இன்னும் தொழிலில் கால் ஊன்றாமல், முக்கியமாக நாவினியோடு மனம் விட்டுக் கதைக்காமல், அவள் வீட்டினரோடு பேசாமல் அவனால் அவன் காதலை அவன் வீட்டிலோ மயூரன் வீட்டிலோ சொல்ல முடியவில்லை.
குறைந்தபட்சமாக அவனைப் போலவே நாவினியும் அவர்கள் நேசத்தில் உறுதியாக இருக்கிறாள் என்று தெரிந்திருந்தாலாவது துணிந்து வெளிப்படுத்தியிருப்பான். இது என்னை நேசிக்கிறாள் என்று எண்ணிக்கொண்டிருந்த பெண் இன்று சொல்லாமல் கொள்ளாமல் கைவிட்டுவிட்டாள் என்று சொல்வதை அவமானமாக உணர்ந்தான். அதைவிட அவனை முற்றிலுமாக ஒதுக்கிவைத்திருக்கும் ஒருத்தியை மறக்க முடியாமல் திருமணத்திற்கு மறுக்கிறேன் என்று சொல்வதை அவமானமாக உணர்ந்தான்.
உண்மையில் நாவினியின் இந்தப் புறக்கணிப்பைத் தன் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் விழுந்த மிகப்பெரிய அடியாக நினைத்தான் கேசிகன்.
ஆனால், அவனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்த பிரேமாவுக்கு நிறைமொழியைக் கட்டிவைத்தால் மகன் இதே ஊரிலேயே இருந்துவிடுவான் என்கிற எண்ணம். அதில் அவரும் விடாமல் அவளைக் கட்டு என்று அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்.
இது எல்லாவற்றையும் விட மயூரன் வீட்டினரை எதிர்கொள்வதுதான் அவனுக்குப் பெரும் பிரச்சனையாக இருந்தது. இரு தரப்பும் வேறு வேறு ஊராக இருந்திருந்தால் கூட வேறு. ஒரே ஊர். மிக நன்றாகப் பழகுகிற இரண்டு குடும்பங்கள். அடிக்கடி மயூரன் வீட்டினரைச் சந்திக்கும் நிலையைத் தவிர்க்க முடியாது. அவர்களின் எதிர்பார்ப்பான பார்வைகளை ஒரு அளவு தாண்டி ஒதுக்கவும் முடியவில்லை.
அப்போதெல்லாம் அவர்கள் முகம் பார்க்கவே பெரும் சங்கடப்பட்டுப்போவான். முறையான காரணங்களைச் சொல்லி மறுத்திருந்தால் கூட வேறாயிற்றே. “என்ர மகளைப் பிடிக்கேல்லையா ஐயா? எங்களுக்குப் பெரிய வசதி இல்லையப்பு. நீங்க எண்டா பயப்பிடாம தரலாம். மகளும் நல்லாருப்பா எண்டு நினைச்சம்.” என்று அவன் முகம் பார்த்து மயூரனின் தந்தை சொன்னது அவனைப் பெரும் சங்கடத்தில் ஆழ்த்திற்று.
—-------------------
மாதவனின் உதவியோடு ஒரு குடும்பத்தை அவள் வீட்டில் வாடகைக்கு இருப்பதற்குப் பேசி முடித்தாள். முறைப்படி வழக்கறிஞரை வைத்து எழுதி, அவர்களுக்குக் கீழ்ப் பகுதியை வசதி செய்து கொடுத்தாள். மாடியைத் தனக்கு என்று வைத்துக்கொண்டாள்.
அவள் போன பிறகு மாடியை வாரம் ஒரு முறை துப்பரவு செய்வதுபோல் ஒருவரை நியமித்தாள். வீடு, காணி எங்கும் கமரா பூட்டி, தன் கைப்பேசியில் பார்ப்பதுபோல் செய்தாள்.
வங்கிக் கணக்கு ஒன்றினைத் திறந்து, அதை அவள் அங்கிருந்தே கவனிப்பதுபோல் மாற்றி, வாடகைப் பணத்தைப் போடச் சொன்னாள்.
இதெல்லாம் கேசிகனின் காதுக்கு வந்துகொண்டுதான் இருந்தது. அன்று தந்தையோடு அவன் மாமா வீட்டுக்கு வந்து உதவி கேட்டவள், இன்று அவன் ஒருவனும் அதே ஊரில்தான் இருக்கிறான் என்கிற நினைப்பே இல்லாமல் அத்தனை வேலைகளையும் தானே பார்த்தாள்.
ஒருமுறை எதேற்சையாக அவளை வீதியில் வைத்துக் கண்டபோது, என்ன உதவி என்றாலும் தயங்காது கேட்கச் சொன்னான். சிறு முறுவலோடு சரி என்பதுபோல் தலையசைத்தாளே தவிர்த்து அவனிடம் ஒன்றுக்கும் வரவில்லை.
