• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 21

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 21


நேரம் இரவு ஒன்பதை எட்டியிருந்தது. தமக்கு என்று நாவினி ஒதுக்கித் தந்த அறையின் கட்டிலில் முதுகுக்குத் தலையணையைக் கொடுத்து, கால்களை நீட்டி அமர்ந்திருந்தான் கேசிகன்.

சற்று முன்னர்தான் அன்னையோடு பேசினான். உறங்கியிருப்பார் என்று எண்ணிக்கொண்டு அவன் இருக்க, “சின்னவருக்கு அங்க எல்லாம் ஓகேயா தம்பி?” என்று வாயால் கேட்டுக் குறுந்தகவல் அனுப்பியிருந்தார் பிரேமா.

இன்னும் உறங்கவில்லையா என்கிற யோசனையுடன் உடனேயே அவருக்கு அழைத்திருந்தான் கேசிகன்.

அங்கே சாரதாவும் முகிலனும் அவரோடு சேர்ந்து படுப்பதற்கு வந்திருந்தனர். மூவரும் விறாந்தையில் ஆளுக்கொரு பாயில் சரிந்திருப்பது தெரிந்தது. இன்னுமே கசியும் விழிகளோடுதான் இருந்தார் பிரேமா. உறக்கம் வராததால் படுத்திருந்து கதைத்துக்கொண்டு இருக்கிறார்களாம்.

பேரனோடு ஆசை தீரப் பேசி, நாவினியிடமும் அவர் கதைத்த பிறகு, உறங்கச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.

கீழே நாவினி, சஜிதன் இருவரதும் சிரிப்புச் சத்தம் கேட்டது. என்ன செய்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியாது. மேனகா குடும்பம் போனதிலிருந்து சஜிதனின் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கிறாள் நாவினி.

மயூரன் அழைத்துக் கடை நிலவரங்கள் சொன்னான். அவன் பெயர் கைப்பேசியில் விழுகையிலேயே இவன் உடலும் மனமும் இறுகிப்போய்விடுவதை இன்னுமே தவிர்க்க முடிவதில்லை. கடை பற்றி, வியாபாரம் பற்றி இருவரும் ஒரு நாளைக்குப் பல முறைகள் பேசிக்கொண்டாலும் இவனால் பழையபடி பழக இயலவில்லை.

சற்று நேரத்தில் உறக்கத்திற்குச் சிணுங்கி, அப்பாவைத் தேடிய சஜிதனைத் தூக்கிக்கொண்டு மேலே வந்தாள் நாவினி.

செர்ரி பழம் உடல் முழுவதும் பரவிக்கிடந்த பட்டர் கலர் பைஜாமா செட்டில் இருந்தவள், சஜிதனைத் தோளில் போட்டு இலேசாகத் தட்டிக்கொடுத்துக்கொண்டு தயங்கி வாசலிலேயே நின்றாள்.

“என்ன?” இவ்வளவு தூரம் வந்தவளுக்கு உள்ளே வர என்ன தயக்கம் என்று விளங்காது வினவினான்.

“இல்ல, அங்க என்ர அறைல படுக்கலாம்.”

“உன்ர அறைலயா?” அந்த ‘உன்ர அறை’க்கு அவன் கொடுத்த அழுத்தத்தில் தவறு செய்தவள் போலானாள் நாவினி.

அவளையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டுச் சிறு தலையசைப்பால் அவளைத் தன்னிடம் அழைத்தான் கேசிகன்.

அருகே வந்தவளிடம் கைகளை நீட்டி மகனை வாங்கித் தன் மார்பில் போட்டுத் தட்டிக்கொடுத்தான். அவனையே பார்த்திருந்த நாவினியிடம் அமரும்படி கண்ணால் காட்டினான். அப்படி அவன் அருகில் அமர்வது இலேசான சங்கடத்தைத் தந்தாலும் மறுக்காமல் அமர்ந்தாள் நாவினி.

