• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மை டியர் ராவணா வித் லவ் சீதா - 12

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 12


சம்பவ இடத்திலிருந்து ராவணனை வீட்டிற்கு ஸ்கூட்டியில் அழைத்து வரும் வழியிலும் சரி வீட்டிற்கு வந்த பிறகும் சரி அவன் சீதாவிடம் ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேசவே இல்லை..!!


மிகவும் அமைதியாக இருந்தான்.. இல்லையென்றால் எப்பொழுதும் ஏதோ ஒரு கேள்வியை தொனதொனவென்று கேட்டுக் கொண்டே இருப்பவன் இன்று எதற்காக இப்படி அமைதியாக இருக்கிறான் என்கிற கேள்வி அவள் மனதிற்குள்ளும் தோன்றியது..


அவன் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்.. அவன் முகத்தில் எந்த வித உணர்ச்சிகளும் தென்படவில்லை கோவம் வருத்தம் ஏமாற்றம் இப்படி எதுவும் இல்லை நிச்சலனமாக இருந்தது..!!


" என்ன ஆச்சு இந்தர்?? ஏன் ஒரு மாதிரியா இருக்க நானும் பாத்துட்டு வரேன் வண்டியில் வரும்போதும் சரி வீட்டிற்கு வந்த பிறகும் சரி நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல ஏன்??"


அப்போதும் அவனிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க தொடங்கினான்..


" உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்னு ஏதாவது எனக்கு பதில் சொல்லு இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்??"


அப்போதும் அவன் அமைதியாகவே இருந்தான்..


பொதுவாக தன்னுடைய தாய் தந்தையர் ஏதாவது கேட்டு கிண்டல் செய்தால் அமைதியாக இப்படி இருந்து அவள்தான் வெறுப்பேற்றுவாள் அவர்களை..


ஆனால் இன்று தலைகீழாக.. இவள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவன் அமைதியாக இருந்து இவளை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான் அதுவே அவளுக்கு பாதி கடுப்பை கிளப்பியது..


" இங்க பாரு நான் பாட்டுக்கு பேசிட்டிருக்கேன் நீ என்னமோ பதில் சொல்லாமல் ரொம்ப திமிரா நின்னுட்டிருக்க என்னதான் நெனச்சிட்டிருக்க உன் மனசுல??", பொறுமையிழந்து சற்று காட்டமாகவே கேள்விகளை அடுக்கி கொண்டே போனாள் சீதா.


அப்போதும் அவன் அசரவே இல்லை.. அமைதியாகவே நின்றான்..


இவனிடம் சத்தம் போட்டு ஒரு பிரயோஜனமும் கிடையாது சண்டைக்கு போனாலும் எந்த பயனுமில்லை பேசாமல் அமைதியாகவே இருந்து கேட்டு பார்ப்போம் என்ன தான் இவனுக்கு பிரச்சனை என்று என மனதிற்குள் நினைத்து கொண்டவள் அவன் அருகில் சென்று அவனுடைய கைகளை மெதுவாக தன் கரங்களில் ஏந்தி கொண்டாள்..


" இங்க பாரு இந்தர்.. என்னதான் உன்னோட பிரச்சினை தயவு செஞ்சு என்கிட்ட சொல்லு என்னால உன்கிட்ட கோபப்படவும் முடியல பேசாம இருக்கவும் முடியல அதனால தயவு செஞ்சு என்ன ஆச்சுன்னு நீயே சொல்லிடு", கெஞ்சுதலாக அவன் கண்களையே ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே அவள் கேட்கவும் மெதுவாக திரும்பி அவளுடைய கண்களை நேருக்கு நேராக அவன் பார்த்தான்..


முன்பிருந்த நிதானம் இப்பொழுது அவனுடைய கண்களில் தென்படவில்லை அதற்கு மாறாக கேள்வி மட்டுமே தொக்கி நின்றது..!!


