• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியிவள் - 10

நிதனிபிரபு

Administrator
Staff member
மகேந்திரனின் மதிவதனியிவள் - 10

தன்னிடம் கோபித்துக்கொண்டு விலகி நின்ற மனைவியின் கரம் பற்றி மெதுவாக
அருகே இழுத்தவன்,

"ஆஹா என்ன அழகு..! எம் வதும்மாவின் சினந்த வதனம் கூட பேரழகாக
எம்முடைய விழிகளை நிறைக்கின்றதே..!" என்று கொஞ்சல் மொழி பேசிக்கொண்டே
அவளின் மதி வதனத்தில் முத்த ஊர்வலம் நடத்தியவனிடமிருந்து லாவகமாக
விலகி நின்றவள்,

"எம்மை மயக்க முயற்சிக்காதீர்கள் மன்னா..! சுற்றத்தார் யாவரும் தங்களின்
வாளுக்கு கங்கணம் கட்டிய அந்த காஞ்சனையை அல்லவா தங்களுடைய ராணியாக
ஏற்பார்கள்... அப்படி என்றால் நான் யார் தங்களுக்கு?.. சகலத்தையும் சரிசெய்வதாகக்
கூறியதோடு சரி..! ஒன்றும் நிகழவில்லை..." என்று நியாயம் கேட்டதில் அவளை
ஆற்றாமையுடன் நோக்கி,

"உமக்கு மதி எதுவும் கெட்டுவிட்டதா வதனி? இப்படி நீ கேட்பது நியாயமே
இல்லையடி... உமக்காக எதை செய்யவும் உறுதி பூண்டிருக்கும் என்னை நம்ப
மறுப்பது முறையா? உரிமைப்பட்ட நானே இங்கு முழுதாக நிற்கும்பொழுது
வாளுக்கு கங்கணம் கட்டியவளைப் பற்றி எதற்காகக் கவலைக் கொள்கிறாய்?
எமக்கும் அந்த பெண்ணிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை... கலங்காதே தேவி..!"
என்றவாறு சமாதானம் செய்ய அருகில் வந்தவனிடம் முகம் கொடுக்காமல்,

"தாங்கள் கூறுவது சத்திய வார்த்தைகள் என்றால் எம்மை மணந்துகொள்ள
இந்நாட்டின் படைத்தளபதியாக வேடம் பூண்டதை எதற்காக எம்மிடமிருந்து
மறைத்தீர்கள் அரசே?" என்று வினவ,

"தேவியே அது பழைய சண்டையடி..! அதற்கான சமாதான பேச்சுவார்த்தை என்றோ
முடிந்துவிட்டதே... மீண்டும் தொடங்குவது நியாயமில்லை தேவி..."

"அப்படியானால் தோழனின் சாவலை ஏற்று இங்கு வருகைப் புரிந்திருப்பதை
எதற்காக மறைத்தீர்கள்? அத்தோடு தாங்கள் எமக்கு கொடுத்த வாக்கைக்
காப்பாற்றாமல் எதற்காக இத்தனை நாடகம்?" என்று அடுக்கடுக்காக வினாக்களால்
தன் மன்னவனை திணறடித்தாள்...

இத்தனை கேட்டவள் எதற்காக இந்நாட்டின் மன்னராக முடிசூட்டிக் கொண்டீர்கள்
என்ற வினாவை மட்டும் எழுப்பவில்லை..! தன் மன்னவன் மீது அத்தனை
நம்பிக்கை..!

'மகேந்திரா..! மித்ரதுரோகி..! நடந்தவற்றை வார்த்தை மாறாமல் எம் தேவியிடம்
ஒப்பித்துவிட்டான் போல தெரிகிறது..' மனக்குரலில் தோழனை கடிந்துவிட்டு,
மங்கையின் நாடியை நிமிர்த்தி தன்னை காணுமாறு செய்தவன், "உம் வினாக்களுக்கு

விடையளிக்க வேண்டியது எம்முடைய கடமை வதனி..! எனினும் காலம்
வரும்வரை பொறுத்திரு... எம் தங்கம் அன்றோ..!" என்று அவன் அளித்த
விளக்கத்திற்கு சம்மதமாக சிரம் அசைத்து,

