• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியிவள் - 15

நிதனிபிரபு

Administrator
Staff member
MMI 15


நண்பர்கள் இருவரும் போட்டிருக்கும் திட்டத்தைப் பற்றி அறியாத மதிவதனியின் நேரங்கள் வழக்கம் போல் அலுவலகம் செல்வது, வீடு திரும்புவது, அண்ணனிடம் வம்பு வளர்ப்பது என்று கடந்தன..!

அவள் வீட்டிலிருக்கும்போது அம்பிகா சற்று வற்புறுத்தி அவ்வப்போது எதாவது ஒரு பழக்கலவையை முகத்தில் பூசிவிடுவார்... அதற்கு மேல் அவளுக்கு மெனக்கெட பிடிக்கவில்லை..!

அன்று தந்தையிடம் சம்மதம் தெரிவித்தபோது நன்றாக இருந்த அவள் மனதில் இப்போது தீரன் ஏற்படுத்திய சலனம் நீர்க்குமிழியாய் பொங்கிக் கொண்டிருக்க, ஏதோ நடப்பது நடக்கட்டும் என்ற விட்டேற்றியான மனோபாவம்..!

தங்கையின் நடவடிக்கையைக் கண்ட அதியன் மீண்டும் ஒருமுறை கேட்டும், அவள் மனம் திறக்க மறுத்ததில் அதற்கு மேல் என்ன செய்வதெனப் புரியாமல் அவனுமே குழப்பத்துடனே நிச்சயதார்த்த ஏற்பாடுகளைக் கவனித்தான்...

அடுத்த நாள் காலையில் அலுவலகம் வந்தவளின் கண்கள் தன்னை மீறி தீரனை காணாமல் தேட, "அடியே..! உனக்கும் அந்த முனீஸ்வரனுக்கும் நடுவுல ஒன்னுமே இல்ல..!" தன்னைத் தானே கடிந்து கொண்டவள் மகேன் அழைத்ததில் அவனின் தனியறைக்குச் சென்றாள்...

வழக்கம் போல் புன்னகை முகமாக அவளை வரவேற்றவன், "அந்த சி.ஜே ஜூவல்லர்ஸ்க்கு நீ ரெடி பண்ண டிசைன்ஸ் எல்லாத்தையும் தீரன் அப்ரூவல் பண்ணிட்டான் மதிவதனி... நெக்ஸ்ட் வீக் ப்ரொடெக்ஷன் டீம்கிட்ட கொடுத்துடலாம்..." என்றதற்கு ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு வெளியே வந்தாள்...

ஒருவேளை அவன் நிச்சயித்த பெண்ணிடம் பேசுவதைப் போல் பேசிப் பழகியிருந்தால் தன் மனம் இப்படி சலனப்பட்டிருக்காதோ என்று நினைத்தவளுக்கு, அதை நினைக்கும்போதே வேப்பங்காயை உண்டதைப் போல் மனம் கசக்க மறுப்பாக தலையை உலுக்கிக்கொண்டாள்...

முன்னர் நண்பனைத் தூண்டிவிடவே மதியிடம் நெருங்கி நின்று பேசி சிரிப்பதைப் போல் நடித்த மகேன், இப்போது தீரன் அவர்களின் தீராக்காதலைப் பற்றி அறிந்தப்பின்னர், அவனுக்கு உரிமையானவளிடம் நெருக்கமாகப் பேசுவதென்ன, பார்ப்பதே பாவமென்று நினைத்தான்...

இப்போது தான் போட்டிருக்கும் திட்டம் சரியாக நடக்க வேண்டுமென்ற கவனம் மட்டுமே அவன் மனதில்..!

இங்கு அடர்ந்த வனப்பகுதியில் அமர்ந்திருந்த மகேந்திரன் அபர்ஜித் இன்றாவது அந்த சாமியாரின் தரிசனம் கிட்டுமா என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருக்க, அவர் வரும் வழியை தான் காணவில்லை...

சற்று தூரம் உள்ளே நடந்தவனுக்கு கரும்பாறையினாலான ஒரு பெரியக்குன்றின் மறுப்பக்கமிருந்த அந்த குகையை நெருங்க நெருங்க விழிகளில் ஈரம் துளிர்த்து தேகம் சிலிர்த்தடங்கியது...