சஜிதன் நன்றாக உறங்கும்வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவனிடமிருந்து சீராக மூச்சு வரத்தொடங்கவும், “கொஞ்ச நாளைக்கு இந்த அறைல இருக்கிறது எண்டாலும் எனக்கு ஒண்டுமில்ல நவி.” என்றான் கேசிகன்.

“இல்ல அது… வந்ததும் உங்களை அங்க கூப்பிட்டா நீங்க ஏதும் நினைப்பீங்களோ எண்டுதான்…” என்று அவள் திக்கித் திணறிச் சொல்லிக்கொண்டு வருகையிலேயே அவன் கண்களில் வந்தமர்ந்த சிரிப்பைக் கண்டுவிட்டுப் பேச்சை நிறுத்திவிட்டாள் நாவினி.

அவள் முகத்தையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, “என்ர மனுசின்ர அறைக்க வாறதுக்கு நான் என்ன நினைக்க இருக்கு?” என்று கேட்டான் அவன்.

மெல்லிய அதிர்வுடன் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் நாவினி.

“என்ன?” என்றான் அவன் புரியாமல்.

ஒன்றுமில்லை என்பதுபோல் குறுக்காகத் தலையை அசைத்தாள் அவள். அவன் பார்வை கூர்மையுடன் அவளிலேயே இருக்க, “தம்பியத் தூக்கிக்கொண்டு போகட்டா?” என்றாள் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி.

“சரி கொண்டுபோய்க் கிடத்திப்போட்டு வா!” என்றான் அவன்.

எழுந்து, அவன் மார்பில் உறங்கிக்கொண்டிருந்த சின்னவனைத் தூக்கிக்கொண்டு போகும் வரை அவன் பார்வை அவளிலேயேதான் இருந்தது.

எதற்கு இப்படிப் பார்க்கிறான்? கிடத்திவிட்டு வா என்று வேறு சொன்னானே. கேள்வி சுழன்றடித்தாலும் கட்டிலின் நடுவில் தலையணையை எடுத்துப் போட்டுவிட்டு, சின்னவனைக் கொண்டுபோய் மெதுவாகக் கிடத்தினாள். திரும்பவும் இடம் மாறியதில் சிணுங்கினான் அவன்.

மெல்லத் தட்டிக்கொடுத்தவளுக்கு மறுபடியும் அவனிடம் போகத் தைரியம் வரமாட்டேன் என்றது. என்ன பேசப்போகிறான் என்று ஒரு தடுமாற்றம். தன்னைக் கொஞ்சம் சமன்படுத்திக்கொண்டு சென்று, “படுக்க வரேல்லையா?” என்றாள் மறுபடியும் அந்த அறையின் வாசலில் நின்றபடி.

“நீ முதல் இஞ்ச வா!” என்றான் அவன்.

இனித் தவிர்க்க முடியாது. மெல்ல அவனருகில் சென்று நின்றாள். அவள் கரம் பற்றித் திரும்பவும் தன்னருகில் அமர வைத்தான் அவன். பற்றியிருந்த அவள் கரத்தின் விரல்களை ஒவ்வொன்றாக நீவிவிட்டபடி நிமிர்ந்து, “உனக்கு இன்னும் என்னில இருக்கிற கோபம் போகேல்லையா?” என்று வினவினான்.

“ஐயோ இல்ல. எனக்கு உங்களில கோபம் எல்லாம் இல்ல.” தலையையும் மறுப்பாக அசைத்து வேகமாக மறுத்தாள் அவள்.

சஜிதனைப் போன்று அவள் செய்த அந்தப் பாவனை ஈர்க்க அவளையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, “பிறகு?” என்றான் விடாமல்.

“என்ன பிறகு?”

“சொல்லமாட்டாய்?”

“இல்ல அது…”

“நவி?”

“படுப்பமா? நான் நாளைக்கு வேலைக்குப் போகோணும்.”

பேச்சைத் தவிர்க்கிறாள். அதற்குமேல் எதையும் கேட்க வராமல் அவளையே பார்த்தான் அவன்.

