அத்தியாயம் - 23
அவர்கள் அவ்வளவு நேரமும் பேசியதை பார்த்தபடி இருந்த முத்ரா, தன்னிடம் மட்டும் பேசுவதற்கு காசு கேட்பது போல பதிலளிப்பவன் அமிர்தாவிடம் இத்தனை நேரம் பேசியதில் காண்டானாள்.
அறிமுக நாளுக்கு பிறகு முத்ரா அவனிடம் சிலமுறை தானாக வலியச் சென்று பேச முயன்றிருக்கிறாள். ஆனால் அப்போது எல்லாம் கேட்டதற்கு பதில் என்பது போல பதிலளித்து சிரிப்புடன் கடந்து விடுபவன் அமிர்தாவிடம் மட்டும் சற்று அதிகப்படியாக பேசுவது போல அவளுக்கு தோன்றியது.
அது அவளுள் 'அவனை எப்படியாவது தன்னிடம் விழ வைக்க வேண்டும்' என்ற வேகத்தை நாளுக்கு நாள் ஏற்றிவிட அதற்கு தூபம் போல நித்யாவின் கேலிப் பேச்சுகளும் அமைந்ததில் வெறியாகவே மாறி விட்டது.
இதுநாள்வரை அமிர்தாவை எண்ணி இவளெல்லாம் எனக்கொரு எதிரியா!? என்ற அலட்சியத்தில் இருந்தாள் முத்ரா. ஆனால் இன்றைய நிகழ்விற்கு பிறகு அவளை எதாவது செய்தாக வேண்டும் என்று ஒன்றுமறியாத அமிர்தா மீது மனதிற்குள் வன்மம் கொண்டாள்.
இன்று எப்போதும் விட சற்று அதிகப்படியாக அவன் அவளிடம் ஏதோ சொல்வதும் அதை அவள் எழுதி வைத்துக் கொள்வது என்பதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த முத்ரா, இருவரும் தனிமையில் உரையாட அலைபேசி எண்களை பகிர்கிறார்கள் என்றெண்ணி கொதித்துப் போனாள்.
கடைசி வகுப்பு எப்போது முடியுமென காத்திருந்தவள் இன்று அவளை தட்டி அடக்கி அகரனிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற முடிவோடு அமிர்தாவை மிரட்ட அவளது இடத்திற்கு வந்து விட்டாள்.
அமிர்தா வழக்கம் போல தனது பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க தன் முன்னே நிழலாடவும் யாரென நிமிர்ந்து பார்க்க, அங்கு முத்ரா நிற்கவும், "என்ன வேணும் முத்ரா?" எனக் கேட்டாள்.
"உங்கிட்ட கேட்டு வாங்கற நெலமை எல்லாம் எனக்கில்லை. மைன்ட் இட்." சற்று கடினமான குரலில் முத்ரா சொல்ல அமிர்தாவிற்கு சங்கடமாக போனது. பிறகு என்னவென்று அவளே சொல்லட்டும் என அமைதியாகி விட்டாள்.
"லிஸன்! உங்கிட்ட நான் பேசறதுக்கான தகுதி கூட உனக்கில்ல. அப்படியும் வந்து பேசறேன்னா அதுக்கு ஒரே ரீஸன்.. அகரன்" ஒருநொடி நிறுத்தி அவள் சொல்ல, ஏற்கனவே அவள் பேசிய தொனியில் என்னவென்று தெரியாத அமிர்தா அவளை புரியாமல் பார்த்தாள்.
'இப்படி அப்பாவி லுக்கு விட்டே அவனை கன்ட்ரோல் பண்றா போல' அவளது பார்வையை கரித்துக் கொட்டிய மித்ரா,"நான் என்ன சொல்றேன்னு புரியலையா? இல்ல தமிழ் புரியலையா?" இளக்காரமாக கேட்க புரியவில்லை என்று தலையசைத்தாள் அமிர்தா.
வாய்விட்டு இவளிடம் விளக்கம் கேட்டு தேள் கொடுக்காக கொட்டும் அவளது சொற்களை மீண்டும் யார் வாங்குவது என்ற முன்னெச்சரிக்கை அமிர்தாவிடம்.
