• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 14

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் - 14

அந்தப் பள்ளிக்கு பிரதீப்பின் தந்தை மிகப்பெரிய தொகையை அன்பளிப்பாகக் கொடுத்து மகனது படிப்பை முடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் சேர்த்திருக்கிறார்.

அதனால் அவன் எத்தனை தொல்லைகள் கொடுத்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு பணித்து இருக்கிறார் தலைமை ஆசிரியர்.

அவனது மரியாதையற்ற நடத்தையில் வெறுப்பாகிப் போன ஒரு ஆசிரியர், "இவன் அப்பன் பணத்தைக் கொடுத்து ஸ்கூலையே வாங்கிட்டான் போல. இந்த தறுதலையை பற்றி கம்ப்ளைன்ட் பண்ணுனா, நமக்கு பாடம் எடுக்கறாரு அந்த ஹெட் மாஸ்டர்." என்று புலம்பினார்.

அவரிடம் தனது நோட்டில் கையெழுத்து வாங்க நின்ற தமிழுக்கு அவர் மெலிதாக முணங்கியது தெளிவாகவே கேட்டது. அதை நினைவு கூர்ந்துதான் கௌசல்யா தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுக்கச் சொன்னபோது மறுத்து விட்டாள்.

அத்தோடு இன்னும் சில நாட்களில் முழு ஆண்டுத் தேர்வுகள் தொடங்கி விடும். எப்படியும் அடுத்த வருடம் அவன் இல்லாத வகுப்பிற்கு மாறிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அலட்சியமாக விட்டுவிட்டாள்.

முழு ஆண்டு தேர்வுகளும் தொடங்க, பரீட்சை அன்று மட்டுமே பள்ளி வந்து கொண்டிருந்த தமிழ், வீட்டிற்கு திரும்பும் போது கௌசல்யாவுடன் சேர்ந்து சென்று விடுவாள். அதனால் பெரிதாக எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.

இறுதி நாளன்று தேர்வெழுதிய கௌசல்யா தனது சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாவிற்கு செல்லவிருந்ததால் வேகமாக தேர்வை முடித்துவிட்டு கிளம்பி விட்டாள். தமிழிடமும் அதைப்பற்றி ஏற்கனவே கூறியிருந்தாள்.

பொறுமையாக தேர்வு எழுதி முடித்த தமிழ், வகுப்பறையை விட்டு வெளியே வந்தவள் மாணவிகள் கழிப்பறை நோக்கிச் செல்ல, அவளை பிரதீப் பின் தொடர்ந்ததை அறியவில்லை.

அவள் பின்னோடு வந்தவன் திடுமென கழிவறை அருகில் இருந்த ஒரு காலியான வகுப்பறைக்குள் அவளை இழுத்துச் சென்றவன் அந்த வகுப்பறையின் கதவை அடைத்து விட்டான்.

அவனது செயலில் மிரண்ட தமிழ் பயத்துடன் அவனை பார்த்து விட்டு கத்துவதற்கு வாயை திறக்கும் போது அவளது வாய் மீது கையை வைத்து "ஷ்ஷ்ஷ்! ஒழுங்கா நான் சொல்றதக் கேட்டு அமைதியா இருக்கனும்." கண்களை உருட்டி மிரட்டினான்.

சரி என்றவள் அவன் கையை எடுத்ததும் மீண்டும் கத்தப் போக, அதில் கோபமுற்ற பிரதீப் சட்டென அவளது பாவாடையின் ஊக்கை கழட்டி விட அது சர்ரென்று கீழே விழுந்து விட்டதில் திகைத்து விட்டாள்.

வேகமாக குனிந்து எடுக்க போனவளின் கரங்களை ஒன்றாக சேர்த்து ஒரு கையால் தூக்கிப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் அவளது கன்னங்களை பிடித்து அழுத்தியவன்,

"என்னை லவ் பண்றேன்னு சொல்லு. அப்பத்தான் உன்னை விடுவேன்." என்று மிரட்டிக் கொண்டே கிட்டத்தட்ட அவள்மேல் மொத்தமாக தன்னைச் சரித்து அவள்முகமெங்கும் முத்தமிட கண்கள் கலங்க அரண்டு விட்டாள் தமிழ்.

