அத்தியாயம் - 26
"குட் மார்னிங் ஸ்டூடண்ட்ஸ்! நீங்க இப்ப உங்களோட லைஃப்ல ரொம்ப முக்கியமான கட்டத்துல இருக்கீங்க. உங்களோட ப்யூச்சரை டிசைட் பண்ணப் போறது இந்த வருசம் நீங்க வாங்கப் போற உங்களோட மார்க்."
"அதனால உங்க விளையாட்டு தனத்தை எல்லாம் மூட்டைக் கட்டி வச்சிட்டு, படிப்புல மட்டும் கவனம் செலுத்தி சீரியஸா படிங்க. இந்த வருசம் நாந்தான் உங்களுக்கு பிசிக்ஸ் டீச்சர்." அந்த ப்ளஸ் டூ மாணாக்கர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திச் கொண்டார் பள்ளி முதல்வர் சதானந்தன்.
அவரது அறிமுக உரையிலேயே சில மாணவ மாணவிகளுக்கு இந்த வருட மதிப்பெண்களை எண்ணி உள்ளுக்குள் கிலி பிறந்து விட்டது. அமிர்தாவிற்கு சொல்லவே வேண்டாம். ஏற்கனவே கணக்குடன் வாய்க்கால் தகராறு போல இடித்துக் கொண்டிருக்கிறது.
இதில் இவர் வேறு இன்னமும் பயமுறுத்த, அவளது வீட்டில் பெற்றோர் அதுவரை சொல்லிக் கொடுத்த தைரியம் எல்லாம் காணாமல் போகும் உணர்வு. உதவிக்கு அகரனையும் எதிர்பார்க்க முடியாதே என்ற கலக்கம் வேறு.
இப்படியாக பனிரெண்டாம் வகுப்பு தொடங்கியது. இந்த வருடமும் அதே வகுப்பாசிரியை வந்திருக்க, அகரனே மீண்டும் வகுப்பு தலைவனாக இருந்தான். முத்ரா கணிதத்திலும் வேதியியலும் அரியர் வைத்து விட்டாள். இந்த ஆண்டு சேர்த்து எழுத வேண்டிய நிலை.
காலை முதல் பரபரப்பாகச் சென்ற வகுப்புகளுக்கு இடையே மதிய உணவு இடைவேளையில் அனைவரிடமும் நட்பு ரீதியாக நலம் விசாரித்த அகரன், அமிர்தாவிடமும் விசாரிக்கவும் அவள் அதற்கு பதில் பேசாமல் வெறுமனே தலையசைக்க, அதை வகுப்பில் சிலர் கவனித்தனர்.
வாய் வார்த்தையாகக் கூட பதிலளிக்காத அவளது செய்கை அவனை காயப்படுத்த, "நான் எதாவது உங்ககிட்ட தப்பா பேசிட்டேனா அம்மு? நான் இதுவரை எந்த பொண்ணுகளையும் மரியாதை இல்லாமக்கூட பேசியதில்ல. அப்படி இருக்கும் போது.." வருத்தமாகச் சொன்னவன்,
"போன வருச ஆரம்பத்துல எங்கிட்ட நல்லா பேசிட்டு இருந்த நீங்க திடீர்னு பேசவே இல்ல. சரின்னு விட்டுட்டேன். ஆனா, இப்ப சாதாரண நலம் விசாரிப்பு தானே இதுக்குக் கூட எங்கிட்ட வாய் திறந்து பேச முடியாத அளவுக்கு நான் எதாவது உங்ககிட்ட தப்பா நடந்துட்டேனா? " சங்கடத்துடன் கேட்டான் அகரன்.
"அப்படி எல்லாம் இல்ல அகரன். அதுவந்து," என்றவளுக்கு அதற்கு மேல் சொல்ல முடியவில்லை. அவளது சுபாவம் புரிந்தவன் அவளது தயக்கத்தையும் புரிந்து கொண்டு,
"என் மனசுல யார் மேலயும் எந்தவொரு இன்டென்ஷனும் இல்ல அம்மு. எல்லார்கிட்டேயும் ஒரு நல்ல ஃப்ரெண்டா தான் பேசறேன். எனிவே நீங்க எங்கிட்ட பேசாம இருக்கனும்னு முடிவு செய்தா, அது நீங்களா எடுத்த முடிவா தான் இருக்கனும் அம்மு."
"மத்தவங்களோட கட்டாயத்துக்காக செய்யக்கூடாது. இப்படி ஒன்னொன்னுக்கும் பயந்தா லைஃப்ல எதுவுமே செய்ய முடியாது. இதை எப்பவும் மனசுல வச்சுக்குங்க." என்றவன் விருட்டென்று அங்கிருந்து சென்று விட்டான்.
யாருமே தன்னிடம் பேச முன்வராத போது முதன்முதலாக புன்னகையுடன் வந்து அவளிடம் நட்பு பாராட்டியவன், தற்போது தனது செயலால் காயப்பட்டுப் போவதில் சங்கடமாக உணர்ந்தாள் அமிர்தா.