"பார்ப்போம்..! இப்பொழுது சென்று வருகிறேன் மன்னா..!" என்றதில்,

"மன்னன் அல்ல வதும்மா..! உம் தீரன்..! அதிலும் காதல் செய்யும் பொழுதுகளில்
எம்மை மகி என்று அழைப்பாயே..! அது தான் எமக்கு பிடித்தம் தேவி..." என்று
மறுதலிக்க,

"தாங்கள் அளிக்கப்போகும் விளக்கம் எமக்குத் திருப்தியளிக்கட்டும் அரசே..!
அதுவரையில் தீரனும் இல்லை, மகியும் இல்லை... தாங்கள் எமக்கும் மன்னர்
தான்..!" என்று உறுதிபட உரைத்தவள் தன் கொடியிடையை வளைத்துப் பிடித்திருந்த
அவனின் கரங்களை எடுத்துவிட்டு விலகி நடந்தாள்...

இயலாமையில் விழிகளை இறுக்கமாக மூடித்திறந்தவன், மகேந்திரனைத்
தேடிச்சென்றான்...

தன்னைக் கண்டவுடன் அடக்கமாட்டாமல் நகைத்தவனின் புஜத்தில் ஓங்கி
குத்திவிட்டு, "மூடனே..! ஏனடா இப்படி செய்தாய்? எம்மால் வதனியை சமாளிக்க

இயலவில்லை..." என்று குறைப்படிக்க,

"அதியன் உயிருடன் இருப்பதை எம்மிடமே மறைத்தாய் அல்லவா... அதற்கான
பழிவாங்கல் தீரனே..." என்று விழிகளை சிமிட்டினான்...

"அந்த உண்மையை நேற்றே உம்மிடம் கூறிவிட்டேன் தானே... பின்பு எதற்காக எம்
தேவியிடம் நம் சவாலைப் பற்றித் தெரிவித்தாய்?.."

"மன்னித்துவிடு தீரா..! இதை நேற்று முன்தினமே வதனியிடம் தெரிவித்துவிட்டேன்.."
என்று மேலும் நகைத்த மகேந்திரன், "உம் கவலை அவசியமற்றது..! எம் அத்தை
பெத்த ரத்தினத்தை நீ எளிதாக சமாளித்து விடுவாயடா..! ஆனால் ஒன்று தீரனே..! நீர்
தேடிவந்த மற்றொன்று இங்கு கிடைப்பதுக் கடினம்..." என்க,

"எமக்கும் ஒரு காலம் வருமடா..! அன்று உம்மை கவனித்துக் கொள்கிறேன்...
அத்தோடு நான் தேடி வந்ததை பல தினங்களுக்கு முன்பே எடுத்துவிட்டேன்... நீ
விடுத்த சவாலில் ஒன்று நிறைவேறியது... அதியன் கிடைத்ததும் எம் வதனியை
முறைப்படி மணந்து முழுமையாக வென்று காட்டுகிறேன் பாரடா..." என்றபடி தன்
தீட்சண்யம் பொருந்திய விழிகளால் அவனை அளந்தவன், தனக்கென்று
பிரத்யேகமாக அலங்காரம் செய்திருந்த அறையைத் தவிர்த்துவிட்டு தன்
இணையளின் அறைக்குள் நுழைந்தான்..‌‌.

அங்கு வழக்கத்திற்கு மாறாக பகலில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளின்
நீள்கேசத்தைக் கோதிக் கொடுத்தவாறே, "உம்மிடம் நடந்த நிகழ்வுகளை உறுதியாக
தெரிவிப்பேன் வதும்மா..! ஆனால் இவ்விடத்தில் வைத்து எதைப்பற்றி
விவரித்தாலும் உம்மையும் ஆபத்து சூழும் அபாயமுள்ளது... நாம் தனிமையில்
சந்திக்கும் பொழுது உரையாடலாம்.." அவளின் உறக்கத்தைக் கலைக்காமல்
மெல்லிய குரலில் சமாதானம் கூறியவன் குனிந்து அவளின் மென்கன்னத்தில் இதழ்
பதித்தான்...

