• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியிவள் - 4

நிதனிபிரபு

Administrator
Staff member
மகேந்திரனின் மதிவதனியிவள் - 4


தன்னுடைய அலுவலக அறைக்குள் நுழைந்த தீரன் ரோலிங் சேரில் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்...



மதிவதனி இங்கு வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்தில் அவளைப் பற்றி பெரிதாக எவ்வித நல்அபிப்பிராயமும் அவனுக்கு ஏற்பட்டதில்லை... இன்னும் சொல்லப்போனால் அவள் உருவாக்கும் அழகிய வடிவமைப்புகளின் மீதே சந்தேகப்பட்டிருக்கிறான்...



அதுவும் சில மாதங்களாக மகேந்திரனிடம் சிரித்துப் பேசி அவனது கற்பனையில் உருவான வடிவமைப்புகளை தன்னுடையதாகக் காட்டிக் கொள்கிறாளோ என்ற எண்ணம் தான் தீரனிற்கு..!



இவன் அழைப்பதாக வந்த தகவலில் அதிர்ந்த மதி, 'ரைட்டு சைத்தான் சைக்கிள்ல ஏறிடுச்சு... ஆனா மணி இன்னும் ஒன்பதாகலயே.. அதுக்குள்ள வர சொல்லியிருக்கே... என்னவா இருக்கும்?..' என்ற புலம்பலுடன் மகேந்திரனிடம் விடைப்பெற்று தீரனின் அறை வாசல் வரை வந்தவள் அவனின் அனுமதிக்காக கதவை மெதுவாகத் தட்டினாள்...



அவன் வழக்கம் போல சில நிமிடங்கள் காக்க வைக்கப் போகிறான் என்று அவள் நினைத்ததற்கு மாறாக, "யெஸ் கம் இன்.." என உடனே அனுமதிக் கிடைத்ததில் அதிசயத்தபடி உள்ளே நுழைந்தவள், "குட் மார்னிங் சார்.." என்றாள் பணிவான குரலில்..‌.



"மார்னிங்.. சிட் மிஸ்.மதிவதனி..." என்று அவளை அமருமாறு பணித்தவன், "இன்னைக்கு லெவன் ஓ கிளாக் அந்த யாத்ரா ஜூவல்வர்ஸோட நமக்கு மீட்டிங் இருக்கது ஞாபகம் இருக்கா?.." என்றான் அவள் கண்களை ஊடுருவும் பார்வைப் பார்த்தபடி...



'என்னடா இந்த முனீஸ் திட்டும்னு நினைச்சு வந்தா, என்னைக்கும் இல்லாத மாதிரி இப்படிப் பார்க்குது.. ஆத்தாடி கண்ணுல ஃபயர் விட்றது இது தானா..! அவ்வ்..' என்று மனதோடு பேசிக்கொண்டே அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் அவனின் இடைவிடாதப் பார்வையில், "சார்..." என்று திகைக்க,



"புலம்பி முடிச்சாச்சுனா நான் கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லலாம்ல.." என்றான் நக்கலாக..



'ஆத்தி இந்த நெட்டையன் என்னக் கேட்டான்?..' என்று சில நொடிகள் திருதிருத்தவள், அவளின் அறிவு அதை ஞாபகப்படுத்தியதில், "ஹான் ஞாபகம் இருக்கு சார்... அதுக்கு நீங்க கேட்ட மாதிரியே டிசைன்ஸ் ரெடி பண்ணி உங்க மெயிலுக்கு காலைலயே அனுப்பிட்டேன்..." என பதிலளிக்க,



"ஒகே ஃபைன்.. வெயிட் எ மினிட்.. செக் பண்ணிட்டு சொல்றேன்..." என்றுவிட்டு அவளிடமிருந்து வந்த மெயிலைத் திறந்து அவள் வரைந்து அனுப்பியிருந்த வடிவமைப்புகளைக் கண்டவன், அவற்றின் தனித்துவமான அழகிலும், நுணுக்கமான வேலைப்பாட்டிலும் மயங்கி திறந்த விழி மூடாமல் அமர்ந்திருந்தான்...