ஏற்கனவே தன் தாய்மாமனால் இருட்டில் அவளுக்கு நேர்ந்த அதே துயரம், இன்று பட்டப்பகலில் அவள் முழு சுய உணர்வுடன் இருக்கும் போது நடைபெற, பயத்தில் அவளது இதயத் துடிப்பு ஏகத்திற்கும் எகிறி கால்கள் தொய்ந்து விழ மயக்கத்திற்குச் சென்றாள்.

அவளை அடக்குவதில் குறியாக இருந்த பிரதீப் திடீரென வேரறுந்த கொடி போல அவள் சரிந்ததில் பதறி விலக, அவள் தொப்பென தரையில் விழுந்ததும் பயந்து விட்டான்.

வேகமாக அவளது பாவாடையை கீழிருந்து எடுத்து போட்டு விட்டவன் அவளை அங்கிருந்த பென்ச்சில் படுக்க வைத்துவிட்டு கதவைத் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தபடி தப்பித்து ஓடியேவிட்டான்.

சிறிது நேரத்தில் வகுப்பறைகள் சுத்தம் செய்ய வந்த ஆயாம்மா அவள் அங்கு படுத்திருப்பதைக் கண்டு பதறி ஆசிரியரிடம் சென்றுக் கூற, பிறகு அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து என்னவாயிற்று என்று வினவினர்.

பிரதீப்பின் மூர்க்கத்தனமான செயலில் மொத்தமாக பயந்து போயிருந்த தமிழ், மயங்கி விழுந்து விட்டதாக மட்டும் சொல்லவும் பிறகு அவளது வீட்டிற்கு தகவல் சொல்லி விசாலம் வந்ததும் அனுப்பி வைத்தனர்.

அதன்பின் நான்கு நாட்கள் காய்ச்சல் கண்டு தேறி வந்தவள் தாயிடம் பிடிவாதம் பிடித்து பெண்கள் மட்டுமே படிக்கும் வேறு பள்ளிக்கு மாறி விட்டாள்.

அங்கு பெரிய வகுப்புகள் செல்லச் செல்ல பிரத்யேகமாக சொல்லித் தரப்பட்ட தற்காப்பு கலைகளைப் பயின்று கொஞ்சம் கொஞ்சமாக தன்னை திடப்படுத்திக் கொண்டவள் மனதில் ஆண்கள் மீதான வெறுப்பும் வளர்ந்து கொண்டே போனது.

ஈஸ்வரன் தனது கான்ட்ராக்ட் முடிந்து ஊருக்கு திரும்பி விட்டார். மகளது விலகலைக் கண்டு ஐந்தாண்டுகள் பிரிந்து இருந்ததால் அப்படி இருக்கிறாள் மேலும் வயதுக்கு வந்த பெண்களுக்கு உண்டான இயல்பான ஒதுக்கம் என்றெண்ணிக் கொண்டார்.

அவள் படித்து முடித்தது எல்லாம் பெண்கள் மட்டும பயிலும் பள்ளி, கல்லூரி என்றாலும் வெளியில் அவளை நெருங்க நினைக்கும் ரோமியோக்களை கண்களாலேயே எரித்து எச்சரித்தாள். அதையும் மீறி அவளைத் தொட முனைபவர்களை அடித்து விரட்டி விடுவாள்.

ஆண்கள் மீதான அவளது அதீத வெறுப்பை உணராமல், திருமண வயதை தொட்டுவிட்ட பெண்ணிற்கு வரன்கள் வலைவீசி தொடத் துவங்கினர் பெற்றோர்.

அவர்கள் காட்டும் புகைப்படங்களை காணாமலே "வேணாம். எனக்கு பிடிக்கல." என்று அவள் மறுக்க, அவளது பிடிவாதத்தால் நல்ல சம்பந்தம் கைமீறிப் போய்விடுமே என்ற எண்ணத்தில் ஒரு சிலரை பெண் பார்க்கும் படலம் வரை கொண்டு வந்தனர்.

ஆனால் மாப்பிள்ளையிடம் தனியாக பேச வேண்டும் என்றுக் கூறி, பெண் பார்க்க வருபவர்களிடம் அவள் பேசும் தோரணையிலேயே, 'இப்படியொரு திமிர் பிடித்தவள் தனக்கு வேண்டவே வேண்டாமென தெறித்து ஓடி விடுவார்கள் அவர்கள்.
 
Top Bottom