• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியவள் - 27

Vishakini

Moderator
Staff member
மகேந்திரனின் மதிவதனியிவள் - 27


இப்பிறவியிலாவது தாங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக தான் நாட்டைவிட்டுச் சென்றுவிடலாமா என மகேந்திரன் கேட்டது...

ஆனால் மதிவதனியின் எண்ணம் வேறாக இருந்ததே..!

"க்ம்ஹூம் நாம எங்கேயும் போகக்கூடாது மகி..! இதே மாதிரி காதலா, நம்ம பையனோட சந்தோஷமா இதே ஊர்ல தான் வாழணும்ங்க..!" என்றவள் கணவனின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தபடி,

"உங்க தம்பி நம்மள எதுவும் பண்ணிடுவானோனு பயமா இருக்காங்க?" என்றும் கேட்டிருந்தாள்...

மனைவியின் பதிலில் வருத்தமும் மகிழ்வும் ஒருங்கே தாக்கியதில் சில நிமிடங்கள் மௌனமாக அவளின் கைவிரல்களை வருடியவன்,

"பயம்? இல்லடா..! போன ஜென்மத்துல பண்ணத் தப்புக்காக அமைதியா இருக்கவனக் கொல்ல முடியாதேனு தான் நானும் அமைதியா இருக்கேன்..!" என்றவாறே எழுந்து அவளருகில் அமர்ந்தான்...

தாங்கள் இருவரும் உயிருடன் இருப்பதை உணரும் நோக்கில் மன்னவனின் தேகத்தை நடுங்கிய விரல்களால் அவள் வருட, இன்னமும் தாங்கள் மறுஜென்மம் எடுத்ததை நம்ப முடியாமல் கனவின் தாக்கத்தில் அவள் தவிப்பதைக் கண்டு,

"வீ ஆர் ஃபைன் வதும்மா..!" என ஆறுதல்படுத்தியவன் தங்களின் மகவைப் பற்றி விசாரிக்க,

"எனக்குள்ள ஏன் இப்படின்னு ஒரு குழப்பம் இருந்ததால ரெண்டு மாசமா டேட் வராம இருந்தது கூட தெரியலங்க..! நேத்து நைட் டின்னர் முடிஞ்சதும் அம்மா கோவிலுக்குப் போக முடியுமானு கேட்டாங்க..!

அத வச்சு நம்ம பேபி நம்மகிட்டயே திரும்பி வந்துட்டத நானே கண்டுபிடிச்சுட்டேன் மகி..! ஆனா உங்களோட தான் டாக்டர் செக்கப்க்குப் போகணும்னு வெயிட்டிங்..!" என்றவள் மனநல மருத்துவரிடம் செல்வதாக இருந்ததை சொல்லத் தேவையில்லை என்பதால் மறைத்துவிட்டாள்...

டோரதி ஈடியின் கதையை அறிந்ததில் இருந்து கூகுளில் அதைப் பற்றி தேடிப் பார்த்ததில், மருத்துவத்துறை வல்லுநர்களின் நம்பிக்கையைத் தாண்டி இம்மாதிரியான சம்பவம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜீதன் என்ற ஒரு சிறுவனுக்கு நடந்துள்ளதையும் அறிந்து கொண்டவளுக்கு மருத்துவ ஆலோசனைத் தேவைப்படவில்லை...

மனைவியின் பேரன்பில் முத்தமழைப் பொழிந்தவன் அவளை அழைத்துக் கொண்டு மகப்பேறு மருத்துவரிடம் செல்ல, அவரும் நற்செய்தியை உறுதி செய்ததோடு இருவருக்கும் பொதுவான ஆலோசனைகளை வழங்கினார்...

தங்களின் உயிர்க்காதலுக்கு அர்த்தம் சேர்க்க வந்த பிள்ளைச் செல்வத்தை எண்ணி மனம் மகிழ இருவரும் வீடு திரும்பியபோது, மாலைநேர சிற்றுண்டியாக பால் கொழுக்கட்டை செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார் கோகிலா...

