• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 24

Vishakini

Moderator
Staff member
புனர்ஜென்மம் 24

மறுநாள் காலையிலேயே அவனை மறுவீடு அழைத்துச் செல்வதற்காக வந்துவிட்டார்கள்.

சம்பிரதாயத்திற்காக ஒரு நாள் இருக்கிறேன் என்று தன் மாமனாரிடம் அவன் கோரிக்கை வைத்திருக்க, அவரும் சரி என்று சம்மதித்திருந்தார்.

அவர் மனைவி அதற்காக அவரை வறுத்தெடுத்தது வேறு விஷயம்.

மகள் உடைகளை அடுக்கிக்கொண்டிருக்க, வந்த தன் சொந்தங்களிடம் ராஜ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். வந்தவர்களை உபசரித்துக்கொண்டிருந்தார் கல்பனா. சுந்தரமும் பேசிக்கொண்டுதான் இருந்தார். ஆனால், மகளைப் பார்த்துப் பேச வேண்டும் என்று தோன்றியது.

“மாப்பிள்ளை, கொஞ்சம் பாத்துக்கோங்க. நான் ஸ்ரீக்கு உதவி பண்ணிட்டு வரேன்” என்றவர், அவன் தலையசைப்புக்குக் கூடக் காத்திருக்காமல், எழுந்து நடக்க ஆரம்பித்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவனுக்கு அவருடைய செயல் யோசனையைக் கிளப்பிக்கொண்டிருந்தது.

“அம்மா, இதோ வந்துடுறேன்” என்றவன், மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்துவிட்டான். அவளுடைய அறையை நோக்கி மெல்ல பாதங்களை எடுத்து வைத்தான். கதவு லேசாகத் திறந்துதான் இருந்தது.

“என்னமா, உன்னுடைய காதலை மாப்பிள்ளை கிட்ட சொல்லிட்டியா??” என்ற சுந்தரத்தின் குரல் கேட்டது.

ஒட்டுக் கேட்டவன் எதையும் ஒழுங்காகக் கேட்டதில்லை என்று பழமொழி இருக்கிறது.
‘காதலா?? அதைச் சொல்றதுக்குத்தான் என்கிட்ட டைம் கேட்டாளா?’ அவனுடைய பற்கள் அரைபட்டன.

‘ஏன், உனக்கு ஒரு காதல் இல்லையா?? அதுவும் அவளுக்குத் தெரிஞ்சு தானே இருக்கு. அதை அவள் அக்செப்ட் பண்ணிக்கும்போது, இதையும் நீ அக்செப்ட் பண்ணிட்டுத்தான் ஆகணும். அவள் யாரோ கிடையாது, ஒதுக்கி வைக்கிறதுக்கு. உன்னோட மனைவி. உன்னைப்போலவே அவளையும் யாராவது ஏமாற்றியிருக்கலாம். அவளுக்குத் துணையா நில்லு’ என்று அவன் மூளை அறிவுரை கூறியது.

சற்று நிதானப்பட்டான். அதில், அவள் என்ன பதில் கூறினாள் என்று தெரியவில்லை.

“என்னமா சொல்ற? எப்ப சொல்லப்போற? இத்தனை வருஷத்துக் காதல். அதைச் சொல்லாம இன்னும் எதுக்காக மறைச்சு வைக்கணும்?? மாப்பிள்ளைக்கு எதையும் மறைக்கிறது பிடிக்காது, அது உனக்கே தெரியும். நான் சொல்லித் தெரியணும்னு அவசியம் இல்லை” என்றார் சுந்தரம்.

‘தன்னை இவர் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறாரே?’ என்று உதடு சுளித்தான் ராஜ்.

“எப்படிப்பா சொல்றது?? அதுவும் முதல் நாளிலேயே??” ஸ்ரீயின் குரல்.

“என்னமா, காலேஜ்ல இருந்து அவரைக் காதலிக்கிற. அப்பத்தான் அவரு வேற பொண்ணைக் காதலிச்சாரு, அதனால சொல்லல. அட்லீஸ்ட் அவர் காதல் உடைஞ்சு போனதுக்கு அப்புறமாவது சொல்லியிருக்கலாம். அப்பயும் சொல்லல?? அதுக்கு ஏதேதோ விளக்கங்கள் சொல்ற?? அவரைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்ட? அவர் என்ன பண்ணிட்டிருக்காருனு நீதான் சொன்ன. இல்லனா, இவ்வளவு பெரிய ஊர்ல வெறும் பேரை வச்சுக்கிட்டு என்னால கண்டுபிடிச்சிருக்க முடியாது. நானும் எப்படி எப்படியோ கஷ்டப்பட்டுக் கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டேன். உங்க அம்மாவை வழிக்குக் கொண்டுவர்றதுக்கு நான் பட்டப்பாடு எனக்குத்தான் தெரியும். என் பொண்ணோட காதலைச் சேர்த்து வைக்கிறதுக்காக நான் இத்தனை பாடுபட்டிருக்கேன். நீ என்னன்னா, உன் காதலை அவர்கிட்ட வெளிப்படுத்தாமல் இருக்க?” சலிப்பாக வந்தது சுந்தரத்தின் குரல்.

