும் இடத்தில் நிரோஷாவைப் பார்த்தாள். அவள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டாள் ஆராதனா.

அவளும் மனம் உணர்ந்து தன் கணவனை அறிமுகப்படுத்தி வைத்துச் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்க, ஆராதனாவிற்கும் நிம்மதி ஏற்பட்டது.

அதன்பிறகு திருமண ஏற்பாடுகள் தொய்வில்லாமல் நடந்து, இதோ மணமேடையையும் மணமக்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

“சரியான ஓட்டை வாய்” என்று ராகேஷ் வேண்டுமென்றே கூறினான்.

“அப்படியெல்லாம் இல்லை, ரொம்ப வெகுளியான பொண்ணு, ரொம்ப நல்ல பொண்ணு” என்றாள் ஆராதனா.

“நிரோஷாவை விடவா?” என்று கேட்டான் ராகேஷ்.

“ஆமா, அவளைவிட நல்லவளாகத்தான் இருக்காள். நான் அப்பவே சொன்னேன்ல, உங்க சொந்தத்துலதான் அவனுக்கு முடியும்னு. பொண்ணுதான் கொஞ்சம் மாறிடுச்சு. ஆனா என்ன? ரொம்ப நல்ல பொண்ணா கிடைச்சிருக்கு” என்றாள் ஆராதனா.

மனதிற்குள் அவனுக்குமே நிம்மதி இருந்தது. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அவளையும் தன் தங்கையாக உடனே ஏற்றுக்கொண்டான்.

எல்லாம் நிறைவாக முடிந்தது. சாதாரணமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

“யாருமே தங்கச்சியோட காதலுக்கு ஹெல்ப் பண்ண மாட்டாங்க. ஆனா, நீங்க பண்ண ஹெல்பை ஏட்டிலேயே எழுதி வைக்கலாம். பின்னாடி வர சந்ததியினருக்கு உறுதுணையாக இருக்கும்” என்று கூறினான் அர்ஜுன்.

“இது வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி இருக்கே?” என்று கேட்டான் ஹரிதாஸ்.

“அப்படியெல்லாம் இல்லைங்க. எங்க அக்காவோட லவ்வுக்குக் நானும் ஹெல்ப் பண்ணியிருக்கேன். அக்காவோட லவ்வுக்கு ஹெல்ப் பண்ற தம்பிங்க நிறைய இருக்காங்க. ஆனா, தங்கச்சியோட காதலுக்கு ஹெல்ப் பண்ற அக்காங்க, அண்ணனுங்க ரொம்ப ரேருங்க. அதனால சொன்னேன்” என்றான்.

“அதுக்கு உங்க குணம் தான் காரணம் அவள் சொன்ன விதமும் இன்னொரு காரணம்” என்றாள் நிரோஷா. அனன்யாவின் சகோதரனும் அவனிடம் நன்றாக பழகினான்.

எல்லாச் சம்பிரதாயங்களும் முடிந்து அவர்களுக்குத் தனிமை கிட்டும் வரை அவனுக்கு எல்லாமே வியப்பாகத்தான் இருந்தது.

அவர்கள் வீட்டில் அவளுடைய அறையில்தான் அவன் அமர்ந்து கொண்டிருந்தான்.

“ம்ச்...” உச்சி கொட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அனன்யா.

“என்னாச்சு?” என்று கேட்டான்.

“கொஞ்சமாச்சும் வெட்கப்பட்டுக்கிட்டுப் போன்னு எங்க அம்மா சொல்றாங்க. நான் எதுக்கு வெட்கப்படணும்? என் புருஷன் முன்னாடி, அதுவும் நான் காதலிக்கிறவர் முன்னாடி எதுக்காக வெட்கப்படணும்? அதைக் கேட்டா மண்டையிலேயே போட்டு அனுப்பிட்டாங்க” என்று சலித்துக் கொண்டாள்.

அவன் இரு பக்கமும் தலையாட்டிச் சிரித்தான். “நீ என்கிட்ட மட்டும்தான் இப்படியா? எல்லார்கிட்டயும் இப்படித்தானா?” என்று கேட்டு வைத்தான்.

“உங்ககிட்ட மட்டும்தாங்க இப்படிப் பர்சனல் பேச முடியும்? மத்தவங்ககிட்ட எல்லாம் பேச முடியாது” என்றாள்.

“அதென்ன ஏ ஏ ன்னு ஷாப்புக்கு பெயர் வச்சிருக்க, உங்க வீட்ல மத்த யார் பேரும் ஏ-ல ஸ்டார்ட் ஆகலையே?” அர்ஜுனன் சந்தேகத்தை கேட்டான்.