நேற்று இங்கு வந்தபோது நிர்மலமாக இருந்த அவன் மனதில் இன்று பரிப்பூரணமான காதலின் ஆர்ப்பரிப்பு..!

அங்கேயே சாய்ந்தமர்ந்து அந்த பாறைகளை வருடியவனுக்கு தன் வதும்மாவோடு காதல் செய்த ஞாபகங்கள் யாவும் அலையா விருந்தாளியாய் எழுந்து அவனது இறுகியிருந்த வதனத்தை இளக வைத்தது...

காலை உணவை உண்டுவிட்டு கையில் ஒரு தண்ணீர் பாட்டிலோடு இங்கு வந்தவன் மதியம் மூன்றரை வரையில் காத்திருந்தும் அப்பெரியவர் வராமல் போகவே வாயில் காற்றைக் குவித்து வெளியேற்றியவாறு அங்கிருந்துக் கிளம்பியிருந்தான்...

இயற்கை எழில் கொஞ்சும் அந்த வனத்தில் புகைப்படம் எடுக்கப்போவதாகப் பொய்யுரைத்து நண்பன் ஒருவனின் உதவியுடன் ஒரு நாளில் குறைவான நேரத்திற்கே வனத்துறையினரிடம்‌ அனுமதி வாங்கியிருந்தான் அவன்...

அவனுக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அங்கு அதிகநேரம் இருப்பதற்கு அனுமதி வாங்கலாம் தான், ஆனால் யாரும் தன்னை வித்தியாசமாகப் பார்த்துவிட்டால் என்ன செய்வதென்று யோசித்தே இப்படி ஒரு ஏற்பாடு...

மகேந்திரன்அபர்ஜித் அங்கிருந்துக் கிளம்பிய வேளையில் அவ்வனத்தின்‌ மற்றொரு கோடியில் தியானத்தில் இருந்து கண்விழித்த பெரியவர், "நீ எம்மை சந்திக்கும் வேளை இன்னும் நெருங்கவில்லை மகேந்திரா..! காலம் கனியும் வரையில் காத்திரு..!" என்று சாந்தமாகப் புன்னகைத்தார்...

தன் பிஎம்டபிள்யூவில் அலுவலகத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தவனுக்கு மகேன் சொல்லியிருந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் சிறிதளவும் உடன்பாடில்லை...

நேற்றிரவு நண்பனோடு நடந்த பேச்சுவார்த்தையை நினைத்துப் பார்த்தான்...

"உனக்கு வேற வழியில்ல தீரா..! நான் சொல்றதுக்கு ஓகே சொல்லு.." என்றதில்,

"ப்ச் யாருக்குடா வழியில்ல? நீ ஒதுங்கிப்போனாலே எல்லாம் சரியாகிடும்..! என் வதனிகிட்ட நான் பேசி சரி பண்ணிக்குவேன்.." என்று எரிந்துவிழ,

"ஹாஹா..! அதுக்கு நான் விடணும்ல தம்பி... நான் சொல்றதக் கேட்டீனா ரெண்டு பேரோட ஆசையும் நிறைவேறும்.. இல்லைனா நீ உன் வதனிய மறந்துட வேண்டியது தான்..." மகேனின் குரலில் நக்கல் வழிந்தோடியது...

அதில் ஆத்திரம் பொங்க, "ஏய்..! தொலச்சுடுவேன் ராஸ்கல்..!" என்று பாய்ந்ததில் வாய்விட்டு சிரித்தவன்,

"உன்னால வற்புறுத்தி அவளக் கல்யாணம் பண்ணிக்க முடியாது தீரா..! நீ சொல்றதுக்கெல்லாம் தலையாட்ட இப்போ அவ உன்னோட முன்ஜென்மத்துக் காதலி இல்ல... வடிவேல் மாமாவோட பொண்ணு..! நிச்சயமா அவர் பேச்ச மீறமாட்டா..!

