• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகுடம் சூட்டும் காதல் - 3

அத்தியாயம் - 3




விஸ்வநாதனின் சொகுசு பங்களாவின் போர்டிகோவில் வந்து நின்ற கார்களின் சத்தம் அதிகரித்தது. பிரம்மாண்டமான அரசியல் திருமணத்தின் சடங்குகள் அனைத்தும் முடிந்து, மணமக்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைய போகும் தருணம் அது.

திருமணத்திற்கு முன்பு விருசாலியே கூறி விட்டாள் திருமணம் முடிந்ததும் கர்ணன் எங்கிருப்பானோ அங்கு தான் நானும் இருப்பேன் என்று.

அவளின் பெரியப்பாவும் இதைப் பற்றி விஸ்வநாதனிடம் பேசிட, அவரோ "நம்ம வீட்டுலயே இருந்துக்கட்டும் தலைவரே.. அதுல என்ன.?" என்று கூறி இருந்தார்.

இதற்கு காரணம் விருசாலியை கதற வைக்க நினைக்கிறாராம்.. ஆனால் விருசாலியிடம் மாட்டிக் கொள்ள போவதும் இவர் தான்.

தங்கள் பின்னால் வந்த பத்திரிக்கையாளர்களை வாசலோடு அனுப்பி விட்டனர்.

காரின் கதவு திறக்கப்பட, பட்டுப்புடவையின் மடிப்புகளைச் சரி செய்தபடி முதலில் கீழே இறங்கினாள் விருசாலி. அவளது முகத்தில் எவ்வித பயமோ, நடுக்கமோ இல்லை.

மாறாக அவளின் முகத்தில் மெல்லிய புன்னகையை காணப்பட்டது. அவளுக்குப் பின்னால் கடுகடுப்பான முகத்துடன் இறங்கினான் கர்ணன். அவனது கண்கள் விருசாலியைப் பார்க்கும் போதெல்லாம் எரியும் நெருப்பை கக்கின.

வாசலில் விஸ்வநாதனின் மனைவியான மங்களம் ஆரத்தித் தட்டுடன் நின்றிருந்தார். அரசியல் உலகிற்குப் புதியவர். தன் கணவனின் மனதில் ஓடும் கொடூரமான திட்டங்களோ, இந்தத் திருமணத்திற்குப் பின்னால் இருக்கும் மிரட்டல் ரகசியங்களோ இவருக்கு தெரியாது.

விஸ்வநாதன் வா என்று அழைத்தால் வருவார்.. போ என்று விட்டால் அப்போதே போய் விடுவார். கணவனின் அதட்டல் பேச்சில் பயந்து அவருடன் இருக்கவே பயந்தவர். நாளாக நாளாக அப்படியே பழகி கொண்டார். ஆனாலும் கணவனிடம் பேச மட்டும் இன்னும் தயங்குவார்.

இவருக்கு கர்ணனை மிகவும் பிடிக்கும்.. அம்மா அம்மா என்று தன் பின்னால் சுற்றுபவனை யாருக்கு பிடிக்காமல் போகும்.? இவருக்கு உடம்பு முடியவில்லை என்றால் இவன் தான் கவனித்துக் கொள்வான். எங்கையாவது செல்ல வேண்டும் என்றாலும் இவன் தான் அழைத்து செல்வான்.

அரசல்புரசலாக இவனும் விருசாலியும் காதலித்ததை அறிந்தவர் தான். இப்போது இவனுக்கு நல்வாழ்வு அமைந்து விட்ட மகிழ்வு அவரின் முகத்திலே நன்றாக தெரிந்தது.

"வாம்மா விருசாலி.." என்று அன்போடு வரவேற்று அவர் ஆரத்தி எடுக்க போக, "நிறுத்தும்மா இந்த வீட்டுக்குள்ள இதுக வர கூடாது.. இந்த அனாதை நாய்க்கு ஆர்த்தி ஒன்னு தான் கேடா..?" என்று வந்த குரலில் திடுக்கிட்டு அனைவரும் திரும்பினர்.

இவர்களின் மகன் ஆகாஷ் கையில் மதுக்கோப்பையுடன் நின்றிருந்தான். அவனது கண்கள் குடித்த வெறியிலும், ஆத்திரத்திலும் சிவந்திருந்தன.