"ம்ப்ச்!" சலித்துக் கொண்ட முத்ரா, "அகரன் என் ஆளு. நீ இனிமே அவன்ட்ட பேசக்கூடாது. புரியுதா? அதைமீறி பேசுனேனு வையேன். அப்றம் உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. அவன்ட்ட இருந்து தள்ளியே இரு." மிரட்டலாக சொன்னவள்,
"இந்த இன்னசன்ட் லுக் வைச்சு வேணும்னா இந்த க்ளாஸ்ல இருக்கற வேற எவனையாவது கவுத்து லவ் பண்ணப் பாரு. என் அளவுக்கு இல்லைனாலும் ஏதோ சுமாரா இருக்க. அதனால கண்டிப்பா அட்டி பசங்க எவனாவது மாட்டுவானுங்க." நையாண்டி செய்து சொல்ல அமிர்தாவிற்கு கண்கள் கலங்கியது.
அதைக்கண்டு முத்ராவிற்கு எரிச்சல் ஏற்பட, "இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். இனிமே அகரன் உங்கூட பேசறத பார்த்தேன், அவ்ளோ தான்." கண்களை உருட்டி மிரட்டியவள் விருட்டென்று சென்று விட, சில நிமிடங்கள் அமிர்தா அப்படியே உறைந்து போய் நின்றிருந்தாள்.
இந்தப் பள்ளிக்கு வந்தது முதல் இந்த ஓராண்டு காலமாக அவளிடம் மனதார நட்பு பாராட்டும் ஒரே ஆள் அகரன் மட்டும் தான். அதை இவள் என்னவோ அவனை மயக்கி பேச வைப்பதாக சொன்னதோடு, தன்னை அசிங்கமா பேசியதில் உள்ளுக்குள் துடித்துப் போனாள் அமிர்தா.
இனியும் இவளிடம் இதுபோல சொற்களை கேட்க தன் மனதில் திடமில்லை. அதனால் அகரனை விட்டு விலகி இருப்பதே நல்லது என்ற முடிவோடு கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு கிளம்பினாள்.
அவளது மென்மையான சுபாவம் கண்டு அவள் பெற்றோர் கூட அவளிடம் கடிந்து பேசுவதில்லை. முன்பு படித்தப் பள்ளியில் கூட யாருமே அவளிடம் இத்தனை அநாகரீகமாக பேசியதில்லை.
முத்ராவின் பேச்சிலும் மிரட்டலும் அவள் மனதை காயப்படுத்த இரவெல்லாம் அழுது கரைந்தவள், காலையில் காய்ச்சல் கண்டு பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டாள்.
முழு ஆண்டு தேர்வுகள் நெருங்கும் சமயம் திடுமென மகளுக்கு காய்ச்சல் வந்ததில் அவளது அன்னை காரணம் விளங்காமல் அவளிடம் கேட்டுத் தொல்லை செய்து ஒருவழியாக்கி விட்டார். அத்தோடு மகளை விரைவில் குணப்படுத்த கூடுதல் அக்கறையுடன் பார்த்துக் கொண்டார்.
பள்ளியில் அமிர்தா வராத அன்று அகரனுக்கு பெரிதாக எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. மறுநாளும் அவள் விடுப்பில் இருக்கவே அவளருகே இருக்கும் மாணவிகளிடம் அவன் காரணம் என்னவென்று விசாரிக்க அவர்களும் தெரியவில்லை என்று விட்டனர்.
ஆனால் அவளது உடல்நிலை சரியில்லாமல் போனதற்கான காரணம் ஒருவருக்கு மட்டும் தெரிந்தாலும் யாரிடமும் அதைப்பற்றி எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.
மறுநாள் காலையில் வகுப்பிற்குள் நுழைந்த முத்ராவை, "முத்ரா!" என்ற அகரனின் அழைப்பு தேக்க, அவனாக அவளிடம் பேச விரும்புவதில் உள்ளுக்குள் மிதப்பாக உணர்ந்தவள் விழிகள் விரித்து ஆசையாக அவனையே கேள்வியான பார்வையோடு பார்த்திருந்தாள்.