‘அர்ஜுன் அனன்யா” என்று கண் சிமிட்டியவள். “ரிஜிஸ்ட்ரேஷனை அப்படித்தான் பண்ணி இருக்கேன்” என்றாள்.

“நமக்கு திருமணமாகும்னு அவ்வளவு நம்பிக்கையா?” ஆச்சரியமாக கேட்டான்.

“என் காதல் மேல நிறைய நம்பிக்கை இருந்தது. கண்டிப்பா போராடி வெற்றி அடையனுன்ற தன்னம்பிக்கை இருந்தது” என்று மீண்டும் கண்களை சிமிட்டினாள்.

அவளை காதலாக பார்த்தான். ‘தன் காதலின் மீது எத்தனை நம்பிக்கை?? அதற்காக போராடி இருக்கிறாள். இவள் என் வாழ்க்கையில் கிடைத்த வசந்தம்’ என்று எண்ணியவனுக்கு அப்பொழுதே அவளை உரிமையாக அள்ளி அணைத்துக் கொள்ள கைகள் பரபரத்தது. அவள் மனநிலையை கேட்டு அறிந்து கொள்ள நினைத்தான்.

“டைம் வேணுமா?” என்று கேட்டான் அர்ஜுன்.

“நோ நோ, ஏன் உங்களுக்கு வேணுமா?” படபடப்பாக கேட்டாள் அனன்யா.

அவன் அவளை நமட்டு சிரிப்புடன் பார்த்தான்.

“இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க?? உங்களுக்காக நான் ரொம்ப வருஷமா காத்துகிட்டிருக்கேன். உங்களுக்கு டைம் வேணும்னா எடுத்துக்கோங்க” முகத்தை சுருக்கி கூறிவிட்டு, கோபம் போல திரும்பி அமர்ந்து கொண்டாள்.

அவன் அவளை நெருங்கி வந்து அமர்ந்தான். அவள் திரும்பி பார்க்காமல், சற்று விலகி அமர்ந்தாள். மீண்டும் அவன் நெருங்கி வர, மீண்டும் அவள் விலகிச் செல்ல. கட்டிலின் முனையே வந்து விட்டது.

“இப்ப என்னங்க உங்களுக்கு பிரச்சனை, நான் கீழ படுக்கணுமா?” சினுங்களோடு எழுந்தபடி கேட்டாள்.

“இல்ல நமக்குள்ள இனி இடைவெளி தேவையில்லை இல்லையா? கட்டில்ல உட்காராம இந்த அர்ஜுன் மடியில உட்கார்ந்தா நல்லா இருக்கும்” என்று கூறியபடி அவளை இழுத்து தன் மடியில் நிறுத்திக் கொண்டான். அவள் முகத்தை புன்னகை மீண்டது. அவன் குறும்பாக பார்க்க, அவளுக்கு வெட்கம் ஏற்பட்டது. அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக்கி, தன் வெட்கத்தை மறைக்க, முகத்தை அவன் கழுத்தில் புதைத்துக் கொண்டாள்.

அதற்குமேல் அவர்களுக்குள் பேச்சு நீளவில்லை. காமதேவன் அவர்கள் கட்டிலறையை ஆட்கொண்டான். இருவரும் புதிதாகப் பாடங்களைப் படிக்க ஆரம்பித்தார்கள். தேடல்களைத் தொடர்ந்தார்கள். முடிவில் இருவரும் வெற்றியும் அடைந்தார்கள்.

சுபம்.

…..

கிட்டத்தட்ட ஃபேட் என்பதற்கு இணங்க, தந்தைக்கு நடந்தது போலவே மகனுக்குமே நடந்தது. காதல் தோல்வி மட்டுமல்லாமல், மனைவியாக கிடைத்த துணைவியும் அதேபோல் அமைந்தது, விதியின் சதி தானோ?? ஆனால் அது ஒரு சுகமான சதியாகி போனது.

ஒரு பெண்ணால் ஏற்பட்ட பாதிப்பை இன்னொரு பெண் அவர்கள் வாழ்க்கையில் வசந்தமாக வந்து மாற்றி அமைத்திருந்தார்கள்.

புனர்ஜென்ம பந்தமாக அவர்கள் வாழ்க்கையில் இணைந்து இருந்தார்கள்.

புனர்ஜென்ம பந்துமடி நீ எனக்கு… இனிதே முடிவடைந்தது.



 

ஷமீம்

Active member
Nice story.. beautiful ending..heroes kku velai illama heroines mattumey menakettu kalyanam senjukkira different aana story..😆😆😆😆😆.. வெற்றி பெற வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
 
Top Bottom