“அவரைப் பார்த்தாலே பதட்டமா இருக்குப்பா. ஆனாலும் என்னை கவனிச்சுட்டு அவர் கேட்டாருதான். என்னாலையும் ஒரே வரியில் சொல்லிட முடியும், நான் உங்களை அப்போதுலிருந்து காதலிக்கிறேன்னு. ஆனா, அவர்கிட்ட என் மனசுல இருக்குற எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்லணும்ப்பா. யாரோவா சொல்லக்கூடாது, அவருடைய காதலியா, மனைவியா, உரிமையா சொல்லணும். நான் யாரோவா சொன்னா அதை அவர் அக்செப்ட் பண்ணிக்க மாட்டார். நான் என் காதலைச் சொல்லும்போது அவர் பொறுமையா நான் சொல்ல வர்றது புரிஞ்சுக்கணும்ப்பா. அவர் கண்ணுலையும் எனக்கான அன்பு கொஞ்சமே கொஞ்சம் பார்க்கணும்ப்பா” அவள் குரலில் பிசிறு தெரிந்தது.

கலங்கிக்கொண்டே பேசுகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. என்ன மாதிரி உணர்ந்தான் என்று அவன் மனநிலையை அவனாலேயே வரையறுக்க முடியவில்லை. அவளுடைய காதல் யாரோ ஒருவரின் மீது என்று அவன் நினைத்திருக்க...

அவன் மீது அவளுக்கான காதலா?? அதுவும் கல்லூரியில் இருந்தா?? முதல் நாள் அவன் பேச வந்து, பேசாமல் நிறுத்திக்கொண்ட வார்த்தைகளை இப்பொழுது அவன் உதடுகள் முழுமையாக உச்சரித்தன.

‘முன்னாடியே நான் உன்னைப் பார்த்திருக்கலாம். நீதான் என்னுடைய வருங்கால மனைவின்னு தெரிஞ்சிருந்தால், உன்னையே காதலிச்சிருக்கலாம். ஏமாற்றம் அடையாமல் இருந்திருக்கலாம். வாழ்க்கையில் முதல் முறையாகத் தோற்காமல் இருந்திருக்கலாம்’ இப்படிப் பல ‘இருந்திருக்கலாம்’ அவன் மனதில் முதல் நாள் தோன்றியது, இப்போது வார்த்தையாக வடிவம் பெற்று வெளியில் வந்தது.

தன் மனைவியுடைய, தன் மீதான காதலை அவள் சொல்லாமல், அவள் தகப்பன் வாய்மொழியாகக் கேட்கும் பாக்கியம் உலகத்திலேயே தன்னைத் தவிர வேறு யாருக்கும் கிடைத்திருக்காது என்று நினைத்தான். அதில் அவனால் புன்னகைக்கக்கூட முடிந்தது.

‘இதற்கு மேல் வேண்டாம். இனி எதுவென்றாலும் அவள் வாய்மொழியாகக் கேட்க வேண்டும். தாங்கள் இருவரும் இழந்ததை இனி ஈடுகட்ட வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டவன், அமைதியாகக் கீழே சென்றுவிட்டான். ஆனால், மனம் முழுவதும் அவ்வளவு சந்தோஷம் பரவியிருந்தது.

சோபாவில் அமர்ந்தவன் தன் அலைபேசியை எடுத்தான்; அழைப்பு விடுத்தான்.

“ஹலோ” என்று மறுமுனையில் கேட்டதும்,

“போதும் லீலா, எடுத்த வரைக்கும் போதும். இன்னொரு நாள் வந்து மீதி துணியை எடுத்துக்கலாம்” என்றான்.

அவனுக்கு அப்போதே அவளுடனான தனிமை வேண்டும். இங்கேயும் அவனால் அதை எடுத்துக்கொள்ள முடியும், ஆனால் உறவினர்களை அதற்கு மேல் காக்க வைக்க முடியாது. அதனால் பொறுமையைக் கடைப்பிடித்தான்.