"ஆகாஷ் என்னடா பண்ற.? அமைதியா இரு" என்று விஸ்வநாதன் அவனைக் கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் ஆகாஷின் கோவம் தான் அடங்குவதாக இல்லை. அவனுக்கு விருசாலியின் மேல் ஒரு கண். அவளின் அழகு இவனை பித்தம் கொள்ள வைத்தது என்பதும் உண்மை.

கர்ணனுக்கு இப்படியொரு வாழ்வா.? என்று இவனாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த ஆத்திரத்தில் தான் திருமணம் முடியும் முன்பே வீட்டிற்கு வந்து விட்டிருந்தான்.

"நான் ஏன்ப்பா அமைதியா இருக்கணும்.?" என்று விஸ்வநாதரிடமும் சீறிய அவன் தன் பார்வையை நேராகக் கர்ணனின் மீதும் விருசாலியின் மீதும் திருப்பினான்.

"தலைவர் வீட்டுப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவரோட அரசியல் வாரிசா நான் தான் இந்த மேடை ஏறியிருக்கணும்.. அதைய தானே என் அப்பாவும் ஆசைப்பட்டாங்க..

ஆனா சாதாரண தொண்டனோட பையன், வளர்ப்பு நாய் கர்ணன்... என் வாழ்க்கையையும் எனக்குக் கிடைக்க வேண்டிய அந்த முதல்வர் நாற்காலி கனவையும் தட்டிப் பறிச்சுட்டான்.. நீங்க தாலியை கட்டுனு சொன்னதும் இது தான் நல்ல சான்ஸ்னு இவனும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம தலைல மொளகா அரைக்க ரெடியாகிட்டான்ப்பா..

இவனை நம்பாதீங்கனு எத்தனை தடவை சொன்னேன்.. இப்ப பாருங்க நமக்கே ஆப்பு வெச்சுட்டான்.. அதான் சொல்றது நாயை எங்க வெக்கணுமோ அங்க தான் வெக்கணும்னு.." என்று இஷ்டத்திற்கு கதையளந்து கத்தினான் ஆகாஷ்.

அவமானம், ஏமாற்றம், கோபம் என எல்லாம் ஒன்று சேர ஆகாஷ் மூச்சிரைக்க நின்று கொண்டிருந்தான்.

கர்ணனின் முகம் கோபத்தில் இறுகியது. தன் தந்தை இவர்களின் குடும்பத்திற்குச் செய்த விசுவாசத்தையும், தனக்கு இந்த வீட்டில் இருக்கும் உரிமையையும் ஆகாஷ் கேவலப்படுத்தியதை அவனால் தாங்க முடியவில்லை.

ஆனால் அண்ணன் முகத்தைப் பார்த்துத் தன் கோவத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக நின்றான்.

விருசாலியும் கர்ணனை போல் அமைதியாக இருப்பாளா என்ன.?

"ஏய் ஆகாஷ்.. வாயை மூடு.. இல்லைனா வாயை உடைச்சுருவேன்.." என்று விருசாலி குடுத்த சத்தத்தில் ஆகாஷின் குரல் தானாக ஒடுங்கியது.

"நீ என்ன சொன்ன.? என் அப்பாவையும், உன் அப்பாவையும் மிரட்டி கர்ணன் இந்தத் தாலியைக் கட்டுனானு சொல்றீயே உனக்கு வெக்கமா இல்ல.? இப்ப எல்லாரும் முன்னாடியும் உண்மையை சொல்றேன் கேட்டுக்கோ.. இந்த தாலியை என் கழுத்துல முழுமனதா கர்ணன் தான் முழுமனதாக கட்டணும்னு ஆசைப்பட்டேன்.. ஆனா உன் அப்பன் சொன்ன ஒரே காரணத்துக்காக என்னையவே வேணாம்னு தூக்கியெறிஞ்சவன்டா இவன்..

கர்ணன் தான் எனக்கு வேணும்னு உன் அப்பனை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சது நானு.. அதனால தான் இவன் என் கழுத்துல தாலியே கட்டிருக்கான்.. என்ன சொன்ன இவன் அனாதையா.? வாயை உடைச்சுருவேன் பார்த்துக்கோ.. அவன் பக்கத்துல பொண்டாட்டியா நான் இருக்கறப்ப அவனுக்கு எப்படி யாருமில்லாம போகும்.?" என்ற வார்த்தைகளில் சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

"நான் தான் மிரட்டினேன்.. ஏன்னா, இந்த விருசாலியைக் காதலிக்கிறதுக்கும், அவ கழுத்துல தாலி கட்டுறதுக்கும் ஒருத்தனுக்கு தகுதி வேணும்டா.. அந்தத் தகுதி இந்த ஊர்லயே ஏன் இந்த அரசியல் இயக்கத்துலயே என் புருஷன் கர்ணனுக்கு
மட்டும் தான் இருக்கு..

