• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 24

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 24


அடுத்து வந்த நாள்களில் கூட அவன் மனம் சமாதானம் ஆகவில்லை. அவளில் பார்த்த வடுக்கள் அந்தளவில் உலுக்கியிருந்தன. இதுபோலெல்லாம் ஈழ விடுதலைப் போராட்டத்தின் யுத்தத்தில் சிக்குண்டு, படு மோசமாகக் காயப்பட்டுத் தப்பியவர்களில்தான் இதுவரைக்கும் பார்த்திருக்கிறான்.

அதே போன்ற வலியை அவளும் அனுபவித்திருக்கிறாள் என்று நினைக்கையிலேயே அவனுக்கு நெஞ்சுத் தண்ணீர் வற்றிப்போயிற்று. முடிகிற பொழுதுகளில் எல்லாம் எதிலிருந்தோ காக்கிறவன் போல் அவளைத் தன் கைகளுக்குள்ளேயே வைத்திருந்தான்.

உதவிக்கோ, ஆறுதலுக்கோ, தைரியம் கொடுக்கவோ யாரும் இல்லாமல் இத்தனை காயங்களையும் கடந்து வந்திருக்கிறாள் என்றால்… மேலே யோசிக்க முடியாமல் தலையை ஒருமுறை உலுக்கிக்கொண்டான்.

சஜிதனே பலமுறை வந்து என்னப்பா என்று கேட்டுவிட்டான். அப்படி, சின்னவன் முன் அவன் அணைப்பினுள் அடங்கியிருக்கக் கூச்சப்பட்டாள் நாவினி. அவள் விலக முயன்றபோது, “நாங்க எந்த போடரையும் க்ரொஸ் பண்ணேல்ல நவி. பேசாம இரு.” என்றுவிட்டான் அவன்.

அந்தப் பொழுதுகளில் பெரிதாகப் பேச்சுகள் எதுவும் இராது. தன் நெஞ்சுக்குள்ளேயே பொத்தி வைத்துக்கொள்கிறவன் போல் வைத்துக்கொண்டு, அடிக்கடி அவள் உச்சியில் முத்தங்கள் பதித்துக்கொண்டே இருப்பான். அதுவே நடந்தவற்றைப் பற்றியே யோசித்துத் தனக்குள் உழல்கிறான் என்று சொல்லும்.

“எனக்கு ஒண்டும் இல்ல. அதெல்லாம் எப்பவோ நடந்தது.” என்று அவள் சொன்னாலும் அந்தப் பாதிப்பிலிருந்து வெளி வருவது அவனுக்கு இலகுவாக இல்லை.

இரவுகளில் மகன் உறங்கிய பிற்பாடு வந்து இவளோடு உறங்குவது வாடிக்கையாயிற்று. ஆரம்பத்தில் அவளும் பழைய காயங்களுக்கு ஆறுதலும் மருந்தும் தேடுகிறவளாக அவன் கைகளுக்குள் அடங்கியிருந்தாலும் இப்போதெல்லாம் அவன் முத்தங்களும் அணைப்பும் அவளுள் வேறு சில இரசாயன மாற்றங்களை நிகழ்த்த ஆரம்பித்தன.

அடுத்த கட்டத்தை நோக்கி நகரமாட்டானா என்கிற ஆவலை அவளுள் தூண்டிற்று. தனக்கு மட்டும்தான் இப்படியோ என்றெண்ணி வெட்கம் கொண்டாள். அப்படி இல்லை என்று அன்றிரவு தெரிந்தது.

அவளைத் தன் அணைப்பினுள் வைத்திருந்தவனின் வருடல்களும் அணைப்புமே நாவினியைச் சுக மயக்கத்தில் ஆழ்த்தப் போதுமாயிற்று. பூனைக் குட்டியாய் அவனுள் சுருண்டு கிடந்தவள் மீது ஆழ்ந்த முத்தங்கள் பதித்துக்கொண்டிருந்தவனின் உடல் மொழி, கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்கு நெருக்கமாக மாற ஆரம்பித்தது.