போனமுறை தந்தை உதவிக்காக ஒவ்வொருவரையும் அணுகியதையும், அவர்கள் எல்லோரும் நாசுக்காக மறுத்ததையும் பக்கத்தில் நின்றே பார்த்தவளாயிற்றே.
இங்கிருக்கிற யாரிடமும் உதவி என்று சென்று நின்றுவிடக் கூடாது என்று முன்கூட்டியே யோசித்து, அங்கிருந்து வரும்போதே அத்தனை ஆயத்தங்களோடுதான் வந்தாள்.
அவளைப் பிள்ளையாகத் தாங்கும் குடும்பம் அத்தனைக்கும் ஏற்பாடு செய்துகொடுக்க, அனைத்தையும் கச்சிதமாகச் செய்து முடித்திருந்தாள். இனி அவள் புறப்பட வேண்டும். இங்குச் செய்ய வேண்டிய அனைத்து அலுவல்களும் முடிந்திருந்தன.
கூட ஒரு குடும்பம் அவளுக்குத் துணையாக இருப்பதில் மாதவனும் வைதேகியும் பருத்தித்துறைக்குப் புறப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு இவளை விட்டுவிட்டுப் போக மனமில்லை. இவள்தான் இனிப் பயமில்லை என்று சொல்லி அனுப்பியிருந்தாள். அவர்கள் அவளுக்குச் செய்தவை மிகப்பெரிய உதவிகள். அப்படியிருக்க இன்னுமின்னும் சிரமம் கொடுப்பது அழகில்லையே.
பிரேமா அடிக்கடி அவளுக்கு எதையாவது செய்து, கொண்டு சென்று கொடுப்பதைக் கேசிகன் அறிவான். எத்தனையோ முறை வீட்டுக்கு வரும்படி அழைத்து அவள் வரவில்லையாம் என்று அவர் குறை படுவதும் தெரியும்.
அவனுக்குத்தான் அவளோடு பேசவோ அவளைப் பார்க்கவோ எந்தக் காரணங்களும் இல்லை. அதுகூட விசித்திரமாக இருந்தது. ஒரு காலத்தில் அத்தனைக்கும் அவனிடமே ஓடிவந்த பெண், இன்று அவனை எதற்கும் தேடவில்லை.
—-----------------------------------------------
“நவி நில்லு! ஓட்டோ கூப்பிடுறன்.”
“இல்ல வேண்டாம். வெய்யிலும் நல்லா குறஞ்சிட்டுது. நான் நடந்தே போறன்.” என்றுவிட்டுத் திரும்பவும் நடக்க ஆரம்பித்தாள் அவள்.
போகிறவளையே ஒரு கணம் பார்த்துவிட்டு, “நில்லு, நானும் வாறன்!” என்று ஓடி வந்தவனைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்து நின்றுவிட்டாள்.
முன்னரும் இப்படித்தான். இலேசாக இருள் படிந்துவிட்டாலும் அவளோடு வந்து, அவளை விட்டுவிட்டுத்தான் திரும்புவான். அப்போது இருவர் வீடுகளுக்கு இடையிலான தூரம் என்னவோ நான்கே நான்கு வீடுகள்தான். இப்போது அவர்களுக்குள் இருப்பது இருவரும் சேர்ந்து கடக்கவே முடியாத அளவிலான தூரம். அப்படியிருக்க இவன் எதுவரை வரப்போகிறானாம்?
“அது நானே போவன்.” என்றாள் திணறி.
அவளையே பார்த்தான் அவன்.
“இல்ல, இன்னும் இருட்டேல்லையே. அதான்.”
“பரவாயில்ல, நட!”
வேறு வழியற்று அவனுடன் சேர்ந்து நடந்தாள் நாவினி.
“இஞ்ச இருந்து எப்ப வெளிக்கிடுறாய்?”
“நாளைக்கு விடிய வெள்ளனவே.”
“ஓ! ஆனா நாளைக்கு இரவுதானே ஃபிளைட்.”
“ஓம், ஆனா பருத்தித்துறை போயிட்டுத்தான் கொழும்பு போகோணும்.”
“எயாபோர்ட் எப்பிடிப் போறாய்?”
“மாதவன் அங்கிள் கூட்டிக்கொண்டு போய் விடுவார்.”
“வேற ஏதும் ஹெல்ப் வேணுமெண்டா கேளு. யோசிக்காத.”
ஒட்டவைத்த முறுவல் ஒன்றுடன் சரி என்று தலையசைத்தாள்.
அதற்குமேல் அவர்களுக்குள் பேச்சுத் தடைப்பட்டுப் போயிற்று. உள்ளங்கள் மட்டும் பெரும் சத்தமாக இரைச்சலிட்டன.
தன் முடிவுகளில் ஏதும் தவறு இருக்கிறதா என்று கேட்க வேண்டும் போலவே இருந்தது. அதே நேரத்தில் அதைக் கேட்க மிகவுமே பயந்தான். பிரயோசனம் இல்லாத கேள்வி. அது அவளுக்கு எந்த நன்மையையும் பயக்கப்போவதில்லை. ஆனால், அதற்கான பதில் இல்லாமல் இனியும் அவன் நாள்கள் நிம்மதியாகக் கழியும் என்கிற நம்பிக்கை அவனுக்கு முற்றிலுமாகப் போயிருந்தது.