" இப்போது உன்னிடம் தென்படும் இந்த நிதானம் ஏன் உனக்கு அந்த சம்பவத்தின் போது இருக்கவில்லை சீதா ?? அனைவரின் முன்பும் என்னை அவமானப்படுத்தும் விதமாக என்னவெல்லாம் பேசிவிட்டாய் அதையெல்லாம் மறந்து விட்டாயா சீதா?? இப்போது எப்படி அன்பாக என் கரங்களைப் பற்றிக் கொண்டு நிதானமாக கேள்வி கேட்கிறாய் அதே போல அங்கேயும் என் மீது நம்பிக்கை வைத்து நிதானமாக என் கைகளை பற்றி கொண்டு என்னாயிற்று ராவணா என்று கேட்டிருந்தால் நான் பதில் சொல்லிருக்க மாட்டேனா என்ன?? வந்ததும் வராததுமாக நீ என்னை கோபத்தோடு எரித்து விடுவது போல பார்த்தாய் அதுமட்டுமா எத்தனை பேச்சுகள் பேசி என்னை எல்லார் முன்பும் அவமானப்படுத்தி விட்டாய்.. அதை நினைத்துப் பார்க்கும் பொழுது எனக்கு வேதனையாக இருக்கிறது.. யாரோ ஒருவர் வந்து சொல்லி அதன் பிறகு தான் நீ என்னை பற்றி அறிந்து கொள்வாயா?? என்னை பற்றி உனக்கே தெரியாதா? இதுவரைக்கும் நானாக யார் வம்புக்கும் போயிருக்கிறேனா கூறு??", தீர்க்கமாக அவளின் கண்களைப் பார்த்துக் கொண்டு நிதானமாக ஒவ்வொரு கேள்வியாக அதுவும் அழுத்தமாக கேட்டான் அவன்.


இல்லை என்பதாய் அவள் தலையசைக்கவும்..


" இல்லை தானே ?? அப்புறம் எதற்காக என் மீது நம்பிக்கை இல்லாமல் அப்படி கூப்பாடு போட்டாய்?? பதில் சொல் பெண்ணே.. இப்போது உன்னிடம் தென்படும் இந்த நிதானம் ஏன் அப்போது இருக்கவில்லை??", கம்பீரமாக நின்று கொண்டிருந்த ராவணன் அவளுடைய கண்களை பார்த்து பேச பேச அவள் தான் கூனி குறுகிப் போய்விட்டாள்..


குனிந்து நின்றவளின் விழிகளிலிருந்து மழைத்துளி போல கண்ணீர் துளி தரையில் பட்டு சிதறியது..!!


" என்னை மன்னிச்சிடு இந்தர்.. நீ கேக்குற ஒவ்வொரு கேள்வியும் நிஜம்தான்.. உன்னை நான் நம்பிருக்க வேண்டும் ஆனால் நம்பாமல் நான் பாட்டுக்கு பொது இடத்தில் வைத்து உன்னை தரக்குறைவாக பேசியது மாபெரும் தவறுதான்.. உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?? வந்து பார்த்தால் உன்னை காணோம் அப்புறம் அங்கிருந்த கூட்டத்தில் தான் உன்னை கண்டுபிடித்தேன் அங்கே வந்து பார்த்தால் நீ யாரையோ போட்டு அடிச்சிட்டிருந்த டக்குனு பார்க்கும்போது எனக்கு பதட்டமாக தானே இருக்கும்?? அதனாலதான் அப்படி பேசிட்டேன் தயவு செஞ்சு என்னை மன்னித்துவிடு ஆனால் நான் செஞ்சது தவறு தான் அதை நான் ஒப்புக்கொள்வேன்.. எனக்கு உன் மேல் நம்பிக்கை இருந்திருக்கணும் ஆனால் யாரோ ஒருத்தர் வந்து சொல்லி தான் எனக்கு உண்மை தெரிஞ்சது அதுவே எனக்கு கஷ்டமா தான் இருக்கு.. நான் நம்பியிருக்கணும் என்னுடைய இந்தரை நான் நம்பிருக்கணும்.. காரணமில்லாமல் அவன் யாரிடமும் சண்டைக்கு போக மாட்டான் என்று நான் நம்பிருக்கணும் ஆனால் அதை நான் செய்யவே இல்ல அது என்னுடைய தப்புதான் என்னை மன்னித்துவிடு.. அதுக்காக இப்படி பேசாம அமைதியா இருக்காத எனக்கு ஒரு மாதிரியா இருக்கு..", என்று சிறுபிள்ளை போல இருக்காதுகளிலும் கைகளை வைத்துக்கொண்டு தோப்புக்கரணம் போட்டாள் அவள் அவன் முன்பாக.