நீ தலைவனோட வாரிசு.. அவன் சாதாரண தொண்டனோட பையன்னு தரம் பிரிச்சுப் பேசுறீயே.. அதிகாரம், காசு, பின்னணி இதையெல்லாம் வச்சு வாரிசு ஆகணும்னு துடிக்கற உன்னைய மாதிரி ஆளுகளுக்கு நடுவுல, தன் உழைப்பாலயும், நேர்மையாலயும், மக்கள் மேல வச்சுருக்கற பாசத்தாலயும் இவனுக்கு அந்த தகுதி அதிகமாகவே இருக்கு..

இவனை ஏதாவது பேசணும்னு நினைச்சா உன்னைய சாவடிச்சுட்டு அந்த கொலை பழியை உன் அப்பன் மேல போட்டு மொத்த குடும்பத்தையும் ஒழிச்சு கட்டிருவேன்.. பார்த்துக்கோ.." என்று நெத்தியடியாக பதிலளித்தாள்.

பின்பு அவளது உதடுகளில் ஒரு அலட்சியப் புன்னகை முளைத்தது.

"ஆகாஷ் தகுதி இல்லாதவங்களுக்கு நாற்காலி மேல ஆசை வரலாம்.. ஆனா அந்த நாற்காலிக்குனு ஒரு கௌரவம் இருக்குல.? கர்ணன் இந்தத் தகுதிக்குத் தகுதியானவன் தான்.. அதைய என் பெரியப்பாவே சொல்லிட்டாரு.. நீங்க இன்னும் எத்தனை தடவை கத்தினாலும் இந்த உண்மை மாறாது.." என்றாள் தீர்க்கமாக.

"ஏய் என்னடி திமிரா.?" என்று ஆகாஷ் கையில் இருந்த மதுக்கோப்பையைத் தரையில் ஓங்கி அடித்து உடைத்தான்.

"ஆகாஷ் உள்ள போடா.." என்று விஸ்வநாதன் அதிகாரக் குரலில் கத்தினார். நிலைமை கை மீறி போவதை அவரால் தடுக்க முடியவில்லை. விருசாலியின் கையில் இருக்கும் அந்த வீடியோ ஆதாரம் வெளியாகி விட்டால் தன் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையும் காலி ஆகிவிடும் என்ற பயம் அவருக்குள் இருந்தது.

தந்தை கத்தியதும் ஆகாஷ் பற்களை நறநறவெனக் கடித்தபடி கர்ணனையும் விருசாலியையும் ஒரு கொடூரப் பார்வையோடு பார்த்து விட்டுத் தன் அறைக்குள் சென்று கதவை ஓங்கி மூடினான்.

மங்களமும் பயந்தபடியே ஆரத்தி எடுத்து முடிக்க, விருசாலி வலது காலை எடுத்து வைத்து விஸ்வநாதன் பங்களாவிற்குள் மருமகளாக நுழைந்தாள். இனி இது அவளின் கோட்டை தான்.

இத்தனைக்கும் கர்ணன் வாயை திறக்கவே இல்லை. அவனின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் எதுவும் நடக்கவில்லை. அதை செய்ய மங்களமுக்கு ஆசையாக இருந்தாலும் கணவனின் மீதான பயத்தில் அமைதியாக இருந்து விட்டார்.

வேகமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்த கர்ணன் பெண்ணவளின் கையை சட்டென வளைத்து பிடிக்க, அவள் திமிரவில்லை.

"என்னடா.?" என்று சாதாரணமாக தான் அவள் வினவிட, "உன்னைய நான் பேச சொன்னனா.? சொல்லு பேச சொன்னனா.?" என்று சீற, நான் பேச நீ பர்மிசன் குடுக்கணுமா என்ன.?" என்று கேட்டதும் அவளின் கையை விட்டு விட்டு ஜன்னலின்
அருகே சென்று விட்டான்.

கைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு வெளியேபார்த்தபடி நின்றான். அவனது மூச்சுக்காற்று வேகமாக வெளி வந்து கொண்டிருந்தது.

அறையில் நீடித்த அந்தப் பயங்கரமான அமைதியை கலைத்து "இப்படி என்கிட்ட கத்தினா உன் அண்ணன் மேல இருக்கற கோவம் குறைஞ்சுருமா கர்ணா.?" என்று அவனிடம் அலட்சியமாக கேலி பேசினாள்.

"ஏய்.." என்று சிட்டாய் பறந்து அவளருகே வந்தான் கர்ணன். அவனது கண்கள் கோபத்தில் சிவந்து, நரம்புகள் புடைத்திருந்தன.

"கர்ணானு உன் நாக்கால என் பேரை கூப்பிடாதே.. அதைக் கேக்கறப்பவே என் உடம்பெல்லாம் எரியுது.. என்ன பெரிய திமிரா உனக்கு.? என் அண்ணன் எனக்கு யாரு தெரியுமாடி.? அநாதையா நின்ன எனக்குப் சோறு போட்டு, படிப்பு கொடுத்து, இந்த உலகத்துக்கு முன்னாடி கௌரவமா வாழ வச்ச தெய்வம்டி அவர்..

அவரோட அரசியல் எதிர்காலத்தையே காலி பண்ணுவேனு ஒரு வீடியோவை வச்சு மிரட்டி, என் கழுத்துல கத்தியை வச்சு இந்தக் கல்யாணத்தை செஞ்சுருக்க.? உன்னைய நினைச்சா எனக்கே அருவருப்பா இருக்கு விருசா.. இப்பவும் அடங்காம இவ்ளோ திமிரா பேசிட்டு இருக்க.?" என்று சினந்தான்.

விருசாலி சற்றும் அசரவில்லை. அவனது ஆக்ரோஷ பார்வைக்கு நேராக தன் கூர்மையான பார்வையை செலுத்தினாள். அவளது முகத்தில் ஒரு தீர்க்கமான புன்னகை முளைத்தது. அவனது சட்டை காலரைத் தன் மென்மையான விரல்களால் லேசாகப் பற்றி, அவனை இன்னும் தனக்கு நெருக்கமாக இழுத்தாள். கர்ணன் அவளது இந்த அதிரடித் துணிச்சலில் ஒரு நொடி ஸ்தம்பித்தான்.

"அருவருப்பா இருக்கா.? அப்போ ஏன் என் கழுத்துல தாலி கட்டுறப்போ உன் கை நடுங்குச்சு கர்ணா.? அது கோவத்தால இல்ல... என் மேல நீ வச்சுருக்கற காதலால.." என்று அவனது கண்களை ஊடுருவி கூறினாள் விருசாலி.

"உன் அண்ணன் உனக்குத் தெய்வமா இருக்கலாம்.. ஆனா எனக்கு அவர் என் பெரியப்பாவோட நாற்காலியைப் பறிக்கப் பார்க்கற ஒரு சாதாரண அரசியல் எதிரி.. எதிரியோட கோட்டையைத் தகர்க்க நான் எந்த எல்லைக்கும் போவேன்.. அதுக்காக என் காதலையே ஆயுதமாக்க வேண்டியிருந்தாலும் நான் தயங்க மாட்டேன்.. அதே சமயம் உன்னைய விட்டுருவேனு மட்டும் நினைக்காத.." என்றவளின் கையை தட்டி விட்டான் கர்ணன்.

"சதி பண்ணி என் உடம்பை வேணா நீ ஜெயிச்சுருக்கலாம்டி.. ஆனா இந்த கர்ணனோட மனசுல உனக்கு ஒரு நூல் அளவு கூட இடம் கிடையாது.. இந்தத் தாலி உனக்குக் கொடுத்துருருக்க பாதுகாப்பு வெறும் வெளி உலகத்துக்கு மட்டும்தான். இந்த நாலு செவத்துக்குள்ள நீ வெறும் கைதி மட்டும் தான்!" என்று ஆத்திரத்தில் கத்தினான்.

"கைதியா.? யார் யாருக்குக் கைதினு போகப் போகப் புரியும் கர்ணா" என்று தன் பட்டுப்புடவையின் மடிப்புகளைச் சரி செய்தபடி மீண்டும் கட்டிலில் அமர்ந்தாள் விருசாலி.