தம்பதியருக்குள் சண்டையே வராமல் ஒத்தமனமாக வாழ்வதெல்லாம் கதைகளில் மட்டுமே நடக்குமென்ற நிதர்சனம் உணர்ந்தப் பெரியவர்கள், தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் அநாவசியமாகத் தலையிட்டு பிரச்சினையைப் பெரிதாக்க விரும்பாமல் அமைதியாக இருந்து கொண்டனர்...

இப்போது இருவரும் தன்னைப் பார்த்துத் தயங்கி நின்றதையும், முகத்தில் மின்னிய வெட்கப் பளபளப்பையும் வைத்துத் தானாகவே உணர்ந்து, "மதிம்மா..! உண்மையாடா?" என மருமகளிடமும்,

"ரொம்ப சந்தோஷம்டா கண்ணா..!" என மகனிடமும் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தவர் இருவரின் நெற்றியிலும் பாச முத்தம் வைத்தார்...

அலுவல் முடிந்து வீடு திரும்பிய கணவரிடமும் இளைய மகனிடமும் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர, ராமச்சந்திரன் அளவிற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாத யுகேன் சம்பிரதாயமாக வாழ்த்திவிட்டு தம் அறைக்குச் சென்றுவிட்டான்...

அவர்களின் காதலுக்கு வில்லனாகப் பிறப்பெடுத்தவன் தங்களுக்காக மகிழ்ந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்று தானென நினைத்த மகியும் வதுவும் அவனைக் கண்டு கொள்ளவில்லை...

தன்னவள் அழகென்பது மகேந்திரனிற்குத் தெரியும்..!

ஆனால் விழிகளின் அதீத பளபளப்பும், வதனத்தின் பூரிப்பும் அவளைப் பேரழகியாகக் காட்டியதில், தாயான பின்பே தன்னை அவள் உணர்வாள் என அப்பெரியவர் சொன்னது எத்தனை நிதர்சனமான உண்மை என்பதுப் புரிந்தது அவனுக்கு..!

தன்னைவிட பிறக்காத மகன் மீது அவள் அதிகப் பாசம் வைத்திருப்பது சற்று பொறாமையாக இருந்தாலும், "அழகா இருக்க டி வதும்மா..!" அவளின் பூமுகத்தை மென்மையாக வருடியவன், தன் தோள் சாய்ந்தவளை அணைத்தபடியே கண்ணயர்ந்தான்...
______

நாட்கள் மாதங்களாகி விரைய, அதற்கேற்றவாறு வளர்பிறை நிலவாய் சிறிது சிறிதாக மேவிய பெண்ணவளின் மணிவயிறு இப்பொழுது முழுமதியாய் நிறைந்திருக்க, அதில் கரம் பதித்தபடி அசைந்தாடி நடக்கும் தன் மகாராணியின் அழகை ரசிப்பது மகேந்திரனின் வாடிக்கையானது...

இரண்டு குடும்பத்திற்கும் முதல் வாரிசென்பதால் ஆளாளுக்கு அவள் கேட்டதையெல்லாம் செய்துக் கொடுக்க, காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வது, உணவு விஷயத்தில் கறார் காட்டுவது என மன்னவன் மட்டும் சற்று கண்டிப்பாக நடந்துகொள்வதால் அவனின் டிரில் மாஸ்டர் அவதாரத்தில் பாவமாக உதட்டைப் பிதுக்குவாள் மதிவதனி..!

இன்றும் அதே போல் தன்னைப் பார்த்தவளிடம், "நோ எக்ஸ்க்யூஸ் வதும்மா..! ஒழுங்கா எந்திரிச்சு வாக்கிங் வர்ற..!" என இடுப்பில் கைவைத்து அவளுக்காகக் காத்திருக்க,

"க்ஹூம் ம..மகி..! நீங்க இப்படியே பண்ணீங்கனா நான் அம்மா வீட்டுக்குப் போயிடுவேன்..!" என்ற சிணுங்கலுடன் எழுந்தவளைக் மெதுவாகத் தோட்டத்திற்கு நடத்திக் கூட்டி வந்தவன்,

'என் பொண்டாட்டியோட சேர்த்து எங்க சிங்கக்குட்டியையும் கெடுத்துடுவான் போல..!' தங்கைக்கு அதிகச் செல்லம் கொடுத்துப் பிடிவாதக்காரியாய் மாற்றி வைத்திருக்கும் அதியனை மனதில் வறுத்துக் கொண்டிருந்தான்...

