• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பூவிழி வாசம் - 20

Vishakini

Moderator
Staff member
பாகம் 20

மறுநாள், காலையிலேயே தனது பை சகிதமாய் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாய் வந்தாள் இசைநிலா, காலைத் தேநீருக்காய் எல்லோரும் ஒன்று கூட அனைவரிடமும் விடைபெற்றவள், பூவிழியிடம் வந்ததும் ஒரே தாவலாய் இறுகக்கட்டிக் கொண்டாள்,
யாரிடமும் இப்படிப் பழகாத, பழகவிரும்பாத இசைநிலாவின் அந்த செயல் பத்மினியம்மாவிற்கே வியப்பைக் கொடுத்தது. அத்தையிடம் கூட சைகையால் விடைபெற்றவளின் அந்த செய்கை அங்கிருந்த எல்லோருக்குமே ஆச்சரியத்தைக் கொடுத்தது என்றால் பூவிழிக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அங்கிருந்த அனைவரிடமும் சொல்லிக் கொண்டவள், மறந்தும் கூட இளஞ்செழியனின் பக்கம் திரும்பவில்லை. அவளது அந்தச் செய்கையில் முகத்தில் அறை வாங்கியது போல வலி கண்டான் அவன்,
பூவிழியும் அவளோடு வேலைக்குச் செல்வதற்காய் புறப்பட, இருவரையும் விட்டுவிட்டு வருவதாக பொற்செழியனும் புறப்பட்டான்.
அறைக்குள் சென்ற இளஞ்செழியனின் மனமோ உலைக்களமாக கொதித்துக் கொண்டிருந்தது. கதவைச் சாத்திவிட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டவன், முதல் முதலாக தன் உள்ளத்தில் காதல் உணர்வைத் தந்தவள், தன்னை நிமிர்ந்தும் பார்க்க விரும்பவில்லை என்ற எண்ணத்தில் ஒருகணம் கூனிக்குறுகினான்,
'அப்படி என்ன செய்துவிட்டேன், ஏன் அவளுக்கு என் மீது இவ்வளவு வெறுப்பு' கேள்விகள் மனதைக் குடைய சட்டென்று நிமிர்ந்து அமர்ந்துகொண்டான்,
~பத்மினியம்மா......ஆமாம் ....பத்மினியம்மாவை வைத்துத்தான் அவளை என்வசம் மாற்றவேண்டும், அதற்கு முதலில் இசைநிலாவை என் பக்கத்தில் இருக்கவைக்க வேண்டும்.....|

அவசரமாய் நண்பர்களுக்கு அழைப்பை எடுத்து, வேலைக்கான அழைப்பை அவளுக்கு உடனடியாகவே கொடுக்குமாறும் இரண்டே நாட்களில் அவள் வேலையில் சேரவேண்டும் என்றும் சொன்னான், பிறகென்ன, இவன் எள் என்றால் நண்பர்கள் எண்ணெயாய் நின்றனர்,
'என்னடா மச்சான்.....' என்ற கேலியோடு தங்கள் பணியைச் செய்துவிட்டனர்,
இசைநிலாவின் அப்பாவிற்கு அழைப்பெடுத்து உடனடியாக இசைநிலா வேலையில் இணையவேண்டும் என்றதும், மகளின் தங்குமிடம், சாப்பாடு பற்றி யோசித்த தகப்பனார், தங்கையான பத்மினியிடம் பேச, எப்போதும் எதற்கும் பூவிழியையே கேட்கும் பத்மினியம்மாவும் இது விடயமாய் பூவிழியிடம் கேட்டார்.
இசைநிலாவிற்கேற்றவிதமாக அறை ஒன்றைத் தேடுவதற்காய் நண்பியிடம் கதைத்துவிட்டு பூவிழியும் அதிகாலையிலேயே வெளியே செல்ல ஆயத்தமாக, அவளை அதிகாலையில் கண்ட பரமானந்தத்தார், ஏனென்று விசாரித்தார்.
விடயத்தை அறிந்து, சற்று பொறுக்குமாறு பூவிழியிடம் கூறிவிட்டு, பொற்செழியனை அழைத்து வருமாறு மகள் வண்ணமதியை அனுப்பினார்.
அவள் அண்ணன் அண்ணியின் அறைக்குச் சென்று, தமையனை அங்கே காணாததால், மாடிக்குச் சென்றால் அங்கே வெறுந்தரையில் பாயை விரித்து படுத்திருந்தான் பொற்செழியன்.