இனம் புரியா இனிய படபடப்பொன்று தொற்றிக்கொள்ள அவனை நோக்கியவளைக் கண்டு, “சொறி!” என்று விலக முயன்றான் அவன். அவள் விழிகளில் காரணம் புரியாத் தவிப்பும் குழப்பமும். “நவிம்மா!” என்றான் அவனும் தன் நிலையைச் சொல்ல இயலாத் தவிப்புடன்.

தான் இதற்குத் தயார் இல்லையோ என்றெண்ணி அவன் தயங்குவது புரிந்தது. சின்ன முறுவலோடு பார்வையைத் தழைத்தாள் நாவினி.

கேசிகனுக்கு ஆச்சரியம். நம்ப முடியாமல் அவளைப் பார்த்தான். அந்தப் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் அவனோடு ஒன்றிக்கொண்டு முகத்தை மறைத்தாள் நாவினி. அவன் உள்ளம் துள்ளிற்று. மறுபடியும் அவள் உள்ளத்தை வெற்றிகொண்ட உற்சாகம் கரைபுரண்டு ஓடிற்று.

ஆசையாக அவள் முகம் பார்க்க முயன்றான். அதற்கு மறுத்து இன்னும் அவனுக்குள் புதைய முயன்றாள் அவள். அவன் உதட்டில் முறுவல். பெரும் ஆவலுடன் அவளை அள்ளிக்கொண்டு எழுந்தான்.

அன்று அவனுக்கும் மகனுக்கும் அவள் கொடுக்க எண்ணிய அறை, இன்று அவர்களுக்குப் புகலிடமாயிற்று. சின்னவன் அறியாமல் அவர்கள் செய்யப்போகிற அந்த அழகான களவு இன்னுமின்னும் அவள் முகத்தை இரத்தமெனச் சிவக்க வைத்தது.

அப்படி அவள் சிவந்து முகம் மறைக்கிற பொழுதுகளில் எல்லாம் அவனிடத்தில் சிரிப்பு மலர்ந்தது. இன்னுமின்னும் அவளுக்கு வெட்கமூட்டிப் பார்க்கும் ஆசை உண்டாயிற்று. ஆரத்தழுவி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். பட்டுப் போன்ற மேனியும், அவளிடமிருந்து வந்த பூ வாசமும் அவனைப் பித்தம் கொள்ளச் செய்தன. கணமும் பிரிய விரும்பாதவனாக ஆரத்தழுவி அவளைத் தன் ஆதிக்கத்தினுள் கொண்டுவந்தான்.

அவனுக்கும் அவளுக்குமான முதல் உறவு. மலையிலிருந்து நழுவும் அருவி ஆற்றோடு கலப்பதுபோல், எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாது இயல்பாய் நிகழ்ந்துபோயிற்று.

“நீ ஓகேயா, எங்கயும் வலி?” தன் கை வளைவில் தலை வைத்துப் படுத்திருந்தவளின் கன்னம் வருடிக் கேட்டான் அவன்.

என்ன இவன் இப்படிக் கேட்கிறான் என்று வெட்கினாள் அவள்.

“வெக்கபடுற விசயம் இல்ல நவி. ஏதும் எண்டா சொல்லோணும்.”

சரி என்று தலையை அசைத்தாள் அவள். திரும்பி அவளைப் பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்தபடி படுத்திருந்தாள். என்ன என்றான் புருவங்கள் இரண்டையும் உயர்த்தி. சின்ன முறுவல் ஒன்றுடன் ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தாள் அவள்.