அவளாவது எதையாவது கேட்பாளா என்று பார்த்தான். அவர்களுக்குள் அப்படி எதுவும் நடக்கவே இல்லை என்பதுபோல் இருந்தது அவளின் அடர்ந்த அமைதி.
திரும்பி அவள் முகம் பார்த்தான். அந்த நாள்களில் இருந்த குறும்புத்தனம், துள்ளல், துடிப்பு எதுவுமே இல்லை. பக்குவப்பட்ட பெண்ணாக என்பதை விடவும் காயத்துக்கு மேல் காயம் பட்டு, வாயிருந்தும் ஊமையாகிப்போன அடர்ந்த அமைதி அவள் முகமெங்கும் வியாபித்திருந்தது.
காலத்திற்கும் தன் நெஞ்சிலும் கையிலும் தாங்க ஆசைப்பட்ட பெண். ஆனால் இன்று… “சொறி!” என்றான் தன்னை மீறி.
காரணம் புரியாமல் திரும்பி அவன் முகம் பார்த்தாள் அவள்.
—---------------------------------
தன்னை நியாயப்படுத்த முயன்றானா, இல்லை நான் உன்னை ஏமாற்றவில்லை என்று சொல்ல நினைத்தானா தெரியாது. கனத்த மனநிலையோடு அன்றைய தன் நிலைப்பாட்டினைச் சொன்னான்.
அப்போதும் தன் மௌனத்தைத் தொடர்ந்தபடி நடந்தாள் நாவினி.
“ஏன் அப்பிடிப் பதிலே போடாம விட்டனி நவி?”
இதயத்தையே வெட்டிக் கிழித்து அறுவைச் சிகிச்சையை முடித்துவிட்டு வந்து உனக்கு என்ன நோய் என்று விசாரிக்கிறவனிடம் என்ன சொல்வது? பார்வையைக் கண்ணீர் மறைத்தாலும் அவனைப் பார்த்து முறுவலிக்க முயன்றாள் நாவினி.
“அன்ட்ரி குடுக்க வேண்டாம் எண்டு சொன்னதால நீ உன்ர நம்பர தரேல்ல. அது எனக்கு விளங்குது. ஆனா ஒரு இக்கட்டான நிலைல ஒரு மெசேஜாவது எனக்கு நீ அனுப்பியிருக்கலாமே? அங்க என்ன நடக்குது, நீ எப்பிடி இருக்கிறாய், உன்ர மனநிலை என்ன எண்டு தெரியாம அந்த நேரம் பைத்தியம் பிடிக்காததுதான் குறை.”
ஒன்றுமே சொல்லாமல் இப்போதும் கண்ணீருடன் புன்னகைத்தாள் நாவினி. அந்தப் புன்னகை தரும் இனம்புரியா வலியைத் தாங்க முடியாமல், “என்ன நவி?” என்றான் அவன் தவிப்புடன்.
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “எனக்கும் உங்களுக்கும் இடையில ஏதோ ஒண்டு இருக்கு எண்டுதான் அவ்வளவு நாளும் இருந்தனான். அந்த நம்பிக்கைலதான் போன முறை உங்களைப் பாக்க இஞ்ச ஓடி வந்ததும். வந்து பாத்தா…” என்றவள் ஒருமுறை பார்வையை அவனிடமிருந்து அகற்றினாள்.
அவள் உள்ளம் தரையில் விழுந்த மீனாகத் துடித்தது. கண்கள் கலங்கின. இதயத்தின் துடிப்பு கூடிப்போயிற்று. வாயால் காற்றை ஊதி, கண்களைச் சிமிட்டித் தன்னைச் சமன் செய்துகொண்டு திரும்பவும் அவனைப் பார்த்துப் பேசினாள்.
“அதுக்குப் பிறகு யோசிக்கிற நேரமெல்லாம் எனக்குள்ள ஒரு குழப்பம். உண்மையாவே எங்களுக்க ஏதோ ஒண்டு இருந்ததுதானா, இல்லை நான்தான் சாதாரணமான பார்வைகளை, பேச்சை, செயலைப் பிழையா எடுத்து ஆசைய வளத்திட்டேனா எண்டு. இப்ப இத நீங்க சொல்லுற வரைக்கும் எனக்குள்ள அந்தக் குழப்பமும் கேள்வியும் இருந்துகொண்டேதான் இருந்தது. இப்பதான் அது தீந்திருக்கு. அப்ப நான் பிழையான எந்த ஆசையையும் வளக்கேல்ல என்ன?” என்று அவனிடமே கேட்டு முறுவலிக்கவும், சூட்டுக்கோலினால் அவன் இதயத்திலே யாரோ கீறியது போலிருந்தது அவனுக்கு.