அப்படியே நீ வம்படியா கல்யாணம் பண்ணாலும் உன்னோட மனசார வாழவும் மாட்டா... நீங்க அப்படி கடமைக்கு வாழ்றத நினைச்சா உங்களோட காதலப் பத்தித் தெரிஞ்ச எனக்கே கஷ்டமா இருக்கு... சோ பெட்டர் நீ நான் சொல்றதுக்கு ஓகே சொல்லு..!" என்று வலியுறுத்த,

"அடேய் நீ பண்ணப்போற வேலைல என் வதனியோட உயிருக்கு எதுவும் ஆபத்து வந்தா நான் என்னடா பண்ணுவேன்.." என்ற தீரனின் குரலில் தெரிந்த கலக்கத்தை உணர்ந்து அவனை இலகுவாக்கும் முயற்சியாக,

"க்ம்ஹூம் அப்படி எதுவும் நடந்தா நீயும் அவளோட சேர்ந்து செத்துடு மச்சான்..! உங்க ரெண்டு பேருக்கும் மறுபிறவி எடுக்குறது தான் சகஜமாச்சே... அதுலயாச்சும் யார் தொந்தரவும் இல்லாம இருக்கணும்னு உன்னோட ஆஸ்தான கடவுளான சிவன்கிட்டயே வேண்டிக்க... ப்ராப்ளம் சால்வ்டு..!" என்று குறும்பாக வம்பு வளர்த்தவன் மட்டும் நேரில் கிடைத்திருந்தால் அவன் சங்கை நெரித்திருப்பான்...

அதன் பின்னரும் தயங்கியவனை பலவாறு முயன்று ஒப்புக்கொள்ள வைத்துவிட்டே ஓய்ந்தான் மகேன்...

இப்போது நினைத்துப் பார்க்கும்போது தான் அவன் சொன்னதை வைத்து முன்ஜென்மத்தில் தான் ஒரு மிகச்சிறந்த சிவபக்தனாக இருந்தது ஞாபகம் வந்தது..!

"ஓ..! யெஸ் ஒரு சிவலிங்கத்துக்கு நிறைய டைம் பூஜை செஞ்ச மாதிரி வந்துச்சுல... அப்புறம் ஏன் எனக்கு இப்போ கடவுள் நம்பிக்கையே இல்ல..!" என்று யோசனை ஓட, ஒருவேளை தங்கள் காதல் நிறைவேறாத கோபத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக மாறிவிட்டதாக தானாகவே ஒரு முடிவுக்கு வந்தவன், அலுவலகம் திரும்புவதற்குள் மாலை நான்கு இருபதுக்கு மேலானது...

தன்னறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தவனின் விழிகள் இரண்டும் தன்னவளைக் காண ஏங்கின..!

"இதே மாதிரி என் வதும்மாவும் என்னையத் தேடியிருப்பாளா? க்ம்ஹூம் வாய்ப்பே இல்ல.." என்று மறுப்பாக தலையசைத்தவனின் சாக்ஸ் அணிந்த பாதத்தில் ஏதோ ஒன்று தட்டுபட, குனிந்து அதை கையில் எடுத்தவனின் முகம் புன்னகையில் மலர்ந்தது...

அது அவன் அவளுக்காக வடிவமைத்த தங்கக்கொலுசு..!

"வாவ்..! மேடம் என்னையத் தேடியிருக்காங்க போலயே.." என்றபடி எழுந்தவன் வேகமாக அவளது அலுவல் அறையை அடைந்து அனுமதிக்காகப் பெயருக்குக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்...

திடீரென்று உள்ளே வந்தவனை சற்றும் எதிர்பாராத மதிவதனி திகைப்பில் எழுந்து நிற்க, "ஹேய் சிட் பேபி..! நான் உன்கிட்ட ஒன்னு கேட்க தான் வந்தேன்.." என்றபடி அவளின் தோளை அழுத்தி மீண்டும் அவளை இருக்கையில் அமர்த்த,

"எ..என்ன?"

"இன்னைக்கு இந்த மாமனப் பார்க்காம நீயும் என்னைய மிஸ் பண்ண தானே?" என்று அவளின் கண்களை ஆழ்ந்துப் பார்க்க,

தன் மனதின் படபடப்பை மறைத்துக்கொண்டு, "நா..நான் எதுக்கு உங்கள மிஸ் பண்ணனும்.. அ..அதோட நீங்க ஒன்னும் எனக்கு மாமன் இல்ல.." என்க,

"ஓ..! சரி மாமன் மகன்னு வச்சுக்கலாம்... அது தானே முறை..! என்றவன், நீ என்னைய மிஸ் பண்ணலைனா இந்த ஒத்த கொலுசு எப்படி என் கேபின்க்கு வந்துச்சு..." அவளிடம் புருவங்களை கேள்வியாக உயர்த்தியபடியே கொலுசின்றி மொட்டையாக இருந்த வலது கணுக்காலை நோக்க,