“அது ரெண்டு தரம் இலங்கைக்கு வர எண்டு நிறைய லீவு எடுத்திட்டன். அதால லீவு கேக்கேலாது.”

“சனி ஞாயிறு ஃபிரீ. கிழமைல ரெண்டு நாள் பாதி நாள்தான் வேலை. ஏதும் கோல் இருந்தாலும் வீட்டுக்கு வந்திடுவன்.” அவன் பார்வையைத் தவிர்த்தபடி சொல்லிக்கொண்டு போனாள் அவள்.

ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, “சரி வா, படுப்பம்.” என்று எழுந்தான் அவன். தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனவள் அவனுக்கும் ஒரு தலையணையை எடுத்துப் போட்டுவிட்டுப் போர்வையையும் தந்தாள்.

அது கொஞ்சம் சின்ன கட்டில்தான். என்றாலும் மூவரும் படுக்கக் கூடியதாக இருந்தது. சஜிதனின் போர்வைக்குள் தானும் புகுந்துகொண்டு, அவனை அணைத்துக்கொண்டு படுத்தவளையே பார்த்தான் கேசிகன்.

அவள் விலகல் அவனோடுதான். காரணத்தையும் ஓரளவிற்கு ஊகிக்க முடிந்தது. அவனும் கணவனாக எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவன் மனம் அவள்பால் நகர்ந்திருந்தது. அதற்குப் பெரும் காரணமாக அமைந்தது அவளின் குறுந்தகவல்கள். அதில் இருந்த அவள் நேசம். ஒவ்வொரு வார்த்தைகளும் சொன்ன அவளின் ஏக்கம். அதை எடுத்துப் படிக்கிற ஒவ்வொரு முறையும் அவன் இதயம் அவளுக்காகக் கசிந்துவிடும்.

அதுவே அவளோடு நல்லபடியாக வாழ்ந்துவிட வேண்டும், அவளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலையை அவனுக்குத் தந்திருந்தன.

இடைப்பட்ட இந்த ஒரு வருடம் அதற்குப் பெரும் உதவியாக அமைந்துபோயிற்று. அந்த ஒரு வருடம் அவளிடம் பெரிய மாற்றங்கள் எதையும் நிகழ்த்தவில்லை என்று புரிந்தது.

அடுத்தநாள் காலை நேரத்துக்கே எழுந்து, இவர்களுக்கான காலை உணவைச் செய்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்லத் தயாராகினாள்.

நன்றாக உயர்த்திப் போட்ட போனிடெயிலும், உள்ளே வெள்ளை சேர்ட் அணிந்து, அடர் நீல நிறத்தில் பெண்களுக்கான பாண்ட்சூட் செட்(Pantsuit) ஒன்றில் தயாராகி வந்தவளைக் கண்டு பிரமித்து நின்றுவிட்டான் கேசிகன்.

அதுவும் ஸ்காஃப் போன்ற ஒன்றினைக் கழுத்தைச் சுற்றிக்கொண்டு வந்து, ‘போ’ வடிவத்தில் வித்தியாசமாகக் கட்டியிருந்தாள். பொட்டு எதுவுமில்லாத நெற்றி, திருத்தப்பட்ட புருவங்கள், காஜலில் நனைந்த விழிகள், மென் ரோசா வண்ணத்தில் தீட்டியிருப்பதே தெரியாமல் தீட்டப்பட்ட இதழ்கள் என்று ஆளே முற்றிலுமாக மாறியிருந்தாள்.

“நவி அன்ட்ரி வடிவா இருக்கிறீங்க.” அப்பா சொல்ல வேண்டியதை மகன் சொன்னான்.

சின்னவனைத் தூக்கி அவன் குண்டுக் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, “மேனகா அன்ட்ரி சாப்பாடு குடுத்துவிடுறன் எண்டு சொன்னவா. உங்களுக்கு இஞ்ச போரடிச்சா இதே ரோட்டில நாலாவது வீடுதான் அவேன்ர வீடு. கேட்லயே சிவதாசன் குடும்பம் எண்டு நேம் போட் இருக்கும். அங்க போங்கோ. ஏலுமான வரைக்கும் நேரத்துக்கே வரப்பாக்கிறன்.” என்று சொன்னாள் அவள்.

