• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மை டியர் ராவணா வித் லவ் சீதா - 23

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 23

ஏடுகளில் எழுதி இருப்பதை கவனமாக படித்துவிட்டு பத்திரமாக யார் கைக்கும் சிக்காமல் அதை எடுத்துப் பரண் மீது போட்டு வைத்தாள் சீதா.

அடுத்த நாள் காலை 10 மணி...

எதிர்பார்த்தது போலவே அவளுடைய அன்னை போன் செய்தார்.

"இன்னுமா நீ கேட்ட டைம் முடியவில்லை?? இதுக்கு மேல உனக்கு டைம் தர முடியாது சீதா உனக்கு நாங்க மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டோம் இப்பவே உனக்கு கல்யாணம் பண்ணா தான் சரியா இருக்கும் சமூக சேவை செய்கிறேன் பேர்வழி என்று நீ ஊரில் உள்ள எல்லா வினையும் இழுத்துக்கொண்டு வருகிறாய். இது சரி வரும்னு எனக்கு தோணல அதனால் இப்பவே ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நாங்க முடிவு பண்ணிட்டோம். இதுக்கு நீ சம்மதம் சொல்லியே தான் ஆகணும். முதலில் உன் வீட்டில் இருக்கும் அந்த பையனை விரட்டி விடு இல்லனா நடக்கிறதே வேற", முடிவெடுத்து விட்டு வந்து பேசுகிறார் தன் அன்னை என்பதை அவருடைய பேச்சிலேயே தெரிந்து கொண்டாள் சீதா.

இந்தரை மறந்து விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்வதா? அது இந்த ஜென்மத்தில் நடக்காது...!!

பளிங்கு போன்ற அவனுடைய சுத்தமான மனதிற்கு ஈடாக இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லையே... அவனை இழந்து விட்டு எப்படி தன்னால் வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டு வாழ முடியும்?

நிச்சயமாக நடக்கவே நடக்காது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு உறுதியாக தன் அன்னையிடம் பேசத் தொடங்கினாள்.

"அம்மா இங்க பாருங்க நீங்க என்ன நினைச்சு இந்த மாதிரி எல்லாம் பேசிட்டு இருக்கீங்கன்னு எனக்கு தெரியல. ஆனா இப்ப நான் ஒரு விஷயம் சொல்றேன் தயவு செஞ்சு நீங்க மண்டைக்குள்ள ஏத்திக்கங்க இந்த ஜென்மத்தில் எனக்கு கல்யாணம் வேண்டாம் அப்படி நான் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தால் அது என் மனதிற்கு பிடிச்சவனை தான் பண்ணிப்பேன் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்னை கட்டாயப்படுத்த வேண்டாம் இதுக்கு மேலேயும் கல்யாண விஷயத்தை பத்தி நீ என்கிட்ட பேசுறதா இருந்தா தயவு செஞ்சு இதுக்கு மேல எனக்கு போன் பண்ணாத நீ இங்க வரவும் வேண்டாம்", என்று உறுதியாக சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள் அவள்.

இந்நேரத்திற்கு தன்னுடைய அம்மா வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருப்பார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும் ஆனால் அவரை சமாதானப்படுத்துவதற்காக ஊருக்கு கிளம்பி போனால் பிறகு தன் தலையிலேயே கை வைத்து விடுவார் என்றும் அவள் நன்கு அறிவாள்.

அதனால் சோபாவில் சாய்ந்து கொண்டு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள்.

இரண்டு நாட்கள் கத்துவார்கள் கொஞ்ச நாள் கழித்து அமைதியாகி விடுவார்கள் என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

"சீதா என்னாயிற்று? ஏன் இப்படி அமர்ந்திருக்கிறாய் தலை எதுவும் வலிக்கிறதா??", அக்கறையோடு கேட்டபடி அவள் அருகில் வந்து அமர்ந்த ராவணன் அவளின் நெற்றியைப் வருடி கொடுத்தான்.

மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள்..

தன் அருகில் கண்களில் பதட்டத்தை சுமந்து கொண்டு அவளுக்கு என்னாயிற்றோ ஏதாயிற்றோ என்று கவலையோடு அவளையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த ராவணனை பார்க்கும் பொழுது அவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது...!

'காலம் முழுக்க எனக்கு இந்த அன்பு வேண்டும் இந்தர். எக்காரணத்தைக் கொண்டும் என்னால் உன்னை இழக்க முடியாது , இழக்கவும் மாட்டேன். உன் மனதில் நான் இருக்கிறேனா இல்லையா என்று எனக்கு தெரியாது ஆனால் என் மனம் முழுக்க நீ மட்டும் தான் நிறைந்து இருக்கிறாய்...!

பார்த்த சில தினங்களிலேயே என் மனதில் நீ இத்தனை தாக்கத்தை ஏற்படுத்துவாய் என்று எனக்கு சத்தியமாக தெரியாது.