அவளும் சரி என்று சொன்னாள். அடுத்த பத்து நிமிடங்களில் அவள் தந்தையுடன் கீழேயும் வந்துவிட்டாள்.
அவன் அவளைப் பார்த்ததும் எழுந்து கொண்டான். “மேல ஏதாவது பெட்டி இருக்கா? நான் எடுத்துட்டு வரவா?” என்று கேட்டான்.

“இல்லை மாப்பிள்ளை, இந்த ரெண்டு பெட்டிதான். இதுக்கு மேல எடுத்து வைக்கல. அப்புறம் வந்து எடுத்துக்கட்டும்” என்றார் சுந்தரம்.

அவரைப் பார்த்துப் புன்னகைத்தவன் தன் மனைவியைப் பார்த்தான். அவள் மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.

அதன் பிறகு, மதிய உணவு பரிமாறப்பட, திருப்தியாக உண்டு முடித்தவர்கள், அனைவரிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற்றுச் சென்றார்கள். கல்பனாதான் அழுதார். தந்தை மகளுக்கு இடையே புரிதலான பார்வை பரிமாற்றங்கள் மட்டுமே; அதையும் அவன் கவனித்தான்.

அவளை மறுவீட்டிற்கு அழைத்துச் செல்ல, பெற்றவர்களும் உடன் வந்தார்கள்.

ராஜ்குமாரின் வீட்டில் ஸ்ரீ லீலாவால் விளக்கேற்றப்பட்டது. அஷ்டலட்சுமி இந்த நாளுக்காக எத்தனை வருடமாகக் காத்துக்கொண்டிருக்கிறார்! அவர் கண்களும் லேசாகக் கலங்க, தன் புடவை முந்தானையால் துடைத்துக்கொண்டவருக்கு ஆயிரம் வேண்டுதல்கள் இருந்தன. அதையெல்லாம் மனதிற்குள் வைத்துக்கொண்டே இருந்தார். அங்கும் சிறிய உபசாரத்திற்குப் பிறகு சுந்தரமும் கல்பனாவும் தன் வீட்டிற்குக் கிளம்பினார்கள்.

அவர்கள் அப்படிக் கிளம்பியதும், மற்றவர்கள் ஓய்வெடுத்துக்கொள்ளத் தத்தமது அறைகளுக்குப் புறப்பட்டார்கள்.
“ராஜ், மேல ரூமுக்குப் போய் நீங்க ரெண்டு பேரும் ஓய்வெடுத்துக்கோங்க” என்றார் அஷ்டலட்சுமி.

அவன் எதிர்பார்த்த தனிமைதான், ஆனால் அவன் வீட்டிற்கு வந்த பிறகு அவனுக்கு வேறு ஒரு எண்ணம் தோன்றியது. அதைச் செயலாற்ற முடிவெடுத்துவிட்டான்.

“நானும் லீலாவும் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடுறோம்” என்றான் ராஜ்.

“இப்பவேவா? அப்படின்னா கோயிலுக்குப் போயிட்டு அதுக்கப்புறம் வெளியே போப்பா” என்றார்.

அவன் ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதை யாராலும் மாற்ற முடியாது. திருமணத்திற்காக அவனை மாற்றவே அவர் பெரும்பாடு பட்டுவிட்டார். அதனால் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற சிறு கோரிக்கையை மட்டும் வைத்துவிட்டார் அஷ்டலட்சுமி.

ஏனோ நல்ல மூடில் இருந்தான் போல, “சரிம்மா” என்று ஒற்றை வார்த்தையில், வாதங்கள் இல்லாமல் முடித்துக்கொண்டான்.

“டிரஸ் சேஞ்ச் பண்ணவா??” என்று ஸ்ரீ கேட்க, அவன் வேண்டாம் என்று, அவள் கண்களை ஆழம் பார்த்துக்கொண்டே அவள் கைகளைப் பற்றினான்.

அவனுடைய வாகனம் வேகமாகச் சீறிப்பாய்ந்தது. அத்தனை நேரமிருந்த பொறுமையெல்லாம் இப்போது காற்றில் பறந்துபோனது, அவன் வாகனத்தின் வேகத்தைப்போல.

‘எதற்கு இத்தனை வேகம்?’ என்று கேட்க நினைத்தாலும் அவள் கேட்கவில்லை.