இத்தனை நாள்களும் அவன் நிம்மதியைப் பறித்த அவளின் அந்தச் செய்கை, இன்று அவளை நோக்கி அவனை இழுத்தது. திரும்பவும் அவளைத் தன் அணைப்பினுள் கொண்டுவந்தான். ஒற்றைப் போர்வை மறைத்திருந்த அவர்களின் நெருக்கமும், அவனின் அணைப்பும், விசமச் சிரிப்பில் மின்னிய விழிகளும் இப்போதும் அவனை எதிர்கொள்ள இயலாமல் செய்ய, பார்வையைத் தழைத்தாள் நாவினி.

உதட்டில் அரும்பிய முறுவலோடு அணைப்பை இன்னும் இறுக்கி அவள் உதட்டில் அழுத்தி முத்தமிட்டுத் தன் நிறைவைச் சொன்னான் அவன்.

விழிகளை மூடி அவன் தந்த அணைப்பையும் முத்தத்தையும் வாங்கியவள் உள்ளமும் எவ்வளவோ காலத்திற்குப் பிறகு ஆழ்கடலின் அமைதியில் நிறைந்து திளைத்தது. இவ்வளவு காலமும் இல்லாத பிடிப்பொன்று வாழ்வின் மீது உண்டாயிற்று.

அடுத்து வந்த நாள்கள் எல்லாம் நீ ஆசைப்பட்ட வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று நாவினிக்குச் சொல்லிச் சென்றன. அங்கே புகைப்படங்களாக இருந்த அன்னை தந்தையிடம் தன் மன நிறைவைக் கண்ணில் ஈரத்துடன் சொல்லி மகிழ்ந்தாள்.

அவர்களும் இருந்திருக்கலாம். அது மட்டும்தான் அவள் உள்ளத்தில் இருந்த குறை. அதுவே பிரேமாவை இங்கே அழைத்துக்கொள்வதற்கான வேலைகளை இன்னும் விரைவாகப் பார்க்க வைத்தது.

கணவனை நினைத்தாலே அவள் கன்னங்கள் கதகதக்கும். மகனுக்குத் தெரியாமல், அவளும் எதிர்பாரா நொடி ஒன்றில் அவன் தந்துவிட்டுப் போகிற இறுகிய அணைப்புகளும் ஆழ்ந்த முத்தங்களும் அவளை மயக்கத்தில் ஆழ்த்தியே வைத்திருந்தன. அவள் அறிந்த கேசி இப்படியெல்லாம் நடப்பானா என்று வியந்தாள்.

அவள் வியப்பும் மகிழ்ச்சியுமாக அவனைப் பார்க்கும் பார்வையிலேயே அதைப் புரிந்துகொண்டு, “அவன் வெறும் லவ்வர் மட்டும்தான். பார்வையால மட்டும்தான் கதைப்பான். அவனுக்கு அதுக்கு மட்டும்தான் அனுமதி. இந்தக் கேசி உன்ர மனுசன். இவனுக்கு எல்லா உரிமையும் இருக்கு. வித்தியாசம் விளங்குதா?” என்று அவன் அவளைப் பின்னிருந்து அணைத்துக் கழுத்து வளைவில் முத்தமிட்டபோது, அவள் கண்களில் பழைய நேசம் மின்னிற்று.

மலர்ந்து விகசித்திருந்த அவர்கள் முகங்களைப் பார்த்தே அனைத்தையும் கண்டுகொண்டார் மேனகா. எதையும் கேட்டு அவளைச் சங்கடப்படுத்தவில்லை.

அவர் மூலம் செய்தி பிரேமாவுக்கும் போனது. உள்ளே ஆனந்தப் பரபரப்புத் தொற்றிக்கொண்ட போதிலும் எப்போதும் அழைப்பதுபோல் அழைத்து, பூரித்து விகசித்திருந்த கணவன் மனைவி முகங்களை ஆசை தீரப் பார்த்தவரின் விழிகள் பனித்துப்போயின. பேரனிடமும் ஏக்கம் தீரப் பேசிவிட்டு வைத்தவர் அடுத்து ஓடியது அவரின் பிள்ளையாரிடம்.