போன வாரம் என்கிட்ட வந்து யாராவது இவன் தான் இனிமேல் உன்னுடைய உலகம் இவனைத்தான் நீ விழுந்து விழுந்து காதலிக்கப் போகிறாய் என்று யாராவது சொல்லியிருந்தால் நிச்சயமாக அவர்களைப் பார்த்து நான் பைத்தியமா என்று கேட்டு சிரித்திருப்பேன்.

ஆனால் இப்ப சொல்றேன்.. நான் உன் மேல பைத்தியமா இருக்கேன் இந்தர்... நீ இல்லாம என்னால சத்தியமா இருக்க முடியாது... உன்னுடைய எதார்த்தமான குணம் வேறு யார்கிட்டயும் கிடையாது. இதோ இந்த கண்களில் தெரிகிறதே இந்த பதட்டம், இது எனக்காக தானே ? இந்த பதற்றம் கவலை அன்பு அக்கறை எல்லாமே எனக்கு மட்டுமே வேண்டும் காலம் முழுக்க வேண்டும்', என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் அவனை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன சீதா நான் பாட்டுக்கு கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஆனால் நீ எதுவும் பதில் சொல்லவில்லையே என்னாயிற்று உனக்கு தலை வலிக்கிறதா உடம்பு சரியில்லையா?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உன்கிட்ட நான் ஒரு விஷயம் கேக்கணும் எனக்கு பதில் சொல்வாயா??"

"என்ன வேண்டுமோ கேள் சீதா தாராளமாக கூறுகிறேன்"

"உனக்கு உன்னுடைய பழைய விஷயங்கள் எதுவுமே நினைவுக்கு வரல... அதனால நீ இங்கேயே என் கூடவே இருந்துடுறியா? "

"மங்களாபுரத்து குறுநில மன்னன் நான் என்னுடைய பெயர் இந்திரராவணன் ஆனால் அதற்கு மேல் எனக்கு எதுவும் ஞாபகத்திற்கு வரவில்லையே. அதுதான் எனக்கு ஒன்றும் புரிய மாட்டேன் என்கிறது"

"நினைவுக்கு வரவில்லை என்றால் விட்டுவிடு ஒன்றும் பெரிய பிரச்சனை கிடையாது இப்போது நான் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல் என்னுடன் இருக்க உனக்கு விருப்பமா?".

பதில் சொல்லாமல் இரண்டு நிமிடங்கள் அவளை உற்றுப் பார்த்தான் அவன்.

என்ன பதில் சொல்ல போகிறானோ என்கிற பதட்டம் இப்பொழுது அவள் மனதில் ஏற்பட்டது.

ஒருவேளை வேண்டாம் நான் இங்கிருந்து போய் விடுகிறேன் என்று சொல்லிவிடுவானோ என்ற பயமும் இருந்தது அவளுக்கு மனதிற்குள்.

"எனக்கும் உன்னுடன் காலம் முழுக்க இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கத்தான் செய்கிறது வெளியே சென்றாலும் எனக்கு எதுவும் தெரியவில்லை எங்கே போவது என்றும் தெரியவில்லை அதுவும் இந்த வித்தியாசமான உலகில் இப்படி பிழைக்க வேண்டும் என்று கூட எனக்கு தெரியவில்லை."

"அதைப் பற்றி எல்லாம் நீ கவலைப்படாதே உனக்கு வேண்டிய எல்லாவற்றையும் நான் சொல்லிக் கொடுக்கிறேன் இப்போ விஷயம் அது கிடையாது உனக்கு என்னுடன் இருக்க விருப்பமா? என்னை உனக்கு பிடிக்குமா?"

என்னை உனக்கு பிடிக்குமா என்று அவள் கேட்கவும் உடனே அவளை திரும்பி பார்த்தான் அவன்.

அந்த கண்களில் தெரிந்தது காதலா? கருணையா? அக்கறையா ? அல்லது நட்பா? என்னவென்று அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

"சீதா... உன்னை பார்த்த கணம் முதல் என் மனதிற்குள் ஏகப்பட்ட மாற்றங்கள் உண்டாகிறது அது என்னவென்று என்னால் வகையறுக்க முடியவில்லை இப்போது வரை என்னால் அதை உன்னிடம் வெளிப்படுத்த கூட முடியவில்லை. ஒரு பிரச்சனை என்றால் எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டே போகும் இந்த உலகத்தில் என்னை அப்படியே தெருவில் விட்டு விட்டு போகாமல் வீடு வரை அழைத்து வந்து எனக்கு உணவளித்து என்னை அக்கறையாக பார்த்துக் கொண்டு, அன்பு செலுத்தும் உன்னை எனக்கு எப்படி பிடிக்காமல் இருக்கும் உன் மீது அளவுகடந்த அன்பு இருக்கிறது சீதா. ஆனால் பாவம், இத்தனை அழகையும் கருணையையும் உனக்கு கொட்டிக் கொடுத்த அந்த கடவுளுக்கு ஏனோ வஞ்சக குணம் போல", என்றான் வருத்தத்துடன்.