"நீ என்னைய வெறுக்கலாம்.. ஆனா உன்னால என்னைய மறக்க முடியாது.." என்றதில் அவளை முறைத்து விட்டு வெளியேறினான் கர்ணன்.

அவனின் மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. காதலித்தவள் கிடைத்து விட்டாள் என்று சந்தோசப்படுவதா.? அண்ணன் தன்னை வெறுக்கிறார் என்று வேதனைப்படுவதா.? என்று அவனுக்கே தெரியவில்லை.

அண்ணனை பார்க்க தைரியமில்லாமல் அவன் வெளியில் சென்று விட்டிருக்க, விஸ்வநாதனும் அதிகம் வெளியில் வரவில்லை. அது அவரின் மனைவிக்கு சாதகமாக போயிற்று.

விருசாலியை தேடி சென்று உறவை வளர்த்துக் கொள்ள, விருசாலியும் பெரியதாக அவரின் மேல் கோவமில்லாததால் நன்றாகவே பேசினாள். அவரின் பேச்சு அனைத்தும் கர்ணனை சுற்றியே தான் இருந்தது. தன்னவனை பற்றி அவளும் அறிவாள். ஆனால் இவர் கூறுவது அனைத்தும் இவள் அறியாத ஒன்று.

இரவு நேரமும் நெருங்கியது. எந்த அதட்டலும் இல்லாமல் கர்ணன் விருசாலியின் முதலிரவு நெருங்க, மங்களம் தான் கர்ணனை அதட்டி உருட்டி மேலே அனுப்பி வைத்தார்.

கணவனைக் கண்டதும் போனை வைத்து விட்டு அவனருகில் வந்தவள் "பெரியப்பா நம்மைய வீட்டுக்கு வர சொல்றாங்க" என்றிட, "போறதுனா போ.. அதைய எதுக்கு என்கிட்ட சொல்லிட்டு இருக்க.?" என்று கடுப்பாக கூறினான் கர்ணன்.

அவனின் தலையில் நாலு கொட்டு வைத்தால் என்னவென்று தான் இருந்தது விருசாலிக்கு. இருந்தும் அமைதியாக இருக்காமல் அவனின் தாடியை பிடித்திழுத்து "இப்படி பேசுவீயா.? இப்படி பேசுவீயா.?" என்று கேட்க, "ஏய் விடுடி.. ஏய் விடுடி" என்று அவளிடம் இருந்து விலகி நின்றான்.

அவள் விடாமல் அவனை இழுத்து முத்தத்தை பதித்தாள். அவன் திமிறிட, "ரொம்ப பண்ணாதடா.. என்னமோ நமக்குள்ள ஒன்னுமே நடக்காத மாதிரி.." என்ற வார்த்தையில் கர்ணன் அவளை முறைத்தான்.

"உண்மையை தானே சொன்னேன்.. அதுக்கு ஏன் மேன் முறைக்கற.?" என்று அவளும் கேட்க, விருசாலி கொடுத்த அந்த அழுத்தமான முத்தத்தின் ஈரம் ஆடவனை என்னவோ செய்திட, தன் கன்னத்தைத் துடைத்துக் கொண்டு அவளது இரு கைகளையும் பிடித்துக் கட்டிலோடு சேர்த்து அமுக்கியவன், அவளது முகத்திற்கு மிக அருகில் தன் முகத்தைக் கொண்டு சென்றான்.

இருவரின் மூச்சுக்காற்றும் சூடாக மோதிக்கொண்டன.
"நீ என்ன பெரிய சாணக்கியதினு நினைப்பாடி உனக்கு.? என் அண்ணனுக்கு முதல்வர் நாற்காலி மேல கண்ணு இருக்கு..
அதுக்காகத் தான் என்னைய பகடைக்காயா பயன்படுத்திக்கிறானு எனக்குத் தெரியாதுனு நினைச்சீயா.? எனக்கு எல்லாம் தெரியும்டி.." என்று கர்ஜித்தான்.

விருசாலியும் அசராமல் "எல்லாம் தெரிஞ்சும் உங்களைய ஒரு சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கற ஒருத்தருக்காகவா என்னைய வேணாம்னு சொன்ன.?" என்று அவனது பிடியில் இருந்தபடியே கண்களை உருட்டி கேட்டாள்.