"இந்த அரலூசுக்கு இவ்ளோ திறமையா? நோ.. நோ.. இதையும் கண்டிப்பா மகேன்கிட்ட இருந்து தான் வாங்கியிருப்பா.." என்ற முணுமுணுப்புடன்,



"வெல் இது எல்லாத்தையும் நீங்க தான் டிசைன் பண்ணீங்களா மதிவதனி?..." என்று சந்தேகமாகக் கேட்க,



'இவன் ஒருத்தன்..! நான் என்ன டிசைன் அனுப்புனாலும் நொட்டு சொல்லிக்கிட்டு..!..' என்றவனை வறுத்து எடுத்தவள், "நான் தான் சார் பண்ணேன்.." என்றாள் அமைதியாக..



"ஓ அப்படியா..! அப்படினா இதுல இருக்க அந்த சிக்ஸ்த் டிசைன ஒரு தடவப் பார்த்துட்டு இப்போ இங்கயே வரைஞ்சுக் காட்டுங்கப் பார்ப்போம்.." என சவால் விட்டதில் கடுப்பானப் பெண்ணவள்,



"அவ்ளோ தானே சார்.. நான் வரைஞ்சுக் காட்றேன்... நீங்க உங்க லேப்டாப் தரீங்களா? இல்ல நான் என்னோட லேப்டாப்ப எடுத்துட்டு வரட்டுமா?..." என்றாள்..



'அட உன் லேப்டாப் வச்சு எதுவும் கோல்மால் பண்ணலாம்னு பார்க்குறியா... அது இன்னைக்கு நடக்காது டி..' என்று கறுவியபடி தன்னுடைய லேப்டாப்பைத் திறந்து அவளுக்கு முன்பாக நகட்டி வைத்தான்...



அவனை மனதில் வறுத்து தாளித்துக் கொண்டே அதனைத் தன் பக்கமாக இழுத்தவளுக்கு அதன் முகப்புப் படத்தைப் பார்த்ததும் அத்தனை நேரமிருந்த இறுக்கம் தளர்ந்தது...



அது தீரன் அபர்ஜித்துடைய பெற்றோரின் புகைப்படம்..!



'க்ஹூம் எப்படி தான் அவ்ளோ நல்ல மாமா அத்தைக்கு இப்படிப்பட்ட நான்சென்ஸ் வந்துப் பிள்ளையாப் பிறந்தானோ..!' என்ற அங்கலாய்ப்புடன் அந்த டிசைனை ஒருமுறைப் பார்த்துவிட்டு வரையத் தொடங்கினாள்...



அவள் திறமை மீது நம்பிக்கையில்லாத தீரனும் அவளுக்கருகில் அமர்ந்து அவள் செய்வதை வேடிக்கைப் பார்த்தபடி, அன்றைய மீட்டிங்கிற்குத் தேவையானவற்றை சரிபார்த்துக் கொண்டிருந்தான்...



சரியாக ஒன்றரை மணி நேரத்தில் அவன் குறிப்பிட்ட அந்த டிசைனை வரைந்து முடித்த மதி, "இது கரெக்ட்டா இருக்கானு பார்த்துக்கோங்க சார்.." என்றபடி அவன் லேப்டாப்பை அவனிடம் ஒப்படைத்துவிட்டு எழுந்தவள் தனக்கு முன்னால் இருந்தவற்றை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்...



அவள் கச்சிதமாக வரைந்திருந்ததை எண்ணி வியந்தவன், "அதெல்லாம் உங்களுக்கு தான் கொண்டு வர சொன்னேன் மிஸ்... காஃபி ஆறிப் போயிருக்கும் பட் யூ கேன் டேக் தி ஜூஸ்.." என்றான் எதுவுமே நடவாததைப் போல..!



அங்கு அவள் குடிப்பதற்கு தண்ணீர், காஃபி, பழச்சாறு என்று வரிசையாக மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது...