கேசிகனும் சஜிதனும் ஜெர்மன் வந்து மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் சஜிதனுக்கு கிண்டர் கார்டனில் இடம் கிடைத்தது. அவன் அங்கே போக ஆரம்பித்ததும் கேசிகனும் டொச் வகுப்பில் சேர்ந்துகொண்டான். நாவினி முழு நேர வேலையில் இருப்பதும், கேசிகன் ஜெர்மன் மொழி படிக்க ஆரம்பித்துவிட்டதாலும் அவன் வேலைக்குச் சென்றேயாகவேண்டிய கட்டாயம் இருக்கவில்லை.

ஆனாலும் நாவினிக்கு அவனை ஏதோ ஒரு வேலையில் புகுத்த மனமில்லை. அவன் மிகச் சிறந்த வியாபாரி. சின்ன வயதிலிருந்தே அவன் ஆசையும் அதுதான். அப்படியிருக்கத் தன்னை மணந்து இங்கு வந்ததாலேயே அவன் கனவுகளைத் தகர்ப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை.

ஏதாவது கடை இருந்தால் பார்க்கச் சொல்லிச் சிவதாசனிடம் சொன்னாள். தமிழர்களும் தமிழர் கடைகளும் அதிகமாக இருக்கும் பகுதி டோர்ட்மண்ட் என்பதில் கட்டாயம் கிடைக்கும் என்று அவரும் சொல்லியிருந்தார்.

கேசிகனுக்குமே அதுதான் பிடித்திருந்தது. கூடவே, மொழி சுப்பர் மார்க்கெட்டை இங்கிருந்து நடத்துவது நீண்ட காலத் திட்டத்துக்குச் சரியாக வராது என்று, இந்த மூன்று மாதங்களிலேயே உணர ஆரம்பித்திருந்தான்.

அதைவிட இன்னுமே மயூரன் என்றால் ஒருவித ஒட்டாத தன்மை வந்துவிடுவதை அவனால் தவிர்க்க முடிவதில்லை. கூடவே, இன்றைய நிலையில் மொழியிலிருந்து முற்றிலுமாக வெளிவரவே விரும்பினான்.

அதில் இரண்டு சுப்பர் மார்க்கெட்டுகளுக்குமான நியாயமான விலையை நிர்ணயித்து, அதைத் தந்துவிட்டு அவற்றை மயூரனையே எடுத்துக்கொள்ளச் சொன்னான்.

நாவினிக்கு அதில் உடன்பாடில்லை. விருப்பமானால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவனை இலங்கை சென்று கடையைப் பார்த்துவரச் சொன்னாள்.

அப்படிச் சொன்ன மனைவியைத் தன் கைகளுக்குள் கொண்டு வந்து, “என்ர மனுசிக்கு அவளின்ர மனுசன் முழுசா அவளுக்கு வேணுமாம். எனக்கும் என்ர மனுசி மட்டுமே எல்லாமா வேணுமா இருக்கு.” என்றான் அவள் நெற்றியில் முத்தமிட்டு.

“எனக்காகவா?” நெகிழ்ந்த குரலில் வினவினாள்.

“இல்ல. எங்களுக்காக. எனக்கும் இந்த நவிக்குச் சகலதுமா இருக்கத்தான் ஆசையா இருக்கு.”

கண்ணீருடன் மகிழ்வாகப் புன்னகைத்த நாவினி, எம்பி அவன் தாடையில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள். “என்னடி இது?” என்று கிறங்கியவனின் அணைப்பு இறுகிப்போயிற்று.

அரும்பிய முறுவலோடு திரும்பவும் எம்பி மறுபக்கத் தாடையிலும் அழுத்தி முத்தமிட்டாள். அவ்வளவுதான். அவளை அள்ளிக்கொண்டு அவர்களுக்கான அறைக்கு அவன் நடக்க, “அப்பா!” என்ற மகன் குரல் இடையிட்டது.