கல்லூரியில் இத்தனை வேகமாகத்தான் அவன் இருசக்கர வாகனத்தை ஓட்டுவான் என்று அவளுக்குத் தெரியும். அத்தனை வேகத்தில் அனைவரின் துப்பட்டாவும் பறக்கும்.

ஒரு முறை அப்படிப் பறந்த அவளுடைய துப்பட்டா, அவன் வண்டியிலேயே சிக்கிக்கொண்டது. ஆனால், நல்ல வேளையாக டயரில் சிக்கவில்லை; கிராப் ஹேண்டிலில் சிக்கியது.

அவன் வாகனத்தை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும்போதுதான் அதைக் கவனித்தான். துப்பட்டாவை எடுத்தபடி திரும்பிப் பார்த்தான். அவள் தன் இடது கையை நெஞ்சில் வைத்தபடி, அவனை நோக்கி வலது கையைக் காட்டிக்கொண்டு ஓடிவருவது தெரிந்தது.

மூச்சுவாங்க அவன் முன்னால் நின்றவள், “சாரி, என்னுடைய துப்பட்டாதான்” என்றாள்.

அவளை ஆழமாகப் பார்த்துக்கொண்டே அவள் கைகளில் திணித்தான். “ஷாலை பின் பண்ணத் தெரியாதா?” என்று கேட்டான்.

“பண்ணேன்” என்றவள் தன் வலப்பக்கச் சுடிதாரின் மேல்பாகத்தைப் பிடித்துக்கொண்டாள். அப்போதுதான் அது லேசாகக் கிழிந்திருப்பது தெரிந்தது.

‘நல்லவேளை, பெருசா கிழியல’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

அவள் அதைச் சொல்லவில்லை என்றால் அவனுக்குத் தெரிந்திருக்காது, அந்த அளவுக்குத்தான் கிழிந்திருந்தது. திட்ட வந்தவன் அதற்கு மேல் திட்டாமல் அமைதியாகச் சென்றுவிட்டான்.

அவன் சொடுக்கினான். நினைவலைகளில் இருந்து திரும்பியவள், தன் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். “இறங்கு” என்று பார்வையை வெளிப்பக்கமாகக் காட்டினான்.

அவளும் வேகமாகத் தலையாட்டிவிட்டு, வாகனத்தைத் திறந்துகொண்டு வெளியில் இறங்கினாள்.

இறங்கிய பிறகுதான், பழக்கமான இடத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தாள். அதற்குள் வாகனத்தைச் சுற்றிக்கொண்டு வந்து அவள் கரத்தைப் பிடித்தவன், அவளை இழுத்துச் சென்றான்.

இதேபோல அவள் கரங்களைப் பற்றி இழுத்துச் சென்ற ஞாபகம் அவன் நினைவலைகளில் வந்தது.

“சீனியர், சீனியர்” என்று அவள் அரற்றிக்கொண்டிருக்க, அதைச் சற்றும் பொருட்படுத்தாது அவன் இழுத்துச்சென்றான்.

“யாருடா எங்க டிபார்ட்மெண்ட் பொண்ணு மேல கைய வச்சது?” என்று கேட்டபடி ஒரு குழுவின் முன்னால் நின்றான்.

அவனைப் பார்த்ததும் அவர்கள் அரண்டார்கள். ‘தாங்கள் இல்லை, தெரியாமல் நடந்துவிட்டது, இனிமேல் நடக்காது’ என்று உடனே மன்னிப்பும் யாசித்தார்கள்.

அவள் கையை விட்டதும், “நீ கிளம்பு, உனக்கு இனிமேல் எந்தப் பிரச்சனையும் வராது” என்றான்.

அவள் தலையாட்டியபடி தலைதெறிக்க ஓடினாள்.

அவளுக்காகப் பேசிய அவளுடைய தோழி அவன் முன்னால் வந்து நின்றாள்.
“தேங்க்யூ சீனியர். அவள் ரொம்பப் பயந்த சுபாவம், அதனாலேயே எல்லாரும் ஓட்டுறாங்க. நல்லவேளையாக் காலேஜ் டைம்ல நீங்க எனக்குப் பழக்கமானதுனால உங்ககிட்ட சொல்லலாம்னு தோணுச்சு. தேங்க்யூ சோ மச்” என்றாள். அப்பொழுது அவள் பெயர் கூட அவனுக்குத் தெரியாது.

ஆமாம், அவள் ஏன் திருமணத்திற்கு வரவில்லை? அப்போதுதான் ஞாபகம் வந்தது ராஜ் குமாருக்கு.






 
Top Bottom