அலுவலக கேன்டீனில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இவற்றைக் கொண்டு வந்தது அவளுக்கும் தெரியும்... ஆனால் தன் திறமையை நம்பாமல் அவமானப்படுத்திய அவனின் இந்த போலியான கரிசனம் அவளுக்குத் தேவைப்படவில்லை..!



உள்ளெழுந்த ஆத்திரத்தை அடக்கியதில் முகம் சிவக்க நின்றவள், "நோ தேங்க் யூ சார்... நீங்க செக் பண்ணி சொல்லிட்டா நான் கிளம்புவேன்..." என்றாள் வேலையில் கண்ணாக...



"ஓகே யுவர் விஷ்... வெயிட் பண்ணுங்க சொல்றேன்.." என்றவாறு இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தவனுக்கு அவள் முன்பு வரைந்ததை விடவும் இது நேர்த்தியாகத் தெரிந்ததில் விழிகளில் வியப்பு மின்ன, "அமேஸிங்... அந்த டிசைன்க்கு பதிலா இதையே வைக்கலாம் போல..." என்று அவளைப் பாராட்டினான்...



அவன் பாராட்டும் அவளுக்கு ரசிக்கவில்லை..!



தன்னை தேவையின்றி ஒன்றரை மணி நேரம் வேலை வாங்கியக் கடுப்பில், "ம்ம் தேங்க் யூ சார்... அப்போ நான் கிளம்பட்டுமா?" என்று பல்லைக் கடித்தபடி அனுமதிக் கேட்க,



"எஸ் நீங்க போகலாம்... பட் ஷார்ப்லி அட் லெவன் ஓ கிளாக் கான்ஃப்ரன்ஸ் ஹால்க்கு வந்துடுங்க..." என்றதும் சம்மதமாக தலையசைத்து அங்கிருந்து விலகி நடந்தவள், மீண்டும் அவன் முன்பாக வந்து நின்றாள்...



அவளைக் கேள்வியாக ஏறிட்டவனின் கண்களை ஆழ்ந்துப் பார்த்து, "நான் இந்த ஆஃபீஸ்க்கு வந்த முதல் நாள் நடந்தத நீங்க இன்னும் மறக்கலைனு நினைக்கிறேன் சார்... அது ஆக்சிடென்டா நடந்தது... எனக்கு அந்த மாதிரி அசிங்கமான நோக்கம் எதுவும் இல்ல... ஸோ ப்ளீஸ், இது மாதிரி எனக்கு டெஸ்ட் வைக்கிறேன்னு ரெண்டு பேரோட நேரத்தையும் வீணாக்காதீங்க... நான் வர்றேன்.." என்றவள், திகைத்த முகமாக எழுந்து நின்றவனைத் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள்...



மதிவதனி அவன் மனதில் இருப்பதைக் கண்டுகொண்டதில், "டேமிட்.." என்று மேஜையில் தட்டியவன், அவள் குறிப்பிட்ட அந்நாளில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்...



அன்று ஒரு திங்கட்கிழமை...



வழக்கம் போல எட்டு மணிக்கு வீட்டிலிருந்து அலுவலகம் செல்வதற்காகக் கிளம்பிய மகனிடம் வந்த ராமச்சந்திரன், "நம்ம கம்பெனிக்கு சீஃப் டிசைனர் வேணும்னு கேட்ருந்தீல கண்ணா..! இந்த பொண்ண தான் நானும் தர்மாவும் இன்டர்வியூ வச்சு செலக்ட் பண்ணிருக்கோம்... எங்க ஃப்ரெண்டோட பொண்ணு தான்... நீயும் ஒரு தடவ பார்த்துக்க.." என்றபடி மதிவதனியைப் பற்றிய தகவல் அடங்கியக் கோப்பை அவன் கையில் கொடுத்தார்...



அதைத் திறந்தப் பார்த்தவனின் விழிகளில் விழுந்தாள், துலக்கி வைத்த குத்துவிளக்காக பளிச்சென்ற தோற்றத்தில் இருந்த மதிவதனி...