வந்ததும் வராததுமாக அவர்களைத் தனியாக விட்டுவிட்டுப் போகிறோம் என்கிற சங்கடத்தோடு அவள் இருப்பது தெரிய, “நீ யோசிக்காம போயிற்று வா. நாங்க இருப்பம். அவாவை சமைக்க வேண்டாம் எண்டு சொல்லிவிடு. நானே பாக்கிறன்.” என்று சொல்லி அவளை அனுப்பிவைத்தான் கேசிகன்.

கராஜிலிருந்து காரை எடுத்துக்கொண்டு போகிறவளைப் பார்க்கையில் நேற்று உதயன் சொன்னவை நினைவில் வந்து அவன் உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்தன. இன்றைக்கு இப்படி காரை தனியாக ஓட்டுகிற அளவுக்கு வருவதற்கு தனக்குள் எந்தளவுக்குப் போராடியிருப்பாள்?

இதைப் பற்றியும்தான் நேற்றுப் பேச நினைத்தான். அவள் அனுமதிக்க வேண்டுமே.

அன்று மாலை வேலை முடிந்து வந்தவள் சாப்பிட்டார்களா, எல்லாம் சரியாக இருந்ததா என்று ஒரு வகையான தவிப்புடன் அவனை விசாரிக்கவும், “நாடு புதுசுதான். அதுக்கெண்டு சமாளிக்கவே ஏலாத அளவுக்கெல்லாம் ஒண்டுமில்ல நவி. ஈஸியா இரு. இரவுக்கும் சேத்துச் சமச்சிட்டன். ரொட்டி அல்லது புட்டு மட்டும் செய்தா சரி.” என்று புன்னகைத்தான் அவன்.

அதன்பிறகுதான் ஆசுவாசமாய் அமர்ந்தாள் அவள்.

“அலமாரில இடம் ஒதுக்கித் தாறியா? கொண்டுவந்த உடுப்பை எல்லாம் வைக்கோணும்.” அவள் வீட்டுடைக்கு மாறி, மாலைத் தேநீர் பருகி முடித்ததும் வினவினான்.

“அச்சோ சொறி. நேற்றே செய்து தந்திருக்கோணும்.” என்றுவிட்டு மேலே ஓடினாள் அவள். அவள் பின்னால் சின்னவனும். இந்த ஒற்றை நாளில் அந்தப் படிகளில் ஏறி இறங்குவது அவனுக்குப் பிடித்த ஒன்றாகிப் போயிற்று.
 

Vishakini

Moderator
Staff member
“நவி அன்ட்ரி, நானும் நிறைய உடுப்புக் கொண்டுவந்தனான். எனக்கும் இடம் ஒதுக்கித் தாங்கோ.” என்று சொன்னான் அவன்.

“முதல் சஜுக்குட்டிக்குத்தான். பிறகுதான் உங்கட அப்பாக்குச் சரியா?” என்றபடியே அலமாரியைத் திறந்து தன்னுடையவற்றை வெளியே எடுத்தாள். மேல் தட்டில் இருப்பவற்றையும் எட்டி எடுத்தபோது ஒரு பையும் சேர்ந்து வந்தது.

அதைப் பார்த்தவள் நெஞ்சில் ஒரு துடிப்பு. அதிலிருப்பவை அவள் நேசத்தின் இறந்தகாலம், அல்லது இறந்துபோன அவள் நேசத்தின் எச்சங்கள்.

அதையே கையில் வைத்துக்கொண்டு அவள் யோசித்தது சில கணங்களுக்குத்தான். அதைப் பிரித்தாள். சிறு கசங்கள் கூட இல்லாமல் அவன் அனுப்பிய என்வலப் கவர்(Envelope Cover) முதற்கொண்டு அத்தனை கடிதங்களையும் பக்குவமாக வைத்திருந்தாள்.