அதை பார்த்ததும்.. கடுமையாக இருந்த அவனுடைய முகத்தில் லேசாக இளகி இதழில் புன்னகை அரும்ப தொடங்கியது..


" போதும் போதும் உன் விளையாட்டு..", என்று சொல்லி அவளின் கைகளை பற்றி நிப்பாட்டினான் அவன்.. பிறகு அவளையும் கண்ணீரை தன் விரல்கள் கொண்டு துடைத்து விட்டான்.


" அப்பாடா மன்னித்து விட்டான் போல.. சரி சரி வா சாப்பிடலாம்", என்று சொல்லி அவன் கரங்களோடு தன் கரத்தை கோர்த்துக் கொண்டு டைனிங் டேபிள் இருக்கும் இடத்திற்கு சென்றாள்..


இரவு உணவுக்காக இட்லியும் சட்னியும் வாங்கி வந்தவள் அவனுக்கும் சாப்பாட்டை பரிமாறி விட்டு அவளும் சாப்பிட்டு உறங்க சென்றாள்..


நேற்று போலவே இன்றும் அவள் தரையில் படுத்துக்கொள்ள அவன் மெத்தையில் படுத்து கொண்டான்..


" சீதா எனக்கு இங்கே உறங்குவதற்கு பயமாக இருக்கிறது.. மேலே சுழன்று கொண்டிருக்கும் இந்த சக்கரம் எப்பொழுது அவிழ்ந்து என் தலையில் விழுமோ தெரியவில்லை.. அது என்னை பயமுறுத்துகிறது"


" இங்க பாரு நீ எதுக்கும் பயப்படாத நானும் இங்க தானே இருக்கேன் அதெல்லாம் ஒன்னும் ஆகாது சரி உனக்கு பயம் போறதுக்கு நாம ஒன்னு பண்ணுவோமா"


" என்ன??"


அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட்டை மாற்றாமல் அப்படியே அவன் படுத்து விட்டான்..


ஸ்ரீரங்கநாதரை போல தலைக்கு கையை அணை கொடுத்து அவன் ஒரு பக்கமாக திரும்பி படுத்திருக்கும் அழகை பார்த்ததும் ஒரு நொடி திக்கு முக்காடித்தான் போனாள் அவள்..


அடேங்கப்பா இவன் என்ன போஸ் கொடுத்தாலும் ரொம்ப அழகா இருக்கே.. அதனாலதான் அந்த பொண்ணு இவனை சைட் அடிச்சிருக்கா போலருக்கு இவன் தூய தமிழில் வாய் திறந்து பேசவும் எடுத்தேன் பாரு ஓட்டம் என்பது போல் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்..


அதுவும் கூட நல்லதுக்கு தான் அதனாலதான் அவ போய்விட்டா இல்லனா இன்னமும் இவன் பின்னாடியே சுத்திட்டு இருந்திருப்பா என்று தன் மனதிற்குள் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டவள் புன்னகையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


" என்ன சீதா?? என்னவோ சொன்னாய் ஆனால் இப்பொழுது அமைதியாக இருக்கிறாயே.."


"ஆ.. அது.. அது.. வந்து.. நாம கொஞ்ச நேரம் பேசலாமா??"


" தாராளமாக பேசலாமே"


" நாங்க பேசுற தமிழுக்கும் நீ பேசுற தமிழுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கு ஆனால் நீ பேசுவது தான் உண்மையான தூய தமிழ் அதை நான் ஒப்புக் கொள்வேன்.. சரி, உன்னுடைய முழு பெயர் இந்திர ராவணன் அப்படித்தானே??"