அதற்குப் பின்னான நாழிகைகள், அதியனை மீட்பதைப் பற்றி கவுதமன் மற்றும்
மகேந்திரனோடு ரகசிய அறையில் ஆலோசனை நடத்தியதில் கழிந்தன...

அன்றைய சந்தியா வேளையில் சிறைக்காவலர்களை மன்னர் சபைக்கு
அழைத்தவன், ஆதினி தான் அதியனின் உணவில் நஞ்சை கலந்ததாக
அறிவித்ததோடு அவளையும், அவளின் தாய் வடிவாம்பாளையும் சிறையில்
அடைக்கும்படி பணித்தான்...

இடியென விழுந்த செய்தியில் மனம் பதற, நடுங்கிய கால்களை சமன்படுத்த
அருகிலிருந்த கல்தூணை பற்றியபடி அவளை நம்ப முடியா திகைப்புடன் நோக்கிய
மதிவதனி, "ந..நங்கையாளே..! தாங்களா எம் த..தமையனின் இன்னுயிரை பறித்தது?
எத்தனை பெரிய துரோகம்?" என்று கதற,

"அல்ல மதிவதனி..! மன்னர் பொய்யுரைக்கின்றார்... எதிரி நாட்டிலிருந்து இங்கு வந்து
உம்மை மணந்து, உம் தமையனைக் கொன்றதே அவர் தான் பெண்ணே... எல்லாம்
இந்த ராஜ்ஜியத்தை அடைவதற்காக நடந்த ஏமாற்று வேலை... என்னை நம்பு.." என்று
அவள் கரம் பற்றி இறைஞ்சியதில், சபையினரோடு சேர்ந்து தீரனும் அதிர்ச்சியில்
உறைந்தான்...

ஆதினியின் கரத்தை தட்டிவிட்டவள், "என்ன பிதற்றுகிறாய்? என்னவரின்
வருகைக்காக பரந்து விரிந்த இந்திரபுரி சாம்ராஜ்ஜியமே காத்திருக்கும் பொழுது
அதைக்காட்டிலும் சிறிய நாடான இந்நாட்டின் மீதா பற்று வைப்பார்.." என்று உறுத்து
விழிக்க,

"மன்னர் உன்னவர் இல்லை பெண்ணே... அவர் காஞ்சனைக்கு சொந்தமானவர்..!
அதோடு ஒப்பிடுகையில் நீங்கள் இருவரும் செய்துகொண்ட கந்தர்வ மணத்தை இரு
நாட்டவர்களும் அங்கீகரிக்க மாட்டார்கள்... நான் கூறுவதைக் கேள்... அதைப்பற்றி
அறிந்தே தான் இவர் உம்மை ஏமாற்றுகிறார்..." தன் கூற்றுக்கு வலுசேர்க்கும்
வகையில் தீரன் மீது குற்றச்சாட்டினை அடுக்கினாள் ஆதினி...

சுட்டெரிக்கும் ஆதவனாய் தீரனை முறைத்தபடியே, "அது எம்முடைய கவலை..!
எங்களுக்குள் சமாதானம் செய்து கொள்வோம்..." என்று தீர்க்கமாக உரைத்தவள்,
"வீரர்களே..! இவர்கள் இருவரையும் இழுத்துச் செல்லுங்கள்..." என்றபடி மீண்டும் தம்
கரத்தைப் பிடிக்க வந்தவளை அவர்களை நோக்கித் தள்ளிவிட்டாள்...

அதுவரையில் மூச்சுவிடவும் மறந்தவனாக அரியணையில் அமர்ந்திருந்த தீரனிற்கு

உயிர்க்கூட்டை விட்டுச்சென்ற உயிர் மீண்டும் திரும்பியதைப் போல மனம்
அமைதியடைந்தது..!

இந்த அரண்மனைக்கு எதற்காக வந்தானோ அதைவிடுத்து மற்ற பணிகளில் அதிக
கவனம் செலுத்துவதாக குறைப்படித்து அவன் மீது கோபமாக இருக்கின்றாள்
அவனின் மகாராணி...