அடர்சிவப்பு நிற பருத்திப்புடவைக் கட்டியிருந்தவளின் மீன் விழிகளில் அடக்க முடியாத புன்னகை மின்னியது..!



மதியின் பேரழகு தன்னை ஈர்ப்பதாக நினைத்தவன் தலையை உலுக்கி நிதானித்து அவளைப் பற்றிய மற்ற தகவல்களில் கண்களை ஓட்டினான்...



சிபாரிசில் வேலை வாங்கியதைத் தவிர்த்துக் குறையாக எதுவும் தெரியவில்லை..!



எனினும் தன் திறமையை நம்பாமல் அவள் தந்தையின் நண்பர் மூலமாக வேலைக்கு சேர்வதாக எண்ணியதால் அவளை சேர்த்துக் கொள்வதிலும் அவனுக்கு விருப்பமில்லை...



ஆனால் தந்தையும், அவன் பெரிதும் மதிக்கும் தர்மா பெரியப்பாவும் தேர்ந்தெடுத்தப் பிறகு அவளை எப்படி மறுப்பது?



"இந்த காலத்து மாடர்ன் பொண்ணுங்களுக்கு மேக்கப் போடவே நேரம் பத்தாது... இவளப் பார்த்தாலும் அப்படி தான் தோணுது... எத்தன நாள் என்கிட்ட தாக்குப் பிடிக்கிறானுப் பார்ப்போம்..!" என்ற முணுமுணுப்போடு,



"நீங்களும் பெரியப்பாவும் செலக்ட் பண்ணா சரி தான்ப்பா.." என்றான் தந்தையிடம் சம்மதமாக தலையசைத்து...



மதிவதனியும் அன்று முதல் நாள் அலுவலகம் செல்வதால் அடர்பச்சையில் ஆங்காங்கே சிறு தங்கநிற வேலைபாடுகள் அமைந்த புடவையில் அழகாகக் கிளம்பி வந்தவள், "டேய் அண்ணா..! நான் நல்லா இருக்கேனா?.." என்று வினவ,



"என் தங்கத்துக்கு என்ன குறைச்சல்... நீ எப்போதும் அழகு தான்டா.." என்று தங்கையின் அழகைப் பாராட்டிய அதியன், "நான் நேத்து வாங்கிட்டு வந்த ஹீல்ஸ் செருப்பப் போட்டு போ பாப்பா... இன்னும் நல்லா இருக்கும்.." என்றதை ஏற்று அதை அணிந்துக் கொண்டு அலுவலகம் வந்திருந்தாள்...



தமையனோடு காரில் அமர்ந்து வரும் வரையில் எந்த வேறுபாடும் தெரியாத மதிக்கு, அந்த காலணியோடு இறங்கி நடந்தபோது சற்று சிரமமாக இருந்தது...



அவள் பணிபுரிய வேண்டிய பகுதி முதல் மாடியில் இருப்பதை வரவேற்பறையில் நின்ற பெண்ணிடம் கேட்டறிந்து அங்கு விரைந்தவள், "வாவ் வந்தன்னைக்கே இப்படி ஒரு ஸ்மார்டியப் பார்த்துட்டனே..! அடியே மதி, இங்க உனக்கு ஒரு க்ரஷ் கிடைச்சிட்டான் டி.." என்று குதூகலம் பொங்க, அந்த நீண்ட பாதையில் தனக்கு எதிராக நடந்து வந்த தீரனின் அழகை ரசித்தபடித் தட்டுத்தடுமாறி நடந்துக் கொண்டிருந்தாள்...



அப்போது பக்கவாட்டில் இடிப்பது போல் ஒருவன் வந்ததில் சட்டென சுதாரித்து, சுவர் ஓரமாக ஒதுங்க முயன்று தீரனை மோதும் அளவிற்கு நெருங்கிச் சென்றவள் நொடியில் உள்ளங்கையை சுவற்றில் ஊன்றி அதைத் தவிர்ந்திருந்தாள்...