"என்னண்ணா......"அவள் கேட்கவும் தங்கையைக் கண்டதும் அவசரமாய் எழுந்து கொண்டவன், "சும்மா...இப்பிடி தரையில படுக்கவேணும் போல ஆசையா இருந்ததா....அதான்.....விடிஞ்சதுக்குப் பிறகுதான் வந்து படுத்தன்" என்றான்.
அண்ணனின் வார்த்தைகளில் இருந்த நம்பிக்கையில் தலையை ஆட்டிவிட்டு, ~அப்பா வரச்சொன்னார்...| என்று கூறிவிட்டு திரும்பி நடந்தாள்.
மூன்று ஆண்டுகளாக தான் சுரபிக்குச் செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக இப்படித்தான் தன்னை வருத்திக்கொள்கிறான் என்பது தெரிந்தால் அந்த வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள்.
திருமணம் என்ற பெயரில் அவனுக்கு ஒரு கேலிக்கூத்து நடந்தது, அவனோ, அவனுக்காக அம்மாவால் தெரிவுசெய்யப்பட்ட பெண்ணோ, ஒருவரையொருவர் நேசிக்கவும் இல்லை, வாழ நினைக்கவும் இல்லை.
இரண்டு வீட்டிலும் பெற்றவர்களின் மிரட்டல்தான் அதற்குச் சம்மதிக்க வைத்திருந்தது.
அம்மா....அவனிடம் சொன்ன வார்த்தைகள்,
~உன்னை நான் எவ்வளவு கஷ்ரப்பட்டு படிக்கவைச்சனான் என்று உனக்கு தெரியும்தானே, உண்மையிலயே என்னிலை உனக்கு துளியாவது அன்போ, அல்லது உனக்கு கீழ இருக்கிற இவர்களிலை அக்கறையோ இருந்தால் நான் சொல்லுறபடி செய், இல்லாட்டி பேசாமல் உன்ரைபாட்டிலை உனக்குச் சரியெண்டுபடுற முடிவை எடு, ஆனால் இனிமேல் எப்பவுமே உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...இதுகள் ரெண்டையும் நான் படிப்பிக்கவேமாட்டன், எங்கையாவது விட்டிடுவன், இருக்கட்டும், இப்பிடி ஒரு அண்ணன் கிடைச்சதாலை வந்த நிலைமை இதுதான் எண்டு வாழட்டும்..|
அவனுக்குத்தெரியும், அம்மாவிடம் எப்போதும் ஒரு திமிர்த்தனமும் முரட்டுத்தனமும் இருக்கும். தான் நினைத்தது நடக்கவேண்டும் என்பதற்காக தன்னையே வதைத்துக்கொள்ளுவார். அவனை ஏதாவது செய்யவைப்பதற்காக சின்னவர்களைத் தண்டிப்பது அம்மாவின் வழமையான செயற்பாடுதான், அதைவிட, அம்மாவிற்கு ஒருவித மனநோயும் இருந்தது, கொஞ்சம் யோசித்தாலும் அம்மா, மனுஷியாகவே இருக்கமாட்டா, கெட்ட வார்த்தைகளால் எல்லோரையும் திட்டுவா, அயல் வீடுகளுடன் சண்டைக்கு நிற்பா, வீட்டிலும் அமைதியோ நிம்மதியோ இருக்காது, அம்மாவைக் குணப்படுத்த அப்பா எடுத்த முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்தன. அப்பாவிற்கு அம்மாவிடம் பாசம் என்பதைவிட பயம்தான் அதிகமாக இருந்தது.
அம்மாவின் ஒன்றுவிட்ட அண்ணன் மகளுக்கு கிடைத்த அமெரிக்க லொத்தர் விசாவில் தான் அவனும் அவளோடு கூடவே பயணப்பட்டிருந்தான் அமெரிக்காவிற்கு. அம்மாவின் விருப்பம் என்று சொல்;வதைவிட அம்மாவின் கட்டளையை ஏற்று, அவன் மட்டும் அப்படிச் சம்மதித்திருக்காவிட்டால் நிச்சயமாக அம்மா தனக்குத்தானே ஏதாவது செய்திருப்பா..அதற்குப்பிறகு அவனால் சுரபியோடு சந்தோசமாக வாழ்ந்திருக்கமுடியுமா?