மிட்டாயைப் பறிகொடுத்த குழந்தையாக அவளை இறக்கி விட்டுவிட்டுப் பார்த்தான் கேசிகன். நாவினியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கலகலத்துச் சிரித்தாள். “உன்னை!” அவன் முகத்திலும் அந்த முறுவல் அரும்பினாலும் இன்னும் அந்த மயக்கம் தீராமல் அவளையே பார்த்தான்.

சின்ன புன்னகையோடு கணவனை நெருங்கி அவன் கேசம் கோதிக்கொடுத்தாள் நாவினி. அவளிடம் தன்னைக் கொடுத்துவிட்டு, அந்தப் பிஞ்சு விரல்களின் சுகத்தை விழிகளை மூடி அனுபவித்தான் கேசிகன். அவன் கன்னம் தாங்கி நெற்றியில் முத்தமிட்டு, “தம்பி நித்திரையாகட்டும்.” என்றுவிட்டுக் கீழிறங்கிச் சென்றாள்.
 

Vishakini

Moderator
Staff member
அந்த வார இறுதியில் தோட்டக்காணிக்கு அவர்களை அழைத்துச் சென்றாள் நாவினி. அதுவும் சைக்கிளில். கேசிகனின் சைக்கிளின் பின் சில்லில் சின்னவனுக்கு என்றே நாவினி வாங்கி வைத்திருந்த சைக்கிள் ட்ரெய்லரை(bicycle trailer) பூட்டி, அதனுள் அவனை அமரவைத்துக்கொண்டு அழைத்துச் சென்றதில் சஜிதனுக்குக் குதூகலமாயிற்று.

கேசிகனுக்கு அந்த இடத்தைப் பார்க்க மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. நடுவில் அமைக்கப்பட்டிருந்த வீதி நீண்டுகொண்டே செல்ல, அதன் இரு புறமும் பெரிய பரப்பளவில் நிறையத் தோட்டங்கள் வரிசையில் இருந்தன.

அவை தேவாலயத்துக்குச் சொந்தமான நிலங்கள். அவற்றைக் குத்தகைக்கு என்று தேவாலயங்களே இவர்களைப் போன்றவர்களுக்குக் கொடுக்கும். இவர்கள் வாடகைக்கு இருந்த காலத்தில் அவர்களின் வீட்டில் சின்ன பால்கனி மட்டுமே இருந்ததில் இந்தக் காணியைக் குத்தகைக்கு எடுத்திருந்தார்கள். இங்கே உருவாக்கியிருந்த மரம், செடிகளை இழக்க விரும்பாததில் வீடு வாங்கிய பிறகும் தானே வைத்துக்கொண்டிருந்தார் நாகரத்தினம்.

வெளிநாட்டவர்கள் விரல் நுனியில் அழுக்குப் படாத வேலைகளை மாத்திரமே பார்ப்பார்கள் என்பதெல்லாம் எத்தனை பெரிய பொய் என்று அந்த இடமே சொல்லிற்று.

அந்தளவில் எந்தவித இரசாயணக் கலப்புகளும் இல்லாது, பயனுள்ள மரம், செடி, கொடிகளை வளர்த்து, வருடம் முழுமைக்கும் தேவையான பழங்கள், மரக்கறிகளை எல்லாம் விழையவைத்துக்கொள்வார்கள் என்று சொன்னாள் நாவினி.

அனைத்து வேலிகளுக்கும் மரங்களையே நட்டு வளர்த்து, அவற்றைச் சீராக வெட்டி, மதில் சுவருக்கு ஒப்பான உயரமும் அகலமுமாக அமைத்திருந்தார்கள். ஒவ்வொரு காணிக்கும் கம்பி கேட்டுகள் வேறு.