" ஆம் சீதா.. இதில் உனக்கு என்ன சந்தேகம்??"


" சரி உனக்கு இந்த பேரு யாரு வச்சது??", என்று அவள் கேட்கவும் சிறிது நேரம் யோசித்தான் அவன்..


ஆனால் பதில் மட்டும் அவனுக்கு கிடைக்கவில்லை போல அதனுடைய வெளிப்பாடாக அவனுடைய முகம் சுருங்கியது யோசனையில்..


" சரி ரொம்ப யோசிக்க வேண்டாம் விடு உன்னுடைய ஊர் பெயர் என்ன அதையாவது சொல்லு நீ எங்கிருந்து வருகிறாய்??"


" மங்களாபுரத்தை ஆண்டு கொண்டிருந்த குறுநில மன்னன் நான்.. என் பெயர் இந்திர ராவணன்.. அங்கே நான்.. எனக்கு.. என்னுடன்..", என்று எதையோ சொல்ல வந்தவன் கடைசியில் வார்த்தைக்கு தடுமாறி திணறிக் கொண்டிருந்தான்..


" அப்படித்தான் நல்லா யோசி.. நல்லா யோசிச்சு உனக்கு என்ன ஞாபகம் வருதோ அதை சொல்லு அப்போதான் என்னால உனக்கு ஏதாவது உதவ முடியும்.. நீ எங்கிருந்து வர எங்கே போகணும் உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இங்கே இருக்காங்களா இப்படி ஏதாவது யோசிச்சு பாரு உனக்கு ஞாபகம் நிச்சயம் வரும்", என்று சொல்லி அவனை ஊக்கப்படுத்தினாள் அவள்..


அவனும் அவள் சொல்வதைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்க தொடங்கினான் ஒரு கட்டத்தில் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு அவனுடைய நினைவலைகளில் சுழன்று கொண்டிருந்தான் அவன்..


இரு கரங்களையும் தலைக்கு அணை கொடுத்திருந்தான்..


தலையே வெடித்து விடுவது போல தோன்றியதோ எண்ணவோ சற்று நேரத்தில் முகம் சுருங்கியது அவனுக்கு வேதனையால்..!!


மெதுவாக அவனுடைய தோள்களை தொட்டாள்..


" இந்தர்.. இங்க பாரு நான் சொல்றது உனக்கு கேக்குதா??"


அவனிடம் பதிலே இல்லை..


இன்னனும் இறுக்கமாக மூடியிருந்த கண்களை அவன் திறக்கவே இல்லை..


" ஒருவேளை இவனுக்கு எதுவும் ஞாபகத்திற்கு வரலையா?? பழைய விஷயங்களை யோசிக்க போனதால் இவனுக்கு தலைவலி வந்துடுச்சு போல.. ஞாபகத்துக்கு வரலை என்றதும் ரொம்பவும் தன்னைத்தானே கஷ்டப்படுத்திக்கிறானோ ?? கடவுளே இன்னும் கண்களை திறக்க மாட்டேன் என்கிறானே", என்று அச்சத்தோடு அவனை பிடித்து உலுக்கினாள்..!!


அப்போது பட்டென்று கண்களை திறந்து பார்த்த ராவணன் அவளை உற்று கவனித்தான்..


அவளைப் பார்த்த பார்வை வித்தியாசமாக இருந்தது.. அவன் பார்வையில் தென்பட்டது பரவசமா?? உற்சாகமா?? அல்லது அதிசயமா?? என்னவென்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை ..


ஆனால் அவளை பார்க்கும் பொழுது அவன் கண்களில் எல்லையில்லாத சந்தோஷத்தை கண்டாள்..!!


அவளுடைய வதனத்தை தன்னுடைய இரும்பு கரத்தில் தாமரை மொட்டு போல ஏந்தினான் அவன்..


கண்கள் கலங்கிய வண்ணம் அவளுடைய முகத்தை பார்த்து பரவசமடைந்தவன் எதையோ சொல்வதற்காக வாய் எடுத்தான் ராவணன்.....!!


- தொடரும்..


 
Top Bottom