"ஆமாடி.. எனக்கு சொந்தப் பந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லாதப்ப, என்னைய தூக்கி வளர்த்து, இந்த அளவுக்கு ஆளாக்குனவர் என் அண்ணன்.. அவர் தன் சுயநலத்துக்காக என்னைய முதலமைச்சர் நாற்காலியில உட்கார வைக்க நினைச்சாலும் சரி, இல்ல அதே நாற்காலியில அவர் உட்காரறதுக்காக என்னை வெட்டிச் சாய்த்தாலும் சரி... நான் அவரோட தம்பியாத் தான் நிற்பேன்..

என் அண்ணனை நான் யாருக்காகவும், ஏன் உனக்காகக் கூட விட்டுத் தர மாட்டேன்.." என்று கர்ணன் உணர்ச்சிவசப்பட்டு, அதே சமயம் அழுத்தமாகக் கூறினான்.

அவனது இந்த அசாத்தியமான பாசமும், நேர்மையும் விருசாலியின் நெஞ்சை என்னவோ செய்தது. அவளுக்கு அவனது இந்த ரோஷமும், மாறாத விசுவாசமும் தான் அவன் மேல் இன்னும் காதலைக் கூட்டியது.

விருசாலி தன் கைகளை மெதுவாக அவனது பிடியிலிருந்து விடுவித்து, அவனது நெஞ்சில் கைகளை வைத்து, அவனை இன்னும் தன் பக்கமாக இழுத்தாள்.

"உங்களோட இந்த குணம் இருக்கே... இதுதான் கர்ணன் உங்களை மத்தவங்கள்ல இருந்து தனித்து காட்டுது.. அந்த விஸ்வநாதனுக்குப் பதவி வெறி இருக்கலாம்.. ஆனா எனக்கு உங்க மேல மட்டும் தான் வெறி.." என்று காதலோடு முணுமுணுத்தாள்.

"விருசாலி விளையாடாத.." என்று கர்ணன் அவளது அருகாமையால் தடுமாறினாலும் அதை வெளிக் காட்டிராமல் அவளிடம் இருந்து விலக முயன்றான்.

ஆனால் விருசாலி விடவில்லை. சட்டென எஅவனது சட்டையைப் பிடித்து இழுத்து தன்னோடு "நான் விளையாடல கர்ணன்.. உங்க அண்ணன் உங்களைப் பயன்படுத்தி அந்த நாற்காலியில உட்காரணும்னு நினைக்கிறார்.. ஆனா நான் உங்களைய அந்த நாற்காலில உட்கார வச்சு அழகு பார்க்கணும்னு நினைக்கறேன்..

ஏன்னா யாரு அந்த நாற்காலில உட்கார்ந்தா மக்களுக்கு நல்லது பண்ணுவாங்கனு எனக்கு தெரியும்.. உங்க அண்ணன் உங்களை பகடைக்காயா நினைக்கலாம்.. ஆனா நீங்க தான் என்னோட ராஜா..

உங்க அண்ணனுக்காக நீங்க எதையும் தாங்குவீங்கனா... உங்களுக்காக இந்த விருசாலியும் யாரை வேணாலும் எதிர்த்து நிற்பா உங்க அண்ணன் உட்பட.." என்று சவால் விடும் தொனியில் அதீத காதலோடு அவனது இதழ்களை சிறையிட்டாள்.

அவன் விலகவில்லை. விலக்கவும் முயலவில்லை. பெண்ணவளின் ஸ்பாரிசம் அவனுக்கு தேவை என்பதாலோ என்னவோ அவளுள் தான் அவன் ஒன்றினான்.

தனக்கு யாருமில்லை என்று நினைத்திருந்த நேரம் புயலாக அவனுள் நுழைந்தவள் இவள்.. இப்போது வரைக்கும் யாரிடமும் தன்னை விட்டு குடுக்காமல் பேசுபவளும் இவளே.. ஆகாஷின் வார்த்தையில் காயமுற்றவனுக்கு இந்த அணைப்பு தேவை போலும். அந்நிமிடம் இருவருள்ளும் இருந்த கோவம் விடைப் பெற்று இருந்தது.

கோவமும், காதலும், தவிப்பும் ஒன்
று சேர, கர்ணன் அவளது இடுப்பை வளைத்துப் பிடித்து தன் பக்கமாக இன்னும் இறுக்கமாக இழுத்துக் கொண்டான். இனி அங்கு வார்த்தைகளுக்கு என்ன வேலை.?


தொடரும்..
 
Top Bottom