அதோடு, தம்பி தங்கையை அம்மா ஆதரவற்றோர் விடுதிக்கு அனுப்பப்போவதாகச் சொன்னதைத்தான் அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை...அவனுடைய சுயநலத்திற்காக அவர்கள் இருவரும் விடுதியில் தங்குவதா... பின்னர் அவர்களைக்கூட்டிவந்து தன்னுடன் வைத்திருக்கலாம் என்றாலும் அப்பா..அம்மாவின் எதிர்காலம்..
அவன் தன் காதலை விட்டுவிட்டால் எத்தனை பேருக்கு சந்தோசம்..நிம்மதி..
அதனால்தானே தன் காதலைத் தியாகம் செய்தான்..
ஆனால் அன்றிலிருந்து யாருக்கும் தெரியாமல், வெறும் நிலத்தில் படுத்து தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொண்டிருக்கிறான்;;.
அமெரிக்க மண்ணில் கால் பதித்ததும் அவள் தன் தோழியரோடு சென்றுவிட, அவன் தனியே சென்றுவிட்டான்.
இதை ஊரில் யாருக்கும் சொல்லக்கூடாது என்பது இருவரும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம். உடனேயே விவாகரத்து பெற்றுவிட்டு, வேறுவேறு இடத்தில் இருந்து மேற்படிப்பு படிப்பதாகச் சொல்லியிருந்தனர்.
உண்மையில் அங்கு சென்று ஒரு வருடத்திலேயே அவனுடைய மாமா மகளான கனிகா, தனக்குப் பிடித்த ஒருவனைத் திருமணம் செய்துகொண்டுவிட்டாள்.
அம்மாவைப்போலவே அத்தனை பிடிவாதக்குணங்களும் கொண்டிருந்த கனிகாவை அவனுக்கு சிறு வயது முதலே பிடிக்காது...தவிர, அம்மாவின் மனக்குழப்பம் அவளுக்கும் இருக்கிறதோ என்ற எண்ணம் அவனுக்கு உண்டு, ஏனென்றால் அவளது நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கும், அவன் எப்போதோ நினைத்ததற்கு இப்போது பதில் கிடைத்திருந்தது. கனிகா மனநோய்க்கான மருந்து பாவிக்கிறாள், இருவருக்கும் தெரிந்த நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டிருந்தான்.
நினைவுகளில் மூழ்கியபடியே, சட்டென்று எழுந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டவன், தோளில் துவாயைப் போட்டபடியே கீழே வந்தான், அந்த அதிகாலைப் பொழுதில் அங்கே பூவிழியை எதிர்பார்க்காதவன், துவாயைச் சரிசெய்து தோள்களை மறைத்தபடியே தந்தையின் அருகில் சென்று நின்றுகொண்டான்.
பூவிழிக்கும் அவனைக் கண்டதும் சங்கடம்தான், மறுபக்கம் தலையைத் திருப்பியபடி நின்றுகொண்டாள்.
~அப்பா.....என்னப்பா..." படபடப்புடன் கேட்ட மகனிடம்,
~அப்பிடி ஒண்டும் பெரிய விசயம் இல்லைத்தம்பி, இஞ்ச வந்து நிண்டு வேலைக்கு நேர்முகத்தேர்வுக்குப் போன பிள்ளை....அதுதான், ...."
"இசைநிலாவா?"
"ஓமோம் தம்பி.....அந்தப் பிள்ளை தங்கிறதுக்கு இடம் பாக்க எண்டுதான் எங்கட பூவிழியம்மா வெளிக்கிட்டு நிக்கிறா, எங்கட வீடு கடல் போல கிடக்குது, வண்ணமதியோட அந்த பிள்ளையும் நிக்கட்டன், எண்டு சொன்னன், பொம்பிளைப்பிள்ளையள் ரெண்டுபேருக்கும் சரிதானாம்....|
அவசரமாய் இடைமறித்த பூவிழி, "அப்பா......எனக்கு அப்பிடி எந்த எண்ணமும் இல்லை.....பிறகு, இசைநிலா இருக்கிறதைப்பற்றி நான் எப்பிடி?"
"அடிதான் வாங்கப் போறாய்......." கைகளால் காட்டியபடியே,
"பூவிழிதான் உன்னட்ட கேக்க வேணுமெண்டு .... அதுதான் உன்னட்டயும் இளாவிட்டயும் கேட்டு சொல்லுவம் எண்டு....." அவள் சொன்னதை காதில் வாங்காது மகனிடம் பேசினார் பரமானந்தத்தார்.