"வஞ்சக குணமா? என்ன சொல்ற?"

"ஆமாம் இத்தனை அழகையும் கருணையும் கொட்டி கொடுத்த அந்த கடவுள் ஏனோ உன்னை மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக படைத்து விட்டானே", என்றான் கவலையோடு.

அதைக் கேட்டதும் அதிர்ச்சியுடன் திரும்பினாள் சீதா...!

"அடப்பாவி... என்னடா நெனச்சிட்டிருக்க உன் மனசுல? அப்போ இத்தனை நாளா என்னை நீ பைத்தியம்னு தான் நினைச்சுட்டு இருந்தியா? சரியா போச்சு போ யாரைப் பார்த்து பைத்தியம்னு சொல்ற நான் எத்தனை அறிவான பெண் தெரியுமா பட்டப்படிப்பு படிச்சு டிகிரி சர்டிபிகேட் வாங்கி வச்சிருக்கேன் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறேன் மாசமானால் சுளையா சம்பளம் வாங்குறேன். என்னால் என்னை பார்த்துக் கொள்ள முடியும் யாருடைய உதவியும் இல்லாமல் ஏன் உன்னைக் கூட என்னால் பார்த்துக் கொள்ள முடியும் இப்ப சொல்லு நான் பைத்தியமா? எந்த பைத்தியம் இப்படி தெளிவாக பேசும்? வண்டியை ஓட்டிக்கொண்டு வெளியே போகும் ? படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு போகும்? இதைப் பற்றி எல்லாம் நீ யோசிக்கவே மாட்டியா எதை வச்சு நீ என்னை பைத்தியம் என்று சொன்ன? அதை முதல்ல சொல்லு"

"அது வந்து... அது... அன்று நீ... கெட்டுப்போன உணவை சாப்பிட்டாயே அப்போதுதான் நினைத்துக் கொண்டேன் உனக்கு மனநலம் சரியில்லையோ என்று அதுவும் இல்லாமல் கிழிந்து போன ஆடைகளை எல்லாம் நீ உடுத்திக் கொண்டாயே"

"அடப்பாவி, அது பீட்சா...அன்னைக்கு நான் போட்டிருந்தது ஜீன்ஸ் டி-ஷர்ட். அந்த மாடல் அப்படித்தான் இருக்கும் உனக்கு தான் புரியல உடனே என்னை பைத்தியம் என்று நினைப்பியா? உன்னை என்ன பண்றேன் பாரு", என்றவள் அவன் காதை பிடித்து திருக தொடங்கினாள்.

"ஆ... வேண்டாம் சீதா வலிக்கிறது வலிக்கிறது என்னை விட்டுவிடு", என்று சிரித்துக் கொண்டே அவன் கத்தவும் அப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது அவன் அவளை கிண்டல் செய்திருக்கிறான் என்று.

"அப்போ என்னை கிண்டல் செஞ்சியா?"

"ஆமாம்...ஆனால் ஆரம்பத்தில் உன்னை பைத்தியம் என்று தான் நினைத்தேன்... அதன் பிறகு தான் தெரிந்து கொண்டேன்"

"என்ன தெரிஞ்சுகிட்ட?"

"பைத்தியம் நீ இல்லை... நான் என்று..."

"ஏன் அப்படி சொல்ற?"

"ஆமாம் உன்னை தான் மனநலம் பாதிக்கப்பட்டவள் நீ ஒரு பைத்தியம் என்று ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் உன்னோடு பழக பழக உன்னுடைய அன்பான குணம் பிடித்து போய் நாளடைவில் நான்தான் உன்னிடம் மையல் கொண்டு பைத்தியம் ஆகிவிட்டேன் பெண்ணே...", என்று கிறக்கத்தோடு அவன் கூறினான் அவள் கண்களைப் பார்த்து.

பேச்சு சுவாரசியத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டிருந்தனர் இப்பொழுது...!!

அவனுடைய கரங்கள் அவள் இடையில் அழுத்தமாக பதிந்திருக்க அவளுடைய பூ மாலை போன்ற கைகள் அவன் கழுத்தை வளைத்து பிடித்திருந்தது...❤❤

"அப்படின்னா நீ என்னை லவ் பண்றியா இந்தர்?".

"அப்படி என்றால் என்ன சீதா?", என்றான் குழப்பமாக.

"இனி உனக்கு லவ் என்கிற வார்த்தைக்கு நான் அர்த்தம் வேற சொல்லிக் கொடுக்கணுமா? விளங்கிடும் போ... காலம் முழுக்க உனக்கு நான் அர்த்தம் சொல்லிக் கொடுத்தே என்னுடைய ஆயுள் கரைந்து விடும் போல... லவ் என்றால் காதல் என்று அர்த்தம்"

அதைக் கேட்டதும் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் அவனுடைய கண்கள் உறைந்தது, ஆனால் அடுத்த நொடியே லேசான வெட்கம் கலந்த கம்பீரம் அவன் முகத்தில் தென்பட்டது...!

- தொடரும்...

 
Top Bottom