என்றோ தாயின் வயிற்றிலேயே கரைந்து காணாமல் போன மகன் தான் பிறப்பான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில், இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகும் மகனை எண்ணி இருவரும் கனவுகளில் லயித்திருக்க, கணவனைக் குறைப்படித்தபடியே நடந்து வந்தவள் திடீரென,

"எ..எனக்கு நம்ம குகைக்குப் போகணும்னு ஆசையா இருக்கு மகி..! கூட்டிட்டுப் போங்க ப்ளீஸ்..!" என்றதில் திடுக்கிட்டவன் மறுப்பாகத் தலையசைத்தான்...

"எனக்கு போயே ஆகணும்..! கூட்டிட்டுப்போக முடியுமா முடியாதா?"

"ஹேய் வேணாம் வதும்மா..! இன்னும் மூனு நாள்ல வளைகாப்பு முடிஞ்சதும் ரெஸ்ட்ல இருக்கணும்னு டாக்டர் சொன்னாங்க தானே..!

நம்ம பேபி பொறந்ததும் போவோம்டா... சரியா?" என்றதற்கு முகம் திருப்பிக் கொண்டவள், இரண்டு நாட்கள் அவனோடு சரியாகப் பேசாமலும், ஒழுங்காக உண்ணாமலும் பிடிவாதம் பிடித்து சம்மதிக்க வைத்திருந்தாள்...

அடுத்த மூன்றாம் நாள் குறித்திருந்த சுபமுகூர்த்தத்தில் மதிவதனியின் வளைகாப்பும் மனநிறைவோடு நடந்துக் கொண்டிருக்க,

"இந்த வைர நெக்லஸ் எப்போ டிசைன் பண்ண கண்ணா? அழகா இருக்கு..!" என்ற ராமச்சந்திரனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மன்னவன் திருதிருவென முழித்தபடி ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லி சமாளிக்க, உண்மையறிந்த மற்ற மூவரும் சத்தம் வராமல் குலுங்கிச் சிரித்தனர்...

அவர்களின் மகிழ்வை வேட்டை மிருகத்தின் பார்வையால் வெறித்தான் யுகேந்திரன்..!

ஆம்..! சற்று முன்னர் மகேந்திரன் மனையில் அமர்ந்திருந்த மதிவதனியின் சங்குக்கழுத்தில் வைரமாலையை அணிவிக்க, அதனைக் கண்ட சில மணி நேரங்களில் அவனின் ஞாபகங்களும் மீண்டிருந்தன...

அன்று அவ்வைரங்களை ஆதினியிடமிருந்து வாங்கி மதிவதனியைக் கவர்வதற்குப் பயன்படுத்தலாம் என்ற நோக்கில் அவற்றை அடிக்கடிப் பார்த்த மூடத்தனத்தை என்றேனும் மறக்க முடியுமா அவனால்?

சமீப நாட்களாக பெண்கள் விஷயத்தில் இளைய மகனின் தவறான நடவடிக்கைகளை கணவர் மூலமாக அறிந்துகொண்ட கோகிலாவிற்கு, அவனின் இந்த வேட்டைப்பார்வையில் நெஞ்சம் பிசைந்தது...

வளைகாப்பு மகிழ்வாக நடந்து முடிய, அன்றிரவு தன் கைவளைவில் சாய்ந்திருந்த மனைவியின் நெற்றியில் முட்டி, "உன் மகி ரொம்ப சந்தோஷமா இருக்கேன் வதும்மா..!" என்றவனை இறுக்கிக்கொண்டு மலர்ந்து சிரித்தாள் அவள்...