இன்றைக்கு அவனே அவளின் கணவனாகிவிட்டான். ஆனால் அவள் காதல்? அறியா வயதில் அவள் கொண்ட நேசம்? அது படுபயங்கரமாகத் தோற்றுத்தானே போனது. அந்தக் கடிதங்கள் இனி என்றைக்கும் அவளுக்கு இனிய நிகழ்வுகளாக, இன்னொருமுறை வாசித்துப் பார்க்கும் அளவிற்கு இன்பமானவையாக இருக்கவே போவதில்லை.

அதில் இருக்கிற ஏதோ ஒரு வரியோ, சொல்லோ அவன் அவளை மறந்துபோனதைப் பற்றித்தான் சொல்லப்போகிறது. அவளை எப்படி அவன் பக்கத்தினர் அவனிடமிருந்து துண்டித்தனரோ அப்படித்தானே அவனை அவளிடமிருந்து அவள் அன்னை துண்டித்தார்.

ஆனாலும் அடுத்தது என்று அவள் நகரவில்லையே. அங்கேயேதானே தேங்கிவிட்ட குட்டையாக நின்றாள். அவன் ஓடையாக மாறி, ஆற்றோடு கலந்து, தடயமே இல்லாமல் மாறிப்போனான்தானே. பிறகு எதற்கு இவற்றை அவள் வைத்திருக்க?

இதோ இந்த நொடியில் அவள் இதயம் துடிப்பதுபோல்தான் இனி எப்போது அதைப் பார்த்தாலும் துடிக்கும். இழப்பின் வலி பாரிய அளவில் தாக்கும்.

மடமடவென்று ஒவ்வொன்றாக எடுத்துக் கிழிக்க ஆரம்பித்தாள். அலமாரியில் இடம் ஒதுக்கியிருப்பாள், உடைகளை எடுத்து வைப்போம் என்று மேலே வந்த கேசிகன், அப்படி எதை இப்படி ஒரு வேகத்தோடு கிழிக்கிறாள் என்று வந்து பார்த்தான்.

அவை தன் கடிதங்கள் என்றதும் அவனுக்கு அதிர்ச்சி. இன்னுமா இதையெல்லாம் வைத்திருக்கிறாள்? “அது தேவை இல்லாததுகள். இருந்ததையே மறந்துபோனன். அதான்.” என்று தானே விளக்கம் சொல்லிவிட்டு அனைத்தையும் அள்ளிக்கொண்டு போய்க் குப்பை வாளிக்குள் போட்டுவிட்டு வந்தாள் நாவினி.

“இடம் ஒதுக்கிட்டன். நானே எடுத்து வைக்கவா?” என்று வினவினாள் அவள்.

கட்டிலில் அமர்ந்திருந்தவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். தன் கேள்விக்கு என்ன பதில் என்று அறிந்துகொள்ள அவளையே பார்த்து நின்றாள் அவள். குறுக்காகத் தலையை அசைத்துவிட்டு, “நானே எடுத்து வைக்கிறன்.” என்றான் பேசவே இயலாதவன் போன்ற கனமான குரலில்.

அடுத்த இரண்டு வாரங்கள் மின்னலாக ஓடியே போயின. அந்த நாள்களில் இவர்களுக்கான ஜெர்மனியில் வாசிப்பதற்கான விசாவை எடுத்துக்கொண்டார்கள். அப்படியே சஜிதனுக்கு கிண்டர் கார்டனில் பதிந்துவிட்டாள். கேசிகனுக்கும் மேலதிக ஜெர்மன் வகுப்புகளுக்கு விசாரித்துக்கொண்டார்கள். சஜிதன் கிண்டர் கார்டன் செல்ல ஆரம்பித்த பிறகு அவனும் அதில் சேர்ந்துகொள்வதாக ஏற்பாடு.