அதற்கே அவளை சமாதானம் செய்ய நேரமின்றி இருக்கும்பொழுது மீண்டும் ஒரு
சண்டையா என்று அஞ்சிவிட்டான் அந்த மன்னன்..!

அவள் ஆதினியை மறுதலித்ததை வைத்தே அவளின் தூய நேசத்தை உணர்ந்து
கொண்டவனாக, காதல் மின்னும் விழிகளுடன் எழுந்து கீழே இறங்கியவன் தம்
வதும்மாவின் கரம் பிடித்து அழைத்து வந்ததோடு அவனுக்கு அருகாமையிலிருந்த
ஆசனத்தில் அமர்த்தி அழகுப்பார்த்தான்...

"நானும் இந்நாட்டின் இளவரசி மதிவதனியும் கந்தர்வ மணம் புரிந்து
கொண்டதையும், ஆதலால் அங்கு சோலைநாட்டு இளவரசி செய்த கங்கண
விவாஹம் செல்லாது என்பதையும் ஓலையில் வடித்து இந்திரபுரிக்கு தகவல்
அனுப்புங்கள் மந்திரியாரே..!" என்று உத்தரவிட்டவன்,

"அத்துடன் பிடிபட்ட குற்றவாளிகளைப் பற்றிய அறிவிப்பை நம் நாட்டு மக்களுக்கு

தண்டோரா மூலம் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யுங்கள்..! இத்துடன் சபை
கலையட்டும்..!" என்றபடி தன் இணையளுடன் எழுந்து நின்றான்...

"ஆகட்டும் அரசே..!" என்று பணிந்த மந்திரியார், தீரன் பிறப்பித்த உத்தரவுகளை
கவனிக்கச் சென்றார்...

ஒரு நாட்டு மன்னனை அவனின் இணையளே கொலை செய்தாள் என்ற தகவலை
வெளியே கசியவிடுவது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் காரியமே...

எனினும் குற்றவாளிகளைப் பற்றிய தகவல் பரவினால் மட்டுமே முக்கியக்
குற்றவாளியான தருமன் இளம்பரிதி வெளியே வருவான்..! அவ்வாறு அவன்
வந்தால் தான் அதியனின் இருப்பிடத்தை அறிய முடியும்..! அதற்காக தான்
இத்தனை ஏற்பாடுகள்..!

தீரனை பொறுத்தவரை எத்தனை விரைவில் முடியுமோ அத்தனை விரைவில்
ராஜ்ஜியத்தை அதியனிடம் ஒப்படைத்துவிட்டு தன் ராணியோடு தங்களின்
நாட்டிற்குத் திரும்ப வேண்டும்...

இத்தனைக்குப் பின்னரும் தன்னருகில் அமைதியாக நின்றிருந்த மதிவதனியின்
சோர்ந்த முகத்தைக் கண்டவன், "தேவியே..! ஏனிந்த அமைதி? இன்னும் உம்முடைய

கோபம் தீரவில்லையா?.." என்று ஆற்றாமையுடன் வினவ,

"சில கோபங்கள் உடனடியாகத் தீராது அரசே..! ஆனால் இப்பொழுது நான் அதற்காகக்
கவலை கொள்ளவில்லை..."

"பிறகு?.."

"எம் தமையன்..! ஒரு நயவஞ்சகியை மணந்து அநியாயமாக இன்னுயிரை
இழந்துவிட்டார்களே..." என்று கண்ணீர் உகுத்ததில்,

"வதும்மா..! உம்மிடம் நிறையப் பேச வேண்டுமடி..! நாம் தனிமையில் சந்திக்கும்
வேளையில் பேசலாம்..." என்றவனை பொருள் விளங்கா பார்வையால் அளந்துவிட்டு,

"இப்பொழுது அதற்கு ஏதும் தடையில்லையே அரசே..! நம் தனியறையில்
பேசலாமே?.." என்று வினவினாள்...