அந்த வீதியினுள் பயணித்து இடப்பக்கமிருந்த நான்காவது கேட்டைத் திறந்து, “வாங்கோ!” என்று இவனை அழைத்துவிட்டு சைக்கிளை உருட்டியபடி நடந்தாள் நாவினி.

நல்ல பெரிய ‘கார்டன் ஹவுஸ்’ சற்று உள்ளேயாக இருந்தது. கேட்டிலிருந்து அந்த வீடு வரையிலான பாதைக்குக் கற்கள் பாதிக்கப்பட்டிருந்தன. அதன் இரு மருங்கிலும் அழகழகான குரோட்டன்களும் பூமரங்களும் நின்றிருந்தன.

அரிய வகை மூலிகைகள், முந்திரித் தோட்டம், ஸ்ட்ராபெர்ரி, ரஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி என்று பயன்தரும் செடிகளால் தோட்டமே நிறைந்திருந்தது.

இவர்களது தோட்டம் போலவே மற்றவர்களினதும். “சுப்பரா இருக்கே நவி!” என்றான் சுற்றி சுற்றிப் பார்த்தபடி.

“ஓம், இப்ப நான் கவனிக்காமயே விட்டுட்டன். அம்மா அப்பா இருக்கேக்க வாழை, ராசவள்ளி, துளசி, மல்லிகை, வல்லாரை, பொன்னாங்காணி, பீட்ரூட், கரட் எண்டு எல்லாம் நிக்கும். மிளகாய் வகைகள், போஞ்சி வகைகள், கீரை வகைகள் எண்டு எல்லாமே போடுவார் அப்பா. இஞ்ச வச்சே ஆஞ்சு, கழுவி, வெட்டி, பக்கெட் பண்ணி அப்பாவே ஃபிரீசருக்க போட்டு வச்சிடுவார். அதாலயே சமைக்கிறது எல்லாம் தனக்கு ஒரு நிமிச வேலை எண்டு அம்மா சொல்லுவா. கொஞ்சக் காலம் கோழியும் வளத்தனாங்க. அபிக்குட்டிக்கு ஏதோ கோழில அலர்ஜி எண்டுதான்…” என்று கண்கள் மின்னச் சொல்லிக்கொண்டு வந்தவள் குரல் உடையவும் சட்டென்று நிறுத்திவிட்டாள்.

உடனே மகன் எங்கே என்று பார்த்தான் கேசிகன். அவன் அங்கே அவனைப் போன்று இரண்டு மடங்கு உயரத்தில் நின்ற ஆப்பிள் மரம் ஒன்று அந்த வருடத்தின் கடைசிக் காய்களைத் தாங்கியபடி நிற்க, அவற்றைப் பறிப்பதில் மும்முரமாக இறங்கியிருந்தான்.

அவன் கவனம் தம்மிடம் இல்லை என்றதும் அவள் கரம் பற்றித் தன்னிடம் திருப்பினான். ஏற்கனவே குளிரில் சைக்கிளில் பயணித்து வந்ததோடு சேர்த்து அழுகையை அடக்கியதிலும் அவள் முகம் செக்கச் சிவந்திருந்தது.

அவள் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்து, “என்ர பெட்டச்சி எல்லா. அழுறேல்ல. இப்ப எவ்வளவு சந்தோசமா சொல்லிக்கொண்டு வந்தனி சொல்லு. அப்பிடி இருக்கோணும்.” என்றான் கனிவுடன்.

கணவனுடன் மனமொன்றி வாழ ஆரம்பித்த பிறகு அந்த வலிகளை எல்லாம் சமாளித்துக்கொள்ளக்கூடியது போல் இருப்பதில் இன்றும் தேறிக்கொண்டாள் அவள். சின்ன புன்னகையுடன் அவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு அவள் கண்களைத் துடைத்துக்கொள்ள, மகனையும் தூக்கிக்கொண்டு அந்த கார்டன் ஹவுஸின் பின்பக்கம் சென்று பார்த்தான் கேசிகன்.