அதுவரையில் சும்மா இருக்க வேண்டாமே என்று ஒன்லைன் வகுப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தாள் நாவினி. பின்னேரப் பொழுதுகளில் மூவருமாக நடந்து மேனகா வீடுவரை போய்வந்தார்கள். உதயன் குடும்பமும் அடிக்கடி இவர்களிடம் வந்துபோவார்கள்.

இப்போதெல்லாம் அவர்கள் இருக்கிற அந்தச் சுற்று வட்டாரத்தை ஓரளவு பழகியிருந்தான் கேசிகன். பழக்கமில்லாத குளிர்தான் அப்பா மகன் இருவரையும் சற்று அதிகமாக வாட்டிற்று.

தினமும் காலையும் மாலையும் நடப்பார்கள். குளிர்கிறதே என்று நான்கைந்து உடைகளை அணிந்து புறப்படுவதும், பிறகு வியர்த்துக் கொட்டுகையில் வருகிற வழியில் ஒவ்வொன்றாகக் கழற்றிக்கொண்டு வருவதும் வாடிக்கையாயிற்று.

எல்லாம் சரிதான். அவர்களின் உறவு மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லாது அப்படியே இருந்தது. எத்தனையோ முறை அவளோடு பேச முயன்றுவிட்டான். அதுவும் அன்று அவள் கடிதங்களைக் கிழித்துப் போட்டது என்னவோ அவனையே அவள் சுக்கல் சுக்கலாகக் கிழித்துப்போட்ட வலியைத் தந்திருந்தது.

ஆனால், நத்தை ஓட்டுக்குள் சுருங்குவதுபோல் சுருங்கிக்கொண்டு மனம் திறக்க மறுத்தாள் அவள். எதையும் வற்புறுத்தித் திணிப்பதில் அவனுக்கும் உடன்பாடில்லை. அதைவிட அன்று நாவினி சொன்னதுபோலவே மயூரன் செய்தது பெரும் துரோகம்தான் என்றாலும், தானும் அவள் அன்பிற்கு நியாயம் செய்யவில்லை என்கிற பெரும் தடை அவனுக்குள்ளும் இருந்தது.

அடிக்கடி அவன் பார்வை தன் மீது யோசனையோடு படிவது நாவினிக்குப் புரியாமல் இல்லை. பிரேமா கூட, “சந்தோசமா இருக்கிறீங்களாம்மா?” என்று அடிக்கடி கேட்பதன் பின்னால் என்ன இருக்கிறது என்று தெரியாமலும் இல்லை.

மேனகா வீட்டினரும் இவர்களுக்குள் இருக்கும் அந்நியோன்யத்தின் அளவை இவர்கள் அறியாமல் அளவிட முயல்வதும் புரிந்தது. இறந்த காலத்தைத் தூக்கிப் பிடித்து எதையும் காணப்போவதில்லை என்று தெரியாமலும் இல்லை.

ஆனால், இந்த மனத்தின் முணுமுணுப்பை என்ன செய்ய என்றுதான் புரியவில்லை. மொட்டவிழும் பருவத்திலேயே அவள் இதயத்தில் இடம்பிடித்தவனை மணந்திருக்கிறோம் என்கிற மகிழ்ச்சி அவளிடம் கொஞ்சமும் இல்லை. அவள் ஆசைப்பட்டது அவளின் கேசியை. மணந்திருப்பது நிறைமொழியின் கணவன் கேசிகனை.

அப்படித்தான் அவள் உள்ளம் அவனைப் பார்த்தது. அங்கேதான் சிக்குப்பட்டு நின்றாள் நாவினி. எப்படி வெளிவருவது என்றுதான் தெரியவில்லை.
 

vidhya s

Member
படிக்கற நமக்கே இது கதை தா அப்படினு தெரிஞ்சாலும் அதுல இருந்து வெளிவர முடியல..நாவினி பழச மறந்து கேசி கூட வாழ்ந்தாலும் அந்த வடு என்னைக்கும் மனசுல இருக்கும்
 
Top Bottom