"ஓ காட்.. சாரி சார்... திடீர்னு சைடுல ஒருத்தவங்க வந்ததுல ஸ்லிப்பாகிட்டேன்..." என்றபடி நிமிர்ந்தவள் அவன் முறைத்ததில் திகைத்து,



"சா.. சார்.." என்றாள் புரியாதவளாக...



காலையில் அவள் புகைப்படத்தைப் பார்த்ததில் இருந்தே தடம்புரண்டு ஓடும் புகையிரதமாக தடுமாறிய தன் மனதின் மீதெழுந்த ஆத்திரத்தில், "ஆஹான் டிராமா பிரமாதம்..! இத வேற யார்ட்டயாது முயற்சிப் பண்ணு... என்கிட்ட வேணாம்..." என்று நக்கலடிக்க,



அவனைப் புரியாமல் பார்த்த மதி, "நீங்க சொல்றது எனக்குப் புரியல சார்...‌ என்ன டிராமா?..." என்றாள்..



"இந்த நடிப்பும் நல்லா இருக்கு... ஆனா என்கிட்ட இதுவும் வேலைக்கு ஆகாதுமா.." என்று மேலும் அவமானப்படுத்த,



"ஹலோ சார்.. சம்பந்தமே இல்லாம பேசிட்டு இருக்கீங்களே, யார் நீங்க?" என்றவளுக்கு சுருசுருவென்று கோபம் பொங்கியது...



"இங்கப்பாரு.. உன்ன மாதிரி நிறையப் பொண்ணுங்களப் பார்த்துட்டு தான் வந்துருக்கேன்... இப்படி பணக்காரப் பசங்க மேல மோதுற மாதிரி வர்றது, அப்படியே சிரிச்சுப் பேசி நம்பர் வாங்கி, கல்யாணம் வரைக்கும் கொண்டு வரலாம்னு தானே இந்த டிராமா எல்லாம்... ஐ'ம் நாட் இன்ட்ரஸ்டட் கேர்ள்... வெரி சாரி..‌" என்றவன் தெளிவாக விளக்கியதில் அதிர்ந்தவளாக அப்படியே நின்றுவிட்டாள்...



கல்லூரியில் படித்தபோது தன்னைக் காதலிப்பதாகப் பின்னால் சுற்றிய ஆண்களிடம் கூட தன் வீட்டினர் முடிவு செய்யும் நபரைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று நாகரிமாக மறுத்தவளை என்ன வார்த்தை சொல்லிவிட்டான்..!



முதல்முறையாகப் பார்க்கும் ஒரு பெண்ணை இத்தனை தரம் தாழ்த்தி ஒருவனால் பேச முடியுமா என்ற திகைப்பு மறையாமல் மதி ஸ்தம்பித்து நின்றது சில நொடிகளே...



சட்டென்று அவளின் இயல்பான துடுக்குத்தனம் தலைத்தூக்க, "அடடா ரொம்ப சரியாக் கண்டுபிடிச்சு சொல்லிட்டீங்களே சார்..! இப்போ நான் எப்படி உங்கள கரெக்ட் பண்றது? அது முடியாதுல்ல..! சரி நீங்க சொன்ன மாதிரியே வேற யார்கிட்டயாச்சும் முயற்சிப் பண்ணிக்கிறேன்... இப்படி ஒரு அருமையான ஐடியா கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார்..." என்று பதிலுக்கு நக்கலடித்தவள் அவன் அதிர்ந்து நின்றதைக் கவனியாமல் கடந்து சென்றிருந்தாள்...



அதில் மேலும் வெகுண்டெழுந்து, "ஆஃப்ட்டர்ஆல் ரெக்கமன்டேஷன்ல வந்த உனக்கு இவ்ளோ திமிரா டி? அது இருக்கவே கூடாது... என்கிட்ட தானே ரிப்போர்ட்ட் பண்ண வருவ... அப்போ பார்த்துக்குறேன்.." என்று கறுவியபடி தன் அறைக்கு வந்தவனின் நினைப்பில் மண் விழுந்தது..!