அங்கும் ஆப்பிள், செர்ரி, கீவி, பியர்ஸ் என்று நிறைய மரங்கள் இருந்தன. பெரிய பெரிய கேன்களில் அந்தத் தோட்ட வீட்டிலிருந்து வழியும் மழை நீரைச் சேமிப்பதற்கு ஏற்ற வகையில் அனைத்தையும் நேர்த்தியாகச் செய்திருந்தார் நாகரத்தினம். பின்பக்கம் தட்டி போன்ற ஒன்றை இறக்கி, மண் வெட்டி, கோடரி, குப்பை வாரி என்று அத்தனையும் போட்டு வைத்திருந்தார்.

‘கார்டன் ஹவுஸு’ம் தரை முதற்கொண்டு, கூரை, சுவர்கள், ஜன்னல்கள், கதவுகள் அனைத்துமே பலகையால் உருவாக்கப்பட்டு, முன்னே ஒரு வரவேற்புப் பகுதி பின்னால் அறை என்று விசாலமாகவே இருந்தது. சோலர் பூட்டி மின்சார வசதியும் செய்திருந்தார்கள். தற்காலிக மலசலகூடம் ஒன்றினைக் கூட உருவாக்கி வைத்திருந்தார் நாகரத்தினம்.

பல மாதங்களாக நாவினி இங்கே வரவில்லை என்பதில் உள்ளே வந்ததுமே ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்துவிட்டு, தூசுகளைத் தட்டிக் கூட்டினாள். இதற்குள் ‘கார்டன் ஹவுஸ்’ நன்றாகவே குளிர ஆரம்பித்திருந்தது. சின்னவனும் நடுங்க ஆரம்பிக்க வேகமாக மின் கணப்பைப் போட்டுவிட்டாள்.

சமைப்பதற்கு சின்ன காஸ் அடுப்பு, அதற்குத் தேவையான பாத்திரங்கள் மட்டுமல்ல எடுத்து விரித்துப் போட்டுக்கொண்டு படுக்கும் வகையிலான கட்டில்களும் பக்குவமாக மடித்துக் கட்டப்பட்டிருந்தன.

“சம்மர் காலத்தில சனி ஞாயிறு இஞ்ச வந்திடுவம். அப்பா புல்லு வெட்டுறது, மரங்களுக்குத் தண்ணி விடுறது, காணியத் துப்பரவாக்கிறது எண்டு தோட்டத்துக்கையேதான் நிப்பார். ஹெல்ப் பண்ணுறம் எண்டுற பெயர்ல நாங்க ஒரே அட்டகாசம்தான். அம்மா பிட்சா இல்லாட்டி பார்பிகியூ போடுவா. இல்ல பிரியாணி செய்துகொண்டு வருவம். சில நேரம் பக்கத்துக் காணி ஆக்களும் வந்தா வெளில விறகை எரிய வச்சுப்போட்டு எல்லாருமா சுத்தியிருந்து விடிய விடியக் கதைச்சுக்கொண்டு இருப்பினம். நாங்க இஞ்ச கட்டிலை விரிச்சுப் போட்டுக்கொண்டு படுத்திடுவம். அடுத்த நாள் விடியத்தான் இஞ்ச இருந்து போவம். ” என்று சொல்லிக்கொண்டே வீட்டிலிருந்து கொண்டுவந்த பைகளை எல்லாம் எடுத்துப் பிரித்தாள்.

“சஜுக்குட்டிக்கு பிட்சா விருப்பம் எல்லா. அதான் மா குழைச்சு வச்சனான். இஞ்ச ஸ்டோன் ஓவன்(stone oven) இருக்கு. அதில இன்னும் டேஸ்ட்டா இருக்கும்.”