"அல்ல தேவி..! இங்கு சுவர்களுக்கும் காதிருப்பதாக எமக்குத் தோன்றுகிறது..! நாம்

பிறகு பேசலாம்.." என உரைத்தபடி அவளின் பட்டுக்கன்னத்தை வருடியவன், "இதற்கு
மேல் எம்மிடம் கோபம் கொள்ளாதே தங்கமே..! உம்முடைய தீரன் தாங்கமாட்டான்.."
என்று முணுமுணுக்க,

"எங்கே வைத்து என்ன செய்கிறீர்கள்..! சற்று விலகி நில்லுங்கள்..." என்று அவனை
விட்டு தள்ளி நின்ற மதிவதனி, இன்னும் சமாதானமாகாத முகபாவனையுடன் தன்
கார்கூந்தல் அசைந்தாட விலகிச் சென்றாள்...

ஒயிலாக நடந்தவளின் பின்னழகை வஞ்சனையின்றி ரசித்த அவளின் மன்னவன்,
இன்றே அதியனைப் பற்றிய உண்மைகளைத் தெரிவித்து அவளது கவலையைப்
போக்க வேண்டும் என்ற முடிவோடு கவுதமனைக் காண விரைந்தான்...

பகலவனின் ஆதிக்கம் முடிந்து வெண்ணிலவின் ஆதிக்கத்தில் குளிர்க்காற்று
இதமாய் வீச, புவியின் வெப்பம் தணிந்திருந்த இரவு வேளை அது...!!!

அரண்மனையில் இருந்த ஓர் சுரங்கப்பாதையின் வழியாக வெளியே வந்த இளந்தீரன்
தம் சிங்காவின் மீது ஏறியமர்ந்தான்..!

நாட்டின் பிரஜைகள் தம்மை அடையாளம் காணாமல் இருப்பதற்காக, விழிகளைத்
தவிர்த்துக் கருப்புத்துணியால் தம் வதனத்தை மறைத்திருந்தான்...

சற்று தொலைவில் இருந்த மற்றொரு சுரங்கப்பாதையின் வாயிலில் அவனைப்
போன்றே தம் அடையாளம் மறைத்தபடி காத்திருந்த மனையாளின் கரம் பற்றித்
தூக்கியவன் தமக்கு முன்பாக அவளை அமர்த்திவிட்டு, சிங்காவை மெதுவாகக்
காட்டுப்பாதையில் நடக்கும்படி பணித்தான்...

அந்தப் பாதையில் அரைமணி நேரம் பயணித்த தீரனின் சிங்கா கரும்பாறைகளுக்கு
நடுவே இருந்த ஓர் குகைக்கு அருகில் வந்து நின்றது..!

அவன் கையோடு கொண்டுவந்த பொருட்களை வைத்து இரண்டு இடங்களில்
தீப்பந்தம் அமைத்தவன், புரவியில் அமர்ந்திருந்த தம் தேவியை கரங்களில்
சுமந்துகொண்டு மெதுவாக குகையை நோக்கி நடந்தான்...

"வதும்மா..! இவ்விடத்தைக் கண்டால் உமக்கு எதுவும் ஞாபகம் எழுகின்றதா?" என்று‌
வினா எழுப்பிய தீரனின் விழிகள் தம் மார்பில் சாய்ந்திருந்த மங்கையின்
வதனத்தை நிமிர்த்தி அங்குலம் அங்குலமாக அளந்தது...

மன்னவனின் கேள்வியில் செம்பவளமாக சிவந்த வதனத்தை அவனின் மார்பில்
புதைத்தபடி, "இது இயற்கையின் சாட்சியாக நம் கா..காதலுக்கு மரியாதை நடந்த
இடம்..! எப்பிறவியிலும் நம்மால் மறக்க முடியாது மகி..!" என்றவள் அந்த

கரும்பாறையை வருடினாள்...

அவளது கரங்கள் வருடும் அதே கரும்பாறை தான் பல நூறு ஆண்டுகளுக்குப்
பின்னரும் அவர்களின் காதல் பரிசை தாங்கப்போகிறது என்பதை இருவரும்
அப்பொழுது அறிந்திருக்கவில்லை..!

தொடரும்......
 
Last edited:
Top Bottom