ஏனெனில் மாலை அலுவலகம் வந்த பெரியவர்கள் இருவரும் அவள் மகேந்திரனிற்கு கீழ் பணிபுரியப் போவதாக அறிவித்தனர்....



அதில் அவள் மீது மேலும் வஞ்சத்தை வளர்த்துக் கொண்ட தீரன், இம்மாதிரியான முக்கிய நிறுவனங்களின் சந்திப்பு நடக்கும் நாட்களில் வேண்டுமென்றே அவளை வைத்து செய்துவிடுவான்...



ஏனோ அன்றிலிருந்து இன்றுவரை இருவருக்கும் இடையே கண்ணிற்குத் தெரியாமல் ஒரு பனிப்போர் நடந்துக் கொண்டிருக்கிறது..!



இதில் அடிக்கடி அவளைத் திறமையில்லாதவளாக நினைத்து இப்படி எதாவது வம்பு வளர்ப்பவனை, இன்று விடக்கூடாது என நினைத்து தான் முகத்திற்கு நேராகத் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்திருந்தாள்...



இதற்கு மேல் அவளிடம் வம்பு செய்தால் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றுமல்லவா..!



தீரனால் உண்டான கடுப்போடு கேன்டீன் சென்று ஒரு தேநீர் அருந்திவிட்டு தன் கேபினில் வந்து அமர்ந்தவளுக்கு முன்னால் ஒரு ஆரஞ்சு பழச்சாறு அடங்கிய கண்ணாடி டம்ளரை வைத்த மகேந்திரன், "ஹாய் வதனி, என்ன நம்மாளு எப்போவும் போல டென்ஷன் பண்ணிட்டானா? சரி இந்த ஜூஸ்ஸ குடிச்சிட்டு தெம்பா மீட்டிங்க்கு வந்து சேரும்மா..." என்றவனின் ஆறுதல் பேச்சில் முகம் மலர்ந்து,



"தேங்க் யூ மகேன் சார்..." என்றபடி அதை எடுத்துப் பருகினாள்...



அப்போது அவள் ஆரஞ்சு பழச்சாறு அருந்துவதற்காக தான் கேன்டீன் சென்றது, அங்கே அது தீர்ந்துவிட்டதாக சொல்லவும் தான் தேநீரை அருந்திவிட்டு வந்தாள்... இப்போது அவள் கையில் இருப்பது அவனுக்காக பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டது என்பது அவளுக்கு நன்றாகப் புரிந்தது...



மகேந்திரன் எப்போதும் இப்படிதான்..! பழகுவதற்கு இனிமையானவன்..!



'க்கூம்‌ இந்த சார் எப்படி தான் அவனோட ஃப்ரெண்டா இருக்காரோ..! அந்த முனீஸ்வரனுக்கும் இவருக்கும் ஏணி வச்சாலும் எட்டாதே..' என்று நினைத்தபடியே பழச்சாற்றைக் குடித்து முடித்தவள், "ஐம் ஃபீலிங் பெட்டர் சார்... ஒன்ஸ் அகைன் தேங்க் யூ.." என்று அவனைப் பார்த்து இதழ் பிரியாமல் முறுவலித்தாள்...



அவள் நீள விழிகளை நேராகப் பார்த்து, "அட இன்னும் என்னடா சார்? அதான் வடிவேல் மாமாகிட்ட ஓகே சொல்லிட்டியே... ஜஸ்ட் மகேன்னு கூப்பிடலாம்ல.." என்று வினவ,



அதில் லேசாக நெஞ்சம் படபடக்க, "அ.. அது இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் சார்... இப்போ உடனே வராது..." என்றதும், "ஓகேடா யுவர் விஷ்.." என்றுவிட்டு எழுந்து சென்றான்...



அவர்களின் உரையாடல் நண்பனைத் தேடி வந்த தீரனின் காதில் தெளிவாக விழவில்லை என்றாலும், இருவரின் மலர்ந்த வதனங்களே அவன் நெஞ்சில் தீப்பற்றி எரிய போதுமானதாக இருந்தது..!



தொடரும்...
 
Top Bottom