குழைத்து, உருண்டைகளாகப் பிடித்து, நன்றாகப் பொங்கிய மா, பிட்சாவுக்குப் போடும் தக்காளி சோஸ், சீஸ், டூனா பிஷ், காளான், குடை மிளகாய், ஒலிவ் காய் எல்லாமே வெட்டி, தனித்தனி டப்பாக்களில் அடைத்து எடுத்து வந்திருந்தாள்.

“நான் ஏதாவது செய்யவா?” கேட்கும்போதே செய்வதற்கு அங்கு ஒன்றுமில்லை என்று அவனுக்கே புரிந்தது.

சஜிதனுக்கு அளவாக ஏற்கனவே உருண்டை பிடித்து வைத்திருந்த குட்டி பீட்சாவை செய்ய ஆரம்பிக்கையிலேயே, “நான் அம்மா, நான் செய்யப்போறன்.” என்று ஓடி வந்தான் சின்னவன்.

கேசிகன் அவனைத் தூக்கிப் பிடிக்க, அவன் கையைப் பற்றி சோஸ் பரவ வைத்து, அவனைக் கொண்டே அவனுக்கு வேண்டுமானவற்றைப் போட்டு, அவன் இறால் பிரியன் என்பதில் குட்டி இறால்கள் தூவி, சீஸ் போட்டு மின்சாரத்தில் இயங்கும் அந்த ஓவனுக்குள் வைத்து மூடிவிட்டாள்.

கிட்டத்தட்ட எட்டு நிமிடங்களில் திறந்து பார்க்க, பிட்சாவின் விளிம்புப்பகுதி பொன்னிறத்தில் மின்ன, சீஸ் தகதகவென்று கொதித்துக்கொண்டிருந்தது.

அதற்கான கரண்டியால் மிக லாவகமாக எடுத்து, இலேசாக ஒரேகனோ(Oregano) தூவி, அதைச் சின்னவன் எடுத்து உண்பதற்கு ஏற்பத் துண்டு போட்டாள். ஒரு துண்டை எடுத்து, நன்றாக வாயால் ஊதி, சுடாத பதம் வந்ததும் சஜிதனுக்கு அவள் ஊட்டிவிட்டபோது, மகனைக் கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்த அந்தத் தகப்பனால் அவளிடமிருந்து பார்வையை அகற்ற முடியாமல் போயிற்று.

அவன் பார்வை உணர்ந்து என்னவென்று பார்வையாலேயே விசாரித்தாள். ஒன்றுமில்லை என்று குறுக்காகத் தலையை அசைத்துவிட்டு, அங்கே இருந்த குஷன்கள் போடப்பட்ட நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டு, மகனுக்கு உண்ணக் கொடுத்தான் கேசிகன்.

இதற்குள் அவனுடைய பிட்சாவையும் செய்து ஓவனுக்குள் வைத்திருந்தாள் நாவினி. அவனுடையது வெளியே வருகையில் அவளுடையது உள்ளே போனது.

அவனுடையதையும் அழகாக வெட்டி, ஒரு தட்டில் போட்டு நீட்டினாள். சுவை பார்த்தபோது மிக அருமையாக இருந்தது. அவளைப் பாராட்டிவிட்டு எழுந்து வந்து, ஒரு துண்டை அவள் வாயருகில் நீட்டினான்.

ஒரு முறை பார்வை சின்னவனிடம் சென்று வர வாங்கிக்கொண்டாள் நாவினி. அவளையே பார்த்தபடி மிகுதியைத் தான் சாப்பிட்டான் கேசிகன். நாவினியின் முகத்தில் செம்மை படர்ந்தது. தன்னுடைய பிட்சாவை எடுப்பதுபோல் நகர்ந்தாள்.

பின்னாலேயே வந்து அவளை அணைத்தான் அவன். “ஐயோ தம்பி!” என்று விலகப் போனவளிடம், “அவர் றாலோட பிசி.” என்றவன் பின்னிருந்தே அவள்
முகம் பற்றி இதழ்களில் அழுந்த முத்தமிட்டுவிட்டு விலகினான்.
 
Top Bottom