"அ..அது ஹான்..! உங்க கிட்ட ஒரு ஃபைல்ல சைன் வாங்க வந்தேன்... அப்போ மிஸ்ஸாகிடுச்சு போல.." என்று சமாளித்ததில் சத்தமாக சிரித்தவன்,

"ஹாஹா..! எப்படி, எப்படி? நான் கேபின்ல இல்லைனு அங்க டோர் கிட்ட நின்னுப் பார்த்தாலே தெரியுமே... அப்போ இந்த கொலுசு அங்க தானே இருந்துருக்கணும்...

ஆனா நான் இத என் ரோலிங் சேர் கிட்ட இருந்து எடுத்துட்டு வர்றேன்... ஒருவேள இது அங்கேயிருந்து பறந்து என் சேர் கிட்ட போய் விழுந்துடுச்சோ டி?" என்றதில் அவள் பரிதாபமாக திருதிருத்த அழகில் மனம் மயங்கியவன்,

"சரி சரி ரொம்ப யோசிக்காத..! ஐ'ம் ஜஸ்ட் கிட்டிங்.." என்றபடி அவளுக்கு முன்பாக தரையில் அமர, "அச்சோ சா.சார்..!" என்றவள் பதறியதில்,

"உஷ் கொஞ்ச நேரம் பேசாம இரு டி..! சாரு மோருனு" செல்லமாக கடிந்ததோடு அவளது வலக்காலைப் பற்றி தன் தொடையில் வைத்தவன் அந்த கொலுசை அணிவித்துவிட்டே நிமிர்ந்தான்...

தன் காலடியில் குனிந்தபடி அமர்ந்திருந்த தீரனின் அடர்க்கேசத்தை கோதிவிட எழுந்த உந்துதலில் அரண்டு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவளுக்கு அவனிடம் வெளிப்பட்ட இந்த மென்மை வியப்பளித்தது...

தன்னை அதிசயமாகப் பார்த்தவளின் கன்னத்தில் மெதுவாகத் தட்டி, "இன்னும் ரெண்டு நாள்ல மிஸஸ்.மகேந்திரன் ஆகப்போற... வாழ்த்துகள் பேபி..!" பளீரென்று சிரித்து மீண்டும் அவளை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு வெளியேறியிருந்தான்...

மகேந்திரன்அபர்ஜித்திற்கு அடுத்த நாள் காலை சற்று பதற்றமாகவே விடிந்தது..!

ஏனெனில் அன்று தான் மகேனின் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நாள்..!

காலையில் ஒரு முக்கிய வேலை இருப்பதாகக் கூறி மதிவதனியை சற்று முன்னதாகவே அலுவலகம் வர வைத்தது அவர்களுக்கு சாதகமாக அமைய, மகேன் போட்டு வைத்த திட்டமும் வெற்றிக்கரமாக நிறைவேறியது..!

அங்கிருந்த மருத்துவ அறையில் சற்று தளர்வாக அமர்ந்திருந்த தன் வதனியையும் அவளுக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த மகேனையும் வெறித்தபடி உள்ளே நுழைந்தவன், "அதியன் வந்தாச்சு, நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுடா..! நா..நாளைக்கும் வர வேணாம்.. அப்புறம் பார்ப்போம்..." என்றதற்கு அவள் சம்மதமாகத் தலையசைத்து வெளியேற, அவளுக்குத் துணையாக வாசல் வரை வந்து நின்றான்...

தங்கை காரில் ஏறியதும் ஓட்டுநர் இருக்கையில் அமரப்போன அதியனின் கரம் பிடித்து சற்று தள்ளி அழைத்து வந்த தீரன், "அ..அவள கொஞ்சம் நல்லா பார்த்துக்கோ ம..மச்சான்" என்றதில் திகைத்தவன் வார்த்தை வராமல் தடுமாறி,

'என்னடா இது..! என்னைக்கும் இல்லாம இந்த எலி வித்தவுட்ல ஓடுது' மனதில் நினைத்தபடி, "ஆ.. ஹான்.. கண்டிப்பா..!" என்று பலமாக தலையை உருட்டிவிட்டு காரில் ஏறிக்கொண்டான்...

ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன்னை நோக்கி வந்த நண்பனிடம், "என்னடா ஆல் ஓவரா?" என்று மகேன் கேட்க, அவனை தீயாய் முறைத்தபடி,

"அவளுக்கு மட்டும் எதாவது ஆகியிருக்கணும் எங்களுக்கு முன்னாடி நீ சொர்க்கத்துக்குப் போயிருப்ப..!" என்று கோபமாகப் பல்லைக்கடிக்க,

"அடேய் போதும்டா..! அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதே.. இன்னும் எதுக்கு தாம்தூம்னு குதிக்கிற? இனி நம்மளோட ஃபைனல் பெர்ஃபாமென்ஸ் மட்டும் தான் இருக்கு... அதோட உன் வதனி உனக்கு..! என் மதி எனக்கு..! சியர்அப் மேன்..." என்றவன் ஆற்றுப்படுத்தியதும் நண்பர்கள் இருவரும் தத்தமது வீடுகளை அடைந்தனர்...

அன்றிரவு ஆழ்ந்து உறங்கிய தீரனுக்கு அவர்களின் முன்ஜென்ம நினைவுகள் முழுவதுமாக மீண்டதில் தன்னை சமாளிக்க முடியாமல் திணறிப்போனான்...

தருமனின் பிடியிலிருந்து அதியன் நெடுமாறனை மீட்டது, தன் வதனியை முறைப்படி மணம் செய்தது, அவளைக் கொஞ்சியது என்று நீண்ட அவனின் கனவு இறுதியில் தங்கள் இருவருக்கும் நேர்ந்த அனர்த்தத்தில் வந்து முடிந்ததில் அவனது விழிகள் இரண்டும் ரத்தமாக சிவந்திருந்தன...

அதிகாலையில் மகேனுக்கு அழைத்தவன் தன்னால் இன்று அலுவலகம் வரமுடியாது என்பதைத் தெரிவித்ததோடு படுக்கையில் விழுந்தான்...

கனவில் கண்டதை ஜீரணித்து, மீண்டும் காதலுடன் கைக்கோர்க்கவே தாங்கள் இருவரும் இப்பிறவி எடுத்திருப்பதை நம்புவதற்கு அவனுக்கு அந்த நாள் முழுவதும் தேவையாய் இருந்தது...

அன்றைய தினம் அப்படியே கடந்து செல்ல, அடுத்த நாள் வழக்கம் போல கீழ்வானில் தன் மஞ்சள் ஒளியை பாய்ச்சியபடியே சூரியபகவான் எழுந்து கொண்டிருந்தார்..!

மகிழ்ச்சியின் ஆரவாரத்துடன் துவங்கிய அந்நாள் பலவித உணர்வுப்பூர்வமான தருணங்களோடு முடிவடையும் என்பதை தந்தையர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை...

ஏனெனில் மகேனிற்கும் மதிவதனிக்கும் நிச்சயம் செய்வதை அன்றைய சிறப்பாக அவர்கள் நினைத்திருக்க, தன் வதனியின் சங்குக்கழுத்தில் மங்கள நாண் பூட்டி அவளை தனது சரிபாதியாக்கி இருந்தான் மகேந்திரன் அபர்ஜித்...!!!


தொடரும்......
 
Last edited by a moderator:

Gowri Karthikeyan

Well-known member
ஓ நோ.....முன்னாடி ரெண்டு பேரும் சேர்ந்து அப்பறம் என்ன ஆச்சி🥺🥺🥺🥺🥺
அந்த தருமன் தான் காரணமா???
இப்ப அவனும் பிறந்து இருக்கானா????
மகேன் ஓட மதி யாரு டா????
தாலியே கட்டிடானா
 
ஓ நோ.....முன்னாடி ரெண்டு பேரும் சேர்ந்து அப்பறம் என்ன ஆச்சி🥺🥺🥺🥺🥺
அந்த தருமன் தான் காரணமா???
இப்ப அவனும் பிறந்து இருக்கானா????
மகேன் ஓட மதி யாரு டா????
தாலியே கட்டிடானா
ஆமா சிஸ் அப்புறம் வில்லன் இல்லாம இருந்தா நல்லா இருக்குமா😉 அந்த மதி அவன் மாமா பொண்ணு😍😍
 
Top Bottom