தன்னவளின் விருப்பத்திற்காக இரண்டு நாட்கள் வனத்தில் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவன் அதைப்பற்றி மகேனிடமும் கோகிலாவிடமும் மட்டுமே பகிர்ந்தான்...

முகம் நிறைய புன்னகையுடன் கிளம்பி நின்ற மருமகளை வருத்தப்படுத்த விரும்பாதவர், "சந்தோஷமா போயிட்டு வாங்கடா..!" என அவளை அணைத்து விடை கொடுத்ததோடு,

"மதிம்மாவ கவனமா பார்த்துக்க தம்பி..!" என மகனிடமும் எச்சரித்தே அனுப்பிவைத்தார்...

அங்கு வனத்துறையின் செக்போஸ்ட்டைத் தாண்டும்போதே அவர்களின் மகன் துள்ளாட்டம் போட்டதில், "ஆ..! இங்கப் பாருங்க மகி..!" என்றபடி காரோட்டிக் கொண்டிருந்த கணவனின் இடது கரத்தைப் பிடித்து தன் அடிவயிற்றில் பதிக்க,

"வாவ்..! நம்ம ஜூனியர்க்கும் தெரியுதுப் பாரு வதும்மா..!" அவளின் கன்னத்தில் பதிந்த மகேந்திரன்,

"அம்மாவ கஷ்டப்படுத்தாதீங்க செல்லம்..!" எனத் தன்னை உணர்ந்ததும் மேலும் துள்ளிய மகனுக்குக் குனிந்து முத்தம் வைத்துவிட்டு காரைக் கிளப்பிய சில நிமிடங்களில் அடர்ந்த வனப்பகுதியை அடைந்திருந்தான்...

தன் மகாராணியை கரங்களில் ஏந்தியபடி உயரத்தில் அமைந்திருந்த அம்மரவீட்டிற்குள் நுழைந்தவன், பத்தே நிமிடங்களில் சத்துமாவு கஞ்சியைத் தயாரித்துக் கொடுக்க, அவனைப் பாவமாகப் பார்த்து வைத்தாள் அவள்...

"நீ என்ன டைப்ல பார்த்தாலும் நான் விட மாட்டேன் பேபி..! டெலிவரிக்கு இன்னும் ஃபிஃப்ட்டீன் டேய்ஸ் தான் இருக்கு..! சாப்பிட்றதுக்கு அடம்பிடிக்க மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ண தானே?

உனக்காக அம்மாகிட்ட குக்கிங் கத்துக்கிட்டு வந்துருக்கேன், ஒழுங்கா குடி டி..! என் செல்லம்ல..!" எனக் கெஞ்சி கொஞ்சியே அவளைக் குடிக்க வைத்தவன், வீங்கியிருந்த அவளின் கால்களை வெந்நீரில் அமிழ வைத்து இதமாகப் பிடித்துவிட்டான்...

அனைத்தும் முடிந்ததும் காலடியில் தளர்வாக அமர்ந்தவனின் மீசையை முறுக்கிவிட்டவள், "மை முனீஸ் பேபி..! சோ ஸ்வீட்..!" என்றதில் மனைவியின் கரங்களில் முத்தம் வைத்து,

"ஏன் பேபி எனக்கு முனீஸ்னு பேர் வச்ச?" என்று வினவ,

"அதுவா? ஸ்டார்ட்டிங்ல நீங்க க்யூட்டா மீசைய முறுக்கும்போது அழகா இருக்கும் மகி..! அப்போ சந்தோஷமா வச்சது அப்புறம் உங்க கோபத்துக்கும் செட்டாகவும் அப்படியே சொல்லி பழகிட்டேன்..!" என சிரித்தவள் மீண்டும் மன்னவனின் மீசையுடன் விளையாட,

"ஆ..! வலிக்குது டி..!" என்றான் போலியாக நடித்து...

"க்ஹூம்..!" எனச் செல்லமாக முறைத்தவள், "உங்க நேம் பத்திக் கேட்டதுக்கு ஏதோ பெரிய கதைன்னு சொன்னீங்க, ஆனா சொல்லவே இல்லைல..! அத சொல்லுங்க மகி..!" என்றாள் கதைக் கேட்கும் நோக்கில்...