அகரன் சொன்னது போல முத்ரா பேசியதற்காக தனது நல்ல நட்பை விட்டு ஏன் விலக வேண்டும் என்று சிந்தித்தவள், அடுத்து அகரனைப் பார்க்கும் போது, "ஸாரி!" என்றிட, புன்னகைத்த அவனும் மன்னிப்பு
எதற்கு என்று கேட்கவில்லை. அவளும் விளக்கவில்லை.
அதன்பிறகு நாட்கள் வேகமாக நகர காலாண்டு தேர்வுகளும் முடிந்து விட்டது. தொடர்ந்து வந்த வகுப்புகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் மூளையை கழட்டி ஒவ்வொரு பாடத்தையும் உள்ளே திணித்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே அமிர்தா பாடங்களில் தனக்கு வரும் சந்தேகங்களை பழையபடி அகரனிடம் கேட்டு பயில, அதைக்கண்ட நித்யா, "என்னடி உன் ஆளு பின்னாடியே அந்த அமிர்தா சுத்திட்டு இருக்கா. அவன் உன்னை கழட்டி விட்டுட்டானா என்ன?" எனக் கேட்க, அவளை முறைத்தாள் முத்ரா.
"அதெல்லாம் ஒன்னுமில்ல. அவனே எங்கூட பேச டைமே கிடைக்க மாட்டேங்குதே'னு ஃபீல் பண்ணிட்டு இருக்கான். நீ வேற, க்ளாஸ்ல வைச்சு ரொம்ப பேசிகிட்டா யாராவது மேம்க்கு விசயத்த சொல்லிட்டா ப்ராப்ளம் ஆகிடும்னு க்ளாஸ் டைம்ல எங்கிட்ட அதிகம் பேச மாட்டானாம்."
"அவ படிப்புல ரொம்ப வீக்கா இருக்கறதா சொல்லி அழுதாளாம் அதனால 'அவளுக்கு மட்டும் பாடம் சொல்லி கொடுக்கறேன் ப்ளீஸ்!'னு எங்கிட்ட கெஞ்சிக் கேட்டு பர்மிஷன் வாங்கிட்டு தான் அவகூட பேசறான்." அசராமல் அடித்து விட்டாள்.
அவளை நம்பாமல் பார்த்த நித்யா, "எனக்கென்னவோ அது மாதிரி எல்லாம் தெரியல. என்னமோ! நீ சொல்ற நானும் நம்பிக்கிறேன் விடு. ஆமா, வந்த புதுசுல அவனை உன் பின்னாடி சுத்த வைக்கறேன்னு எல்லாம் சொன்ன, அதெல்லாம் நடக்கற மாதிரியே தெரியலையே. " ஒருதுளி கூட நம்பிக்கையின்றி வினவினாள் நித்யா.
"அவன் சரியான பயந்தாங்கோழியா இருக்கான்டி. தினமும் ஸ்கூல் முடிஞ்சதும் என் கையைப் பிடிச்சுட்டு எங்கூட பேசாம அவனால போகவே முடியாது. இதுநாள் வரை இதை உங்கிட்ட நான் சொல்லலை. உனக்கு நம்பிக்கை இல்லனா நீயே வந்து பாரு." உண்மையாக நடப்பதைப் போலவே அவள் சொல்ல நித்யா வாயைப் பிளந்தாள்.
அகரனை முத்ராவின் காதலன் என மாணவிகளுக்கு விளம்பரப்படுத்திய பிறகு அவனிடம் பொதுவாக எந்தப் பெண்ணும் சென்று வழிவதில்லை. ஆனால் அமிர்தா மட்டும் அடிக்கடி சென்று அவனுடன் பேசுவதில் கோபமடைந்தாள் முத்ரா.
அவளை மறுபடியும் மிரட்டலாமா என்று யோசித்தவள் அந்த சிந்தனையை தவிர்த்து விட்டாள். ஒருவேளை அகரனுக்கு அவ்விசயம் தெரிந்தால் அவன் தன்னை எல்லார் முன்னிலையிலும் எதாவது சொல்லி விட்டால் இத்தனை மாதங்களாக பரப்பிய விசயம் பொய் என்றாகி விடும்.
அத்தோடு இப்போது இவளிடம் புதுக்கதையை வேறு கூறியாயிற்று இனி இதை எப்படி நிஜமாக்கலாம்? அதற்கு என்ன செய்யலாம்!? என்று நகத்தைக் கடித்துக் கொண்டு சிந்தித்தவளுக்கு ஒரு ஐடியா கிடைத்தது.
அன்றைய தினம் பள்ளி முடிந்து அனைவரும் கிளம்பிய பிறகு யாரும் கவனியாதவாறு, "அகரா! கொஞ்சம் வெயிட் பண்றியா? நான் உங்கிட்ட பேசனும்." தயக்கத்துடன் அவனை தேக்கினாள் முத்ரா.