பெரியவரின் பாசத்தில் அவளுக்கு மனம் உருகியது.
தலைநிமிர்ந்து பூவிழியைப் பார்த்தவன், "இதென்ன....இன்னும் ஒரு கிழமையோ....பத்து நாளோதான் நான் நிக்கப்போறன், அதுக்குப்பிறகு எப்ப வாறனோ தெரியேல்ல, இந்த முடிவுகளெல்லாம் நீங்களும் உங்கட பூவிழியம்மாவுமே பாருங்கோ அப்பா" என்றான்.
இதயத்தில் மெல்லிய சந்தோசம் ஊடுருவிப் பாய்ந்தது. எப்படியென்றாலும் அவனுடைய குடும்பத்தில் அவள் முக்கியமான ஒருத்தியாக எண்ணப்படுகிறாளே...அதுவே அவனுக்கு மகிழ்ச்சிதானே,
அப்போது அங்கே வந்து சேர்ந்த இளஞ்செழியனிடமும், தந்தை கேட்க, 'கரும்பு தின்ன கூலியா?' மனதிற்குள் உவகையுடன் நினைத்தபடி உதட்டில் அரும்பிய சிரிப்பை உள்ளே இழுத்து "எனக்கொண்டும் பிரச்சினை இல்லை அப்பா" என்றான் பெரிய மனிதன் போல.
இப்படி எல்லோரும் பேசிமுடிக்க, தங்கையோடு தங்குவதுதான் மகளுக்கு பாதுகாப்பு என முடிவெடுத்த இசைநிலாவின் தகப்பனாரும் மகளிடம் எடுத்துச் சொல்லி, அனுப்பிவைத்தார். இளஞ்செழியனைச் சந்திக்கவேண்டுமே என்ற எண்ணம் தலைதூக்கினாலும் வேறு வழியின்றி மறுநாளே பரமானந்தத்தார் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் இசைநிலா,
வரும்போது, கத்தரிக்காய், , வற்றாளைக்கிழங்கு, பூசனி என காய்கறிகளும் மாம்பழம், பலாப்பழம் என பழவகைகளும் அதோடு நில்லாது, பனை ஓலையில் பின்னிய அழகான மரக்கறிக்கூடை, பழக்கூடை என ஒரு பெரிய பையோடுதான் வந்திறங்கினாள்.
மாலையில், வேலையில் இருந்து திரும்பிய இளஞ்செழியனின் பார்வையில், தங்கையோடு மாமரத்தின் கீழ் அமர்ந்திருந்து தலையை ஆட்டி ஆட்டிக் கதைத்துக்கொண்டிருந்த இசைநிலா பட்டுவிட, பட்டென்று ஒரு நளினப் புன்னகை மலர்ந்தது அவன் உதடுகளில்.
~மங்கம்மா...|
தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்,
அவனுடைய இதயஒலி அவளுக்கு கேட்டதோ என்னவோ, பிறந்த குழந்தை கண்களைச் சுருக்கி முகத்தால் சிணுங்குவது போல, இருந்தது திடீரென்று அவளுடைய முகபாவனை,
இவனுடைய கற்பனையில் சட்டென்று ஒரு பெண்குழந்தை தோன்றி மறைந்தது.
உடலில் ஒரு சிலிர்ப்பு தோன்றி மறைய, அழகான ஒரு வாழ்வின் கோலம் கண் முன்னால் வந்து போனது அவனுக்கு.
~வந்துவிட்டாயா, என் மங்கம்மா.. இனிமேல் எனக்கு பக்கத்திலைதானே, இருப்பாய், எங்க ஓடுவாய் என்று நானும் பாக்கிறன், எப்ப பாத்தாலும் என்னைப் பாத்து ஒரு முகம் திருப்பல்... இருக்கட்டும்..இருக்கட்டும்..எத்தினை நாளைக்கு இது நடக்குது எண்டு பாக்கிறன்...| தன் மனதோடு சொல்லிக்கொண்டே தோட்டத்திற்குப் போக நினைத்தவன்,
~அடேய் ..மடையா..வந்த வரத்திலை வழியப்போகிறாயா?| என்ற மனச்சாட்சியின் குரல் கேட்டு, மாடிப்படிகளில் ஏறினான்.

 
Top Bottom