"அது எனக்கும் மகேனுக்கும் ஒரே நேம்ல, சோ ஸ்கூல்ல இன்ஷியல் வச்சு கூப்டுவாங்க டி..! அதுனால பிடிக்கலைனு தீரன் அபர்ஜித்னு மாத்திட்டேன்... ஆனா நம்ம காதல் பத்தித் தெரிஞ்சதும், நீ கூப்ட்ட பேர மத்தவங்க சொல்றது அப்போவே பிடிக்காம இருந்துருக்குனு புரிஞ்சுக்கிட்டேன்..!" என்றபடி மனைவியின் இதழில் பதிந்து விலகியவன்,

"சரி வாடா தூங்குவோம்..!" என அவளுடன் அங்கிருந்த மெத்தையில் சரிய, இரவு ரம்மியமாகக் கடந்து காலைப்பொழுதும் அழகாகப் புலர்ந்தது...

எப்போதடா விடியுமெனக் காத்திருந்த மதிவதனி, மன்னவனைப் படுத்தியெடுத்து தங்களின் குகையை அடைய, உள்ளே காலடி வைக்கும்போதே அவளின் பூந்தேகத்தில் மயிர்க் கூச்செறிந்தது...

கணவனை வலக்கரத்தை இறுக்கமாகப் பற்றியபடி தங்களின் ஆஸ்தான கரும்பாறையில் அமர்ந்தவளுக்கு தன்னையறியாமல் கண்ணீர் வழிய, "ப்ச் நோ வதும்மா..! வி பார்ன் டூ லிவ்..! எங்க உன் மகிக்காக சிரி பார்ப்போம்..!" அவளை அணைத்து முதுகை வருடினான்...

அவனின் வருடலில் தன்னை மீட்டவள், "நெக்ஸ்ட் டைம் வரப்போ ராஜா ராணி கெட்டப்ல ஃபோட்டோ எடுக்கணும் மகி..!" என்றதில் குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் புரையேற,

"எதே? மத்தவங்க முன்னாடி நீ அந்த கிளாமர் காஸ்டியூம்ல இருக்கதா? நோ..! ஐ டோண்ட் லைக் இட் வதும்மா..!" என்றான் பொறாமையில் பொங்கியபடி...

அவன் மார்பில் வலிக்காமல் குத்தியவள், "ஹாஹா..! பொறாமையா? சரி நம்ம ரெண்டு பேர் மட்டும் நம்ம பையனோட ப்ரைவேட்டா எடுத்துப்போம்..!" என முடித்து வைக்க,

"ம்ம் இது ஓகே..!" மனைவியைப் பார்த்து சிரித்தவன் அவளுக்குக் கொண்டு வந்த உணவையும் பழங்களையும் ஊட்டிவிட்டான்...

பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்திருக்கும் தைரியத்தில் அங்கிருந்த இரண்டு நாட்களும் மதியம் மூன்று மணி வரையில், குகையிலேயே அமர்ந்து தன்னவளுடன் பழங்கதைகள் பேசிய மகேந்திரன், அன்று மாலை வீடு திரும்பவிருப்பதால் சற்று விரைவாகக் கிளம்புவோமென அவளை அழைத்தான்...

"இன்னும் கொஞ்ச நேரம் மகி..!" என்றவள் பாவமாகப் பார்க்க, மனைவிக்கு இணங்கி அங்கேயே அமர்ந்தவனுக்கு, சிறிது நேரத்திலேயே தங்களை யாரோ வெறிப்பதாகத் தோன்றியதில் வெளியே கவனிக்க, கொடூரமான முகத்துடன் குகைவாயிலை அடைத்தபடி நின்றிருந்தான் யுகேந்திரன்...

சட்டென்று எழுந்து நின்ற மகேந்திரன், "யுகேன்?" என இழுக்க,

"ஹாஹா..! தருமன் இளம்பரிதினு சொல்லு..!" என்றான் அவன் நக்கலாக...


தொடரும்......
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom